திருக்கேதீச்சரம்


பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

நத்தார்படை ஞானன்பசு
வேறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானையுரி
போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

விரும்புதல் பொருந்திய பூதப் படைகளையுடைய ஞான உருவினனும் , இடபத்தை ஏறுகின்றவனும் , நனைய ஒழுகுகின்ற இடங்களில் மயக்கத்தைத் தரும் மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்த மணவாளக் கோலத்தினனும் ஆகிய , திருக்கேதீச் சரத்தில் எழுந்தருளிய பெருமான் , அன்பர்களாகிய அடியவர்கள் வணங்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல் , இறந்தவர்களது எலும்பை அணிபவனாகக் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` நத்தார் படை ` என்றதனை , ` நத்தார் புடை ` என ஓதி , ` சங்கினை ஏந்திய திருமாலை ஒரு பாகத்தில் உடைய ` என்று உரைப் பாரும் உளர் . ` நனைய ` என்பதன் இறுதிநிலை எஞ்சி நின்றது , ` செய் தக்க ` என்றாற்போல ( குறள் -466.) ` போர்த்த ` என்ற பெயரெச்சம் , ` மணவாளன் ` என்றதன் இறுதிநிலையொடு முடிந்தது . ` மழுவாளன் என்பதும் பாடம் . ` பற்று ` என்பது , எதுகை நோக்கி , ` பத்து ` எனத் திரிந்து நின்றது . ` அணிவான் ` என்பது , ` அணிபவனாகின்றான் ` என ஆக்க வினைக்குறிப்பாயிற்று . நிகழ்காலம் , முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கையைக் குறித்தது . வருகின்ற திருப்பாடல்களிலும் இவ்வாறே கொள்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும் , நல்ல பிளவாகிய பிறையையும் , கீளினையும் , மதம் நிறைந்த மயக்கத்தையுடைய , யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் , பாலாவி யாற்றின் கரைமேல் , பாம்பு போலும் இடை யினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` பிறை , உரி ` என்றவற்றின் பின்னும் எண்ணும்மை விரிக்க . ` படம் `, ஆகுபெயர் . இடைக்கு , பாம்பையும் உவமை கூறுதல் மரபாதல் அறிக .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

அங்கம்மொழி யன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

பிளவு செய்த பிறையைச் சூடினவனாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையையுடைய அந்தணர்களும் , தேவர்களும் வணங்கித் துதிக்க , மரக்கலம் நிறைந்த கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல் , சினத்தாற் சிவந்த கண்ணையுடைய பாம்பைக் கட்டி யுள்ளவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` பங்கு ` என்பது , ` பங்கம் ` என வந்தது . இனி , ` பங்கம் - குறை ` எனலுமாம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

கரியகறைக் கண்டன்நல
கண்மேல்ஒரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருள்
பரியதிரை யெறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

கருமையாகிய , நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும் , நல்ல இருகண்கள்மேலும் மற்றொரு கண்ணை யுடையவனும் ஆகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , கீற்றுக்களையுடைய சிறகுகளையுடைய வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் , பருத்த அலைகளை வீசிக்கொண்டு வருகின்ற பாலாவி யாற்றின் கரைமேல் , ஆராயத்தக்க வேதங்களை வல்லவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

ஞாயிறும் , திங்களும் உலகினைப் புரப்பனவாகலின் , அவைகட்கு அமைந்த கண்களை , ` நல்ல கண் ` என்று அருளினார் . தீக்கு அமைந்த நெற்றிக்கண் , உலகினை அழிப்பதாதல் அறிக . ` மேலும் ` என்னும் சிறப்பும்மை , தொகுத்தலாயிற்று . ` யாழ் `, ஆகுபெயர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

அங்கத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

தன் அடியார்கள் மேலனவாய் , அவர்களது உடம்பிற் பொருந்துகின்ற நோய்களை முற்றக் களைந்தருள்பவனாகிய சிவபெருமான் , மரக்கலங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் , தனது திருமேனியின் ஒரு கூற்றை அழகு செய்கின்ற மங்கை ஒருத்தியுடன் , பாலாவி யாற்றின் கரைமேல் , தென்னஞ் சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப் பவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` அடியார்மேல் அங்கத்துறு ` என்றதனை , ` மாடத்தின் கண் நிலாமுற்றத்திருந்தான் ` என்பதுபோலக் கொள்க . உயிரின்கண் உறும் நோயை ஒழித்தலையன்றி , ` ஈண்டு , உடற்கண் உறும் நோயை ஒழித்தலை விதந்தோதியருளினார் ` என்க . ஒற்றுமை பற்றி , உடல் , உயிர்க்கு உறுப்பாய் நிற்குமாறு உணர்க . ` அருளி ` என்றது பெயர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

வெய்யவினை யாயவ்வடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தன் அடியவர்மேல் உள்ள கொடிய வினைகளாய் உள்ளன வற்றை முற்ற ஒழித்துநின்று , நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ நிற்கின்ற , கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நகரத்தில் , பாம்பு போலும் இடையினை உடையவளாகிய ஒருத்தியோடு , பாலாவி யாற்றின் கரைமேல் , சிவந்த சடைமுடியை உடையவனாய்க் காணப் படுகின்றான் .

குறிப்புரை :

` ஒழித்தருளி ` என்ற வினையெச்சம் , ` சடைமுடியான் ` என்னும் வினைக்குறிப்பிற்கு அடையாய் நின்றது . ` மலிகின்ற ` என்ற பெயரெச்சம் , ` நகர் ` என்ற ஏதுப் பெயர்கொண்டது . ` பை `, ஆகு பெயர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

ஊனத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரில்
பானத்துறு மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தன் அடியார்கள் மேலனவாய் , உடம்பிற் பொருந்தும் நோய்களை முற்ற ஒழித்துநின்று , அலைகளால் வானத்தைப் பொருந்து கின்ற , நீர் நிறைந்த கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் , பாலும் விரும்பத்தக்க மொழியை யுடையவளாகிய ஒருத்தி யோடு , பாலாவி யாற்றின் கரைமேல் , பன்றியின் கொம்பை அணிந் தவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

உடம்பினைக் குறிக்க வந்த , ` ஊன் ` என்பது , அத்துப் பெற்றது . ` அலைகளால் ` என்பதும் , ` நீர் ` என்பதும் ஆற்றலால் வந்தன . ` வானத்து ` என்றதனை , ` வால் நத்து ` எனப்பிரித்து , ` வெள்ளிய சங்குகள் பொருந்திய ` என்று உரைத்தலும் ஆம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

அட்ட மூர்த்தமாய் நிற்பவனாகிய . திருக்கேதீச் சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தனது அரையில் பாம்பினை அழகாகக் கட்டிக்கொண்டு , வண்டுகள் தேனை உண்டு ஆர வாரிக்கின்ற சோலைகளையுடைய ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத் தில் , பட்டத்தை யணிந்த அழகிய நெற்றியை உடைய ஒருத்தியோடு , பாலாவி யாற்றின் கரைமேல் , மேலானவனாயும் , நம்மை ஆளுபவனா யும் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` அரைதன்மேல் ` என்றதில் தன் , சாரியை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்எனை ஆள்வான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , மாமரங்களின் கனிகள் தாழத் தூங்குகின்ற சோலைகளையுடைய , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் பாவத்தையும் , இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் பலகாலும் வந்து மூழ்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல் , மூவராகியும் , இருவராகியும் , முதற்கடவுளாகியும் நின்று , என்னை ஆள்பவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` தாழ ` என்பது , இசையெச்சம் . தாழத் தூங்குதல் , பெரிதாய் , நிரம்ப இருத்தலின் என்க . பாவத்தை அறுக்க விரும்புவோர் உலகரும் , இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் அருளாளரு மாவர் . ` தேவன் ` என்றதன் பின்னும் , ` என ` என்பது விரிக்க . ` எனை ஆள்வான் ` என்றது , ` உயிர்களை ஆட்கொள்பவன் ` என்னும் திரு வுள்ளத்தது . எனவே , ` மூவரென ` என்றது முதலிய மூன்றும் , இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறையை அருளியவாறாம் . ` மூவர் ` என்றது . அதிகார நிலை , ` அயன் , மால் , உருத்திரன் ` என மூன் றென்பாரது கருத்துப்பற்றியும் , ` இருவர் ` என்றது , அஃது , ` அயன் , மால் ` என இரண்டே என்பாரது கருத்துப்பற்றியுமாம் . ` தேவன் ` என்றது . அதிகார நிலைக்கு மேற்பட்ட போக நிலையையும் , உண்மை நிலையையும் குறித்தவாறாயிற்று . இங்ஙனம் , அவரவர் கருத்துப்பற்றி இறைவன் பல்வேறு நிலையினனாய் நின்று ஆட்கொள்ளுதலை . ` நானாவித உருவாய் நமைஆள்வான் ` ( தி .1 ப .9 பா .5.) என்று ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார் . அவ்விடத்தும் , ` நமை ` என்றது உயிர்கள் பலவற்றையும் குறித்து நிற்றல் அறிக .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

கரையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே

பொழிப்புரை :

கறுப்பு நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த , கழியை யுடைய . ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தின்கண் உள்ள , சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழிசைபோலும் இசையை உண்டாக்குகின்ற சோலைகளையுடைய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது அடிக்குத் தொண்டனாகி , வேதத்தைச் சொல்லுகின்ற , புகழையுடைய நம்பியாரூரன் பாடிய , குறைதல் இல்லாத இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட , கொடியனவாகிய வினைகள் வந்து பொருந்தமாட்டா .

குறிப்புரை :

`பொழில்` என்றதனை, `செயும்` என்றதன் பின் கூட்டியுரைக்க. `மறை` என்றது, வேதத்தையும், திருப்பதிகத்தையும் எனவும், `ஆர்க்கும்` என்றது, ஓதுதலையும், அருளிச்செய்தலையும் எனவும் இவ்விரு பொருள் கொள்க. குறையாமை, புகழினுடையது. அது, மிகுவதனைக் குறிப்பதாம்.
சிற்பி