திருவாசகம்-திருப்புலம்பல்


பண் :

பாடல் எண் : 1

பூங்கமலத் தயனொடுமால்
அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள்
கூறாவெண் ணீறாடீ
ஓங்கெயில்சூழ் திருவாரூர்
உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா
தெவையாதும் புகழேனே.

பொழிப்புரை :

அழகிய தாமரை மலரிலுள்ள பிரமனோடு, திருமாலும் அறியவொண்ணாத இயல்பையுடையவனே! கோங்க மலர் போன்ற குவிந்த தனங்களையுடைய உமையம்மையின் பாகனே! திருவெண்ணீறு அணிவோனே! உயர்ந்த மதில் சூழ்ந்த திருவாரூரை இடமாக உடையவனே! அடியேனாகிய நான் உனது, தாமரை மலர் போன்ற திருவடிகளாகிய அவற்றையன்றி வேறு எவற்றையும் ஒரு சிறிதும் புகழமாட்டேன்.

குறிப்புரை :

நெறி - நிலை. கோங்கலர் - கோங்கம் பூ. சேர், உவம உருபு. ஓங்கு எயில் - உயர்ந்த மதில். `எவற்றையும் சிறிதும் புகழேன்` என்க.

பண் :

பாடல் எண் : 2

சடையானே தழலாடீ
தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ
பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ்
பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா
துறுதுணைமற் றறியேனே.

பொழிப்புரை :

சடாபாரத்தையுடையவனே! அழலாடுவோனே! விளங்குகின்ற மூவிலைகளையுடைய சூலப்படையை யுடையவனே! மேலான சோதியே! பசுபதியே! இளமை பொருந்திய வெண்மையான இடபத்தை யுடையவனே! விரிந்த சோலை சூழ்ந்த திருப்பெருந் துறையில் வீற்றிருப்பவனே! உடையவனே! அடியேனாகிய நான் உன்னையன்றி, வேறு உற்ற துணையை அறிந்திடுவேன் அல்லேன்.

குறிப்புரை :

தயங்கும் - விளங்குகின்ற. மழ - இளமை. `அடியேனாகிய நான் உறுதுணை மற்று அறியேன்` என்க.

பண் :

பாடல் எண் : 3

உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே. 

பொழிப்புரை :

திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற, கூத்தப் பெருமானே! உறவினரை யான் விரும்புவேனல்லேன்; வாழ்வதற்கு ஊரை விரும்புவேன் அல்லேன்; புகழை விரும்புவேன் அல்லேன்; கல்வியை மட்டும் கற்றவரை யான் விரும்பமாட்டேன். கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும். உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிக்கண் கன்றையுடைய பசுவினது மனத்தைப் போலக் கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன்.

குறிப்புரை :

உற்றார் - கிளைஞர். வேண்டேன் - விரும்பமாட்டேன். ஊர் - யான் பிறந்த ஊர். பேர் - புகழ். கற்றார் - கல்வியைமட்டும் கற்று, அதன் பயனை அறியாதவர். கற்பன - கற்கத் தகும் நூல்கள். அமையும் - போதும். `கல்வியின் பயன் கிடைத்துவிட்டபின் கல்வி எதற்கு` என்றபடி. குரை கழல் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடி. கற்றா - கன்று ஆ; கன்றையுடைய பசு. `இதன் மனம் கன்றை நினைந்து கசிந்து உருகுதல்போல உருக விரும்புகின்றேன்` என்க.
சிற்பி