பொது


பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப் பெயரே என்க.
`திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.
`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.
`மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.
`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.
குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.
அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

இலை - இலைத் தன்மை; கூர்மை. வேல் - படைக்கலப் பொது; இங்கு, மழுவைக் குறித்தது.
கலை மலிந்த சீர், நூல்களில் பெரிதும் காணப்படுகின்ற புகழ், `திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி, கண்ணப்பதேவர் திருமறம்` முதலாக பல நூல்களினும் கண்ணப்பர் வரலாறு சிறந்தெடுத்துக் கூறப்படுதல் அறிக.
மலை மலிந்த - மலைத் தன்மை (பெருமையும், வலிமையும்) நிறைந்த. எஞ்சாத - தொண்டினை முட்டாது செய்த. `மங்கை` என்பது `மங்கலம்` என்பதன் மரூஉ. இஃது, ஊர்ப்பெயர்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

``மும்மை`` என்றது ``இருமை வகை தெரிந்து`` (குறள்-23) என்றாற்போல, `மூன்று` எனப் பொருள் தந்தது. மூன்றாவன: திருநீற்றுப்பூச்சு, கண்டிகைக் கலன், சடைமுடி என்பன.
செம்மையே போவான் - பிறழாது நின்ற உள்ளத்தோடே போவான்.
மெய்ம்மையே - இப்பிறப்புப் பிள்ளைமைப் பருவத்து விளையாட்டானேயன்றி, முற்பிறப்பில் வழிபட்ட தொடர்ச்சியானே. ``திருமேனி`` என்றது, இலிங்கத் திருமேனியை. வெகுண்டது, அவரது நிலையை அறியாமையால் என்க. எழுந்த - பல தவறுகளைச் செய்ய எழுந்து, அங்ஙனமே செய்த. அம்மையான் அடி - வீடுபேற்றைத் தரும் முதல்வனது அடியையே பொருளாக அடைந்த. ``அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங் கழலே எனக் கொண்ட - செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார்`` (தி.12 சண்டேசுரர் புரா. 15) என்ற சேக்கிழாரது திருமொழியைக் காண்க.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்
அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

திரு - இன்பம். `அது நிலைத்து நிற்றலாகிய செம்மையே உண்மைச் செம்மையாம்` எனக் கொண்டவர் திருநாவுக்கரசர் என்க. பிறப்பில் பெருமானாதலின், அத்தகைய செம்மையை யுடைய செம்பொருளாவான் சிவபெருமானே என்பது கருத்து. இஃது அவனது திருமேனிக் குறிப்பாலும், `சிவன்` என்னும் பெயராலுமே நன்கறியப்படும் என்பார், ``சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்`` (தி.4 ப. 112 பா.9) என அவர் ஓர் இடத்தில் அருளிச்செய்தார். ``திருநின்ற செம்மை`` என்பது, இந் நாயனார் அருளிச்செய்த தொடராதலை யறிக. (தி. 4 ப.8 பா.1)
பெருநம்பி - நம்பிகளுட் சிறந்தவர். அமைச்சராய் இருந்தும் அடியவர்க்கு அடிமை செய்தவர்; சைவப் பயிர்க்கு உளவாய் இருந்த களையைக் களைந்தவர்.
ஒருநம்பி - ஒப்பற்ற நம்பி; இறைவனது திருவருளை ஆசிரியராலே அடைந்தவர். சாத்த மங்கை, ஊர்ப்பெயர். அருநம்பி - அரிய செயலைச் செய்த நம்பி; நீரால் திரு விளக்கை ஒருநாள் ஒருபொழுதன்றி, எந்நாளும் எப்பொழுதும் இட்டவர்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

வம்பு அறா வரிவண்டு - நறுமணத்தை விட்டுப் போகாத, வரிகளையுடைய வண்டுகள். `வண்டிற்கு` என நான்காவது விரிக்க. `நாறுமாறு மலரும் மலர்` என இயையும். `மலர்க்கொன்றை` என்றதனை, `கொன்றை மலர்` என மாற்றியுரைக்க. சிவபிரான் ஒருவனுக்கே உரிய சிறப்பு மாலையாகலின், ``நற்கொன்றை`` என்று அருளினார். ``கைச்சிறு மறியவன் கழலலாற்பேணாக் கருத்துடை ஞான சம்பந்தன்`` (தி.1 ப.77 பா.11) என அவர் ஓதியதனையே எடுத்தோதியருளினார் என்க. சிவபிரானால் ஆகமத்தைத் தமிழாற் செய்யத் தமிழகத்தில் வருவிக்கப்பெற்று அங்ஙனமே செய்தருளிய ஆசிரியராகலின், ``நம்பிரான்`` என்று அருளிச்செய்தார். நாட்டம் மிகு - பிறவியில் கண்ணில்லாதவராய் இருந்து, சமணர் முன்னே சிவபிரானது திருவருளாற் கண்பெற்று விளங்கியவர். அம்பர், ஊர்ப்பெயர்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

வார் - கச்சு. வனம் - அழகு. சீர் - சிறப்பு. கார்கொண்ட - மேகம் போன்ற. ஆர் - கூர்மை. களந்தை, ஊர்ப் பெயர்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

பொய்யடிமை யில்லாத புலவர், தொகையடியார். துஞ்சிய - இறைவன் திருவடியிற் சென்று தங்கிய. நாகை - நாகப்பட்டினம். வரிசிலை - கட்டப்பட்டு அமைந்த வில். கழல் - காலில் அணியும் அணி. வரிஞ்சை - ஊர்ப்பெயர். `வரிஞ்சையர்கோன் கழற் சத்தி` என மாற்றி உரைக்க.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

காப்புக் கொண்டிருந்த - தமக்குப் பாதுகாவலாக உணர்ந்திருந்த. நிறை - நெஞ்சைத் தீ நெறியிற் செல்லாது நிறுத்துதல். நெல்வேலி வென்ற - திருநெல்வேலியில், அயல்நாட்டு அரசரை வென்ற. மயிலை - மயிலாப்பூர். அறை - அறுத்தல். ``நிறைக்கொண்ட`` முதலிய மூன்றிலும் ககர ஒற்று, விரித்தலாயிற்று.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

மடல் - இதழ். தார் - மாலை, அதள், தோல். ``ஆடி`` என்றது பெயர். அடல் - வெற்றி.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

இத்திருப்பாடலில் அருளிச்செய்யப்பெற்றவர் அனைவரும், தொகையடியார்கள்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 11

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

என்னவன் - எனக்கு உரியவன். காதலன் - மகன். `சடையன், இசைஞானி இவர்க்கு மகன்` என்க.
`காதலனும், கோனும் ஆகிய அத்தன்மையுடையவனாம் நம்பியாரூரன்` என்க. உவப்பார் - அன்பால் மனம் உருகுகின்றவர்கள்.
சிற்பி