திருஆக்கூர்


பண் :

பாடல் எண் : 1

முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலும்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும்
கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

முடியில் தாமரை மலரை அணிந்த மூர்த்தியாய் மூவுலகும் பரந்தவராய் , தாமரைக் கண்ணராய் , கல்லலகு என்ற வாச்சியத்தை ஒலிக்கப் பழகியவராய் , தம்மை அருச்சிப்பதற்குத் தாமரைக் கூட்டத்தை நாடும் அடியவர்கள் செய்யும் குற்றேவலை மகிழ்ந்த இளையராய் , தம் திருவடித் தாமரைகளை அடியவர்களின் உள்ளத்தாமரையில் வைத்தவராய் , ஆக்கூரிலே ( தாமாகவே இலிங்க வடிவில் எழுந்தருளியவர் ) தான்தோன்றியப்பர் உள்ளார் .

குறிப்புரை :

முடி - முடியின்கண் . கடி - நறுமணம் . கல்அலகு - கற்கப்படும் மாத்திரை அளவு . ( பார்க்க : ப .7. பா .1 குறிப்பு .) பாணி - தாளம் . அதனைப் பயிலுதலாவது , நடனம் புரிதல் . கொடித் தாமரை என்பது அடையடுத்த ஆகுபெயராய் , அதன் மலரைக் குறித்தது . காடு - மிகுதி . நாடுதல் , பறித்துச் சாத்தி வழிபடுதற்பொருட்டு . தொண்டரது குற்றேவலை மகிழ்தலாவது , அவரது எளிய தொண்டினைப் பொருள் நோக்கி இகழாமல் , அன்பு நோக்கி ஏற்றுக் கொள்ளுதல் . அடித் தாமரை , உருவகம் , ` மலர் ` என்றது , அன்பரது உள்ளக்கமலத்தை . ` தான் தோன்றி ` என்பது சிவபிரானுக்குக் காரணப்பெயர் ; ` ஒருவரால் தோற்றுவிக்கப்படாது , தானே தன் இச்சைவழி நினைத்த வடிவில் தோன்றுபவன் ` என்பது பொருள் . இப்பெயர்க்கு ஏற்ப , இத்தலத்தில் இறைவன் தானே தோன்றிய இலிங்க வடிவாய் ( சுயம்புமூர்த்தியாய் ) எழுந்தருளியிருத்தல் அறியத்தக்கது .

பண் :

பாடல் எண் : 2

ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணரப் படாததொன் றில்லை போலும்
காதிற் குழையிலங்கப் பெய்தார் போலுங்
கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

ஒரு நூலையும் ஆசிரியர்பால் கல்லாது எல்லா நூல்களையும் அறிந்தவராய் எல்லாச் செய்திகளையும் உணர்ந்தவராய்க் காதில் ஒளி வீசுமாறு குழையை அணிந்தவராய்க் கவலைக்கு இடமாகிய பிறவித்துன்பம் அடியவருக்கு வாராமல் தடுப்பவராய் , வேதங்களும் ஆறு அங்கங்களும் ஓதியவராய் , விடத்தால் சூழப் பட்டுக் கறுத்த கழுத்தினராய்த் தாமே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தமக்கு ஓர் ஆதியின்றி ஆக்கூரில் தான் தோன்றியப்பர் உகந்தருளி யுள்ளார் .

குறிப்புரை :

ஓதிற்று - படிக்கப்பட்டது . ` எம்பெருமான் ஒரு நூலும் ஓதியது இல்லை ; அவனால் உணரப்படாத பொருளும் ஒன்றும் இல்லை ` என உலகில் வைத்து அறியப்படாததோர் அதிசய நிலையை உணர்த்தியருளியவாறு ; ` இயல்பாகவே எல்லாவற்றையும் உணர்பவன் ` என்பதாம் , ` கவலை ( க்கு இடமாகிய ) இடும்பை ` என இயையும் . ` காத்தல் `, ஈண்டு , வாராது தடுத்தல் . வேதத்திற்குரிய ஆறு அங்கங்களாவன : சிட்சை , வியாகரணம் , நிருத்தம் , சோதிடம் , கற்பம் , சந்தோவிசிதி . சிட்சை - வேதத்தை ஓதும் ஒலிவகையை விளக்கும் . வியாகரணம் - இலக்கணம் , நிருத்தம் , மொழிநூல் , சோதிடம் , பஞ்சாங்கம் பற்றிக் காலநிலை கூறுவது . கற்பம் - சடங்கு முறை வகுப்பது , சந்தோவிசிதி - இசையமைப்பைக் கூறுவது . அளவு - எல்லை . ஆதிக்கு எல்லையாதலாவது , தானே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தனக்கு ஓர் ஆதியின்றி இருத்தல் .

பண் :

பாடல் எண் : 3

மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன வொளியார் போலும்
ஐவாய் அரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

மைபூசிய மலர்போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய் , நீலகண்டராய் , நெய்அணிந்த முத்தலைச்சூலக் கையராய் . திருநீறுபூசிய எண் தோளராய் , கூரிய மழுப்படையினராய் , காலைச் சூரியன் போன்ற செந்நிற ஒளியினராய் , ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுகக் கட்டியவராய்த் தான் தோன்றியப்பர் அடியவர் அகக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

` நெய் ஆர் ` என்றது இன அடை . வை - கூர்மை . வாள் - ஒளி . வளர் ஞாயிறு - வளர்வதற்குரிய ஞாயிறு ; காலையில் தோற்றஞ் செய்யும் கதிரவன் .

பண் :

பாடல் எண் : 4

வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
பூங்கங்கை தோய்ந்த சடையார் போலும்
கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும்
கட்டங்கம் ஏந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

கூர்மை விளங்கும் வெள்ளிய மழுப்படையைக் கையாளுதலில் வல்லவராய்க் கடலில் தோன்றிய வஞ்சனை உடைய கரிய நஞ்சினை உண்டவராய்த் திருநீற்றோடு பூணூலை அணிந்த மார்பினராய் , அழகிய கங்கை தோய்ந்த சடையினராய் , மணம்நாறும் கொன்றை மாலையினராய்க் கட்டங்கம் என்ற படையை ஏந்திய கையராய்த் திருவடியில் பொற்கழல் அணிந்தவராய்த் தான்தோன்றி யப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

வடி - வடித்தல் ; கூர்மையுமாம் . வெண்மை , வாயிடத்துத் தோன்றுவது , ` வஞ்ச நஞ்சு ` என இயையும் . நஞ்சுக்கு உள்ள வஞ்சமாவது , குளிர்ச்சியுடையதாய் இருந்தே கொல்லுதல் ; ` சிங்கி குளிர்ந்துங் கொலும் ` ( நீதி நெறி விளக்கம் . 58) என்றது காண்க . பூ - அழகு . கடி - நறுமணம் .

பண் :

பாடல் எண் : 5

ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
இடுவெண் தலைகலனா ஏந்தி நாளும்
மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
மாகாச மாயவெண் ணீருந் தீயும்
மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாச மென்றிவையு மானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

புலித்தோலை இடையில் உடுத்துப் பாம்பு மேலாடையாக உடல் மேல் தொங்க மண்டையோட்டினையே பிச்சை வாங்கும் பாத்திரமாக ஏந்தி மின்னலை வென்று ஒளிவீசும் கங்கை தங்கும் சடைமுடிமேல் வெண்பூமாலைகளைச் சூடி மிக்க ஒளியை உடைய வெள்ளிய நீரும் தீயும் சந்திரனும் சந்திரன் உலவும் விண்ணும் மண்ணுலகும் வானுலகும் ஆகிய எங்கும் பரந்திருப்பவராகிய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

ஏகாசம் - மேலாடை ; அஃது இங்கு உடையைக் குறித்தது . ` புலித்தோலின்கண் பாம்பு தாழ ` என்க . கலன் - அணிகலம் . ஏந்தி - தாங்கி ; பூண்டு . மேக ஆசம் - மேகத்தினது நகைப்பு ; மின்னல் . ஆசம் - நகைப்பு ; ` ஹாசம் ` என்பதன் திரிபு ; மின்னலை வென்ற சடை என்க . அதனை முடிமேல் ( தலைமேல் ) புனைந்தார் ( அழகுபெறக் கொண்டார் ) என்க . வெள்ளி மாலை - வெண்மையான மாலை ; எருக்கு மத்தம் முதலிய மலர்களால் ஆகியன . மாக ஆசம் - ஆகாயத்தின் நகைப்பு ( நகைப்பாகிய நீர் என்க ). மாகம் - ஆகாயம் . ` நீரினை ` ஆகாயத்தின் நகைப்பு ` என்றது , மேலிருந்து மழையாய் ஒழுகுதல் குறித்து ; ` மாகாசம் - மிக்க ஒளி ` எனினுமாம் .

பண் :

பாடல் எண் : 6

மாதூரும் வாள்நெடுங்கண் செவ்வாய் மென்தோள்
மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலும் இறுதியு மில்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளா வமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

காதல் மிகுகின்ற ஒளியை உடைய நெடிய கண்கள் , சிவந்த வாய் , மெல்லிய தோள்கள் இவற்றை உடைய பார்வதியை மார்பில் அணைத்துப்பின் பாகமாகக் கொண்டு நிலமும் கடலுமாய் , ஆதியந்தம் அற்றவராய்த் தீங்குகளை வெல்லும் நல் வினை வடிவினராய் , எண்திசைகளும் தமக்கே உடைமையாக உடைய செல்வராய் , ஆதிரை நட்சத்திரத்தை விரும்பிக் கொள்பவராய்த் தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

மாது ஊரும் - காதல் மிகுகின்ற , ` ஊர் ` என்றதும் , ` திரைகள் ` என்றதும் முறையே அவற்றை உடைய நிலத்தையும் கடலையும் குறித்து நின்றன . தீது ஊர - தீவினையை வெல்ல ; ஊர்தல் வெல்லுதலாதல் . ` அடுத்தூர்வது அஃதொப்பது இல் ` ( குறள் . 621.) என்புழியுங் காண்க . அமர்ந்தார் - விரும்பினார் ; ` திருவாதிரையைத் தமக்குரிய நாளாக விரும்பிக்கொண்டார் ` என்பதாம் . திருவாதிரை நாளைச் சிவ பிரான் தனக்குரியதாகக் கொண்டமையானே அந்நாளில் மதிநிறையப் பெறும் மார்கழித் திங்கள் தேவர் எல்லார்க்கும் சிறப்புடைத் திங்களாயிற்று என்க .

பண் :

பாடல் எண் : 7

மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
மான்தோ லுடையா மகிழ்ந்தார் போலும்
கோலானைக் கோவழலாற் காய்ந்தார் போலும்
குழவிப் பிறைசடைமேல் வைத்தார் போலும்
காலனைக் காலாற் கடந்தார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஆலானைந் தாடல் உகப்பார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

பெரிய யானையின் தலையைப் பிளந்தவராய் மான்தோலை உடையாக விரும்பி ஏற்று , அம்பினை உடைய மன்மதனைத் தம் கண்நெருப்பினால் கோபித்துச் சாம்பலாக்கி இளம்பிறையைச் சடைமேல் சூடிக் காலனைக் காலால் ஒறுத்துக் கயிலாயத்தைத் தம் இருப்பிடமாக ஏற்றுப் பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் செய்யப் படுவதனை உகந்த தான்தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

கோலான் - ( தம் மீது எய்யக்கொண்ட ) அம்பினை உடையவன் ; மன்மதன் . கோ - கண் . கடந்தார் - வென்றார் . ஆல் - நிறைந்த . மால் , ` மான்று ` என வருதல்போல , ` ஆல் , ` ஆன்று ` என வருதலின் , ` ஆன்றோர் ` என்பதற்கு இதுவே முதனிலையாதலறிக . இதுதானே சகரமூர்ந்து , ` சால் ` என நிற்கும் என்க . இனி , இதனை , ` அகல் என்பதன் மரூஉ ` எனக் கூறுவாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 8

கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
ஊழித்தீ யன்ன வொளியார் போலும்
எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லும் இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணராய்க் காமனை அக்கண்ணின் தீயினால் எரித்தவராய்ப் பிறர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவராய் , ஊழித் தீப்போன்ற ஒளியினை உடையவராய்ப் பல கோடிப் பேர்களுக்கு உரியவராய் , காளையை இவர்ந்து செல்லும் தலைவராய் , அண்ணாமலையையும் , ஆரூரையும் உகந்தருளியிருப்பவராய்த் தான் தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

` எண்ணாயிரங் கோடி ` என்றது , அளவின்மை கூறியவாறு , ` அண்ணாமலை ` என்பது , ` அண்ணா ` எனக் குறைக்கப்பட்டது .

பண் :

பாடல் எண் : 9

கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியான் சதுர்முகனு நேட நின்ற
நீலநற் கண்டத் திறையார் போலும்
படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்
அடியார் புகலிடம தானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

புதுமை நிறைந்த தளிர்கள் கலந்த கொன்றைப் பூ மாலை , விடு பூக்கள் மகரந்தம் நிரம்பிய முடிமாலை இவற்றைச் சூடியவராய்த் திருமாலும் பிரமனும் தேடுமாறு ஒளிப்பிழம்பாய் நின்ற நீலகண்ட இறைவராய்த் தீவண்ணமும் பொன் வண்ணமும் தம் கூற்றிலும் நீல மணிவண்ணம் தேவியின் கூற்றிலும் அமைந்த திருமேனியராய் அடியவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக உள்ள தான்தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

கடி ஆர் - புதுமை நிறைந்த . ` கொன்றைமலராகிய மாலையும் , போதும் . கண்ணியும் ` என்க . கதிர் போது - கதிர்க்கின்ற ( ஒளிவீசுகின்ற ) விடுபூ . தாது அணிந்த - மகரந்தத்தைக் கொண்டுள்ள ; இதனை இடைநிலை விளக்காகக் கொண்டு , ` மாலை , போது ` என்பவற்றோடும் இயைக்க . ` மாலை போது கண்ணி ` என்பது உம்மைத் தொகையாய் நின்று , ஆகுபெயராய் , ` அவற்றையுடையார் ` எனப் பொருள் தந்தது . ` நெடியான் ` என்புழி உம்மை தொகுத்தல் ஆயிற்று . ` நெடியானும் ` என்பதும் பாடம் . படி - உருவம் . ` மேனி ` என்றதும் , வண்ணத்தையே ; அழல் வண்ணமும் , பொன் வண்ணமும் தமது கூற்றிலும் , மணி ( நீலமணி ) யின் வண்ணத்தைத் தேவியின் கூற்றிலும் உடையவர் என்க . மோனை நயம் இன்மையின் , ` பணி வண்ணம் ` என்பதே பாடம் எனக்கொண்டு ; ` பாம்பை அணிந்த வடிவம் ` என்று உரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

திரையானுஞ் செந்தா மரைமே லானுந்
தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறிச் செல்வார் போலும்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
காலத் தீயன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

பாற்கடற்பரமனும் , செந்தாமரைமேல் உறையும் பிரமனும் ஆராய்ந்து தேடியும் காண முடியாது நாணுமாறு செய்த மேம்பட்டவராய் , போரிடும் காளையை இவர்ந்து செல்பவராய் , நெகிழ்ச்சியில்லாத மலையையே வில்லாகவும் பாம்பையே நாணாகவும் கொண்டு ஊழித்தீயை ஒத்த கோலத்தை உடையவராய்ப் பகைவர்களின் மும்மதில்களையும் அழித்த செயலுடைய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

திரையான் - நீரிடைக் கிடப்பான் ; திருமால் . ` காணாராய் நாணும் ` என்க . புரையான் - உயர்ந்தோன் . ` நாணும் ` என்னும் பெயரெச்சம் . ` புரையான் ` என்னும் ஏதுப் பெயர் கொண்டது . ` புரையான் ` என்பது வேறு முடிபாகலின் , பால்வழு வின்மை அறிக . ` புரையார் ` என்பதே பாடமாகக் கோடலும் ஆம் . கரையா - நெகிழாத ; வளையாத மலையை வளைத்தார் என்றபடி . ` வரையே வில் ` என ஏகாரத்தை மாறிக் கூட்டுக . அவ்வேகாரம் , ` நாகம் ` என்பதனோடும் இயையும் . ` நாணாக ` என்பதில் உள்ள ` ஆக ` என்பது வில்லோடும் இயையும் . ` ஆக ` என்னும் எச்சங்கள் , ` கனலார் ` என்னும் இறந்தகால வினைக் குறிப்போடு முடியும் . கனல் - கனல் போல்வது ; சினம் . வரையார் - கொள்ளார் ; பகைவர் .
சிற்பி