திருமழபாடி


பண் :

பாடல் எண் : 1

அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொன்
சிலையெடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

அலைகள் பொருந்திய பெரிய கடலில் தோன்றிய விடத்தை அமுதமாக உண்டு தேவர்களுடைய உயிரைப் பாதுகாத்த தலைவர் என்றும் , மேருவை வில்லாக வளைத்துப் பெரிய பாம்பினை நாணாகப் பூட்டி நெருப்பாகிய அம்பினைக் கோத்து முப்புரங்களையும் எரித்த செல்வர் என்றும் , தன் மாற்றுக் குறையாத கிளிச்சிறை என்ற பசிய பொன்னாலும் முத்தாலும் நீண்ட பலகை போன்ற வயிரத்தாலும் குவியலாகத் திரட்டி இயற்றப்பட்ட மழபாடியில் உறையும் , மலை போல உறுதியாக அமைந்த வயிரத்தூணே என்றும் எம்பெருமானை முன்னிலையாகவும் படர்க்கையாகவும் சொல்லி நான் மனம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

தலைநீங்கியவிடத்து உயிர் நில்லாமைபற்றி . உயிரைக் காத்தலை , ` தலை காத்தல் ` என்றல் வழக்கு . ` நாகத்தை நாணாகவும் , நெருப்பை அம்பாகவும் கோத்து ` என்றதாம் . போலும் , அசைநிலை . ஆர்த்து , ` ஆர்க்க ` என்பதன் திரிபு . ` பொன்னாலும் , முத்தாலும் , வயிரப் பலகையாலும் குவையாக ( குவியலாக ) ஆர்க்க ( இயற்ற ) உற்ற ( விளங்கித் தோன்றிய ). வயிரத் தூணே ` என்க . ` தூண் ` என்றது உருவகம் . இங்கு இறைவரது திருமேனியின் , அழகில் ஈடுபட்டு , இவ்வாறு அருளிச்செய்தார் . மலை அடுத்த - மலைபோலப் பொருந்திய . ஐயர் , செல்வர் எனப் படர்க்கையாகவும் , வயிரத்தூணே என முன்னிலையாகவும் சொல்லி அரற்றி நைகின்றேன் ` என முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
அந்தரத்திற் கந்தருவர் அமரர் ஏத்த
மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்பம் மேய
கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாட
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

ஓசை பொருந்திய குழல் , மொந்தை , வீணை , யாழ் என்ற இசைக் கருவிகளை இசைத்து வானத்தில் கந்தருவர் என்ற தேவகணத்தாரும் தேவர்களும் துதித்து வேதமந்திரமும் ஓதி , நீரினால் அபிடேகம் செய்து வழிபட , அவர்களுக்கு வானுலகில் வெகுகாலம் அநுபவிக்கும் செல்வத்தைக் கொடுக்கும் , செறிவினால் இருண்ட பொழில்களை உடைய காஞ்சி நகரில் ஏகம்பத்தில் விரும்பியிருக்கும் மேம்பட்ட வயிரக்குவியலால் அமைந்த தூண் போல்வாய் என்றும் , வேத ஒலி பொருந்திய மாடங்களை உடைய மழபாடியில் உள்ள வயிரத்தூண் போல்வாய் என்றும் , நான் பலகாலும் எம்பெருமானை அழைத்து உள்ளம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

அறை - ஓசை . மொந்தை , ஒருவகை வாச்சியம் . ` யாழும் ` என்னும் உம்மை அசைநிலை . அந்தரம் - ஆகாயம் . மறைகலந்த மந்திரம் - வேதத்திற் பொருந்திய மந்திரங்கள் , ` கொண்டு ` என்றது , மேல் , ` யாழும் ` என்றதனோடும் இயையும் . ` வழிபட்டார் அமரர் ஏத்த வானாளக் கொடுத்தி ` என இயையும் ; ` மந்திரஞ் சொல்லி நீரை வார்த்தவர்க்கு , இன்னிசையை நுகர்வித்து வானுலகத்தை உரிமையாகக் கொடுப்பாய் ` எனப் போற்றியவாறு . கறை - கறுப்பு ; மேகம் ; ஆகு பெயர் . ` வயிரத்தூண் , திரள் தூண் ` என்க . கலி - ஆரவாரம் . மறைகலந்த மழபாடி - வேதங்கள் பொருந்திய மழபாடி .

பண் :

பாடல் எண் : 3

உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை யாண்டு கொண்ட
பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காமன் ஆகம்
பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

வலிமை மிக்க கறுத்த உடம்பினராய் , உண்மையறிவு அற்றவராய் , நல்லவரல்லாத ஊத்தை வாயை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்ட பாவமாகிய சுமையை நீக்கி , அடியேனை அடிமையாகக் கொண்ட பருத்த பவளத்தூணே ! பசிய பொன்னில் பதிக்கப்பட்ட முத்தே ! திரிபுரங்களை அழித்துத் தவறான செயலில் ஈடுபட்ட மன்மதனுடைய உடம்பு சாம்பலாகுமாறு தீ விழித்து உலக மக்களுக்கு என்றும் மேம்பட்ட வாழ்வை அருளும் மழபாடியில் உள்ள வயிரத்தூணே ! என்று பலகாலும் நான் வாய்விட்டு அழைத்து உள்ளம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

உரங்கொடுக்கும் - வலிமையைத் தருகின்ற ( இருள் மெய்யர் ); என்றது , ` உண்பதன்றி வேறொன்றை அறியாதவர் ` என்றபடி . பரம் - சுமை ; அது . பொறுக்க வொண்ணாத பாவத்தைக் குறித்தது . ` பவளத்தின் திரளாகிய தூணே ` என்க . பொன் முத்து - பொன்னிற் பதித்த முத்து . முத்து உருவகம் . புரம் - திரிபுரம் . ` புரம் கெடுத்துக் காமன் ஆகம் பொடியாக்கிப் புவியோர்க்கு என்றும் வரம் கொடுக்கும் ` என்றது , மண்ணுலகத்தின் பெருமை குறித்தருளியவாறு .

பண் :

பாடல் எண் : 4

ஊனிகந்தூ ணுறிக்கையர் குண்டர் பொல்லா
வூத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு
ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா
நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

சுவைத்து உண்ணுதலை விடுத்துக்கையில் உறியில் கரகத்தைத் தாங்கி உடல்பருத்த பொலிவற்ற , ஊத்தைவாயினை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்டு , உள்ளத்தில் நல்லறிவு பெற்று , உள்ளத்தில் வயிரம் போல ஒளி வீசும் எம்பெரு மானை நெருங்காத நாய் போன்ற கீழேனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி அடிமையாகக் கொண்ட , மீன் பொருந்திய கங்கையைத் தன் ஆணையால் தலையிலே தங்குமாறு சூடிய அரசனே ! தேவர்கள் தலைவனே ! மேகத்தை உடைய வானளாவிய மாடி வீடுகளை உடைய மழபாடியில் உகந்தருளியிருக்கும் வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

` இகந்த , என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று ` குண்டர் - மூர்க்கர் . ` ஊன் இகந்த ஊண் உடையவர் ` என்றது , புத்தர் ஊன் உணவை விரும்புவோரென்பது குறித்து , அவரிற் பிரித்தற் பொருட்டு . ` சமணர் ` என்புழி இரண்டனுருபு தொகுக்கப்பட்டது . ` ஞான ` என்பதன் அகரமும் தொகுத்தல் , அகம் - உள்ளத்து . ` வயிரம் ` என்பது உருவகம் ; அது , ` நின்னை . என்னும் பொருட்டாய் நின்றது . ` விதி ` என்றது , உலகை அழியாமற் காக்கக் கொண்ட அருளை . ` பெருமான் ` என்றது விளி . வானகம் சேர்தலாகிய மாளிகைகளின் தொழில் , ஊர்மேல் ஏற்றப்பட்டது . ` தூண் ` என்றதனை , இங்கு உவமையாகுபெயர் என்க .

பண் :

பாடல் எண் : 5

சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்
திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்
ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
நம்பியையே மறைநான்கும் ஒல மிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

ஐந்தலைகளைக் கொண்ட பிரமனது ஐந்தாவது தலை அழியுமாறும் திருமாலுடைய தலைமை அழியுமாறும் போக்கி , வலிமை உடைய சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்துச் சந்திரனுடைய ஒளிவீசும் கலைகள் அழியுமாறு கலக்கி , அவர்களை உயிரோடு விட்டு , வெண்ணிறக் காளையை இவர்ந்து , பாம்பினை அணிந்த குணபூரணனே ! தலைவனே ! நான்கு வேதங்களும் உன்புகழ் பாடிப் பெருமை பெறுகின்ற மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

` சிரம் ` என்றது , ` மிக்க தலைகள் ` என்பதனை உட்கொண்டு கூறியது . பொன்றச் சிந்தினமை முதலியன தக்கன் வேள்வியிற் செய்தன ; திருமால் தலையையும் சிந்திய வரலாறுண்மை ஈண்டு அறியப்படுகின்றது . சோமன் - சந்திரன் . உழக்கி - தேய்த்து , நரை ஏற்ற - வெண்மையைக் கொண்ட , ` நம்பியையே நான் அரற்றி ` என இயைக்க .

பண் :

பாடல் எண் : 6

சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

சினந்து பிறரைத் திருத்த முற்படும் சிறுமையின் மேம்பட்ட பருத்த உடலை உடைய சமணர்களாகிய பொல்லாத அறிவினை உடையவர்கள் காட்டிய தீவினைகளில் அழுந்தினேனாய் விளை நிலங்களை அழித்து அவ்விடத்தில் அசோகமரத்தை வளர்த்துப் பாதுகாக்கும் நல்வினையில்லேனாகிய என்னையும் ஒரு பொருளாக ஏற்று அடிமை கொண்டு மகளிரைப் பற்றிய எண்ணத்தை யான் நினையாதவாறு நீக்கி இரக்கத்திற்கு அடிப்படையான அறவழியை எனக்கு வழங்கி என் மனத்தை நல்வழியில் திருத்தும் மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

சினம் திருத்தும் - வெகுளியை நீக்குகின்ற ; என்றது வஞ்சப் புகழ்ச்சி . ` சிறுப் பெரியார் ` என்றதனை சிறுமையை உடைய பெரியார் ` என வேற்றுமைத் தொகையாகக் கொள்க . செது மதி - பொல்லாத அறிவு . தீவினைக்கே , உருபு மயக்கம் . புனம் - காடு ; அதனைத் திருத்தி வளர்க்கின்ற பிண்டி ( அசோகமரம் ) என்க . பொல்லாங்கு , உலகிற்கு முதல்வனை இல்லை என மயக்குதல் ; அரசமரமும் இத்தகையதென்க . பேணும் - வழிபட்ட . பொறி - நல்லூழ் . ` விழுந்தேனாய்ப்பேணும் பொறியிலியேன்றனை ` என இயைக்க . தனம் திருத்தும் அவர் - மகளிர் . பாற்றி - நீக்கி . தயாமூல தன்மம் என்னும் வழி , உண்மையில் , இறைவனுண்மை உணர்ந்து அவன்வழி நிற்றலே என்க . ` என் மனத்தைத் திருத்திய ` என்க .

பண் :

பாடல் எண் : 7

சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
என்துணையே யென்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப்
பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

நீர்ச் சுழிக்கு ஒப்பாகித் தன்னிடத்திலேயே ஆழ்த்தும் பிறவி வழியாகிய துக்கத்தைப் போக்கும் சுருண்ட சடையை உடைய எம் பெருமானே ! சடையில் தூய தெளிந்த நீராகிய கங்கையை ஏற்றவனே ! போக்குதற்கு அரிய பசுத்தன்மையால் உள்ள பாசத்தால் ஏற்படும் பிறப்பை நீக்கிய என் துணைவனே ! என் தலைவனே ! எல்லோருக்கும் தலைவனே ! குறை கூறுதற்கரிய திருமாலும் பிரமனும் காணாத ஒளிப்பிழம்பே ! வேதத்தின் முடிவாகிய உபநிடதங்களுக்கு அணிகலனாய் எனக்குக் கிட்டிய வழித்துணையாகிய மழபாடி வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

சுழி - சுழல் . ` சுழியாகிய துணை ` என்க . இங்குத் ` துணை ` என்றது , துணையன்மையைக் குறித்தது , ` உடம்போ டுயிரிடை நட்பு ` ( குறள் - 338.) என்பதில் , ` நட்பு ` என்பது போல . ` தூய தெண்ணீர்ச் சடை ` என மேலே கூட்டுக . இழிப்பரிய - இறக்குதல் அரிய ; என்றதனால் . பிறப்பைச் சுமையாகக் கொள்க . பசு பாசப் பிறப்பு - பசுத்தன்மையால் உள்ள பாசத்தால் வரும் பிறப்பு . தம்மான் - உயிர்கட்குத் தலைவன் . பழிப்பரிய - பொதுப்பட ` தேவர் ` என்னாது , காரணக் கடவுளர் ` எனப் போற்றப்படுகின்ற . பரிதி - சூரியன் ; என்றது உருவகம் . சுருதி முடிக்கு அணியாய் - வேதத்தின் தலைக்கு அணிகலமாய் , ` வாய்த்த தூணே ` என இயையும் . வழித் துணையாதல் , உயிர்கட்கென்க .
சிற்பி