திருக்கோவையார்-இருவருமுள்வழி அவன்வரவுணர்தல்


பண் :

பாடல் எண் : 1

பல்லில னாகப் பகலைவென்
றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்: பல் இலன் ஆகப் பகலை வென்றோன் தில்லை பாடலர்போல் எல் இலன் பல்லிலனாம்வண்ணம் பகலோனை வென்றவனது தில்லையைப் பாடாதாரைப் போல ஒளியையுடைய னல்லன்; வினா நாகத்தொடு ஏனம்ஆயினும் வினாவப்படுகின்றன யானையும் ஏனமுமாயிருந்தன; வில் இலன்வில்லையுடைய னல்லன்; கையில் நாகத் தழை கையின் நாக மரத்தின்றழை களாயினும்; கொண்டாட்டம் வேட்டை கொண்டாடப் படுகின்றது; வேட்டை மெய் ஓர் சொல் இலன்; கண்டவாற்றான் மெய்யா யிருப்பதொரு சொல்லையு முடையனல்லன் கற்ற வா ஆ; இவன் பொய்யுரைப்பக் கற்றவாறு என்! பொய்யுரைத்து வறிது போவானுமல்லன் இச் சுனை புனம் கடவான்; ஈண்டொரு குறையுடையான்போல இச்சுனைப் புனத்தைக் கடவான் இவன் யாவன் கொலாம்; இவன்யாவனோ? எ - று.
வினா வென்பது: ஆகுபெயர். ஆ: வியப்பின்கட்குறிப்பு. எல்லியன் ஆகத்தென்று பாடமோதி, ஆகத்தொளியில னெனவுரைப் பாருமுளர். வினாய் என்பது பாடமாயின், வாராநின்ற வென ஒருசொல்வருவித்து முடிக்க. வினாய்க் கடவானென்று கூட்டுவாரு முளர். தையல் புனையப்படுதல். மெய்ப்பாடு: மருட்கை. பயன் : உசாவி ஐயம் தீர்தல்.

குறிப்புரை :

5.1 ஐயுறுதல் ஐயுறுதல் என்பது தலைமகன் தழைகொண்டுநின்று கரந்த மொழியாற் றன்கருத்தறிவிக்க, மேனியொளியிலனாய் இப்புனத் தினின்றும் போகாது யானையோடு ஏனம் (மான்) வினாவி இவ்வாறு பொய்கூறாநின்ற இவன் யாவனோ எனத் தோழி அவனை ஐயுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
இருவருமள்வழி அவன்வரவுணர்தல் - இதன் பொருள் : ஐயுறுதல், அறிவுநாடல் எனவிவையிரண்டும் இருவருமுள்வழி அவன் வரவுணர்தலாம் எ - று. அவற்றுள்
அடற்கதிர் வேலோன் றொடர்ச்சி நோக்கித்
தையற் பாங்கி ஐய முற்றது.

பண் :

பாடல் எண் : 2

ஆழமன் னோவுடைத் திவ்வையர்
வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத்
தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
கழிந்தது வந்துவந்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்: முன் அநங்கன் நைந்து வீழ நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப் புனத்து முற்காலத்து அனங்கன் அழிந்து பொடியாய்வீழ நோக்கிய அம்பலத்தானது வெற்பின் இப் புனத்தின்கண்ணே கூறுவது; முன் வேழமாய் முன் வேழமாய்; கலையாய் பின் கலையாய்; பிறவாய் பின் வேறுசிலவாய்; பின்னும் மெல் தழையாய் பின்னும் மெல்லிய தழையாய்; வந்து வந்து வந்து வந்து; மாழை மெல் நோக்கி இடையாய்க் கழிந்தது முடிவிற் பேதைமையையுடைய மெல்லிய நோக்கத்தையுடையாளது இடையாய்விட்டது; இவ்வையர் வார்த்தை ஆழம் உடைத்து அத னான் இவ்வையர்வார்த்தை இருந்தவாற்றான் ஆழமுடைத்து எ - று.
மன்னும் ஓவும்: அசைநிலை. இப்புனத்தேயென்றது இவளிருந்தபுனத்தே யென்றவாறு. மெல்லிய நோக்கத்தையுடையாள் இடைபோலப் பொய்யாய்விட்ட தென்பாருமுளர். பின்னுமென்றது முன்னை வினாவே ஐயந்தாராநிற்பப் பின்னுமொன்று கூறினா னென்பதுபட நின்றது. தன்கண்வந்து முடிதலின் வந்து வந்தென்றாள். சொற்பதம் சொல்லளவு. அறிவு நாடியது - அறிவானாடி யது. மெய்ப்பாடு: மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன்: ஐயந் தீர்தல்.

குறிப்புரை :

5.2 அறிவுநாடல் அறிவு நாடல் என்பது இவன் யாவனோவென் றையுறா நின்ற தோழி பேராராய்ச்சியளாதலின், அவன் கூறியவழியே நாடாதுவந்து தங்களிடைக்கே முடிதலின், இவ்வையர்வார்த்தை இருந்தவாற்றான் ஆழமுடைத்தாயிருந்ததென்று அவனினை வறியா நிற்றல். அதற்குச் செய்யுள்
வெற்பன் வினாய சொற்பத நோக்கி
நெறிகுழற் பாங்கி யறிவு நாடியது.
சிற்பி