திருக்கோவையார்-நடுங்கநாட்டம்


பண் :

பாடல் எண் : 1

ஆவா விருவ ரறியா
அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
வாறின்றொ ராண்டகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இருவர் அறியா அடி மூவாயிரவர் வணங்கத் தில்லை அம்பலத்து நின்றோனை உன்னாரின் அயனும் அரியு மாகிய இருவரறியாத அடியை மூவாயிரவரந்தணர் வணங்கத் தில்லையம்பலத்து எளிவந்து நின்றவனை நினையாதாரைப்போல வருந்த; முன்னித் தீ வாய் உழுவை கிழித்தது எதிர்ப்பட்டுத் தன் கொடியவாயை உழுவை அங்காந்தது, அங்காப்ப; சிறிதே பிழைப் பித்து இன்று ஒர் ஆண்டகை மணிவேல் பணி கொண்ட ஆறு அதனைச் சிறிதே தப்புவித்து இன்றோராண்டகை மணியையுடைய வேலைப் பணிகொண்டவாறென் எ - று.
அயனும் அரியுந் தில்லையம்பலத்திற்சென்று வணங்கு மாறறிந் திலரென்னுங் கருத்தினராகலின், ஆவாவென்பது அருளின்கட் குறிப்பு. இரக்கத்தின்கட்குறிப்பாய்த் தீவாயுழுவை கிழித்த தென்பதனை நோக்கி நின்றதெனினும் அமையும். வருந்தஎன ஒருசொல் வருவித்துரைக்கப்பட்டது. கொடிய வுள்ளத்தராகலின் உன்னாதாரைப் புலிக்குவமையாக வுரைப்பினு மமையும். தீவாயை யுடைய வுழுவை அவனைக் கிழித்ததெனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறப்பட்டதெனினு மமையும். அந்தோவென்பது: இரக்கத்தின்கட்குறிப்பு. இறுதிக்கண் ஆவா வென்பது: வியப்பின்கட் குறிப்பு. இதனுள் தலைமகளை நடுங்க நாடியதெவ்வாறெனின், தன்கொடிய வாயைப் புலி அங்காந்தது, உழுவையினது தீவாயை வேறொன்று கிழித்தது. உழுவையினது தீவாய் பிறிதொன்றனைக் கிழித்தது என இம்மூன்றுபொருளும் படுகையான், இது நடுங்க நாட்டமாயிற்று. என்னை, தலைமகள் இங்ஙனம் நடுங்கியாராயும் வண்ணம் தோழி நாடுகையான். தீவாயுழுவை கிழித்ததென்ற இம்மூன்று பொருளும் வினா. இங்ஙனந் தோழியுரைப்பத் தலைமகள் நாடி நடுங்காநிற்கக்கண்டு, ஓராண்டகை வேலைப் பணிகொண்டவா றென்னென நடுக்கந் தீர்த்ததாயிற்று. இது கரவுநாடுதல். அஃதாவது வெளிப்படச் சொல்லுஞ் சொல்லன்றிப் பிறிதொன்றன் மேல்வைத்துச் சொல்லுதல். இதுவும் பெருந்திணைப்பாற்படும். மெய்ப்பாடு: நகை. பயன்: நடுங்கநாடிக் கரவுநாடியுணர்தல்.
நிருத்தம்பயின்றவன் (62) என்பது தொட்டு மெய்யேயிவற் கில்லை (66) என்பதன்காறும் வர ஐந்துபாட்டினும் முன்னுறவு உணர்தலையும் ஐயுறவாக்கி, இருவருமுள்வழி யவன்வரவுணர் வினைத் துணிந்துணர்வாக்கினார். மைவார் (67) என்பது தொட்டு இதன் காறும்வர இவையாறினும் முன்னுறவுணர்தல் குறையுற வுணர்தல் இருவருமுள்வழியவன்வரவுணர்தலென்னும் மூன்றனை யுந் துணிந்துணர்வாக்கினார். ஈண்டிவ்விகற்பங் கண்டுகொள்க. 72

குறிப்புரை :

9.1 நுடங்கிடைப் பாங்கி
நடுங்க நாடியது.
சிற்பி