திருநாட்டுத்தொகை


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

வீழக் காலனைக் கால்கொடு
பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தான்இடங்
கொண்டது கோவலூர்
தாழை யூர்தகட் டூர்தக்க
ளூர்தரு மபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு
கன்னாட்டு மருகலே.

பொழிப்புரை :

கூற்றுவனை , அவன் உயிரற்று விழுமாறு , காலால் உதைத்த கயிலாய நாதனும் , நடை நிரம்பாத எருதினை ஏறுதலை விரும்பியவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக்கொண்ட ஊர் , ` திருக்கோவலூர் , தாழையூர் , தகட்டூர் , தக்களூர் , தருமபுரம் , வாழைகள் காய்க்கின்ற , செல்வம் வளர்கின்ற மருகல் நாட்டில் உள்ள மருகல் ` என்பவை .

குறிப்புரை :

தாழையூர் , தகட்டூர் , தக்களூர் இவை வைப்புத் தலங்கள் . எல்லாத் தலங்களுடனும் , ` திரு ` என்பதனை இயைக்க . வைப்புத்தலங்கள் அல்லாதவை இன்ன நாட்டில் உள்ளன என்பதனை ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க . ` மருகல் ` என்னும் ஊரைத் தலைமையாகக் கொண்ட நாடு , மருகல் நாடு . பிறவும் இவ்வாறே உணர்க . இந்நாடுகள் சோழமண்டலம் முதலிய மண்டலங்களாகிய பெருநாடுகளின் உட்பகுதிகள் என்க . ` கொண்டது ` என்பதனைத் தனித் தனி கூட்டி உரைக்க . ` கொண்டதும் ` என உம்மையோடு கூடிய பாடமே காணப்படுகின்றது . ` தகடூர் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அண்டத் தண்டத்தின் அப்புறத்
தாடும் அமுதன்ஊர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை
தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்
பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக்
கைநாட்டுக் குறுக்கையே.

பொழிப்புரை :

இவ்வண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள் , ` தண்டந்தோட்டம் , தண்டங்குறை , தண்டலை , ஆலங்காடு , கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த கழிப்பாலை , கடற்கரை , கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல் , குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை ` என்பவை .

குறிப்புரை :

` அப்புறத்து ` என்றது முதற்கண் உள்ள , ` அண்டத்து ` என்பதனோடும் இயையும் . அப்புறத்து அண்டத்தை , ` பகிரண்டம் ` என்ப . தண்டந்தோட்டம் , தண்டங்குறை , கொண்டல் இவை வைப்புத் தலங்கள் . ` கடற்கரை ` என்றது , கோடிக்குழகர் , ஒற்றியூர் போல்வனவற்றை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மூல னூர்முத லாயமுக் கண்ணன்
முதல்வன்ஊர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய
நம்பன்ஊர்
கோல நீற்றன்குற் றாலங்
குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக்
கூற்றத்து வெண்ணியே.

பொழிப்புரை :

அழகிய திருநீற்றை அணிந்த , வெள்விடையை விரும்பியேறின , முக்கண் முதல்வனது தலங்கள் , ` மூலனூர் , முதல்வனூர் , நாலனூர் , குற்றாலம் , குரங்கணின்முட்டம் , வேலனூர் , வெற்றியூர் , வெண்ணிக் கூற்றத்திலுள்ள வெண்ணி ` என்பவை .

குறிப்புரை :

` ஊர் ` எனப்பட்டவை ஐந்தும் வைப்புத்தலங்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ்
சிராப்பள்ளி
பாங்கூ ரெங்கள் பிரானுறை
யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி
பயிலும்ஊர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை
யூர்நாட்டு நறையூரே.

பொழிப்புரை :

எமக்குத் துணையாய் வரும் தலைவனும் , எப்பொருட்கும் மேலானவனும் , எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவனும் ஆகிய இறைவன் நீங்காது வாழும் அழகு மிகுந்த ஊர்கள் , ` தேங்கூர் , சிற்றம்பலம் , சிராப்பள்ளி , அழகு மிக்க கடம்பந்துறை , நாங்கூர் நாட்டிலுள்ள நாங்கூர் , நறையூர் நாட்டிலுள்ள நறையூர் ` என்பவை .

குறிப்புரை :

` எங்கள் பாங்கு ஊர் பிரான் உறையும் , பரமன் பரஞ்சோதி பயிலும் பூங்கூரும் ஊர் ` என எடுத்துக்கொண்டு உரைக்க . ` பூக்கூர் ` என்பது மெலித்தலாயிற்று . தேங்கூரும் , நாங்கூரும் வைப்புத் தலங்கள் . ` தெங்கூர் ` என்பது நீண்டு நின்றதாகக் கருதுவாரும் உளர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

குழலை வென்ற மொழிமட
வாளைஓர் கூறனாம்
மழலை யேற்று மணாளன்
இடம்தட மால்வரைக்
கிழவன் கீழை வழிபழை
யாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலைவெண்
ணிந்நாட்டு மிழலையே.

பொழிப்புரை :

குழலிசையை வென்ற மொழியினையுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனாகிய , இளமையான இடபத்தையுடைய அழகனும் , பெரிய கயிலாய மலைக்கு உரியவனும் ஆகிய இறைவனது தலங்கள் , ` கீழைவழி , பழையாறு , கிழையம் , மிழலை நாட்டிலுள்ள மிழலை , வெண்ணி நாட்டிலுள்ள மிழலை ` என்பவை .

குறிப்புரை :

மிழலை நாட்டு மிழலை வீழிமிழலை . வெண்ணிநாட்டு மிழலை வைப்புத் தலமாதல் வேண்டும் . ` கீழைவழி ` முதலிய மூன்றும் வைப்புத் தலங்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தென்னூர் கைம்மைத் திருச்சுழி
யற்றிருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர
மற்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள்பி ரான்உறை
யுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி
சைநாட்டுப் புரிசையே.

பொழிப்புரை :

சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலங்களிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு இடமாய் , பரவிய புகழையுடையன எவ்வூர்கள் எனின் , அவை , எங்கள் பெருமான் எழுந்தருளியுள்ள , ` தென்னூர் , ஒழுக்கம் நிறைந்த சுழியல் , கானப்பேர் , தேவனூர் , பொன்னூர் நாட்டிலுள்ள பொன்னூர் , புரிசை நாட்டிலுள்ள புரிசை` என்பவை .

குறிப்புரை :

தென்னூர் , தேவனூர் , பொன்னூர் , புரிசை இவை வைப்புத்தலங்கள் . ` எனின் , அவை ` என்பன சொல்லெச்சங்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஈழ நாட்டுமா தோட்டந்தென்
னாட்டிரா மேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்திநெய்த்
தானந் திருமலை
ஆழி யூரன நாட்டுக்கெல்
லாம்அணி யாகிய
கீழை யில்லர னார்க்கிடங்
கிள்ளி குடியதே.

பொழிப்புரை :

சிவபெருமானாருக்கு உரிய தலங்கள் , ஈழநாட்டில் உள்ள மாதோட்டம் , தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம் , சோழநாட்டிலுள்ள துருத்தி , நெய்த்தானம் , திருமலை , கடல் சூழ்ந்த நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில் , கிள்ளிகுடி என்பவை .

குறிப்புரை :

மாதோட்டமாவது , அந்நகரின்கண்ணுள்ள , கேதீச்சரம் . திருமலை , கீழையில் , கிள்ளிகுடி இவை வைப்புத்தலங்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

நாளும் நன்னிலந் தென்பனை
யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
காவு நெடுங்களம்
காள கண்டன் உறையுங்
கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டுவே ளூர்விளத்
தூர்நாட்டு விளத்தூரே.

பொழிப்புரை :

` நன்னிலம் , பனையூர் , கஞ்சனூர் , நெல்லிக்கா , நெடுங்களம் , கடைமுடி , கண்டியூர் , வேளா நாட்டில் உள்ள வேளூர் , விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர் ` என்பவைகளில் , மிக நீண்ட சடையையுடையவனும் , நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனுமாகிய இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன் .

குறிப்புரை :

` நெல்லிக்கா ` என்பது , ஈற்றில் உகரம் பெற்றது . வேளூரும் , விளத்தூரும் வைப்புத் தலங்கள் . ` வேளார் நாட்டு ` எனவும் பாடம் ஓதுவர் . ` தென்பனையூர் , வடகஞ்சனூர் ` என்றது , அவை தம்முள் நோக்கி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

தழலு மேனியன் தையலொர் பாகம்
அமர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற
சோதிசோற் றுத்துறை
கழலுங் கோவை யுடையவன்
காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரந்
தஞ்சைதஞ் சாக்கையே.

பொழிப்புரை :

தழல் போல ஒளிவிடும் திருமேனியை உடையவனும் , மங்கையை ஒரு பங்கில் விரும்பிவைத்துள்ளவனும் , தன்னைத் தொழுதவுடன் தொழுதவரது பழவினையை அறுக்கின்ற ஒளியாய் உள்ளவனும் , கழல் அணிந்த மணிவடத்தை உடையவனும் , ஆகிய இறைவன் விரும்புகின்ற தலங்கள் , ` சோற்றுத்துறை , பழனம் , பாம்பணி , பாம்புரம் , தஞ்சை , தஞ்சாக்கை ` என்பவை .

குறிப்புரை :

பாம்பணி , தஞ்சை , தஞ்சாக்கை இவை வைப்புத் தலங்கள் . ` பாம்புணி ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மைகொள் கண்டன்எண் டோளன்முக்
கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாளர வாட்டித்
திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துக
ளுந்திருப் புன்கூர்நன்
றையன் மேய பொழில்அணி
ஆவடு துறையதே.

பொழிப்புரை :

கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடையவனும் , படத்தைக்கொண்ட கொடிய பாம்பை ஆட்டித் திரியும் மேலவனுமாகிய இறைவனுடைய தலங்கள் , ` வலஞ்சுழி , வயல்களில் வாளை மீன்கள் மேலெழுந்து பாய்ந்து பிறழ்கின்ற திருப்புன்கூர் , அவன் மிக விரும்பிய , சோலையை உடைய அழகிய ஆவடுதுறை ` என்பவை .

குறிப்புரை :

` பொழிலை அணிந்த ` என்றும் , ` பொழில் அழகைச் செய்கின்ற ` என்றும் உரைப்பினுமாம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

பேணி நாடத னிற்றிரி
யும்பெரு மான்றனை
ஆணை யாஅடி யார்கள்
தொழப்படும் ஆதியை
நாணிஊரன் வனப்பகை யப்பன்வன்
றொண்டன்சொல்
பாணி யால்இவை ஏத்துவார்
சேர்பர லோகமே.

பொழிப்புரை :

நாடுகளில் எல்லாம் விரும்பித் திரியும் பெருமானும் , அடியார்கள் தமக்குத் தலைவனாக அறிந்து தொழப்படுகின்ற முதல்வனும் ஆகிய இறைவனை , நாணுடையவளாகிய ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையும் , இறைவன்முன் வன்மை பேசிப் பின் அவனுக்குத் தொண்டன் ஆகியவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைத் தாளத்தொடு பாடித் துதிப்பவர் அடையும் இடம் சிவலோகமேயாம் .

குறிப்புரை :

` நாடது ` என ஒருமையாற் கூறியது , தொகை நிலையால் என்க . ` ஆணை ` என்றது , அஃது உடையானைக் குறித்தது . ` சேர் ` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய் , சேரப்படு மிடத்தைக் குறித்தது .
சிற்பி