திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்
நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலும்
காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்
கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலும்
கூற்றினையுங் குரைகழலால் உதைத்தார் போலுங்
கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்
ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அழகிய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள பெருமானார் நெற்றிக்கண் ஒன்று உடையாராய் , நெற்றியில் திருநீறு அணிந்தவராய் , வெள்ளிய எலும்புகளை விடாமல் அணிந்தவராய்க் காற்றைவிட விரைவாகச் செல்பவராய் , ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை உதைத்தவராய்த் தம்மால் கொல்லப்பட்ட புலித்தோல் ஆடையை உடுத்த இளையராய்க் கங்கையையும் சடை மேல் வைத்தவராய் , அகக்கண்களுக்குக் காட்சி நல்குகிறார் .

குறிப்புரை :

` நடந்தார் ` என்பதனை , ` நடத்தினார் ` எனப் பிற வினைப் பொருட்டாக உரைக்க . ` காற்றினையும் ` என்பதை , ` காற்றினிலும் ` எனத் திரித்தலுமாம் . குழகர் - அழகர் . உம்மைகள் , சிறப்பு . திருவாரூர்த் திருக் கோயிலில் ` அரநெறி ` என்பதொரு தலமும் இருத்தலால் , புற்றிடங் கொண்ட இடமாகிய முதலிடம் , ` மூலட்டானம் ` என வழங்கப்படும் .

பண் :

பாடல் எண் : 2

பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
பாசுபதம் பார்த்தற் களித்தார் போலும்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலும்
கபாலங்கட் டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்கள் அட்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானனார் பருத்த பாம்பினை இடையில் இறுக்க அணிந்தவராய் , அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கியவராய்க் கரிய யானைத் தோலினைப் போர்த்தவராய் , மண்டை ஓட்டினையும் கட்டங்கப் படை எழுதிய கொடியினையும் உடையவராய்ப் பெரிய மலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்தவராய் , நந்தி என்ற பெயரினையும் உடையவராய்ப் பகைவருடைய அழித்தற்கரிய மும்மதில்களையும் அழித்தவராய் , நம் மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

பசுபதியின் ( சிவனது ) ஆற்றல் பெற்ற அம்பு , ` பாசு பதம் ` எனப்படும் . பார்த்தன் - அருச்சுனன் . ` கபாலத்தார் , கொடியார் என்க . ` காபாலம் ` என்பதும் பாடம் ; கட்டங்கம் என்னும் படைக்கலம் எழுதப்பட்ட கொடியும் சிவபிரானுக்கு உண்டென்க . எய்தார் என்பது , போர் செய்தார் என்னும் பொருளாய் நின்றது . ` பேரினை நந்தியென்னும் பெயராக உடையார் ` என உரைக்க . அரணங்கள் - மதில்கள் .

பண் :

பாடல் எண் : 3

துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந்
தூய திருமேனிச் செல்வர் போலும்
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும்
மணியுடைய மாநாகம் ஆர்ப்பார் போலும்
வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

கீளூம் கோவணமும் ஆகிய குறைந்த உடைகளையும் தோல் உடையையும் உடையவராய்த் தூய திருமேனியை உடைய செல்வராய் , அடியார்களுடைய பிணிகளை நீங்குமாறு போக்குபவராய் , மொழியைக் கடந்த பெரும்புகழாளராய் , இரத்தினங்களை உடைய மேம்பட்ட நாகங்களை அணிந்தவராய் , வாசுகி என்ற பாம்பினைத் தம் வில்லின் நாணாகக் கொண்டவராய் , அழகிய நீண்ட வீதிகளில் உலாவுபவராய் , அழகிய ஆரூர்ப் பெருமானார் மனக்கண் முன் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

துணி உடை - குறைந்த உடை ; அவை , கீளும் கோவணமும் . என்பார் - எனப்படுவார் ; ` என்பினை அணிந்தவர் ` என்றுமாம் . `( தாம் ) உடைய அடியாரைப் பிணி தீர்ப்பார் ` என இயைக்க . ` பிணி தீர்ப்பார் ` என்பது , ` இனிது ஆட்கொள்வார் ` என்றவாறு . பெரியார் - பேச்சுக்கு ( அடங்காத ) பெரும்புகழை உடையவர் . நாண் - வில் நாண் . ` அணியுடைய வீதிநடப்பார் ` என்றது , ஆரூர்ப் பெருமானார் , வீதி விடங்கராய் இருத்தல்பற்றி . ` வீதி விடங்கராய் நடங்குலாவினரே ` ( தி .9 திருவிசைப்பா - 18.2.) என்றது காண்க .

பண் :

பாடல் எண் : 4

ஓட்டகத்தே ஊணாக வுகந்தார் போலும்
ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
காட்டகத்தே யாட லுடையார் போலும்
காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானனார் மண்டை யோட்டில் பிச்சையெடுக்கும் உணவையே விரும்பியவராய் , அனற் பிழம்பாய்த் தோன்றி அடிமுடி காண முடியாதவாறு உயர்ந்தவராய் , நாட்டிலே மக்கள் பயின்று வரப் பல நெறிகளையும் கூறியவராய் , ஞானப் பெருங்கடலுக்கு உரிமை பூண்ட தலைவராய்ச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் சீகாமரம் என்ற பண்ணில் அமைந்த பாடல்களைப் பாடித்திரிபவராய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை உகப்பவராய் நம்மனக்கண் முன் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

ஊண் ஆக - உணவு மிக , மிகுதல் , பிச்சையால் என்க . ஓர் உரு , அழற்பிழம்பு . ` நாட்டகத்தே நிலவ ` என , ஒரு சொல் வருவிக்க . நடை - நெறி . நாதர் - தலைவர் . ஞானத்தின் பயனாய் நிற்றலின் , ஞானமாகிய கடலுக்குக் கரையாயவர் என்றருளியவாறு . ` ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன பூரணன் காண் ` என ( ப .8. பா .3.) அருளிச்செய்தமை காண்க . காமரம் - சீகாமரப் பண் ; முதற் குறை . ஆட்டகம் - ` ஆடு என்பது திரிந்துநின்றது ` திருமஞ்சன சாலை என்பதே பொருள் .

பண் :

பாடல் எண் : 5

ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்
இமையவர்க ளேத்த இருந்தார் போலும்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
வானத் திளமதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

பன்றியின் முற்றாத கொம்பினை அணிந்தவராய்த் தேவர்கள் வழிபடும்படியாகத் தங்கியிருப்பவராய்க் காட்டில் உள்ள கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தவராய்க் கடல் நஞ்சினை உண்டு கறுத்த கழுத்தினராய்ப் பிறை சேர்ந்த சடையினராய் , உயர்ந்த கயிலை மலையை உகந்து உறைபவராய் , அகரமாகிய எழுத்து ஏனைய எழுத்துக்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருப்பது போல ஏனைய பொருள்களுக்கெல்லாம் காரணராய் , காளையை இவர்ந்தவராய் அடியவர்கள் மனக்கண்முன் அழகிய ஆரூர்ப் பெருமானார் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

திருமால் வராகமாய்த் தோன்றிய சில நாட்களுக்குள்ளே அழித்தமையின் , ` இளமருப்பு ` என்றார் . ` ஏன முளைக்கொம் பவைபூண்டு ` ( தி .1. ப .1. பா .2.) என்றது காண்க . கானம் காடு . கீழ் நிழல் - அடிக்கண் உள்ள நிழல் . ` மகிழ்ந்தார் ` என்றது , ` மகிழ்ந்து வீற்றிருந்தார் ` எனப் பொருள் தந்தது . ஆனத்து - எருதின் மேல் விளங்குகின்ற . முன் எழுத்து , அகரம் ; ` எழுத்தாய் ` என்னும் ஆக்கச் சொல் , உவமைகுறித்து நின்றது . இறைவற்கு அகரம் உவமையாகப் பொதுமறையுட் சொல்லப்பட்டமை வெளிப்படை . ` முன்னெழுத்தாய் நின்றார் ` என்பது . ஒரு பெயர்த் தன்மைத்தாய் , ` ஆனத்து ` என்னும் ஏழாவதன் தொகைக்கு முடிபாயிற்று .

பண் :

பாடல் எண் : 6

காமனையும் கரியாகக் காய்ந்தார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும்
நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையுந் திருமுடியார் தாமே போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் மன்மதனைச் சாம்பலாகுமாறு கோபித்துக் கடல் விடத்தை உண்டு நீலகண்டராய்ப் பிறையையும் சடையில் சூடிச் சொல், சொற்பொருள், நாவால் உச்சரிக்கப்படும் வேதம் இவற்றின் வடிவினராய்ப் பார்வதி பாகராய்க் கங்கையை முடியில் வைத்தவராய் அடியவர் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார்.

குறிப்புரை :

சோமன் - சந்திரன் . ` நா மன்னும் , ஆம் மன்னும் ` என்பன . ` நாமனையும் ஆம் மனையும் ` எனத் திரிபெய்தி நின்றன . ஆம் - நீர் .

பண் :

பாடல் எண் : 7

முடியார் மதியரவம் வைத்தார் போலும்
மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலும்
செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
செல்கதிதான் கண்ட சிவனார் போலும்
கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியா ரடிமை யுகப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் முடியில் பிறையும் பாம்பும் சூடி , மூவுலகும் தாமேயாய்ப் பரந்து புலால் நாற்றம் கமழும் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்து வீடுபேற்றிற்கு உரிய வழியைக் காட்டி மற்றவர் நீக்கும் நஞ்சுண்டு நீல கண்டராய் , எலும்புக்கூட்டினை அணிந்த வேடத்தை உடைய தலைவராய் , அடியார்களுடைய அடிமைப் பணியினை உகப்பவராய் மனக்கண்முன் அடியவர்க்குக் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

ஆர் - ஆத்தி மாலை . செடி - முடைநாற்றம் . கண்ட - படைத்த . தான் , அசைநிலை . கடி ஆர் - நீக்குதலைப் பொருந்திய கங்காளம் - எலும்புக் கூடு . கருத்தர் - தலைவர் . அடிமை - தொண்டு .

பண் :

பாடல் எண் : 8

இந்திரத்தை யினிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்திறைஞ்சும் இறைவர் போலும்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந்
தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே யணியாநஞ் சுண்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் இந்திர பதவியைத் தக்கவருக்கு மகிழ்வோடு ஈந்து , தேவர்கள் வந்து வழிபடும் தலைவராய் அழகிய நீறு பூசி , மிகவும் தூய திருமேனியை உடைய தலைவராய் , அடியவர்கள் உள்ளத்தே தம் திருவைந்தெழுத்தை நிலையாக அமைத்து வாசுகியைத் தம் மலைவில்லின் நாணாக வில்லினை வளைத்து இணைத்து , அழகிய நிலைபெற்ற அணியாகுமாறு விடம் உண்டு நீலகண்டராய் நம்மனக்கண்முன் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

இந்திரம் - தலைமை . ` இமையவர்கள் ` என்பது பின்னர் வருதலால் , ` ஈந்தது அவர்கட்கே ` என்பது பெறப்படும் . துதைதல் - செறிந்து மிக்கிருத்தல் ; துதைந்தார் , ` தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனி ` ( தி .12 திருநாவு . புரா . 140) என்றதும் காண்க . ` மனம் ` என்றது , அடியார்களுடையதை . ` மலையை வளைத்தார் ` என வருவித்து முடிக்க . அம் திரத்து அணியா நஞ்சு உண்டார் - அழகு நிலைபெற்ற பொருள்களில் அழகிய பொருளாக நஞ்சினை உண்டார் ; உண்டு கண்டத்தில் வைத்தார் .

பண் :

பாடல் எண் : 9

பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
பிறவி யிறவி யிலாதார் போலும்
முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
முழுநீறு பூசும் முதல்வர் போலும்
கண்டத் திறையே கறுத்தார் போலும்
காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

எல்லா உடம்புகளையும் பாதுகாக்கும் தலைவரான திருவாரூர்ப் பெருமானார் பிறப்பு இறப்பு அற்றவராய் , நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவராய் , உடல் முழுதும் நீறு பூசும் தலைவராய்க் கழுத்து சிறிதே கறுத்தவராய்க் காளத்தி , குடந்தை , நாகை என்ற காரோணப்பதிகள் ஆகியவற்றை உகந்தருளியிருப்பவராய் அண்டத்துப் புறத்தும் உள்ளவராய் நம் மனக்கண்முன் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

பிண்டம் - ( உயிர்களது பலவகைப்பட்ட ) உடம்புகள் . ` அவைகளைக் காப்பவன் இறைவனேயாகலின் , நாம் அதுபற்றிக் கவலுதல் வேண்டா ` என்பது குறிப்பு . முண்டம் - நெற்றி . ` முக்கண் ` என்பது , ` மூன்றாவது கண் ` என்னும் பொருளதாய் நின்றது . இறை - சிறிது .

பண் :

பாடல் எண் : 10

ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை யஞ்சே லென்பார்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலத்தானப் பெருமான் ஒரு காலத்தில் தாம் ஒருவரேயாகிப் பல ஊழிக் காலங்களையும் கண்டு , கங்கையைப் பெருகாதபடி சடையில் கொண்டு தவிர்த்து , பிறப்பு துயரம் சாக்காடு என்பன இல்லாதவராய் , உருகாத மனத்தவர் உள்ளத்தில் உகந்து தங்காதவராய் , தம்மை விரும்புவர் உள்ளத்தை என்றும் நீங்காதவராய் அருகில் வந்து எனக்கு அஞ்சேல் என்று அருள் செய்பவர் ஆவர் .

குறிப்புரை :

` ஒருகாலம் ` என்றது காலத்திற்கு அப்பாற்பட்ட நிலையை ; அஃது உலகம் தோன்றாதிருந்த நிலை . ஒன்று - தாம் ஒரு பொருளே . ஊழி , உலகம் தோன்றி ஒடுங்கும் கால அளவு . ` வெள்ளம் ` என்றது , கங்கையை . ` தவிர்த்தார் ` என்றது , அதனைச் சடையில் அடக்கினமையை . இனி , ` ஊழி வெள்ளத்தை நீக்கி , உலகம் மீளத் தோன்றுமாறு செய்தார் ` எனலுமாம் . ` இடும்பை ` என்பது , ` சாக்காடு ` என்பதனோடும் இயையும் ; ` பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் ` என்பது பொருள் . உகப்பார் - விரும்புவார் . ` அருகாக வந்தென்னை அஞ்சேல் என்பார் ` என்ற அருந்தொடர் , சுவாமிகளுக்கு இறைவன் அநுபவப் பொருளாய் இருந்தமையை இனிது விளக்கும் .

பண் :

பாடல் எண் : 11

நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்
கோளரக்கர் கோன்தலைகள் குறைத்தார் போலும்
சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்
திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானப் பெருமானார் நல்ல ஒழுக்க நெறிகளை நூல்கள் வாயிலாக அறிவித்து ஞானப்பெருங்கடற்கு உரிமை உடைய தலைவராய் , வேள்வியில் கொல்லப்பட்டதனை வேள்வி செய்யும் அடியவர் உகப்பிற்காக நுகர்பவராய் , இராவணன் தலைகள் பத்தினையும் நசுக்கியவராய்ப் பகைவருடைய திரிபுரங்களை அம்பு எய்து அழித்தவராய்த் திசைகளிலும் திசைகளில் உள்ள பொருள்களிலும் பரவியவராய் , ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும் அடியார் உகப்பிற்காக ஆயிரம் திருநாமங்களை உடையவராய் , அடியவர்கள் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றார் . சென்றார் - மெலித்தல் விகாரம் .

குறிப்புரை :

நடை - ஒழுக்கம் . நவின்றது , நூலால் என்க . ` ஞானப் பெருங்கடற்கு ஓர் நாதர்போலும் ` என்பது முன்பும் ( பா . 4) வந்தது . ` தொல் , நல் ` என்பன , ` தொன்று நன்று ` என நிற்றல்போல , ` கொல் ` என்பது , ` கொன்று ` என நின்றது , தொழிலும் பண்பாம் முறைமைபற்றி யென்க . ` கொலை ` என்பது பொருள் . கொன்றது - கொல்லப்பட்டது ; இத்தொடர் , வேள்வியுட் கொல்லப்பட்டதனைக் குறித்தது ; ` அது தீதாயினும் , நன்றென்று கருதிச் செய்வாரது கருத்து நோக்கி ஏற்றுக் கொள்கின்றான் ` என்பது திருக்குறிப்பு . இனி , ` கொன்றது ` என்றது , ` கொன்றதனால் ஆகிய பாவம் ` எனக் கொண்டு , ` அதனை ` கொலைத் தொழில் வடிவாய் நின்று நீக்கினார் ` எனக் கோடலுமாம் . ` கொன்றது வினையைக் கொன்று நின்ற அக் குணம் என்று ஓரார் ` என்பது சிவஞானசித்தி . ( சூத்திரம் . 1.71.) ` குறைத்தல் ` ஈண்டு , சிறிது கெடச் சிதைத்தல் . சென்று ஆர் - ( வானத்தில் ) திரிந்து ஆர்க்கின்ற . ` சென்று எய்தார் ` என்றியைப்பினுமாம் . திசை அனைத்தும் ஆனார் - திசைகளில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஆயினார் . அன்று ஆகில் - ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும் ; சிறப்பும்மை தொக்கது . ` ஆயிரம் ` என்றல் , அளவின்மை காட்டுவதொரு வழக்கு . ஒருபெயரும் அவருடைய பெயரல்லாமை , அஃது அவரது உண்மை நிலையை வரையறுத்துணர்த்தாமையானும் , அளவற்ற பெயர் அவருடைய பெயர்களாதல் அவை அவரது அருள் நிலையை ஒவ்வோராற்றான் விளக்கலானும் என்க . ` ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் - திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ ` ( தி .8 திருவாசகம் . திருத்தெள்ளேணம் .1) என்றருளிச் செய்தமையுங் காண்க .
சிற்பி