திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறல்
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
பருப்பதத்தில் அருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
அருமணியை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

செல்வம் தரும் சிந்தாமணியாய் , இனிக்கும் தேன் , பால் , கருப்பஞ்சாறு , தெளிவாகிய அமுதம் போன்றவனாய்ச் சிறந்த ஆசிரியனாய் , குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரை சச்சரி இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய் , எங்கும் கிட்டுதற்கு அரிய பெரிய இரத்தினம் பவளம் முத்து கிளிச்சிறை என்ற பொன் போன்றவனாய்ச் சீசைலத்தின் விலைமிக்க அணிகலனாய் , பாவத்தைப் போக்கும் அரிய மாணிக்கமாய் உள்ள ஆரூர்ப் பெருமானை இதுகாறும் அறியாது நாய் போன்ற , அவன் அடியேன் மறந்திருந்தவாறு கொடியது .

குறிப்புரை :

திரு - அழகு . ` தேறலை பொன்னை ` என்னும் ஐயுருபுகள் தொகுத்தலாயின . தேறல் - தேன் . குரு - நிறம் . குருமணி - சிறந்த ஆசிரியன் என்றுமாம் . குழல் முதலியன வாச்சியவகைகள் . பாணி - தாளம் ; அவற்றை உடையவன் என்றவாறு . இனி , நடனமாடுதல் பற்றிக் கூறியதுமாம் . பருமணி - பெரிய இரத்தினம் . பருப்பதம் - சீபருப்பதம் . அருங்கலம் - விலைமிக்க அணிகலம் . அருமணி - கிடைத்தற்கரிய இரத்தினம் . அயர்த்தல் - மறுத்தல் . ` மறந் திருந்தவாறு கொடிது ` என்க .

பண் :

பாடல் எண் : 2

பொன்னேபோல் திருமேனி யுடையான் தன்னைப்
பொங்குவெண் ணூலானைப் புனிதன் தன்னை
மின்னானை மின்னிடையாள் பாகன் தன்னை
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தத்துவனை யுத்தமனைத் தழல்போல் மேனி
அன்னானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

பொன்னார் மேனியனை , வெண்ணூல் அணிந்த புனிதனாய் ஒளி வீசுவானை , பார்வதிபாகனை , யானைத்தோல் போர்வையனைத் , தன்வயம் உடையவனைத் தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனை , மெய்ப்பயனை , மேம்பட்டவனை , தழல்போன்ற செந்நிற மேனியனை - இவ்வாறெல்லாம் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்கும் ஆரூர்த் தலைவனை இதுகாறும் அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

மின்னான் - மின்போலும் ஒளியுடையவன் . தன்னான் - தன்வயமுடையவன் . தத்துவன் - உண்மைப் பொருளாயுள்ளவன் . அன்னான் - அவன் . மேனியையுடைய அவன் என்க . ` அன்னைபோல்பவன் ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

ஏற்றானை ஏழுலகு மானான் தன்னை
யேழ்கடலு மேழ்மலையு மானான் தன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்
கொடுமழுவாள் கொண்டதோர் கையான் தன்னைக்
காற்றானைத் தீயானை நீரு மாகிக்
கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள
ஆற்றானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

இடபவாகனனாய் , ஏழ்கடலும் ஏழ்மலையும் ஏழுலகும் ஆகிப் பரந்திருப்பவனாய்க் கூற்றுவனாய்த் தருமராசருடைய ஏவலனான கூற்றை உதைத்தவனாய் , மழுப்படை ஏந்திய கையனாய் , காற்றும் தீயும் நீருமாகி நறுமணம் கமழும் செஞ்சடைமேல் கங்கையைத் தரித்தவனாய் உள்ள , ஆரூரிலுள்ள , அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

ஏறு - விடை . ஏழ்மலை , ஏழ்தீவைச் சூழ்ந்திருப்பன . கூற்றான் - கூற்றுவனாய் இருப்பவன் . ` வெள்ளமாகிய கங்கை ஆற்றான் ` என மாறிக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 4

முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை
மூவாத மேனிமுக் கண்ணி னானைச்
சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்
சங்கரனைச் சங்கக் குழையான் தன்னை
மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை
மறுமையும் இம்மையு மானான் தன்னை
அந்திரனை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட கொடிய வினைகளைத் தீர்ப்பவனாய் , மூப்படையாத் திருமேனியில் மூன்று கண்கள் உடையவனாய்ச் சந்திரனும் சூரியனும் ஆகியவனாய் , எல்லோருக்கும் நன்மை செய்பவனாய் , சங்கினாலாகிய காதணியை உடையவனாய் , மந்திரமும் வேதத்தின் பொருளும் மறுமையும் இம்மையுமாய் அழகுநிலை பெற்றிருக்கும் ஆரூரிலுள்ள அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

முந்திய - முற்பிறப்புக்களிற் செய்யப்பட்டு வந்த . சங்கரன் - இன்பத்தைச் செய்பவன் . அம் திரன் - அழகு நிலை பெற்றவன் ; என்றும் ஒருநிலையாய் இருப்பவன் . ` அந்தரன் ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 5

பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்
பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே
உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்
ஓரிபல விடநட்ட மாடி னானைத்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி
நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற
அறநெறியை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

பிறக்கும் வழிகளாகவும் , பெருமையாகவும் , தலைக்கோலம் அணிந்தவனாகவும் , பித்தனாகவும் , அடியவர்கள் உள்ளத்தில் உறவுதரும் வழியாகவும் , வேள்வியாகவும் அமைந்து , சுடுகாட்டிலுள்ள நரிகள் அஞ்சி ஓடக் கூத்தாடுபவனாய்த் துறவு நெறியாகவும் புகையாகவும் காட்சி வழங்கிப் பூவில் நறுமணம் போல உலகெங்கும் பரந்துள்ளவனாய் உள்ள அறநெறியை அறிவித்த ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

பிற நெறி - பிறக்கும் நெறி ; பந்தம் . பீடு - பெருமை . பிஞ்ஞகன் - தலைக்கோலத்தை உடையவன் . உற - உறவு ; முதனிலைத் தொழிற்பெயர் . ஓமம் - வேள்வி . ஓரி - நரி . விட - ( அஞ்சி ) நீங்க . துற - துறவு ; இதனையும் , ` உற ` என்பது போலக் கொள்க . இது பிறவி நெறிக்கு மாறானது ; வீட்டுநெறி . தூபம் - நறும்புகைப் பொருள் ; என்றது வேள்விப் பொருளை . இது ` ஓமமாய் ` என்பதன் பின் வைக்கற் பாலது . தோற்றம் - உலகத் தோற்றம் ; இஃது ஆகுபெயராய் , அதன் காரணத்தைக் குறித்தது . நாற்றமாய் - நாற்றம்போல . தாமரை மலராகிய இருக்கைமேல் வைத்து வழிபடப்படுதல்பற்றி ` நாற்றமாய் நன்மலர்மேல் உறையாநின்ற ` என்றருளிச் செய்தார் . அறநெறி - அறநெறிக்கு முதல் .

பண் :

பாடல் எண் : 6

பழகியவல் வினைகள் பாற்று வானைப்
பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்கும்
குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்
கொடுகொட்டி கொண்டதோர் கையான் தன்னை
விழவனை வீரட்டம் மேவி னானை
விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
அழகனை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

பழக்கத்தினால் ஏற்படும் வருவினையை அழிப்பவனாய் , ஆன்மாக்களுக்குத் தலைவனாய் , அக்கினித் தேவனாய்ப் பாவங்கள் போக்கும் இளையவனாய் , பாம்பினை ஆட்டுபவனாய்க் கொடுகொட்டிப்பறையைக் கையில் கொண்டவனாய் , விழாக்களில் மேவி இருப்பவனாய் , வீரட்டத்தில் உறைபவனாய்த் தேவர்கள் துதித்து விரும்பும் அழகனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

` பழகிய வல்வினைகள் ` என்றது பழக்கத்தினால் செய்யப்படும் ஆகாமிய வினைகளை . பாற்றுவான் - நீக்குவான் . பாவகன் - அங்கியங் கடவுள் ( அக்கினி தேவன் ). விழவன் - விழாக்களை உடையவன் ; மங்கலத்தையே உடையவன் . விரும்புவான் - விரும்பப்படுபவன் .

பண் :

பாடல் எண் : 7

சூளா மணிசேர் முடியான் தன்னைச்
சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்
கோள்வா யரவ மசைத்தான் தன்னைக்
கொல்புலித்தோ லாடைக் குழகன் தன்னை
நாள்வாயும் பத்தர் மனத்து ளானை
நம்பனை நக்கனை முக்க ணானை
ஆள்வானை ஆரூரில் அம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

சூளாமணியை அணிந்த முடியை உடையவனாய் , திருநீறு தரித்த ஒளியினனாய் , கொடிய பாம்பினை , இடையில் இறுக்கிக் கட்டியவனாய்ப் புலித்தோல் ஆடையை அணிந்த இளையவனாய் , எப்பொழுதும் அடியவர் உள்ளத்தில் இருந்து அவரால் விரும்பப்படுபவனாய் , ஆடை அற்றவனாய் , முக்கண்ணனாய் , எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

சூளாமணி - உச்சிமணி ; இது பாம்பின் தலையில் உள்ளதைக் குறித்தது . கோள்வாய் - கொல்லும்வாய் . நாள் வாயும் - நாள்தோறும்வந்து வழிபடுகின்ற . ஆள்வான் - எல்லா உலகங்களையும் எல்லாப் பொருள்களையும் ஆளுகின்றவன் .

பண் :

பாடல் எண் : 8

முத்தினை மணிதன்னை மாணிக் கத்தைத்
மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து
கோளரவொன் றாட்டுங் குழகன் தன்னைப்
பத்தனைப் பத்தர் மனத்து ளானைப்
பரிதிபோல் திருமேனி யுடையான் தன்னை
அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

முத்து , மணி , மாணிக்கம் , என்றும் மூப்படையாத கற்பகத்தின் கொழுந்து , வயிரம் இவற்றை வைத்துக் கோத்த மாலை போல்வானாய்க் காளையை இவர்ந்து பாம்பாட்டும் இளையவனாய் , எல்லோரிடத்தும் அன்புடையவனாய் , பக்தர்கள் மனத்தில் நிலைத்து இருப்பவனாய் , சூரியனைப் போல ஒளி வீசும் திருமேனியை உடையவனாய் , எல்லோருக்கும் தலைவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

மூவாத - கெடாத , கொத்து - எல்லா மணியும் கோக்கப்பட்ட மாலை . இதனை , ` வயிரத்தை ` என்பதன் பின்னர்க்கூட்டுக . ` ஊர்ந்து ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது . பத்தன் - அன்புடையன் ; இரக்கம் உடையவன் . பரிதி - சூரியன் .

பண் :

பாடல் எண் : 9

பையா டரவங்கை யேந்தி னானைப்
பரிதிபோல் திருமேனிப் பால்நீற் றானை
நெய்யாடு திருமேனி நிமலன் தன்னை
நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்
செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்
செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

படமெடுத்தாடும் பாம்பைக் கையில் ஏந்தியவனாய்ச் சூரியனைப் போலச் சிவந்த மேனியில் பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனாய் , நெய் அபிடேகம் செய்த திருமேனியை உடைய தூயவனாய் , நெற்றியில் மூன்றாவது கண் உடையவனாய்ச் செழும்பவளத்திரள் போன்ற செந்நிறத்தினனாய்ச் செஞ்சடையில் வெண்பிறை சூடியவனாய்த் திருவையாற்றை உகந்தருளியிருப்பவனான ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

பை ஆடு அரவம் - படத்தையுடைய ஆடுகின்ற பாம்பு . பால் நீறு - பால்போன்ற நீறு . மற்றொருகண் - பிறர் ஒருவர்க்கும் இல்லாத வேறு ஒருகண் . ஐயாறு - ` திருவையாறு ` என்னும் சோழ நாட்டுத் தலம் .

பண் :

பாடல் எண் : 10

சீரார் முடிபத் துடையான் தன்னைத்
தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்
பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப்
பெண்ணிரண்டும் ஆணுமாய் நின்றான் தன்னைப்
போரார் புரங்கள் புரள நூறும்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை
ஆரானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

அழகிய பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் புகழ் அழியுமாறு கால்விரலால் உடல் சிதைய வருத்திப் பிறகு அவனுக்கு அந்தப் பெயருக்கு ஏற்ப எல்லாரையும் அழச்செய்பவன் என்ற பெருமையைக் கொடுத்தானாய்ப் பார்வதி கங்கை என்ற பெண்பாலர் இருவரைக் கொண்ட ஆண்வடிவு உடையவனாய்ப் போரிட்ட திரிபுரங்கள் அழியுமாறு சாம்பலாக்கிய புண்ணியனாய் , வெண்ணீறு அணிந்தானாய் , அடியவர்களுக்குத் தெவிட்டாதவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

தேசு - ஒளி ; அழகு ; புகழுமாம் . நூக்கி - வருத்தி . பேர் - புகழ் . பெண் இரண்டு - உமையும் , கங்கையும் . ` ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை ` ( தொல் . எழுத்து . 304) என்பவாகலின் , ` பெண் இரண்டும் ` என அஃறிணையாக அருளிச் செய்தார் . ` ஆணு மாய் ` என்றது , ` தானுமாய் ` என்னும் பொருட்டாய் நின்றது . நூறும் - அழித்த . ஆரான் . ( அடியவர்கட்குத் ) தெவிட்டாதவன் .
சிற்பி