திருஇடைமருதூர்


பண் :

பாடல் எண் : 1

ஆறுசடைக் கணிவர் அங்கைத் தீயர்
அழகர் படையுடைய ரம்பொற் றோள்மேல்
நீறு தடவந் திடப மேறி
நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதம்
கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலு மாவார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருதூரினை விரும்பித் திருத்தலமாகக் கொண்ட ஈசனார் சடையில் கங்கையை அணிந்து , உள்ளங்கையில் தீயினை ஏற்றவர் . அழகர் . படைக்கலங்களை ஏந்திய அழகிய பொலிவு உடைய தோள் மீது , நீறு பூசிக் காளையை இவர்ந்து நாளும் பிச்சை ஏற்பவர் . தம்மைச் சுற்றியுள்ள பூதங்களால் தம் பண்புகள் பாராட்டப் பெறுபவர் . கோவணம் ஒன்றே உடையவர் . கையிலே உண்கலத்தை ஏந்திய வேடத்தவர் . இவ்வுலகிற்குத் தோற்றம் நிலை அழிவு ஆகியவற்றைச் செய்யும் இயல்பினர் .

குறிப்புரை :

படை - மழு , சூலம் முதலிய படைக்கலங்கள் . தடவந்து - தடவி ; பூசி . வகரமெய் உகரத்தொடுகூடி ஈறாதல் பண்டைக் காலத்தின்மையின் ` தட ` என்பதே முதனிலை ; அதனோடு வரல் என்பதனைத் துணைவினையாகக் கூட்டி . ` தைவரல் ` என்பதுபோல , ` தடவரல் ` என்றல் பழைய வழக்குப்போலும் . கூறும் - புகழ்கின்ற . கோவணத்தர் - கோவணம் ஒன்றே உடையவர் . கோள் தால வேடத்தர் - கையிலே கொண்ட உண்கலத்தை உடைய கோலம் உடையவர் ; ` கோடரவ வேடத்தர் ` என்பதே பாடம் எனினுமாம் ; கோடாலம் - கோடு ஆரம் ; ` வளைந்த மாலை ` என்பாரும் உளர் , ` கொள்கை ` என்றது , தன்மையை . ஈறு - அழிவு ; நடுவு - நிலை ; முதல் - தோற்றம் ; இம்மூன்றும் உலகிற்கு என்க ; இவற்றைச்செய்பவர் என்றவாறு .

பண் :

பாடல் எண் : 2

மங்குல் மதிவைப்பர் வான நாடர்
மடமா னிடமுடையர் மாத ராளைப்
பங்கின் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலிதிரிவ ரென்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண்டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய இடங்கொண்ட பெருமானார் வானத்தில் இயங்கும் பிறையைச் சடையில் வைத்தவர் . தேவருலகிற்கும் உரியவர் . பார்வதியை இடப்பாகமாக உடையவர் . மான்குட்டியை இடக்கரத்தில் வைத்திருப்பவர் . பால்போன்ற திருநீற்றை அணிந்து , படிக மணிமாலை பூண்டு , அடியார் பாவங்களைப் போக்குபவர் . சங்குகள் அலைகளில் உலவும் சாய்க்காடு என்ற தலத்தை ஆள்பவர் . பல அரிய செயல்களை உடையவர் . எங்கும் பிச்சைக்காகத் திரியும் இயல்பினர் . என் உள்ளத்தை விடுத்து என்றும் நீங்காதிருப்பவர் .

குறிப்புரை :

மங்குல் - ஆகாயம் ; மேகமுமாம் . மடமான் - இளமையான மான் ; ` மான் கன்று ` என்றபடி . இடம் , இடக்கை . பளிக்கு வடம் - படிகமணி மாலை . உகளும் - பிறழ்கின்ற . ` சாய்க்காடு ` என்னும் தலம் நெய்தல் நிலத்தது ; அதனால் சங்குகள் திரையில் ( அலையில் ) உகளுதற்கு ( பிறழ்தற்கு ) உரியதாயிற்று . சரிதை - செயல் .

பண் :

பாடல் எண் : 3

ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்
அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்
கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
கொடுமழுவர் கோழம்பம் மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஆலமர நிழலிலும் ஆகாயத்திலும் மலை உச்சியிலும் இருப்பவர் . ஒரே உருவில் ஆணும் பெண்ணுமாக இருப்பவர் . காலங்களுக்கு அப்பாற் பட்டவர் . நீலகண்டர் . தம்மை அறியாதார் உள்ளத்துக்குத் தொலைவில் இருப்பவர் . பல வேடங்களை உடையவர் . முல்லை நிலத்துக்கு உரிய திருமாலைக் காளைவாகனமாக உடையவர் . கொடிய மழுப்படை ஏந்தியவர் . கோழம்பம் , ஏலக்காய் மணம்கமழும் ஈங்கோய் மலை இவற்றை விரும்பி நீங்காதிருப்பவர் .

குறிப்புரை :

ஆணர் - ஆணாய் இருப்பவர் . பெண்ணர் - பெண்ணாய் இருப்பவர் . ` காலம் பல கழித்தார் ` என்றது , ` காலத்தால் தாக்குண்ணாது அதனைக் கண்டுகொண்டிருப்பவர் என்றருளியவாறு . அஃதாவது , காலவயத்தால் ` பிறப்பு , குழவிநிலை , இளமை , முதுமை , இறப்பு ` என்னும் இவைகள் இன்றி , என்றும் ஒரு தன்மையராயே நின்று , பிறர்க்கு அவை உளவாதலைக் கண்டு கொண்டிருப்பவர் என்பதாம் . ` காணாதார்க்கு அவர் கருத்துக்குத்தாம் சேயார் ` என இயைத்துரைக்க . காணாதார் - அறியாதார் . சேயார் - தொலைவில் உள்ளவர் . கொல்லேறு ` என்பது ஐகாரச் சாரியை பெற்று , ` கொல்லை ஏறு ` என நின்றது . திருமாலாகிய ஏறுமாம் . கோழம்பம் , ஈங்கோய் சோழநாட்டுத் தலங்கள் , ஏலம் - ஏலக்காய் .

பண் :

பாடல் எண் : 4

தேசர் திறம்நினைவார் சிந்தை சேரும்
செல்வர் திருவாரூ ரென்று முள்ளார்
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்
நேச ரடைந்தார்க் கடையா தார்க்கு
நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்
ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஒளியுடையவர் , தம் அருள் திறங்களைத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் சென்றடையும் செல்வர் . திருவாரூரில் என்றும் இருப்பவர் . பூவிலுள்ள மணம்போல உலகங்கள் எங்கும் பரவியிருப்பவர் . மான் தோலைப் போர்த்தியவர் . யானைத் தோலையும் உடையவர் . எவ்விடத்தும் உருக்காட்டாது மறைந்தே இருக்கும் கள்வர் . அடியார்களுக்கு அன்பர் . தம் அடிகளை அடையாதவர்களுக்குக் கொடியவர் . கட்டங்கப் படையுடையவர் . தம்மை விருப்புற்று நினைப்பவரை என்றும் தாங்குபவர் . காவிரியாகிய தீர்த்தத்தை உடையவர் .

குறிப்புரை :

தேசர் - ஒளியுடையவர் . திறம் நினைவார் - தமது அருட்டிறங்களை நினைப்பவர் . ` மலரின்கண் வாசம் ` என மாறுக . ` வாசம் என்பது வாசமாயுள்ளவர் ` என்னும் பொருளது . ` வஞ்சக் கள்வர் ` என்றது , அகப்படாமை பற்றி , ` ஒளிக்கும் சோரனைக் கண்டனம் ` ( திருவாசகம் - திருவண்டப்பகுதி 141.) என்றருளினமை காண்க . நிட்டுரவர் - கொடியவர் . ஈசர் - தலைவர் ; தாங்குபவர் . பொன்னி - காவிரியாறு ; ` பொன்னியாகிய தீர்த்தத்தை உடையவர் ` என்க . வாய்த்த - பொருந்திய .

பண் :

பாடல் எண் : 5

கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்
கரவாதே தம்நினைய கிற்பார் பாவம்
துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
தூய மறைமொழியர் தீயா லொட்டி
நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்
இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் வஞ்சனை மனத்தை உடைய கள்வர்க்குத் தம்மை மறைத்துக் கொள்பவர் . உள்ளத்தில் வஞ்சனையின்றித் தம்மை விருப்புற்று நினைப் பவருடைய பாவங்களை விரட்டுபவர் . கடல் விடத்தை உண்டவர் . தூய வேதங்களை ஓதுபவர் . அறிவில்லாத அசுரர்களின் மும்மதில் களையும் தீயிட்டுச் சாம்பலாக்கியவர் . நீண்ட சடை முடியர் . விரைந்து செல்லும் காளையை இவர்ந்து எங்கும் பிச்சை யெடுப்பவர் . எங்களை ஆள்பவர் . என் உள்ளத்தைவிட்டு நீங்காது இருப்பவர் .

குறிப்புரை :

கரத்தல் , தம்மையும் மறைத்து , தம்மால் அருளப்படும் நலங்களையும் அருளாதொழிதல் , கரியமனம் - வஞ்சனை பொருந்திய மனம் . ` அகங்குன்றி - மூக்கிற் கரியா ருடைத்து ` ( குறள் - 277.) ` யாழின் மொழிமங்கை பங்கன்சிற்றம்பலம் ஆதரியாக் - கூழின் மலிமனம்போல் இருளாநின்ற கோகிலமே ` ( தி .8 திருக்கோவையார் - 322.) என்றற் றொடக்கத்தனவற்றால் , குற்றம் பொருந்திய மனத்தை , ` கரியமனம் ` என்றல் வழக்கு என்பது அறியப்படும் . நிரப்பர் - வறியவர் ; அறிவில்லாதவர் ; என்றது அசுரரை . சிவவழிபாடு சிறந்த தென்றுணர்ந்து மேற்கொண்டு , பின்னர் . புத்தர் கூற்றைக் கேட்டு அதனை விட்டமைபற்றி இவ்வாறருளிச் செய்தார் . ` நிரப்பர் புரம் மூன்றும் ஓட்டித் தீயால் நீறுசெய்வர் ` என இயையும் .

பண் :

பாடல் எண் : 6

கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்
குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
பொடியாரு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடியார் குடியாவர் அந்த ணாளர்
ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்றுரியர் எவரும் போற்ற
இடைமருது மேவி யிடங் கொண் டாரே.

பொழிப்புரை :

எல்லோரும் போற்றுமாறு இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் இடபக்கொடியினராய்க் கூத்தாடுபவராய்க் கொன்றை சூடியவராய் , அழகிய நீறு பூசிய மேனியராய்த் திருநீற்றுப் பையினை உடையவராய்ப் புலித்தோலை உடுத்தவராய்ச் சீறும் பாம்பினராய்ப் பூணூலை அணிந்தவராய் அடியவர்களுக்கு மிக அணுகிய உறவினராய்க் கருணையுடையவராய் , வேள்வித் தீயில் ஆகுதியிடும் போது சொல்லப்படும் மந்திரவடிவினராய்த் தேவர் போற்றுமாறு பிளிறிக்கொண்டு வந்த களிற்றைக்கொன்று அதன் தோலைப் போர்த்தியவராவர் .

குறிப்புரை :

அடியார் குடி ஆவர் - அடியவரது குடியினராவர் ; என்றது , ` மிக அணுகிய உறவினராவர் ` என்றவாறு . அடியவர்க்கு வேண்டும் நலங்களை எளிவந்து செய்தல் பற்றி , இவ்வாறு அருளிச் செய்தார் . ` மந்திரத்தாராகிய அமரர் ` என்க . இடியார் குரல் - இடி போலும் குரல் . ` அமரர் போற்ற ` என்னும் எச்சம் , ` உரியர் ` என்னும் வினைக் குறிப்புக் கொண்டது .

பண் :

பாடல் எண் : 7

பச்சை நிறமுடையர் பாலர் சாலப்
பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
கலனொன்று கையேந்தி யில்லந் தோறும்
பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்
பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்
இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

என்றும் உள்ளாராய் இடைமருதுமேவி இடங் கொண்ட எம்பெருமானார் பார்வதிக்குரிய தம் இடப்பாகத்தே பச்சை நிறம் உடையவராய் . மிக இளையராகவும் மிகப் பழையராகவும் காட்சி வழங்கி , அடியார்களை அவர்களுடைய பிழைகளைப் போக்கி ஆட்கொள்பவர் . கோபம் கொள்ளும் பாம்பினைக் கச்சையாகப் பூண்ட தோள்களை உடையவர் . கையில் மண்டையோடாகிய பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்து உண்பவர் . ஆயினும் உண்மை நிலையினில் மிகவும் பெரியவர் . விளங்குகின்ற சடைமுடியை உடையவர் . தம்மை விரும்பும் அடியார் களுடைய விருப்பத்தை மிகவும் அறிந்தவர் .

குறிப்புரை :

பச்சை நிறம் , அம்மையுடையது . ` கச்சையாக ` என்க . கதம் - கோபம் . கலன் - பாத்திரம் ; கபாலம் . ` கொள ` என்றதனை , ` கொண்டு ` எனத் திரிக்க . இச்சை - விருப்பம் . மிக அறிவர் - நன்கு அறிவர் ; அறிந்து முற்றுவித்தருளுவார் . என்றும் உள்ளார் - தோற்றமும் ஈறும் இல்லாதவர் . இத்தன்மையே , ` மெய்ம்மை ` என்றும் , ` சத்து ` என்றும் சொல்லப்படுகின்றது . ` பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே ` ( தி .9 திருப்பல்லாண்டு - 2) என்றதுங் காண்க .

பண் :

பாடல் எண் : 8

காவார் சடைமுடியர் காரோ ணத்தர்
கயிலாயம் மன்னினார் பன்னு மின்சொல்
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
பயிலுந் திருவுருவம் பாகம் மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
புரமூன்றும் ஒள்ளழலாக் காயத் தொட்ட
ஏவார் சிலைமலைய ரெங்கும் தாமே
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்டு எங்கும் தாமேயாகப் பரவியிருக்கின்ற பெருமானார் , சோலை போலப் பரவிய சடையினராய் நாகை குடந்தைக் காரோணங்களிலும் , கயிலாயத்திலும் , தங்குபவராய்ப் பூக்கள் நிரம்பிய புனலால் சூழப்பட்ட புன்கூரில் வாழ்பவராய் , இனிய சொற்களாலாகிய பாடல்களின் பொருளை ஆளுதல் உடையவராய் , வாள் போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய் , முப்புரங்களையும் தீக்கொளுவுமாறு கொண்ட அம்பொடு பொருந்திய மலையாகிய வில்லை உடையவராய் விளங்குகின்றார் .

குறிப்புரை :

கா . ஆர் - சோலைபோலப் பொருந்திய . இன்சொற் பாவார் - இனிய சொல்லால் ஆகிய பாக்களில் உள்ளவர் . பொருளாளர் - அப்பாக்களின் பொருளை ஆளுதலுடையவர் . அணவு - பொருந்திய . திருப்புன்கூர் , சோழநாட்டுத்தலம் . ஏ ஆர் - அம்பு பொருந்திய . சிலை - வில் . ` மலைச்சிலையர் ` என மாற்றி யுரைக்க . ` எங்கும் பிறிது பொருள் இன்றித் தாமே உள்ளார் ` என்க .

பண் :

பாடல் எண் : 9

புரிந்தார் நடத்தின்கட் பூத நாதர்
பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மில்
பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்
பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
எரிந்தா ரனலுகப்பர் ஏழி லோசை
யெவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் கூத்தில் விருப்பம் உடையவர் . பூதங்களின் தலைவர் . தம் இருப்பிடமாகிய வீட்டுலகை விடுத்துப் போந்து சோலைகள் சூழ்ந்த ஆரூரில் புகுந்து தங்குபவர் . அகன்ற வாயை உடைய பேய்களை என்றும் பிரியாதவராய்த் தாம் விரும்பும் சுடுகாட்டில் எரிக்கப்படுபவருடைய தீயினை விரும்புபவர் . எழுவகையில் அமைந்த இசையால் தம்மையே பரம்பொருளாகத் துதிப்பவர்கள் உள்ள இடங்களிலெல்லாம் தேவர்களும் போற்றுமாறு என்றும் நிலையாக இருப்பவராவர் .

குறிப்புரை :

புரிந்தார் - விருப்பம்கொண்டார் . ` நடத்தின்கண் புரிந்தார் ` என மாற்றுக . தம் இல் - பரலோகம் . ` தம் இல் பிரிந்தாராய்ப் போந்து ஆரூர் புக்கு உறைவர் ` எனக் கூட்டுக . அகல்வாய - அகன்ற வாயினையுடைய . எரிந்துஆர் - எரியாநின்று நிறைந்த . ` பேயும் தாமும் பிரியாராய்க் காட்டில் அனல் உகப்பர் ` என இயையும் . ` ஏழில் ஓசை - ஏழுவகையில் அமைந்த இசையால் ( ஏத்துவார் என்க ). ` ஏழில் இயம்ப ` ( தி .8 திருவாசகம் . திருவெம்பாவை 8.) என்றருளியதில் , ` இயம்ப ` என்றதனால் , ` இயம் ` என்பது சொல்லெச்சமாய் வந்தியையும் ; இயையவே , ` இயங்கள் ஏழு வகையான இசையில் இயம்ப ` என்பது பொருளாதல் அறிக . என்று ஏத்துவார் - என்று உணர்ந்து போற்றுவார் .

பண் :

பாடல் எண் : 10

விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
செழுமுடியுந் தோளைஞ்ஞான் கடரக் காலால்
இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடம் கொண்ட பெருமானார் ஒளிவீசும் பெரிய மழுப்படையை உடையவர் . கடல் நஞ்சுண்டவர் . அழகர் . நீர்வளம் மிக்க வெண்காட்டில் உள்ளவர் . தேன் பொருந்திய மாலையை அணிந்த மார்பில் திருநீறு பூசியவர் . மழபாடியிலும் இரும்பை , அம்பர் , உஞ்சைனி என்ற மாகாளங்களிலும் உறைபவர் . பெருமை விளங்கும் வலிய அரக்கர்கோனாகிய இராவணனை அவன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற போது சிறந்த தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு திருவடியால் நசுக்கிப் பின் அவன் பக்கல் இரக்கம் கொண்டு அவனுக்குப்பல வெற்றிகளையும் வழங்கியவர் .

குறிப்புரை :

விட்டு இலங்குதல் - மின்னுதல் , விடங்கர் - அழகர் , மட்டு - தேன் . தார் - இன்பமாலை . மாலை , போர்க்கு உரியது ; ` தாரும் மாலையும் அணிந்த மார்பு ` என்க ` தார்மாலை மார்ப ` ( தண்டி ) என்றமை காண்க . ` சிட்டி ` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று . ` சிட்டி ( சிருட்டி )` என்றது , ஆணையை . ` வென்றியீந்தார் ` என மாற்றியுரைக்க .
சிற்பி