திருநாகைக்காரோணம்


பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் [ இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பலவூர்களிற் சென்று , பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர் ; அங்ஙனம் இரக்குங்கால் , பிச்சைஇட வருகின்ற , பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர் ; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு , எருதின்மேல் ஏறித்திரிவீர் ; இவைகளைப் போலவே , உள்ள பொருளை மறைத்துவைத்து , என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது , ஏதும் இல்லை என்பீர் ; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா ; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும் , மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து , உடம்பிற் பூசிக் கொள்வதற்கு , இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும் , அத்தகையதான சந்தனமும் நீர் , தவிராது அளித்தருளல் வேண்டும் ,

குறிப்புரை :

இடையில் வருவித்துரைத்தன , இசையெச்சங்கள் , ` பத்து ` என்பது , மிகுதியுணர்தற்குக் கூறுவதொரு வழக்கு , ` பாவையரை `, உருபு மயக்கம் , பொய்யாவன , பொருளில்லனவும் , கவர்படு பொருளுடையனவுமாய சொற்கள் . கரவுடையார் போல நடித்தலைக் கரவுடைமையாக அருளினார் என்க . ` கடல் `, ஆகுபெயர் . ` நாகப் பட்டினம் ` என்பது , ` நாகை ` எனவும் , ` காயாரோகணம் ` என்பது , ` காரோணம் ` எனவும் மருவின , காயாரோகணம் , கோயிலின்பெயர் ; இப்பெயர்க் காரணத்தை ஆறாந் திருமுறைக் குறிப்பிற் காண்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , என்னை , கைப்புடைய வேம்பினையும் , தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து , நான் , இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க , நீர் என்முன் நில்லாது , திருத்துருத்தியில் புகுந்து , அங்கே இருந்துவிட்டீர் ; இப்பொழுது உம்மைக் கண்டேன் ; நீர் பாம்பும் , விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விட நினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ ! ஒட்டேன் ; ஏனெனில் , உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன் ; நீர்ச்சேம்பும் , செங் கழுநீரும் , குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந் திருக்கும் தீவண்ணராகிய நீர் , இப்பொழுது எனக்கு ` காம்பு ` என்றும் , ` நேத்திரம் ` என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும் .

குறிப்புரை :

` வேம்பினோடு தீங்கரும்பு விரவித் தீற்றி ` என்றது ` விரகின்மையின் வித்தட் டுண்டனை ` ( புறம் - 227) என்றாற்போல , அன்னதொரு செயலைக் குறித்து நின்றது . பொருளைத் தொகாது வெளிப்படக் கூறினும் , அதன் செயலைத் தொகுத்து , அதற்கு ஒத்ததொரு செயல் கூறலின் , இதனையும் ஒட்டணியின்பாற் படுத்துக் கொள்க . ` தீங்கரும்பு ` என்ற அடையான் , அதன் மறுதலையடை பெறப்பட்டது . வேம்பு உலகின்பமும் , கரும்பு திருவருள் இன்பமும் என்க . இவ்வாறன்றி வேம்பு துன்பமும் , கரும்பு இன்பமும் என இரண்டையும் உலகியலாக உரைத்தல் , சுவாமிகள்பால் ஏற்புடைத் தாகாமை யறிக , ` இவற்றுள் ஒன்றே ஊட்டினீராயின் , உம்பால் இவற்றை வேண்டுவேனல்லேன் ; இரண்டையும் விரவி ஊட்டுதலின் , வேண்டுவேனாயினேன் ` என்றபடி . ` தீற்றி ` என்னும் எச்சம் , ` இருந்தீர் ` என்பதனோடு முடிந்தது , ` தீர்த்தீர் ` என்பது பாட மாகாமை , சிவஞானமா பாடியத்தாலும் உணர்க . ` துருத்தி ` என்பது ` ஆற்றிடைக்குறை ` என்னும் நயம் தோற்றுவித்தது . ` காம்பு , நேத்திரம் ` என்பன பட்டாடையின் வகைகள் என்பதறியாதார் , தம் மனஞ்சென்ற வாறே உரைப்ப .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்
பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

விரிந்த சடையின்மேல் பாம்பையும் , சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே , காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய , கடற்கரைக் கண் உள்ள திரு நாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி , விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண , இசைபாடி , இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர் ; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழி யாது , வீண் சொற்களைப் பேசி , பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின் , மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ ? சொல்லீர் .

குறிப்புரை :

` பாம்பையும் , மதியையும் பகை தீர்த்து இயைய வைத்தநீர் , இயைந்துள்ள உம் தேவியை நும்பால் வெறுப்புக் கொள்ளச் செய்தல் என்னை ? என்பது குறிப்பு . ` எல்லாருங் காணப் பலி கொள்கையையும் , நும் தேவி வெறுப்பன செய்தலையும் ஒழியீரா யினும் , யான் வேண்டுவனவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும் ` என்பது கருத்தாகக் கொள்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே . நீர் வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர் ; மற்றும் , அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ , வீணை அழகுடையதாய் விளங்க , தெருவில் விடையை ஏறிச் செல்வீர் ; கொடியனவாகிய பேய்கள் சூழ நடன மாடுதலை மேற்கொண்டு . அழகுடையவராய் , மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ ? அல்லது பெருமையோ ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக ; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது ? சொல்லீர் .

குறிப்புரை :

` வீணடிமை உகந்தீர் ` என்று கழறுவார் , பிறவற்றையும் எடுத்துக் கூறிக் கழறினார் என்க . ` துட்ட ` என்பது வடமொழி யாகலின் , அதனடியாக வந்த பன்மை உயர்திணையாற் கூறப்பட்டுத் திணை மயக்கமாயிற்று . ` கொடிய பேய்கள் சூழ இருக்கின்ற உமக்குத் தூமதியம் தகாது ` என்றவாறு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

அழகரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது . வன்கண்மை கொண்டு திரிந்தும் , வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும் , காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் , உம் மனம் வேண்டியவாறே திரிவீர் ; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும் ! ஏனெனில் , முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ ! ` கண்டோம் ` என்பார்க்கும் , அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே . நீண்டு நின்றீரல்லிரோ ? அதனால் , நும் இயல்பையெல்லாம் விடுத்து , உமது கருவூலத்திலிருந்து நறுமணம் , ஆடை , ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும் .

குறிப்புரை :

காரியக் கேடாவன , ` துஞ்சலும் , துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தோறும் ` ( தி .3 ப .22 பா .1) என்றாற்போலவும் , ` ஆக்கைக்கு இரைதேடி அலமராதீர்கள் ; பூக்கைக் கொண்டு என் பொன்னடி போற்றுமின் ; நாக்கைக்கொண்டு என் நாமம் நவிலுமின் ` ( தி .5 ப .90 பா .5) என்றாற்போலவும் சொல்லி , பிற முயற்சிகளையெல்லாம் விலக்குதல் ,` தலைக்கு ` என்றதனை , ` தலைக் கண் ` எனத் திரிக்க . தொண்டு கொண்டு ஆள உடம் பட்டமையை , தலைக்கண் ஏற்றுக் கொண்டவாறாக அருளினார் . ` ஏற்றும் திரிவீர் ` என மேலே சென்று இயையும் , இறைவனை , அடைந்தார்க்கும் அவனை அகப்படுத்தியறிதல் இயலாது என்பது . கடலலைத்தே யாடுதற்குக் கைவந்து நின்றும் கடலளக்க வாராதாற் போலப் - படியில் அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவு மெல்லாம் கருத்திற்குச் சேயனாய்க் காண் . - திருக்களிற்றுப்படி . 90 என்றதனால் விளங்கும் , ஆகவே , இறைவனை அகப்படக் கண்டார் உளர் என்பதற்குப் பிரமாணம் இன்மை யறிக . ` சுந்தரனே ` என்பது பன்மை யொருமை மயக்கம் ` சுந்தரரே ` என்று ஓதுதலுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்
பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற , செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு , பூதங்கள் இசையைப் பாட , பலரும் இடுகின்ற பிச்சைக்கு , வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர் ; ஆயினும் , நீர் அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது , அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே ; அங்ஙனமாக , இப்பொழுது எனக்குப் பட்டும் , சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ !

குறிப்புரை :

` வேள்வி `. விருந்தோம்பல் , தீ வளர்த்தல் முதலிய வற்றுள் ஏற்பன கொள்க . ` மேலிட ` என்பது குறைந்து நின்றது . பிச்சை எடுப்பீர்போலக் காட்டுதல் நாடக மேயன்றிப் பிறிதில்லை என்பது , நஞ்சுண்டு தேவரைக் காத்தமையாலே நன்கு விளங்குகின்றது ; ஆதலின் , எனக்குப் பட்டும் சாந்தும் பணித்தருளா திருத்தல் , கரப் பேயன்றி வேறில்லை ` என்றார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நல்லாடையை உடுத்த அகன்ற அல் குலையும் , தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில் , நீர் சொல்ல வந்தவன் போல , ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க , அவனை முன்னர் ஒறுத்து , அவன் சிறந்த இசையைப் பாட , அவனுக்குத் தேரும் , வாளும் கொடுத்தீர் ; அதுவன்றி , வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு , மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர் ; அதுபோல , இன்று எனக்கு அருளல்வேண்டும் .

குறிப்புரை :

சொற்பாடாய் - சொல்லுள் அகப்பட்டதுபோல . இராவணன் கயிலையை எடுத்ததனால் இறைவி நடுக்கங் கொண்டு ஊடல் தீர்ந்து இறைவனைத் தழுவிக் கொண்டாளாதலின் , இராவணன் செய்தது இறைவன் சொல்ல , அச்சொற்படி செய்தது போன்றதாயிற்று . நித்தல் காசருளிச் செய்தமையை , திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர் புராணங்களிற் காண்க . திவ்யம் , ` திப்பியம் ` எனத் திரிந்தது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர்
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்
அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்
தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , யான் உமக்கு வழிவழியாக அடியேன் ; அதுவன்றி , நீர் வலிந்து , என்னை , ` வாழ்விப்பேன் ` என்று சொல்லி அடிமை கொண்டீர் ; மிக்க செல்வம் உடையீர் ; வறுமை யுடையீரும் அல்லீர் ; ஆயினும் , மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீர் ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில் , எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும் ; அதனோடு ஏறிப் போவதற்கு , காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும் ; இவைகளை அளியாதொழியின் , உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது , உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன் .

குறிப்புரை :

திருக்கூட்டங் கூடும் தேவாசிரிய மண்டபத்தை உடைய சிவராசதானியாதலின் . ` திருவாரூரிலே புகப்பெய்த அருநிதியம் ` என்று அருளினார் . அருநிதியம் - தொகுத்தற்கரிய தொகையான நிதியம் , ` முக்கூற்றில் ஒரு கூறு என்றது என்னை யெனின் , அஃது என் மனத்தெழுந்த கருத்து ` என்பார் , ` தோற்ற மிகும் ` என்றார் , இனி . ` இறைவனுக்கு ஒரு கூறு , இறைவிக்கு ஒரு கூறு , அடியவர்க்கு ஒரு கூறு ` என்று கூறிட்டு , அடியவர் கூற்றை அடியார் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதாக அருளினார் என்றலுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , எம்பெருமானே , மண்ணுலகிலும் , விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது . ஆதலின் , நான் உம்மையுந் தெளிய மாட்டேன் ; உம் தேவியாகிய மலையரையன் மகளையும் , சிறுவனாகிய முருகனையும் தெளியமாட்டேன் ; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி , தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின் , அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் ? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ ? சொல்லி யருளீர் ; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில் , உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துக் கொள்வேன் ; பின்பு , ` இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன் ; கொடுமையுடையவன் ` என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா .

குறிப்புரை :

` உம்மதே ` என்புழி , மகரவொற்று விரித்தல் , இறைவரைத் தேறாமை , ஒன்றும் இல்லார்போல நடித்தல்பற்றியும் , இறைவியைத் தேறாமை , அவர் செயலுக்கே அவள் துணையாய் இருத்தல் பற்றியுமாம் . முருகனைத் தேறாமை , ` சிறுவன் ` என்றதனானே பெறப் பட்டது . ` எண்ணின்றி ` என்பது , ` எண்ணிலி ` என நின்றது ; ` எண்ணில ` என்பதே பாடம் எனலும் ஒன்று ,

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீர்
மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

மான் கன்று பொருந்திய கையை உடையவரே . தலைவரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பெருமையோ மிக உடையீர் ; ` மிக்க பொருட்குவையைத் தருவேன் ` என்று சொல்லி , வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர் ; ஆனால் , இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி , திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர் ; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால் , நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ ! படேன் , இலச்சினை பொருந்திய , நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடை வாளும் , தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும் , பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும் . அன்றியும் , மூன்று பொழுதிலும் , கறியும் , சோறும் , அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும் .

குறிப்புரை :

உறுதிமொழியாவது , ` மாநிதியந் தருவன் ` என்று சொல்லி ஆண்டது , ` உண்டேல் ` என்பது , காரணப் பொருளில் வரும் ` உண்டாக ` என்பதன் பொருளில் வந்தது . இதில் , ` உண்டு ` என்னும் வினைக் குறிப்பு , இறந்தகாலம் பற்றி வந்தது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 11

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.

பொழிப்புரை :

அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மை யால் , அவரை , ` கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய ` பரவை சங்கிலி ` என்னும் இருவருக்கும் , எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே , யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன் ? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும் ; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும் , ஒள்ளிய பட்டாடையும் , பூவும் , கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற , சந்தனமும் வேண்டும் ` என்று வேண்டிப் பாடிய , அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் , அமரர் உலகத்தை ஆள்வார்கள் .

குறிப்புரை :

`என்குடிமுழுதுமே உன்னைத்தான் சார்ந்துள்ளது` என்றற்கு, `பரவைக்கும், சங்கிலிக்கும், எனக்கும் பற்றாய பெரு மானே` என்று அருளினார். மயம் - வடிவம்; தன்மை. `கண்` என்றது, அதன் நோக்கினைக் குறித்தது, கண்டார் பலரும், விரும்பி நோக்கு தலின், அது நிறைய உளதாயிற்று. `அண் மயம்` வினைத்தொகை; `அண்மிய தன்மை` என்பது பொருள். `அமருலகம்` என்பது, முப்பத்துநான்காந் திருப்பதிகத்துள் விளக்கப்பட்டது.
சிற்பி