திருக்கோவையார்-முன்னுறவுணர்தல்


பண் :

பாடல் எண் : 1

நிருத்தம் பயின்றவன் சிற்றம்
பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை
மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
மெல்லியல் வாடியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிற்றம்பலத்து நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்தின்கண் நிருத்தத்தை யிடைவிடாதே யாடியவன்; நெற்றித் தனிக்கண் ஒருத்தன் நெற்றியிலுண்டாகிய தனிக்கண்ணை யுடைய ஒப்பிலாதான்; பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி அவன் பயிலுங் கயிலையாகிய மலையினது உயர்ந்தவுச்சியில்; திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி புண்ணிய நீர் இடையறாது நிற்குஞ் சுனையைக் குடைந்தாடி; சிலம்பு எதிர் கூய் சிலம்பிற் கெதிரழைத்து; வருத்தம் பயின்று கொல்லோ இவ்வாறு வருத்தத்தைச் செய்யும் விளையாட்டைப் பயின்றோ பிறிதொன்றி னானோ; வல்லி மெல்லியல் வாடியது வல்லிபோலும் மெல்லிய வியல்பினை யுடையாள் வாடியது எ - று. வருத்தம் : ஆகுபெயர். மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகட்குற்ற வாட்டமுணர்தல். 62

குறிப்புரை :

6.1 வாட்டம் வினாதல்
வாட்டம் வினாதல் என்பது தலைமகன் மதியுடம்படுத்து வருந்தாநிற்பக் கண்டு, எம்பெருமான் என்பொருட்டான் இவ் வாறு இடர்ப்படா நின்றானெனத் தலைமகள் தன்னுள்ளே கவன்று வருந்தாநிற்க, அதுகண்டு, சுனையாடிச் சிலம்பெதிர ழைத்தோ பிறிதொன்றினானோ நீ வாடியதென்னோ வெனத் தோழி தலை மகளது வாட்டம் வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
6.1 மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது.
சிற்பி