திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்
ஏழ்கடலும் ஏழுலகும் ஆயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

செம்பொன்னால் செய்த மணிகள் இழைக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்திலுள்ள எம் செல்வன் எம்மைத் தளையிடும் ஊழ்வினையால் ஏற்படும் நோயைத் தீர்த்தவன் . ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவன் . நறுமணம் கமழும் கொன்றை மாலையன் . பிறையோடு சூடிய முடிமாலையை உடையவன் . தேவர்கள் வேண்ட ஓரம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவன் . தீயில் கூத்தாடுபவன் . பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவன் .

குறிப்புரை :

பந்தம் - தளை . வம்பு - வாசனை . உந்து - எழுவிக்கின்ற . ` அனலாடி ` என்னும் எச்சம் எண்ணுப் பொருளது . ` காண் ` என்பன அசைநிலைகள் . ` எம் செல்வன் ` என்பதனை எழுவாயாக எடுத்துக்கொண்டுரைக்க . தான் , ஏ அசைநிலைகள் .

பண் :

பாடல் எண் : 2

அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந்
தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்தும்
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

இடையில் எலும்புகளை அணிந்தவன் . அடியார்களுக்கு எப்பொழுதும் கிட்டுதற்கு அரிய அமுதமாய் இனிக்கும் திருவையாற்றில் உறையும் இறைவன் . கொக்கிறகு , கொன்றை மாலை , குளிர்ந்த பிறை , கொடுமை மிக்க பாம்பு என்பன ஒருசேரத் தங்கி யிருக்கும் சடையினன் . தொண்டர்கள் செல்லும் தூய வழியைக் காட்டுபவன் ஆகிய சிவபெருமான் தேவர்கள் துதித்துப் புகழுமாறு எல்லாத்திக்கிலும் நிறைந்த புகழை உடைய திருவாரூரில் திருமூலத் தானத்து உறையும் எம் செல்வனாகக் காட்சி வழங்குகிறான் .

குறிப்புரை :

அக்கு உலாம் - எலும்பு பொருந்திய . அண்ணிக்கும் - தித்திக்கின்ற . ஐயாறு , தலம் . ` கொக்கு ` என்றது , அதன் இறகை . பீலி - மயில் இறகு . கூர் - ( கொடுமை ) மிக்க . தொக்கு உலாம் - கூடித் தங்குகின்ற ; ` தூநெறி ` என்றது , அதன்கண் மேற்கொள்ளப்படும் ஒழுக்கங்களை . ` ஏத்தும் புகழ் ` என இயையும் . ` சென்னி ` என்பதை , ` கொக்கு ` என்பதற்கு முன்வைத்து , ` சென்னிச் சடையினன் ` என இயைக்க

பண் :

பாடல் எண் : 3

நீரேறு சடைமுடியெம் நிமலன் தான்காண்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தான்காண்
வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்
வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
காரேறு முகிலனைய கண்டத் தான்காண்
கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
சீரேறு மணிமாடத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

சடைமுடியில் கங்கையைத் தரித்த தூயவன் . நெற்றிக்கண்ணன் . கச்சணிந்த முலைகளை உடைய பார்வதி பாகன் . பிறைசேர் சடையன் . பெருந்தேவன் . கார்முகில் போன்ற நீலகண்டன் . கல்லாலின் கீழ் இருந்து அறங்களைச் சனகர் முதலிய நால்வருக்கு மோன நிலையில் உபதேசித்தவன் . சிறப்பு மிக்க அழகிய மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்தில் எம் செல்வனாக அப்பெருமான் உறைகின்றான் .

குறிப்புரை :

வார் - கச்சு . வனம் - அழகு . மாதேவன் ( மகாதேவன் ) - பெருந்தேவன் ; முழுமுதற் கடவுள் . கார் - கருமை நிறம்

பண் :

பாடல் எண் : 4

கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்
கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்
ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தேன்மிக்க மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் காட்டில் திரிகின்ற யானைத் தோலைப் போர்த்தியவன் . கற்பகம் போன்ற கொடையாளி . கூற்றுவனை ஒருகாலத்து உதைத்தவன் . புலால் நாற்றம் கமழும் தலையோட்டில் பிச்சை எடுப்பவன் . உத்தமன் . ஒற்றியூரில் விரும்பி உறைபவன் . காளையை இவரும் தலைவன் . சூரியன் ஒருவனுடைய பற்களை உதிர்த்த முதற்பொருள் ஆவான் .

குறிப்புரை :

கான் ஏறு - காட்டில் திரிகின்ற ; இஃது இன அடை . கற்பகம் , வேண்டுவார் வேண்டுவதை ஈவது . உடைதலை , வினைத்தொகை ; ` உடலின் நின்றும் நீங்கிய தலை ` என்றதாம் . ஆதித்தன் - சூரியன்

பண் :

பாடல் எண் : 5

பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
வானவரு மறியாத நெறிதந் தான்காண்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய பூக்கும் நிலையிலுள்ள மலர்கள் , தூபம் , தீபம் , நல்ல சந்தனம் இவற்றைக் கொண்டு துதித்து நாள்தோறும் தேவர்கள் சிறப்போடு பூசனை செய்யும் திருவாரூரில் திருமூலத் தானத்தில் உறையும் செல்வன் பெண்ணும் ஆணுமாகிய உருவுடையவனாய்ப் பிறப்பு இறப்பு இல்லாதவனாய்ப் பாவத்தில் அகப்பட்ட என்மனத்தின் மயக்கத்தை நீக்கியவனாய்த் தேவர்களும் அறியாத வீடுபேற்றிற்கு உரிய வழியை எனக்கு அருள்பவன் .

குறிப்புரை :

பெண் உருவோடு ஆண் உருவம் ஆகினமையே , அவனது திருமேனியிலும் , உலகத்திலுங் கொள்க . மறப்படும் - பாவத்தின்கண் அகப்பட்ட ; இது சமண் சமயக்கொள்கையில் மயங்கியதைக் குறித்தது . ` பின் எனக்கு , வானவரும் அறியாத நெறி தந்தான் ` என்க . ` நறா ` என்பது செய்யுளாகலின் , இறுதி ஆகாரம் குறுகிற்று . தேன் என்பது பொருள் . சிறப்பு - மேன்மை ; விழாவுமாம்.

பண் :

பாடல் எண் : 6

சங்கரன்காண் சக்கரம்மாற் கருள்செய் தான்காண்
தருணேந்து சேகரன்காண் தலைவன் தான்காண்
அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
எங்கள்பெரு மான்காண்என் னிடர்கள் போக
அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தாமரை களையாக முளைக்கும் வயல்களால் சூழப்பட்டதாய்த் தேவர்களும் போற்றும் திருவாரூரில் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் எல்லோருக்கும் இன்பத்தைச் செய்பவன் . திருமாலுக்குச் சக்கரப்படையை அருளியவன் . பிறை சூடிய தலைவன் . தாமரையிலுள்ள பிரமன் தலைகளுள் ஒன்றனை அறுத்தவன் . அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருவையாற்றில் உறைபவன் . எங்கள் தலைவன் . எங்கள் துன்பங்கள் நீங்குமாறு அருள் செய்யும் இறைவன் .

குறிப்புரை :

சங்கரன் - இன்பத்தைச் செய்பவன் . தருண + இந்து = தருணேந்து ; இளஞ் சந்திரன் . வடமொழிக் குணசந்தி . சேகரம் - தலை . ` தலைவன்தான் ` என்றதில் தான் , அசைநிலை . ஐயாறு , தலம் . ` எங்கள் ` என்றது , அடியராய் இருப்பவரை உளப்படுத்து . இறைவன் - கடவுள் .

பண் :

பாடல் எண் : 7

நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்
நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
மின்திகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
துன்றுபொழிற் கச்சியே கம்பன் தான்காண்
சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த
தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தென்றல் ஊரைச் சேர்ந்த சோலைகளால் மணங்கமழும் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் நன்மையை அருளித் தீமையைப் போக்கும் நம் தலைவன் . நான்மறையோடு ஆறங்கம் ஆயினவன் . மின்னல் போன்ற ஒளியை உடைய முற்பட்டவன் . காளை எழுதிய கொடியை உடையவன் . பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பன் . சோற்றுத்துறையிலும் உறைபவன் .

குறிப்புரை :

` நம் ` என்றது , அனைவரையும் உளப்படுத்து . மின் திகழும் - மின்னல்போல விளங்குகின்ற . ஆதி - முதல்வன் . துன்று - நெருங்கிய . ஆர் மணம் - நிறைந்த வாசனை . ` சூழ்ந்த ஆருர் ; கமழும் ஆரூர் ` எனத் தனித்தனி முடிக்க .

பண் :

பாடல் எண் : 8

பொன்நலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்
புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
கோலமா நீறணிந்த மேனி யான்காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

சிறந்த வளத்தை உடைய வயல்களால் சூழப்பட்ட திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் பொன் நிறக்கொன்றை சூடிய சடையினன் . புகலூரிலும் பூவணத்திலும் உறைபவன் . மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதிபாகன் . வேதியன் , பூணூல் அணிந்த மார்பினன் . பகைவருக்கு அச்சமும் அடியாருக்கு நன்மையும் தருகின்ற , முத்தலைச் சூலத்தை ஏந்தியவன் . திருநீற்றை அழகாக அணிந்த திருமேனியினன் .

குறிப்புரை :

பொன் நலத்த - பொன்னினது அழகை உடைய . வேதியன் - வேதம் ஓதுபவன் . கொன் - அச்சத்தைத் தருகின்ற . நலத்த - நன்மையையுடைய . உயிர்களது பாவத்தை அழித்தலின் , ` நன்மை உடைய மூவிலைவேல் ` என்றருளினார் ; ` கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணம்என் றோரார் ` ( சிவஞான சித்தி . சூ .1.71.) என்றது காண்க . கோலம் - அழகு . மாநீறு . பெருமை உடைய நீறு . ` அழகாக அணிந்த ` என்றலுமாம் . ` செவ்வயல் , நலத்தவயல் ` என இயையும் . செம்மண் விளைவை மிகத் தருவதாம் . நலத்த - வளமுடைய .

பண் :

பாடல் எண் : 9

விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்
மண்டலத்தில் ஒளிவளர விளங்கி னான்காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்
புத்தேளுங் காண்பரிய புராணன் தான்காண்
தெண்டிரைநீர் வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தெளிந்த அலைகளை உடைய நீர்வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் பகைவர் முப்புரங்களையும் எரித்தவன் . கடலில் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தினன் . வான மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒளிவீசுமாறு அருளியவன் . வாய்மூரிலும் மறைக்காட்டிலும் உறைபவன் . செந்தாமரைக் கண்ணானாகிய திருமாலும் தாமரையில் தங்கும் பிரமனும் காண முடியாத பழையவன் .

குறிப்புரை :

விண்டவர் - நீங்கியவர் ; பகைவர் . வேலை - கடல் . மண்டலம் , சூரியனும் சந்திரனும் ; அவைகளில் ஒளிவிளங்குதல் . இறைவன் திருவுள்ளத்தினாலே என்றவாறு . இனி , ` மண் தலம் ` எனப் பிரித்து , ` மண்ணுலகத்தில் ` என்றுரைத்தலுமாம் . ` மேலை ` என்பதில் , ` ஐ ` சாரியை . புராணன் - பழையோன் .

பண் :

பாடல் எண் : 10

செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
தென்னானைக் காவன்காண் தீயில் வீழ
மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வஞ்சகர்பா லணுகாத மைந்தன் தான்காண்
அருவரையை யெடுத்தவன்தன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு தோளுநெரிந் தலற அன்று
திருவிரலால் அடர்த்தவன்காண் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

திருவாரூர் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் போரில் மேம்பட்ட திருமாலாகிய காளையை உடையவன் . அழகிய திருவானைக்காவில் உறைபவன் . பகைவர் முப்புரத்தை எரித்தவன் . வஞ்சகர் உள்ளத்தில் நெருங்காத வலிமை உடையவன் . கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரிக்கப்பட அவன் அலறுமாறு முன்னொருகால் திருவிரலால் வருத்தியவன் .

குறிப்புரை :

செரு - போர் . ` செரு வளரும் ` என்றது , இன அடை . மால் - பெரிய ; ` மாயோன் ` என உரைப்பினுமாம் . மருவலர் - பகைவர் . மைந்தன் - வலிமையுடையவன் . வஞ்சகத்தில் அகப் படாமைக்கும் வன்மை வேண்டும் என்க . அருவரை - பெயர்த்தற்கரிய மலை , திருக்கயிலை .
சிற்பி