திருவானைக்கா


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மறைக ளாயின நான்கும்
மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத் திறையும்
தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும் , பல சமயங்களும் , அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும் , இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும் , வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே முதல்வன் ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` ஆயின ` என்றது , எழுவாய்ப்பொருள் தருவதோர் இடைச்சொல் . ` சொல்லும் பொருளுமாகிய இருகூற்றுலகம் ` என்பார் , அவற்றுள் சிறப்புடைய வேதத்தை வேறெடுத்தோதி , ஏனையவற்றை , ` மற்றுள பொருள்கள் ` எனப் பொதுவிற் சுட்டி விடுத்தார் . ` துறை ` என்றது , சமயத்தை . தோத்திரம் - புகழ் . ` தோத்திரத்தையுடைய இறை ` என்க . ` இறை ` என்பது அஃறிணை வாய்பாடாகலின் , அத்திணை இருபாற்கும் பொதுவாய் ஈண்டுப் பன்மைப் பொருள் தந்தது . ` தென்புலத்தார் தெய்வம் ` ( குறள் -43) என்றதில் , ` தெய்வம் ` என்றதுபோல , ` தொன்மை ` என்றது , தோற்றம் ஈறுகட்கு அப்பாற் பட்ட நிலையை . அஃது ஆகுபெயராய் , அந்நிலையையுடைய பொருளைக் குறித்தது . எல்லாவற்றினும் மேலாய நன்மையாகலின் , வீட்டினை ` நன்மை ` என்று அருளிச்செய்தார் . புனல் , காவிரியாற் றினது . இறைவன் - கடவுள் ; இங்கு , அருளுவாரது குறிப்பால் முழு முதற் கடவுள் என்னும் பொருளதாயிற்று . ` அடிசேர்ந்து பயன் பெறுதலேயன்றி ` எனப் பொருள்தந்து நிற்றலின் , ` எம்மையும் ` என்ற உம்மை , இறந்தது தழுவிய எச்சம் . ` ஆள் ` என்றது , முதனிலைத் தொழிற்பெயர் . ` மற்றுள பொருள்களும் எல்லாம் ` என்பதும் பாடம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

வங்கம் மேவிய வேலை
நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை
உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன்என் பார்கள்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

மரக்கலம் பொருந்திய கடலின்கண் நஞ்சு தோன்ற , தங்கள்மேல் வந்து தாக்காது தடுத்துக்கொள்ளுதற் பொருட்டுச் சூழ்ச்சிசெய்த தேவர்கள் ஒருங்கு கூடிச்சென்று ` இந் நஞ்சினை உண்டருளாய் ` என்று வேண்டிக்கொள்ள அவ்வேண்டுகோளை மறாது ஏற்று உண்டு , அதனால் , கறுத்த கண்டத்தை உடையவனாகியவனும் , வேதத்திற்கு உரிய துணை நூல்களைச் செய்தவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே எங்களுக்குத் தலைவன் ` என்று நாள்தோறும் அன்பு செய்கின்றவர் . எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

தாங்கள் இறவாமைப் பொருட்டு இறைவனுக்கு நஞ்சூட்டத் துணிந்தமைபற்றித் தேவரை , ` வஞ்சர்கள் ` என்றார் . ` அடராமைக்கு ` என , பொருட்டுப் பொருளதாகிய நான்காம் உருபு விரிக்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நீல வண்டறை கொன்றை
நேரிழை மங்கை ஓர்திங்கள்
சால வாள்அர வங்கள்
தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

நீல நிறத்தையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரும் , நுண்தொழில் அமைந்த அணிகளை அணிந்த மங்கை ஒருத்தியும் , பிறை ஒன்றும் , பல கொடிய பாம்புகளும் தங்கியிருக்கின்ற சிவந்த சடையையுடைய எம் தந்தையும் , ஆல் நிழலில் இருப்பவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள்தோறும் அவன் தம்மொடு பொருந்தும் செயலினைச் செய்ய வல்லவர் . எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` மங்கை ` என்றது கங்காதேவியை . ` ஆல நிழலுள் எழுந்தருளியிருக்கின்ற ` என்க . உள் , ஏழனுருபு . தம்மொடு பொருந்தும் செயலாவது , இடை விடாது நினைத்தல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

தந்தை தாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய் , ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும் , உண்மையான தவத்தைச் செய் வோர்க்கு உறவான பெருமானும் , அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய , அழகிய , குளிர்ந்த பூக்களையுடைய , நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே எம் தந்தை ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

உண்மைத் தவம் , சிவபிரானைப் பொதுநீக்கி வழி படுதல் . பந்தம் - தொடர்பு ; உறவு . ` தன்மை ` என்னும் பொருளதாகிய , ` பரிசு ` என்பது , இங்கு அன்பினைக் குறித்தது . ` அடிகள் ` என்பது , இங்கு , ` திரு ` என்னும் அடைபெற்று வந்தது .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

கணைசெந் தீஅர வம்நாண்
கல்வளை யுஞ்சிலை யாகத்
துணைசெ யும்மதில் மூன்றுஞ்
சுட்டவ னேயுல குய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

பொருந்திய உலகம் உய்தற்பொருட்டு , சிவந்த நெருப்பு அம்பாகியும் , பாம்பு நாணியாகியும் , மலை வளைகின்ற வில்லாகியும் நிற்க , ஒன்றற்கொன்று துணை செய்கின்ற மதில்கள் மூன்றையும் எரித்தவனாகிய , எங்கும் சென்று சேர்கின்ற அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள்தோறும் அவனது இரண்டு செவ்விய திருவடிக்கண் பணி கின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` துணைசெயும் ` என்றதற்கு , ` தமக்குத் தாமே நிகராகின்ற ` என்று உரைப்பினுமாம் . ` துணைசெய் மும்மதில் ` என்பது பாடம் அன்று . ஏய் உலகு - பொருந்திய உலகு ; என்றது , தேவருல கத்தை . இணை , இணைதல் என்னும் தன்மை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

விண்ணின் மாமதி சூடி
விலையிலி கலனணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை
பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

விண்ணில் உள்ள சிறந்த பிறையைக் கண்ணியாகச் சூடி , விலைப்படும் தன்மை இல்லாத அணிகலங்களை அணிகின்ற தூயவனும் , பண்ணினை ஒத்த சொல்லை உடைய மங்கையது பங்கை உடையவனும் , ஆனேற்றை விரும்பி ஏறுபவனும் , யாவர்க்கும் தலைவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல் வனை , நாள்தோறும் நினையுமாற்றினை வல்லவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையராவர் .

குறிப்புரை :

` விலையிலி கலன் ` என்றது , நகையை உள்ளுறுத் தருளியது . எனவே , ` என்பையும் , தலையையுமே அணிகலனாக அணிந்தவன் ` என்றவாறாயிற்று . இதற்குப் பிறவாறுரைப்பின் , ` மதிசூடி ` என்றதனோடு இயையாமை அறிக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

தார மாகிய பொன்னித்
தண்டுறை ஆடி விழுத்து
நீரில் நின்றடி போற்றி
நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்டஎம் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

சோழன் ஒருவன் , பல பண்டங்களும் உளவாதற்கு ஏதுவாகிய காவிரியின் குளிர்ந்த துறையில் மூழ்கித் தனது முத்து வடத்தை வீழ்த்தி , வீழ்த்திய வருத்தத்தால் கரைஏறாது நீரிற்றானே நின்று , தனது திருவடியைத் துதித்து , ` இறைவனே , எனது முத்து மாலையை ஏற்றுக்கொள் ` என்று வேண்ட , அங்ஙனமே அவ் வாரத்தைத் திருமஞ்சனக் குடத்துட் புகச்செய்து ஏற்றுக்கொண்ட , திரு வானைக்காவைத் தனதாக உடைய முதல்வனுக்கு நாள்தோறும் அன்பு உடையவராய் இருப்பவர் , நாள்தோறும் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

இத்திருப்பாடலிற் குறித்த வரலாற்றைச் சேக்கிழார் , வளவர் பெருமான் திருவாரம் சாத்திக்கொண்டு வரும்பொன்னிக் கிளரும் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற அளவில் திருமஞ் சனக்குடத்துள் அதுபுக் காட்ட அணிந்தருளித் தளரும் அவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார் . என இனிது விளங்க அருளிச் செய்தல் காண்க . ( தி .12 ஏ . கோ . பு .77) ` ஆதியை ` என்றதனை , ` ஆதிக்கு ` எனத் திரிக்க . ` ஈரம் உள்ளுவர் ` எனப் பாடம் ஓதி , ` ஈரத்தால் உள்ளுபவர் ` எனத் திரியாதே உரைத்தல் சிறக்கும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

உரவம் உள்ளதொர் உழையின்
உரிபுலி யதள்உடை யானை
விரைகொள் கொன்றையி னானை
விரிசடை மேற்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லியும் ஏத்து
வார்எம்மை ஆளுடை யாரே

பொழிப்புரை :

வலிமையுள்ள மானினது தோல் , புலியினது தோல் இவைகளை யுடையவனும் , நறுமணத்தைக் கொண்ட கொன்றைமலர் மாலையை அணிந்தவனும் , விரிந்த சடையின்மேல் பிறையை உடையவனும் , பாம்பை உடம்பிற் பல இடங்களில் கட்டியுள்ளவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள் தோறும் , இரவிலும் , பகலிலும் துதிப்பவர் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` உரம் ` என்பது , ` உரவம் ` என விரிக்கப்பட்டது . ஈண்டு , ` எம்மையும் ` என்னும் உம்மை தொகுத்தல் . இத்திருப்பாடலின் ஈற்றடிப் பாடம் , இவ்வாறாகாது , பெரிதும் பிழைபட்டமை காண்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வலங்கொள் வாரவர் தங்கள்
வல்வினை தீர்க்கு மருந்து
கலங்கக் காலனைக் காலாற்
காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

தன்னை வலம் செய்கின்றவர்களது வலிய வினையாகிய நோயைத் தீர்க்கின்ற மருந்தாய் உள்ளவனும் , கூற்று வனைக் காலாலும் , காமனைக் கண்ணாலும் அவர்கள் கலங்கி அழியு மாறு வெகுண்டவனும் ஆகிய , அசைகின்ற நீர் கரையை மோதுகின்ற திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள்தோறும் அவனது விளங்குகின்ற , செவ்விய திருவடியில் பணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` அவர் ` என்றது , பகுதிப்பொருள் விகுதி . ` தங்கள் ` என்றது சாரியை . ` வல்வினை தீர்க்கும் மருந்து ` என்றது , ஏகதேச உரு வகம் . `` கண் ` என்றவிடத்து , மூன்றாவது விரிக்க . சிவத்தல் - வெகுளு தல் . ` காலனைக் காலாலும் , காமனைக் கண்ணாலும் கலங்கச் சிவப் பானை ` என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

ஆழி யாற்கருள் ஆனைக்
காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக
நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன்
வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

சக்கரத்தை ஏந்தியவனாகிய திருமாலுக்கு அருள் புரிந்த , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனது பொன் போலும் திருவடி நிழலையே நினைந்து வாழ வல்ல வன்றொண் டனாகிய நம்பியாரூரனது வளவிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர் , எழுவகைப்பட்ட அளவில்லாத பிறப்புக்களும் நீங்கப் பெற்று , மேலே சென்று , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடைய வராவர் .

குறிப்புரை :

திருக்கடைக்காப்பில், `இத்திருப்பதிகத்தை நன்கு பாட வல்லவர்கள் எம்மையும் ஆளுடையார்` என்று அருளினார். அதனைப் பாடுதலே இறைவற்குத் தொண்டாய் நிற்றலின், அதனை யுடையவர் சிவபெருமானுக்கு அடியராகும் நிலையுடையவராவர் என்பதுபற்றி, `ஏழு மாபிறப்பும்` என்னும் முற்றும்மை தொகுத்த லாயிற்று.
சிற்பி