திருநள்ளாறு


பண் :

பாடல் எண் : 1

ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமைய மாதொருகூ றாயி னானை
மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய் , அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய் , விரும்பத்தக்க பார்வதி பாகனாய் , தாமரை மலர் மேல் உள்ள பிரமனும் , திருமாலும் காண முடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந் தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம் செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும் .

குறிப்புரை :

ஆதி - பழங்காலம் . நான்முகத்தில் ஒன்று சென்று - ஏனைய நான்கு முகங்களினும் ஒருமுகம் முற்பட்டு . அல்லாத சொல் - உண்மையல்லாத சொல் ; அது , ` என் மகனே , வா ` என்று அழைத்தது . ` வாள் ` என்றது , நகத்தை . சேதித்த - அறுத்த . ` திருவடி ` என்றது , வயிரவரை . செல்ல - விலகிச் செல்லும்படி . நல்கி - அருள்புரிந்து . ` சிவலோக நெறி ` என்றது உண்மையை ; அஃதாவது தானே முதல்வன் என உணர்த்தினமையை ; அவ்வாறுணரும் நெறி தானே சிவபிரானை அடையும் நெறியாகலின் , அதனை , ` சிவலோக நெறி ` என்றருளிச் செய்தார் . காட்டியது , பிரமதேவனுக்கு , ` பிரமன் ஐந்துதலை உடையனாய் இருந்தபொழுது , தானே முதல்வன் எனச் செருக்குக் கொண்டு திருமாலுடன் கலாம் விளைத்தனன் . அதுபோது சிவபிரான் வயிரவரை அனுப்ப , அவரைக்கண்டு , ` வா , என் மகனே ` எனப் பிரமன் , அகங்காரத்துடன் அழைத்தலும் அவர் அவ்வாறு அழைத்த அவனது தலையைக் கிள்ளினார் ; பின்பு அவனது செருக்கு நீங்கியபொழுது , சிவபெருமான் அவனுக்கு நல்வரம் அருளினார் ` என்னும் வரலாறு இங்குக் குறிக்கப்பட்டது . அவ்வரலாறு இஞ்ஞான்று வழங்குதற்கேற்ப இதற்குப் பொருள் உரைக்கப்பட்டது . ஆயினும் , சுவாமிகள் காலத்தில் அது வேறுபட வழங்கிற்று எனக்கொள்ளின் , பிறவாறு உரைத்தலுங் கூடும் . இதனை மேற்காட்டியவகையில் , காஞ்சிப் புராணம் வயிரவேசப்படலத்துட் காண்க . மாதிமைய - பெருமையுடைய , ` அழகிய இமயமாது ` என்றலுமாம் . நாதி - நாதன் , நான் அடியேன் - நானாகிய அடியேன் ; சிறப்புப் பெயர் பின் வந்தது ; ` அடியேனாய் ` என எச்சப்படுத்தலுமாம் . ` நினைக்கப் பெற்று ` என்பதற்கு , மேலைப் பதிகத்துள் உரைத்தவாறே உரைக்க . ` உய்ந்தவாறு ` எனபதன் இறுதியில் , ` நன்று ` என்னும் பயனிலை எஞ்சிநின்றது .

பண் :

பாடல் எண் : 2

படையானைப் பாசுபத வேடத் தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய் , முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்கு ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய் , காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

படையான் - பல படைகளை உடையவன் . பாசுபத வேடம் - பாசுபத மதத்திற் கொள்ளப்படும் வேடம் . அனங்கன் - மன்மதன் . பார்த்தான் - விழித்து எரித்தான் . ` ஆவா ` என்பது , இரக்கக் குறிப்பிடைச் சொல் . ` என்று ` என்பதனை ` என்ன ` எனத் திரித்தலுமாம் . சங்கத்த - சங்கின்கண் உள்ள . ` ஏற்றின் கண் ` என உருபுவிரிக்க . நடை - நடத்தல் ; செல்லுதல் உடையவன் .

பண் :

பாடல் எண் : 3

படஅரவ மொன்றுகொண் டரையி லார்த்த
பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
யமுதாக வுண்டானை ஆதி யானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

படமெடுக்கும் பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய , மேலும் கீழுமாய் நிற்பவனை , பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை , வலிய பாம்பினைக்கொண்டு கடைந்த போது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை , எல்லோருக்கும் முற்பட்டவனை , இதழ்களிலே வண்டுகளின் ஒலி நிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை , சிறந்த இரத்தினம் போன்று கண்ணுக்கு இனியவனை . மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை , நள்ளாற்றில் உகந்தருளி யிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

பராபரன் - மேலும் கீழுமாய் நிற்பவன் . ( பரம் - மேல் , அபரம் - கீழ் .) ` மேல் , கீழ் ` என்பன , அத்தன்மையுடைய பொருளை உணர்த்தின . பைஞ்ஞீலி , சோழநாட்டுத்தலம் . ` கடைந்த நஞ்சு ` என்பது , ` ஆறு சென்ற வெயர் ` என்பது போல நின்றது . ` அரவம் பற்றிக் கடைந்த ` என்றது , கடைந்தாரது அறியாமையைத் தோற்றுவித்தற்கு . நஞ்சின் தோற்றத்திற்குரிய காரணத்தை விதந்தருளியவாறு . ஆதியான் - முதல்வன் . மடல் அரவம் - இதழ்களின் பக்கலில் முரலும் வண்டுகளின் ஓசை . மாமணி - உயர்ந்த ரத்தினம் . மாணி - பிரமசாரி ; மார்க்கண்டேயர் . ஆய் - துணையாகி ` நடலை , என்பதன் ஈற்று ஐகாரம் தொகுத்தலாயிற்று . நடலை அரவம் - ஒடுங்குதற்கு ஏதுவாகிய ஒலி ; அது சிலம்பினால் ஆயதென்க ; ` சிலம்பை ஒலிப்பித்தான் ` என்றது , காலால் உதைத்தமையைச் சிறப்பித்தருளியவாறு .

பண் :

பாடல் எண் : 4

கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்
கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்
சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

கட்டங்கம் என்ற படையைக் கையில் ஏந்திக் கங்கணம் அணிந்து , காதில் தோடு அணிந்து , உடம்பை எரித்த சாம்பலைத் தன் திருமேனியில் நிறையப் பூசி அழகனாய்த்தன் கையில் சூலம் ஏந்தி எலும்பு மாலையை நிறையச் சூடிப் பூதக்கூட்டமும் தானுமாய்ப் பரந்து சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

விடு - ஒளிவிடுகின்ற ` அங்கம் சுட்டு ` என மாறுக . ` அங்கம் ` என்றது உடம்புகளனைத்தையும் . ` சுட்டு ` எனவே , ` சாம்பல் ` என்பது தானே வந்தியையும் . ` சுந்தரன் ` என்றது , ` சாம்பல் பூசி இருப்பினும் , அழகனே ` என்றவாறு . ` பட்ட ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . அங்கம் - எலும்பு . கணம் - பூதம் . கம் - ஆகாயம் ; வெளி . வெளியாகிய காட்டில் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 5

உலந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
ஒருநொடியி லுழல்வானை உலப்பில் செல்வம்
சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்
திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோகனைக்
கலந்தார்தம் மனத்தென்றுங் காத லானைக்
கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

இறந்தவர்களுடைய எலும்பு மாலையை அணிந்து உலகமெல்லாம் ஒரு நொடிநேரத்தில் சுற்றிவருகின்றவனாய் , அழிவில்லாத பெருஞ்செல்வத்தைச் சிலந்திப் பூச்சிக்கு அருளிய தேவதேவனாய்ச் சிராப்பள்ளியில் உகந்தருளியிருக்கும் சிவலோகனாய்த் தன்னைக் கூடிய அடியவருடைய உள்ளத்தைத் தான் என்றும் விரும்புபவனாய்க் காஞ்சியில் ஏகம்பத்து உறைவானாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூவினால் செயற்கை அழகு கொண்ட குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

உலந்தார் - இறந்தார் . உலப்பு - குறைதல் . சிலந்தியை அரசனாக்கிய வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் கோச்செங்கட் சோழநாயனார் புராணத்துட் காண்க . ` நலம் ` என்றது , செயற்கை நலத்தை ; மாலை என்றவாறு .

பண் :

பாடல் எண் : 6

குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்
குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்
சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்
தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

அடியவர் குடி என்ற பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்க வல்லவனாய் , பார்வதியை இடப்பாகனாய் , உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குக்களை நீக்கித் தன் திருவருளாகிய புனித நீரில் அவற்றை மூழ்குவிப்பவனாய் , வேதத்தை ஓதுபவனாய் , பிறை சூடிய சடையினனாய் , நடுக்கத்தைப் போக்கி இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு அறம் என்னும் உண்மைப்பொருளின் வழியில் வாழ்ந்து தன்னை வழிபடுபவருக்கெல்லாம் நன்மையை நல்கும் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

குலம் - குடிப்பிறப்பு ` குலங்கெடுத்து ` எனவும் பாடம் ஓதுவர் . கோள் - துன்பம் . குல வரை - உயர்ந்த மலை . மலம் - ( உயிரைப் பற்றியுள்ள ) அழுக்கு . அவை , ` ஆணவம் , கன்மம் , மாயை ` என மூன்று . மா தீர்த்தம் - உயர்ந்த புனித நீர் ; என்றது , தனது திருவருளை . ஆட்டுதல் - மூழ்குவித்தல் . மறையவன் - வேதத்தை ஓதியவன் . ` புனிதநீராட்டுவோன் மறையவனே ` என்னும் நயங் காண்க . சலம் - பொய் ; நடுக்கமுமாம் . தயா மூல தன்மம் என்னும் தத்துவம் ` இரக்கமே அடிநிலை அறம் ` என்னும் உண்மை . ` அஃது இறைவனை உணர்ந்தார்க்கே கைகூடும் என்றவாறு . இத்தொடரினைப் புத்தர் முதலியோர் வாளாவாய்ப்பறையாகச் சாற்றுதல் பயனுடைத் தாகாது என்றபடி . தாழ்ந்தோர் - வணங்கினோர் . ` நின்று தாழ்ந்தோர் ` என இயையும் .

பண் :

பாடல் எண் : 7

பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை யுதைத்தவன்தன் சிரங்கொண் டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

பூவாய் விரியும் கொன்றை மலரைச் சூடிய சடையினனாய்ப் புறம்பயம் , புகலூர் , மறைக்காடு , வலிவலம் என்ற திருத்தலங்களை உகந்தருளிய பெருமானாய் , மற்றைய விலங்குகள் அஞ்சி ஓடுதற்குக் காரணமான வலிமையை உடைய களிற்றின் தோலை உரித்த வலிமையை உடையவனாய் , ஏனைய தேவர்களும் அஞ்சி ஓடுமாறு தக்கனுடைய வேள்வி முழுதையும் அழித்தவனாய் , அவனை ஒறுத்து அவன் தலையை நீக்கினவனாய் , நாவினின்றும் வெளிப்படுமாறு வேதத்தை ஓதுபவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

` பூவாய் விரிகின்ற ` என ஆக்கம் விரிக்க . ` கொன்றை மலர் ` என மாற்றுக . புறம்பயம் , புகலூர் , மறைக்காடு , வலிவலம் சோழநாட்டுத் தலங்கள் . மாஇரி அக்களிறு - மற்றைய விலங்குகள் ( யானைகள் ) அஞ்சி நீங்குகின்ற அத்தன்மையுடைய யானை ; கயாசுரன் . தே இரிய - எல்லாத் தேவரும் அஞ்சி ஓடும்படி . ` உதைத்து ` என்றது . ` தண்டித்து ` என்னும் பொருளது . ` அவன் ` என்றது , தக்கனை . நாவிரிய - நாவினின்றும் தோன்றுமாறு .

பண் :

பாடல் எண் : 8

சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற
வில்லானை யெல்லார்க்கும் மேலா னானை
மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்
காளத்தி யானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதுபவனாய் , ஒளி வீசும் பவளம் போன்ற செந்நிறத்தானாய்ப் பழைய அசுரருடைய மூன்று மதில்களையும் எரியச் செய்த வில்லினை ஏந்தியவனாய் , எல்லாருக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய்க் கல்லாலின் கீழே அமர்ந்து நால்வேதங்களின் அறத்தையும் மௌன நிலையில் நால்வருக்கு உபதேசித்தவனாய்க் காளத்தியையும் , கயிலை மலையையும் உகந்தருளிய பெரியவனாய்க் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

சொல்லான் - சொல்லின்கண் உள்ளவன் . சுடர்ப் பவளச் சோதியான் - ஒளியையுடைய பவளம் போலும் ஒளியினையுடையவன் . ` தொல் புரம் ` என இயையும் , ` நான்கின் கண்ணும் ` என உருபு விரிக்க . கண்டான் - வகுத்தான் . ` காளத்தி மலையானை ` என்பதே பாடமாதல் வேண்டும் .

பண் :

பாடல் எண் : 9

குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை
அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்
சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்
நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

மேம்பட்ட முனிவனான மார்க்கண்டேயனுடைய குறை வாழ்நாள் ஆகிய சாபம் தீருமாறு திருவடியால் கூற்றுவனை வருத்திய பெருமானாய்ப் பகைமை உண்டாயினமையின் அசுரர் உடைய மும்மதில்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்தவனாய்த் தன்னை அடைந்து வேண்டியவர் வேண்டியதை ஈவானாய்ச் ` சிவ பெருமானே எம் இறைவன் ` என்று அவனையே வழிபட்டுக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு எல்லா நலன்களாகவும் விளங்கும் குண பூரணனாகிய நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

முனிவன் - மார்க்கண்டேயர் . அவருக்கிருந்த சாபம் ஆவது , ` பதினாறு ஆண்டோடு வாழ்நாள் முடிக ` என்பது ; இஃது இறைவன் இட்டதே . அது , அவரது முன்னை வினைபற்றியே இடப் பட்டதென்க . ` ஆக வேவ ` என இயையும் . ஆக - மிக ; ஆக்கச் சொல் மிகுதி குறித்தலும் உண்டு . இனி , ` அன்றுதல் ( பகைத்தல் ) ஆயினமையால் ` என்று உரைப்பினும் அமையும் . அழல் வாய் - தீயாகிய வாயையுடைய அம்பு ; அன்மொழித்தொகை . திரிபுரம் எரித்த ஞான்று , தீக்கடவுளே அம்பின் முனையாக நின்றனன் என்க . இனி , ` அழலது வாயினைச் செலுத்தி ` எனலுமாம் . திரிபுரங்கள் , தம்மியல்பால் தாம் அழிந்தன என்பார் , அடர்ப்பித்தான் என்னாது ` அடர்வித்தான் ` என்றருளிச்செய்தார் . ` சென்றியாது ` என்பது , ` சென்றாது என நின்றது . ` சென்றியாது என்பதே பாடம் ` எனலுமாம் . எம்பெருமான் சிவனே யென்றிருத்தலாவது , பிறர் ஒருவரையும் முதற் கடவுளாக மயங்காது அவன் ஒருவனையே தெளிந்து வழிபடுதல் ; அவர்க்கு எல்லா நலங்களுமாய் இருப்பான் என்க . அமைதியாய் அடங்கியிருப்பாரை , ` சிவனே என்றிருப்பார் ` என்னும் வழக்கு நயமும் தோற்றுவித்தவாறு . ` நன்று ` என்றது , தொகுத்தருளிச்செய்தது .

பண் :

பாடல் எண் : 10

இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
இராவணனை யிருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே
யுற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

தான் சாகா வரம் பெற்றானாகச் செருக்கிய இராவணனை அவன் தோள்கள் இருபதும் நசுங்குமாறு திருவடி விரலை ஊன்றியவனாய்ப் பின் அவன் உறவாகி இசைத்த இன்னிசை கேட்டு இரங்கி அவன் துயரைத் துடைத்தவனாய்த் தன்னை மறவாத அடியவர் மனத்து என்றும் நிலைபெற்றிருப்பவனாய்க் கொன்றை , வன்னி , ஊமத்தம் பூ இவற்றின் தேன் நிறைந்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

மிக்க - செருக்கிய . மிகுதி செருக்காதலை , ` மிகுதியான் மிக்கவை செய்தாரை ` ( குறள் . 158) என்பதனால் உணர்க . ` உறவாகி ` எனப் பின்னர் அருளிச்செய்தமையால் ` இராவணனை ` என்புழி , ` பகையாகி ` என்பது பெறப்படும் . ` மீண்டு - மறித்து ; இது வினை மாற்றுப் பொருள் குறித்துநின்றது . ` மீண்டு உறவாகி ` என இயைக்க . நறவு - தேன் ; இது மேற்சொல்லப்பட்ட மலர்களினின்றும் சொரியப்படுவது .
சிற்பி