திருவாரூர்


பண் :செந்துருத்தி

பாடல் எண் : 1

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே , உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே , உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி , அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள் , தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது , மூண்டெரி யாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல , மனத்தினுள்ளே வெதும்பி , தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறியநின்று . பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது , அதனை , உம்பால் வந்து வாய்திறந்து சொல்வார்களாயின் , நீர் அதனைக் கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர் ; இஃதே நும் இயல்பாயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

இடையில் வருவித்துரைத்தனவெல்லாம் இசையெச்சங் கள் . அடியார்களது அடிமைத் தன்மையை வகுத்தருளிச் செய்தது , அவர்க்கு அருள்செய்தல் , இறைவர்க்கு இன்றியமையாக் கடனாதலை வலியுறுத்தற்கு . அல்லலை வெளியிற்சொல்லி முறையிடுதல் , தீ , சுடர் விட்டு எரிவது போலும் ஆகலின் , வெளியிடாது நெஞ்சொடு நோத லுக்கு அவ்வாறு எரியாது கனலும் தீ உவமையாயிற்று . கனலுதல் , பொதுத்தன்மையாம் . ` வாடுதல் ` என்றது , வாட்டத்தினைப் புலப்படுத்துதலை . ` ஆளாய் இருக்கும் அடியார் ` என்றதனை , ` வேண்டாதே ` என்றதன்பின்னர்க் கூட்டுக . ` வாளாஆங்கு ` என்பது குறைந்து நின்றது . ஆங்கு , அசைநிலை . ` வாழ்ந்துபோதீர் ` என்றதில் , போதல் , துணை வினை . ` நீரே வாழ்வீராக ` என்றது , ` அடியவர் கெடினும் கெடுக ; நீர் கேடின்றி வாழ்மின் ` என்றதாம் . எனவே , இது , அடியவரது கேட்டின் துணிவுபற்றி அவர் வாழ்வின்கண் எழுந்த வருத்தத்தால் , வந்தது என்பது விளங்கும் . நொந்து அருளுகின்றார் ஆதலின் , ` அடியார் ` என , தம்மையே பிறர்போல அருளிச் செய்தார் என்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 2

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை
கொத்தை யாக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

அடிகளே , நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில் , யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழி யொன் றில்லை ; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

நம்பியாரூரர் செய்தது குற்றமாகாமை . ` பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் ` ( தி .7 ப .89 பா .1) என்றவிடத்து விளக்கப்பட்டது . அதனானே , இங்கு , ` குற்றம் ஒன்றும் செய்ததில்லை ` என்று அருளினார் . ` நீரே பழிப்பட்டீர் ` என்றதன் காரணமும் , அவ்விடத்தே , ` பழியதனைப் பாராதே ` என்றதன் விளக்கத்துட் காண்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 3

அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூ ரகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற , சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே , கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல , நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள் , பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது , குன்றின்மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

` உமது பண்டமாற்றுச் செயலிலும் நில்லாது , கொள்வ தன்றிக் கொடுக்கின்றிலீர் ` என்றவாறு . ` காலியின்கண் ` என ஏழனுருபு விரிக்க . ` அவை ` என்றது சுட்டுப்பெயர் . ` பாடும் ` என்றது , ` பாடிப் பயன்பெறும் ` எனப் பொருள்தந்தது . ஈண்டும் , ` அடியார் ` என , தம்மையே பிறர்போல அருளினமை காண்க . ` காணாது ` என , சினை வினை முதல்மேல் நின்றது .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 4

துருத்தி யுறைவீர் பழனம் பதியாச்
சோற்றுத் துறையாள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
மனமே யெனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமைப் பணித்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே , நீர் இன்னும் , ` திருத்துருத்தி , திருப்பழனம் ` என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர் ; திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர் ; ஆதலின் , உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா ; அதனால் உம்பால் அன்புமிக்க அடியார்கள் , தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால் , நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து , மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

` உறைவீர் ` என்றதனை , ` பதியா ` என்றதன் பின்னர்க்கூட்டுக . பணித்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 5

செந்தண் பவளந் திகழுஞ் சோலை
இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே யாமா
றுமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் மடியார்
தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ என்றால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

எங்கள் தலைவரே , இது , செவ்விய தண்ணிய பவளம்போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையை யுடைய திருவாரூர் தானோ ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன் ; உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் , இதுதானோ ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள் , தங்கள் கண் காணப்பெறாது , உம்பால் வந்து , ` எம் பெருமானே , முறையோ ` என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

` பவளம் `, உவமையாகுபெயர் , ` இந்திரகோபம் ` என்பது ஒருவகைவண்டு . ` இதுவே ` என்ற ஏகாரம் , வினா , ` ஆறு ` என்பது , ` பயன் ` எனப் பொருள்தந்தது , ` அறத்தாறிது வென வேண்டா ` ( குறள் -37.) என்பதிற்போல , ` பலவற்றாலும் ` என மூன்ற னுருபு விரிக்க . ` பலவற்றையும் உம்மேல் பாடும் ` எனினுமாம் . ` என்றால் ` என்றது , ` என்னா நின்றால் ` என்னும் பொருளது .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 6

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
சேருந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்
புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திரளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற , முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த , திரிக்கப்பட்ட புல்லிய சடையை யுடையவரே , உம் அடியவர் , தாம் பொருளில்லாமையால் இன்றி , தங்கள் கண் காணப்பெறாது வருந்தி , மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதானால் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

` தினைத்தாளன்ன ` என்னும் உவமையது மரபினை , ` தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும் குருகு முண்டுதாம் மணந்த ஞான்றே ` - குறுந்கொகை , 25 என்பதனான் அறிக . ` புனம் ` என்றது , முல்லை நிலத்தை , ` பொன் `, ஆகுபெயர் . ` பொருளின்மையால் வருந்தினும் பெரிதன்று ; கண்ணின்மையால் வருந்துதலைத் தீர்க்க வேண்டாவோ ?` என்றவாறு . ` தாம் ` இரண்டனுள் , பின்னையது அசைநிலை .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 7

ஆயம் பேடை அடையுஞ் சோலை
ஆரூ ரகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா
றுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

ஆண் பறவைக் கூட்டம் , பெண்பறவைக் கூட்டத் துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளி யிருக்கின்றவரே , எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே , உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து , பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி , அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி , உடம்பைக் கொடுத்து , இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

` பேடை ` என்றதனால் , ` ஆண்பறவை ` என்பது பெறப் பட்டது ; அவற்றை , ` ஆயம் ` என்றதனால் , ` பேடை ` என்றதும் அன்னதாயிற்று . மறவாமனம் காட்டியது , திருக்கயிலையில் அணுக்கத் தொண்டராகச் செய்தது எனவும் , மாயங்காட்டியது , மாதர்மேல் மனம் போக்கச் செய்தது எனவும் கொள்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 8

கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
இகழா தேத்துவோம்
பழிதா னாவ தறியீர் அடிகேள்
பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

அடிகளே , யாங்கள் இழிவில்லாத உயர்குலத்திலே பிறந்தோம் ; அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி , நீர் , கழியும் , கடலும் , மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம் ; அவ்வாறாகலின் , எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர் ; அதனால் , உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள் , வழியைக் காண மாட்டாது அலைந்து வாழ்வதாயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

கலந்த சொல் - கலந்ததாகிய பொருளைச் சொல்லும் சொல் , எனவே , சொல்லொடு பொருட்கு உள்ள ஒற்றுமை கருதி , ` கலந்த சொல் ` என அருளியவாறாம் . சொல்லைஉடைய தம்மை , ` சொல் ` என்றது , ஆகுபெயர் , ` கழிந்த சொல்லாகி ` என்பதும் பாடம் . ` உயர்குலம் ` என்றது , ஆதி சைவ குலத்தை , தமக்கு வந்த துன்பத்தைத் தம்மைப் போலும் அடியார் பலர்க்கும் வந்ததாக வைத்து அருளிச்செய்தார் என்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 9

பேயோ டேனும் பிரிவொன் றின்னா
தென்பர் பிறரெல்லாம்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே , விரும்பப்பட்டது காயே எனினும் , விரும்பிக் கைக் கொண்டால் , அது கனியோடொப்பதேயன்றோ ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம் , பேயோடு நட்புச்செய்யினும் , பிரிவு ` என்ப தொன்று துன்பந்தருவதே என்று சொல்லி , அதனைப்பிரிய ஒருப் படார் , ஆனால் , நீரோ , உமது திருவோலக்கத்தின் நடுவே நாய்போல முறையிட்டுத் திரிந்தாலும் , உமக்கு ஆட்பட்டவர்கட்கு , வாய்திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர் ; இதுவே உமது நட்புத் தன்மையாயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

` வேண்டிற்று ` என்பது , குறைந்து நின்றது . ` வேண்டிற்றுக் காய்தான் ` என மாற்றி , அதன்பின் , ` எனினும் ` என்பது வருவிக்க . ` நடுவே ` என்றது . ` உம் கண்முன்னே என்றவாறு . ` இரக்க மில்லாதோரும் பிறர் துன்புறுவதனைக் கண்முன் காணின் , இரக்கம் உடையவராவர் ; நீர் அதுதானும் இல்லீர் ` என்றபடி .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 10

செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லட்டா னம்மே
இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை
இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே , இது , செருந்தி மரங்கள் , தமது மலர்களாகிய செம் பொன்னை மலர்கின்ற திருவாரூர்தானோ ? இருத்தல் , நிற்றல் , கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும் ` உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம் , உம்பால் வருத்தமுற்று வந்து , ஒரு குறையை வாய்விட்டுச் சொன்னாலும் , நீர் வாய்திறவாதிருப்பிராயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

` செம்பொன் ` என்றது , சிறப்புருவகம் . ` மலர்தல் , காய்த்தல் ` என்றாற்போல்வன , மலரைத் தோற்றுவித்தல் , காயைத் தோற்றுவித்தல் ` என்னும் பொருளவாய் , செயப்படுபொருள் குன்றா வினையாம் . ` வந்தும் ` என்ற உம்மையை மாற்றியுரைக்க . ` வாய் திறவீர் ` என்பது , மேலைத் திருப்பாடலினின்றும் வந்து இயைந்தது .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 11

காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லட்டா னத்தே
அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

பல நூல்களும் ஆகி , கருமை மிக்க கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடைய , திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப்பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்ட வரே , இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய , நீர் , உமது திருவடிப் பெயரைப்பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர் ; அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; இனி நீர் இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

`எண்டோள்முக்கண்` என்ற உம்மைத் தொகைச் சொல், `கொண்டீர்` என்ற வினைப்பெயரோடு, இரண்டாவதன் தொகைபடத் தொக்கது. அவற்றது இடையே, `திருமூலட்டானத்து` என்றது நின்று, ஏழாவதன் தொகையாயிற்று. `கலைகள் பலவாகி, முக்கண், மூலட்டானத்துப் பாகங்கொண்டீர், ஊரறிய, ஆரூரன் என்கண் கொண்டீர்; பழிப்பட்டீர்; வாழ்ந்துபோதீர்; எனக் கொண்டு கூட்டியுரைக்க. தம் பெயரைப் பெய்தருளிச் செய்தமையின், இது திருக் கடைக் காப்பாயிற்று. இதன் பின்னர், இறைவர், சுவாமிகள் பெரு மகிழ்வெய்துமாறு கண்ணளித்தருளினமையை அறிந்துகொள்க.
சிற்பி