திருவாசகம்-அற்புதப் பத்து


பண் :

பாடல் எண் : 1

மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்
ஆழியுள் அகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான்
தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன்
பொன்னடி யிணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 

பொழிப்புரை :

மயக்கவுணர்ச்சியுடையவனாய் இந்த மண்ணுலக வாழ்வு என்கிற கடலில் அகப்பட்டுப் பெண்கள் என்கிற சுழலினிடத்துச் சிக்கி, நான் நிலை கெட்டுப் போகாதபடி, உண்மைப் பொருளாய்த் தோன்றித் தன் அழகிய திருவடிகள் இரண்டையும் யான் காணும்படி காட்டி, பொய்ப்பொருளெல்லாம் விட்டு நீங்கும் வண்ணம் திருவருள் புரிந்து, ஞான ஒளியைக் கொடுத்து எதிரே நின்றதாகிய ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேனல்லேன்.

குறிப்புரை :

மையல் - மயக்கம். ஆழி - கடல். சுழி - கடற்சுழி. தலை தடுமாறல் - நெறிபிறழ்ந்து நடத்தல். மெய்யனாய் - மெய்யுணர்வைத் தரும் ஆசிரியனாய். வெளி - பரவெளி. திருவருள் தருதல் முதலியவற்றிற்கு, `எம்பெருமான்` என்னும் வினைமுதல் வருவிக்க. விளம்பேன் - சொல்லும் வகையை அறியேன். `சொற்கு அடங்காதது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 2

ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர்
இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந்
தலைதடு மாறாகிப்
போந்தி யான்துயர் புகாவணம் அருள்செய்து
பொற்கழ லிணைகாட்டி
வேந்த னாய்வெளி யேஎன்முன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 

பொழிப்புரை :

பொருத்தமான சிறந்த பூக்களைத் தூவித் தடைப் படாதாகிய ஒரு தன்மையோடு வழிபடாமலே சந்தனக் குழம்பு பூசப் பெற்ற தனங்களையுடைய, பெண்களோடும், நிலை கலங்கிச் சேர்ந்து நான் துன்பம் அடையாதபடி, எங்கள் பெருமான், எனக்கு அருள் புரிந்து, அழகிய தனது திருவடியைக் காட்டித் தலைவனாய் எனக்கு எதிரே நின்றதாகிய ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேனல்லேன்.

குறிப்புரை :

ஏய்ந்த - பொருந்திய. வேந்தனாய் - ஞான அரசனாய்.

பண் :

பாடல் எண் : 3

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

மண்ணுலகத்தில் உண்மையுள்ளவன் போல நடித்துச் செயலில் பொய்யான பல காரியங்களைச் செய்து, யான், எனது என்கின்ற மயக்கமாகிய பாம்பு கடித்த வாயிலிருந்து முற் காலத்துச் செய்த வினையாகிய விடமானது மிகுதலால் புலம்பித் திரி கின்றவனும் தனக்கு அடியவனுமாகிய என்னை, அந்தப் பெரிய வேதங்கள் தேடியறியாத அரிய பொருளான எங்கள் பெருமான், முன் வந்து பிடித்துக் கொண்டு பலகாலும் அடித்துத் திருவருளாகிய சர்க்கரைக் கட்டியை முன் அருத்திய, அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

நடித்து - உண்மையுடையவன் போலக் காட்டி. மாயம் பொய்; அது பொய்யாகிய செருக்கினைக் குறித்தது. `மாயத்தினது வாய்` என்க. கடித்த வாய் - பல்லினால் இறுகப் பிடித்த வாய். மிக - மிக்கு விளைய. கழறுதல், இங்கு, பிதற்றலின்மேற்று. `அரும்பொருள் அடியேனை முன்னின்று பிடித்து` என மாற்றுக. அக்காரம் - கண்டம் (சர்க்கரை). முன் தீற்றிய - முன்பு (விரைந்து) தின்னச் செய்த. `மருந்தை அடித்தடித்து ஊட்டுவர்; இவன் இனிப்பை எனக்கு அடித் தடித்து ஊட்டினான்` என்றபடி. `அக்காரம்` என்றது, திருவடி இன்பத்தை. குற்றியலுகரம் உயிர்வரக்கெடாது, உடம்படுமெய் பெற்றது. அற்புதம் - அற்புதச் செயலுக்குக் காரணம். ``அறியேன்`` என்றது, `அருளல்லது வேறில்லை` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
பொய்களே புகன்றுபோய்க்
கருங்கு ழலினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத்
திருவொடும் அகலாதே
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

வருகின்ற இப்பிறப்பு இறப்புகளாகிய இவற்றின் துன்பநிலையை எண்ணாது, பொய்களையே சொல்லித் திரிந்து கரிய கூந்தலுடைய பெண்களது கண்களாகிய வேலினால் தாக்கப்பட்டு, கலக்கமுற்றுக் கிடக்கும் என்னை, எங்கள் பெருமான் திருத்தமாகிய திருவடியில் அணியப்பட்ட சிலம்புகளாகிய அவை ஒலித்திட உமையம்மையோடும் நீங்காது எனக்கு அருமையான துணைவனாகி ஆண்டுகொண்டருளின அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

``இவை`` என்றது, `இவற்றினால் விளையும் துன்பங்கள்` என்றபடி.
ஏறுண்டு - தாக்குண்டு. திரு - திருவருள்.

பண் :

பாடல் எண் : 5

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்
அற்புதம் அறியேனே.

பொழிப்புரை :

செல்வமும், உறவும் இன்னுமுள்ள அனுபவப் பொருள்களும் என்னும் இவைகளோடும், பெண்களோடும் சேர்ந்து அவ்விடங்களில் உள்ள தன்மைகளால் தாக்கப்பட்டு களித்துத் திரிகின்ற என்னை, எனக்கு அவற்றினின்றும் விடுபடுதலை அருளி எனது தீவினைகளை நீக்குதற் பொருட்டு, எங்கள் பெருமான், மென்மையான தாமரை மலர் போன்ற தன் திருவடியைக் காட்டி என் மனத்தில் புகுந்து ஆட்கொண்ட ஆனந்தத்தால் ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

மாடு - பொன்னும், மணியும். அங்குள குணங்கள் - அவரிடம் உள்ள தன்மைகள். ``மங்கையர்.......ஏறுண்டு`` என்றதை முதற்கண் கூட்டுக.
குலாவி - கொண்டாடி. வெந்தொழில், இங்குக் கூறியன. ஆடுதல், களிப்பினால் என்க. அகம் - மனம்.

பண் :

பாடல் எண் : 6

வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான்
பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல்
கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

யாவரும் கீழ்ப்படுதற்குரிய இத்தன்மையுடைய பிறப்பு இறப்புகளாகிய இவைகளை நீக்கும் வழியினை, எண்ணாது பெண்களோடும், சேர்ந்து, வாய் இதழில் ஊறும், பெரிய நீர்ப் பெருக்கில் முழுகித் திளைத்து மயங்கி அலைகின்ற என்னை, குணங் களும், அடையாளங்களுமில்லாத, அருட்கடலாகிய இறைவன், அழகுடைய வளாகிய உமையம்மையோடும் கூடி அணுகி வந்து ஆட் கொண்டருளின, அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

வணங்கும் - தாழ்கின்ற; இழிகின்ற. இதழ் - இதழூறல் நுகர்ச்சியால் விளையும் இன்பம். கோமளம் - அழகு; அஃது அம்மையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 7

இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான்
இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான்
தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை
மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

இப்பிறவியில் பொருத்தமான மலரைப் பறித்துத் திருவைந்தெழுத்தினைச் சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லிப் பிழைத்தல் இல்லாமல், அவனது பொன்னடிகள் மேல் சொரியாமல், பெரிய தனங்களையுடைய பெண்களது மை தீட்டுதல் பொருந்திய கண்ணாகிய வேலினால் எறியப்பட்டுக் கிடக்கின்றவனாகிய என்னை, என் தந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து தன் தாமரை மலர் போலும் திருவடியினைக் காட்டி ஆட்கொண்டருளின அதியச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

இணை மலர் - இணைத்தற்கு (தொடுத்தற்கு) உரிய பூ. தப்பிலாது - தவறாது.
மைப்பு உலாம் - மைதீட்டுதல் பொருந்திய. `கிடப்பேனை` என்றதை, `கிடப்பேற்கு` எனத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 8

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின
இருவினை அறுத்தென்னை
ஓசை யாலுணர் வார்க்குணர் வரியவன்
உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன்
பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

பிறப்பு இறப்புகளாகிய ஊசலில் வைத்து ஆட்டுகின்ற உடம்பின்கண் உள்ள உயிரிலே பொருந்திய நல்வினை தீவினை என்னும் இரண்டையும் களைந்து, அடியேனை, நூலறிவால் அறிய முற்படுவார்க்கு, அறிய முடியாதவனாகிய இறைவன், உயர்வாகிய தனது மேலான பெரிய கருணையால் ஞானத்தைக் கொடுத்து ஞானமயமாக்கி மும்மலக்கட்டுகளை அறவே தொலைத்து, அவாவையறுத்து, தன் அடியார்களது அடியின்கீழ்ச் சேர்த்த, அதியச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

`உடல் உயிராயினவற்றை ஊசல் ஆட்டும் இருவினை` என்க. `ஓை?` என்பது, `சொல்` என்னும் பொருளதாய், சொல்லாலாகிய நூலைக் குறித்தது.
ஒளி ஆக்கி - ஒளிப்பொருளாகிய மெய்ப்பொருளைத் தோற்றுவித்து. பரம் - மேன்மை. `உலகப் பற்றை அறுத்து அடிக்கீழ்க் கூட்டிய` என்க.

பண் :

பாடல் எண் : 9

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்
புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங்
கிணங்கியே திரிவேனை
இச்ச கத்தரி அயனுமெட் டாததன்
விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.

பொழிப்புரை :

காட்டை ஒத்த இப்பிறவியில் பொருந்தி யான் புழுப் பொருந்திய தலையினையுடைய நாய் போன்று பெண்களுக்கே அவர்கள் விரும்பிய பணிகளைச் செய்து அவர்களோடு, சேர்ந்து அலைகின்ற எனக்கு, யாவர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் திருமாலும் பிரமனும் காண மாட்டாத தன் மணம் பொருந்திய தாமரை மலர் போலும் திருவடிகளை இவ்வுலகத்தில் வந்து காட்டியருளி, அடியேனையும் ஒரு பொருளாக நினைத்து ஆட்கொண்டருளிய அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

பொச்சையான - காடாகிய. இருளும், பிற துன்பங் களும், பரப்பும் உடைமை பற்றிப் பிறப்பினைக் காடாக உருவகம் செய்தார். புழுத்தலை நாய் - புழுவையுடைய தலையையுடைய நாய். பிற உறுப்புக்களிற் புழுக் கொள்வதினும், தலையிற் புழுக்கொள்ளுதல், துன்பமும், இழிவும் தருவதாகலின், தலையையே கூறினார். `இனி, புழுத்து அலை நாய்` என்பாரும் உளர். ஏழையர்க்கு - ஏழையர்மாட்டு; உருபு மயக்கம். ஏழையர் - பெண்கள். இச் சகம் - இவ்வுலகம். `இச்ச கத்து` எனின், வாளாதே மோனை கெடுதலாலும். பொருட் சிறப்பும் இன்மையானும், `விச்சகத்து` என்பதே பாடம் போலும்! `விச்சையகத்து` என்பது தொகுத்தலாய், `விச்சகத்து` என வருதல் பொருந்துவதே. அச்சன் - தந்தை.

பண் :

பாடல் எண் : 10

செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
செறிகுழ லார்செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும்
உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன்
இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.

பொழிப்புரை :

நெருங்கி மேன்மேல் வரும், இப்பிறப்பு இறப்புகளாகிய இவைகளை நீக்கும் வழியை எண்ணாமல், அடர்ந்த கூந்தலை உடையவராகிய பெண்கள் செய்கின்ற பொய்ந் நடையை யும் தாழ்மையான தன்மையையும், கயல் மீன் போன்ற கண்களையும் நினைத்தே கிடக்கின்றவனாகிய என்னை, யாவர்க்கும் தலைவனாகிய எம் தலைவன் எல்லையற்ற. தனது திருவடித் தாமரைகள் இரண்டையுங் காட்டியருளி, உண்மை அறிவினைக் கொடுத்து ஆட்கொண்டருளிய, அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

செறியும் - அடர்ந்துள்ள. கிறி - பொய்ம்மை; அவை இன்மொழியும், இனிய செயலும் போல்வன. அவற்றுள் பார்வை சிறப்புடைமையின், அதனை வேறு கூறினார். கீழ்மை - நாணமின்றி யொழுகுதல்.
சிற்பி