திருநீடூர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தற்றனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிடற் றானைக்
கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளைவ ரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

எருது ஒன்றினை ஓர் ஊர்தியாக உடையவனும் , ஒளியையுடைய நெற்றியையுடைய ஒப்பற்ற சிவபெருமானும் , கருமை பொருந்திய நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும் , பகைவரது ஊர்கள் மூன்றை எரித்தவனும் ஆகிய , நீரில் வாழ்வனவாகிய வாளை மீனும் , வரால் மீனும் குதிகொள்ளுகின்ற நிறைந்த நீரையுடைய கழனிகளை யுடைய செல்வம் பொருந்திய திருநீடூரின்கண் , நில வுலகில் உள்ளார் யாவரும் துதித்து வணங்குமாறு எழுந்தருளியிருக் கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

` ஆகாதன்றே ` என்பது , எதிர்மறை எச்சமாயும் , ஏனையது குறிப்பெச்சமாயும் வந்தியையும் . ` விடை ஒன்று ஓர் ஊர்வது உடையானை ` என மாற்றியுரைக்க . ஒளியுடையதாயது , நெருப்புக் கண்ணினால் என்க . ` கண்ணுதல் ` என்றது , ` சிவபிரான் ` என்னும் அள வாய் நின்றது . இத்திருப்பதிகத்துள் , ` பரமன் ` முதலியவற்றை , ` இறைவன் ` என்னும் பெயரளவினவாகக் கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

துன்னு வார்சடைத் தூமதி யானைத்
துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
பன்னு நான்மறை பாடவல் லானைப்
பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
என்னை இன்னருள் எய்துவிப் பானை
ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
புனித னைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

நெருங்கிய நீண்ட சடையின்கண் தூய்தாகிய பிறையைச் சூடினவனும் , மயக்கம் வாராதவாறு உய்யும் நெறியைக் காட்டுகின்றவனும் , உயர்ந்தோர் ஓதும் நான்கு வேதங்களைச் செய்ய வல்லவனும் , அருச்சுனனுக்கு அருள் புரிந்த தலைவனும் , அவ்வினிய அருளை என்னை எய்துவிப்பவனும் , அயலாய் நிற்பார்க்கு அயலாய் நிற்பவனும் ஆகிய , புன்னையும் குருக்கத்தியும் அரும்புகள் மலர்கின்ற திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

` துயக்குறாமை ` என்னும் எதிர்மறை வினையெச்சம் ஈறு குறைந்து நின்றது . ` என்னை இன்னருள் எய்துவிப்பான் ` என்றது , ` படையை ஊரடைவித்தான் ` என்பதுபோல நின்றது . ` புன்னை மாதவி போதலர் ` என , சினைவினை முதல்மேல் நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

கொல்லு மூவிலை வேலுடை யானைக்
கொடிய காலனை யுங்குமைத் தானை
நல்ல வாநெறி காட்டுவிப் பானை
நாளு நாமுகக் கின்றபி ரானை
அல்ல லில்லரு ளேபுரி வானை
ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக்
கூறி நாம்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

கொல்லுதற் கருவியாகிய சூலத்தை உடையவனும் , கொடிய இயமனையும் அழித்தவனும் , நல்லனவாகிய நெறிகளையே காட்டுவிக்கின்றவனும் , எந்நாளும் நாம் விரும்புகின்ற தலைவனும் , துன்பம் இல்லாத திருவருளைச் செய்பவனும் ஆகிய , முழுகுதற்குரிய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக் கின்ற சிவபெருமானை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

நன்னெறிதான் , அவரவர் நிலைக்கேற்பப் பலவாய் நிற்குமாதலின் , ` நல்லவாம் ` எனப் பன்மையாக அருளினார் . அவை களைப் பெரும்பான்மையும் பிறர்வாயிலாகவே உணர்த்துதலின் , ` காட்டுவிப்பானை ` என்று அருளினார் . ` இல்லருள் `, இல்லாமைக்கு ஏதுவாய அருள் . காவிரியாற்று நீராகலின் , ஆடும் நீராயிற்று . கொல்லை வெள்ளேறு - முல்லை நிலத்தில் உள்ள எருது . ` நாம் ` என்றது , அடியார் பலரையும் உளப்படுத்தும் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

தோடு காதிடு தூநெறி யானைத்
தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்
பாடு மாமறை பாடவல் லானைப்
பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமொ டாட
அலைபு னற்கழ னித்திரு நீடூர்
வேட னாயபி ரானவன் றன்னை
விரும்பி நாம்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

தோட்டைக் காதிலே இட்ட , தூய நெறியாய் உள்ள வனும் , உயிர்கட்குப் பிறப்பும் இறப்புமாய் நிற்பவனும் , இசையொடு பாடுதற்குரிய சிறந்த வேதத்தைச் செய்ய வல்லவனும் ஆகிய , பசிய சோலைகளில் குயில்கள் கூவ , அவ்விடத்தே , ஆடுந் தன்மையுடைய சிறந்த மயில் அன்னத்துடன் நின்று ஆட அலைகின்ற நீரையுடைய வயல்களையுடைய திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை , நாம் விரும்பி வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

வேடனாயது , அருச்சுனனுக்காக என்க . இனி , ` உருவ முடையனாய் எழுந்தருளியிருக்கின்ற ` என்றும் ஆம் . ` துறப்பு ` என்ற விடத்து , எண்ணும்மை தொகுத்தலாயிற்று . ` கூவிட , ஆட அலைகின்ற புனல் ` என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

குற்ற மொன்றடி யாரில ரானாற்
கூடு மாறுத னைக்கொடுப் பானைக்
கற்ற கல்வியி லும்மினி யானைக்
காணப் பேணு மவர்க்கெளி யானை
முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை
மூவ ரின்முத லாயவன் றன்னைச்
சுற்று நீர்வயல் சூழ்திரு நீடூர்த்
தோன்ற லைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

அடியவர் குற்றம் சிறிதும் இலராயினாரெனின் , அவர்கள் அடையுமாறு தன்னையே கொடுப்பவனும் , வருந்திக் கற்ற கல்வியினும் மேலாக இனிமையைச் செய்கின்றவனும் , ஐம்புலன்களை யும் முற்றத்துறந்து பற்றின்றி இருப்பவனும் , காரணக் கடவுளர் மூவருள் முதல்வனாயினவனும் ஆகிய , சுற்றிலும் நீரையுடைய வயல் கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் அங்குச் சென்று அவனைவணங்குவோம் .

குறிப்புரை :

யாவரும் அடியவரேயாதலின் , மக்களை , ` அடியவர் ` என்றார் . ` கூடுமாறதனை ` எனவும் , ` சுற்று நீள் வயல் ` எனவும் ஓதுவன சிறவாமை காண்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

காடி லாடிய கண்ணுத லானைக்
கால னைக்கடிந் திட்டபி ரானைப்
பாடியா டும்பரி சேபுரிந் தானைப்
பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்
தேடி மாலயன் காண்பரி யானைச்
சித்த முந்தெளி வார்க்கெளி யானைக்
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
கூத்த னைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

காட்டில் ஆடுகின்ற , கண்ணையுடைய நெற்றியை யுடையவனும் , கூற்றுவனை அழித்த தலைவனும் , அன்பினால் பாடி ஆடுகின்ற செயலையே விரும்புபவனும் , பொருட்சார்புகளையும் உயிர்ச்சார்புகளையும் நீக்குபவனும் , மாலும் அயனும் தேடிக் காணுதற்கு அரியவனும் , சொல்லாலன்றி , உள்ளத்தாலும் தன்னைத் தெளிந்தவர்க்கு எளியவனும் ஆகிய , அளவற்ற தேவர்கள் தொழு கின்ற , திருநீடூரின்கண் எழுந்தருளியுள்ள இறைவனை நாம் வணங் காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

` காட்டில் ` என்பது தொகுத்தலாயிற்று . ` கோடி ` என்றது , மிகுதியைக் குறித்தவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

விட்டி லங்கெரி யார்கையி னானை
வீடி லாத வியன்புக ழானைக்
கட்டு வாங்கந் தரித்தபி ரானைக்
காதி லார்கன கக்குழை யானை
விட்டி லங்குபுரி நூலுடை யானை
வீந்த வர்தலை யோடுகை யானைக்
கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க்
கண்டு நாம்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

கவைவிட்டு விளங்குகின்ற தீப்பொருந்திய கையை யுடையவனும் , அழியாத , பரந்த புகழையுடையவனும் , மழுவை ஏந்திய தலைவனும் , காதின்கண் பொருந்திய பொற்குழையை யுடைய வனும் , மார்பின்கண் எடுத்து விடப்பட்டு விளங்குன்ற முப்புரி நூலை உடையவனும் , இறந்தவரது தலையோட்டைக் கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை . நாம் , கட்டியைத் தரும் கரும்புகள் வளர்ந்துள்ள திருநீடுரின்கண் கண்டு வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , நாம் அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

இறைவன் எல்லாம் உடையவனாகலின் , பொற் குழையை யுடையவனாதல் சொல்லவேண்டுமோ என்பது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மாய மாய மனங்கெடுப் பானை
மனத்து ளேமதி யாயிருப் பானைக்
காய மாயமு மாக்குவிப் பானைக்
காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
ஓயு மாறுறு நோய்புணர்ப் பானை
ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
வேய்கொள் தோளுமை பாகனை நீடூர்
வேந்த னைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

நிலையில்லாத பொருள்கள் மேற்செல்லுகின்ற மனத்தோடு ஒற்றித்து நின்று அதன்வழியே செல்லும் அறிவாய் இருப்பவனும் , பின்னர் அம்மனத்தின் செயலைக்கெடுத்து அறிவை ஒரு நெறிப்படுத்துபவனும் , காற்றும் தீயும் முதலிய கருவிகளாய் நின்று உடம்பாகிய காரியத்தைப் பண்ணுவிப்பவனும் , பின்னர் அதனை அழிப்பவனும் உயிர்கள் வருந்துமாறு , அவற்றை அடையற் பாலனவாகிய வினைப்பயன்களைக் கூட்டுவிக்கின்றவனும் , பின்னர் விரைவில் அவ்வினைகளை அழிப்பவனும் , இவை எல்லாவற்றையும் செய்தற்கு மூங்கில் போலும் தோள்களையுடைய உமையைத் துணையாகக்கொள்பவனும் ஆகிய , திருநீடூரின்கண் எழுந்தருளி யுள்ள முதல்வனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

இத்திருப்பாடலுள் , இறைவன் தனது சத்தியால் , உயிர் கட்குப் பந்தமும் வீடும் தரும் முதல்வனாய் நிற்றலை விரித்தவாறு . படைத்தல் முதலியவற்றைப் பிறர் வாயிலாகவும் செய்தலின் , ` ஆக்கு விப்பான் ` என்றும் அருளினார் . ` உரு நோய் புணர்ப்பானை ` என்பது பாடமாயின் , ` உடம்பின்கண் வினைப்பயன்களை வருவிப்பவனும் ` என உரைக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்
காணப் பேணு மவர்க்கெளியானைத்
தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்
துன்ப முந்துறந் தின்பினி யானைப்
பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்
பாக மாமதி யானவன் றன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
கேண்மை யாற்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

கண்டத்தைக் கறுப்பாகவும் செய்து கொண்ட தலை வனும் , தன்னைக் காண விரும்பும் அடியார்களுக்கு எளியவனும் , தனக்குத் தொண்டு பூண்டவரைப் பெரிதும் விரும்புபவனும் , துன்பம் இல்லாத இன்பத்தைத் தரும் இனியவனும் , பழைய வலிய வினை களையெல்லாம் அழிப்பவனும் , பகுதிப் பட்ட சந்திரனுக்குக் களை கண் ஆயினவனும் ஆகிய இறைவனை , நாம் , கெண்டை மீன்களும் , வாளைமீன்களும் துள்ளுகின்ற நீரையுடைய திருநீடூரின்கண் , கேண்மையோடு வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

உம்மை மாற்றியுரைக்கப்பட்டது , அது , ` மேனி முழுதும் சிவக்கச் செய்துகொண்டவன் , ஓரிடத்துக் கறுக்கவும் செய்து கொண்டான் ` என்பது தோற்றி நிற்றலின் , இழிவு சிறப்பு . உலகின்பம் துன்பத்தொடு விரவாது நிற்றல் இன்மையின் , இறைவன் இன்பத்தினது சிறப்பு உணர்த்துவார் , ` துன்பமுந்துறந்த இன்பத்தையுடைய இனிய வன் ` என்றார் . இவ்வும்மை , உயர்வு சிறப்பு . ` துறந்த ` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று . ` மதிக்கு ` என உருபு விரிக்க . கேண்மை , ஆண்டானும் , அடிமையுமாகிய உறவு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

அல்ல லுள்ளன தீர்த்திடு வானை
அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்
கொல்லை வல்லர வம்மசைத் தானைக்
கோல மார்கரி யின்னுரி யானை
நல்ல வர்க்கணி யானவன் றன்னை
நானுங் காதல்செய் கின்றபி ரானை
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
ஏத்தி நாம்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

` துன்பம் ` எனப்படுவனவற்றைப் போக்கு கின்றவனும் , தன்னை அடைந்தவர்கட்கு அமுதம் போன்று பயன் தருப வனும் , கொல்லுதலையுடைய வலிய பாம்பைக் கட்டியிருப்ப வனும் , அழகு பொருந்திய யானையின் தோலையுடையவனும் , நன்னெறியில் நிற்பவர்கட்கு அணிகலமாய்த் திகழ்பவனும் , அடி யேனும் விரும்புகின்ற தலைவனும் ஆகிய இறைவனை , நாம் , இரவில் மல்லிகை மலர்கள் மிகவும் மணம் வீசுகின்ற திருநீடூரின் கண் துதித்து வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

ஞான நெறியில் நிற்பவர்க்கு அந்த ஞானத்தைச் சிறப் பித்து நிற்றலின் , ` அணியானவன் ` என்று அருளினார் ; இதற்கு , ` அண்மையனானவன் ` என உரைப்பாரும் உளர் . ` ஏகமழ் ` என்றதில் ஏ , உரிச்சொல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

பேரோ ராயிர மும்முடை யானைப்
பேசி னாற்பெரி தும்மினி யானை
நீரூர் வார்சடை நின்மலன் றன்னை
நீடூர் நின்றுகந் திட்டபி ரானை
ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்
ஆத ரித்தழைத் திட்டஇம் மாலை
பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே

பொழிப்புரை :

எல்லாப் பெயர்களையும் உடையவனும் , வாயாற் பேசும்வழி பெரிதும் இனிப்பவனும் , நீர் ததும்புகின்ற நீண்ட சடை யினையுடைய தூயவனும் ஆகிய , திருநீடூரை விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , அவன் திருவடியைக்கண்டு வணங்குதற்கு அன்போடு விரும்பி , நம்பியாரூரன் அனைவரையும் அழைத்துப் பாடிய இத்தமிழ்மாலையால் , நிலவுலகத்து உள்ள எவ்வூரின்கண்ணும் இறைவனைப் பாடி வணங்க வல்லவர் , அவனுக்கு அடியவராகி , முத்தியைப் பெறுவார்கள் .

குறிப்புரை :

முற்றும்மை கொடுத்தோதினமையின், `ஆயிரம்` என்றது, `எல்லாம்` என்னும் பொருட்டாதல் பெறப்பட்டது. பொருள் தோறும் உள்ள பெயர்கள் வேறுவேறாயினும், அவை அனைத்தும், ஆகு பெயரால் இறைவனை உணர்த்தும் தன்மையுடையன என்பது மெய்ந் நூல் துணிபு. இதனால், இறைவன் எல்லாப் பொருள்களுமாய் நிற்றல் பெறப்படுவது என்க. `மாலையால்` என உருபு விரிக்க. `ஊர்` என்ற விடத்து, `எல்லாம்` என்பது வருவிக்க. பரவித்தொழுதலுக்குச் செயப்படுபொருள் எஞ்சி நின்றது.
சிற்பி