திருக்கோவையார்-இடந்தலைப்பாடு


பண் :

பாடல் எண் : 1

என்னறி வால்வந்த தன்றிது
முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொழிலிடைச்சேறல் ஒன்றும் இடந்தலைப்பாட்டிற்கே உரியது. இதனையும் மேலைப் பாங்கற் கூட்டம் உணர்த்திய சூத்திரத்தில் ``ஈங்கிவைநிற்க இடந்தலைதனக்கும்`` எனக் கூறியவாறே மின்னிடைமெலிதல் முதல் நின்றுவருந்துதல் ஈறாகக் கூறப்பட்ட கிளவிகளோடு கூட்டி இடந்தலைப் பாடாமென்று வகுத்துரைத்துக் கொள்க. அவை பாங்கற்கூட்டத்திற்கும், இடந் தலைப்பாட்டிற்கும் உரியவாமாறு என்னையெனின், பாங்கற்கூட்டம் நிகழாதாயின் இடந்தலைப்பாடு நிகழும், இடந்தலைப்பாடு நிகழாதாயின் பாங்கற்கூட்டம் நிகழும் ஆகலின்.
ஐயரிக் கண்ணியை யாடிடத் தேசென்
றெய்துவன் னெனநினைந் தேந்தல் சென்றது.
இதன் பொருள்:
இது முன்னும் என்னறிவால் வந்தது அன்று இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடு கூடிய முயற்சியான் வந்ததன்று; தெய்வந்தர வந்தது முயன்றால் மன் நெறி தந்தது தெய்வம் இன்னும் இருந்தன்று; இன்னுஞ் சிறிது முயன்றான் மன்னிய நெறியாகிய இவ்வொழுக்கத்தைத் தந்ததாகிய தெய்வம் இன்னும் இருந்தது; அது முடிக்கும், அதனான்; நெஞ்சே நெஞ்சமே; வருந்தல் வருந்தாதொழி; மின் எறி செஞ்சடைக் கூத்தப் பிரான் வியன் தில்லை முந்நீர் மின்னை வெல்கின்ற சிவந்த சடையை உடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடற்றிரை; பொன் எறி வார் துறைவாய் மின்தோய் பொழிலிடத்துச் சென்றும் பொன்னைக் கொணர்ந்து எறிகின்ற நெடிய துறையிடத்து மின்னையுடைய முகிலைத்தோயும் பொழிற்கட் செல்லுதும் எ-று.
இன்னும் இருந்தன்று எனக்கூட்டி முயன்றால் என்னும் வினையெச்சத்திற்கு முடிக்குமென ஒருசொல் வருவித்து உரைக்கப்பட்டது. மின்போலும் நெறித்த சடையெனினும் அமையும். கரையிற் பொன்னைத் திரையெறியும் துறையெனினும் அமையும். இருந்தின்று என்பது பாடமாயின், இருந்தின்றோவென ஓகாரம் வருவித்து இருந்ததில்லையோ என உரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடந்தலைப்படுதல். (இடத்திலே எதிர்ப்படுதல்; தலைவன் முன்னாட் கூடின இடத்திலே வந்து தலைவியை எதிர்ப்படுதல்)
இதற்கு மின்னிடைமெலிதன் முதலாக நின்று வருந்தல் ஈறாக வருங்கிளவி எல்லாம் எடுத்துரைத்துக்கொள்க. என்னை, இவ்விரண்டனுள்ளும் ஒன்றே நிகழுமாகலின்.

குறிப்புரை :

3.1 பொழிலிடைச் சேறல் பொழிலிடைச்சேறல் என்பது இயற்கைப்புணர்ச்சிய திறுதிக்கட் சென்றெய்துதற்கு அருமை நினைந்து வருந்தாநின்ற தலைமகன் இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடுகூடிய முயற்சியான் வந்ததன்று; தெய்வந்தர வந்தது. இன்னும் அத் தெய்வந் தானே தரும். யாம் அப்பொழிலிடைச் செல்வேமெனத் தன் நெஞ்சொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
சிற்பி