பொது


பண் :

பாடல் எண் : 1

தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லில் திகழ்சீரார் காளத்தியுங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

தில்லைச்சிற்றம்பலம் , செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கொல்லி அறைப்பள்ளி , கோவல் வீரட்டம் , கோகரணம் , கோடிகா , முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி , முழையூர் , பழையாறை , சத்தி முற்றம் , குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

சிற்றம்பலம் , தில்லைக் கோயிலில் கூத்தப் பெருமான் நடனம் புரியும் இடம் ; இது மிகச் சிறப்புடைத்தாதல் பற்றி இப்பெயர் அத் திருக்கோயில் முழுவதையும் குறித்தல் உண்டு . சிறுமை + அம்பலம் = சிற்றம்பலம் . சிறுமை - நுண்மை ; அஃதாவது இறைவனது அருளாற்றல் . அம்பலம் - வெளி . எனவே , ` சிற்றம்பலம் ` என்பது , ` அருள்வெளி ` என்பதாம் . திருமுறைகளைத் தொடங்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` எனத் தொடங்கி , முடிக்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` என முடித்தற்கும் இதுவே காரணம் ; அஃதாவது , அவை அருள் வெளியினின்றும் தோன்றிய அருள் நாத ஒலிகளாய் இருத்தலே காரணம் என்க . தேவாரத் திருப்பதிகங்கள் தில்லையில் சேமிக்கப் பட்டதும் இதுபற்றியே என உணர்க ,. இறைவனது அருளாற்றல் அறிவே வடிவாய் இருத்தல்பற்றி , ` சிற்றம்பலம் ` என்பது , வடமொழியில் , ` சிதம்பரம் ` எனப்படும் . சித் - அறிவு ; அம்பரம் - ஆகாசம் ; வெளி . இதனை , ` சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம் ` ( தி .12 தில்லைவாழ்அந் . புரா . 2.) என விளக்கியருளினார் , சேக்கிழார் நாயனார் . பர வியோமம் - மேலான வெளி . இனி , உபநிடதங்களில் தகர வித்தை கூறும் இடங்களில் வரும் , ` தகராகாசம் ` என்பதில் , ` தகரம் ` என்பதற்கும் , ` சிறுமை ` என்பதே பொருள் . இறைவனுக்கு உண்மையில் இடமாவது அவனது அருள்வெளியே . அதனால் , உயிர்கள் பொருட்டு அவன் பற்பல திரு உருவங்களைத் தனது திருமேனியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களும் அவனது அருட்டிருமேனிகளை நினைக்கும் நெஞ்சகமும் , ` சிற்றம்பலம் ` எனக் கூறுதற்கு உரியனவாம் . ஆயினும் அவற்றுள்ளும் , இறைவன் உலகில் உருவத் திருமேனி கொண்டு உலகம் முழுவதையும் இயக்குவதாகிய ஐந்தொழில் ( பஞ்சகிருத்திய ) நடனத்தை இயற்றி நிற்கும் இடமும் , அறிவுடைப் பொருளாகிய உயிரோடு ஒற்றுமைப்பட்டு அதன் அறிவை விளக்கி நின்று உதவும் நெஞ்சகமுமே சிறப்பாக , ` சிற்றம்பலம் ` எனப்படுகின்றன . எனினும் , இறைவன் உலகில் நடனக் கோலங் கொண்டு விளங்கும் இடங்களில் தில்லையே முதன்மையுடைத்து என்பது வரலாற்று முறையான் வருதல் பற்றி , அஃது ஒன்றே , ` சிற்றம்பலம் ` என்னும் பெயருடைத்தாயிற்று ; இது , காரண இடுகுறிப் பெயர் என்க . புறத்துத் தில்லைச் சிற்றம்பலம் , அகத்து நெஞ்சகமும் இறைவற்குச் சிறந்த இடமாம் என்பதனை , ` சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தையுள்ளும் - உறைவான் ` என்னும் தி .8 திருக்கோவையால் உணர்க (20). இவ்வாற்றால் , தில்லைச் சிற்றம்பலம் முதற்றிருக் கோயிலாதல் பெறப்படுதலின் , அதுவே சிறப்பாக , ` கோயில் ` எனப்படுகின்றது . இவ்வாற்றால் அதனையே முதற்கண் வைத்து அருளிச்செய்தார் . திருவாரூர் பழைமை பற்றித் தில்லை போலும் பெருமையுடைத்தாதல் பற்றி , திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் , தமது திருத்தலக்கோவையில் அதனை முதற்கண் வைத்து , தில்லையை அதன் பின்வைத்து , அவற்றிற்குப்பின் ஏனைய தலங்களை அருளிச்செய்தார் . திருவாரூரின் பழமை , ` ஒருவனாய் உலகேத்த ` என்னும் திருப்பதிகத்தால் நன்கு உணர்க . ` காழி ` என்பது தவிர்த்து , ஏனைய தலங்கட்கெல்லாம் , ` திரு ` என்பதனை முதலிற் கொள்க . காழியை , ` சீகாழி ` என்றல் மரபு . தில்லைச் சிற்றம்பலம் . செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கோடிகா , சத்திமுற்றம் இவை . சோழ நாட்டுத் தலங்கள் . தேவன்குடி - திருந்துதேவன்குடி . கோவல் - கோவலூர் ; கோவலூர்வீரட்டம் . நடுநாட்டுத் தலம் . கோகரணம் , துளுவநாட்டுத் தலம் . முல்லைப் புறவம் - முல்லைக் கொடியை உடைய காடு ; இது , முருகன் பூண்டிக்கு அடை . முருகன்பூண்டி , கொங்குநாட்டுத் தலம் . கல்லின் திகழ் - மலையினால் விளங்குகின்ற . காளத்தி , தொண்டைநாட்டுத் தலம் . கொல்லியறைப்பள்ளி , முழையூர் , பழையாறை இவை வைப்புத் தலங்கள் . ` முளையூர் ` என்பதும் பாடம் . ` குளிர் ` என்பது அடைமொழி . நிலவுலகின் பொருட்டு இறைவன் திருக்கயிலையில் புவன பதியாய் . அறக்கருணையும் மறக்கருணையும் புரிந்து வீற்றிருத்தலின் , மக்கள் யாவரும் அவனையே நினைத்தும் , வாழ்த்தியும் , வணங்கியும் உய்தல் வேண்டும் . அனைவர்க்கும் அது கூடாமை அறிந்து , அப் பெருமான் நிலமுழுதும் ஆங்காங்குத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருந்து அருள்புரிகின்றானாதலின் , இத் தலங்களில் எல்லாம் , ` கயிலாய நாதனையே காணலாமே ` என்று அருளிச் செய்தார் . ஏகாரங்கள் இரண்டனுள் முன்னையது பிரிநிலை ; பின்னையது தேற்றம் . இதனால் , ` சிவபிரானை , நிலவுலகத்தில் எவ்விடத்து எவ்வுருவில் எவ்வாறு கண்டு வழிபடினும் , அவ்விடத்தைத் திருக் கயிலையாகவும் , ஆங்கு விளங்கும் இறைவனைக் கயிலைத் தலைவனாகவும் கருதி வழிபடுதல் வேண்டும் ` என்பது பெறப்பட்டது . இது , சமய தீக்கைக்கண்ணே வலியுறுத்தப்படுகின்றது ; ஆயினும் , அதற்கு மேற்பட்ட தீக்கை முதலியவற்றை அடைந்தோர்க்கும் யாவர்க்கும் இதுவே நெறி என்பதே திருமுறைகளின் முடிபு . ` திருக்கயிலையை நேர்படக் கண்டு வழிபடும் வழிபாடே நிலவுலகில் சிவபிரானை நேர்படக் கண்டு வழிபடும் வழிபாடு ` என்பதனானே , நாயனார் , இவ்வுடல்மாளுதற்குமுன் எவ்வாறேனும் திருக்கயிலையைக் கண்டு வழிபடுதல் வேண்டும் என்னும் உறைப்புடன் எத்துணை இடையூறுகளாலும் மனம் பின்னிடையாது கயிலைநோக்கிச் செவ்வனஞ் சென்று கொண்டே இருந்தார் . ஆயினும் , அவர் வாயிலாக அருளிச்செய்ய வேண்டிய இன்றியமையாத அரும் பெருந் திருப்பதிகங்கள் அதுகாறும் அருளிச் செய்யப்படாதிருந்தமையின் , அவைகளை அருளுவித்தற் பொருட்டு அவரை இறைவன் இடைவழியினின்றும் மீள எளிதில் தமிழ்நாடு போதரச் செய்தான் என்க .

பண் :

பாடல் எண் : 2

ஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீ ரட்டா னம்முங்
கோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

ஆரூர் மூலட்டானம் , ஆனைக்கா , ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம் , ஆவூர் , பேரூர் , பிரமபுரம் , பேராவூர் , பெருந்துறை , காம்பீலி , பிடவூர் , எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம் , கோட்டூர் , குடமூக்கு , கோழம்பம் , மேகங்கள் தங்கும் கழுக்குன்றம் , கானப்பேரூர் ..... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

ஆரூர் மூலட்டானம் , ஆனைக்கா , ஆக்கூர்த் தான் தோன்றிமாடம் , ஆவூர் , பிரமபுரம் , குறுக்கை வீரட்டானம் , கோட்டூர் , குடமூக்கு , கோழம்பம் இவை சோழநாட்டுத் தலங்கள் . பிரமபுரம் - சீகாழி . குடமூக்கு - கும்பகோணம் . பேணும் கூரார் - வழிபடும் அன்பு மிக்கவர்களையுடைய . கழுக்குன்று , தொண்டைநாட்டுத் தலம் . கார் ஆர் - மேகம் படியும் . கானப்பேர் , பாண்டிநாட்டுத் தலம் . பேரூர் , பேராவூர் , பெருந்துறை , காம்பீலி , பிடவூர் இவை வைப்புத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 3

இடைமரு தீங்கோ யிராமேச் சரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக்களூர்
தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

இடைமருது , ஈங்கோய் , இராமேச்சரம் , இன்னம்பர் , ஏர்இடவை , ஏமப்பேறூர் , சடைமுடி , சாலைக்குடி , தக்களூர் , தலையாலங்காடு , தலைச்சங்காடு , கொடுமுடி , குற்றாலம் , கொள்ளம் பூதூர் , கோத்திட்டை , கோட்டாறு , கோட்டுக்காடு , கடைமுடி , கானூர் , கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

இடைமருது , ஈங்கோய் , இன்னம்பர் , தலையாலங் காடு , தலைச்சங்காடு , கொள்ளம் பூதூர் , கோட்டாறு , கடைமுடி , கானூர் , கடம்பந்துறை இவை சோழநாட்டுத் தலங்கள் . இராமேச்சரம் , குற்றாலம் இவை பாண்டி நாட்டுத் தலங்கள் . கொடுமுடி - பாண்டிக்கொடுமுடி ; இது கொங்குநாட்டுத் தலம் . ஏர் - அழகு . இடவை , ஏமப்பேறூர் , சடைமுடி , சாலைக்குடி , தக்களூர் , கோத்திட்டை , கோட்டுக்காடு இவை வைப்புத்தலங்கள் .

பண் :

பாடல் எண் : 4

எச்சி லிளமர் ஏம நல்லூர்
இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்
ஆவடு தண்டுறை யழுந்தூர் ஆறை
கைச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

எச்சில் இளமர் , ஏமநல்லூர் , இலம்பையங் கோட்டூர் , இறையான்சேரி , அச்சிறுபாக்கம் , அளப்பூர் , அம்பர் , ஆவடுதுறை , அழுந்தூர் , ஆறை , கைச்சினம் , கற்குடி , கச்சூர் , ஆலக் கோயில் , கரவீரம் , காட்டுப்பள்ளி , கச்சிப்பலதளி , ஏகம்பம் .... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

அம்பர் , ஆவடுதுறை , அழுந்தூர் , கைச்சினம் , கற்குடி , கரவீரம் , காட்டுப்பள்ளி இவை சோழநாட்டுத் தலங்கள் . ` அம்பர் ` என்றதனால் , ` அம்பர்ப் பெருந்திருக்கோயில் , அம்பர் மாகாளம் ` என்னும் இரண்டனையும் , ` காட்டுப்பள்ளி ` என்றதனால் , ` மேலைக் காட்டுப்பள்ளி , கீழைக் காட்டுப்பள்ளி ` என்னும் இரண்டனையுங் கொள்க . இலம்பையங்கோட்டூர் , அச்சிறுபாக்கம் , கச்சூர் ஆலக் கோயில் , ஏகம்பம் இவை தொண்டைநாட்டுத் தலங்கள் . ` கச்சி ` என்றதனை , ஏகம்பத்திற்குங் கூட்டுக . ` கச்சி ` என்பது தலத்தின் பெயரும் , ` ஏகம்பம் ` என்பது , கோயிலின் பெயருமாம் . ` ஏகம்பம் ` என்னும் பெயர்பற்றி மேலே ( ப .44. பா .5.) குறிப்பிடப்பட்டது . எச்சிலிளமர் , ஏம நல்லூர் , இறையான்சேரி , அளப்பூர் , ஆறை , கச்சிப் பல தளி இவை வைப்புத் தலங்கள் . தளி - கோயில் . கச்சித் தலத்தில் ஏகம்பமே யன்றி எண்ணிறந்த கோயில்கள் உளவாதலின் , அவை எல்லாவற்றையும் , ` கச்சிப் பலதளி ` என்று அருளிச்செய்தார் . ` எச்சி லிளமர் ` என்பதேயன்றி , ` எச்சிலிளவர் ` எனவும் பாடம் ஓதுப .

பண் :

பாடல் எண் : 5

கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவு
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரு மேம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி னுள்ளுங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

கொடுங்கோளூர் , அஞ்சைக்களம் , செங்குன்றூர் , கொங்கணம் , குன்றியூர் , குரக்குக்கா , நெடுங்களம் , நன்னிலம் , நெல்லிக்கா , நின்றியூர் , நீடூர் , நியமநல்லூர் , இடும்பாவனம் , எழுமூர் , ஏழூர் , தோழூர் , எறும்பியூர் , அழகிய ஏமகூடம் , கடம்பை இளங் கோயில் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

அஞ்சைக்களம் , மலைநாட்டுத் தலம் . குரக்குக்கா , நெடுங்களம் , நன்னிலம் , நெல்லிக்கா , நின்றியூர் நீடூர் , இடும்பாவனம் , எறும்பியூர் , கடம்பை , இளங்கோயில் இவை சோழநாட்டுத் தலங்கள் . கடம்பை - கடம்பூர் . இளங்கோயில் - மீயச்சூர் இளங்கோயில் . கொடுங்கோளூர் , செங்குன்றூர் , கொங்கணம் , குன்றியூர் , நியமநல்லூர் , எழுமூர் , ஏழூர் , தோழூர் , ஏமகூட மலை இவை வைப்புத் தலங்கள் . எழுமூர் - தஞ்சை எழுமூர் . ஏர் ஆரும் . அழகு நிறைந்த . ` ஏராறும் ` என்பது பாடம் அன்று .

பண் :

பாடல் எண் : 6

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணை களர்காறை கழிப்பா லையுங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

மண்ணிப்படிக்கரை , வாழ்கொளிபுத்தூர் , வக்கரை , மந்தாரம் , வாரணாசி , வெண்ணி , விளத்தொட்டி , வேள்விக்குடி , விளமர் , விராடபுரம் , வேட்களம் , பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை , பெண்ணாகடம் , பிரம்பில் , பெரும்புலியூர் , பெரு வேளூர் , கண்ணை , களர் , காறை , கழிப்பாலை , முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

மண்ணிப்படிக்கரை , வாழ்கொளிபுத்தூர் , வெண்ணி , வேள்விக்குடி , விளமர் , வேட்களம் , பெரும்புலியூர் , பெருவேளூர் , களர் , கழிப்பாலை இவை சோழநாட்டுத் தலங்கள் . ` வாள்கொளி புத்தூர் ` என்பதும் பாடமாகக் கொள்வர் . வெண்ணி - வெண்ணியூர் . வக்கரை , தொண்டைநாட்டுத் தலம் . அருட்டுறை , பெண்ணாகடம் இவை நடுநாட்டுத் தலங்கள் . ` அருட்டுறை ` என்பது திருவெண்ணெய்நல்லூர்க் கோயிலின் பெயர் . ` பெண்ணை ` என்பது அத்தலத்தை அடுத்து ஓடும் ஆற்றின் பெயர் . மந்தரமலை , வாரணாசி , விளத்தொட்டி , விராடபுரம் , பிரம்பில் , கண்ணை , காறை , இவை வைப்புத்தலங்கள் . ` மந்தரம் ` என்பது ` மந்தாரம் ` என நீட்டலாயிற்று ; அன்றி , அவ்வாறே பெயர் பெற்றதொரு வைப்புத் தலம் உண்டெனின் , கொள்க .

பண் :

பாடல் எண் : 7

வீழி மிழலைவெண் காடு வேங்கூர்
வேதிகுடி விசய மங்கை வியலூர்
ஆழி யகத்தியான் பள்ளி யண்ணா
மலையாலங் காடும் அரதைப் பெரும்
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

வீழிமிழலை , வெண்காடு , வேங்கூர் , வேதிகுடி , விசயமங்கை , வியலூர் , ஆழி , அகத்தியான்பள்ளி , அண்ணாமலை , ஆலங்காடு , அரதைப் பெரும்பாழி , பழனம் , பனந்தாள் , பாதாளம் , பராய்த்துறை , பைஞ்ஞீலி , பனங்காட்டூர் , காழி , கடற்கரையை அடுத்த நாகைக்காரோணம் .... ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .

குறிப்புரை :

வீழிமிழலை , வெண்காடு , வேதிகுடி , விசயமங்கை , வியலூர் , அகத்தியான்பள்ளி , அரதைப்பெரும்பாழி , பழனம் , பனந்தாள் , பாதாளம் , பராய்த்துறை , பைஞ்ஞீலி , நாகைக் காரோணம் இவை சோழநாட்டுத் தலங்கள் . ஆழி - கடல் ` ஆழியை அடுத்த அகத்தியான் பள்ளி ` என்க . பாதாளம் - பாதாளேச்சுரம் . காழி - சீகாழி ; இது மேலும் அருளிச்செய்யப்பட்டது . நாகை - நாகப்பட்டினம் ; அதன்கண் உள்ள திருக்கோயிலின் பெயர் . காரோணம் . அண்ணாமலை , நடுநாட்டுத் தலம் . ஆலங்காடு , தொண்டை நாட்டுத் தலம் . வேங்கூர் , பனங்காட்டூர் இவை வைப்புத்தலங்கள் . ` வெங்கூர் ` என்பதும் பாடம் . தொண்டைநாட்டுத் தலங்களுள் ஒன்றாய் விளங்கும் , ` வன்பார்த்தான் பனங்காட்டூர் ` என்பது வேறு .

பண் :

பாடல் எண் : 8

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

உஞ்சேனை மாகாளம் , ஊறல் , ஓத்தூர் , உருத்திர கோடி , மறைக்காடு , மேகங்கள் பொருந்திய பொதியமலை , தஞ்சை , வழுவூர்வீரட்டம் , மாதானம் , கேதாரம் , வெஞ்சமாக்கூடல் , மீயச்சூர் , வைகாவூர் , வேதீச்சரம் , விவீச்சுரம் , வெற்றியூர் , கஞ்சனூர் , கஞ்சாறு , பஞ்சாக்கை .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

ஊறல் , ஓத்தூர் இவை தொண்டை நாட்டுத்தலங்கள் . மறைக்காடு , மீயச்சூர் , வைகா , கஞ்சனூர் இவை சோழ நாட்டுத் தலங்கள் . மேற்சொல்லப்பட்ட இளங்கோயில் ( பா .5.) மீயச்சூரிலுள்ள மற்றொரு திருக்கோயில் ; அது மூலட்டான மூர்த்தி பாலாலயத்துள் இருந்தபொழுது பாடப்பட்ட இடம் என்பர் . வைகா - வைகாவூர் . கேதாரம் , வடநாட்டுத்தலம் . வெஞ்சமாக்கூடல் , கொங்கு நாட்டுத் தலம் . உஞ்சேனை மகாளம் . உருத்திரகோடி பொதியில்மலை , தஞ்சை , வழுவூர் வீரட்டம் , மாதானம் வேதீச்சுரம் , விவீச்சுரம் , வெற்றியூர் , கஞ்சாறு , பஞ்சாக்கை இவை வைப்புத் தலங்கள் . மஞ்சு ஆர் - மேகம் படியும் . ` மறைக்காட்டுள்ளும் , வெற்றியூரினும் , பஞ்சாக்கையினும் காணலாம் ` என முடிக்க . உம்மைத் தொகை ஒருசொல் நடைத்தாகலின் , ஏற்ற பெற்றியால் ஒரோரிடத்து உருபொடு கூடிய எண்ணும்மை கொடுக்கப்பட்டது .

பண் :

பாடல் எண் : 9

திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும்அதிகை வீரட் டானம்
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

திண்டீச்சரம் , சேய்ஞலூர் , செம்பொன்பள்ளி , தேவூர் , சிரபுரம் , சிற்றேமம் , சேறை , கொண்டீச்சரம் , கூந்தலூர் , கூழையூர் , கூடல் , குருகாவூர் வெள்ளடை , குமரி , கொங்கு , தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம் , ஐயாறு , அசோகந்தி , ஆமாத்தூர் , கண்டியூர் வீரட்டம் , கருகாவூர் , ... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

சேய்ஞலூர் , தேவூர் , சிற்றேமம் , சேறை , கொண்டீச்சரம் , குருகாவூர் வெள்ளடை , ஐயாறு , கண்டியூர் வீரட்டம் , கருகாவூர் இவை சோழநாட்டுத் தலங்கள் . சிரபுரம் - சீகாழி ; இதுவும் செம்பொன் பள்ளியும் மேலும் அருளிச்செய்யப்பட்டன . சில தலங்களை மீளவும் வலியுறுத்து அருளிச்செய்தல் , அவற்றிற்கு உள்ள சிறப்புப்பற்றி எனக் கொள்க ; அச்சிறப்பு முழுதும் இஞ்ஞான்று நாம் அறிதல் அரிது . ` ஒரு தலத்தை வேறு பெயரால் மீள அருளுதல் , அப்பெயர்பற்றி அறியப்படும் பெருமை தோன்றுதற்பொருட்டு ` என்பது மேலும் கூறப்பட்டது . ` வெள்ளடை ` என்பது குருகாவூர்க் கோயிலின் பெயர் . அதிகை வீரட்டானம் , ஆமாத்தூர் இவை நடுநாட்டுத் தலங்கள் . அதிகைவீரட்டானம் . நாயனார் திருவருள் பெற்ற தலம் என்பது வெளிப்படை . கூடல் - மதுரை ; பாண்டிநாட்டுத் தலம் . திண்டீச்சரம் . கூந்தலூர் , கூழையூர் , குமரி , கொங்கு , அசோகந்தி இவை வைப்புத் தலங்கள் . அண்டர் - தேவர் .

பண் :

பாடல் எண் : 10

நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமேச் சரம்
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்
ஓமாம் புலியூர்ஓர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

நறையூரிலுள்ள சித்தீச்சரம் , நள்ளாறு , நாரையூர் , நாகேச்சரம் , நல்லூர் , மேம்பட்ட துறையூர் , சோற்றுத்துறை , சூல மங்கை , தோணிபுரம் , துருத்தி , சோமேச்சரம் , உறையூர் , கடலை அடுத்த ஒற்றியூர் , ஊற்றத்தூர் , ஓமாம்புலியூர் , ஒப்பற்ற ஏடகம் , கறையூர் , கருப்பறியல் , கன்றாப்பூர் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

நறையூர்ச் சித்தீச்சரம் , நள்ளாறு , நாரையூர் , நாகேச்சரம் , நல்லூர் , சோற்றுத்துறை , துருத்தி , உறையூர் , ஓமாம்புலியூர் , கருப்பறியலூர் , கன்றாப்பூர் இவை சோழநாட்டுத் தலங்கள் . ` சித்தீச்சரம் ` என்பது நறையூர்த் திருக்கோயிலின் பெயர் . நல்லூர் , நாயனார்க்குத் திருவடிசூட்டிய தலமாதல் அறிக . தோணிபுரம் - சீகாழி ; இது மேலும் அருளிச்செய்யப் பட்டது . உறையூர் - மூக்கீச்சரம் . துறையூர் , நடுநாட்டுத் தலம் . ஒற்றியூர் , தொண்டைநாட்டுத் தலம் . ` கடலைச் சார்ந்த ஒற்றியூர் ` என்க . ஏடகம் , பாண்டிநாட்டுத் தலம் . சூலமங்கை , சோமேச்சரம் , ஊற்றத்தூர் , கறையூர் இவை வைப்புத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 11

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலிநெய்த் தானத்தோ டெத் தானத்தும்
நிலவுபெருங் கோயில்பல கண்டால் தொண்டீர்
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

புலிவலம் , புத்தூர் , புகலூர் , புன்கூர் , புறம்பயம் , பூவணம் , பொய்கைநல்லூர் , வலிவலம் , மாற்பேறு , வாய்மூர் , வைகல் , வலஞ்சுழி , வாஞ்சியம் , மருகல் , வன்னி , வளமான நிலத்தை உடைய நெய்த்தானம் முதலிய எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங் கோயில்கள் பலவற்றைக் கண்டால் , தொண்டர்களே ! செருக்கிய வலிமை மிக்க இராவணனைத் தன் கால் விரலால் நசுக்கிய கயிலாய நாதனை அவ்விடங்களிலெல்லாம் காணலாம் .

குறிப்புரை :

புத்தூர் , பூவணம் இவை பாண்டி நாட்டுத் தலங்கள் . புகலூர் , புன்கூர் , புறம்பயம் , வலிவலம் , வாய்மூர் , வைகல் . வலஞ்சுழி , வாஞ்சியம் , மருகல் , வன்னி , நெய்த்தானம் இவை சோழநாட்டுத் தலங்கள் . வைகல் - வைகல் மாடக்கோயில் . வன்னி - வன்னியூர் . நிலம் மலி - நிலத்தின்மேற் புகழ் நிறைந்த மாற்பேறு , தொண்டைநாட்டுத் தலம் . புலிவலம் , பொய்கைநல்லூர் இவை வைப்புத் தலங்கள் . எத்தானத்தும் - எடுத்தோதியனவேயன்றிப் ( பெரியோரால் வணங்கப்படும் ) எத்தலத்திலும் . நிலவு பெருங் கோயில் பல கண்டால் - விளங்குகின்ற பெருமைபொருந்திய திருக்கோயில்கள் பலவற்றையும் சென்று காண்பீராயின் - தொண்டீர் - தொண்டர்களே . இங்கு , ` கண்டால் கயிலாய நாதனையே காணலாம் ` என்றது , ` அவ்விடங்களிற் காணலாம் ` என்றதேயன்றி , கயிலைப் பெருமானை அடைதல் கூடும் ` என்றருளிச்செய்ததூமாம் . ஆகவே , ` அத்தலங்களை இயன்ற அளவிற் கரவாது சென்று காணுமின் ` என்பது அருளாணை யாயிற்று ; நாயனார் அங்ஙனஞ் சென்று கண்டமை சொல்லவேண்டா . ` கலியும் வலியும் மிக்கோன் ` என்க . கலி - எழுச்சி ; செருக்கு .
சிற்பி