திருச்சாய்க்காடு


பண் :

பாடல் எண் : 1

வானத் திளமதியும் பாம்புந் தம்மில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையுந் தீமையு மானார் போலும்
தேனொத் தடியார்க் கினியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே வானத்து விளங்கிய இளமதியும் பாம்பும் தம்முள் நிலவும் பகை நீங்கி வாழ அவற்றை நீள் சடைமேல் வைத்தவரும் , வண்டு தேனை உண்டு மகிழ்ந்து பாடும் தில்லையில் நடனமாடும் தேவரும் , ஞானமாகிய ஒளிப்பிழம்பாய் நின்றவரும் , நன்மையும் தீமையும் ஆனவரும் , அடியார்க்குத் தேன் போன்று தித்திப்பவரும் ஆவார் .

குறிப்புரை :

தம்மில் - தமக்குள் . ஆதரிப்ப - விருப்பங்கொள்ள ; ` பகை நீங்கி வாழ ` என்றவாறு . ` தம்மில் ஆதரிப்ப வளர்சடை மேல் வைத்தார் ` எனக் கூட்டுக ; ` தன்னில் ` என்பது பாடம் அன்று . ` தேனை உண்டு திளைத்து ` என மாறுக . திளைத்து - இன்புற்று . ` ஞானத்தின் ` என்பதில் இன் , அல்வழிக்கண் வந்த சாரியை ; ` ஞானமாகிய ஒண்சுடர் ` என்பது பொருள் ; இஃது உருவகம் . ` நன்மையும் தீமையும் ஆனார் ` என்றது , ` எல்லாம் அவரே : அவர்க்கு வேறாய் ஒன்று இல்லை ` என்றபடி . ` அடியார்க்குத் தேன் ஒத்து இனியார் ` என்க .

பண் :

பாடல் எண் : 2

விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மணல்செறிந்த புகாரின்கண் முத்துக்களை எறிகின்ற தெளிந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , விண்ணோர்கள் தொழுதுவேண்ட நஞ்சுண்டவரும் , பரந்த துருத்தியிடத்தும் வேள்விக்குடியிடத்தும் உறைபவரும் , அண்ணா மலையில் உறையும் அண்ணலவரும் , அதியரைய மங்கையில் அமர்ந்தவரும் , மிக்குப் பொருந்திய மதுக்களிப்பையுடைய வண்டுகள் பண்ணினைப் பாடிப் பறந்துலவும் பராய்த்துறையிடத்து மேவிய பரமரும் ஆவார் .

குறிப்புரை :

பரவ - ` எம் பெருமானே ` என ஏத்தி , ` எம்மைக் காவாய் ` என வேண்டி நிற்க . துருத்தி , வேள்விக்குடி , பராய்த் துறை இவை சோழநாட்டுத் தலங்கள் . அண்ணாமலை , நடுநாட்டுத் தலம் . அதியரைய மங்கை , வைப்புத்தலம் . பண் ஆர் - பண்ணை இசைக்கின்ற . களி வண்டு - மதுக்களிப்பையுடைய வண்டுகள் . ஆடுதல் - பறந்து உலாவுதல் . ` அப்பண்ணினைப் பாடி ஆடும் ` என்க . புகார் - காவிரியாற்றின் சங்க முகம் ; இதனை , ` திண் ஆர் புகார் ` என்றது , மணற் செறிவு நோக்கி . அலைக்கும் - எறிகின்ற ` புகாரின்கண் முத்துக் களை அலைக்கின்ற தெள்ளிய நீரையுடைய திருச்சாய்க்காடு ` என்க .

பண் :

பாடல் எண் : 3

கானிரிய வேழ முரித்தார் போலும்
காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்
வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்
உயர்தோணி புரத்துறையும ஒருவர் போலும்
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மலர்களிடத்துத் தேன் ஒழுகும் வண்ணம் மீன்கள் அவற்றைத் தாக்குகின்ற தெளிந்த நீர்ப் பொய்கைகள் மிக்க திருச் சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே காட்டினின்றும் மற்ற விலங்குகள் நீங்கிப்போமாறுவரும் களிற்றியானையை உரித்தவரும் , காவிரிப்பூம்பட்டினத்து உள்ளவரும் , தேவர்கள் கெட்டோடும் வண்ணம் வானத்தில் பறந்து வரும் திரிபுரங்களையும் எரித்தவரும் , வடகயிலையைத் தம் இருக்கையாகக் கொண்டவரும் , தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவரும் , பிரளய காலத்து ஊழி வெள்ளத்து மேலே உயர்ந்து விளங்கும் தோணிபுரத்து உறையும் ஒப்பற்றவரும் ஆவார் .

குறிப்புரை :

கான் இரிய - காட்டினின்றும் நீங்கிப் போம்படி . வேழம் - யானை . ` காவிரிப்பூம்பட்டினம் ` என்றது , பல்லவனீச் சரத்தை ; இது திருச்சாய்க்காட்டிற்கு அண்மையில் உள்ளதே . வான் - தேவர் ; இடவாகு பெயர் ; ` அவர்கள் அஞ்சி நீங்குமாறு வானத்திற் செல்லுகின்ற புரம் ` என்றவாறு . ` வருபுரம் ` என்றது , இடவழுவமைதி . ஊன் இரி அத்தலை கலனா உடையார் - தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவர் . தோணிபுரம் - சீகாழி . தேன் இனிய - தேன் ஒழுகும்படி . பாயும் - மலர்களில் தாக்குகின்ற .

பண் :

பாடல் எண் : 4

ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்
கானுற்ற ஆட லமர்ந்தார் போலும்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த சோலைகளின் நடுவில் விளங்கித் தோன்றும் திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , தசை பொருந்தி இருந்த வெள்ளிய தலையோடு சேர்ந்த கையினரும் , பல ஊழிகளைக் கண்டவரும் , மான் பொருந்திய கரதலம் ஒன்றுடையவரும் , திருமறைக்காட்டை அணுகியுள்ள கோடிக்கரையில் மகிழ்ந்து உறைபவரும் , காட்டில் ஆடலை விரும்பியவரும் , காமனைக் கண்ணிடத்துத் தோன்றிய அழலால் அழித்தவரும் ஆவார் .

குறிப்புரை :

மறைக்காட்டுக் கோடி - திருமறைக் காட்டை அணுகியுள்ள , ` கோடிக் குழகர் ` என்னும் தலம் . கான் உற்ற ஆடல் - காட்டில் பொருந்திய நடனம் . அமர்ந்தார் - விரும்பினார் .

பண் :

பாடல் எண் : 5

கார்மல்கு கொன்றையந் தாரார் போலும்
காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்
பார்மல்கி யேத்தப் படுவார் போலும்
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்
ஓத்தூ ரொருநாளும் நீங்கார் போலும்
சீர்மல்கு பாட லுகந்தார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே கார் காலத்தில் நிரம்பப் பூக்கும் கொன்றைப் பூவாலாகிய தாரினை உடையவரும் , காலனை ஓருதையால் வீழக்கண்டவரும் , நிறைந்து நின்று பூமியினுள்ளாரால் புகழப் படுபவரும் , திருப்பருப்பதத்தில் எக்காலத்தும் மகிழ்ந்து நின்றவரும் , மிக்க பிச்சை பெறுதற்காக ஊரின்கண் அலைபவரும் , ஓத்தூரை ஒருகாலும் நீங்காதவரும் , தாள அறுதியுடன் கூடிய பாடலை விரும்புபவரும் ஆவார் .

குறிப்புரை :

கார் மல்கு - கார் காலத்தில் நிரம்பப் பூக்கின்ற , வீழக் கண்டார் ` என ஒரு சொல் வருவித்துக்கொள்க . பார் - பூமியில் உள்ளார் ; இடவாகுபெயர் . மல்கி - நிறைந்து நின்று . பருப்பதம் - திருப்பருப்பதம் ; சீசைலம் ; இது தெலுங்கு நாட்டில் உள்ளது . ` பல்லூழி ` என்றது , ` எக்காலத்தும் ` என்றவாறு , ` ஊரின்கண் ` என உருபு விரித்து , ` உழன்றார் ` என்றதனோடு முடிக்க . ஓத்தூர் , தொண்டை நாட்டுத் தலம் . சீர் - தாள அறுதி .

பண் :

பாடல் எண் : 6

மாவாய் பிளந்துகந்த மாலுஞ் செய்ய
மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூ ருடையார் போலும்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
குரைகழலா லன்று குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க் கரியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , கேசி என்னும் குதிரையின் வாயைக் கிழித்து மகிழ்ந்த திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனும் ஆகிய இருவரும் தாமேயாய் நின்றவரும் , என்றும் மாறுபடாமல் ஒருபடித்தாய்த் திகழும் மேனியுடைய முதல்வரும் , முதுகுன்றமாகிய மூதூரினரும் , முனிவர் தலைவனாகிய மார்க்கண்டேயன் மேல் வந்த கூற்றுவனை ஒலிக்கும் கழல் அணிந்த பாதத்தால் அன்று உதைத்தழித்தவரும் தேவர்க்குத் தலைவர் ஆகிய பிரம விட்டுணு இந்திரர்க்கு அரியவரும் ஆவார் .

குறிப்புரை :

மாவாய் பிளந்து - ` கேசி ` என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்து ; இது திருமால் செய்தது , கிருட்டினனாய் இருந்தபொழுது . உகந்த - மகிழ்ந்த . மூவாத மேனி - என்றும் ஒரு படித்தாய் இருக்கும் வடிவம் . முதுகுன்றம் , நடு நாட்டுத்தலம் ; இஃது இக்காலத்து , ` விருத்தாசலம் ` என வழங்கும் . ` முதுகுன்றமாகிய மூதூர் ` என்க . கோவாய முனி - முனிவருள் தலைவராயவர் ; மார்க்கண்டேயர் . தன் , சாரியை .

பண் :

பாடல் எண் : 7

கடுவெளியோ டோரைந்து மானார் போலுங்
காரோணத் தென்று மிருப்பார் போலும்
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்
ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்
படியொருவ ரில்லாப் படியார் போலும்
பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலும்
செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , பெரிய ஆகாயத்தோடு கூட்டி எண்ணப்படுகின்ற ஐம்பூதங்களும் ஆனவரும் , காரோணத்தலங்களில் என்றும் இருப்பவரும் , இடிக்கும் குரலைக் கொண்ட வாயையுடைய பூதப்படையினரும் , ஏகம்பத்தை விரும்பி அதன் கண் இருந்தவரும் பிறர் ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவரும் , பாண்டிக்கொடுமுடியையும் தம் ஊராகக் கொண்டவரும் அடியாருடைய துன்பத்திற்குக் காரணமான நோயைத் தீர்ப்பவரும் ஆவார் .

குறிப்புரை :

கடுவெளி - பெரிய ஆகாயம் . ` கடுவெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் ` என்றது , ` கடுவெளி ஆனமையே யன்றி ஓர் ஐந்தும் ஆனார் ` என்றபடி . ஐந்து , பூதங்கள் . காரோணம்பற்றி மேலே ( ப .2. பா .6) கூறப்பட்டது . இடிகுரல் - இடிக்குங்குரல் . படி - ஒப்பும் , இயல்பும் . ` ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவர் ` என்க . ` ஒருவரும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . பாண்டிக்கொடுமுடி , கொங்கு நாட்டுத் தலம் . ` கொடுமுடியும் தம் ஊர் ` என்றருளினாராயினும் , ` கொடுமுடியையும் தம் ஊராக் கொண்டார் ` என்றலே திருவுள்ளமாகக் கொள்க . செடி - துன்பம் . படு - உண்டாதற்குக் காரணமான . நோய் - பிணி . வினையைக் குறித்தருளியதுமாம் . ` அடியாரை நோய் தீர்ப்பார் ` என்றதனை , ` நூலைக் குற்றங்களைந்தார் ` என்பது போலக் கொள்க .

பண் :

பாடல் எண் : 8

விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலும்
சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலும்
சிலையினார் செங்க ணரவர் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , விலையில்லாத மாலையணிந்த மார்பரும் , வெண்ணீற்றை மெய்யிற் பூசிய விகிர்தரும் , ( மற்றையாரின் வேறுபட்டவர் ) மலையரையன் மங்கையின் மணாளரும் , மாற்பேற்றினைத் தம் இடமாய்க் கொண்டு மகிழ்ந்தவரும் , தோல்வி அறியாத பகைவருடைய மூன்று புரங்களையும் தொலைத்தவரும் , சோற்றுத்துறை , துருத்தி ஆகிய தலங்களில் உள்ளவரும் , வில்லில் நாணாகப் பூட்டிய பாம்பினை உடையவரும் ஆவார் .

குறிப்புரை :

` விலை இலா ஆரம் ` என்றது , எலும்பு மாலையை ; இது , ` விலை ஒன்றும் பெறாத மாலை ` என்னும் பொருளதாய் , ` விலை வரம்பிலா மாலை ` எனப் பிறிதொரு பொருளையும் உடன் உள்ளுறுத்து அருளிச் செய்யப்பட்டமையின் , உடனிலை உள்ளுறை ; இதனை , அணி இலக்கணங் கூறுவார் , சிலேடை அணி என்ப . மலையின் ஆர் - மலையில் தோன்றி வளர்ந்த , மாற்பேறு . தொண்டை நாட்டுத்தலம் . காப்பு - இடம் . தொலைவு - தோற்றல் . தொலைத்தார் - அழித்தார் . சோற்றுத் துறையும் , துருத்தியும் சோழநாட்டுத் தலங்கள் . சிலையின் ஆர் அரவர் - வில்லில் நாணாகப் பூட்டிய பாம்பினை யுடையவர் .

பண் :

பாடல் எண் : 9

அல்லல் அடியார்க் கறுப்பார் போலும்
அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகைநகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , அடியாருடைய அல்லலை அறுப்பவரும் , தம்மை அடைந்தார்க்கு அமருலக ஆட்சியை அளிப்பவரும் , நல்லத்திலும் நல்லூரிலும் பொருந்தி நின்று காட்சி அளிப்பவரும் , நள்ளாற்றை என்றும் பிரியா தவரும் , முல்லைமொட்டுப் போன்ற பற்களை உடைய பார்வதியின் பாகரும் , உயர்திணை யஃறிணைப் பொருள்கள் யாவற்றிற்கும் முன்னே தோன்றியவரும் , தில்லை அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் தேவரும் ஆவார் .

குறிப்புரை :

` அடியார்க்கு அல்லல் அறுப்பார் ` என்க . ` அமருலகம் ஆட்சி ` என்றருளினாராயினும் , ` ஆட்சியாக அளிப்பார் , என்றலே கருத்தாகக் கொள்க . நல்லமும் , நல்லூரும் , நள்ளாறும் சோழநாட்டுத் தலங்கள் ; ` அவற்றுள் நல்லூர் , சுவாமிகளுக்கு இறைவன் திருவடி சூட்டிய தலம் ` என்பது மேலும் கூறப்பட்டது .

பண் :

பாடல் எண் : 10

உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால்
ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்
நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
பெண்ணா ணுருவாகி நின்றார் போலும்
சிறப்புடைய அடியார்கட் கினியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே ! எடுத்த வினையை முடிப்பதில் தீவிரம் மிக்க இராவணன் ஊக்கம் மிக்கு அழகிய கயிலை மலையைக் கையால் பெயர்த்தலும் , உமையாள் அஞ்ச , வெற்றி நிறைதலையுடைய அவன் பெருந்தோள்கள் இருபதும் முடிகள் பத்தும் சோர்ந்து நிலத்தில் வீழும் வண்ணம் கால்விரலை ஊன்றிய நிமலரும் , பிறைச் சந்திரனை அணியாகச் சடையிடத்துக் கொண்ட பெருமானாரும் , பெண்ணுருவும் ஆணுருவும் கலந்து நின்ற அம்மையப்பரும் , பதிஞானச் சிறப்புடைய அடியவர்களுக்கு இனிய வரும் ஆவார் .

குறிப்புரை :

உறைப்பு - கொண்டது விடாமை . பொன் - அழகு . ஊக்கம் செய்து - ஊக்கங்கொண்டு எழுந்து . அஞ்ச - அஞ்சியதனால் , ` அவனது தோள் இருபதும் முடிகள் பத்தும் நிலத்திற் புதைய ` என்க . விரல் , ` கால் விரல் ` என்பது , சொல்லுவாரது குறிப்பாற் கொள்ளக் கிடந்தது . பிறைப் பிளவு - பிறையாகிய பிளவு என்றது , சந்திரனது பிளவு என்றவாறு . சிறப்பு - வீட்டு நெறி ; திருவடி ஞானம் .
சிற்பி