திருப்பருப்பதம்


பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

மானும்மரை இனமும்மயி
லினமுங்கலந் தெங்கும்
தாமேமிக மேய்ந்துதடஞ்
சுனைநீர்களைப் பருகிப்
பூமாமர முரிஞ்சிப்பொழி
லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழற்றுயில்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

மான்களின் கூட்டமும் , மரைகளின் கூட்டமும் , மயில்களின் கூட்டமும் எங்கும் பொருந்தித் தம்விருப்பப்படியே தமக்குரிய உணவுகளைத் தேடி உண்டு , பெரிய சுனைகளில் உள்ள நீரைக் குடித்து , பூத்த பெரிய மரங்களில் உராய்ந்து அவற்றின் செறி வூடே சென்று , தேமாமரச் சோலையின் நிழலில் உறங்குகின்ற , ` திருப் பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

` எங்கள் சிவபிரானது மலை ` என்பது சொல்லெச்சம் ; இஃது இத் திருப்பதிகத்தின் எல்லாத் திருப்பாடல்கட்கும் ஒக்கும் . உரிஞ்சுதல் , செறிவினால் , குறிப்பின்றியும் நிகழ்வது என்க . இத் திரு மலையை , திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும் , திருநாவுக்கரசு சுவாமிகளும் , ` பருப்பதம் ` என்றே குறித்தருளுதலாலும் , சேக்கிழார் நாயனார் , அவர்கள் அருளியவாறே வாளா கூறும் வழி , ` பருப்பதம் ` என்றும் ( தி .12 ஏ . கோ . புரா . 198.), அடைபுணர்த்துக் கூறும் வழி , ` திருப்பருப் பதம் ` என்றும் ( தி .12 திருநா . புரா . 348, தி .12 திருஞா . புரா . 1027). ` திருச்சிலம்பு ` ( தி .12 திருநா . புரா . 349.) என்றும் குறித்தருளுதலாலும் , ` திருப்பருப்பதம் ` என்பதே தமிழ் வழக்கு என்பதும் , சுவாமிகள் , வடமொழி வழக்காக , ` சீபர்ப்பதம் ` என அருளிச்செய்தார் என்பதும் பெறப்படும் . ` பர்வதம் ` என்னும் ஆரியச்சொல் , ` பர்ப்பதம் ` எனத் திரிந்து , ஆரியத்துள் முப்பதாம் மெய் ரகாரத்தோடு இணைந்து , ஈகாரத்தான் ஊரப்பட்டு , திரு என்னும் பொருள் தந்து நின்ற ஓரெழுத்தொரு மொழியின் திரிபாகிய , ` சீ ` என்பதனை , முதற்கண் ஏற்று நின்றது . ` சீ ` என்பது , ` பர்ப்பதம் ` என்பதனோடு ஒட்டி ஒரு சொல்லாய் நிற்றலின் , ` பர்ப்பதம் ` என்பதன்கண் உள்ள குற்றொற்றாகிய ரகர மெய்யின்மேல் உகரம் வாராதொழிதலும் பொருந்துவதாயிற்று . இவ்வாறே , ` சொரூப லக்கணம் , தடத்த லக்கணம் ` என்றாற் போலும் தொகைச் சொற்களுள் , லகர மெய் போல்வன , மொழி முதற்கண் வந்தனவாகாது , மொழியிடைக்கண் வந்தனவாகவே கொள்ளப்படுதல் காண்க . இம்மலை , ` சீசைலம் ` எனவும் வழங்கப் படும் . ` மானும் ` என்றது இன எதுகை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

மலைச்சாரலும் பொழிற்சாரலும்
புறமேவரும் இனங்கள்
மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட
மலங்கித்தம களிற்றை
அழைத்தோடியும் பிளிறீயவை
அலமந்துவந் தெய்த்துத்
திகைத்தோடித்தம் பிடிதேடிடுஞ்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

குறவர்கள் தங்கள் மலைப்பக்கங்கட்கும் சோலைப் பக்கங்கட்கும் அப்பாற்பட்ட இடங்களினின்றும் வருகின்ற யானை களைப் பற்றித் தங்கள் மலையிடத்துக் கொணர்ந்து பிணித்து வைத்து அவைகளைத் துன்புறுத்தி உணவை உண்பிக்க , அதனைக் கண்ட பெண் யானைகள் தமது ஆண் யானைகளும் அவர்களால் பற்றப் படுங்கொல் என மனங்கலங்கி அவைகளை அழைத்து ஓடவும் , அதனையறியாமல் அவ்வாண் யானைகள் தம் பெண் யானைகள் அவர்கள் கையகப்பட்டனகொல் என மருண்டு பிளிறுதலைச் செய்து , பல இடங்களில் திரிந்து அவைகளைக் காணாது இளைத்துவந்து , மீளவும் செய்வதறியாது திகைத்து அவைகளைத் தேடி ஓடுகின்ற , ` திருப் பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

` சாரல் ` என்பவற்றில் நான்கனுருபு விரிக்க . இனங் களாவன , யானை இனம் என்பது இடத்தால் விளங்கிற்று . ` குறவர்கள் ` என்பது , ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` தனகளிற்றை , தன்பிடி ` என்பன பாடம் அல்ல . ` பிடி ` எனப் பின்னர் வருகின்றமையின் , ` அழைத் தோடியும் ` என வாளா அருளினார் . ` அழைத்தோடி ` என்றதனை , ` அழைத் தோட ` எனத் திரிக்க , ` திகைத்து ` என்றது , உயிரெதுகை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

மன்னிப்புனங் காவல்மட
மொழியாள்புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்துகவைக்
கோலிக்கதிர் கொய்ய
என்னைக்கிளி மதியாதென
எடுத்துக்கவ ணொலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

தினைப் புனத்தின் காவலையுடைய இளமைச் சொற்களையுடைய குறமகள் அங்குத் தங்கி அப்புனத்தைக் காத்திருக்குங்கால் , இளம் பெண்போலும் கிளி வந்து , கிளைத்த தாளின்கண் உள்ள கதிர்களைக் கவர , அதனைக் கண்டு அவள் , ` இக் கிளி என்னை மதியாதுபோலும் ` என்று சினந்து , கவணை எடுத்து அதனாற் கல்லை , ஓசையுண்டாக வீச , அவ்வழகிய நல்ல கிளி , தன் எண்ணம் மாறி வெளியேறுகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

இளமைத் தன்மையை , மொழிமேல் வைத்துணர்த்திய வாறு , இளம்பெண்போறல் , அழகு முதலியவற்றால் விரும்பப் படுதல் . ` கோல் ` என்றது , தாளினை . எனவே , ` கோலி ` என்றது , ` தாளின்கண் உள்ளது ` என்றவாறாம் . ` ஒலிப்ப ` என்றது , தன் காரணந் தோற்றி நின்றது . ` கல்லை ` என்பது , ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . தென் - அழகு . பலவிடத்துப் பல பெண்டிர் செய்வனவற்றை , ஒருத்திமேல் வைத்து அருளியவாறு . இது , வருகின்ற திருப்பாடற்கும் ஒக்கும் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

மய்யார்தடங் கண்ணாள்மட
மொழியாள்புனங் காக்கச்
செவ்வேதிரிந் தாயோவெனப்
போகாவிட விளிந்து
கய்பாவிய கவணான்மணி
எறியஇரிந் தோடிச்
செவ்வாயன கிளிபாடிடுஞ்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

மை பொருந்திய பெரிய கண்களையுடையவளும் , இளமையான சொற்களையுடையவளும் ஆகிய குறமகள் தினைப் புனத்தைக் காத்தற் பொருட்டுப் பலவிடத்தும் நன்றாகத்திரிந்து , ` ஆயோ ` என்று சொல்லி ஓட்டவும் , போகாது விடுதலினாலே வருந்தி , கையிற் பொருந்திய கவணால் மணியாகிய கல்லை வீச , சிவந்த வாயினை யுடைய கிளி அஞ்சி ஓடி ஒலிக்கின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

விளிதல் - இறத்தல் ; அது , பெருந்துன்பம் எய்துதலைக் குறித்தது . பாடுதல் - ஒலித்தல் . குறமகள் , ` ஆயோ ` என்று பாடியதற்கு எதிராகக் கிளி தானும் பாடிடும் ` என்பது நயம் . இரண்டாவது , நான்காவது அடிகளில் இன எதுகை வந்தது . இதனானே , ` மையார் ` எனவும் , ` கைபாவிய ` எனவும் ஓதுதல் பொருந்தாமையறிக .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

ஆனைக்குலம் இரிந்தோடித்தன்
பிடிசூழலில் திரியத்
தானப்பிடி செவிதாழ்த்திட
அதற்குமிக இரங்கி
மானக்குற அடல்வேடர்கள்
இலையாற்கலை கோலித்
தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

ஆண் யானைகளின் கூட்டம் , தனது பெண் யானைகளின் கூட்டம் , சாரலிற் பல இடங்களிலும் சென்று திரிதலினால் அதனைக் காணாது , தேடி ஓட , சென்ற இடங்களில் அப்பெண் யானை களின் கூட்டமும் ஆண் யானைகளின் கூட்டத்தைக் காணாது அதன் குரலோசையைக் கேட்டற் பொருட்டுச் செவி தாழ்த்து நிற்க , அந் நிலைக்கு மிக இரங்கி , வீரத்தை உடைய குறவர்களாகிய , வெற்றி பொருந்திய வேடர்கள் , இலைகளால் கல்லை செய்து அமைத்து , அவைகளில் தேனைப் பிழிந்து வார்த்து , அப்பெண்யானைக் கூட்டத்திற்கு இனிதாக ஊட்டுகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

` தன் ` என்றது , குலத்தை யாதலின் , பால்வழுவின்மை யறிக . ` பிடி ` என்றன ஆகுபெயர் . தானம் - இடம் . ` அத் தானம் ` எனச் சுட்டு வருவிக்க . ` குறவர் ` என்பது சாதி குறித்தும் , ` வேடர் ` என்றது , தொழில் குறித்தும் நின்றமையின் , மிகையாகாமை யுணர்க . ` வேட்டம் செய்து கொலைபுரியும் அவர்க்கும் இரக்கம் தோற்றுவிப்பதாய் இருந்தது , அப் பெண்யானைகளின் நிலை ` என்ற படி . ` கலை `, இடைக்குறை . கல்லையை , இக்காலத்தார் , ` தொன்னை ` என்ப .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மாற்றுக்களி றடைந்தாய் என்று
மதவேழங்கை யெடுத்து
மூற்றித்தழ லுமிழ்ந்தும்மதம்
பொழிந்தும்முகஞ் சுழியத்
தூற்றத்தரிக் கில்லேனென்று
சொல்லிஅய லறியத்
தேற்றிச்சென்று பிடிசூளறுஞ்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

மதத்தை உடைய ஆண்யானை ஒன்று தன் பெண் யானையை , ` நீ மற்றோர் ஆண்யானையைச் சார்ந்தது என் ` என்று சொல்லிக் கையை உயர எடுத்துச் சினம் மிகுந்து , கண்களினின்றும் நெருப்புப் பொறியைச் சிதறி , மதநீரைப் பொழிந்து முகத்தைச் சுளிக்க , அதனைக் கண்ட பெண்யானை , ` நீர் இவ்வாறு அடாப் பழி சொல்லித் தூற்றின் உயிர் தரிக்கலாற்றேன் ` என்று , அயலறியத் தனது தவறின்மையைச் சூளறுத்துக் காட்டி அவ்வாண்யானையைத் தெளியப்பண்ணி அதனை அடைகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே எங்கள் சிவபெருமானது மலை .

குறிப்புரை :

` தவறிலதாகிய தனது பிடியைத் தவறுடையதாக நினைத்து வெகுண்டது , மதமயக்கத்தால் ` என்பார் , ` மத வேழம் ` என்று அருளினார் . கையை உயர்த்தியது , அடித்தற்கு . ` எனினும் . அடியாது பொறுத்து நின்று கேட்டது ` என்றற்கு , ` எடுத்து ` என்றே போயினார் . ` முற்றி ` என்பது , நீட்டல் பெற்றது . அதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது . ` சூழறும் ` என்பது பாடம் அன்று ` தேற்றிச் சென்று சூளறும் ` என்றதனை , ` சூளறுத்துத் தேற்றிச் செல்லும் ` என மாற்றி யுரைக்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

அப்போதுவந் துண்டீர்களுக்
கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டால்எமை
எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில்
என்றோடிஅக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

தினைப்புனத்தைக் காக்கின்ற , கிண்ணம் போலும் , உயர்ந்து தோன்றும் , இளமையான தனங்களையுடைய குறமகள் , தினையை உண்ண வந்த கிளிகளைப் பார்த்து , ` முன்னே வந்து தினையை உண்ட உங்களுக்கு இரங்கி , உங்களை அதட்டாது அப்போது வாளா இருந்தேன் ; ஆயினும் , நீவிர் இடையறாது வந்து தினையை உண்டால் எங்களை , எங்கள் உறவினர் வெகுள மாட்டார் களோ ? ஆதலின் இப்போது உமக்குச் செய்யத் தக்க செயல் இதுதான் ` என்று சொல்லி , அவைகளைக் கவணால் எறிகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபெருமானது மலை .

குறிப்புரை :

செய்யுளாகலின் , ` முன் ` என்ற பெயர் பின்னும் , ` அப்போது ` என்ற சுட்டுப் பெயர் முன்னும் வந்தன . ` உண்டீர் களுக்கு ` என்றது , அழையாமையாகிய தொழிலுக்கு உரிய , ` இன்ன தற்கு ` என்னும் முதனிலை . அழைத்தல் - கூப்பிடுதல் ; அதட்டுதல் . ` சுழியாரோ ` என்பதும் , ` இதுவோ தொழில் ` என்பதும் பாடங்கள் . ` அக் கிளி ` என்றதில் சுட்டு , ` அத்தன்மையை உடைய ` எனப் பொருள்தந்தது . தன்மை , எப்போதும் வந்து உண்ணுதல் . கவணால் என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

திரியும்புரம் நீறாக்கிய
செல்வன்றன கழலை
அரியதிரு மாலோடயன்
றானும்மவ ரறியார்
கரியின்னின மோடும்பிடி
தேனுண்டவை களித்துத்
திரிதந்தவை திகழ்வாற்பொலி
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

களிற்றியானைகளின் கூட்டத்தோடும் பிடியானை களின் கூட்டம் தேனை உண்டு , பின் , அவ் விருகூட்டங்களும் களித்துத் திரிதருகின்ற அழகு விளங்குதலால் பொலிவெய்திய திருப்பருப்பத மலையில் , வானத்தில் திரிகின்ற முப்புரங்களை நீறாகச் செய்த செல்வனாகிய சிவபெருமானது திருவடிகளை , ஏனையோர்க்கு அரிய திருமாலும் , பிரமனும் ஆகிய அவர்தாமும் காணமாட்டார் .

குறிப்புரை :

` அயன்றானும் ` என்றதில் தான் , அசைநிலை . உம்மை , சிறப்பு . ` அவர் ` என்றது ஒடுவெனெண்ணின் தொகைப் பொருட்டு . ` திரிதந்த ஐ ` எனப் பிரிக்க . அரி அயனும் இறைவன் திருவடியை அங்குக் காண மாட்டாமை , அம் மலையது சிறப்பால் சிவகணத்தவர் பலரும் நெருங்கி நிற்றலின் என்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

ஏனத்திரள் கிளைக்கஎரி
போலமணி சிதற
ஏனல்லவை மலைச்சாரலிற்
றிரியுங்கர டீயும்
மானும்மரை இனமும்மயில்
மற்றும்பல வெல்லாம்
தேனுண்பொழில் சோலைமிகு
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

மலைச் சாரலில் பன்றியின் கூட்டம் நிலத்தை உழ , அவ்விடத்தினின்றும் நெருப்புப் போல மாணிக்கங்கள் வெளிப்பட , அவற்றைக் கண்டு , தினைக்கூட்டத்தையுடைய மலைச்சாரலை விடுத்து ஓடிய கரடியும் , மானும் , மரைக் கூட்டமும் , மயிலும் , மற்றும் பலவும் ஆகிய எல்லாம் பின்பு தேனை உண்டு களிக்கின்ற பூஞ்சோலைகளும் , பிற சோலைகளும் மிகுந்திருக்கின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

` மணி சிதர்த்தி ` என்பதும் , ` தீயென்றவை ` என்பதும் பாடம் அல்ல . ` ஏனல்லவை ` என்றதில் லகர ஒற்று , விரித்தல் . அவை - கூட்டம் . ` இற்று இரியும் ` எனப் பிரிக்க , இறுதல் , இங்கு விடுதல் . பன்றிகள் நிலத்தைக் கிளைத்ததனால் வெளிப்பட்ட மணியைத் தீயென்று அஞ்சித் தினையை உண்ணாது நீங்கியன பலவும் பின் தேனை உண்டன ; பன்றிகள் அது மாட்டாது நின்றன என்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

நல்லாரவர் பலர்வாழ்தரு
வயல்நாவல வூரன்
செல்லலுற வரியசிவன்
சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன
தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைசெல வுயர்வானகம்
ஆண்டங்கிருப் பாரே

பொழிப்புரை :

துன்பம் உறுதல் இல்லாத சிவபெருமானது திருப் பருப்பத மலையை , நல்லவர் பலர் வாழ்வதும் , வயல்களையுடையது மான திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , யாவரது துன்பமும் தீருமாறு பாடிய இத்தமிழ்ப் பாமாலைகளைப் பாட வல்லவர்கள் , சிறிது காலம் செல்லும் அளவிலே உயர்ந்த விண்ணுலகத்தை ஆண்டு அங்கு இருப்பர் .

குறிப்புரை :

` நாவல ` என்ற அகரம் சாரியை . இன்பமே வடிவமான வன் என்பதனை , ` செல்லல் உற அரிய ` என்று அருளினார் . உயர் வானகம் - சிவலோகம் .
சிற்பி