திருக்கோவையார்-குறையுறவுணர்தல்


பண் :

பாடல் எண் : 1

மடுக்கோ கடலின் விடுதிமி
லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்
காயகுற் றேவல்செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர்
மலர்நும் சுரிகுழற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
குறையுற்றுநிற்றல், அவன் குறிப்பறிதல், அவள் குறிப்பறிதல், இருவர்நினைவுமொருவழியுணர் தல் எனவிவை நான்கும் குறையுறவுணர்தலாம் எ - று . அவற்றுள்-
7.1 கறையுற்ற வேலவன்
குறை யுற்றது.
இதன் பொருள்: விடு திமில் கடலின் மடுக்கோ விடப்படுந் திமிலைக் கடலின்கட் செலுத்துவேனோ; அன்றி மறி திரை மீன் படுக்கோ அன்றிக் கீழ்மேலாந் திரையையுடைய கிளர்ந்த கடலிற்புக்கு மீனைப்படுப்பேனோ; பல பணிலம் குளிக்கோ ஒரு குளிப்பின்கட் பல பணிலங்களையு மெடுப்பேனோ; பரன் தில்லை முன்றில் வளை கொடுக்கோ பரனது தில்லைமுற்றத்திற் சென்று எல்லாருங்காணச் சங்கவளைகளை விற்பேனோ; மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ அன்றி நும்மையன்மார்க்குப் பொருந்தின குற்றேவல்களைச் செய்வேனோ; அணி ஈர் மலர் நும் சுரிகுழற்குத் தொடுக்கோ - அணியப்படுந் தேனாலீரிய மலரை நுஞ்சுரிகுழற்குத் தொடுப்பேனோ; பணியீர் - நீயிர்வேண்டியது சொல்லுமின் எ - று.
மற்று: வினைமாற்று. இவன் உயர்ந்த தலைமகனாதலின் அவர் தன்னை வேறுபடவுணராமைக் கூறியவாறு. முன்னிரந்து குறையுறுதற் கிடங்காட்டிக் குறையுற வுணர்தற்கு இயைபபுபடக் குறையுறுமாற்றை ஈண்டுக் கூறினான். இது திணைமயக்கம். என்னை, ``உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே`` (தொல். பொருள். அகத்திணை -13) எ-ம், ``புனவர் தட்டை புடைப்பி னயல, திறங்குகதி ரலமரு கழனியும், பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே`` (புறம் - 49) எ-ம் சொன்னாராகலின். மெய்ப்பாடு: இனிவரல். பயன்: குறையுறுதல். 63

குறிப்புரை :

7.1 குறையுற்றுநிற்றல் குறையுற்று நிற்றல் என்பது தலைமகளது வாட்டங்கண்டு ஐயுறாநின்ற தோழியிடைச்சென்று, யான் உங்களுக்கெல்லாத் தொழிலுக்கும் வல்லேன்; நீயிர் வேண்டுவதொன்று சொல்லுமின்! யான் அது செய்யக்குறையில்லையென இழிந்தசொல்லால் தலைமகன் தன்னினைவு தோன்ற ஐயுறக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

பண் :

பாடல் எண் : 2

அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
தோன்று மொளிமுகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அரன் தில்லை அன்னாள் மன்னும் கிளியை கடியச்செல்ல நிற்பின் அரனது தில்லையையொப்பாள் புனத்து மன்னுங்கிளியைக் கடிவதற்குச் சிறிதகல நிற்பினும்; கிளர் அளகத்து அளி அமர்ந்து ஏறின் இவளுடைய விளங்காநின்ற அளகத்தின்கண் வண்டுகள் மேவி யேறினும்; வறிதே இருப்பின் இவள் வாளா விருப்பினும்; ஒளி முகத்து பளிங்கு அடுத்த ஒளி அமர்ந்தாங்கு இவனதொளியையுடைய முகத்தின்கண்ணே பளிங்கு தன்னிறத்தை விட்டுத் தன்னையடுத்த நிறத்தை மேவினாற்போல; ஒன்று போன்று ஒன்று தோன்றும் முன் வேறொன்று போன்றிருந்து பின்னிவள் குறிப்பாகிய வேறொன்று தோன்றாநின்றது, அதனால் அளிய அண்ணல் எண் மன்னும் ஒன்று உடைத்து அளிய அண்ணலது குறிப்பு மன்னுமொன்றுடைத்து; அஃதிவள் கண்ணதே போலும் எ-று.
கிளியைமன்னுமென்புழி, மன்னும்: அசைநிலையெனினு மமையும். ஒன்றுபோன்றொன்று தோன்றுமென்றது கிளியைக் கடியச் சிறிது புடைபெயரின் நெட்டிடை கழிந்தாற்போல ஆற்றானாகலானும், வண்டுமூசப் பொறாளென்று வருந்தி வண்டையோச்சுவான் போலச் சேறலானும், வாளாவிருப்பிற் கண்டின்புறுதலானும், இவள் கண்ணிகழ்ச்சி இவன்முகத்தே புலப்படாநின்றது என்றவாறு. ஏறி வறிதேயிருப்பினென்பது பாடமாயின், அளியேறி அளகத்தின்கட் சிறிதிருப்பினுமெனவுரைக்க. ஒளிர்முகமே யென்பதூஉம் பாடம். 64

குறிப்புரை :

7.2 அவன் குறிப்பறிதல் அவன் குறிப்பறிதல் என்பது குறையுறாநின்றவன் முகத்தே தலைமகளது செயல் புலப்படக்கண்டு, இவ்வண்ணல் குறிப்பு இவளிடத்ததெனத் தோழி தலைமகனது நினைவு துணிந்துணரா நிற்றல். அதற்குச் செய்யுள்
7.2 பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப் பாங்கி
வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்ப றிந்தது.

பண் :

பாடல் எண் : 3

பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின்
றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம்
பயின்றஎம் மொண்ணுதல்மாந்
தழைகொண் டொருவனென் னாமுன்ன
முள்ளந் தழைத்திடுமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:பிழைகொண்டு ஒருவிக் கெடாது ஒருவன் அன்பு செய்யின் பிழைத்தலைப் பொருந்தித் தன்கட் செல்லாது நீங்கி இவ்வாறு கெடாதே ஒருவன் அன்புசெய்யுமாயின்; பிறவி என்னும் முழை கொண்டு செல்லாமை அவன் பிறவியென்னாநின்ற பாழி யையடைந்து செல்லாத வண்ணம்; அம்பலத்து நின்று ஆடும் முன்னோன் அம்பலத்தின்கணின்றாடும் எல்லாப்பொருட்கும் முன்னாயவனது; உழைகொண்டு உழைமானை மருணோக்கத் தாலொத்து; இரு நோக்கம் ஒருங்கு பயின்ற எம் ஒண்ணுதல் வெள்ளை நோக்கமும் அவ்வுழைக்கில்லாத கள்ளநோக்கமுமாகிய இருநோக்கத்தையும் ஒருங்கே செய்யக்கற்ற எம்முடைய ஒண்ணுதல்; மாந் தழைகொண்டு ஒருவன் என்னா முன்னம் மாந்தழையைக் கொண்டொருவனென்று சொல்லுவதன் முன்; உள்ளம் தழைத்திடும் உள்ளந் தழையாநின்றாள். அதனால் இவள் குறிப்பு இவன் கண்ணதேபோலும் எ - று.
அடைந்தார் பிழைப்பின், தலையாயினார் பிழையையுட் கொண்டமைதலும், இடையாயினார் அவரைத் துறத்தலும், கடையாயினார் அவரைக்கெடுத்தலும் உலகத்து உண்மையின், அம்மூவகையுஞ் செய்யாதெனினுமமையும். பிறிது உரைப்பாரு முளர். ஒருவியென்னும் வினையெச்சம் கெடாதென்னு மெதிர்மறை வினை யெச்சத்திற் கெடுதலோடு முடிந்தது. 65

குறிப்புரை :

7.3 அவள் குறிப்பறிதல் அவள் குறிப்பறிதல் என்பது தலைமகனது நினைவறிந்த தோழி இவளிடத்து இவனினைவேயன்றி இவனிடத்து இவள் நினைவுமுண்டோவெனத் தலைமகளை நோக்க, அவண்முகத் தேயும் அவன் செயல் புலப்படக்கண்டு, இவ்வொண்ணுதல் குறிப்பு மொன்றுடைத்தென அவணினைவுந் துணிந்துணரா நிற்றல். அதற்குச் செய்யுள்
7.3. ஆங்கவள் குறிப்புப்
பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 4

மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப
திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
தேனுண் டெழிறருமே.

பொழிப்புரை :

இதன் பொருள்: இறை புலியூர் அனையாள் மை ஏர் குவளைக் கண் வண்டு இனம் இறைவனது புலியூரையொப்பாளுடைய மையழகையுடைய குவளைபோலுங் கண்ணாகிய வண்டினம்; வாழும் செந்தாமரை வாய் தான் வாழ்தற்குத் தகும் இவன் முகமாகிய செந்தாமரை மலர்க்கண்; எய்யேம் எனினும் யாமறியேமாயினும்; குடைந்து இன்பத் தேன் உண்டு குடைந்து இன்பமாகிய தேனை யுண்டு; எழில் தரும் எழில்பெறாநின்றது. அதனால் இவற்கு மெய்யே வேட்டையின் மேல் மனம் இல்லை இவற்கு மெய்யாகவே வேட்டையின் மேல் உள்ளமில்லை இவளும் புனத்தினை காப்பது பொய்யே இவளும் புனத்தினையைக் காப்பது பொய்யே எ - று.
மீட்டென்பதற்கு மீட்ட தன்றே (தி.8 கோவை பா.57) லென்புழி உரைத்ததுரைக்க. ஏர்குவளை யென்னும் மியல்பு புறனடையாற் கொள்க. வண்டின மென்றாள், நோக்கத்தின் பன்மை கருதி. எய்யே மெனினு மென்பதற்கு ஒருவரை யொருவரறியே மென்றிருப்பினு மெனினுமமையும். எழிறருதல் எழிலைப் புலப் படுத்துதல். இன்புறு தோழி - இருவர் காதலையுங் கண்டின்புறுதோழி. ஐய நீங்கித் தெளிதலான் இன்புறுமெனினுமமையும். அன்றியும் இவளுடைய நலத்திற்கேற்ற நலத்தையுடைய தலைமகனைக் கண்டின்புறுந்தோழி. என்னை, களவொழுக்கத்தில் எழினலமுடையா னொரு வனைக்கண்டு இன்புறக் கடவளோ வெனின், எழினலமே யன்று, பின் அறத்தொடு நிலைநின்று கூட்டுகை அகத்தமிழின திலக்கண மாதலால் தன்குரவர் வினவத் தானறத்தொடு நிற்குமிடத்துக் குரவர் தாமேசென்று மகட்கொடுக்குங் குடிப்பிறப்பினால் உயர்ச்சியை யுடைனாதலாலும் இன்புற்றாள். இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: துணிந்துணர்தல். இவைமூன்றும் குறையுற வுணர்தல். என்னை,
இருவரு முள்வழி யவன்வர வுணர்தன்
முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தலென்
றம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி
- இறையனார் அகப்பொருள்,7
என்பவாகலின். ; 66

குறிப்புரை :

7.4 இருவர் நினைவு மொருவழியுணர்தல்
இருவர் நினைவு மொருவழி யுணர்தல் என்பது இருவர் நினைவுங்கண்டு இன்புறாநின்ற தோழி இவ்விருவரும் இவ்விடத்து வந்த காரியம் இவன் முகமாகிய தாமரைக்கண் இவள்கண்ணாகிய வண்டு இன்பத்தேனையுண்டு எழில்பெற வந்த இத்துணையல்லது பிறிதில்லையென அவ்விருவரது நினைவுந் துணிந்துணராநிற்றல். அதற்குச் செய்யுள்
7.4 அன்புறுநோக் காங்கறிந்
தின்புறுதோழி யெண்ணியது.
சிற்பி