திருக்கோவையார்-நாணநாட்டம்


பண் :

பாடல் எண் : 1

மைவார் கருங்கண்ணி செங்கரங்
கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறுபிறைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மறந்தும் பொய் அவ் வானவரில் புகாது - மறந்தும் பொய்ம்மையையுடைய அவ்வானவரிடத்துப் புகாதே; தன் பொன் கழற்கே அடியேன் உய்வான் புக தன்னுடைய பொன்னா னியன்ற கழலையுடைய திருவடிகளிலே அடியேன் உய்ய வேண்டிப் புக; ஒளிர் தில்லை நின்றோன் சடைமேலது ஒத்து விளங்குந் தில்லைக்கட் கட்புலனாய் நின்றவனுடைய சடைக்கண்ணதாகிய பிறையையொத்து; செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறு பிறைக்கு செக்கர்வானை யடைந்த செவ்விக் கதிரையுடைய வெள்ளையாகிய சிறிய பிறைக்கு; மை வார் கருங்கண்
ணி மையையுடைய நெடிய கரிய கண்ணினையுடையாய்; செங்கரம் கூப்பு - நினது செய்ய கைகளைக் கூப்புவாயாக எ - று. மறந்து மென்பது ஈண்டு அறியாதுமென்னும் பொருட்டாய் நின்றது. மற்று: அசைநிலை. மற்றையென்பது பாட மாயின், அல்லாத பொய்வான வரென்றுரைக்க. இனமல்ல ராயினும் இனமாக உலகத்தாராற் கூறப்படுதலின் அவ்வாறு கூறினார். ``மூவரென்றே யெம் பிரானொடு மெண்ணி`` (தி.8 திருச்சதகம் பா.4) என்பதூஉம், அக்கருத்தே பற்றிவந்தது. பிறர்கூறும் பெருமை அவர்க்கின்மையிற் பொய்வானவரென்றார். எனக்குப் பொறியுணர் வல்ல தின்மையிற் கண் கவருந் திருமேனிகாட்டி என்னை வசித்தானென்னுங் கருத்தான், உய்வான் புகத்தில்லை நின்றோ னென்றார். சடை: செக்கர்வானத்திற் குவமை. 67

குறிப்புரை :

8.1 பிறைதொழுகென்றல்
பிறைதொழு கென்றல் என்றது பிறையைக்காட்டித் தான்றொழுதுநின்று, நீயும் இதனைத் தொழுவாயாகவெனத் தோழி தலைமகளது புணர்ச்சி நினை வறியாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.1. பிறைதொழு கென்று பேதை மாதரை
நறுநுதற் பாங்கி நாண நாட்டியது.

பண் :

பாடல் எண் : 2

அக்கின்ற வாமணி சேர்கண்டன்
அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகுமுனக்கவளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அக்கு தவா மணி சேர் கண்டன் அக்காகிய நல்ல மணிபொருந்திய மிடற்றையுடையான்; அம்பலவன் மலயத்து இக் குன்றவாணர் கொழுந்து செழும் இத்தண்புனம் உடையாள் அவனது பொதியின் மலயத்தின் கணுளராகிய இக்குன்ற வாணருடைய மகளாகிய வளவிய இத்தண்புனங் காவனுடையாள்; அக்குன்ற ஆறு அமர்ந்து ஆடச் சென்றாள் அக்குன்றத்தின்கணுண் டாகிய ஆற்றைமேவி ஆடப் போயினாள் ; அங்கம் அவ்வவையே ஒக்கின்ற ஆறு நின்னு றுப்புக்கள் அவளுறுப்புக்களாகிய அவற்றை யேயொக்கின்றபடி; அணங்கே என்னணங்கே; உனக்கு அவள் இணங்கு ஆகும் நினக்கு அவளிணங்காகும்; அதனால் அவளைக் கண்டு போவாயாக எ - று.
இன்: அல்வழிச் சாரியை. மலயத்திக் குன்றமென்று இயைப் பாருமுளர். 68

குறிப்புரை :

8.2 வேறுபடுத்துக் கூறல் வேறுபடுத்துக் கூறல் என்பது பிறைதொழாது தலைசாய்த்து நாணி நிலங்கிளையாநிற்பக் கண்டு, பின்னும் இவள் வழியே யொழுகி இதனையறிவோமென உட்கொண்டு, நீ போய்ச் சுனையாடிவா வென்ன, அவளும் அதற்கிசைந்துபோய் அவனோடு தலைப்பெய்துவர, அக்குறியறிந்து அவளை வரையணங்காகப் புனைந்து வேறுபடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.2. வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்
டாய்வளைத் தோழி யணங்ங் கென்றது.

பண் :

பாடல் எண் : 3

செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி
லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையுந்
தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங்
குடைவ னிருஞ்சுனையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செந் நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம்போல் செய்ய நிறத்தையுடைய மேனிக்கண் வெள்ளிய நீற்றை அணிவோனது தில்லை யம்பலத்தையொக்கும்; அம் நிறமேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் அழகிய நிறத்தையுடைத் தாகிய மேனியையுடைய நின்னுடைய கொங்கைகளில் அவ்விடத் தழிந்த குங்குமத்தையும்; மைநிற வார்குழல் மாலையும் - மையைப் போலு நிறத்தையுடைய நெடிய குழலின் மாலையையும்; தாதும் அளகத்தப்பிய தாதையும்; வளாய் மதம் சேர் இந் நிறமும் பெறின் மேனிமுழுதையுஞ் சூழ்ந்து மதத்தைச் சேர்ந்த இந் நிறத்தையும் பெறுவேனாயின்; இருஞ் சுனை யானும் குடைவன் நீ குடைந்த பெரிய சுனையை யானுங்குடைவேன் எ -று.
அம்பலம்போன்மேனியெனவியையும். அங்கழிகுங்கும மென்றது முயக்கத்தான்அழியும் அவ்விடத்தழிந்த குங்குமம் என்றவாறு. மைந்நிறவார்குழற்கண் மாலையுந் தாதும் வளாவ இதனையும் இதனையும் பெறினென எச்சந்திரித்துரைப்பினு மமையும். வளாவுதல் - புணர்ச்சிக் காலத்தில் மாலையின் முறிந்த மலரும் அளகத்தப்பிய தாதுஞ் சிதறிக் குங்குமத்தினழுந்தி வாங்குதற் கருமையாக விரவுதல். மதமென்றது காமக்களிப்பாலுண்டாகிய கதிர்ப்பை. 69

குறிப்புரை :

8.3 சுனையாடல்கூறிநகைத்தல்
சுனையாடல் கூறி நகைத்தல் என்பது வேறுபடுத்துக்கூற நாணல்கண்டு, சுனையாடினால் இவ்வாறு அழிந்தழியாத குங்குமமும் அளகத்தப்பிய தாதும் இந்நிறமுந்தருமாயின் யானுஞ் சுனையாடிக் காண்பேனெனத் தோழி தலைமகளோடு நகையாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.3. மாண நாட்டிய வார்குழற் பேதையை
நாண நாட்டி நகை செய்தது.

பண் :

பாடல் எண் : 4

பருங்கண் கவர்கொலை வேழப்
படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
றோமற்றவ் வான்சுனையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பருங் கண் கவர் கொலை வேழப் படையோன் பட பரிய கண்ணையும் விரும்பப்படுங் கொலையையுமுடைய கருப்புச் சிலையாகிய படையையுடையவன் மாள; படர் தீத் தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை வாய் செல்லுந் தீயைத்தருங் கண்ணையுடைத்தாகிய நுதலையுடைய தில்லையம் பலத்தானது பெரிய மால்வரையிடத்து; அவ் வான் சுனை நீயாடிய அப்பெரிய சுனை; கருங்கண் சிவப்ப கனிவாய் விளர்ப்ப கரியகண் சிவப்பத் தொண்டைக் கனிபோலும் வாய் விளர்ப்ப; அளி பின்வரும் கண் ஆர் கள் மலை மலர் சூட்டவற்றோ அளிகள் பின்றொடர்ந்து வருங் கண்ணிற்கு ஆருங் கள்ளையுடைய மலைமலரைச் சூட்ட வற்றோ? சொல்வாயாக எ - று.
பருங்கண்ணென மெலிந்துநின்றது. தடமும் மாலும் பெருமை யாகலின் மிகப்பெரியவென்பது விளங்கும். தடம் தாழ்வரை யெனினுமமையும். வருங்கண் வரைமலரென்பது பாடமாயின், அளி தொடரு மிடத்தையுடைய வரைமலரென்க. இடமென்றது பூவினேக தேசத்தை. இன்னும் வரைமலரென்பது ஒருபூவை முழுதுஞ்சூட்டினா னாயின் தலைவி அதனையறிந்து பேணவேண்டி வாங்குதலைக் கூடும். ஆகையால் இவளிஃதறியாமற் றோழியறிவது பயனாக ஒருபூவின் முறித்ததொருசிறிய விதழைச் சூட்டினான்; ஆகையான் வரைந்தமலரென்றாளாம். மற்று: அசைநிலை. இவை நான்கும் நாணநாட்டம். மெய்ப்பாடு: நகை. பயன்: கரவுநாடி யுணர்தல்.
இவை முன்னுற வுணர்தலின் விகற்பம். இவைநான்கும் பெருந்திணைப்பாற்படும். என்னை அகத்தமிழ்ச் சிதைவாகலான், என்னை, ``கைக்கிளை பெருந்திணை யகப்புற மாகும்``. இவற்றுள் கைக்கிளையென்பது ஒருதலைக்காமம். பெருந் திணை யென்பது பொருந்தாக் காமம். என்னை,
ஒப்பில் கூட்டமு மூத்தோர் முயக்கமுஞ்
செப்பிய வகத்தமிழ்ச் சிதைவும் பெருந்திணை
என்பவாகலின். நாணநாடலாகாமை: இவள் பெருநாணினளாத லான், தான் மறைந்து செய்த காரியத்தைப் பிறரறியின் இறந்துபடும்; ஆதலான், நாணநாட்டமாகாது. நடுங்கநாட்டமு மாகாது, இருவர்க்கும் உயிரொன்றாகலான் இறந்துபடுமாதலின். ஆதலால், அகத்தமிழிற்கு இவை வழுவாயின. இனி இதற்கு வழுவமைதி ``நன்னிலைநாணம்`` என்பதனானறிக. 70

குறிப்புரை :

8.4 புணர்ச்சியுரைத்தல்
புணர்ச்சி யுரைத்தல் என்பது சுனையாடல் கூறி நகையாடா நின்ற தோழி, அதுகிடக்க நீயாடிய அப்பெரிய சுனைதான் கண் சிவப்ப வாய்விளர்ப்ப அளிதொடரும் வரைமலரைச் சூட்டவற்றோ சொல்வாயாகவெனப் புணர்ச்சி உரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.4. மணக்குறி நோக்கிப்
புணர்ச்சி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

காகத் திருகண்ணிற் கொன்றே
மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம்
யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி
லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
வருமின்பத் துன்பங்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
யாவையும் ஆம் ஏகத்து ஒருவன் எல்லாப் பொருள்களுமாய் விரியும் ஒன்றையுடைய வொருவன்; இரும் பொழில் அம்பலவன் பெரிய பொழில்களாற் சூழப்பட்ட அம்பலத்தையுடையான்; மலையில் தோகைக்கும் தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் ஒன்றாய் வரும் அவனது மலையில் இத் தோகைக்கும் இத்தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் பொதுவாய் வாராநின்றன; அதனால் - காகத்து இரு கண்ணிற்கு மணி ஒன்றே கலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஓருயிர் யாம் இன்று கண்டனம் - காகத்தினிரண்டு கண்ணிற்கும் மணியொன்றே கலந்தாற்போல இருவர் யாக்கையுள் ஓருயிரை யாமின்று கண்டேம் எ - று.
யாவையுமாமேகம் - பராசத்தி. அம்பலவன் மலையில் இன்று யாங்கண்டன மென்று கூட்டி, வேறோரிடத்து வேெறாரு காலத்து வேறொருவர் இது கண்டறிவாரில்லையென்பது படவுரைப்பினு மமையும். கலந்தாரிருவரென்பது பாடமாயின், `காகத்திருகண்ணிற் கொன்றே மணி` யென்பதனை எடுத்துக்காட்டாக வுரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: மதியுடம்படுதல். ; 71

குறிப்புரை :

8.5 மதியுடம்படுதல்
மதியுடம் படுதல் என்பது பலபடியும் நாணநாடிக் கூட்ட முண்மையுணர்ந் தோழி இம்மலையிடத்து இவ்விருவர்க்கும் இன்பத் துன்பங்கள் பொதுவாய் வாராநின்றன; அதனால் இவ்விருவர்க்கும் உயிரொன்றேயென வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.5. அயில்வேற் கண்ணியொ டாடவன்றனக் குயிரொன்றென
மயிலியற் றோழி மதியுடம் பட்டது.
சிற்பி