கோயில்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ
வாழு நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங்
கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின்கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும் , உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து , தனது இச்சைவழி நடாத்தி , பின்பு நீ முன்செய்த பாவத்தின்பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய , கையில் தமருகத்தையும் , நெருப்பு எரிகின்ற தகழியையும் , சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற , பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம் பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

இத்திருப்பாடலுள் , சுவாமிகள் , தம்மைத் தடுத்தாட் கொண்ட அநுபவத்தையே அருளினமை காண்க . ` மடித்தாடும் ` என்ற பெயரெச்சம் , ` அடிமை ` என்றதன் முதனிலையோடு முடிந்தது . அடிமை - அடிக்குரிய தன்மை ; ` வாழும் ` எனப் பின்னர் வருதலின் , முன்னர் , ` அன்றியே ` என்றது , ` வாழ்தலன்றியே ` என்றதாயிற்று . அவ்வேகாரம் , தேற்றம் . அதனால் , ` மடித்தாடும் அடிமைக்கண் வாழ்தலே செயற்பாலது ` என்பது விளங்கிற்று . ` அடிமை ` என்பதில் மை , பகுதிப்பொருள் விகுதி , எனவும் , ` அன்றி - பகைத்து ` எனவும் உரைப்பாரும் உளர் . ` அடிமைக்கள் `, ` அடிமக்கள் ` என்பனவும் பாடம் . ` நாளும் ` என்ற உம்மை , இழிவு சிறப்பு . ` செக்கிலிடுதல் ` என்றது , ஒறுத்தலைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றது . வருகின்ற திருப் பாடல்களோடு ஒப்ப , ` செக்கிலிடும்போது ` என வாளா அருளினாரா யினும் , அவ்விடத்து எச்ச உம்மை விரித்தல் திருவுள்ளம் என்பது , ஈரிடத்தும் , ` தடுத்து ` என அருளியதனான் விளங்கும் . ` ஆட்கொள் வான் ` என்றது , ` அருள்செய்வான் ` என்னும் பொருளது ; ` கடுத்தாடும் பாம்பு ` எனக் கூட்டுக . ` ஆடி ` என்றது பெயர் . ஆயினும் , இயைபு நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` அன்றே ` என்றது , தேற்றம் . ` இனி நாம் பெற வேண்டுவது யாது ` என்பது குறிப்பெச்சம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பேராது காமத்திற் சென்றார்போ லன்றியே
பிரியா துள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந்
திருவி னாரை
ஓராது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , சாங்காறும் , நீங்காது உலக இன்பத்தில் சென்றவர்போலவன்றி , புகழ் நிறைந்த அன்பையுடையவர்களாய் , தன்னை இடைவிடாது நினைத்து , திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை , அவரது நிலையை அறியாமல் , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய , பெருமையுடையவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

மேலைத் திருப்பாடலில் உள்ள ` மனனே ` என்பது , ஏனைய பாடல்களினும் ஏற்ற பெற்றியிற்சென்று இயையும் . ` சாங்காறும் ` என்பது , இசையெச்சம் . ` சென்றாற்போல் ` என்பது பாடம் அன்று . திரு - திருவருள் . ` பேராளர் ` என்றது தில்லை வாழந்தணரை . இனி , ` பெரியோர்கள் , பெருமையார் ` என அருளுவனவும் அவரை யேயாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து
நாளும் உள்கித்
திரியாத அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுஞ்
சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் [ பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நரியினது வஞ்சனைபோலும் வஞ்சனை யினால் இரண்டுபட்ட தன்மையின் நீங்கி , நாள்தோறும் தன்னை நினைத்து , மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன்சென்று , தனது திருவடியில் வீழ்ந்து வணங்குங் கருத்துடையவரை , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய , பெரியோர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

நரியினது கள்ளம் , அதனோடு ஒரு தன்மைத்தாய கள்ளத்தைக் குறித்தது . அஃதாவது எஞ்ஞான்றும் பயன்கருதியன்றி அடையாமை . ` பிரியாத அன்பராய் ` என்னும் பாடம் சிறவாமை யறிக . ` சிந்தை ` என்றது , கொள்கையை .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட்
டறுப்பிப் பானை
அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங்
காவல் பூண்ட
உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை
மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவராயின் , அக் கட்டினை அறுத்தெறிபவனும் , நமக்கு , பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும் , பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற் கொண்ட இயைபினால் , அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய , பெருமை யுடையவர்களது பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

கருமை பொருந்துதல் , தருமனார் , தமர் ஆகிய இருவர்க்கும் கொள்க . ` கருமையால் ` என்பதும் பாடம் . ` கட்டுவ ராயின் ` என்பதும் , ` நன்னெறியில் வைத்து ` என்பதும் ஆற்றலான் வந்தன . ` கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கும் அடியேன் ` ( தி .7 ப .39 பா .9) எனச் சுவாமிகள் , திருத்தொண்டத்தொகையுள் அருளிச்செய்தமை யின் , ஈண்டு , ` பல்லவன் ` என்றது , அந்நாயனாரையே என்பர் . இதனாலும் ` பல்லவர்க்கு ` என்பது பாடமாகாமை யறிக . ` பல்லவர்க்கும் ` என உம்மையோடும் ஓதுவாரும் உளர் . ` உரிமையால் மறுக்கம் செய்யும் ` எனவும் , ` செய்யும் பெருமான் ` எனவும் இயையும் . இதனால் , உலகத்தை நன்னெறிக்கண் வைத்து ஆளும் அரசர்க்கு இறைவன் துணைசெய்தல் அருளப்பட்டவாறு அறிக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் [ வெண்மதியக்
கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்துகந்
துலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , யானையினது தோலைப் போர்வையாக உடைய , சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச் சூடினவனும் , இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து , அவனால் வெருட்டப் பட்ட சிறுவனுக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும் , நம்மை , அக்கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய , பெருமை நீங்காதவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

` உலவா இன்பம் பெற்றவர் மார்க்கண்டேயர் ` என்பது , வரலாற்றால் இனிது விளங்கிக்கிடப்பது . ` நம்மை ` என்பது , மேலைத் திருப்பாடல்களது இயைபினால் விளங்கிற்று . ` அத்தருமனார் ` எனச் சுட்டு வருவிக்க . நம்மைக் கூற்றுவன் ஏவலரிடமிருந்து மீட்டுக் காத்தல் திண்ணம் என்பது போதர , மார்க்கண்டேய முனிவரது வரலாற்றை எடுத்துக்காட்டியருளினார் . ` பெருமை ஆனார் ` என்பதில் ஐகாரம் தொகுத்தல் . ஆனாமை - நீங்காமை . ` ஆனார் ` என , பண்பின் தொழில் , பண்பின்மேல் நின்றது . இத்திருப்பாடலின் இரண்டாமடியின் நான்காஞ்சீர் , விளமாயிற்று . ` உதைத்துகந்து ` என , ஒற்றளபெடை கொள்ளினுமாம் . ` உதைத்துகந்து வுலவா ` எனவும் ஓதுவர் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய்
ஊன்க ணோட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே
நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி
பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , படம் எடுத்து ஆடும் பாம்பையும் , விரிந்த சடையையும் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும் , பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோ மன்றே ; இனி நாம் பெற வேண்டுவது யாது ! இதனால் , நமக்கு எதனா லும் குறைவில்லாத வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர் ; ஆதலின் , மனமே , இனி நீ , உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது , அதனை முற்றிலும் ஒழி .

குறிப்புரை :

` கண்டாய் ` முன்னிலை அசை . ` எதனாலும் என்பது , ` எத்தாலும் ` என மருவிற்று . ` நம்மை நாளும் குறைவில்லை என்பர் ` என மேலே கூட்டுக . ` என்பர் ` என்றது , ` என்று புகழ்வர் ` எனப் பொருள் தந்தது . முன்னைப் பழக்கத்தை அறவே ஒழித்தலை வற்புறுத்துவார் , மறித்தும் , ` உள்ளமே ` என விளித்தார் . அதனானே , ` ஒழிந்திலையேல் கெடுவை ` என வருவதுணர்த்தலும் பெறப்பட்டது . ` பித்தோடு ஆடி ` என , ஒடு உருபு விரிக்க . பேரருள் பித்துப் போறலின் , ` பித்து ` எனப்படும் . ` ஆடி ` என்றது பெயர் . ` உய்த்தாட்டி ` என்பதும் பாடம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கும்
மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும்
வினையும் போக
விட்டானை மலைஎடுத்த இராவணனைத் தலைபத்தும்
நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , ` தப்பாத , முப்போதும் செய்யும் வழி பாட்டினையுடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே ` என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும் , அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது , பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும் , தனது மலையை எடுத்த இராவணனை , அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச் சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே , இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

` முச்சந்தி ` அடையடுத்த ஆகுபெயர் . ` மூன்று பொழுதும் தவறாது வழிபடும் அந்தணர் மூவாயிரவர்க்கு , வழிபடப் படும் மூர்த்தி ஒருவனேயாதல் வியப்பு ` என்பது நயம் . ` தில்லை மூவாயிரவர் , பிறிதொரு கடவுளை நோக்கார் ` என்பது , உண்மைப் பொருள் . ` பாவமும் ` என முன்னர் வந்தமையின் , ` வினையும் ` என்றது , புண்ணியத்தையாயிற்று . ` விட்டான் ` என்றது , ` விடுவித் தான் ` என்னும் பொருளது . ஊன்றியது சிறிதாகலின் , ` தொட்டான் ` என்றார் . தொடுதல் - தீண்டுதல் . ` நெரியத்தான் ஊன்றா முன்னம் நிற்கிலா தலறி வீழ்ந்தான் மரியத்தான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே ` ( தி .4 ப .47 பா .9) என்று அருளிச்செய்தார் , நாவரசரும் . இத்திருப்பாடலின் முதலடியின் மூன்றாம் சீர் , தேமாவாயிற்று . ` மூவாஅ யிரவர்க்கும் ` என , உயிரள பெடை கொள்ளினுமாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா
கருத கிற்றார்க்
கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே
நம்மை நாளுஞ்
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , கல்லும் தன் தன்மை மாறி உருகும்படி , தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு , எத்தன்மைத்தாய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர் ; அவ்வகையில் நாம் , நம்மை , கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் செக்கிலிட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற , விடையேறுபவனாகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம் பெரு மானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

` கற்றானும் ` என்றதில் தான் , அசைநிலை ; உம்மை இழிவு சிறப்பு . ` அன்றியேகுழையுமாறு ` எனக் கூட்டுக . ஏகாரம் , தேற்றம் . ` கருத கிற்றார் ` என்பது , இறந்தகால வினைப்பெயர் . ` ஆட்டி ` என்றது , ` ஆட்டக் கருதி ` எனப் பொருள் தந்தது . ` பெற்றம் ` என்பது ஈறு குறைந்தது .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே
நம்மை நாளும்
தாடுடைய தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும்
மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நம்மை , தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் , முடைநாற்றத்தையுடைய சமணர்கட்கும் , வயிற்றையுடைய சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை யுடையவனும் ஆகிய , பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டியது யாது ! அதனால் , உயர்ந்தோரால் விரும்பப்படுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொண்டினைச் செய் .

குறிப்புரை :

` நாடு ` என்ற முதனிலைத் தொழிற்பெயர் , செயப் பாட்டு வினைக்கண் வந்தது . ` தாடு - தலைமை ` என்பது தமிழ்ப் பேரகராதி . ` மோடுடைய சாக்கியர் , முடையுடைய சமணர் ` என மொழி மாற்றுப் பொருள்கோள் வந்தது . சமணர் நீராடாமையையும் , சாக்கியர் ஊன் உண்ணுதலையும் அறிக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன்
பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில்
அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய ` உமை ` என்னும் நங்கையது பாகத்தையுடையவனும் , பசிய கண்களையுடைய இடபத்தை யுடைய வனும் , ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள் பவனும் , நம்பியாரூரனுக்குத் தலைவனும் , திருவாரூரை உடையவனும் , மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில் , அழகிய காஞ்சிநதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

சிவபெருமானது திருக்கோயில் இல்லாத ஊர் ஊரன்று; ஆதலின், அப்பெருமானை, `ஊரூரன்` என்று அருளினார். கொங்கு நாட்டில் காஞ்சிநதிக் கரையில் உள்ள, `பேரூர்` என்னும் வைப்புத் தலத்தில் கூத்தப் பெருமான் சிறந்து விளங்குதலும், அதனால் அது, `மேலைச் சிதம்பரம்` என வழங்கப்படுதலும் உண்மையின், சுவாமிகள் அங்குக்கண்ட காட்சியை நினைந்து, இத்தில்லைச் சிற்றம்பலத் திருப்பதிகத்துள் சிறப்பித்து அருளிச் செய்தார் என்க.
சிற்பி