திருநெய்த்தானம்


பண் :

பாடல் எண் : 1

மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்
இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

அறிவில்லாத நெஞ்சமே ! யான் கூற நீ கேட்பாயாக . உடம்பாகிய இடத்தின் உட்புறத்தில் , ஐம்பொறிகள் பரு உடம்பாய் நின்று , விரும்பிய இன்றியமையாத பொருள்களைத் தந்து நிரப்பி , வினைகளுக்குத் தங்கும் இடமாகிய இந்த உடம்பில் இருந்து , ஐம்புல நுகர்ச்சி நுகர்ந்து கொண்டே தப்பித்துப் போகலாம் என்ற எண்ணத்தை விட்டுவிடு . நீண்ட கருங்கண்ணியாகிய பார்வதி பாகனாய்க் கப்பல்கள் இயங்கும் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய நீலகண்டன் விரும்பி உறையும் திருநெய்த்தானத் திருக் கோயிலைத் துதித்துத் தியானிக்க வேண்டும் என்பதனை விருப்புற்று நினைத்து நீ செயற்பட்டால் பிறவிப் பிணியிலிருந்து தப்பலாம் .

குறிப்புரை :

மெய்த் தானம் - உடம்பாகிய இடம் . அகம் படியுள் - உட்புறத்தில் . ஐவர் - ஐம்பொறி ; இவை பருவுடம்பாய் ( தூலதேகமாய் ) நின்று புறத்துள்ள புலன்களைக் கவர்தல் பற்றிப் ` புறக்கருவி ` எனப்படுமாயினும் , அங்ஙனம் கவரும் ஆற்றல்கள் அவ்வுடம்பினுள் அருவாயே நிற்றலின் . ` மெய்த்தானத்து அகம் படியுள் நின்று ` என்று அருளிச்செய்தார் . வேண்டிற்றுக் குறை - விரும்பியதாகிய இன்றியமையாப் பொருளை . முடித்து - தந்து நிரப்பி . கூடு - தங்கும் இடம் . ` இத் தானம் ` என்றது மேற்குறித்த மெய்த்தானத்தை . ஏழைமை - அறியாமை . மைத்து ஆன நீள் நயனி - மையணிந்ததாகிய நீண்ட கண்ணையுடையவள் ; உமை . வங்கம் - மரக்கலம் . ` என்று ` என்பது , ` நினையுமா ` என்பதனோடு இயையும் . நினையுமா நினைந்தக்கால் - நினையுமாற்றை நினைந்தால் . நினைதல் உளதாகுமாயின் செயல் நிகழ்தல் ஒருதலையாகலின் , ` நினைந்தக்கால் உய்யலாம் ` என்றருளி னார் . ` சிவதலத்தைப் பெயரளவில் நினைப்பினும் உய்திகூடும் ` என்பதுணர்த்துவார் , ` நகர் என்று நினையுமா நினைந்தக்கால் ` என்று அருளிச்செய்தார் . ` ஐவர் இவ்வுடம்பகத்தில் நின்று வேண்டி நிற்குங் குறையை அவர்க்கு முடித்துத் தந்துகொண்டு இவ்வுடம்பிற்றானே நீங்கா திருந்து பிழைக்க எண்ணுகின்ற அறியாமையுடைய நெஞ்சே , இவ்வெண்ணம் முடியாதாகலின் இதனைவிட்டொழி ; யான் சொல்லுவதைக்கேள் ; ` அருளின் வடிவாகிய அம்மையை நீக்காது உடன்கொண்டு விளங்குபவனும் , தேவர் பொருட்டு நஞ்சினை உண்டு அவரைக் காத்த அருளாளனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் திருநெய்த்தானம் என்னும் நல்ல தலம் என்று நினையும் நெறியை நினைவையாயின் , உய்தல் கூடும் ` என உரைத்துக்கொள்க . ` நினையுமாற்றால் நினைந்தக்கால் ` என்றுரைத்தலுமாம் . இப்பொருட்கு , ` என்று ` என்பது , ` நினைந்தக்கால் ` என்பதனோடு இயையும் . ` நினையுமாறு ` என்பது , கடைக்குறையாயிற்று .

பண் :

பாடல் எண் : 2

ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை
இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ
விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை
ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த
அம்மானை அரி அயனுங் காணா வண்ணம்
நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! நான் கூறுவதனைக் கேள் ! பிறப்புக்கள் பலவற்றிற்கு ஏதுவாகி நீங்காத இவ்வுடல் தொடர்பிலிருந்து விரைவாக நீங்குதற்குரிய வழி உள்ளது என்பதனை யான் நினக்குக் கூறல் வேண்டா . தேவர்கள் தலைவராய் , இவ்வுலகிலே என்னை அடிமை கொண்டவராய் , மலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களையும் அழித்த பெருமானாராய்த் திருமாலும் பிரமனும் காணா வண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவராய் உள்ளவர் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்ற தலத்தைத் தியானிக்கும் வழியை விரும்பி நினைப்பாயானால் பிறவிப்பிணியிலிருந்து தப்பித்தல் கூடும் .

குறிப்புரை :

` விரைய ` எனப் பொருள்தரும் ` ஈண்ட ` என்பது , எதுகை நோக்கி நீண்டது ; ` ஈண்ட நீங்கலாம் ` என இயையும் . பிறவித் துறவா ஆக்கை இது - பிறப்புக்கள் பலவற்றிற்கும் ஏதுவாகிய நீக்கலாகாத உடம்பாகிய இதனினின்றும் ; நுண்ணுடம்பின் ( சூக்கும தேகத்தின் ) நின்றும் . இதனான் நுண்ணுடம்பின் இயல்பும் உணர்ந்து கொள்ளப்படும் . கட்டு நீங்கி வீடெய்தும்பொழுதே நுண்ணுடம்பு நீங்குவதாகும் . விதி - வினை . ` ஆர் மண்ணில் ` எனவும் , ` ஐ அரி ` எனவும் பிரித்து , ` நிறைந்த மண்ணாலியன்ற உலகத்தில் ` எனவும் , ` அழகிய திருமால் ` எனவும் உரைக்க ` அம்மானை ` என்னும் ஐகாரத்தைச் சாரியை என்றலுமாம் . உம்மை , சிறப்பு . ` துறை ` என்பது . ` இடம் ` என்னும் பொருளது .

பண் :

பாடல் எண் : 3

பரவிப் பலபலவுந் தேடி யோடிப்
பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா
குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக்
குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ
இரவிக் குலமுதலா வானோர் கூடி
யெண்ணிறந்த கோடி யமர ராயம்
நிரவிக் கரியவன் நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! நான் கூறுவதைக் கேள் . உலகெங்கும் தேவை என்று கருதிப் பலபொருள்களையும் தேடித் திரிந்து பாழான இவ்வுடம்பிலே கிடந்து பின்விளைவை நோக்காது , உற்றார் உறவினரோடு கூடி வாழும் குடும்ப வாழ்க்கையை வாழ எண்ணி உடைந்து போதலை நீக்கு . பன்னிரு ஆதித்தர் முதலாகிய வானவர் இனத்தைச் சேர்ந்த கணக்கற்ற தேவர் கூட்டத்தார் ஒன்று சேர்ந்தாலும் தன் புகழை முழுமையாகச் சொல்ல முடியாத சிவபெருமானுடைய நெய்த்தானத்தை நினையுமா நினைத்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

` தேடிப் பரவி ஓடி ` எனக் கூட்டுக . பரவி - எங்குமாய் . வாளா - பின்விளைவை நோக்காது ; ` குரவை ` என்பது ` ` குரவி ` என வந்தது ; அது கைகோத்து ஆடுங் கூத்தாகலின் , ஒக்கலோடும் மக்களொடும் பிணைந்து வாழும் குடி வாழ்க்கையை ` குரவிக் குடிவாழ்க்கை ` என்றருளினார் . குலைகை - உடைதல் . இரவிக் குலம் - சூரியர் கூட்டம் ; சூரியர் பன்னிருவர் எனப்படுதலின் , இவ்வாறருளிச் செய்தார் . ` கூடி ` என்பதன்கண் தொகுக்கப்பட்ட பெயரெச்ச அகரம் விரித்து . ` ஆயம் ` என்பதனோடு முடிக்க . ` அமரர் ` என்றது வாளா பெயராய் நின்றது . ` ஆயம் - கூட்டம் . ` நிரவிக்க ` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று . இப் பிறவினைக் சொல் , ` அளவு படுதல் ` எனத் தன்வினைப் பொருளே தந்து நின்றது . இனி , ` நிறைவிக்க , என்பதன் திரிபாகக் கொண்டு , ` அளவறிய ` என்றுரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 4

அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே
யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து
தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள்
இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும்
நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! அலைகள் போல ஓயாது செயற்படும் வினைக் கூறுகளுக்குச் சார்பாகிய இவ்வுடம்பில் அகப்பட்டு , ஆசை என்னும் கயிற்றால் சுருக்கிடப்படுமாறு தலையைக் கொடுத்து , கீழான இந்த உலக வாழ்வில் முழுகி மிகத் தளர்ந்து , நீ அஞ்சுதல் வேண்டா . இலைகளிடையே தோன்றும் கொன்றைப் பூ , கங்கை , பிறை இவற்றைப் பெரிய சடையிலே வைத்து மகிழ்ந்தவனாய்த் தேவர்கள் போற்றும் மேம்பட்ட நிலையிலுள்ளவனாகிய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும் .

குறிப்புரை :

அலை ஆர் வினைத் திறம்சேர் ஆக்கை - அலைபோல ( இடையறாது வந்து ) பொருந்தும் வினைக் கூறுகட்குச் சார்பாகிய உடம்பு . உள் ஆசை - மனத்தின்கண் எழும் ஆசை . ` ஆசையெனும் பாசம் ` என்றது உருவகம் . ` பாசந்தன்னுள் ` என்பது , ` பாசத்து அகப் படுந்தன்மையில் ` என்னும் பொருளது . ` இலையார் கொன்றை , புனக்கொன்றை ` எனத் தனித்தனி முடிக்க . ` புனற் கொன்றை ` என்பது பாடமன்று .

பண் :

பாடல் எண் : 5

தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
ஆங்காரந் தவிர்நெஞ்சே யமரர்க் காக
முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று
முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! உரிய காலம் முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதி நம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு . தேவர்களுக்காகப் பகைத்து வந்த மதில்கள் மூன்றும் அழியுமாறு முன்னொரு காலத்தில் விரைவாகத் தூக்கிய வில்லை வளைத்து அம்மதில்களைத் தீக்கு இரையாக்க நினைத்துச் செயற்பட்ட பெரிய கருணையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும் .

குறிப்புரை :

` தினைத்தனையும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . ஓர் ( ஒன்று ) - சிறிது . பொறை - பொறுத்தல் ; தாமதித்தல் ; நிலைபெறுதல் . ` மதியால் பேசும் ` என இயையும் . ` உனக்கு உள்ள மதியைப் பெரிதாக நினைந்து பேசுகின்ற ` என்பது பொருளாம் . ` அமரர்க்காக நினைத்த ` என இயையும் . முனைத்து - முற்பட்டு . முடுகிய - விரைந்த ; விரைய எடுத்த .

பண் :

பாடல் எண் : 6

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி
வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை
கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப
அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! துன்பமே விளைக்கின்ற இந்த உடலில் வாழும் வாழ்வு நிலையானது என்று கருதி வினைப்பயனிலே கிடந்து ஈடுபட்டு மகிழாதே . தம்மைப் பற்றித் தாழ்வாகக் கருதுபவர் மனத்து இருப்பவனாய் , முருகனுக்குத் தந்தையாய் , கூத்தாடுதலைப் பண்பாக உடையவனாய் , கொல்லும் முத்தலை வேல் ஏந்திய கையனாய்த் திருவடிகளில் , கழலும் , சிலம்பும் ஒலிக்க இவ்வுலகமே பெயருமாறு ஆடும் ஊழிக் கூத்தில் மனநிறையுடையவனாகிய சிவபெருமானுடைய திருத்தலமாகிய நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

மிறைபடும் - துன்பமே விளைகின்ற . வினை - வினைப்பயன் . வியவேல் - மகிழாதே . குறைவு - தாழ்வு ; பணிவு . வேல் - சூலம் . கழலும் , சிலம்பும் மாதொரு கூறன் ஆதலை உணர்த்தும் . நட்டம் நின்ற - நடனத்தொடு நின்ற . நிறைவு , எல்லா நலங்களும் நிரம்பியிருத்தல் . பெயர - பெயருமாறு ; பெயர , ஆர்ப்ப என மேலே கூட்டி , ` உலகம் முற்றும் பெயர்ந்த பின் ( ஒடுங்கியபின் ) நடனத்தொடு நின்ற நிறைவுடையான் ` என்றுரைத்தலுமாம் . இப்பொருட்கு , நிறைவு . தன்னைப் பெயர்ப்பார் இன்றித் தானே எல்லாவற்றையும் பெயர்ப்போனாய் நிற்கும் முழுமுதற் றன்மை .

பண் :

பாடல் எண் : 7

பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு
வாசக் குழல்மடவார் போக மென்னும்
வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்
துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா
நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! வருக . பேசுதற்கு ஏற்ற உயர்ந்த பொருள் அல்லாத இப்பிறவியைக் கிட்டுதற்கு அரிய பொருளாக உன் அற்பப்புத்தியில் கருதி நறுமணம் கமழும் கூந்தலையுடைய மகளிர் இன்பம் என்னும் வலையில் அகப்பட்டு அழியாமல் , யானைத்தோலை உரித்துப் போர்த்துத்தூய திருநீறு பூசிப் பூணூல் அணிந்து , தன்னை அணுகாத கீழ்மக்களுக்கு அரியவனாயுள்ள சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

` பிறவி ` என்றது , உடலை . வேண்டி - விரும்பி . ` மனம் ` என்றது அதன் குணத்தை . வருக - என்வழி வருக . தூசு - ஆடை ; போர்வை . அகரம் , சாரியை . துதைந்து - நிறைந்து .

பண் :

பாடல் எண் : 8

அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண்
டருநோய்க் கிடமாய வுடலின் தன்மை
தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே
தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா
மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும்
நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! ஐம்புலன்களால் நினைத்தவாறு செயற்படுத்தப்பட்டுக் கொடிய நோய்களுக்கு இருப்பிடமாகிய இவ்வுடலில் நிலையாமையை உனக்குப்புகலிடம் என்று கருதி ஐம்புல இன்பத்தில் ஆழ்ந்து போகாதே . தன்னைப் பற்றுக் கோடாக அடையாத வஞ்சமனத்தவர் காண முடியாத நீலகண்டனாய்த் தேவர்கள் தலைவன் என்று போற்றப்படும் மனத்துக்கினிய சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

` அஞ்ச` என்பதில் அகரம் சாரியை . ` புலன் ஆட்ட இவற்றால் ஆட்டுண்டு ` எனக் கூட்டுக . தஞ்சம் - புகலிடம் . தாழேல் - அழுந்தாதே . ` தாழக் கருதுதியே ; ( அவ்வாறு ) தாழேல் ` எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 9

பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி
போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி
இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே
யிமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்
கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங்
கண்ணுதல்கண் டமராடிக் கருதார் வேள்வி
நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! தகுதியற்ற இவ்வுடலில் வினைவயத்தால் புகுந்த உயிர் இதனை எந்த நேரத்திலும் விடுத்து நீங்கிவிடும் என்பதனை அறிந்தும் கீழான ஐம்புல நுகர்ச்சி வாழ்வினையே கருதிக் கொண்டிருந்து துயர்ப்படல் வேண்டா . தேவர்கள் தலைவனாய் , ஒருகாலத்தில் பார்வதி அஞ்சுமாறு , கரிய அடிகளை உடைய மதயானை அஞ்ச அதனை வெகுண்டவனாய் , நெற்றிக் கண்ணனாய் , தன்னைப் பரம்பொருளாகக் கருதாதவர் கூடி நிகழ்த்திய வேள்வியைப் போரிட்டு அழித்தவனாய் , நிலையாக உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

பொருந்தாத உடல் - தகுதியற்ற ( இழிவுடைய ) உடம்பு . ` அறிந்தும் அறிந்தும் ` என்னும் உம்மைகள் தொகுத்தலாயின . அடுக்குப் பன்மை பற்றி வந்தது . அறிதல் - ஏனைய பலரிடத்து வைத்தென்க . புலை - கீழ்மை . ` ஆங்கு இருந்து நீ இடர்ப்படவேண்டா ` என மாறிக் கூட்டுக . தாள் - முயற்சி ; வலிமை . கருதார் - பகைவர் ; பன்மை கூறியது . பலரும் ஒருவன் செயலுக்கு உடம்பட்டமை கருதி . ` கருதார் வேள்வி கண்டு அமராடி உறை நெய்த்தானம் ` எனக் கொண்டு கூட்டியுரைக்க . ` அமராடி ` என்றது பெயர் ; எச்சமாக ஓதுதல் பாடம் அன்று . நிரந்தரமா - நிலையாக .

பண் :

பாடல் எண் : 10

உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை
உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்
தரிந்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே
தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்
எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே
யெம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

விரதங்களை எல்லாம் மேற்கொண்டு தவ வாழ்வு வாழ முயன்று வாழாத நெஞ்சே ! நிலையாமையை உடைய இவ்வுடல் என்றும் உள்ள உயிரைப்பற்ற வேண்டிய உனக்கு உரிய பொருள் அன்று . உண்மையை உனக்குக் கூறிவிட்டேன் . தம்மிடத்துப் பொருளில்லாத வறியவர்களுக்கு ஒன்றும் ஈயாதவர்களுக்குத் தானும் எதுவும் ஈயாதவனாய்த் திரிபுரங்களை எரித்தவனாய்க் கையில் தீயை உடையவனாய் எட்டுத் தோள்களை உடைய எம்பெருமானே என்று தன்னைத் துதிக்காத இலங்கை மன்னனான இராவணனை நெரித்த , நெய்த்தானம் என்ற திருத்தலத்தை உகந்தருளி உறைகின்ற பெருமானை நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

உடலின் தன்மையை உயிர் தன் தன்மையாகக் கோடல் மயக்க உணர்வாகலின் , ` இவ்வுடலின் தன்மை உனக்கு உரித்தன்று ` எனத் தெளிவித்தருளினார் ; இதனான் ஆன்ம தரிசனம் செய்வித்த வாறாயிற்று . ` உண்மை யுரைத்தேன் ` என்றது , ` நீ உணர்வுபெறக் கூறினேன் ; கேளாதொழியின் , வருவது காண்டி ` என்றருளியவாறு . வருவது , பிறவித் துன்பம் . `விரதம் தரித்தும் , தவம் முயன்றும் வாழா நெஞ்சே` என்பதனை முதற்கண் கொண்டுரைக்க . தரித்தல் - மேற்கொள்ளுதல் . இதனால் , ` நீதானே உணராதும் , உணர்த்தியும் உணராதும் நிற்கின்றாய் ` என்றபடி . எனவே , ` ஆன்மாக்களுக்கு முற்செய்தவத்தான் ஞானம் நிகழும் ` ( சிவஞானபோதம் சூத்திரம் 8 அதிகரணம் 1. ) என்பது பெறப்பட்டது . தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் - தம்மிடத்துப் பொருள் இலராகிய வறியவர்க்கு ஒன்றும் ஈயாதவர்க்கு அத்தன்மையனாய் ஒன்றும் ஈயாதவனே . ` எரித்தான் ` என்பதன் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது ; எரிதலுடைத்தான ` என்பது பொருள் - ` அன்னன் , உடையான் , பெருமான் ` என்பன விளிகள் .
சிற்பி