திருக்கோவையார்-மதியுடம்படுத்தல்


பண் :

பாடல் எண் : 1

எளிதன் றினிக்கனி வாய்வல்லி
புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
பிரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு
வாழி யறிவிப்பனே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கனி வாய் வல்லி புல்லல் இனி எளிது அன்றுதொண்டைக்கனிபோலும் வாயையுடைய வல்லியைப் புல்லுதல் இனி எளிதன்று, அதனால் எழில் மதிக் கீற்று ஒளி சென்ற செம்சடைக் கூத்தப்பிரானை உன்னாரின் எழிலையுடைய மதியாகிய கீற்றி னொளிபரந்த சிவந்தசடையையுடைய கூத்தப்பிரானை நினை யாதாரைப்போல வருந்த; என்கண் தெளி சென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் என்னிடத்துத் தெளிதலையடைந்த வேல் போலுங் கண்கள் வருவித்த இன்னாமை முழுதையும்; அளி சென்ற பூ குழல் தோழிக்குத் தெளிவித்து அறிவிப்பன் வண்டடைந்த பூங்குழலை யுடைய தோழிக்குக் குறிப்பினாலே தெளிவியாநின்று சொல்லுவேன் எ - று.
இரண்டாவது விகாரவகையாற்றொக்கது; வல்லியது புல்லலெனினுமமையும். வருந்தவென வொருசொல் வருவித்து உரைக்கப்பட்டது. கண்ணோடாது பிறர்க்குத் துன்பஞ் செய்தலின், உன்னாதாரைக் கண்ணிற்கு உவமையாகவுரைப்பினு மமையும். செல்லலெல்லாந் தெளிவித்தென்பதற்குச் செல்லலெல்லா வற்றையு நீக்கிவென்பாருமுளர். வாழி: அசைநிலை. கரந்துறைகிளவி உள்ளக் குறிப்புக் கரந்துறைமொழி.மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: தோழிக்குணர்த்தி அவளான் முடிப்பலெனக் கருதி ஆற்றாமை நீங்குதல்.

குறிப்புரை :

4.1 பாங்கியிடைச்சேறல்
பாங்கியிடைச்சேறல் என்பது இரண்டனுள் ஒன்றாற் சென் றெய்திப் புணர்ந்து நீங்கிய தலைமகன் இனியிவளைச் சென்றெய்துதல் எளிதன்று; யாம் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதற்றோழிக்கு நங்குறையுள்ளது சொல்வேமென்று அவளை நோக்கிச் செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள் மதியுடம்படுத்தல் - இதன் பொருள்:பாங்கியிடைச் சேறல், குறையுறத் துணிதல், வேழம்வினாதல், கலைமான்வினாதல், வழிவினாதல், பதிவினாதல், பெயர்வினாதல், மொழிபெறாதுகூறல், கருத்தறிவித் தல், இடைவினாதல் என விவை பத்தும் மதியுடம்படுத்தலாம் எ - று. அவற்றுள்
கரந்துறை கிளவியிற் காதற் றோழியை
இரந்துகுறை யுறுவலென் றேந்தல் சென்றது.

பண் :

பாடல் எண் : 2

குவளைக் கருங்கட் கொடியே
ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச் சொல்லுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்: குவளை கருங் கண் கொடி ஏர் இடை இக் கொடி கடைக்கண் குவளைப்பூப்போலுங் கரியகண்ணினையுங் கொடியை யொத்த இடையினையுமுடைய இக்கொடியினது கடைக்கண்; உவளைத் தனது உயிர் என்றது உவளைத் தன்னுடைய வுயிரென்று சொல்லிற்று, அதனால்; தன்னோடு உவமை இல்லாதவளைத் தன் பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் துவளத் தலைவந்த இன்னல் தனக்கொப்பில்லாதவளைத் தன்னொருகூற்றின்கண் வைத்த சிற்றம்பலத்தானது அருளையுடையரல்லாதாரைப் போல் யான் வருந்தும்வண்ணம் என்னிடத்து வந்த இன்னாமையை; இனி இன்னே சொல்லுவன் இவட்கு இனி இப்பொழுதே சொல்லுவேன் எ - று.
கடைக்கணுவளை யுயிரென்றது எனக்கிவ்விடர் செய்த கடைக்கண் இடர் நீந்தும் வாயிலுந் தானே கூறிற்றென்றவாறு. இன்னேயென்பது இவர்கூடிய இப்பொழுதே என்றவாறு. இனியென்றது இவளிவட் கின்றியமையாமை யறிந்தபின் னென்பது படநின்றது. ஒருங்குகண்டு ஒருகாலத்துக் கண்டு. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: மதியுடம்படுத்தற் கொருப்படுதல்.

குறிப்புரை :

4.2 குறையுறத்துணிதல் குறையுறத் துணிதல் என்பது பாங்கியை நினைந்து செல்லா நின்றவன் தெய்வத்தினருளால் அவ்விருவரும் ஓரிடத்தெதிர் நிற்பக்கண்டு, இவள் இவட்குச் சிறந்தாள்; இனியென்குறை யுள்ளது சொல்லுவேனெனத் தன்குறைகூறத் துணியாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஓரிடத் தவரை யொருங்கு கண்டுதன்
பேரிடர் பெருந்தகை பேசத் துணிந்தது.

பண் :

பாடல் எண் : 3

இருங்களி யாயின் றியானிறு
மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாஅன லாடவல்
லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண்
டோவரக் கண்டதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்: பணிவோர் மருங்கு இரும் களியாய் யான் இன்று இறுமாப்ப இன்பம் அளியா அனல் ஆட வல்லோன் அடியவரிடத்தே அவரோடு கூடிப் பெரிய களிப்பை யுடையேனாய் யான் இன்றிறு மாக்கும் வண்ணம் இன்பத்தை யெனக்களித்துத் தீயாடவல்லோன்; தில்லையான் தில்லையான்; மலை ஈங்கு அவனது மலையின் இவ்விடத்து; அளி ஒருங்கு ஆர்ப்ப அளி களொருங்கார்ப்ப; உமிழ் மும்மதத்து இரு கோட்டு நீள் கரும் களி ஆர் ஒரு மதயானை வரக் கண்டது உண்டோ உமிழப்படா நின்ற மூன்று மதத்தையும் இரண்டு கோட்டையுமுடைய நீண்ட கரிய களி யார்ந்த ஒருமதயானை வாராநிற்பக் கண்டதுண்டோ? உரைமின் எ-று.
மருங்கிறுமாப்பவெனக் கூடிற்று. அனலாடவென்பது அன லோடாடவென விரியும். ஆர்ப்ப வரவெனக் கூட்டுக. ஆர்ப்பவு மிழுமெனினுமமையும். நீட்சி - விலங்குக்குண்டாகிய நெடுமை. களி உள்ளச்செருக்கு. மதயானை - மதமிடையறாத யானை.

குறிப்புரை :

4.3 வேழம்வினாதல் வேழம் வினாதல் என்பது குறைகூறத் துணியாநின்றவன் என்குறை யின்னதென்று இவளுக்கு வெளிப்படக் கூறுவேனா யின் இவள் மறுக்கவுங்கூடுமென உட்கொண்டு, என்குறை இன்னதென்று இவடானேயுணரு மளவும் கரந்தமொழியாற் சில சொல்லிப்பின் குறையுறுவதே காரியம் என, வேட்டை கருதிச் சென்றானாக அவ்விருவருழைச்சென்று நின்று, தன்காதறோன்ற இவ்விடத்தொரு மதயானைவரக் கண்டீரோ வென வேழம் வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஏழைய ரிருவரு மிருந்த செவ்வியுள்
வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.

பண் :

பாடல் எண் : 4

கருங்கண் ணனையறி யாமைநின்
றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும்
வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு
புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த
தீங்கொரு வான்கலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லைக்கார்ப் பொழில் வாய் கரியமாலை அவனறியாமற் றன்னை யொளித்து நின்றவனது தில்லை வரைப்பி னுண்டாகிய கரிய பொழிலிடத்து; வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இளவல்லி அன்னீர் புறப்படாநின்ற கள்ளாற் றம்மேனி நனையும் வண்ணம் வண்டுகளாடும் வளராநின்ற இளைய வல்லியை யொப்பீர்; இரும் கண் அனைய கணை பொரு புண் புணர் ஒரு வான் கலை அனையது இப்புனத்தின் மருங்கண் ஈங்கு வந்தது உண்டோ நும்முடைய பெரிய கண்கள் போலுங் கணைபொருதலாலுண்டாகிய புண்ணைப் புணர்ந்த ஒரு வான் கலை அத்தன்மையது இப்புனத்தின் மருங்கு ஈங்கு வந்ததுண்டோ? எ - று.
கண்ணன் என்பது: கரியோனென்னும் பொருளதோர் பாகதச் சிதைவு. அஃது அப்பண்பு குறியாது ஈண்டுப் பெயராய் நின்றமையின், கருங்கண்ணனென்றார். சேற்றிற்பங்கயமென்றாற் போல. அறியாமை நின்றோனென்னுஞ் சொற்கள் ஒருசொன்னீர வாய் ஒளித் தோனென்னும் பொருள்பட்டு, இரண்டாவதற்கு முடிபாயின. ஐகாரம்: அசைநிலை யெனினு மமையும். வருங் கண்ணனைய வென்பதற்கு உண்டாகக்கடவ கள்ளையுடைய அரும்புகளையுடை மையான் வண்டு காலம்பார்த்து ஆடுமாறு போல, நும் முள்ளத்து நெகிழ்ச்சி யுண்டாமளவும் நுமதுபக்கம் விடாது உழல்கின்றே னென்பது பயப்ப வருங்கண்ணனையையுடைய வென்றுரைப்பினுமமையும். மருங்கென்பது மருங்கண்ணென ஈறுதிரிந்து நின்றது. அணித்தாக வென்னும் பொருட்டாய், அணி அண்ணெனக் குறைந்து நின்றதெனினுமமையும். மருங்கண்ணனைய துண்டோ வென்பதற்கு மருங்கு அண்ணல் நையதென்று, புனத்தின் மருங்கு தலைமை நைதலையுடைய தெனினுமமையும்.

குறிப்புரை :

4.4 கலைமான்வினாதல் கலைமான் வினாதல் என்பது வேழம்வினாவி உட்புகுந்த பின்னர், தான் கண்ணாலிடர்ப்பட்டமை தோன்ற நின்று, நும்முடைய கண்கள் போலுங் கணைபொருதலா னுண்டாகிய புண்ணோடு இப்புனத்தின்கண் ஒருகலைமான் வரக் கண்டீரோ வென்று கலைமான் வினாவாநிற்றல். அதற்கு செய்யுள்
சிலைமா னண்ணல்
கலைமான் வினாயது.

பண் :

பாடல் எண் : 5

சிலம்பணி கொண்டசெஞ் சீறடி
பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங்
கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்
குரைமின்கள் சென்னெறியே.

பொழிப்புரை :

இதன் பொருள்: சிலம்பு அணி கொண்ட செம் சீறடி பங்கன் சிலம்புதானழகுபெற்ற செய்ய சிறிய அடியையுடையாளது கூற்றை யுடையான்; தன் சீர் அடியார் குலம் பணி கொள்ள எனைக் கொடுத்தோன் தன் மெய்யடியாரது கூட்டங் குற்றேவல் கொள்ள என்னைக்கொடுத்தவன்; தான் கொண்டு அணியும் கலம் பணி கொண்டு அம்பலம் இடம் கொண்டவன் தான் கொண்டணியும் அணிகலம் பாம்பாகக் கொண்டு அம்பலத்தை இடமாகக் கொண்டவன்; கார்க்கயிலைச் சிலம்பு அணி கொண்ட நும் சீறூர்க்குச் செல் நெறி உரைமின்கள் அவனது முகில்களையுடைய கயிலைக்கட் சிலம்பழகு பெற்ற நுமது சிறியவூர்க்குச் செல்லு நெறியை உரைமின் எ - று.
கொண்டுகொடுத்தோனென இயைப்பாருமுளர். தனக்குத் தக்க தையலை இடத்து வைத்தானென்றுந் தன்னடியார்க்குத் தகாத என்னை அவர்க்குக் கொடுத்தானென்றும், அணிதற்குத் தகாத பாம்பை அணிந்தானென்றும், தனக்குத் தகுமம்பலத்தை இடமாகக் கொண்டா னென்றும் மாறுபாட்டொழுக்கங் கூறியவாறாம். கருத்து வேறறிய வினாயதற்கு மறுமொழி பெறாது பின்னுமொன்றை வினவுதலான் இவன்கருத்து வேறென்று தோழியறிய. சின்னெறி யென்று பாட மாயின், சிறியநெறி யென்றுரைக்க. சின்னெறியென்பது அந்நிலத்துப் பண்பு.

குறிப்புரை :

4.5 வழிவினாதல் வழிவினாதல் என்பது கலைமான் வினாவாநின்றவன், இவன் கருத்து வேறென்று தோழியறிய, அதனோடு மாறுபடநின்று, அது கூறீராயின் நும்மூர்க்குச் செல்லுநெறி கூறுமினென்று வழிவினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
கலைமான் வினாய கருத்து வேறறிய
மலைமா னண்ணல் வழிவி னாயது.

பண் :

பாடல் எண் : 6

ஒருங்கட மூவெயி லொற்றைக்
கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
யோவிங்கு வாழ்பவர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்: மூவெயில் ஒருங்கு அட ஒற்றைக் கணைகொள் சிற்றம்பலவன் மூவெயிலையும் ஒருங்கே அடவேண்டித் தனியம்பைக் கொண்ட சிற்றம்பலவன்; கரும் கடம் மூன்று உகு நால்வாய்க் கரி உரித்தோன் கரிய மதமூன்று மொழுகாநின்ற நான்றவாயையுடைய கரியையுரித்தவன்; கயிலை இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே வருங்கள் அவனது கயிலைக்கட் பெரிய காட்டான் மூடப்படும் பொழிற்கணிற்கின்ற எழிலையுடைய கொம்பையொப்பீராகிய நீங்கள் இங்கேவாரும்; தம் ஊர் பகர்ந்தால் இங்கு வாழ்பவர்க்குப் பழியோ தமதூரை யுரைத்தால் இம்மலைவாழ்வார்க்குப் பழியாமோ? பழியாயின் உரைக்கற் பாலீரல்லீர் எ - று.
இரண்டு மதங் கடத்திற் பிறத்தலிற் பன்மைபற்றிக் கட மென்றார். கொம்பரன்னீர்களென்பது: முன்னிலைப் பெயர். இன்னே வருங்களென்பது எதிர்முகமாக்கியவாறு. வாருமென்பது குறுகி நின்றது

குறிப்புரை :

4.6 பதிவினாதல் பதி வினாதல் என்பது மாறுபடநின்று வழி வினாவவும் அதற்கு மறுமொழி கொடாதாரை எதிர்முகமாகநின்று, வழிகூறீரா யின் நும்பதி கூறுதல் பழியன்றே; அது கூறுவீராமினென்று அவர்பதி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
பதியொடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலிந்தது.

பண் :

பாடல் எண் : 7

தாரென்ன வோங்குஞ் சடைமுடி
மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற்
றம்பல வன்கயிலை
யூரென்ன வென்னவும் வாய்திற
வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை
யீர்ங்குழற் பேதையரே.

பொழிப்புரை :

இதன் பொருள்: ஓங்கும் சடை முடிமேல் தார் என்னத் தனித் திங்கள் வைத்த உயர்ந்த சடையானியன்ற முடிமேல் தாராக ஒருகலையாகிய திங்களை வைத்த; கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை கொண்டலென்று சொல்லும் வண்ணம் நிறைந்த கறுப்பையுடைத்தாகிய மிடற்றையுடைய அம்பலவனது கயிலைக்கண்; ஊர் என்ன என்னவும் வாய்திறவீர் நும்முடைய ஊர்கள் பெயர் முதலாயினவற்றான் எத்தன்மைய வென்று சொல்லவும் வாய்திறக்கின்றிலீர்; பழியேல் ஒழிவீர் ஊர் கூறுதல் பழியாயின் அதனையொழிமின்; பேர் என்னவோ விரை ஈர்ங் குழல் பேதையரே உரையீர் நும்முடைய பெயர்கள் எத்தன்மை யவோ நறுநாற்றத்தையும் நெய்ப்பையுமுடையவாகிய குழலை யுடைய பேதையீர், உரைப்பீராமின் எ - று.
தனித்திங்கள் ஒப்பில்லாத திங்களெனினுமமையும். ஓகாரம்: வினா. தலைமகளுந் தோழியும் ஓரூராரல்லரென்று கருதினான் போல ஊரென்னவெனப் பன்மையாற் கூறினான். என்னை,
இரந்து குறையுறாது கிழவியுந் தோழியு
மொருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
&#புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
மதியுடம் படுதற்கு முரியனென்ப. #9;
-இறையனாரகப்பொருள், 6
என்பதிலக்கணமாதலின். பேதையரேயெனச் சிறுபான்மை ஏகாரம் பெற்றது. ஊருஞ் சொல்லாதாரைப் பெயர்கேட்கவே வேறு கருத்து டையனென்பது விளங்கும். வாய் திறவா தொழிவீ ரென்பதூஉம் பாடம்.

குறிப்புரை :

4.7 பெயர்வினாதல் பெயர் வினாதல் என்பது பதிவினாவவும் அதற்கொன்றுங் கூறாதாரை, நும்பதிகூறுதல் பழியாயின் அதனையொழிமின்; நும்பெயர் கூறுதல் பழியன்றே, இதனைக்கூறுவீராமினென்று அவரது பெயர் வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
பேரமைத் தோளியர்
பேர்வி னாயது.

பண் :

பாடல் எண் : 8

இரத முடைய நடமாட்
டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை
யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
திறக்கிற் சலக்கென்பவே.

பொழிப்புரை :

இதன் பொருள்: இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் இனிமையையுடைய கூத்தாட்டையுடையவர்; எம் உடையர் எம்முடைய தலைவர்; வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இப் புனத்தார் விருந்தொடு பேச்சின்மை விரதம் உடையர் அவரது வரதமுடைய அழகிய தில்லையையொப்பாராகிய இப்புனத்துநின்ற இவர்கள் எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு பேசாமையை விரதமாகவுடையர்; அது அன்றேல் அதுவன்றாயின்; மீட்டு வாய்திறக்கின் சலக்கு என்ப மணி சரதம் உடையர் பின் வாய்திறக்கிற் சலக்கென விழுவன முத்தமணிகளை மெய்யாகவுடையர் எ - று.
இரதமென்றது நாட்டியச்சுவையையன்று, கட்கினிமையை. நடமென்றது நாட்டியத்தையன்று, கூத்தென்னும் பொதுமையை. மீட்டென்பது பிறிதுமொன்றுண் டென்பதுபட வினைமாற்றாய் நிற்பதோரிடைச்சொல். இவையாறற்கும் மெய்ப்பாடு: இனிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: மதியுடம்படுத்தல்.

குறிப்புரை :

4.8 மொழிபெறாதுகூறல் மொழிபெறாது கூறல் என்பது பெயர்வினாவவும் வாய் திறவாமையின், இப்புனத்தார் எதிர்கொள்ளத்தக்க விருந்தின ரோடு வாய்திறவாமையை விரதமாகவுடையராதல், அதுவன்றி வாய்திறக்கின் மணிசிந்து மென்பதனைச் சரதமாக வுடையராதல், இவ் விரண்டனு ளொன்று தப்பாதென்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
தேமொ ழியவர் வாய்மொழி பெறாது
மட்டவிழ் தாரோன் கட்டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

வின்னிற வாணுதல் வேனிறக்
கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின்
றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ
மணிநிறப் பூந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்லி யலை-வில்லினியல்பையுடைய வாணுதலையும் வேலினியல்பை யுடைய கண்களையுமுடைய மெல்லியலை; மல்லல் தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன் தனது அம்பலம்போல் அழகை யுடைய தன்றிரு மேனியொன்றின்கண் இருத்திநின்றவனது அம்பலத்தை யொக்கும்; மின் நிற நுண் இடைப் பேர் எழில் வெள்நகைப் பைந்தொடியீர் மின்னினியல்பையுடைய நுண்ணிய இடையையும் பெரிய வெழிலையும் வெள்ளிய முறுவலையுமுடைய பைந்தொடியீர்; மணி நிற பூந் தழை பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணியினது நிறத்தையுடைய இப்பூந்தழை நும் பொன்னிற அல்குலுக்குத் தகுமோ? தகுமாயின் அணிவீராமின் எ - று.
பொன்னிறத்திற்கு மணிநிறம் பொருத்தமுடைத்தென்பது கருத்து. பொன்னிறவல்குலென்று அல்குலின்றன்மை கூறியவதனான், முன்னமே புணர்ச்சி நிகழ்ந்தமையு முண்டென்பது கூறியவாறாயிற்று. ஆமோவென்ற ஓகாரம் கொடுப்பாரதுண் மகிழ்ச்சியையும் கொள்வாரது தலைமையையும் விளக்கி நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை.

குறிப்புரை :

4.9 கருத்தறிவித்தல் கருத்தறிவித்தல் என்பது நீயிர் வாய்திறவாமைக்குக் காரணமுடையீர்; அது கிடக்க, இத்தழை நும் மல்குற்குத் தகுமாயின் அணிவீராமினெனத் தழைகாட்டிநின்று தன்கருத்தை அறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்
உரைத்த துரையாது
கருத்தறி வித்தது.

பண் :

பாடல் எண் : 10

கலைக்கீ ழகலல்குற் பாரம
தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
எதுநுங்கள் சிற்றிடையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கலைக் கீழ் அகல் அல்குல் பாரமது மேகலைக்குக் கீழாகிய அகன்ற வல்குலாகிய பாரமது; ஆரம் கண் ஆர்ந்து இலங்கு முலைக் கீழ்ச் சிறிது இன்றி நிற்றல் முற்றாது முத்து வடம் கண்ணிற்கு ஆர்ந்திலங்காநின்ற முலையின்கீழ் இடைசிறி தின்றித்தானே நிற்றல் முடிவுபெறாது; அன்று இலங்கையர்கோன் மலைக்கீழ் விழச் செற்ற சிற்றம்பலவர் - இவ்வரையையெடுத்த அன்று இலங்கையர்கோன் இவ்வரைக்கீழ் வீழும்வண்ணஞ் செற்ற சிற்றம் பலவரது; வண் பூ கயிலைச் சிலைக் கீழ்க்கணை அன்ன கண்ணீர் வளவிய பொலிவையுடைய கயிலையினிற்கின்ற சிலையின் கீழ் வைத்த கணைபோலும் புருவத்தின் கீழுளவாகிய கண்ணையுடையீர்; நுங்கள் சிற்றிடை எது நும்முடைய சிற்றிடை யாது? கட்புலனா கின்றதில்லை எ - று. பாரமது நிற்றலெனவியையும். பாரம் அதுவென எழுவாயும் பயனிலையுமாக்கி, முலைக்கீழ்ச் சிறிதாயினும் ஒன்றின்றி இவ்வுரு நிற்றல் முற்றாதென்றுரைப்பாருமுளர். அதுவென்றும் எதுவென்றும் சாதிபற்றி ஒருமையாற்கூறினான். மெய்ப்பாடு அது. பயன்: விசேடவகையான் மதியுடம்படுத்தல்.
மேலைப் பாட்டாறனானும் வம்பமாக்கள் வினாவும் பெற்றியே கதுமெனத் தனது குறைதோன்றாவகை வினாவினான், இப் பாட்டிரண்டினாலும் இவன்குறை நங்கண்ணதேயென்பது தோழிக்குப் புலப்பட, இத்தழைநல்ல கொள்ளீரென்றும், நும்மிடை யாதென்றும் வினாவினானென்பது.

குறிப்புரை :

4.10 இடைவினாதல்
இடைவினாதல் என்பது தழைகாட்டித் தன்கருத்தறிவித்து அது வழியாகநின்று நும்மல்குலும் முலையும் அதிபாரமாயிரா நின்றன; இவை இவ்வாறு நிற்றற்குக்காரணம் யாதோவென்று அவரிடை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
வழிபதி பிறவினாய்
மொழிபல மொழிந்தது.
சிற்பி