திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்


பண் :

பாடல் எண் : 1

கடையவ னேனைக் கருணையி னாற்கலந்
தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்
வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத்
தாங்கிக்கொள்ளே. 

பொழிப்புரை :

கடையேனைப் பெருங்கருணையால், வலிய வந்தடைந்து ஆண்டு கொண்டருளினை. இடபவாகனனே! அடி யேனை விட்டுவிடுவாயா? வலிமையுடைய, புலியின்தோலாகிய ஆடையை உடுத்தவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! சடையையுடையவனே! சோர்ந்தேன்; எம்பெருமானே! என்னைத் தாங்கிக் கொள்வாயாக.

குறிப்புரை :

``எம்பிரான்`` என்றதை, ``சடையவனே`` என்றதன் பின்னரும், ``விடுதிகண்டாய்`` என்றதை இதன்பின்னரும் கூட்டுக. விறல் - வெற்றி; வலிமையுமாம். உடையவன் - உடையை உடைய வன். `தோலாகிய உடையை உடையவன்` என்க. விட்டிடுதி - விடுகின்றாய். இகர ஈறு, இங்கு எதிர்காலத்தில் வந்தது. `கண்டாய்` என்னும் முன்னிலையசைச் சொல், `போலும்` என்னும் உரையசைப் பொருளில் நின்று, `விடாதி; விட்டாற் கெட்டொழிவேன்` என்னும் பொருளைத் தந்தது. இவை இப்பகுதியின் எல்லாத் திருப்பாட்டிலும் ஒக்கும். `கருணையினாற் கலந்தாண்டு கொண்ட` என்றதனால், `அக் கருணை இடையில் ஒழிதற்பாலதோ` என்பது திருவுள்ளமாயிற்று. இறைவன் தம்மை ஆட்கொண்ட பின்னர்ப் பாண்டியனிடம் தம்மைச் செல்லுமாறுவிடுத்து, நரியைப் பரியாக்கிக் கொணர்ந்தளித்து மறைந்ததனால், இந்நிலையிலேயே தம்மை இருக்க வைத்து விடுவானோ என்று அடிகள் ஐயுற்று வருந்தி இங்ஙனம் விண்ணப் பிக்கின்றார் என்க. அடிகள் திருப்பெருந்துறையை அடைந்தமையும், அங்கு இறைவன் முன்னைத் திருவுருவத்தோடும் விளங்கியிருந்து இவரை, `தில்லைக்கு வருக` என்று சொல்லி நிறுத்திவிட்டு, ஏனை அடியார்களோடு மறைந்தமையும், இதன்பின் நிகழ்ந்தன என்று கொள்ளுதலே பொருந்தும்; என்னை? `தில்லைக்கு வருக` என்று பணித்தபின் அடிகள் இத்துணை வருந்தி வேண்டாராகலின்.

பண் :

பாடல் எண் : 2

கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர்
கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின்
விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங்
கைக்கரசே
கள்ளேன் ஒழியவுங் கண்டுகொண் டாண்டதெக்
காரணமே.

பொழிப்புரை :

உத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கள்வனாகிய நான், உன்னை நீங்கி நிற்கப் பார்த்தும் என்னை அடிமை கொண்டது, எக்காரணத்தைக் கொண்டோ?. உன்னுடைய மேலாகிய தொண்டில் உள்ளேன்; அடியேன் புறத்தேன் அல்லேன்; மாதரது கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினை விடேனாயினும், விட்டு விடுவாயோ?.

குறிப்புரை :

``விடுதிகண்டாய்`` என்றதனை இறுதியிற் கூட்டி யுரைக்க. ``கொள் ஏர்`` என்றதனை, `ஏர் கொள்` என மாற்றிக் கொள்க. ஏர் - எழுச்சி. பிளவு அகலா - வேறாகி நீங்காத; `நெருங்கிய` என்ற படி. விள்ளேன் - நீங்கேன். விழுத் தொழும்பின் உள்ளேன் - உனது மேலான தொண்டிற்கு உள்ளாயினேன்; என்றது, உன்னால் `ஆட் கொள்ளப்பட்டு விட்டேன்` என்றதாம். அதனால், `இனிப் புறமாவே னல்லேன்` என்க. கள்ளேன் - களவுடையேனாய்; ஒழியவும் - உன்னை அணுகாதிருக்கவும். கண்டுகொண்டு - அருள்நோக்கம் செய்து. ஆண்டது எக்காரணம் - ஆட்கொண்டது எக்காரணத்தால்; `விடாது பற்றிக் கொள்ளுதற்கே யன்றோ` என்பது கருத்து. `காரணத் தால்` என்னும் உருபு, தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 3

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்
கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங்
குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை
வளர்ப்பவனே.

பொழிப்புரை :

புகழால் திகழும் திருவாரூரில் வீற்றிருப்பவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கச்சு அணியப் பெற்ற, ஆபரணங்களோடு கூடிய, கொங்கைகளையுடையவளாகிய உமாதேவியின் பாகனே! என்னைப் பாதுகாப்பவனே! கருமை மிகுந்த கண்களை உடைய மாதரது ஐம்புல இன்பத்தில் ஆற்றங்கரையிலே நிற் கின்ற மரம்போல, வேர் ஊன்றுகின்ற என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

கார்உறு - கருமை பொருந்திய. `கண்ணியரது ஐம் புலனில் வேர் உறுவேன்` என்க. ஐம்புலன் - கண்ணுக்குப் புலனாகின்ற அழகு முதலியன. வேர் உறுதல் - ஊன்றி நிற்றல். ``ஆற்றங்கரை மரமாய்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `ஆற்றங் கரையில் உள்ள மரம் அவ்விடத்தில் வேர் ஊன்றுதல் போல` என்பது பொருள். `இஃது அவ்வேர் நிலைபெறாது அவ்வாற்றுநீராலே அழிக்கப்படுதல் போல, யானும் அவரது ஐம்புல இன்பங்களாலே அழிக்கப் படுவேன்` என்பதை உணர்த்தி நிற்றலின், தொழில் பற்றி வந்த உவமை. வளர்ப்பவன் - முன்னர் அறிவை மிகுவித்துப் பின்னர் அதனால் அன்பையும், அதன்பின்னர் அவ்வன்பினால் இன்பத்தை யும் மிகுவிப்பவன்.

பண் :

பாடல் எண் : 4

வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும்
நீங்கிஇப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண்
மதிக்கொழுந்தொன்
றொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங்
கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச்
செழுஞ்சுடரே.

பொழிப்புரை :

வெண்மையாகிய ஓர் இளம் பிறையானது விளங்கு கின்ற, நீண்ட சடை முடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! தெளிகின்ற பொன்னையும், மின்னலையும் ஒத்த காட்சியையுடைய செழுமையாகிய சோதியே! வளர்ந்து கொண் டிருக்கிற, உனது கருணைக் கரத்தில் வளைத்துப் பிடிக்கவும் விலகி, இவ்வுலக வாழ்விலே புரளுகின்ற என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

வளர்கின்ற - எல்லா உயிர்களும் வளரும் இடமாகிய. கருணைக் கை, உருவகம். வாங்கவும் - எடுக்கவும். மிளிர்கின்ற - பிறழ்கின்ற; குதிக்கின்ற. தெளிகின்ற - விளங்குகின்ற.

பண் :

பாடல் எண் : 5

செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி
யாரிற்பன்னாள்
விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி
வாய்அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தர கோசமங்
கைக்கரசே
வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட
மறுத்தனனே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய வாயினையுடைய வண்டுகள், கிண்டுகின்ற மலரை அணிந்த, திருமுடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! வழியில் மறித்து நின்று, உன் அருளாகிய அரிய அமுதத்தை நீ உண்பிக்க, மறுத்தேன். வளர்கின்ற விளக்குத் தீயில் விழுகின்ற விட்டிற் பூச்சியைப் போல, சிலவாகிய மொழிகளை உடைய மகளிரிடத்துப் பலநாளும் விருப்பங் கொள்கின்ற அடியேனை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`செழிக்கின்ற` என்பது, இடைக் குறைந்து நின்றது. தீ- விளக்குத் தீ. விட்டில் - `விட்டில்` என்னும் வண்டு. விட்டிலின் - விட்டில் போல. சின்மொழி - சிலவாகிய மொழி; இது நாணத்தால் பல பேசாமையைக் குறித்தது. மொழியாரில் - மொழியாரிடத்து. ``பன்னாள் விழுகின்ற`` என்றதனால், உவமையிலும் பன்முறை வீழ்தல் பெறப்பட்டது. படவே, விட்டில் விளக்கினைக் கண்டு அவ் வொளியால் மயங்கி அணுகுந்தொறும் அதன் வெப்பத்தால் தாக் குண்டு, அங்ஙனம் தாக்குண்ட பின்னரும் விடாது சென்று முடிவில் அதன் கண்ணே வீழ்ந்து இறக்கும் தன்மை பொருளிலும் கொள்ளற் பாலதாயிற்று. வெறிவாய் - தேனின்கண். அறுகால் - வண்டு. வழிநின்று - யான் செல்லும் வழியில் வந்து நின்று. ``மறுத்தனனே`` என்ற தெற்றேகாரம், `என்னே என் அறியாமையின் மிகுதி` என இரக்கங் குறித்துநின்றது. மறுத்தது, உடன் செல்ல இயையாது நின்றது.

பண் :

பாடல் எண் : 6

மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையின்
என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை
யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம்
பொய்யினையே.

பொழிப்புரை :

என் மாணிக்கமே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நான் உன் திருவருளின் பெருமையை அறியாமல் அதனை வேண்டாவென்று மறுத்தேன்; நீ அதற்காக அடியேனை வெறுத்து விட்டு விடுவாயோ? மேலோர், சிறிய நாய் போல்வாரது குற்றத்தை மன்னிப்பார்கள் அல்லரோ? நீ என்னுடைய வினை அனைத் தையும் அழித்து, என்னை ஆண்டு கொண்டு அருள வேண்டும்.

குறிப்புரை :

`அறியாமையின் யான் உன் அருளை மறுத்தனன்` என்க. ஒறுத்து - அழித்து. ``நாய்கள்`` என்றது உவமையாகு பெயராய், `நாய்கள் போன்றவர்` எனப் பொருள் தந்தது. சிறுமை - இழிவு. ஈற்றடி, `வேற்றுப்பொருள் வைப்பு` என்னும் அணிபட வந்தது.

பண் :

பாடல் எண் : 7

பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று
பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட
முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந்
தீர்ப்பவனே. 

பொழிப்புரை :

நஞ்சுண்ட கண்டத்தில் கருமையையுடையவனே! நிலை பெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! செம்மேனி யனே! மங்கலப் பொருளானவனே! சிறியேனது பிறவியை நீக்கு வோனே! பொய்யவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி ஆண் டருளி, என் சிறுமையை மறைத்துக் கொண்ட உண்மைப் பொருளே! என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

`ஒன்று ஆண்டு` என மாற்றியுரைக்க. ஒன்று - ஒரு பொழுது. பொத்திக் கொண்ட மெய்யவன் - மறைத்துக் கொண்ட திரு மேனியை உடையவன். விடம் உண் - நஞ்சு உண்டதனாலாகிய. மிடற்று மை - கழுத்தின்கண் உள்ள கருமை நிறம். செய்யவன் - சிவப்பு நிறத்தை உடையவன். பவம் - பிறப்பு.

பண் :

பாடல் எண் : 8

தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரருள்
என்கொல்என்று
வேர்க்கின்ற என்னை விடுதிகண் டாய்விர
வார்வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தர கோசமங்
கைக்கரசே
ஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினை யேனை
இருதலையே. 

பொழிப்புரை :

பகைவர் அஞ்சும்படி ஒலிக்கின்ற, கிண்கிணி மாலை அணிந்த காளையையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! ஐம்புல ஆசைகளும் உன் திருவடியை நீங்குகின்ற அச்ச மும், தீவினையுடையேனை இரண்டு பக்கத்திலும், இழுக்கின்றன. ஆதலின் என் குற்றங்களை உன் பேரருளானது நீக்குகின்ற விதம் எவ்வாறு என்று மனம் புழுங்குகின்ற என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`வினையேனை அஞ்சொடு அச்சம் இருதலை ஈர்க் கின்ற; (அதனால்) என் பிழையை நின் சீர் அருள் தீர்க்கின்றவாறு என்கொல் என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய்` எனக் கூட்டுக. என்கொல் என்று - எவ்வாறோ என்று. வேர்த்தல் - இளைத்தல்; வருந்துதல். விரவார் - பகைவர். வெருவ - அஞ்சும்படி. ஆர்க்கின்ற தார் விடை - ஒலிக்கின்ற கிண்கிணி மாலையை அணிந்த இடபத்தையுடைய. அஞ்சு - ஐம்புல ஆசை. அச்சம், அவற்றின் வழிச் செல்ல அஞ்சுதல், `இந்த இரண்டும் இருமுகமாக மாறி மாறி ஈர்க் கின்றன` என்றபடி.

பண் :

பாடல் எண் : 9

இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து
நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன்
மூவுலகுக்
கொருதலை வா மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப்
பொலிபவனே. 

பொழிப்புரை :

பெருமை அமைந்த மூன்று உலகங்களுக்கும், ஒப் பற்ற முதல்வனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! போர்க்குரிய நுனியோடு கூடிய மூன்று இலை வடிவின தாகிய சூலத்தை, வலப்பக்கத்தில் தாங்கி விளங்குபவனே! இருபுறமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் உள்ளிடத்தே அகப்பட்ட எறும்பு போன்று துயருற்று உன்னை விட்டு நீங்கின என்னை, தலைவிரி கோலம் உடைய சடையோனே! விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

அடிகள் தாம் இருதலைக் கொள்ளியினுள் எறும்பை ஒத்திருத்தல் இவ்வாற்றால் என்பதை முன்னைத் திருப்பாட்டில் அருளிச் செய்தமையின், இதனுள் அதனை எடுத்தோதாராயினார். ``பிரிந்த`` என்றது, `பிரிந்து வருந்துகின்ற` என்னும் பொருளது.
விரிதலை - விரிந்த தலைமயிர்; இடவாகு பெயர். தலைமயிர் விரிந்து கிடத்தலைக் கூறியது. எங்கும் ஓடி அலமருதலைக் குறித்த குறிப்புமொழி. பொருது அலை - பகைவரொடு போர் செய்து அவரை வருத்துகின்ற. மூவிலை வேல் - சூலம். வலன் - வலப்பக்கம்.

பண் :

பாடல் எண் : 10

பொலிகின்ற நின்தாள் புகுதப்பெற் றாக்கையைப்
போக்கப்பெற்று
மெலிகின்ற என்னை விடுதிகண் டாய்அளி
தேர்விளரி
ஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங்
கைக்கரசே
வலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புரம்
மாறுபட்டே. 

பொழிப்புரை :

வண்டுகள், ஆராய்ந்து பாடுகின்ற, விளரி இசை யின் ஒலியோசை இடையறாது நிலைபெற்றிருக்கிற, பூஞ்சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பகைத்து முப் புரங்களை வலிமை நிலைத்த உறுதியான வில்லினால் அழித்தவனே! விளங்குகின்ற, உன் திருவடிகளில் புகப்பெற்று, உடம்பை உன்னுடையதாகவே கொடுக்கப் பெற்றும் வருந்துகின்ற அடியேனை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`புகுதப் பெற்ற` என்றதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. புகுதப் பெற்றமை, புகுந்துவணங்கப் பெற்றமை. போக்கப்பெற்று - உன்னால் விலக்கப்பட்டு; இதன்கண் ``பெற்று`` என்னும் வினைக்கு வினைமுதல் அடிகளாதலின், ``ஆக்கையை`` என்னும் இரண்டாவது, ``போக்க`` என்றதனோடு முடியும். `தில்லைக்கு வருக` என்று நிறுத்திச் சென்றதனை, `போக்க` என்றார்.
அளி - வண்டுகள். தேர் விளரி ஒலி - தேனை ஆராய்கின்ற, விளரி இசையினது ஓசை. எரித்தாய் - எரித்தவனே.

பண் :

பாடல் எண் : 11

மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன்
மணிமலர்த்தாள்
வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை
யேன்மனத்தே
ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
நீறுபட் டேஒளி காட்டும்பொன் மேனி
நெடுந்தகையே. 

பொழிப்புரை :

தீவினையேனது மனத்தின்கண் சுரக்கின்ற தேனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! திரு வெண்ணீறு பூசப்பட்டு ஒளியைச் செய்கின்ற பொன்போலும் திரு மேனியையுடைய பெருந்தன்மையனே! ஐம்பொறிகள் பகைத்து என்னை வஞ்சித்தலால் நான் உனது வீரக் கழலணிந்த தாமரை மலரை ஒத்த திருவடியை நீங்கினேன்; அத்தகைய என்னை அங்ஙனமே விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

அஞ்சு - ஐம்புலன். `தாளின் வேறுபட்டேனை` என்க. மட்டு - தேன். நீறுபட்டு - திருநீறு பொருந்தப்பட்டு.

பண் :

பாடல் எண் : 12

நெடுந்தகை நீஎன்னை ஆட்கொள்ள யான்ஐம்
புலன்கள்கொண்டு
விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர
வார்வெருவ
அடுந்தகை வேல்வல்ல உத்தர கோசமங்
கைக்கரசே
கடுந்தகை யேன்உண்ணுந் தெண்ணீர் அமுதப்
பெருங்கடலே. 

பொழிப்புரை :

பகைவர் அஞ்சும்படி கொல்லும் தன்மையுடைய வேற்போரில் வல்லவனாகிய திருவுத்தரகோச மங்கைக்குத் தலை வனே! கொடிய தன்மையுடையேன் பருகுதற்குரிய பெரிய அமுதக் கடலே! பெருந்தன்மையனே! நீ, என்னை அடிமை கொள்ளவும்; நான் ஐம்புலன்களின் ஆசை கொண்டு, அதனால் உன்னை விடும் தன்மையனாயினேன்; அத்தகைய என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

தகையேனை - தன்மையுடைய என்னை. அடும் தகை வேல் வல்ல - கொல்லும் தன்மையையுடைய சூலத்தை ஆளுதல் வல்ல. கடுந்தகையேன் - கடிய குணமுடைய யான்; `எனக்குத் தெண்ணீர் கிடைத்தல் அரிது` என்பது குறிப்பு. `தெண்ணீராகிய அமுதம்` என்க. நாவறட்சியைத் தணித்து உயிரை நிலைபெறுத்தலின், தெண்ணீர், `அமுது` எனப்பட்டது. இறைவனால் தணிக்கப்படுவது வினை வெப்பமாம்.

பண் :

பாடல் எண் : 13

கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக்
கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட
லில்லடியார்
உடலில மேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேயென்
மதுவெள்ளமே.

பொழிப்புரை :

உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டின் கண்ணே நிலைபெறுகின்ற, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`விடலரியேனை` என்றாரேனும், `முழுதும் மூழ்கும் படி விட்டுப் பருகாது, சிறிதே சுவைத்து ஒழிவேனை` என உவமைக்கேற்ப உரைத்தலே கருத்தென்க. உடல் இல்லம் - உடம்பாகிய வீடு, ``உடலிடங்கொண்டாய்`` (தி.8 கோயில்.10) என்றாற்போலப் பின்னரும் அருளிச் செய்வர். யாண்டும் `அடியவர் உடம்பில் நிற்கும் உள்ளத்தை இடமாகக் கொண்டிருப்பவன்` என்பதே பொருளாம்; ``நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந்தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற-கற்பகமே` (தி.6.ப.95.பா.4) என்ற அப்பர் திரு மொழியையும் காண்க.
மடலின் மட்டு - பூவிதழில் துளிக்கின்ற தேன். மதுவெள்ளம்- தேன் வெள்ளம். முன்னர்ச் சிறிதாயுள்ள தேனைக் கூறினார்; பின்பு அது பெருக்கெடுத்தலைக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 14

வெள்ளத்துள் நாவற் றியாங்குன் அருள்பெற்றுத்
துன்பத்தின்றும்
விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும்
பும்அடியார்
உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத
களியெனக்கே. 

பொழிப்புரை :

விரும்புகின்ற அடியாருடைய உள்ளத்தில் நிலைத்து இருப்பவனே! நிலை பெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நீர்ப் பெருக்கின் நடுவில் இருந்தே ஒருவன் நீர் பருகாது தாகத்தால் நா உலர்ந்து போனாற்போல, உன்னருள் பெற்றிருந்தே, துன்பத்தினின்றும் இப்பொழுதும் நீங்குவதற்கு ஆற்றல் இல்லாது இருக்கின்ற என்னை விட்டுவிடுவாயோ? வஞ்சகச் செய லுடையேனாகிய எனக்கு இதுகாறும் கண்டறியாத பேரின்பத்தைத் தந்தருள்க.

குறிப்புரை :

``வெள்ளத்துள் நாவற்றியாங்கு`` என்றது இல்பொருள் உவமை. `விள்ளகிலேனை` என்பது விரித்தல் பெற்றது. கள்ளத்து உளேற்கு - பொய்யன்பில் நிற்பேனுக்கு. களியாத களி - நான் இது காறும் மகிழ்ந்தறியாத மகிழ்ச்சி. ``அருளாய்`` என்றது இரட்டுற மொழிதலாய், முன்னர், `இரங்காய்` எனப் பொருள்தந்து, ``கள்ளத் துளேற்கு`` என்றதனோடும், பின்னர், `ஈவாய்` எனப் பொருள்தந்து, `எனக்கு` என்பதனோடும் இயைதற்குரித்தாயிற்று. ஈற்றில் நின்ற ஏகாரத்தைப் பிரித்து, ``களி`` என்றதனோடு கூட்டிப் பிரிநிலை யாக்கியுரைக்க.

பண் :

பாடல் எண் : 15

களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங்
கலந்தருள
வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச்
சுடருக்கெல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங்
கைக்கரசே
எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய
என்னப்பனே. 

பொழிப்புரை :

உண்மையான ஒளிகட்கெல்லாம், ஒளியைத் தந்த பொலிவாகிய திருவடியையுடைய திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! எனக்கு எளிதில் கிடைத்த எனக்குத் தந்தையும், தலைவனும் ஆகியவனே! என்னை அடிமையாகவுடைய என் ஞானத் தந்தையே! மகிழ்வோடு கூடிய மனத்தோடு, உன் திருவடியைக் காணப் பெற்றும், நீ என்னோடு கலந்து அருள் செய்யுமாறு உலகப் பற்றிலிருந் தும் வெளிவாராத என்னை, விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

வெளிவருதல் - புறப்படுதல்; `உலகியலைவிட்டுப் புறப்படுதல்` என்க. மெய்ச்சுடர் - உலகத்தவர்க்குக் கண்கூடாகக் காணப்படும் ஒளிகள்; அவை, `ஞாயிறு, திங்கள், விண்மீன், தீ, என்பன. வந்த - வருதற்குக் காரணமான; என்றது, `மிக்க ஒளியினை யுடைய` என்றவாறு. சொற்பொருள் இதுவாயினும், `அச்சுடருக் கெல்லாம் ஒளியைத் தருகின்ற` என்னும் பொருள்மேலும் இது நோக்குடைத்து.

பண் :

பாடல் எண் : 16

என்னைஅப் பாஅஞ்சல் என்பவர் இன்றிநின்
றெய்த்தலைந்தேன்
மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ
மிக்கின்மெய்யே
உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அன்னையொப் பாய்எனக் கத்தன்ஒப் பாய்என்
அரும்பொருளே. 

பொழிப்புரை :

உனது திருமேனிக்கு உவமை சொல்லின் மின்னலை ஒப்பாய், உனக்கு நீயே நிகராவாய், நிலை பெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! எனக்குத் தாயை ஒப்பாய், தந்தையை ஒப்பாய். எனக்குக் கிடைத்தற்கு அரிய பொருளேயாவாய். அடியேனை, ``அப்பா! பயப்படாதே!`` என்று சொல்லுவாரில்லாமல் நின்று இளைத்துத் திரிந்தேன்; ஆகையால் என்னை விட்டுவிடு வாயோ?

குறிப்புரை :

`என்னை அஞ்சல்` என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்; விடுதி கண்டாய்` என்றதனை ஈற்றில் தந்துரைக்க. `உவமிக்கின் மெய் மின்னை ஒப்பாய்` என இயையும். ``மெய்யே`` என்ற ஏகாரம், அசைநிலை. உன்னை ஒப்பாய் - உன்னை நீயே ஒப்பாய்; `ஒப்பார் பிறர் இல்லாதவனே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 17

பொருளே தமியேன் புகலிட மேநின்
புகழ்இகழ்வார்
வெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்ம்மை
யார்விழுங்கும்
அருளே அணிபொழில் உத்தர கோசமங்
கைக்கரசே
இருளே வெளியே இகபர மாகி
யிருந்தவனே. 

பொழிப்புரை :

உண்மை அன்பர் விழுங்கும் அருட்கனியே! அழகிய சோலை சூழ்ந்த, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! இருளாய் இருப்பவனே! ஒளியாய் இருப்பவனே! இம்மை மறுமை களாகி இருந்தவனே! உண்மைப் பொருளானவனே! தனியனாகிய எனக்குச் சரண் புகும் இடமே! உன் புகழை நிந்திப்பவர்கட்கு அச்சத் துக்கும் காரணமாய் இருப்பவனே! என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

பொருள் - `பொருள்` என்று சிறப்பித்துச் சொல்லுதற் குரிய பொருள்; மெய்ப்பொருள். `இகழ்வார்க்கு` என்னும் நான்க னுருபு தொகுத்தலாயிற்று. வெருள் - அச்சம்; அஃது, `அதனைத் தருவது` என்னும் பொருளதாய் நின்றது. ``விழுங்கும்`` என்றது. `ஆர்வத்தோடு முற்ற நுகரும்` என்றபடி. இது குறிப்புருவகம். இத னால், ``அருளே`` என்றது, `அருளாகிய அமுத உருவினனே` என்றதா யிற்று. இருள் - மறைப்பு; வெளி - விளக்கம்; இவை இரண்டும், முறையே கட்டு வீடுகளைக் குறித்தன. இகம் - இம்மை. பரம் -மறுமை.

பண் :

பாடல் எண் : 18

இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை
என்னினல்லால்
விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க
நஞ்சமுதா
அருந்தின னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு
மடங்கினர்க்கே. 

பொழிப்புரை :

மிகுதியாக நஞ்சை அமுதமாக உண்டவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பிறவியாகிய நோயிற் சிக்கி முடங்கிக் கிடந்தவர்க்கு மருந்தாய் இருப்பவனே! எழுந்தருளியிருந்து அடியேனை ஆண்டு கொள்வாய்; விற்றுக் கொள்வாய்; ஒற்றி வைப்பாய்; என்ற இவை போன்ற செயல்களில் என்னை உனக்கு உரியவனாகக் கொள்வதல்லது, புதிய அடியே னாகிய என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

`என்னின் இருந்து` எனக்கூட்டி `என்பால் வீற்றிருந்து` எனப் பொருள் கூறுக. இஃது, `என்னை ஏற்றுக் கொண்டு` என்றருளிய வாறு. ஆண்டுகொள் - உன் தொண்டில் ஈடுபடுத்திக்கொள். அல்லால்- இங்ஙனம் செய்யாது. `அல்லால் விடுதி கண்டாய்` என இயைத்து, வேறு தொடராக்குக. விருந்தினன் - புத்தடியேன். ``அல்லால்`` என்ற தன் பின், `வேறொன்றறியாத` என்பதனையும், ``இருந்து`` என்றதற்கு முன், `என்னுடன்` என்பதனையும் வருவித்து, சொற்களைக் கிடந்த வாறே வைத்து உரைப்பாரும் உளர். ``மடங்கினர்`` என்றது நோயுட் பட்டவர் செயலற்றுக் கிடத்தலைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 19

மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்னருள்
தீக்கொளுவும்
விடங்க என்றன்னை விடுதிகண் டாய்என்
பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக்
கொம்பினையே. 

பொழிப்புரை :

திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கொடிய யானையாகிய மலையினை உரித்து வஞ்சிக் கொடி போன்ற உமையம்மையை அஞ்சுவித்தவனே! எனது கொடிய வினையாகிய காட்டினை அழியும்படி உனது நிலைபெற்ற அருளாகிய, நெருப்பை இட்டு எரிக்கின்ற வீரனே! என்னை விட்டுவிடுவாயோ? எனது பிறவி யாகிய மரத்தை வேரொடும் களைந்து ஆட் கொண்டருள்வாயாக.

குறிப்புரை :

மடங்குதல், இங்கு அழிதலின் மேற்று. மன் - நிலை பெற்ற. `அருளால்` என உருபு விரிக்க. தீக்கொளுவுதல் - எரித்தல். விடங்கன் - ஆண்மையுடையவன். ``வஞ்சிக்கொம்பு`` என்றது, உமை யம்மையை. யானையை உரித்த செயலைக் கண்டு அம்மை அஞ்சி னாள் என்க. `அஞ்சுவித்தாய்` என்னும் விளி, `உனக்கு என் வினையை அஞ்சப் பண்ணுதல் எளிது` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 20

கொம்பரில் லாக்கொடி போல்அல மந்தனன்
கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர்
நண்ணுகில்லா
உம்பருள் ளாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அம்பர மேநில னேஅனல் காலொடப்
பானவனே. 

பொழிப்புரை :

தேவர்களும் அணுகக் கூடாத மேலிடத்து இருப் பவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! ஆகாயமே! பூமியே! நெருப்பு, காற்று என்பவைகளோடு நீரும் ஆனவனே! இளமை நலமுடையோனே! கொழு கொம்பில்லாத கொடியைப்போலச் சுழன்றேன்; இவ்வாறு வருந்துகின்ற என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

கொம்பர் - கொம்பு; போலி. அலமந்தனன் - அலைந் தேன்; இதனை எச்சமாக்கி, ``வெம்புகின்றேனை`` என்பதனோடு முடிக்க. கோமளம் - அழகு. `அழகனே` என்னாது, `அழகே` என்றது, `அழகே ஓர் வடிவங்கொண்டு நின்றாற் போல்பவனே` என அதன் மிகுதியுணர்த்தற்பொருட்டு. வெம்புதல் - வருந்துதல். உம்பர் - மேலி டம்; சிவலோகம். அம்பரம் - ஆகாயம். கால் - காற்று. அப்பு - நீர்.

பண் :

பாடல் எண் : 21

ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல
னால்அலைப்புண்
டேனையெந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை
யேன்மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலை யும்அமு
தத்தையும்ஓத்
தூனையும் என்பி னையும்உருக் காநின்ற
ஒண்மையனே. 

பொழிப்புரை :

என் அப்பனே! தீவினையேனது உள்ளத்தின்கண், தேனினையும், பாலினையும், கருப்பஞ்சாற்றையும், அமுதத்தினையும் நிகர்த்து உடம்பையும் உடம்பில் இருக்கும் எலும்பையும் உருகச் செய் கின்ற ஒளியுடையோனே! யானையினது கொடிய சண்டையில் அகப் பட்ட சிறு புதர் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

ஐம்புலன்களுக்கு உவமையாகக்கூறலின், ஆனைகளை ஐந்தாகக் கொள்க. குறுந்தூறு - சிறுபுதல். `ஐந்து யானைகள் தம்முள் மாறுபட்டுச் செய்யும் போர்க்கிடையில் ஒரு சிறுபுதல் அகப்பட்டுக் கொள்ளுமாயின், அஃது எவ்வாறு அவற்றால் மிதிப்புண்ணுமோ அதுபோல, ஐம்புலன்களின் மாறுபாட்டிற்கிடையில் அகப்பட்டுள்ள யான் அவற்றால் அலைப்புண்கின்றேன்` என்றபடி. கன்னல் - கரும்பு. ஒண்மையன் - ஞான வடிவினன்.

பண் :

பாடல் எண் : 22

ஒண்மைய னேதிரு நீற்றைஉத் தூளித்
தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய்
யடியவர்கட்
கண்மைய னேஎன்றுஞ் சேயாய் பிறற்கறி
தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை
ஆண்மைய னேஅலிப் பெற்றியனே.

பொழிப்புரை :

ஒளிப்பிழம்பாய் உள்ளவனே! திருவெண்ணீற்றை நிறையப் பூசி ஒளி மிளிரும் வெண்மை நிறம் உடையவனே! மெய்யடி யார்க்குப் பக்கத்தில் இருப்பவனே! அடியாரல்லாத ஏனையோர்க்கு எக்காலத்தும் தூரத்தில் இருப்பவனே! அறிதற்கரியதாகிய பொருளாய் இருப்பவனே! பெண்ணாய் இருப்பவனே! பழமையானவனே! ஆணாய் இருப்பவனே! அலித் தன்மையாய் இருப்பவனே! என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

உத்தூளித்தல் - மேலே பூசுதல். `மெய்யடியவர்கட்கு என்றும் அண்மையனே, பிறர்க்கு என்றும் சேயாய்` என்க. அரிதாம் - அரிய பொருளாகிய. பெண்மையன் முதலிய மூன்று பெயரானும் தனித்தனியே விளித்தாரேனும், `பெண்தன்மை, ஆண்தன்மை, அலித்தன்மை என்னும் இம்மூன்று தன்மைகளையும் உடையவனாய் இருப்பவனே` என்றலே கருத்து. ஒருவனே மூன்று தன்மைகளை உடையவனாய் இருத்தலின், இன்ன தன்மையன் என ஒரு பெற்றி யனாக அறிதல் அரிதாயிற்று. அறிதற்கு அரிதாதல், யாவர்க்கும் என்க. ஒருவனே மூன்று தன்மைகளையுடையவனாய் இருத்தலின், இவை அவனது பொதுவியல்பே என்பதும், உண்மை இயல்பு இவை அனைத் தினும் வேறு என்பதும் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 23

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச்
சுருக்குமன்பின்
வெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி
லோகெடுவேன்
மற்றடி யேன்றன்னைத் தாங்குநர் இல்லைஎன்
வாழ்முதலே
உற்றடி யேன்மிகத் தேறிநின் றேன்எனக்
குள்ளவனே. 

பொழிப்புரை :

என் வாழ்க்கைக்குக் காரணமான முதற் பொருளே! எனக்குப் பற்றுக்கோடாய் உள்ளவனே! உன்னை விட்டு விலகியதனால் வரும் துன்பத்தை அனுபவித்து, அடியேன் இவ்வுலகம் இத் தன்மையது என்பதை மிகவும் தெளிவாக அறிந்து நின்றேன். எனக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டு, குற்றத்தையே பெருகச் செய்து, அன்பைச் சுருங்கச் செய்கின்ற, பயனற்ற அடியேனை விட்டுவிடுவாயோ? விட்டு விட்டாலோ, அடியேனைத் தாங்குவோர், வேறு ஒருவரும் இல்லை. அதனால் நான் அழிவேன்.

குறிப்புரை :

பெற்றது, முன்பு உலகியலில் பெற்ற இன்பம். `பெற்றதே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். கொண்டு - மீளவும் பெற்று. ``பிழை`` என்றது, உலகியலை. ``அன்பு`` என்றதற்கு, `உன்திருவடிக்குச் செய்யும் அன்பு` என உரைக்க. வெற்றடியேன் - ஆட்கொண்டதனால் பயன் ஒன்றும் இல்லாத அடியேன். ``மற்று`` என்றதனை, ``இல்லை`` என்றதற்கு முன்னே கூட்டுக. `என் முதல்` என இயையும். ``வாழ் முதல்`` என்ற வினைத்தொகை, ஏதுப் பொருட்கண் வந்தது. உற்று - உலகியலிற் பொருந்தி. தேறிநின்றேன் - அதனால் தெளிவெய்தி நின்றேன். தெளிந்தது, `தாங்குநர் மற்றில்லை` என்பதையும், `விடிற் கெடுவேன்` என்பதையுமாம். ``தாங்குநர்`` என முன்னர் வந்தமையின், ``உள்ளவன்`` என்றதற்கு, `எனக்குப் பற்றுக் கோடாய் உள்ளவனே` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 24

உள்ளன வேநிற்க இல்லன செய்யும்மை
யற்றுழனி
வெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன்
மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத் துரியாய் புலன்நின்கட்
போதலொட்டா
மெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை
எறும்பெனவே. 

பொழிப்புரை :

மிகவும் பெரிய நீண்ட துதிக்கையின்கண், துளையினையுடைய அழகிய யானையின் தோலையுடையானே! ஐம்புலன்களும், உன்பால் செல்ல ஒட்டாமல், நெய்க்குடத்தை எறும்பு மொய்ப்பது போல, என்னை மெல்லென மொய்க்கின்றன; உண்மையானவை இருக்க, பொய்யாயினவற்றையே செய்கிற, மயக்கத்தையும் ஆரவாரத்தையும் உடைய தூயவன் அல்லாதவனாகிய என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

``உள்ளன, இல்லன`` என்றவற்றிற்கு, `பயன்` என்னும் வினைமுதல் வருவிக்க. பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, ``இல்லன`` என்றதனோடு கூட்டுக. மையல் - மயக்கம். `துழனி வெள்ளன்`` என்றதனை, `வெண்துழனியனை` எனப் பின் முன்னோக்கி, உருபு விரித்துரைக்க. வெண்துழனி - வெற்றார வாரம். அல்லேனை - மெய்ந்நெறிக்கு உரியனல்லாத என்னை. `வியன் உரி` எனவும், `மாவேழம்` எனவும் இயையும். கைப் பொள்ளல் - கையின்கண் உள்ள புழையையுடைய; சொற்கிடக்கை இவ்வாறாயினும், `பொள்ளற் கை` என்பதே பொருள் என்க, ``நல்வேழம்`` என்றதில் நன்மை, வலிமை மேல் நின்றது. `ஒட்டாது` என்னும் வினையெச்சம் ஈறு குறைந்தது; `முற்றே எச்சப் பொருட்டாயிற்று` என்றலுமாம். ``மொய்க்கும்`` எனப் பொருட்கண் கூறினமையின், உவமைக்கண், ``எறும்பெனவே`` வாளா கூறிப் போயினார். ஆதலின், `எறும்புகள் நெய்க்குடந்தன்னை மொய்த்தல் என, புலன்கள் என்னை மொய்க்கும்` என்பது பொருளாயிற்று. அற்றம் பார்த்து வருதலின், ``மெள்ளென`` என்றார், குறிப்புச் சொல். `செவ்வனம்` என்பதுபோல, `மெள்ளனம்` என வருதலன்றி, `மெள்ளன` என வாராதாகலின், `மெள்ளனவே` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 25

எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால்அரிப்
புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய
கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேஉணர் வுற்றவர்
உம்பரும்பர்
பெறும்பத மேஅடி யார்பெய ராத
பெருமையனே.

பொழிப்புரை :

கொடிய இயமன் ஒடுங்கும்படி, அவன் மேல் பொருந்திய மணம் நிறைந்த தாமரை மலர்களையொத்த உன் திருவடிகளாகிய அவற்றையே அழுத்தி அறிந்தவர்கள் பெறுகின்ற மிக மேலான பதவியாய் உள்ளவனே! அடியவராயினர், பின்பு உன்னை விட்டு நீங்காத பெருமையுடையவனே! எறும்புகட்கு இடையே அகப்பட்ட, நாங்கூழ் புழு அரிப்புண்டு வருந்தினாற்போல, புலன் களிடையே அரிப்புண்டு அரித்துத் தின்னப்பட்டு வருந்திய தனி யேனை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

பொருட்கண், ``அரிப்புண்டு`` என வருகின்றமையின், உவமைக்கண்ணும், `எறும்பிடை நாங்கூழ் அரிப்புண்டால் என` என்றுரைக்கப்படும். ``வெறுந்தமியேன்`` என்றது. `வெறுமையேனை, தமியேனை` என்றபடி. வெறுமை - பயனின்மை. தமி - துணை யின்மை. `கூற்று ஒடுங்குமாறு அவன் மேல் உறும்போது` என்க.
கடி - நறுமணம். போதுஅவையே - போதுகளாகிய அவற்றையே. போது - மலர்; என்றது திருவடியை. உம்பர் உம்பர் - தேவர்க்கும் மேலுள்ள இடம், `உம்பர் உம்பர்க்கண்` என உருபுவிரிக்க.
பதம் - நிலை; என்றது வீட்டினை. இறைவனே வீடாகலின், ``பதமே`` என்று அருளினார். அடியர் - அடியாராயினார். பெயராத - நீங்காத. நீங்காமைக்கு ஏது, பேரின்பம்.

``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``
(தி.12. பெரிய. புரா. கண்ணப். 174) என்றது காண்க. பெயராமையே பெருமை என்றலின், ``பெயராத பெருமை`` என்றதில், பெயரெச்சம் வினைப் பெயர் கொண்டதாம்.

பண் :

பாடல் எண் : 26

பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு
நினைப்பிரிந்து
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன்
கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி
வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக்
கொழுமணியே.

பொழிப்புரை :

பெரிய கங்கையாகிய பெருகுகின்ற நீரையுடைய பள்ளத்துள், எதிர்த்து நிற்றலையுடைய சிறிய தோணியின், தோற்றம் போல வெண்மை நிறமும் குளிர்ச்சியும் பொருந்திய பிறைச்சந்திரன் தவழ்கின்ற சடையினையுடைய, பரமாகாயத்திலுள்ள, செழுமை யாகிய மாணிக்கமே! மிகுந்த நீரானது வற்றிப்போக, சிறிய மீன்கள் வாடினாற்போல உன்னை விட்டு நீங்கிய என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

பெருமை, சிறுமை என்பன, இடமும், இடத்து நிகழ் பொருளுமாய் நிற்கும் அவற்றது இயல்புணர்த்தி நிற்றலின், இயை பின்மை நீக்கிய விசேடணங்களாம். துவளுதல் - மெலிதல். `வெருவு நீர்மை` என்பது குறைந்து நின்றது. வெருவுதல் - அஞ்சுதல்; அச்சம், ஐம்புலன் நோக்கி. உவமையோடு இயையாமையின், பிரிந்த` என்பது பாடம் அன்று. `கங்கை என்னும் பொங்கி வரும் நீராகிய மடு` எனவும், `மலைத்தலை (எதிர்த்தலை)யுடைய சிறுதோணி` எனவும் உரைக்க. வெள்ளைக் குரு நீர் - வெண்மை நிறமாகிய தன்மை. வானக் கொழு மணி - மேலுலகில் உள்ள சிறந்த இரத்தினம்; தலைமைக் கடவுள் என்றபடி.

பண் :

பாடல் எண் : 27

கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச்
சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம்
முழுதுங்கம்பித்
தழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண்
டருளிஎன்னைக்
கழுமணி யேஇன்னுங் காட்டுகண் டாய்நின்
புலன்கழலே. 

பொழிப்புரை :

உடல் முழுதும் நடுங்கப் பெற்று, அழுகின்ற அடியார் நடுவே, என்னைப் பொருத்தி வைத்து அடிமை கொண் டருளி, தூய்மை செய்த மாணிக்கமே! செழுமையாகிய முத்துப் போன்ற அழகிய பல்லினை உடைய மாதரது வலையில் போய் மயங்கி விழுகின்ற அடியேனை விட்டு விடுவாயோ? இனியும் முன்போல உனது ஞானமாகிய திருவடியை அடியேனுக்குக் காட்டுவாயாக.

குறிப்புரை :

``மெய்ம்முழுதும்`` என்றது முதலாக, ``கழுமணியே`` என்பது ஈறாக உள்ளவற்றை முதற்கண் வைத்துரைக்க. ``கொழுமணி`` என்றதில் மணி, முத்து. ``குன்றிடைச் சென்று குன்றி`` என்றது, சொற்பின் வருநிலை. ``குன்றிவிழும்`` என்றது, உடனிலைவகையால், அறிவு குன்றி விரும்புதலையும், மலையிடைச் சென்றோர் வலிமை குன்றி விழுதலையும் குறித்தது. கம்பித்தல் - நடுங்குதல்; இஃது அன்பினாலாம். ஆர்த்து வைத்தல் - அகலாதிருக்கச் செய்தல். கழுவுதல் - பாசத்தை நீக்குதல். ``கழுமணி``, இறந்தகால வினைத் தொகை. புலன் கழல் - ஞானத்தின் திருவுருவாகிய திருவடி. ``இன்னும் நின்கழல் காட்டு கண்டாய்`` என்ற இதனால் `இறைவன் முன்புபோல மற்றும் ஒருமுறை தோன்றியருளல் வேண்டும்` என அடிகள் விரும்பினார் என்பது பெறுதும்.

பண் :

பாடல் எண் : 28

புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர்
பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணும்
மண்ணுமெல்லாங்
கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு
ணாகரனே
துலங்குகின் றேன்அடி யேன்உடை யாய்என்
தொழுகுலமே. 

பொழிப்புரை :

விண்ணுலகமும் மண்ணுலகமும் முழுவதும், அஞ்சிக் கலக்கமுற்றபோது, கடலில் எழுந்த விடத்தை அமுதமாக உண்டவனே! அருட்கடலே! என்னை ஆளாக உடையவனே! என் வேதியனே! அடியேன் பிறப்புக்கு அஞ்சி நடுங்குகின்றேன். ஐம் புலன்களும், திகைக்கச் செய்ய, திகைப்பை அடைந்து, இவ்விடத்தில் ஒரு பொய் வழியிலே, உன்னை விட்டு விலகித் திரிகின்ற என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

``யானும்`` என்ற உம்மை, `உனக்கு அடியவன் ஆகிய யானும்` என்னும் சிறப்புணர்த்திற்று. ``நெறிக்கு`` என்ற நான்கனுருபை ஏழனுருபாகத் திரிக்க. விண், மண் என்பன அவ்விடத்து வாழ்வாரை உணர்த்தின. ``கலங்க`` என்றதன்பின் `கண்டு` என ஒருசொல் வருவிக்க. கருணாகரன் - அருளுக்கு இருப்பிடமாய் உள்ளவன். முன்பு, ``உற்றடியேன் மிகத் தேறிநின்றேன்`` (பா. 23) என்றதுபோல இங்கும் ``துலங்குகின்றேன்`` - (அறிவு விளங்கப் பெறுகிறேன்) என்றார். இதற்கு இவ்வாறன்றி, துளங்குகின்றேன் என்பது பொருளாக உரைப்பாரும் உளர்; அது பொருந்தாமை வெளிப்படை. தொழு குலம் - வணங்கப்படும் இனம். இஃது ஆகுபெயராய், அவ்வினத்தவரைக் குறித்தது; அவர், தாய், தந்தை, மூத்தோர், ஆசிரியன்மார், தெய்வங்கள். `எனக்கு இவரெல்லாருமாய் உள்ளவனே!` என்றபடி. திருநாவுக்கரசரும், ``அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ - அன்புடைய மாமனும் மாமியும்நீ`` (தி.6.ப.95.பா.1) என்று அருளிச் செய்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 29

குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற்
றச்சிலையாம்
விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின்
மின்னுகொன்றை
அலங்கலந் தாமரை மேனிஅப் பாஒப்
பிலாதவனே
மலங்களைந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு
மத்துறவே. 

பொழிப்புரை :

பொன்போல மின்னுகின்ற, கொன்றை மாலை அணிந்த, செந்தாமரை மலர் போன்ற திருமேனியை உடைய அப்பனே! ஒப்பற்றவனே! என் சுற்றத் தொடர்பை அறுத்தவனே! என்னைக் குற்றத்தினின்றும் நீக்கியவனே! வெற்றி வில்லாகிய மேருவையுடைய எந்தையே! கடைகின்ற மத்துப் பொருந்தினவுடன் சுழல்கின்ற தயிர்போல, ஐந்து மலங்களாலும் அலைவுற்று வருந்து வேன். என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`என்னைக் குலம் களைந்தாய்; குற்றம் களைந்தாய்; என்க. சிலை - வில். விலங்கல் - மலை; மகாமேரு. ``கொற்றச் சிலை யாம் விலங்கல் எந்தாய்`` என்றாரேனும், `விலங்கலாம் கொற்றச் சிலை எந்தாய்` என்பதே கருத்தாம். `அலங்கலமேனி` எனவும், `அம் தாமரை மேனி` எனவும் தனித்தனி இயையும். ``தாமரை`` என்றது, செந்தாமரை மலரை. ``செந்தாமரைக்காடனைய மேனித் தனிச் சுடரே`` (தி.8 திருச்சதகம் 26) என முன்னரும் கூறினார். மலங்கள் ஐந்து; ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி. மலங்கள் ஐந்தாகக் கூறப்படுதலை,
``மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையின்
வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்
கீறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்
தாறாத வல்வினை யால்அடி யுண்ணுமே``
என்றாற்போலக் (தி.10 திருமந்திரம் 2160) கூறப்படுதல் காண்க. `பொருமத்துத் தயிரின் உறவே சுழல்வன்` எனக் கூட்டுக. பொருமத்து- கலக்குகின்ற மத்தினைக் கொண்ட. தயிரின் - தயிர் போல. உறவே - மிகவும்.

பண் :

பாடல் எண் : 30

மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது
வக்கலங்கி
வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண்
டலைமிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர்நெடு
மாலைசுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச்செஞ் சாந்தணி
சச்சையனே. 

பொழிப்புரை :

வெண்டலை மாலையை அணிந்து கொத்துக் களாகப் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி நெடு மாலையைச் சுற்றிப் பரவின திருவெண்ணீற்றுடன், சந்தனத்தின் செம்மையான சாந்தினை அணிந்த இளமையை உடைய தலைவனே! புலன்களாகிய நெருப்புப் பற்ற மத்துப் பொருந்திய குளிர்ந்த தயிரைப் போலக் கலங்கி, வேருறுவேனை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

தீக் கதுவ - நெருப்புப்போல வந்து பற்ற. இது வேறுவமை கூறியதாகலின், முன்னை யுவமைக்கு இழுக்கின்மை யுணர்க. வித்து - நடுக்கம். இது, `விதுப்பு` என்பது, முதனிலை மாத்திர மாய் நின்று ஒற்றிரட்டி இப்பொருள் தந்தது. இனி, ``அறிவு`` என்றானும், `அறிவுடையவன்` என்றானும் பொருள்படும் வட சொல்லாகக் கொண்டு, அதற்கேற்ப உரைத்தலும் ஆம். மிலைச்சி - தலையில் அணிந்து. தாருகாவன முனிவர்கள் விடுத்த வெண்டலையைச் சிவபிரான் தனது சடையில் அணிந்து கொண்டமை அறிக. போது - மலர். `குடர் போலும் மாலை` என்க. இது கணவிர (செவ் வலரி) மாலை. சுற்றியது, சடையில். வெண்டலை கிடத்தலின், அதனைச் சூழ்ந்துள்ள மாலையும் குடர்போலத் தோன்றுவதாயிற்று. தத்துறு - பரந்திருக்கின்ற. ஆரம் - சந்தனக்கட்டை. சாந்து - அதனைத் தேய்த்த தேய்வை. குங்குமப் பூக்கலத்தலால், சாந்து செம்மை நிறம் பெற்றது. `செச்சை` என்பது, மோனைநயம் நோக்கி, ``சச்சை`` எனத் திரிக்கப்பட்டது. செச்சை - வெட்சி. `வெட்சிப் பூப்போலும் திரு மேனியையுடையவனே` என்க. இதனுள், சிவபெருமான் திருக் கோலத்தில் செம்மையும், வெண்மையும் விரவிக் கிடத்தலை விதந்த வாறு காண்க.

பண் :

பாடல் எண் : 31

சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால்
நிலம்நெருப்பாம்
விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி
யாய்கரியாய்
பச்சைய னேசெய்ய மேனிய னேயொண்
படஅரவக்
கச்சைய னேகடந் தாய்தடந் தாள
அடற்கரியே. 

பொழிப்புரை :

இளமையுடைய தலைவனே! மிக்க குளிர்ச்சியுள்ள நீரும், ஆகாயமும், காற்றும், நிலமும், தீயுமாக நிற்கின்ற வித்தை யுடையவனே! வெண்மை நிறமுடையவனே! கருமை நிற முடையவனே! பசுமை நிறமுடையவனே! செம்மேனியுடையவனே! அழகிய படத்தையுடைய பாம்பாகிய அரைக் கச்சினை அணிந் தவனே! பெரிய அடிகளையுடைய வலி அமைந்த யானையை வென்ற வனே! விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

அந்தாதி யாதற்பொருட்டு, இங்கும் செச்சை, `சச்சை 2970?` எனப்பட்டது. புனல் - நீர். கால் - காற்று. விச்சை - வித்தை; வியத்தகு தன்மை. வெளியாய் - வெண்மை நிறம் உடையவனே. ``நிறங்கள் ஓர் ஐந்துடையாய்`` (தி.8. சிவபுராணம் 49) என்றதன் குறிப்பைக் காண்க. தடந் தாள அடல் கரி - பெரிய கால்களையுடைய வலிய யானை. `கரியைக் கடந்தாய்` என இயையும்; இதுவும் விளியே.

பண் :

பாடல் எண் : 32

அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி
அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத்
தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு
தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்குங்
கறைக்கண்டனே. 

பொழிப்புரை :

மேலாகிய அடியார்களுக்கு அல்லாது ஏனை யோர்க்குப் பற்றுதற்கு அருமையானவனே! ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே! சுடும் தீயாகிய ஒரு பூதமும் நிலைகலங்க, கடலின் கண் அருமையாய் உண்டாகிய நஞ்சை அமுதாக்கிய நீலகண்டப் பெருமானே! விடுதற்கு அருமையானவனே! வலி பொருந்திய யானையைப் போன்ற ஐம்புல ஆசைக்குப் பயந்து உள்ளம் ஒடுங்கிய என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

அழிந்த - வலி இழந்த. `என்னை விட்டிடுதி கண்டாய்` என இயையும். விடற்கு அரியாய் - உன்னைப் பற்றினோர், பின்னர் விடுதற்கு அரியவனே; `அவர்களை வசிகரித்துக் கொள்பவனே` என்றபடி. ``அடியார் பெயராத பெருமையனே`` என்றார் முன்னும் (பா. 25). அருமை, இங்கு இன்மைமேல் நின்றது. தொடல் - தீண்டல்; அணுகுதல். தீச் சுழல - நெருப்புப் பரக்குமாறு, ``கடற்கு`` என்றதனை, `கடற்கண்` எனத் திரிக்க. `கடத்தற்கு` என்பது குறைந்து நின்றது` எனினுமாம்.

பண் :

பாடல் எண் : 33

கண்டது செய்து கருணைமட் டுப்பரு
கிக்களித்து
மிண்டுகின் றேனை விடுதிகண் டாய்நின்
விரைமலர்த்தாள்
பண்டுதந் தாற்போற் பணித்துப் பணிசெயக்
கூவித்தென்னைக்
கொண்டென்எந் தாய்களை யாய்களை யாய்
குதுகுதுப்பே. 

பொழிப்புரை :

எம் தந்தையே! உன் கருணையாகிய தேனைப் பருகிக் களிப்படைந்து, மனம் போனவாறு செய்து, செருக்கித் திரி கின்ற என்னை விட்டு விடுவாயோ? உனது, மணம் அமைந்த தாமரை மலர் போன்ற திருவடியை முன்னே கொடுத்து அருளினாற் போல கொடுத்தருளி, உன் திருத்தொண்டினைச் செய்ய அழைப்பித்து என்னை ஏற்றுக் கொண்டு வீடுபேற்றுக்கு இடையூறாய் உள்ள களிப் பினைக் களைவாயாக.

குறிப்புரை :

கண்டது, அவ்வப்பொழுது மனத்திற்குத் தோன்றியது; `ஒரு நெறிப்படாத செயல்கள்` என்றபடி. இவ்வாறு செய்தல், எல்லாம் உனது அருள் வழியாக நினைத்து அதனை மறவாமையால் என்பார், `கருணை மட்டுப் பருகிக் களித்து`` என்றும், `அதனால் யாதோர் அச்சமும் இன்றி இருக்கின்றேன்` என்பார், ``மிண்டுகின்றேனை`` என்றும் அருளினார். மட்டு - தேன். மிண்டுதல் - திண்மையுறுதல். ``பண்டுதந்தாற்போல`` என்றதனால், ``பணித்து`` என்றதற்கு, `இன்றும் பணித்து` என உரைக்கப்படும். பணித்தல் - காணக் காட்டுதல். `கூவுவித்து` என்பது, கூவித்து எனக் குறைந்து நின்றது; `நீயே அழை யாது பிறரால் அழைப்பிப்பினும் நன்றே` என்பார், `கூவி` என்னாது, `கூவுவித்து என்றார். இதனால், அடியார்க்கு அடியராய் நிற்கவும் ஒருப்பட்டமை பெறப்படுகின்றது. கொண்டு - ஏற்றுக் கொண்டு. களையாய - (சிவபோதத்திற்குத்) தடையாய் உள்ள. குதுகுதுப்பு - அடக்கம் இன்மை; பரபரப்பு. இது, பேரறிவின்மையால் உளதாவது. இதனை, ``நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் - பேணாமை பேதை தொழில்`` (குறள் - 833) என்பதில், `நாடாமை` என்றார், திருவள்ளுவ நாயனார். இக்காலத்தார் இதனை, `குறுகுறுத்தல்` எனக் கூறுப. எனவே, இது மேல், `கண்டது செய்து` என்றதனையே குறித்த தாயிற்று. அடிகள் இறைவனை மீண்டுங் காண விரும்பினமை, இதனுள் வெளிப்படையாகவே அறியக் கிடக்கின்றது.

பண் :

பாடல் எண் : 34

குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து
நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை
யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின்
மனங்கனிவித்
தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப்
பரம்பரனே. 

பொழிப்புரை :

நிறைந்த மலர்களையுடைய கயிலையில் வாழ் கின்ற மிகமேலானவனே! உன் திருவுளக் கருத்திற்கியைய நடப்பதில் மகிழ்ச்சியின்றி நின்று என் குறிப்பின்படி செய்து, உன் குறிப்பினை அறிவதில் விரைகின்ற என்னை விட்டு விடுவாயோ? வாழைப் பழத்தைப் போல என்னை மனம் குழையச் செய்து, மணம் நிறைந்து இனிதாய் இருக்கின்ற ஓர் இனிமையில் மற்றோர் இனிமை கலந்தது போன்று நீ எதிர்ப்படுவது எக்காலம்?

குறிப்புரை :

`நின் குறிப்பில் குதுகுதுப்பின்றி` எனக் கூட்டுக. நின் குறிப்பு - உனது கருத்து. `உன் திருவுள்ளக் குறிப்பின் வழி நிற்றலில் விரைதல் இன்றி` என்றவாறு. என் குறிப்பு - எனது கருத்து; என்றது, `யான் கருதிய செயல்` என்றபடி. விதுவிதுப்பேன் - மிக்க விரைவினை உடையேன். விரைவு, இறைவனை அடைதற்கு என்க. `நின் குறிப்பின் வழி ஒழுகாமலே உன்னை அடைவதற்கு மிக விரைகின்றேன்` என்ற படி. ``மது` இரண்டனுள் முன்னது, நீர்; பின்னது, தேன். `விலாமிச்சை வேர் முதலிய வாசனைப் பொருள்கள் இடப்பட்டு இனிதாய நீரும், தேனும்போல நீ என் எதிர்வருதல் எப்போது` என்க. ``வாழைப் பழத்தின் மனம் கனிவித்து`` என்றதனை, ``விடுதிகண்டாய்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. பயில்வி - மிக்க தூய்மையையுடைய (கயிலை). இத்திருப்பாட்டிலும் முன்னைப் பாட்டிற் கூறிய கருத்து இனிது விளங்கிக் கிடத்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 35

பரம்பர னேநின் பழஅடி யாரொடும்
என்படிறு
விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென்
முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ
வாயரவம்
பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப்
பொதும்புறவே. 

பொழிப்புரை :

மெல்லிய மதிக்கொழுந்தையும், பாம்பையும் சமமாக வைத்து அணிந்தவனே! எம் பிரானே! தீவினையுடைய நான், மனம் நடுங்கிப் புகலிடம் அடையும்படி, பிறப்பாகிய ஐந்தலை நாகம் தாக்குகின்றது. மிக மேலானவனே! உன் பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடும், எனது வஞ்சத் தொண்டினையும் ஏற்றுக் கொள்ளுகின்ற சங்காரக் கடவுளே! என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

``பழ அடியார்`` என்றது ஆகு பெயராய், அவரது மெய்யன்பினைக் குறித்தது. மூன்றாம் பிறை முதற்கண் தோன்றுவ தாகலின், அதனை, ``அரும்பு`` என்றார். `அரா` என்பது, `அர` என நின்றது. நேர்வைத்து அணிதல் - எதிர் எதிராக வைத்து அணிதல். `சந்திரனும், பாம்பும் பகைப் பொருள்களாக, அவற்றைப் பகையின்றி இயைந்திருக்க வைத்து அணிந்தாய்` என்றபடி. `பாம்பும் மதியும் புனலும் தம்மிற் பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி`` எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் (தி.6.ப.5.பா.4) அருளினார். `பிறவியாகிய விடத்தைத் தருகின்ற ஐந்தலை அரவம்` என்க. அது, புலன்கள்மேல் செல்கின்ற அவா. அவா ஒன்றாயினும், புலன்கள் ஐந்தன் மேலும் செல்லுதலின், ``ஐவாய் அரவம்`` என்றார். பிறவியை விடம் என்னாமையின் ஏகதேச உருவகமும், `அவா` என்பதனை வெளிப்படக் கூறாது, வாளாதே, ``ஐவாய் அரவம்`` என்றமையின், குறிப்புருவகமும் வந்தனவாம். இனி, ``வாய்`` என்றது, பொறிகளை எனக் கொண்டு, அஃது ஆகுபெயராய்ப் புலன்களைக் குறித்தன எனினும் ஆம். இப்பொருட்கு, `அரவம், பன்மையாம், பொரும் - போர் செய்யும். `விடில் பொரும்` என்பதாம். பெருமான், விளி. ``பொதும்புஉற`` என்றதற்கு, `துன்பமாகிய காட்டில் புகும்படி` என உரைக்க. `பொதும்பு உறப்பொரும்` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 36

பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன்
தீக்கதுவ
வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை
யார்நறவந்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந்
தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வார்யி
தடலரைசே.

பொழிப்புரை :

மனம் நிறைந்த, தேன் ததும்புகின்ற மந்தார மலரில் தாரமாகிய வல்லிசையைப் பழகி, பின் மந்தமாகிய மெல்லிசையை ஒலிக்கின்ற, வண்டுகள் அழுந்தித் திளைக்கின்ற செழுமையாகிய தேனோடு கூடி விளங்குகின்ற சடையினையுடைய, பரமாகாயத்தி லுள்ள வலிமை மிக்க அரசனே! மரப்பொந்தினை அடைந்த நெருப்புப் போல, புகைந்து எரிகின்ற அந்தப் புலன்களாகிய நெருப்புப் பற்று தலால் வெப்பமுறுகின்ற என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

பொதும்பு - காடு ``பொதும்புறு தீப்போல்`` என்று அருளினாராயினும், `தீயுறு பொதும்புபோல்` என்றலே திருவுள்ள மாம். புகைந்து எரிதற்கு, `உள்ளம்` என்னும் வினை முதல் வருவிக்க. தீக் கதுவ - தீயனவாய் வந்து பற்ற. வெதும்புறுதல் - வருந்துதல். நறவம் - தேன். தாரம் - வல்லிசை. மந்தம் - மெல்லிசை. இவற்றிற்கு இடைப்பட்டதனை, `மத்திமம்` என்ப.
``மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்முறை யால்
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்``
(தி.12 பெரி. புரா. ஆனாய. 27) என்றதுங் காண்க. முரல் - ஒலிக்கின்ற. `அசும்பும்` என்பது, ``அதும்பும்`` எனத் திரிந்தது; `சிந்தும்` என்பது பொருள். வண்டினையும், தேனையும் உடைய `சடையாகிய வானம்` என்க. வானம், செவ்வானம்.

பண் :

பாடல் எண் : 37

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச
லென்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண்
நகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற்
பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்
தடர்வனவே. 

பொழிப்புரை :

வெண்மையான பல்லினையும், கருமையான கண்ணையும் உடைய, திருப்பாற்கடலில் தோன்றிய திருமகள் வணங்கிப் பொருந்திய அழகிய திருப்பாதங்களையுடைய, பாம் பணிந்த பெருமானே! அரசனே! மணம் பொருந்திய முடியினையுடை யவனே! மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போல, கொடிய வினைப் பயன்கள் வந்து தாக்குகின்றன. அறிவில்லாத சிறியேனது குற்றத் திற்குத் தீர்வாக, அஞ்சற்க என்று நீ அருள் செய்தல் அல்லாது விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

பிழைக்கு - பிழையை நீக்குதல் காரணமாக. `அஞ்சல் என்னின் அல்லால் வல்வினைதாம் வந்து அடர் வனவே` என இயையும். ``விடுதி கண்டாய்`` என்றதனை இறுதிக்கண் கூட்டி, இதற்கு முன், `அதனை அறிந்தும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. திரை சேர் மடந்தை - கங்கை. `கண்ணாகிய கடல் பொருந்திய மடந்தை` என்று உரைத்து, `உமையம்மையை மணந்த` என்றலுமாம். `மணந்த புயங்கா` என இயையும். வரைசேர்ந்து அடர்ந்தென்ன - மலைகள் பல ஒருங்கு கூடி நெருங்கினாற்போல.

பண் :

பாடல் எண் : 38

அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல்
லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந்
தேயெரியுஞ்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும்
பர்க்கமுதே
தொடர்வரி யாய்தமி யேன்தனி நீக்குந்
தனித்துணையே. 

பொழிப்புரை :

பரந்து எரிகின்ற நெருப்பை ஒத்தவனே! சுடு காட்டின் அரசனே! தொண்டர்க்கு அமுதமே! அணுகுதற்கு அரிய வனே! தனியேனது, தனிமையை நீக்குகின்ற தனித்துணையே! வருந்து கின்ற புலன்களால் உன்னைப் பிரிந்து அஞ்சி, இன்சொற்களையுடைய மாதர்களது மயக்கினை விட்டு நீங்கும் ஆற்றல் இல்லாத என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

அஞ்சுதல், பிறவிபற்றி. `அவ்வச்சம் ஒருபால் உளதா யினும், ஒருபால் மாதராசையும் நீங்கமாட்டாதவனாய் இருக்கின் றேன்` என்பார், ``அஞ்சி விடர் விடலேன்`` என்று அருளிச் செய்தார். ``அவர்தம்`` என வேற்றுமைத்தொகை பட அருளினமையின், பண்புத் தொகையாக உரைத்தல் ஏற்புடைத்தன்றாம். சுடர் - தீ; ஆகுபெயர். `பிறர்க்குத் தொடர்வரியாய்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 39

தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை
யால்நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை
யேனுடைய
மனத்துணை யேஎன் றன் வாழ்முத லேஎனக்
கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும்பொ றேன்துய ராக்கையின்
திண்வலையே. 

பொழிப்புரை :

வினையேனது, மனத்துக்குத் துணையே! என்னுடைய வாழ்வுக்குக் காரணமானவனே! எனக்கு இளைத்த காலத்தில் நிதியாய் இருப்பவனே! துன்பங்களுக்கு ஆதாரமாகிய உடம்பென்னும் திண்ணிய வலையிற் கிடப்பதைத் தினை அளவு நேரங்கூடப் பொறுக்கமாட்டேன். ஒப்பற்ற துணையாகிய நீ இருக்க, செருக்கடைந்து, தலையாலே நடந்த வினையைத் துணையாகவுடைய என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

தனித்துணை - ஒப்பற்ற துணைவன். `ஒப்பற்ற துணை வனாகிய நீ நிற்க உன் வழிநில்லாது, யான் தனியே என் ஆற்றலையே துணையாகக் கொண்டு செருக்குற்று முறைமாறாக நடந்தேன்; அதனால், எனக்கு அந்நடையின் பயனாக விளைந்த வினைதான் துணையாக முடிந்தது; என்னை விடுதிகண்டாய்` என்றபடி.
``நடந்த வினைத்துணையேன்`` என்ற வினைமுதற் பெயர் கொண்ட பெயரெச்சத்திற்கு முன்னர், ``யான்`` என எழுவாய் புணர்த்தமையின், `யான் தருக்கி நடந்தேன்; அங்ஙனம் நடந்த என்னை` என உரைக்க. பின்னரும் இவ்வாறு வருவன உள; அவற்றை அறிந்து கொள்க. ``ஆக்கையின்`` என்றதில் இன், அல்வழிக்கண்வந்த சாரியை.

பண் :

பாடல் எண் : 40

வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின்
வலையிற்பட்டு
மிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண்
மதியின்ஒற்றைக்
கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி
லாயமென்னும்
மலைத்தலை வாமலை யாள்மண வாளஎன்
வாழ்முதலே. 

பொழிப்புரை :

வெள்ளிய சந்திரனது ஒரு கலையைத் தலையில் அணிந்தவனே! கருணைக்கு இருப்பிடமானவனே! கயிலாயம் என்கிற மலைக்குத் தலைவனே! மலை மகளாகிய உமாதேவிக்கு மணாளனே! என் வாழ்வுக்கு மூலமே! வலையினிடத்து அகப்பட்ட மான் போன்ற கண்களை உடைய மாதரது பார்வையாகிய வலையிற்சிக்கி, மயங்கி அலைந்த என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

``வலைத்தலை`` என்றதில் தலை ஏழனுருபு. நோக்கு - பார்வை. ``நோக்கின்`` என்றதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை.
மிலைத்து - மேற்கொண்டு. மேற்கொண்டது, உலகியலை என்க. கலைத்தலையாய் - கலையை அணிந்த முடியையுடையவனே. மலையாள் - மலைமகள்.

பண் :

பாடல் எண் : 41

முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற்
கடிப்பமூழ்கி
விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக்
கூன்மிடைந்த
சிதலைச்செய் காயம் பொ றேன்சிவ னேமுறை
யோமுறையோ
திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன்
சிவகதியே. 

பொழிப்புரை :

தேமல் படர்ந்த அணி பூண்ட கொங்கைகளை யுடைய உமை பாகனே! என் இன்ப நெறியே! சிவபெருமானே! முதலைபோன்ற கொடுமையையுடைய, சிவந்த வாயைக் கொண்டுள்ள மாதரது ஆசையாகிய வெப்பம் மிகுந்த நீரில் ஆழ முழுகி, நடுக்கம் உறு கின்ற என்னை, விட்டு விடுவாயோ? புலால் நாற்றமுடைய தசை நிறைந்த, நோய்க்கு இடமாகிய உடம்பைத் தாங்க மாட்டேன். இந் நிலை தகுமோ? தகுமோ?

குறிப்புரை :

``முதலைச் செவ்வாய்ச்சியர்`` என்றதனை, `செவ்வாய்ச்சியர் முதலை` என மாற்றிக்கொள்க. வெந்நீர் - கொடிய நீர்; சுழலையுடைய நீர். கௌவுதலை, `கடித்தல்` என்றார். விதலை - நடுங்குதல். விடக்கு ஊன், ஒருபொருட் பன் மொழி.
சிதலை - நோய். `முறையோ` என்பது, முறையீட்டுச் சொல். திதலை - சுணங்கு (தேமல்). சிவகதி - நற்கதி; வீடு. முதல் அடி தவிர ஏனைய அடிகளின் முதற்சீரில் சகர ஒற்றுக்கள் விரித்தலாய் வந்தன.

பண் :

பாடல் எண் : 42

கதியடி யேற்குன் கழல்தந் தருளவும்
ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண் டாய்வெண்
டலைமுழையிற்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச்
சுருங்கஅஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை
மன்னவனே. 

பொழிப்புரை :

வெண்மையான தலையாகிய வளையை இருப்பிடமாக உடைய ஒளியையுடைய பாம்பானது, நோக்கிச் சற்றுப் படமெடுத்து அதனைச் சுருக்கிக் கொள்ளவும், பிறைச்சந்திரன், அதனைக் கண்டு பயந்து, கங்கையாகிய பெரிய நீர் நிலையில் மூழ்கி மறைந்து கொள்ளும் சடையையுடைய தலைவனே! அடியேனுக்கு உயர் ஞான நெறியை உன் திருவடிகள் கொடுத்தருளவும், உடல் நீங்கப் பெறவில்லை. ஊழ்வினையுடைய அடியேனை விட்டு விடு வாயோ?

குறிப்புரை :

`கதியாக` என, ஆக்கம் வருவிக்க. ஊன் கழியா - உடம்பை நீக்கமாட்டாத. விதி அடியேனை - வினையை உடைய என்னை. பதி உடை - பொருந்துதல் உடைய. வாள் அர - கொடிய பாம்பு. இறை பைத்து - சிறிது படம் எடுத்து. சுருங்க - பின் அவ் விடத்தே ஒடுங்க. ``அஞ்சி`` என்றதனை, ``மதி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. நெடுநீர் - கங்கையாகிய மிக்க நீர். மதி, நிறைவின்றிப் பிறையாய்த் தோன்றுதலின், பாம்பு அதன்பால் செல்லாதாயிற்று. எனவே, பார்த்தமை, நிரம்பினமை அறிதற்பொருட்டாயிற்று.

பண் :

பாடல் எண் : 43

மன்னவ னேஒன்று மாறறி யாச்சிறி
யேன்மகிழ்ச்சி
மின்னவ னேவிட் டிடுதிகண் டாய்மிக்க
வேதமெய்ந்நூல்
சொன்னவ னேசொற் கழிந்தவ னேகழி
யாத்தொழும்பர்
முன்னவ னேபின்னும் ஆனவ னேஇம்
முழுதையுமே. 

பொழிப்புரை :

மேலான வேதமாகிய உண்மை நூலினைச் சொன்னவனே! சொல்லினுக்கு அப்பாற்பட்டவனே! நீங்காத அடியார்க்கு முன் நிற்பவனே! அவர்க்கு ஆதரவாகப் பின் நிற்பவனும், இவ்வெல்லாமும் ஆனவனே! தலைவனே! உன்னை வந்து கலக்கும் விதத்தை அறியாத சிறியேனுக்கு இன்ப விளக்கமாய்த் திகழ்பவனே! விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

மாறு - பிழை. இஃது, உலகியல் வகையில் பிழை ஒன்றும் செய்யாமையைக் குறித்ததாம். `ஆறு` எனப்பிரித்து, `வழி` எனவும் பொருள் உரைப்பர். மின்னவன் - மின்னலைச் செய்தவன். இறைவன் தோன்றி மறைந்தமையின், `மகிழ்ச்சியாகிய மின்னலைச் செய்தவன்` என்று அருளினார். கழியா - விட்டு நீங்காத. முன்னவன்- கண்முன் தோன்றுபவன். ``பின்னும்`` என்றது, `மற்றும்` எனப் பொருள்தந்தது. இம் முழுதையும் ஆனவனே என மாற்றியுரைக்க. இகரச் சுட்டின் ஈற்றில் நின்ற வகரமெய், மகரமாய்த் திரிந்தது. ``முழுதையும்`` என்றதில் ஐ, சாரியை. `இவை முழுதும் ஆனவனே` என்பது பொருள். `நிலம் நீர் முதலாகக் காணப்படுவனவற்றை` ``இவ்`` எனச் சுட்டிக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 44

முழுதயில் வேற்கண் ணியரெனும் மூரித்
தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின்
வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வான்நற் றொழும்பரிற் கூட்டிடு
சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனைவி டேல்உடை யாய்உன்னைப்
பாடுவனே. 

பொழிப்புரை :

எம் பெருமானே! உடையவனே! முழுக் கூர்மையை உடைய வேற்படை போன்ற கண்களையுடைய மாதரார் என்கிற பெரு நெருப்பில் முழுகுகின்ற வெண்ணெய் போன்ற என்னை விட்டு விடுவாயோ? உன்னை நான் புகழ்ந்து பாடுவேன். உனது மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடியை வணங்கிச் செல்லுகின்ற பரவெளித் தொண்டரோடு சேர்ப்பாயாக. குற்றம் செய்யும் என்னைக் கைவிடாதே! வணக்கம்.

குறிப்புரை :

`முழுதும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``கண்ணியர்`` என்றது ஆகுபெயராய், அவர் மேற்செல்லும் ஆசையைக் குறித்தது. `முழுதும் முழுகும்` என இயையும்.
மூரித்தழல்- பெரிய நெருப்பு. விழுது - இழுது; வெண்ணெய். செல் - சென்ற. வான் நல் தொழும்பர் - வீட்டுலகத்தில் உள்ள நல்ல அடியார். அவர்களை, ``நற்றொழும்பர்`` என்றது, தாம் அன்ன ராகாமையை விளக்குதற்கு. சோத்து - வணக்கம்; இஃது இழிந்தோர் கூற்றாயே வரும். செய்வேன் என்றது செய்யும் இயல்பினேன் என்றதாம். `ஆயினும் உன்னைப் பாடுதல் செய்வேன்; ஆதலின், விடுதல் ஆகாது` என்பார், மறித்தும், ``விடேல்`` என விண்ணப்பித்தார்.

பண் :

பாடல் எண் : 45

பாடிற்றி லேன்பணி யேன்மணி நீஒளித்
தாய்க்குப்பச்சூன்
வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந்
தாங்கலறித்
தேடிற்றி லேன்சிவன் எவ்விடத் தான்எவர்
கண்டனர்என்
றோடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேன்நின்
றுழைத்தனனே.

பொழிப்புரை :

மாணிக்கமே! நின் புகழைப் பாடமாட்டேன். நின்னை வணங்கேன். எனக்கு ஒளித்துக் கொண்ட உன் பொருட்டே, பசிய ஊனுடம்பைத் தொலைத்திடாத என்னை விட்டுவிடுவாயோ? வியப்படைந்து அவ்விடத்தே, அலறித் தேடிற்றிலேன்; சிவபெருமான் எவ்விடத்திலுள்ளான்? யார் அவனைக் கண்டனர்? என்று கேட்டு ஓடிற்றிலேன். மனம் கசிந்து அன்பு செய்யேன்; வீணே நின்று வருந்தினேன்.

குறிப்புரை :

``வீடிற்றிலேனை`` என்றது, `வீடிற்றிலேன்; என்னை,` என இருசொற்பொருட்டாய் நின்றது. ``மணி`` என்றது, விளி. ``நீ விடுதிகண்டாய்`` என இயையும். வியந்து - மருண்டு. `மணியே` ஒளித்த உன் பொருட்டுப் பாடிற்றிலேன்; பணியேன்; வியந்து ... ... ... உருகேன்; பச்சூன் வீடிற்றிலேன்; நின்று உழைத்தனன்; என்னை நீ விடுதிகண்டாய்` என்க. `உயிர்நின்ற உடம்பு` என்பார், ``பச்சூன்`` என்று அருளினார். உழைத்தனன் - அலந்தேன்.

பண் :

பாடல் எண் : 46

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்
தீயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின்
வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன்
தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென் றறைவன்
பழிப்பினையே. 

பொழிப்புரை :

மான்போன்ற பார்வையையுடைய பெண்டிரது, கொங்கையின்கண் பலாக்கனியில் மொய்க்கும் ஈயை ஒத்து விரும் புகின்ற என்னை விட்டுவிடுவாயோ? விட்டுவிடுவாயாயின், கடல் விடமுண்ட மேகம் போன்ற கருமையான கழுத்தை உடையவன்; குணம் இல்லாதவன்; மானிடன்; குறைந்த அறிவுடையவன்; பழைய பெரிய பரதேசி; என்று அடிக்கடி உன் இகழ்ச்சியை எடுத்துச் சொல்வேன்.

குறிப்புரை :

உழை - மான். தரு, உவம உருபு. `கொங்கைக் கண்` என உருபு விரிக்க. ``ஈயின்`` என்றதில் இன், வேண்டா வழிச் சாரியை. பலாப்பழத்து ஈ, அதன்கண் வீழ்ந்து மீள மாட்டாது அழிதலாகிய தொழில்பற்றி வந்த உவமை. இதற்கு, கொங்கையைப் பலாப்பழத் தோடு உவமித்ததாக உரைத்து, அதன்மேலும் பல நயம் கூறுவாரும் உளர். `நஞ்சுண் கறைக்கண்டன் முதலிய சொற்களெல்லாம் பழிப் பினையே புலப்படுத்துவன` என்றபடி, நஞ்சுண்டல், பேரறிவில்லா தாரது செயல்; கண்டத்தில் கறுப்புண்மை உடல் அழகிற்கு ஓர் மறு; மானிடன் - தேவனல்லன். தேய் மதியன் - குறைந்த அறிவையுடைய வன். பழை - பழைமை. தரு - பொருந்திய; என்றது, `யாவராலும் அறியப்பட்ட` என்றபடி. மா அபரன் என்றே பிரித்து, மிகவும் கீழானவன்` என உரைக்க. இனி மா பரன் என்றே பிரித்து `யாவர்க்கும் மிக அயலான்` என்று உரைப்பினும் ஆம். `என்னை ஏன்று கொள்ளாது விட்டுவிடின், இப்பெயர்கள் எல்லாம் இங்ஙனம் கூறும் பொருளையே உடையனவாய் விடும்` என்றபடி. இங்ஙனம் இச்சொற்களை வேறு பொருள்பட வைத்தமை அடிகளது புலமைத் திறத்தையும் உணர்த்துகின்றது.
இப் பாட்டிலும், ``சிரிப்பிப்பன்`` எனப் பின்னர் வருகின்ற பாட்டிலும் அடிகள் தம்மை இறைவன் ஆட்கொண்ட உரிமையாற் சில கூறினமை அறிந்து இன்புறற்பாலது. குணம் இலி - மாயா குணங் களாகிய முக்குணங்களுள் ஒன்றும் இல்லாதவன். மான் இடன் - பெண்ணை அல்லது மானை இடப்பக்கத்தில் கொண்டவன். தேய் மதியன் - தேய்ந்த சந்திரனை அழிந்தொழியாதபடி அணிந்தவன். பழை தரு மா பரன் - அனாதியான பெரிய மேலானவன். இவையே இச்சொற்கள் குறிக்கும் உண்மைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 47

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி
விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண்
மணிப்பணிலங்
கொழித்துமந் தாரம்மந் தாகினி நுந்தும்பந்
தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு
தாரவனே. 

பொழிப்புரை :

ஆகாய கங்கை, வெண்மையான மணியாகிய முத்தினையும், சங்கினையும், ஒதுக்கி மந்தார மலர்களைத் தள்ளுகின்ற அணையாகிய பெருமையைப் பொருந்திய சிறைப்பட்ட அந்நீரில், பிறையாகிய தோணி சேர்தற்கிடமாகிய, கொன்றை மாலையை யுடையவனே! பழிப்பற்ற உன் திருவடியின் பழம் தொண்டினை அடைந்து, அது நழுவி விழ, உன்னை நிந்தித்துக் கொண்டு, திகைத் திருந்த என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

விழ - அஃது என்னிடத்தினின்றும் தவறிவிட. பழித்து- அதனால் என்னையே பழித்துக்கொண்டு. `பழித்து - பழிக்கப்பட்டு` எனினுமாம்.
வெண்மணி - முத்து. பணிலம் - சங்கு. மந்தாரம் - மந்தார மலர்; இஃது இறைவன் சடையில் உள்ளது. `நுந்தும் மந்தாகினி` என மாறுக. நுந்தும் - தள்ளுகின்ற. மந்தாகினி - கங்கை. `மந்தாகினியாகிய நீரில்` என்க. `பந்தப் பெருமை தழி` என்பதனை, ``வெண்மணி`` என்றதற்கு முன்னே கூட்டுக. பந்தப் பெருமை - (உன்னோடு) தொடர்புற்று வாழும் பெருமை. `தழீஇ` என்பது குறுகி நின்றது. சிறை நீரில் - தடுத்து வைக்கப்பட்ட நீரில். கலம் - மரக்கலம்; தோணி. தார் - மாலை. இது, கொன்றை மாலையே என்பது அறியப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

தாரகை போலுந் தலைத்தலை மாலைத்
தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடில்
என்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங்
கைக்கரசின்
சீரடி யாரடி யான்என்று நின்னைச்
சிரிப்பிப்பனே. 

பொழிப்புரை :

நட்சத்திரம் போல, தலையில் தலைமாலையை யும், நெருப்புப் போற்கொடிய பாம்பாகிய ஆபரணத்தையும் அணிந்த வீரனே! என்னை விட்டுவிடுவாயோ? விட்டுவிடில் மேலோர் என்னை நோக்கி, யாருடைய அடியான் என்று கேட்டால், திருவுத்தரகோச மங்கைக்கு வேந்தனாகிய சிவபிரானது சிறப்புடைய அடியாருக்கு அடியவன் என்று சொல்லி, அவர்கள் உன்னைச் சிரிக்கும்படி செய்வேன்.

குறிப்புரை :

தாரகை - விண்மீன். தாரகை போலும் தலையில் உள்ள தலைமாலையையும், தழல்போலக் கொடிய அரவமாகிய அணி கலத்தையும் உடைய வீரனே` என்க. ``தலைமாலை தலைக்கணிந்து`` (தி.4.ப.9.பா.1) எனவும், ``தலைக்குத் தலை மாலை அணிந்த தென்னே`` (தி.7.ப.4.பா.1) எனவும் வந்தனவற்றால், சிவபிரான் தலையிலும் தலைமாலை யணிந்திருத்தல் அறியப்படும். மிக்கார் - உயர்ந்தோர். ``ஆரடியான்`` என்றதற்கு `நீ` என்னும் எழுவாய் வரு விக்க. என்னின் - என்று வினாவின். என்று - என்று விடை சொல்லி. ``சிரிப்பிப்பன்`` என்றது. இவ்விடையைக் கேட்ட அளவில், `இவனை ஆட்கொண்டது இவ்வாறுதானோ` என்று நின்னை அவர்கள் எள்ளி நகையாடுவார்கள் என்றபடி. எனவே, `சிரிப்பிப்பன்` என்பதற்கு, `சிரித்தற்குக் காரணனாய் நிற்பேன்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 49

சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும்
ஈசற்கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின்
வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ் சூண்பிச்சன்
ஊர்ச்சுடுகாட்
டெரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்பிச் சன்என்
றேசுவனே. 

பொழிப்புரை :

என்னை நீ விட்டு விடுவாயோ? விட்டுவிட்டால், என்னை நீ சினந்து தள்ளிய குற்றத்தை, பிறர் நகையாடும்படி செய்வேன். எனது தொண்டையும் ஈசனுக்கே என்று எல்லோரும் சொல்லும்படி செய்வேன். கொடிய யானையின் தோலைப் பூண்ட பித்தன்; புலித்தோல் ஆடையணிந்த பித்தன்; விடத்தை உண்ட பித்தன்; ஊர்ச் சுடுகாட்டு நெருப்போடு ஆடும் பித்தன்; என்னையும் அடிமையாகக் கொண்ட பித்தன்; என்று உன்னை இகழ்ந்து உரைப்பேன்.

குறிப்புரை :

``என்னை விடுதிகண்டாய்; விடின்`` என்றதனை, ``முதலிலும், என்னையும் ஆளுடைப் பிச்சன்`` என்றதனை, `வெங்கரி யின்` என்றதற்கு முன்னும் கூட்டுக. `சீறும் பிழைப்பைச் சிரிப்பிப் பன்` என மாற்றிக் கொள்க. சீறும் பிழைப்பு - ஆட்கொண்டபின் என்னை வெறுக்கும் உனது தவறான செயலை. சிரிப்பிப்பன் - பிறர் இகழுமாறு செய்வன். தொழும்பையும் ஈசற்கு என்றே விரிப்பிப் பன்-`இவனது அடிமைத்திறமும் சிவபெருமானுக்குத் தான்` என்று பலரும் தம்முள் விரிவாக எடுத்துப் பேசும்படி செய்வேன். பிச்சன் - பித்தன். எரிப் பிச்சன் - தீயில் நின்று ஆடும் பித்தன். ``என்னையும்`` என்றதில் உள்ள உம்மை, `ஏனை அடியார்களோடு` என இறந்தது தழுவிற்று.

பண் :

பாடல் எண் : 50

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக்
கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம்
பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற்
றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக்
கடையவனே. 

பொழிப்புரை :

செந்நிறமுடைய பவள மலை போன்ற ஒளியுடைய திருமேனியனே! என்னை அடிமையாக உடையவனே! சிற்றறிவும் சிறுதொழிலுமுடைய தேவர்களுக்கு இரங்கி, அவர்கள் அமுதம் உண்ணுதற் பொருட்டு, கொல்லும் வேகத்தோடு எழுந்த ஆல கால விடத்தை உண்டவனே! கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், வாழ்த்தினாலும், எனது குற்றத்தின் பொருட்டே மனம் வாடி, துக்கப்படுவேன்; அவ்வாறுள்ள என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

ஏசுதல் - இகழ்தல். ஏத்துதல் - புகழ்தல். பிழைக்கு - பிழை செய்தது கருதி. குழைந்து - மெலிந்து. வேசறுவேன் - வருந்து வேன். இங்கும், `வேசறுவேனை` என்றதற்கு, `வேசறுவேன்` `அத்தன்மையனாகிய என்னை` என இருசொற்பொருட்டாக உரைக்க. `சிற்றுயிர்` என்றது, இயைபின்மை நீக்கிய விசேடணம். இது தேவர் முதலிய யாவரையும் குறித்தது. எங்கும் பரந்து கொல்லத் தொடங்கிய செயலை, `காய்கின்ற சினம்` என்றார். ஆலம் - நஞ்சு. `சிற்றுயிர்க்கு இரங்கி, அவை அமுதுண்ணுதற் பொருட்டு ஆலமுண்டவனே` என்க. `கடையவன்` என்றது, முதற்கண் நின்ற, `யான்` என்றதனோடு இயையும். இதனால், இறுதிக்கண் சில திருப்பாட்டுக்களில் அடிகள் இறைவனை இகழ்வதுபோலக் கூறினமைக்கு வருந்தி `என் வாயினின்றும் எழுந்த சொற்கள், ஏசுதல், ஏத்துதல் என்பவற்றுள் எவ்வடிவில் அமைந்திருப்பினும், என் கருத்து, என் பிழையைக் கருதி வருந்துவதல்லது உன்னைப் பழிப்பதன்று என்பது நீ அறிந்ததன்றோ` என விண்ணப்பித்து, தம்மைக் கைவிடாது ஏற்றருளுமாறு வேண்டி னமை காண்க. ``ஆலம் உண்டாய்`` என்றதும், `பிழையைப் பொறுக்கற் பாலை`` என்னும் குறிப்பினதே. இத்திருப்பாட்டின் இறுதிச் சீர், முதல் திருப்பாட்டில் எடுத்த, `கடையவன்` என்னும் சொல்லேயாய், அதனோடு சென்றியைந்து மண்டலித்தல் காண்க.
சிற்பி