திருக்கோவையார்-பகற்குறி


பண் :

பாடல் எண் : 1

வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஓர் கார்ப்பொழில் ஒரு கரிய பொழில்; புறம் வெய்யோன் தான் நுழையா இருளாய் புறமெங்குங் கதிரோன் றான்சென்று நுழையாதவிருளாய்; நாப்பண் வண் தாரகை போல் தேன் நுழை நாகம் மலர்ந்து நடுவண் வளவிய வான் மீன்போலத் தேன்கள் நுழையும் நாகப்பூ மலர்ந்து; திகழ் பளிங்கான் திகழும் பளிங்கால்; மதியோன் கான் உழை வாழ்வு பெற்றாங்கு எழில் காட்டும் திங்கட்கடவுள் வானிடத்து வாழ்வையொழிந்து கானிடத்து வாழ்தலைப் பெற்றாற்போலத் தனதெழிலைப் புலப்படுத்தும் எ-று.
வான் உழை வாள் இருட்கு அப்பாலாகிய வானிடத் துண்டாகிய ஒளி; அம்பலத்து அரன் இவ்வண்ணஞ் சேயனாயினும் அணியனாய் அம்பலத்தின்கணுளனாகிய அரன்; குன்று என்று வட்கி வெய்யோன் தான் நுழையா அவனது மலையென்று கூசினாற்போல வெய்யவன் நுழையாவெனக்கூட்டுக. ``அண்ட மாரிரு ளூடு கடந்தும்ப - ருண்டு போலுமோரொண் சுடர்`` (தி.5 ப.97 பா.2) என்பதூஉம் அப்பொருண்மேல் வந்தது. வட்கி யென்பதனால் முன் பற்பறியுண்டானாதல் விளங்கும்.வானுழை வாளென்பதற்குக் கற்பவிறுதிக்கண் தோன்றிய முறை யானே வான்சென்றொடுங்கும் ஒளியென்றுரைப்பாருமுளர். புறம் இருளாயெனவும், நாகமலர்ந் தெனவும், சினைவினை முதன்மேலேறி நின்றன. புறம் இருளா யென்பது இடத்து நிகழ்பொருளின் வினை இடத்தின்மேலேறி நின்றது. இது குறிப்பெச்ச மாதலான், ஆண்டு வாவென்பது கருத்து. மெய்ப்பாடு: உவகை. பயன்: குறியிட முணர்த்துதல். 116

குறிப்புரை :

13.1 குறியிடங் கூறல்
குறியிடங் கூறல் என்பது தழைவிருப்புரைத்த தோழி ஆங்கவள் விளையாடுமிடத்து ஒரு கரியபொழில் கதிரவன் நுழையாவிருளாய் நடுவண் ஒரு பளிக்குப் பாறையையுடைத்தா யிருக்கும்; அவ்விடத்து வருவாயாகவென்று தலைமகனுக்குக் குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.1. 9; வாடிடத் தண்ணல் வண்தழை யெதிர்ந்தவள்
ஆடிடத் தின்னியல் பறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு
காதரந் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத்
தான்வரைத் தண்புனத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொன்னே பொன்னே; காதரம் தீர்த்து அருளும் தயல் வளர் மேனியன் பிறவி காரணமாகவரு மச்சத்தை நீக்கி அருள்செய்யுந் தையல் தங்குந் திருமேனியை யுடையவனாகிய; அம்பலத்தான் வரைத் தண் புனத்து அம்பலத்தானது மலையிற் குளிர்ந்த புனத்தின்கண்; புயல் வளர் ஊசல் முன் ஆடி புயல்தங்கு மூசலை முன்னாடி; பின்னைப் போய் பின்போய்; அயல்பொலியும் வளர் குன்றில் நின்று அருவி ஏற்றும் அதற்கயலாகிய பொலியும் உயர்ந்த குன்றின்கணின்று அருவியை ஏற்போம்; திரு உருவின்கயல் வளர் வாள் கண்ணி போதரு திருப்போலும் உருவினையும் கயல்போலும் வாட்கண்ணையுமுடையாய், நீ போதுவாயாக எ-று.
உயர்ந்த வழை மரத்திற் றொடுத்தலால், புயல் வளரூசலென்றாள், வளர்கண்ணெனவியையும், ஈண்டு வளர் என்பது: உவமையுருபு. வாள்: உவமை; ஒளியெனினுமமையும். தண்புனத்துப் போதருவென இயைப்பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம்; உவகையுமாம். பயன்: குறியிடத்துப் போதருதல். 117

குறிப்புரை :

13.2 ஆடிடம் படர்தல்
ஆடிடம் படர்தல் என்பது தலைமகனுக்குக் குறியிடங் கூறின தோழி யாம் புனத்தின்கட்போய் ஊசலாடி அருவியேற்று விளையாடுவேம் போதுவாயாகவெனத் தலைமகளை ஆயத் தொடுங் கொண்டு சென்று ஆடிடம் படராநிற்றல். அதற்குச் செய்யுள்
13.2. வண்தழை யெதிர்ந்த வொண்டொடிப் பாங்கி
நீடமைத் தோளியொ டாடிடம் படர்ந்தது.

பண் :

பாடல் எண் : 3

தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர்
கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி
யம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன
காண்டும் புனமயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்: தொழுது எழுவார் வினை வளம் நீறு எழ தொழா நின்று துயிலெழுவாருடைய வினையினது பெருக்கம் பொடியாக; நீறு அணி அம்பலவன்றன் வெற்பிற் தன் றிருமேனிக் கண் நீற்றையணியும் அம்பலவனது வெற்பில்; புனை வளர் கொம்பர் அன்னாய் கைபுனையப்பட்ட வளர்கொம்பையொப்பாய்; தினைவளம் காத்து தினையாகிய வளத்தைக் காத்து; சிலம்பு எதிர்கூஉய் சிலம்பிற் கெதிரழைத்து; சிற்றில் முற்று இழைத்து சிற்றிலை மிகவுமிழைத்து; சுனை வளம் பாய்ந்து சுனைப்புனலிற் பாய்ந்து; துணை மலர் கொய்து ஒத்த மலர்களைக் கொய்து; அன்ன புனமயில் காண்டும் அத்தன்மையவாகிய புனமயிலைக் காண்பேம் யாம் எ-று.
மலைக்கு வளமாதனோக்கித் தினைவளமென்றாள். தினையினது மிகுதியெனினுமமையும். தொழுதெழுவாரென்றது துயிலெழுங்காலத்தல்லது முன்னுணர்வின்மையான் உணர்வுள்ள காலத்து மறவாது நினைவார் என்றவாறு. நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்குமெழிலுடைமையான் அக்கோலந் தொழுதெழுவாருள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ளவினை நீறாமென்னுங் கருத்தால், வினைவள நீறெழ நீறணியம்பலவனென்றார். புதல்வனது பிணிக்குத் தாய் மருந்துண்டாற்போலத் தொழுதெழுவார் வினைக்குத் தானீறணிந்தானென்பாருமுளர். வெற்பினென்புழி வெற்பைத் தினைகாத்தல் முதலாகிய தொழிற்கு இடமாக வுரைப்பினுமமையும்.
அத்தன்மையவாகிய மயிலென்றது பொருளதி காரத்திற் கூறப்பட்ட தலைமகள் தான்றமியளாய் நின்று கண்ட மயிலை. இயற்கைப்புணர்ச்சிய திறுதிக்கட் டோழி தனது வாட்டத்தை வினவியபோது யானோரிள மயிலாலுவது கண்டேன்; அதனை நீயுங் காணப் பெற்றிலை யென வாடினே னென்று உரைப்பக் கேட்டாளாதலான், அதனைப் பற்றி அம்மயிலைக் காண்டு மென்றாளாயிற்று. மெய்ப்பாடு: அது. பயன்: ஆயம்பிரிதல். 118

குறிப்புரை :

13.3 குறியிடத்துக்கொண்டு சேறல்
குறியிடத்துக்கொண்டு சேறல் என்பது ஆடிடம்படர்ந்த தோழி தலைமகனுக்குத் தான்சொன்ன குறியிடத்து இவளைக் கொண்டு சென்றுய்க்கும்பொழுது, ஆயத்தாரைத் தம்மிடத்தி னின்று நீக்க வேண்டுதலின் தினைகாத்தல் முதலாகிய விளையாட்டுக்களைத் தான் கூறவே அவ்வவ்விளையாட்டிற் குரியார் தலைமகள் அவ்வவ் விடங்களிலே வருவளென்று கருதித்தோழி சொன்ன வகையே அவ்வவ் விளையாட்டு விருப்பினான் எல்லாரும் பிரிவர்; அவ்வகை ஆயவெள்ளத்தைப் பிரிவித்து, தமியளாய் நின்ற தலைமகளையுங் கொண்டு யாமும் போய் மயிலாடல் காண்பேமென அக்குறியிடத்துச் செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.3. அணிவள ராடிடத் தாய வெள்ள
மணிவளர் கொங்கையை மருங்க கன்றது.

பண் :

பாடல் எண் : 4

நரல்வே யினநின தோட்குடைந்
துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங்
கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கர்
தடமலர் கொண்டுவந்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உங்கே சென்று யான் உவ்விடத்தே சென்று; ஈர்ங்குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தடமலர் கொண்டு வந்து தேனானீரிய பூங்கொத்தைமூடிய அளிகள் முரலுந் தாதுநிறைந்த பெரியமலர்களைக் கொய்து கொண்டு வந்து; உன் வார் குழற்கு வேய்தருவன் நின்னுடைய நெடியகுழற்கண் வேய்வேன்; பரன் தில்லை அன்னாய் பரனது தில்லையை யொப்பாய்; நரல் வேய் இனம் நின தோட்கு உடைந்து உக்க நல்முத்தம் சிந்தி காற்றா னொன்றோடொன்று தேய்ந்து நரலும் வேய்த்திரள் உன்னுடைய தோள்கட்கஞ்சிப் பிளத்தலான் உக்க நல்ல முத்துக்கள் சிதறுதலால்; பரல் வேய் அறை பஞ்சு அடி உறைக்கும் பரல் மூடிய பாறை நினது பஞ்சடிக் கணுறைக்கும்; வரல் இங்கே நில் அதனான் என்னோடு ஆண்டு வரற்பாலையல்லை, ஈண்டு நிற்பாயாக எ-று.
யான்றருவன் நீ வேயென்றும் பிறவாற்றானு முரைப்பாரு முளர். குரலென்பது பூங்கொத்தை. தடமல ரென்பதற்குத் தடத்து மலரென்றுரைப்பாருமுளர். பரல்வேயறை யுறைக்கும் வரல்; வேய்தருவன்; இங்கேநில்லென்று தலைமகளைத் தோழி கூறி இவ்விடத்தே நில்லென்றாள். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்குதல். 119

குறிப்புரை :

13.4 இடத்துய்த்து நீங்கல்
இடத்துய்த்து நீங்கல் என்பது குறியிடைக் கொண்டு சென்ற தோழி யான் அவ்விடத்துச்சென்று நின்குழற்குப் பூக்கொய்து வருவேன்; அவ்விடம் வேய் முத்துதிர்தலான் நினது மெல்லடிக்குத் தகாதாதலான் நீ என்னோடு வாராது இங்கேநின்று பூக்கொய்வாயாக வெனத் தலைமகளைக் குறியிடத்து நிறுத்தித் தானீங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
13.4. மடத்தகை மாதரை இடத்தகத் துய்த்து
நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 5

படமா சுணப்பள்ளி யிக்குவ
டாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைகிற்றிவ் வார்பொழிற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வடம் ஆர் முலை மடவாய் வடமார்ந்த முலையையுடைய மடவாய்; தில்லை நின்றவன் ஈர்ங்கயிலை வார் பொழிற்கு வந்து வைகிற்று தில்லைக்கணின்றவனது குளிர்ந்த கயிலைக்கண் நீண்ட இப்பொழிலிடத்து வந்து தங்கியது; இக்குவடு படமாசுணப் பள்ளி ஆக்கி இக்குவட்டைப் படத்தையுடைய மாசுண மாகிய பள்ளியாக்கி; என்னைப் பங்கயக் கண் அந்நெடுமால் என நீ நினைந்தோ என்னை அம்மாசுணப்பள்ளியிற் றங்கும் பங்கயம் போலுங் கண்ணையுடைய அந்நெடியமாலென்று நீ நினைந்தோ; நெஞ்சத்தாமரையே இடம் ஆ இருக்கல் உற்றோ நெடுமாலின் மார்பினன்றித் தாமரையினுமிருத்தலான் யான் நீங்கினும் என்னெஞ்சமாகிய தாமரையே நினக்கிடமாக இருக்க நினைந்தோ?, கூறுவாயாக எ-று.
மாசுணப்பள்ளி மாசுணத் தானியன்ற பள்ளியெனினு மமையும். என்னெஞ்சத் தாமரைக் கணிருக்கலுற்றோ வென்றதனான், இப்பொழிற்கண் வந்து நின்றநிலை ஒருஞான்றும் என்னெஞ்சினின்று நீங்காதென உவந்து கூறினானாம். கயிலைமட வாயென்றியைப்பினு மமையும். வான்பொழிலென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளைக் கண்டு தன் காதன் மிகுதியாற்றோன்றிய பேருவகையை ஆற்றகில்லான் ஆற்றுதல்; தலைமகளை மகிழ்வித்தலுமாம். 120

குறிப்புரை :

13.5 உவந்துரைத்தல்
உவந்துரைத்தல் என்பது தோழி தலைமகளைக் குறியிடை நிறுத்தி நீங்காநிற்பத் தலைமகன் சென்றெதிர்ப்பட்டு, இக்குவட்டை மாசுணப்பள்ளியாகவும் என்னைத் திருமாலாகவும் நினைந்தோ நீ இப்பொழிற்கண் வந்து நின்றதெனத் தலைமகளை உவந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.5. களிமயிற் சாயலை யொருசிறைக் கண்ட
ஒளிமலர்த் தாரோ னுவந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்
லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் 9;
மூடித்தன் ஏரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தொத்து ஈன் மலர்ப் பொழில் தில்லைத் தொல்லோன் அருள் என்ன முன்னி - கொத்துக்களையீனும் மலர்ப் பொழில்களையுடைய தில்லையிற் றொல்லோனதருள்போல வந்தெதிர்ப்பட்டு; முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி கண்ணீர்த் துளியாகிய முத்தைவிடாநின்ற கண்ணாகிய குவளை களைக் கையாகிய மெல்லிய காந்தட்பூவான் மூடி; தன் ஏர் அளப்பாள் ஒத்து அதனோடு சார்த்தித் தன்னெழிலை யளவிடுவாள் போன்று; ஈர்ங்கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க குளிர்ந்த கொடியின்கண் நாணி மறைகின்றவளது மருங்குலடர்ப்புண்ண; பித்தீர் பணைமுலைகாள் பித்தையுடையீர் பணைமுலைகாள்; இன்னும் பெருக்கின்றது என்னுக்கு நும்பெருமைமேல் இன்னு நீர்பெருக்கின்ற தெற்றிற்கு? இது நன்றன்று எ-று.
தமக்காதார மென்று கருதாது அடர்க்கின்றமை நோக்கி, பித்தீரென்றான். பெருக்கின்ற தெற்றிற்கு நீர் பித்தையுடையீரென வினைக்குறிப்பு முற்றாகவுரைப்பினுமமையும். இவ்வாறு தானாதர வுரைத்து இறுமருங் குறாங்குவானாய்ச் சென்று சாருமென்பது. ஈன்கொடி, ஈன்பணை முலையென்பனவும் பாடம். ஈன்கொடி மலரீன்றகொடி. அரிவை யையென்பது பாடமாயின் நாணுதல் கண்ட வென்பனவற்றை ஒருசொல்லாக்கி முடிக்க. மெய்ப்பாடு: அது. பயன்: சார்தல் . 121

குறிப்புரை :

13.6 மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது உவந்துரைப்பக் கேட்ட தலைமகள் பெருநாணினளாதலிற் கண்புதைத்து ஒருகொடியி னொதுங்கி வருந்தாநிற்ப, சென்றுசார்தலாகாமையிற் றலைமகன் அவ்வருத்தந் தணிப்பான்போன்று, முலையொடு முனிந்து அவளிறுமருங்கு றாங்கி யணையாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.6. வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
கோதை வேலவன் ஆதர வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

அளிநீ டளகத்தின் அட்டிய
தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நீ தண் நறவு உண் களி எனச் செய்தவன் கடல் தில்லை அன்னாய் நீ குளிர்ந்த நறவையுண்ணுங் களிமகனென்று பிறர் சொல்லும் வண்ணம் ஓரின்பத்தை யெனக்குச் செய்தவனது கடலை யுடைய தில்லையையொப்பாய்; அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அளிகள் விடாது தங்கு மளகத்தின்கண் இட்டதாதும்; அணி அணியும் அணிந்தவணிகளும்; ஒளி நீள் சுரிகுழல்சூழ்ந்த ஒண் மாலையும் ஒளியையுடைய நீண்ட சுரிகுழல் இடத்துச் சுற்றிய நல்லமாலையும் இவையெல்லாம்; நீ அனைய பொன்னே பன்னு கோலம் நின்னோடொருதன்மையளாகிய நின்றோழி யாராய்ந்து செய்யுங் கோலமே; திரு நுதலே திருநுதலாய்; கலங்கல் யான்பிறிதோர் கோலஞ் செய்தேனென்று கலங்க வேண்டா; தெளி தெளிவாயாக எ-று.
தண்ணறவுண்களி நீயெனச் செய்தவ னென்பதற்குப் பிறிது ரைப்பாருமுளர். பொன்னேயென்னு மேகாரம்: பிரிநிலையேகாரம். அணிமணியுமென்பதூஉம் பாடம். பாங்கியறிவு பாங்கியவ் வொழுக்கத்தையறிந்த வறிவு. மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: பாங்கியறிந்தமை தலைமகட்குணர்த்துதல். 122

குறிப்புரை :

13.7 பாங்கியறிவுரைத்தல்
பாங்கி யறிவுரைத்தல் என்பது மருங்கணைவிறுதிக்கட் டலைமகளதையந்தீர, அவளைக்கோலஞ்செய்து, இது நின்றோழி செய்த கோலமே; நீ கலங்கா தொழிகெனத் தலைமகன் தான்றோழியொடு தலைப்பெய்தமை தோன்றக் கூறாநிற்றல் . அதற்குச் செய்யுள்
13.7. நெறிகுழற் பாங்கி
அறிவறி வித்தது.

பண் :

பாடல் எண் : 8

செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை யளிகுலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செழுநீர் `மதிக் கண்ணிச் சிற்றம்பலவன் திருக்கழலே வளவிய நீர்மையையுடைய மதியாகிய கண்ணியை யுடைய சிற்றம்பலவனது திருக்கழல்களையே; கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் பொருந்து நீர்மையான் உண்மகிழ்ந்து முகமலர்வது போலப் போதாகிய நிலைமையை விட்டு மலராம் நிலைமையையடைந்து சிறிதே மலரத்தொடங்கும்; கள் அகத்த கழுநீர்மலர் இவள் தேனை யகத்துடைய கழுநீர் மலர் இவள்; யான் அதன்கண் மருவிப் பிரியாக் கொழுநீர் நறப்பருகும் பெரு நீர்மை அளிகுலம் யான் அக்கழுநீர் மலர்க்கண் மருவி ஒருகாலும் பிரியாத கொழுவிய நீர்மையையுடைய அந்நறவைப்பருகும் பெருந்தன்மையையுடைய தோரளிசாதி எ-று.
செழுநீர்மதிக்கண்ணி யென்பதற்கு வளவியநீரு மதியாகிய கண்ணியுமென்பாருமுளர். திருக்கழலே யென்னுமேகாரம்: பிரிநிலை யேகாரம். செழுநீர்மையையுடைய கழுநீர் மலரென்றியைப்பினு மமையும். சென்று கிண்கிணிவாய்க் கொள்ளுமென்பதனால், பேதைப் பருவங் கடந்து இன்பப்பருவத்த ளாயினாளென்பது விளங்கும். கள்ளகத்தவென்பதனால், புலப்படா துண்ணிறைந்த காதலளென்பது விளங்கும். கள்ளகத்த கழுநீர் மலரென்பது ``காலகுருகு`` (குறுந் - 25) என்பதுபோல நின்றது; பெயரெச்ச மெனினுமமையும். யான் மருவிப் பிரியாத அளிகுலமெனினுமமையும். நறா: குறுகி நின்றது. பெரு நீர்மை அளிகுலமென்றான், கழுநீர் மலரல்ல தூதாமையின். அதனால், பிறிதோரிடத்துந் தன்னுள்ளஞ் செல்லாமை விளங்கும். மெய்ப்பாடு: உவகை. பயன்: நயப் புணர்த்துதல். 123

குறிப்புரை :

13.8 உண்மகிழ்ந்துரைத்தல்
உண்மகிழ்ந்துரைத்தல் என்பது பாங்கியறிவுரைப்பக் கேட்ட தலைமகள், இனி நமக்கொரு குறையில்லையென வுட்கொண்டு முகமலராநிற்ப, அம்முகமலர்ச்சி கண்டு, அவளைக் கழுநீர்மலராகவும், தான் அதனறவைப் பருகும் வண்டாகவும் புனைந்து, தலைமகன் றன்னுண்மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.8. தண்மலர்க் கோதையை
உண்மகிழ்ந் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில்
தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
சேர்க திருத்தகவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இப் பிறப்பில் அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் இப்பிறவியின்கணழுந்தா வண்ண மென்னையடிமை கொண்டவனது சிற்றம்பலத்தை யொப்பாய்; கொழுந்தாரகை முகை கொண்டல் பாசடை விண் மடுவில் கொழுவிய தாரகையாகிய முகையையுங் கொண்டலாகிய பசிய விலையையு முடைய விண்ணாகிய மடுவின்கண்; எழுந்து ஆர் மதிக் கமலம் எழில் தந்தென எழுந்து நிறைந்த மதியாகிய வெண்டாமரைப் பூத்தன தெழிலைப் புலப்படுத்தினாற்போல; செழுந் தாது அவிழ்பொழில் ஆயத்துத் திருத்தகச் சேர்க வளவிய தாதவிழாநின்ற பொழிற்கண் விளையாடுகின்ற ஆயத்தின்கட் பொலிவு தக இனிச்சேர்வாயாக எ-று.
முகையோடு தாரகைக்கொத்தபண்பு வெண்மையும் வடிவும் பன்மையும். தாரகையோ டாயத்தார்க்கொத்தபண்பு பன்மையும் ஒன்றற்குச் சுற்றமாய் அதனிற்றாழ்ந்து நிற்றலும். கமலத்தோடு மதிக்கொத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலியும். மதியோடு தலைமகட்கொத்தபண்பு கட்கினிமையும் சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும். இவ்வாறொத்தபண்பு வேறுபடுதலான் உவமைக் குவமை யாகாமை யறிந்துகொள்க. கொண்டலம் பாசடையென்புழி அம்முச்சாரியை அல்வழிக்கண் வந்தது; அம் - அழகெனினுமமை யும். புனைமடமான் கைபுனையப்பட்டமான். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: புறத்தாரறியாமைப் பிரிதல். 124

குறிப்புரை :

13.9 ஆயத்துய்த்தல்
ஆயத்துய்த்தல் என்பது மலரளிமேல்வைத்து மகிழ்வுற்றுப் பிரிய லுறாநின்ற தலைமகன், யாமித்தன்மையேமாதலின், நமக்குப் பிரிவில்லை, இனி யழகிய பொழிலிடத்து விளையாடும் ஆயம் பொலிவுபெறச் சென்று, அவரோடு சேர்ந்து விளையாடு வாயெனத் தலைமகளை யாயத்துச் செலுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.9. கனைகடலன்ன கார்மயிற்கணத்துப்
புனைமடமானைப் புகவிட்டது.

பண் :

பாடல் எண் : 10

பொன்னனை யான்தில்லைப் பொங்கர
வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர்
போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
தாழ்குழற் கேய்வனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆய் மறியே அசைந்த மான்மறிபோல்வாய்; பொன் அனையான் பொன்னையொப்பான்; தில்லைப் பொங்கு அரவம் புன்சடை மிடைந்த மின் அனையான் தில்லைக் கணுளனாகிய வெகுளாநின்ற வரவம் புல்லிய சடைக்கண் மிடைந்த மின்னையொப்பான்; அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த அவனதருளைப் பொருந்தாதாரைப் போல மெல்லிய விரல்கள் வருந்த; மெல் நனை பறியேல் மென்னனைகளைப் பறியா தொழிவாயாக; மணம் தாழ் குழற்கு ஏய்வன வெறி ஆர் மலர்கள் இன்னன யான் கொணர்ந்தேன் நின்மணந்தங்கிய குழற்குப் பொருந்துவனவாகிய நறுநாற்றநிறைந்த மலர்களித்தன்மையன வற்றை யான் கொணர்ந்தேன் எ-று.
மிடைந்த வென்னும் பெயரெச்சம் மின்னனையானென்று நிலப்பெயர்கொண்டது. அரவஞ்சடைமிடைதலை மின்மேலேற்றி, இல்பொருளுவமையாக வுரைப்பாருமுளர். இல்பொருளுவமை யெனினும் அபூதவுவமையெனினு மொக்கும். இவள் மலரைப் பறியாமல் மொட்டைப் பறிப்பானே னென்பதுகடா. அதற்கு விடை: இவள் தலைமகனைப் பிரிந்து அப்பிரி வாற்றாமையானும், தலைமகன் புணர்ச்சிநீக்கத்துக்கட் டன்னைக் கோலஞ்செய்த அக்கோலத்தைத் தோழி காணாநின்றாளென்னும் பெருநாணினானும் ஆற்றாளாய், மலரைப் பறிக்கின்றவள் மயங்கி மொட்டைப் பறித்தாளெனவறிக. மெல்லிய மொட்டுக்களைப் பறியாதொழி, இத்தன்மைய நறுமலரை நின்குழற்கணிதற்கு யான்கொணர்ந்தேனென்பதனான், இவ் வொழுக்கம் யானறியப்பட்டது காணென்றுடம்பாடு கூறிய வாறாயிற்று. என்னனையாய் கொணர்ந்தேனென்பதூஉம் பாடம். நின்றிடத்துய்த்து இடத்துய்த்து நீங்கிநின்று. பெயர்ந்து - மீண்டு சென்று. 125

குறிப்புரை :

13.10 தோழிவந்து கூடல்
தோழிவந்து கூடல் என்பது தலைமகனைப் பிரிந்த தலை மகடானும் பூக்கொய்யாநின்றாளாகப் பிரிவாற்றாமையானும் பெருநாணினானுந் தடுமாறி மொட்டுக்களைப் பறியாநிற்ப, யானின் குழற்காம் பூக்கொண்டு வந்தேன், நீ விரல்வருந்த மொட்டுக்களைப் பறிக்கவேண்டாவெனத் தோழிவந்து கூடா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.10. நெறியுறு குழலியை நின்றிடத் துய்த்துப்
பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 11

அறுகால் நிறைமல ரைம்பால்
நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா
வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
என் சிரத்தின் உறுகால் பிறர்க்கு மிக அரியோன் புலியூர் அன்ன ஒண்ணுதலே என்றலைக்கணுற்றகால் பிறர்க்கு மிகவரியவனது புலியூரை யொக்குமொண்ணுதலாய்; அணி ஆர் துறு கான் மலர்த் தொத்து அழகார்ந்த நெருங்கிய நறுநாற்றத்தையுடைய மலர்க்கொத்துக்களை; அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் வண்டுகணிறைந்த மலரையுடைய நின்னைம்பாற்கண் நிறைய வணிந்தேன்; தோகை தோகையையொப்பாய்; சிறு கால் மருங்குல் வருந்தாவகை சிறியவிடத்தையுடைய மருங்குல் வருந்தாவண்ணம்; தொல் ஆயம் மெல்லப் புகுக பழையதாகிய ஆயத்தின்கண் மெல்லப் புகுவாயாக எ-று.
அறுகானிறை மலரை யணிந்தே னென்றும், மலர்க் கொத்துக் களையுடைய தோகாயென்றும், உரைப்பாருமுளர். நிறைய வென்பது குறைந்துநின்றது. காலென்னுஞ்சினை பிறர்க்கரியோ னெனத்தன் வினைக்கேலாவெழுத்துக்கொண்டது. இவையிரண்டற்கும் மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றாமை நீக்குதல். 126

குறிப்புரை :

13.11 ஆடிடம் புகுதல்
ஆடிடம் புகுதல் என்பது கொய்துவந்த மலருங் குழற் கணிந்து, இனி நின்சிறுமருங்குல் வருந்தாமல் மெல்லச் செல்வாயாக வெனத் தோழி தலைமகளையுங்கொண்டு ஆடிடம் புகாநிற்றல். அதற்குச் செய்யுள் 13.11. தனிவிளை யாடிய தாழ்குழற் றோழி
பனிமதி நுதலியோ டாடிடம் படர்ந்தது.

பண் :

பாடல் எண் : 12

தழங்கு மருவியெஞ் சீறூர்
பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண்
டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடிதென்
தில்லை மணிநகர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பெரும பெரும; தழங்கும் அருவி இது எம் சீறூர் தழங்காநின்ற அருவியையுடைய விஃதெமது சீறூர்; மதுவும் கிழங்கும் அருந்தி இன்று எம்மொடு இருந்து இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு நீயுமருந்தி இன்றெம்மோடுதங்கி; குன்றர் கிளர்ந்து முழங்கும் குரவை இரவில் கண்டு மணி நகர்க்கு ஏகுக குன்றரெல்லாருமெழுந்து முழங்குமிந்நிலத்து விளையாட்டாகிய குரவையை யிரவிற்கண்டு நாளை நினது நல்ல நகர்க்கேகுவாயாக எ-று.
முத்தன் இயல்பாகவே முத்தன்; முத்தி வழங்கும் பிரான் முத்தியையேற்பார்க்கு வழங்குமுதல்வன்; எரியாடி ஊழித்தீயின் கணாடுவான் - தென்தில்லை மணிநகர் - அவனது தெற்கின் கட்டில்லையாகிய மணிநகரெனக் கூட்டுக. ஏற்பார்மாட்டொன்றுங் கருதாது கொடுத்தலின் வழங்கு மென்றார். உலகியல் கூறுவாள்போன்று ஒருகானீவந்து போந்துணை யாலிவளாற்றுந் தன்மையளல்லளென்பது பயப்பக்கூறி, வரைவு கடாயவாறு. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: குறிப்பினாற் பிரிவாற்றாமை கூறி வரைவுகடாதல். 127

குறிப்புரை :

13.12 தனிகண்டுரைத்தல்
தனிகண்டுரைத்தல் என்பது தலைமகளை யாயத்துய்த்துத் தலைமகனுழைச் சென்று, இஃதெம்மூர்; இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு நீயுமருந்தி, இன்றெம்மோடுதங்கி, நாளை நின்னூருக்குப் போவாயாகென உலகியல் கூறுவாள் போன்று, வரைவுபயப்பக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் 13.12. வேயோத்த தோளியை ஆயத் துய்த்துக்
குனிசிலை யண்ணலைத் தனிகண்டு ரைத்தது

பண் :

பாடல் எண் : 13

தள்ளி மணிசந்த முந்தித்
தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை
பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை
யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
போன்ற வனமுலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மணி தள்ளி மணிகளைத் தள்ளி; சந்தம் உந்தி சந்தனமரங்களை நூக்கி; தறுகட் கரி மருப்புத் தெள்ளி தறுகண்மை யையுடைய யானையின் மருப்புக்களைக் கொழித்து; நறவம் திசைதிசை பாயும் மலைச் சிலம்பா தேன் றிசைதோறும் பரக்கும் மலையையுடைய சிலம்பனே; வெள்ளி மலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும் தனது வெள்ளிமலையாகிய கயிலையையொக்கும் பெரியவிடையையுடையவனது புலியூர் போலவிளங்கும்; வள்ளி மருங்குல் கொடிச்சியது மருங்குலை; வனமுலைவருத்துவ போன்றன நல்ல முலைகள் வளராநின்ற படியால் வருத்துவன போன்றன; இனி வரைந்தெய்துவாயாக எ-று.
சிலம்பனென்பது அதனையுடையனென்னும் பொருணோக் காது ஈண்டுப் பெயராய் நின்றது. புலியூர் புரையு மென்பதூஉம் பாடம். யாவருமறியாவிவ்வரைக்கண்வைத்த தேன் முதிர்ந்துக்கு அருவி போன்றெல்லாருங்காணத் திசைதிசை பரந்தாற் போல, கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறுபாட்டாற் புறத்தார்க்குப் புலனாய் வெளிப் படாநின்றதென உள்ளுறையுவமை யாயினவாறு கண்டு கொள்க. மெய்ப்பாடு: அச்சம். இவ்வொழுக்கம் புறத்தாரறி யினி வளிறந்துபடும், இறந்துபட இவனுமிறந்து படுமென்னு நினைவி னளாதலால், பயன்: வரைவுகடாதல். 128

குறிப்புரை :

13.13 பருவங்கூறி வரவு விலக்கல்
பருவங்கூறி வரவு விலக்கல் என்பது உலகியல் கூறுவாள் போன்று குறிப்பால் வரைவுகடாவி, இனியிவ்வாறொழுகாது வரைவொடு வருவாயாக வெனத் தலைமகளது பருவங்கூறி, தலைமகனைத் தோழி வரவுவிலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
13.13. மாந்தளிர் மேனி யைவரைந் தெய்தா
தேந்த லிவ்வா றியங்க லென்றது.

பண் :

பாடல் எண் : 14

மாடஞ்செய் பொன்னக ரும்நிக
ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
றோநின்று கூறுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாடம் செய் பொன் நகரும் இம்மாதர்க்கு நிகர் இல்லை என்ன மாடமாகச் செய்யப்பட்ட பொன்னகராகிய அமராவதிக்கண்ணும் இம்மாதர்க் கொப்பில்லையென்று சொல்லும் வண்ணம்; பீடம் செய் தாமரையோன் பெற்ற பிள்ளையை பீடமாகச் செய்யப்பட்ட தாமரையையுடைய நான்முகன்பயந்த பிள்ளையை; கயிலைக் கூடம் செய் சாரற் கொடிச்சி என்றோ நின்று கூறுவது கயிலை மலைக்கட் கூடஞ்செய்யப்பட்ட சாரலிடத்து வாழுங் கொடிச்சியென்றோ நீ நின்றுசொல்லுவது? இவ்வாறு சொல்லற் பாலையல்லை எ-று.
உள்ளலரைக் கீடம் செய்து தன்னை நினையாதாரைப் புழுக்களாகச் செய்து; என் பிறப்புக் கெடத் தில்லை நின்றோன் கயிலை யான்றன்னை நினைவேனாகச் செய்து என் பிறப்புக்கெடத் தில்லைக்கணின்றவனது கயிலையெனக் கூட்டுக. கூட மென்றது மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டத்தை. கூடஞ் செய் சாரலென்பதற்கு மரத்திரளாற் கூடஞ்செய்தாற் போலுஞ் சாரலெனினு மமையும். கூடஞ்செய்தாற் போலுமுழைகளையுடைய சாரலெனினு மமையும். வரைவுடம் படாது மிகுத்துக் கூறியது மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைமகனது விருப்பு உணர்த்துதல். 129

குறிப்புரை :

13.14 வரைவுடம்படாதுமிகுத்துக்கூறல்
வரைவுடம்படாது மிகுத்துக் கூறல் என்பது பருவங்கூறி வரைவுகடாய தோழிக்கு, அமராவதிக்கண்ணும் இம்மாதர்க் கொப்பில்லையென நான்முகன் பயந்தபிள்ளையை யான்வரை யுந் துணையெளியளாக நீ கூறுகின்றதென்னோவெனத் தலை மகன் வரைவுடம்படாது தலைமகளை மிகுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.14. வரைவு கடாய வாணுதற் றோழிக்கு
விரைமலர்த் தாரோன் மிகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 15

வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ்
சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட
அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங்
காவலித் தாழ்வரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைங்கார் வரை மீன் பரப்பி வேயுண்டாக்கிய வெள்ளிய முத்துக்கள் சிந்திய சோலைகளாற் பசிய கரிய தாழ்வரை மீன்களைத் தன்கட்பரப்பி; சேய் தந்த வான் அகம் மானும் சிலம்ப சேய்மையைப் புலப்படுத்திய வானிடத்தை யொக்குஞ் சிலம்பையுடையாய்; தாய் தந்தை எமக்குத் தாயுந் தந்தையும்; தன் சேவடிக்கே ஆய் தந்த அன்பு தந்து தன்னுடைய சிவந்த திருவடிக்கே ஆராயப்பட்டவன்பைத் தந்து; ஆட்கொண்ட அம்பலவன் மலையிற் கானவர் என்னை யடிமைக் கொண்ட அம்பலவனது மலையிற் கானவரே; இத் தாழ் வரை ஏனல் எம் காவல் இத்தாழ்வரையினுண்டாகிய தினை யெமது காவலாயி ருக்கும்; அதனானீவரைவு வேண்டாமையிற் புனைந்து கூறவேண்டு வதில்லை எ-று.
வினைமுதலல்லாத கருவி முதலாயின அவ்வினைமுதல் வினைக்குச் செய்விப்பனவாமாதலில், பரப்பியெனச் செய்விப்பதாகக் கூறினார். சேவடிக்கே அன்புதந்தென வியையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: வரைவுகடாதல் . 130

குறிப்புரை :

13.15 உண்மைகூறிவரைவுகடாதல்
உண்மைகூறி வரைவுகடாதல் என்பது வரைவுடம்படாது மிகுத்துக்கூறிய தலைமகனுக்கு, எங்களுக்குத் தாயுந் தந்தையுங் கானவர்; யாங்கள் புனங்காப்போஞ் சிலர்; நீர் வரைவு வேண்டாமையி னெம்மைப்புனைந்துகூறல் வேண்டுவதில்லை யெனத் தோழி தங்களுண்மைகூறி வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.15. கல்வரை நாடன் இல்ல துரைப்ப
ஆங்கவ ளுண்மை பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 16

மன்னுந் திருவருந் தும்வரை
யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
வாடு திரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
னென்னப் புலம்புவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வரையா விடின் மன்னும் திருவருந்தும் வரையா தொழியிற் பெரும்பான்மையும் திருவை யொப்பாள் வருந்துவள்; நீர் வரைவு என்று உன்னுமதற்குத் தளர்ந்து ஒளி வாடுதிர் நீயிர் வரைவென்று நினைக்குமதற்கு மனந்தளர்ந்து மேனியொளி வாடா நின்றீர்; பொன்னங் கழல் வழுத்தார் புலன் என்னப் புலம்புவன் இவ்வாறு நும்முள்ளம் மாறுபட நிகழ்தலின் யான் பொன்னை யொக்குங் கழலை வாழ்த்தமாட்டாதாரறிவு போலத் தனிமையுற்று வருந்தாநின்றேன் எ-று.
உம்பர் எல்லாம் பன்னும் புகழ்ப் பரமன் அறிதற்கருமையான் உம்பரெல்லாமாராயும் புகழையுடைய பரமன்; பரஞ்சோதி எல்லாப்பொருட்கும் அப்பாலாகிய வொளி; சிற்றம்பலத்தான் ஆயினும் அன்பர்க்கு இப்பாலாய்ச் சிற்றம்பலத்தின்கண் ணாயவன்; பொன்னங் கழல் அவனுடைய பொன்னங் கழலெனக் கூட்டுக. மன்னு மென்பது ஓரிடைச்சொல். நிலைபெறுந் திருவென் றுரைப்பாருமுளர். முன்னர் இவட்குத் திருவையுவமங்கூறுதல் தக்கதன்றென்று, ஈண்டுவமித்த தென்னையெனின், ஆண்டுத் தெளியாமையிற் கூறலாகாமைகூறி, மக்களுள்ளாளென்று தெளிந்த பின்னர்க்கூறலா மென்பதனாற் கூறியதெனவுணர்க. பொன்னங் கழலென்பதற்குப் பொன்னானியன்ற கழலையுடை யதென அன்மொழித்தொகைப்பட வுரைப்பினு மமையும். புலனென்ன வென்பதற்குச் சுவைமுதலாகிய தம்பொருள் பெறாது வழுத்தா தாரைம்பொறியும் புலம்புமாறுபோல வெனினு மமையும், இருவருள்ள நிகழ்ச்சியுங் கூறுவாள் போன்று, தலைமகள தாற்றாமை கூறி வரைவு கடாயவாறு. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவுகடாதல் . 131

குறிப்புரை :

13.16 வருத்தங்கூறிவரைவுகடாதல்
வருத்தங்கூறி வரைவுகடாதல் என்பது உண்மையுரைத்து வரைவுகடாயதோழி, வரையாமை நினைந்து அவள் வருந்தா நின்றாள்; வரைவென்று நினைக்க நீயிர் வருந்தாநின்றீர்; இவ்வாறு நும்முள்ளம் மாறுபட நிகழ்தலின் இருவர்க்குமிடையே யான் வருந்தாநின்றேனெனத் தலைமகனுக்கு வருத்தங்கூறி வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.16. கனங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி
நிரைவளைத் தோளி வரைவு கடாயது.

பண் :

பாடல் எண் : 17

பனித்துண்டஞ் சூடும் படர்சடை
அம்பல வன்னுலகந்
தனித்துண் டவன்தொழுந் தாளோன்
கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
பாரிப்புக் கண்டழிவுற்
றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
கென்றஞ்சு மெம்மனையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பலவன் பனியையுடைய துண்டமாகிய பிறையைச்சூடும் பரப்பிய சடையை யுடைய வம்பலவன்; தனித்து உலகம் உண்டவன் தொழும் தாளோன் எஞ்சுவான்றானேயாய்த் தானல்லாத உலகமுழுதையு முண்டவன் றொழுந் தாளையுடையவன்; கயிலைப் பயில் சிலம்பா அவனது கயிலைக்கட்பயிலுஞ் சிலம்பனே; தொண்டைக் கனி வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டு தொண்டைக்கனி போலும் வாயை யுடையாளுடைய கதிர்முலைகளது ஒருப்பாட்டைக்கண்டு; அழிவு உற்று நெஞ்சழிந்து; எம் அன்னை சிற்றிடைக்கு இனிப்பற்றுக் கண்டிலம் என்று அஞ்சும் எம் மன்னை இவள் சிற்றிடைக்கு இனியொரு பற்றுக்கண்டிலமென்று அஞ்சாநின்றாள்; இனியடுப்பன வறியேன் எ-று.
துண்டம்: ஒரு பொருளினது கூறு. பாரிப்பு அடியிடுத லெனினுமமையும். இளமைப்பருவம் புகுந்தமையான் மகட்கூறு வார்க்கு அன்னைமறாதே கொடுக்கும்; நீ முற்பட்டு வரைவாயாக வென்று தோழியேற்கக் கூறியவாறு. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: செறிப்பறிவுறுத்து வரைவுகடாதல். 132

குறிப்புரை :

13.17 தாயச்சங்கூறிவரைவுகடாதல்
தாயச்சங்கூறி வரைவுகடாதல் என்பது வருத்தங்கூறி வரைவு கடாயதோழி, எம்முடையவன்னை அவள் முலைமுதிர்வு கண்டு இவள் சிற்றிடைக்கு ஒருபற்றுக் கண்டிலேமென்று அஞ்சா நின்றாள்; இனி மகட்பேசுவார்க்கு மறாதுகொடுக்கவுங் கூடுமெ னத் தாயச்சங் கூறி வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.17. மடத்தகை மாதர்க் கடுப்பன அறியா
வேற்கண் பாங்கி ஏற்க வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 18

ஈவிளை யாட நறவிளை
வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை
அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
யாடி திருமலைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஈவிளையாட நற விளைவு ஓர்ந்து தேனீக்கள் பறந்து விளையாட அவற்றினது விளையாட்டாற்றேனினது விளைவையோர்ந்தறிந்து; எமர் மால்பு இயற்றும் வேய் விளை யாடும் வெற்பா எம்முடைய தமர் கண்ணேணியைச் செய்யும் வேய் விளையாடும் வெற்பை யுடையாய்; உற்று நோக்கி குறித்து நோக்கி; அன்னை எம் மெல்லியலைத் திருமலைக்குப் போய் விளையாடல் என்றாள் அன்னை எம்முடைய மெல்லியலைத் திருமலைக் கட்புறம்போய் விளையாடவேண்டாவென்று கூறினாள்; இனி இற்செறிக்கும் போலும் எ-று.
அம்பலத்தான் அம்பலத்தின் கண்ணான்; புரத்தில் தீ விளையாட நின்று ஏ விளையாடி முப்புரத்தின்கட்டீ விளையாட நின்று ஏத்தொழிலால் விளையாடுவான்; திருமலை அவனது திரு மலையெனக்கூட்டுக. எமர் மால்பியற்றும் வெற்பா வென்றதனால், தாமந்நிலத்து மக்களாதலும் அவன்றலைவனாதலுங் கூறினாளாம். போய் விளையாடுகென்றாளென்பது பாடமாயின், உற்றுநோக்கி இன்றுபோய் விளையாடுக வென்றாள்; அக்குறிப்பால் நாளையிற் செறிப்பாள் போலுமெனவுரைக்க. ஈவிளையாட்டாற்றேன் விளைவை யோர்ந்து எமர் மால்பியற்றுமாறுபோல, கதிர்ப்பு வேறுபாட்டால் இவளுள்ளத்துக் கரந்த காமமுணர்ந்து மேற்செய்வனசெய்யக் கருதா நின்றாளென உள்ளுறைகாண்க. இற்செறிவித்ததென்பது பாட மாயின், இன்னார் கூற்றென்னாது துறைகூறிற்றாகவுரைக்க. #9; ; 133

குறிப்புரை :

13.18 இற்செறிவறிவித்துவரைவுகடாதல்
இற்செறி வறிவித்து வரைவுகடாதல் என்பது தாயச்சங்கூறி வரைவுகடாய தோழி, எம்மன்னை அவளை யுற்றுநோக்கி, திருமலைக்கட்புறம்போய் விளையாடவேண்டாவெனக் கூறினாள்; இனியிற்செறிப்பாள் போலுமென, இற்செறிவறிவித்து வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.18. விற்செறி நுதலியை
இற்செறி வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 19

சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்
பலவற் றொழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம்
பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை
யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர்
பகர்பெரு வார்த்தைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பா சிலம்பா; சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம்பலவற்றொழாது சுற்றப்பட்ட சடைத்திரளையுடைய சிற்றம்பலவனை முற்பிறவியிற் றொழாமையான்; கற்றும் தொல் சீர் அறியலரின் நூல்களைக் கற்றுவைத்தும் அவனது பழைய புகழை யறியாதாரைப்போல; இடை நைவது கண்டு முலைதாங்ககில்லா திடை வருந்துவதனைக்கண்டு; எற்றும் திரையின் அமிர்தை தமர் இற் செறிப்பார் எற்றுந்திரையையுடைய கடலிற்பிறந்த இனிய வமிர்தத்தையொப்பாளை இப்பொழுது தமர் இற்செறிப்பார்; மற்றும் சீறூர் பகர் பெருவார்த்தைகள் சில பல அதுவுமன்றி இச்சீறூராற் பகரப்படும் பெரியவார்த்தைகள் சிலபலவுள எ-று.
எற்றுந்திரை யென்பது சினையாகிய தன்பொருட் கேற்ற வடையடுத்து நின்றதோராகுபெயர். இச்செறிப்பா ரென்பது; ஆரீற்று முற்றுச்சொல். வினைப்பெய ரென்பாருஞ் செறிப்பரென்று பாடமோதுவாருமுளர். சிலபலவென்பது பத்தெட்டுளவென்பது போலத் துணிவின்மைக் கண்வந்தது. சீறூர்ப்பகரென்பதூஉம் பாடம். இவற்றிற்கு மெய்ப் பாடும் பயனும் அவை. இவற்றுண் மேலைப் பாட்டிற் குறிப்பினானே செறிப்பறிவுறுத்தாள். #9; 134

குறிப்புரை :

13.19 தமர்நினைவுரைத்து வரைவுகடாதல்
தமர்நினைவுரைத்து வரைவுகடாதல் என்பது இற்செறி வறிவித்து வரைவுகடாயதோழி, அவண்முலை தாங்கமாட்டா திடைவருந்து வதனைக்கண்டு எமரிற்செறிப்பாராக நினையா நின்றார்; அயலவருமகட்பேச நினையாநின்றாரெனத் தமர்நினை வுரைத்து வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.19. விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்
றொளிவே லவற்கு வெளியே யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 20

வழியும் அதுவன்னை யென்னின்
மகிழும்வந் தெந்தையும்நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல
வென்னோ கிளக்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வழியும் அது இவளை நீ யெய்துதற்கு முறைமையும் வரைவு வேண்டுதலே; அன்னை என்னின் மகிழும் இவணலத்திற்குத் தக்கானோர் கணவனை வேண்டுவாளாகலின் நீ வரைவுவேண்டுமிடத்து அன்னை யென்னைப்போல மகிழும்; வந்து எந்தையும் நின் மொழியின் வழி நிற்கும் உலகியலான் மறுத்தகன்று நின்றானாயினுந் தகுதிநோக்கிவந்து எந்தையு நின் மொழியைக் கடவாது அதன்வழியே நிற்கும்; முன்னே சுற்றம் வயம் இவளோடு நின்னிடைநிகழ்ந்தது குறிப்பானறிந்ததாகலின் நீ வரைவு வேண்டு வதன் முன்னே சுற்றம் நினக்கு வயமாயிருக்கும்; பல கிளக்கின்றது என் பல சொல்லுகின்றதென்; குழி உம்பர் ஏத்தும் அம்பலத்து எம் கூத்தன் திரண்டு உம்பரானேத்தப்படும் அம்பலத்தின் கணுளனாகிய எம்முடைய கூத்தனது; குற்றாலம் முற்றும் அறியக் கெழி உம்மவே பணைத்தோள் குற்றாலமுழுது மறியப்பொருந்திய உம்மனவே பணைத்தோள்கள்; ஐயுறவேண்டா எ-று.
வழியுமென்னு மும்மை: எச்சவும்மை, உபாயமாதலே யன்றி என்றவாறு. எந்தையு மென்பது இறந்தது தழீஇய வெச்ச வும்மை. முன்னே வயமென வேறுபடுத்துக் கூறுதலால், சுற்றமுமென வும்மைகொடாது கூறினாள். நலமுங்குலமு முதலாயினவற்றா னேராராயினும், வடுவஞ்சிநேர்வ ரென்பது பயப்ப, குற்றாலமுற்று மறியக்கெழீஇயவென்றாள். கெழீஇய வென்பது கெழியெனக் குறைந்துநின்றது. நின்மொழி யென்று உம்மவே என்றது
``என்னீரறியாதீர்போலவிவைகூற
னின்னீரவல்ல நெடுந்தகாய்``
-கலி. பாலை, 5
என்பதுபோல ஈண்டும் பன்மையு மொருமையு மயங்கி நின்றன. குற்றால முற்றுமறியக் கெழியென்பதற்கு மறைந்தொழுகா தெல்லாருமறிய வரைவொடு வருவாயாக என்றுரைப்பாருமுளர். இப்பொருட்குக் கெழுமுவென்பது விகாரவகையாற் கெழியென நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை. வரைவின்கட் டலைமகனை யொற்றுமை கொளுவுதலுமாம்.
தழங்குமருவி (பா.127) என்னும் பாட்டுத்தொட் டிதன்காறும் வர இப்பாட்டொன்பதுஞ் செறிப்பறி வுறுத்து வரைவுகடாயின வென்பது. இவையெல்லாந் தோழியிற் கூட்டமுந் தோழியிற் கூட்டத்தின் விகற்பமுமெனவறிக. 135

குறிப்புரை :

13.20 எதிர்கோள்கூறிவரைவுகடாதல்
எதிர்கோள்கூறி வரைவுகடாதல் என்பது தமர் நினைவு உரைத்து வரைவுகடாயதோழி, நீவரைவொடுவரின், அன்னையும் ஐயன்மாரும் அயலவரும் நின்வரவெதிர் கொள்ளாநிற்பர்; இனிப்பல நினையாது பலருமறிய வரைவொடு வருவாயாகவென எதிர்கோள் கூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.20. ஏந்திழைத்தோழி ஏந்தலைமுன்னிக்
கடியாமாறு நொடிகென்றது.

பண் :

பாடல் எண் : 21

படையார் கருங்கண்ணி வண்ணப்
பயோதரப் பாரமும்நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க
ளீர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட்
டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது
போலு முருவினதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
படை ஆர் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும் படைக்கலம் போலுங் கரிய கண்ணையுடையாளுடைய நிறத்தையுடைய முலைகளின் பாரத்தையும்; நுண் இடையார் மெலிவும் கண்டு அப்பாரத்தைத் தாங்கலுறாநின்ற நுண்ணிய விடையாரது மெலிவையுங்கண்டு; அண்டர்கள் என்னையராகிய வாயர்; ஈர் முல்லை வேலி எம்மூர் ஈரிய முல்லையாகிய வேலியை யுடைய எம்மூரின்கண்; விடை ஆர் மருப்புத் திருத்திவிட்டார் விடையினது நிரம்பிய மருப்பைத் திருந்தச்செய்து விட்டார்கள்; வியன் தென் புலியூர் உடையார் கடவி வருவது போலும் உருவினது அவ்விடை அகன்ற தென்புலியூரை யுடையவர் செலுத்திவரும் விடைபோலுமுருவினையுடைத்து; இனியென்னிகழும்! எ-று.
இயல்வது மேற்கொள்ளாமையின் இடையாரென இழித்துக் கூறினாள். முல்லையையுடைய வேலியெனினுமமையும். அவ்வேறு கோள் நிகழ்வதன்முன் வரைந்தெய்துவாயாக வென்றவாறு. விடையார்மருப்புத் திருத்திவிட்டார் நினக்குற்றது செய்யென் பதனைக் கேட்டுத் தலைமகனுள்ளம் வாடினான்; அஃதெற்றிற் கெனின், ஏறுதழுவிக்கோடல் தங்குலத்திற்கு மரபாக லானும், தமக்குப் பொதுவர் பொதுவியரென்று பெயராகலானும், அவ்வேற்றைத் தன்னின் முற்பட்டானொருவன் றழுவவுந்தகு மென்றுள்ளம் வாடினான். அதனைத்தோழிகண்டு அவ்வேறு புலியூரு டையார் கடவிவருவது போலு முருவினதென்றாள்; என்றது அதன் வெம்மை சொன்னவாறன்று; இவ்வொழுக்கம் புலியூருடையாரதருளான் வந்ததாகலின், அவ்வேறுநினக்கே வயப்படுவதன்றி மற்றொருத்த ராலணுகுதற்கரிது; நீ கடிது விரைந்து செய்; அஞ்ச வேண்டாவென் றாளாயிற்று. இது முல்லைத்திணை. மெய்ப்பாடு: அது. பயன்: ஏறுகோளுணர்த்தி வரைவுகடாதல். 136

குறிப்புரை :

13.21 ஏறுகோள்கூறிவரைவுகடாதல்
ஏறுகோள்கூறி வரைவுகடாதல் என்பது எதிர்கோள்கூறி வரைவுகடாய தோழி, எம்முடைய வையன்மார் அவளுடைய முலையின் பெருமையும் இடையின் சிறுமையுங்கண்டு எம்மூர்க் கண் விடையின் மருப்பைத் திருத்திவிட்டார்; இனியடுப்பன வறியேனென ஏறுகோள்கூறி வரைவுகடாவாநிற்றல். ஈண்டுக் கூறுவானுதலுகின்றது முல்லைத்திணையாகலின், அந்த முல்லைத் திணைக்கு மரபாவது, ஓரிடத்தொரு பெண்பிறந்தால் அப்பெண்ணைப் பெற்றவர் தந்தொழுவில் அன்று பிறந்த சேங்கன்றுள்ளனவெல்லாந் தன்னூட்டியாக விட்டு வளர்த்து அப்பரிசினால் வளர்ந்த வேற்றைத் தழுவினானொருவனுக்கு அப்பெண்ணைக் கொடுத்தல் மரபென்க. அதற்குச் செய்யுள்
13.21. என்னை யர்துணி
வின்ன தென்றது.

பண் :

பாடல் எண் : 22

உருப்பனை அன்னகைக் குன்றொன்
றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை
யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன்
னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென் னோவினை
யேன்யான் புகல்வதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உருப்பனை அன்ன கைக்குன்று ஒன்று உரித்து வடிவு பனையையொக்குங் கையையுடைய குன்றொன்றையுரித்து; உரவு ஊர் எரித்த நெருப்பனை வலியையுடைய வூர்களையெரித்த நெருப்பையுடையானை; அம்பலத்து ஆதியை அம்பலத்தின் கணுளனாகிய வெல்லாப்பொருட்கு முதலாயவனை; உம்பர்சென்று ஏத்திநிற்கும் திருப்பனையூர் அனையாளை உம்பர்சென்று வாழ்த்தி நிற்றற்கிடமாந் திருப்பனையூரை யொப்பாளை; நாளைப் பொன் புனைதல் செப்பி அயலார் நாளைப் பொன்புனைதலைச் சொல்லி; வினையேன் யான் முன் நின்று பொருப்பனைப் புகல்வது என்னோ தீவினையேனாகிய யான்முன்னின்று பொருப்பனைச் சொல்லுவ தெவனோ? எ-று.
உரவூரெரித்தலை நெருப்பின் மேலேற்றுக. எரித்த நெருப்பனென்ற சொற்களினாற்றலான், எரித்தது நெருப்பானென்பது போதரும். புகல்வதென்றது வரைந்தெய்து வாயாகவென்று பின் சொல்லப்படுங் காரியத்தை. இது சிறைப்புறம். பொருப்ப னென்பது முன்னிலைக்கண் வந்ததென்று தலைமகன் முன்னிலையாகக் கூறினாளெனினுமமையும். அயலுரை தலை மகட்கியாதுமியை பில்லாதவுரை; அயலாரொருப்பட்டவுரை யெனினுமமையும். மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன்: வரைவு கடாதல். 137

குறிப்புரை :

13.22 அயலுரையுரைத்துவரைவுகடாதல்
அயலுரையுரைத்து வரைவு கடாதல் என்பது ஏறுகோள்கூறி வரைவு கடாயதோழி, அயலவர் நாளைப் பொன் புனையப் புகுதா நின்றார்; இதற்குத் தீவினையேன் சொல்லுவதென்னோவெனத் தான் முன்னிலைப் புறமொழியாக அயலுரையுரைத்து வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.22. கயல்புரை கண்ணியை
அயலுரை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

மாதிடங் கொண்டம் பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு
வித்தது தூமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்: தூ மொழி தூய மொழியையுடையாய்; மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் மாதை யிடப்பக்கத்துக் கொண்டெல்லாருங்காண அம்பலத்தின்கணின்ற பொருந்தா வொழுக்கத்தையுடையவனது; வட வான் கயிலைப் போது இடங்கொண்ட பொன் வேங்கை வடக்கின்கணுண்டாகிய பெரிய கயிலைமலைக் கணுளதாகிய பொருப்பிடங் கொண்ட பொன் போலு மலரையுடைய வேங்கை; தினைப்புனம் கொய்க என்று தாது இடங்கொண்டு தினைப்புனத்தைக் கொய்கவென்று தாதையிடத்தே கொண்டு; பொன் வீசி பொன்போலு மலரை யெல்லாங்கொடுத்து; தன் கள் வாய் சொரிய நின்று தனது தேனைப் பூத்தவிடஞ் சொரியநின்று; சோதிடம் கொண்டு இது எம்மைக் கெடுவித்தது சோதிடஞ்சொல்லுதலைப் பொருந்தி இஃதெமைக் கெடுத்தது; இனியென்செய்தும்? எ-று.
பொன்னைக் கொடுத்துப் பிறர்க்கடிமையாதலைப் பொருந்தித் தானிழிந்த சாதியாதலாற் றனக்குரியகள்ளை வாய்சொரிய நின்றெனச் சிலேடைவகையா னிழித்துக் கூறினாளாகவுமுரைக்க. சோதிடங் கொண்டிதெம்மைக் கெடக்கொண்டதென்பது பாடமாயிற்கெடக் கொண்டதென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய்க் கெடுத்ததென் னும் பொருள்பட்டு, எம்மையென்னு மிரண்டாவதனை முடித்தன வாக வுரைக்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செறிப்பறிவுறுத்தல். 138

குறிப்புரை :


13.23 தினைமுதிர்வுரைத்துவரைவு கடாதல்
தினைமுதிர்வுரைத்து வரைவுகடாதல் என்பது அயலுரை யுரைத்து வரைவுகடாய தோழி, இவ்வேங்கை, தினைப்புனங் கொய்கவென்று சோதிடஞ் சொல்லுதலைப் பொருந்தி, எம்மைக் கெடுவித்தது, இனி நமக்கேனல் விளையாட்டில்லையெனச் சிறைப் புறமாகத் தலைமகளோடு கூறுவாள் போன்று, தினைமுதிர் வுரைத்து வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.23. ஏனல் விளையாட் டினியில் லையென
மானற் றோழி மடந்தைக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

வடிவார் வயற்றில்லை யோன்மல
யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம்
பெருமஇத் தண்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து நின்றும் அழகார்ந்த வயல் சூழ்ந்த தில்லையை யுடையவனது பொதியிற் கணின்றுவைத்தும்; வரு தேன் கடிவார் களிவண்டு நின்று அலர் தூற்ற நறுநாற்றத்தால் வாராநின்ற தேன்களும் நாற்றத்தைத் தேரு நெடிய களிவண்டுகளும் நின்று அலர்களைக் குடைந்து தூற்ற; பெருங்கணியார் இனி நமக்கு நோதக நொடிவார் வேங்கையாகிய பெருங்கணியார் இப்பொழுது நமக்கு நோவுதகப் பருவஞ் சொல்லுவாராயிருந்தார்; யான் உமக்கு என் உரைக்கேன் யானுமக் கென்சொல்லுவேன்; எமர் தினை தடிவார் கணியார் சொல்லுதலால் எமர்தினையைத் தடிவாராயிருந்தார், அதனால், - பெரும பெரும; இத்தண்புனம் காவேம் இத்தண்புனத்தை யாமினிக்காவேம்; நீ பகல்வரவேண்டா எ-று.
வடிவார்தில்லை யென்றியைப்பினுமமையும். மலயத்து வாழ்வார் பிறர்க்கு வருத்தஞ் செய்யாராகலின், மலயத்து நின்றுமென்றும்மை கொடுத்தார். மலயத்துநின்றும் வருந்தே னென்றுரைப்பாருமுளர். இப்பொருட்கு வேங்கை மலயத்தை யணைந்ததோரிடத்து நின்றதாக வுரைக்க. கடி - புதுமையுமாம். வண்டொழுங்கினது நெடுமைபற்றி வார்களிவண் டென்றாள். இதுவுமதுவாகலான், அலர்தூற்ற வென்பதற்குத் தன்னோடு பயின் றாரைக் கண்ணோட்ட மின்றி வருத்தாநின்ற தென்று புறங்கூறவென்று முரைக்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறிவிலக்கல். 139

குறிப்புரை :

13.24 பகல்வரல்விலக்கிவரைவுகடாதல்
பகல்வரல் விலக்கி வரைவுகடாதல் என்பது சிறைப் புறமாகத் தினை முதிர்வுரைத்து வரைவுகடாயதோழி, எதிர்ப்பட்டு நின்று, இப்பெருங்கணியார் நமக்கு நோவுதகப் பருவஞ் சொல்லுவாராயிருந்தார்; எம்மையன்மார் இவர்சொற் கேட்டு இத்தினையைத் தடிவாராயிருந்தார்; எமக்குமினித் தினைப்புனங்காவலில்லை; நீரினிப்பகல்வரல் வேண்டாவெனப் பகல்வரல் விலக்கி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.24. அகல்வரை நாடனை
பகல்வர லென்றது.

பண் :

பாடல் எண் : 25

நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்
திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின்
மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட
தாகி விளைந்ததுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
என் நெஞ்சத்து இருந்து தன்னை நினைவித்து தானே வந்திருந்து திருத்த வேண்டுதலின் என்னெஞ்சத்துப் புகுந்திருந்து தன்னை யானினையும்வண்ணஞ்செய்து; அம்பலத்து நின்று அம்பலத்தின்கட்டன்றிருமேனி காட்டிநின்று; புனைவித்த ஈசன் பொதியின்மலைப் பொருப்பன் விருப்பின் என்னாற் றன்னைப் புகழ்வித்துக்கொண்ட ஈசனது பொதியின் மலைக்கணு ளனாகிய பொருப்பன் மேல்வைத்த விருப்பினால்; தினை வித்திக் காத்துச் சிறந்து நின்றேமுக்கு தினையை வித்தி அதனைக் காத்து உள்ளம் மலிந்து நின்ற எங்களுக்கு; சென்று சென்று வினைவித்திக் காத்து விளைவு உண்டதாகி விளைந்தது அத்தினையை வித்திக் காத்த காவல் போய்த் தீவினையை வித்தி அதனைக் காத்து அதன் விளைவையுமுண்டதாகி முடிந்தது எ-று.
நினைவித்துத் தன்னை யென்னெஞ்சத்திருந்தென்பதற்கு ஒரு காற்றன்னை நினைவேனாகவுஞ் செய்து அந்நினைவே பற்றுக் கோடாகத் தான் புகுந்திருந்தெனினுமமையும். பொருப்பன் விருப்பென்பதனை நீர் வேட்கை போலக் கொள்க. தினை வித்திய ஞான்று இத்தினைக்காவல் தலைக்கீடாக அவனை யெதிர்ப்படலா மென்று மகிழ்ந்து அதற்குடம்பட்டாராகலிற் றாம்வித்தினார்போலக் கூறினாள். புனத்தோடுதளர்வுற்று - புனத்தாற்றளர்வுற்று. 140

குறிப்புரை :

13.25 தினையொடுவெறுத்துவரைவுகடாதல்
தினையொடு வெறுத்து வரைவு கடாதல் என்பது பகல்வரல் விலக்கி வரைவுகடாயதோழி, இத்தினைக்காவறலைக்கீடாக நாமவனை யெதிர்ப்படலாமென்று நினைந்து தினையை வித்திக் காத்தோம்; அது போய்த் தீவினையை வித்திக்காத்து அதன் விளைவையுமுண்டதாகி முடிந்ததெனச் சிறைப்புறமாகத் தினை யொடு வெறுத்து வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.25. தண்புனத்தோடு தளர்வுற்றுப்
பண்புனைமொழிப் பாங்கிபகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 26

கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய் வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய் நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான் தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கனை கடற் செய்த நஞ்சு உண்டு ஒலியா நின்ற கடலின்க ணுண்டாக்கப்பட்ட நஞ்சை யுண்டுவைத்து; அம்பலத்துக் கண்டார்க்கு அமிழ்தாய் அம்பலத்தின்கணின்று கண்டார்க்கு அமிழ்தமாய்; வினைகெடச் செய்தவன் விண் தோய்கயிலை மயில் அனையாய் நம் வினைகெடும்வண்ணஞ் செய்தவனது விண்ணைத் தோயாநின்ற கயிலையின் மயிலை யொப்பாய்; நனைகெடச் செய்தனம் ஆயின் அரும்பியஞான்றே நனையைக் கெடும் வண்ணஞ் செய்தேமாயின்; நமைக் கெடச் செய்திடுவான் இத்திருக் கணிதினை கெடச் செய்திடுமாறும் உண்டோ நம்மைக் கெடுப்பான் வேண்டி இத்திருவாகிய கணி தினைகெட முயலுமாறுமுண்டோ? யாமது செய்யப்பெற்றிலேம் எ-று. கனைகடற்செய்த வென்றதனான் நஞ்சின்பெருமை கூறினார். செய்யாதநஞ்சிற் செய்தநஞ்சு கொடிதாகலின், அதன் கொடுமை விளங்க, செய்தநஞ்சென்றார். அமிழ்தாதல் அமிழ்தின் காரியத்தைச் செய்தல். கண்டார்க் கென்றதனான், அல்லாதவமிழ்தோடு இவ்வமிழ் திற்கு வேற்றுமை கூறியவாறாம். கெடச்செய்திடுவா னென்னுஞ் சொற்கள் ஒருசொன் னீரவாய், கெடுப்பானென்னும் பொருள்பட்டு, நம்மை யென்னு மிரண்டாவதற்கு முடிபாயின. வினைகெடச் செய்தவ னென்பது முதலாயினவற்றிற்கு மிவ்வாறுரைப்பினுமமையும். திரு: சாதிப் பெயர். கணி: தொழிற் பெயர். நல்லகணி யென்றிழித்துக் கூறி னாளாக வுரைப்பாருமுளர். 141

குறிப்புரை :

13.26 வேங்கையொடுவெறுத்துவரைவுகடாதல்
வேங்கையொடுவெறுத்து வரைவுகடாதல் என்பது தினையொடுவெறுத்து வரைவு கடாயதோழி, இவ்வேங்கை யரும்பிய ஞான்றே அரும்பறக் கொய்தேமாயின் இவர் இன்று நம்மைக்கெடுப்பான் வேண்டி இத்தினைகெட முயலுமாறு முண்டோ? யாமது செய்யப் பெற்றிலேமென வேங்கையொடு வெறுத்து வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள் 13.26. நீங்குகஇனி நெடுந்தகையென வேங்கைமேல் வைத்துவிளம்பியது.

பண் :

பாடல் எண் : 27

வழுவா இயலெம் மலையர்
விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல்
லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
தாவதித் தொல்புனத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வழுவா இயல் எம் மலையர் விதைப்ப விதைக்கும் பருவத்துங் கொய்யும்பருவத்தும் வழுவாது செய்யுமியல்பையுடைய எந்தமராகிய மலையர் விதைப்ப; யாம் வளர்த்த கொழுவார் தினையின் குழாங்களெல்லாம் யாம்வளர்த்த கொழுவிய நெடிய தினையின் திரட்களெல்லாம்; எம் குழாம் வணங்கும் செழுவார் கழல் தில்லைச் சிற்றம்பலவரை எமது குழாஞ்சென்று வணங்கும் வளவிய நெடிய கழலையுடைய தில்லையிற் சிற்றம்பலத்தையுடையானை; சென்று நின்று தொழுவார் வினை நிற்கிலே சென்று நின்று தொழுவாருடைய வினை அவர்கண் நிற்கிலே; இத்தொல் புனத்து நிற்பது ஆவது இப்பழைய புனத்தினிற்ப தாவது; இனிநில்லா எ-று.
குழாங்களெல்லா நிற்பதாவதெனக்கூட்டுக. நிற்பதென்பது நிற்றலென்னும் பொருட்டு. நிற்பதாவவென்பது பாடமாயின், ஆவவென்பதிரங்கற் குறிப்பாக வுரைக்க. நிற்பவென்பதூஉம் பாடம். குழுவார்தினையென்பதூஉம் பாடம். ; 142

குறிப்புரை :

13.27 இரக்கமுற்றுவரைவுகடாதல்
இரக்கமுற்று வரைவு கடாதல் என்பது வேங்கையொடு வெறுத்து வரைவுகடாயதோழி, யாமவனை யெதிர்ப்படலா மென்றின்புற்று வளர்த்த தினைத்திரள் இப்புனத்தின்கணில்லா வாயிருந்தன; இனி நாமவனை யெதிர்ப்படுமாறென்னோவெனச் சிறைப்புறமாகத் தலைமகனுக்கிரக்கமுற்று வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.27. செழுமலை நாடற்குக்
கழுமலுற் றிரங்கியது.

பண் :

பாடல் எண் : 28

பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம்
புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக்
கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
தின்றிக் கடிப்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எமக்குப் புகலாம் விருப்பர்க்கு எமக்குப் புகலிடமாதற்குக் காரணமாகிய விருப்பத்தையுடையவர்க்கு; யாவர்க்கும் மேலர்க்கு எல்லார்க்கு மேலாயவர்க்கு; மேல் வரும் ஊர் எரித்த நெருப்பர்க்கு ஆகாயத்தின்கட் செல்லுமூர்களையெரித்த நெருப்பையுடையவர்க்கு; நீடு அம்பலவருக்கு நிலைபெற்ற வம்பலத்தையுடையவர்க்கு; அன்பர் குலம் நிலத்துக்கருப்பற்று விட்டென அன்பராயினாருடைய குலங்கள் உலகத்துப் பிறவிக்கார ணத்தைப் பற்றுவிட்டகன்றாற் போல; இக்கடிப்புனம் இன்று கொய் தற்றது இக்காவலையுடைய புனம் இப்பொழுது தொடர்பறக் கொய் தற்றது. அதனால் - பொருப்பர்க்கு யாம் ஒன்றும் புகலமாட்டேம் பொருப்பர்க் கியாமொன்றுஞ் சொல்லமாட்டேம் எ-று.
யாமொரு குணமுமில்லேமாயினுந் தமது விருப்பினா லெமக்குப் புகலிடமாயினாரென்னுங் கருத்தால், புகலெமக்காம் விருப்பர்க் கென்றார். எம்மால் விரும்பப்படுவார்க் கென்பாருமுளர். வீடென வென்பதூஉம் பாடம். 143

குறிப்புரை :

13.28 கொய்தமைகூறி வரைவுகடாதல்
கொய்தமைகூறி வரைவுகடாதல் என்பது இரக்கமுற்று வரைவுகடாயதோழி எதிர்ப்பட்டு நின்று, இப்புனத்துத்தினையுள் ளது இன்றுதொடர்பறக்கொய்தற்றது; எமக்குமினிப்புனங்காவ லில்லை; யாமுமக்கறிவு சொல்லுகின்றேமல்லேம்; நீரேயறிவீ ரெனத்தினை கொய்தமைகூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.28. நீடிரும்புனத்தினி யாடேமென்று
வரைவுதோன்ற வுரைசெய்தது.

பண் :

பாடல் எண் : 29

பரிவுசெய் தாண்டம் பலத்துப்
பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க
பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
காட்டு மிளங்கிளியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பரிவு செய்து ஆண்டு எம்மைப் பரிந்தாண்டு; அம்பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் அம்பலத்தின்கட் பயில்வானது பரங்குன்றினிடத்து; அருவி செய்தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் அருவிநீராற் செய்யப்பட்ட தாழ்ந்த புனத்தின்கணுண் டாகிய ஐவனத்தைக் கொய்யவும்; இவ் வனத்து இருவிசெய் தாளின் இருந்து இக் காட்டின்கண் இருவியாகச் செய்யப்பட்ட தாளிலே யிருந்து; செய்தால் பேயொடும் பிரிவு அரிது நட்புச்செய்தாற் பேயோடாயினும் பிரிவரிது; கொள்க என்னும் பெற்றி இதனையுள்ளத்துக் கொள்கவென்னுந் தன்மையை; இளங்கிளி இன்று காட்டும் இளங்கிளிகள் இப்பொழுது காட்டாநின்றன எ-று.
பேயோடாயினும் பிரிவுசெய்தா லாற்றுதலரிதென் றுரைப் பினுமமையும். இருவியென்பது கதிர்கொய்த தட்டை. தாளென்பது கதிர்கொய்யாதமுன்னுஞ் சொல்வதோர்பெயர். இப்புனத்துப் பயின்ற கிளிகள் தமக்குத் துப்பாகாக்காலத்து மிதனைவிடாதிரா நின்றன; இனி நங்காதலர் நம்மாட்டென் செய்வ ரென்னுங் கருத்தான், மறைப்புறமாயிற்று. சிறைப்பட வுரைத்த தென்பது பாடமாயின், சிறைக்கண்வந்து நிற்பவென்றுரைக்க. 144

குறிப்புரை :

13.29 பிரிவருமைகூறி வரைவுகடாதல்
பிரிவருமை கூறி வரைவு கடாதல் என்பது கொய்தமைகூறி வரைவு கடாய தோழி, இப்புனத்துப் பயின்ற கிளிகள் தமக்குத் துப்பாகாக் காலத்துந் தினைத்தாளை விடாதிராநின்றன; நாம் போனால் நங்காதல ரிவ்விடத்தே வந்துநின்று நம்மைத்தேடுவர் கொல்லோ வெனச் சிறைப்புறமாகப் பிரிவருமைகூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.29. மறைப்புறக் கிளவியிற்
சிறைப்புறத் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 30

கணியார் கருத்தின்று முற்றிற்
றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண்
டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு
நீர்மைகள் சொல்லுமினே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கணியார் கருத்து இன்று முற்றிற்று கணியாரது நினைவு இன்று முடிந்தது; யாம் சென்றும் யாங்கள் போகா நின்றேம்; கார்ப் புனமே கரியபுனமே; மணி ஆர் பொழில்காள் மணிகளார்ந்த பொழில்காள்; மறத்திர் கண்டீர் வேங்கையொடு பயின்றீராகலின் நீரெம்மைமறப்பீர்; மன்னும் அம்பலத்தோன் அணி ஆர் கயிலை மயில்காள் நிலைபெறுமம்பலத்தையுடையவனது அழகார்ந்த கயிலையினின்றும் வந்த மயில்காள்; அயில் வேல் ஒருவர் வந்தால் அயில் வேல் துணையாகத் தனிவருமவர் ஈண்டுவந்தால்; துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லுமின் அன்புடையார் துணியாதனவற்றை அவர் துணிந்தாரென்னு நீர்மை களையவர்க்குச் சொல்லுமின் எ-று.
நீர்மை ஈண்டு வியப்பு. நீரிவ்வாறு சொன்னால் அவராற்று வாரென்பது கருத்து. பேரருளி னோன் கயிலையினுள்ளீராகலின் நீர் கண்ணோட்ட முடையீரென்பது கருத்து. கார்ப்புனமென்பதற்குக் கார் காலத்துப் பொலியும் புனமெனினுமமையும். துணியாதனவாவன பிரிதலும் வரையுந் துணையு மாற்றியிருத்தலும். புனமே பொழில்காள் மயில் காள் என்றுகூட்டி, நீரெம்மை மறப்பீராயினும் மறவாது சொல்லு மினென்றுரைப்பாருமுளர். இவையாறற்கும் மெய்ப்பாடும் பயனும் அவை. #9; #9; 145

குறிப்புரை :

13.30 மயிலொடு கூறி வரைவுகடாதல்
மயிலொடு கூறி வரைவுகடாதல் என்பது பிரிவருமைகூறி வரைவுகடாய தோழி, பிரிவாற்றாமையோடு தலைமகளையுங் கொண்டு புனங்காவலேறிப் போகாநின்றாள், கணியார்நினைவு இன்றுமுடிந்தது; யாங்கள் போகாநின்றோம்; இப்புனத்தொருவர் வந்தால் இங்கு நின்றும் போனவர்கள் துணியாதன துணிந்து போனாரென்று அவர்க்குச் சொல்லுமினென மயிலொடுகூறி வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.30. நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம்
பாங்கி பகர்ந்து பருவர லுற்றது.

பண் :

பாடல் எண் : 31

பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற
வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற்
றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
வாமற்றிவ் வான்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் அதுவோ விதுவோ வழி யென்றுமயங்கிப் பொதுவாக நின்ற நிலைமையை நீக்கி என்னையாண்டவன்; புலியூர் அரன் புலியூரிலரன்; பொருப்பே எனில் இது இன்று இருக்கின்றவாறு என் அவனது பொருப்பாய் யான்முன்பயின்ற விடமேயாயின் இஃதின்றிருக்கின்றவாறென்; எம் இரும் பொழிலே எம்முடைய பெரிய பொழிலே; நுமக்கு எய்தியது எது நுமக்குத்தான் இன்றுவந்த தியாது; என் உற்றனிர் நீரென்னுற்றீர்; இவ் வான் புனம் இதுவேயுமன்றி இப்பெரிய புனம்; அறை ஈண்டு அருவி மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா ஒலியாநின்ற பெருகிய வருவியாய் விழும் மதுவின்கண் அதனின்சுவையை மாற்றிக் கைப்பாகிய சுவையை வைத்தாலொத்தவாறென்! எ-று.
மற்றென்பது அசைநிலை. எல்லாரையு மாளும் பொதுவாகிய முறைமையினின்று நீக்கி என்னை யுளநெகிழ்விப்பதோரு பாயத்தானாண்டவ னென் றுரைப்பினுமமையும். இன்பஞ்செய்வதுந் துன்பஞ்செய்வது மொன்றாகமாட்டா தென்னுங் கருத்தாற் புலியூரரன் பொருப்பேயிது வெனிலென்றான். அறையீண்டருவி காள் நீரென்னுற்றீரென்றும், அறையீண்டருவிப் புனமென்றும் உரைப்பாருமுளர். 146

குறிப்புரை :

13.31 வறும்புனங்கண்டுவருந்தல்
வறும்புனங்கண்டு வருந்தல் என்பது தலைமகளும் தோழியும் புனங்காவலேறிப் போகாநிற்ப, தலைமகன் புனத்தி டைச் சென்று நின்று, இப்புனம் யாமுன்பயின்றதன்றோ? இஃதின் றிருக்கின்றவாறென்னோ வென்று, அதன் பொலிவழிவுகூறித் தலைமகளைத்தேடி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.31. மென்புனம்விடுத்து மெல்லியல்செல்ல
மின்பொலிவேலோன் மெலிவுற்றது.

பண் :

பாடல் எண் : 32

ஆனந்த மாக்கட லாடுசிற்
றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ
ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி
அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந்
தளர்ந்தனை நன்னெஞ்சமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆனந்த மாக் கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன ஆனந்தமாகிய நீரானிறைந்ததோர் பெரியகடல் நின்றாடுஞ் சிற்றம்பலத்தையொக்கும்; பொன்னின் தேன் உந்து மாமலைச் சீறூர் இது பொன்னினது தேன்றத்திப் பாயும் பெரிய மலைக்கணுண்டாகிய சீறூரிது; செய்யலாவது இல்லை இவ்வாறணித்தாயினு நம்மாற் செய்யலாவதொன்றில்லை, அதனால் வான் உந்தும் மாமதி வேண்டி அழும் மழப்போலும் வானின் கட்செல்லும் பெரிய மதியைக் கொள்ள வேண்டி அதனருமையறியா தழுங்குழவிபோல எய்துதற் கரியாளை விரும்பி; நல் நெஞ்சமே நல்ல நெஞ்சமே; நீயுந் தளர்ந்தனை நீயுந் தளர்ந்தாய்; நானும் தளர்ந்தனன் நீயவ்வரும் பொருள்விரும்புதலான் யானுந்தளர்ந்தேன் எ-று.
தேனையுமிழுமாமலையெனினு மமையும். மழவை நெஞ்சத்திற்கேயன்றித் தலைமகற்குவமையாக வுரைப்பினு மமையும். நெஞ்சத்தைத் தன்னோடுபடுத்தற்கு நன்னெஞ்சமெனப் புனைந்து கூறினான். இது தலைமகளை இற்செறிவிக்கின்றகாலத்து ஆற்றா னாகிய தலைமகன் றோழிகேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. மன்னுமோவும்: அசைநிலை. பதி - தலைமகன். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 147

குறிப்புரை :

13.32 பதிநோக்கிவருந்தல்
பதிநோக்கி வருந்தல் என்பது வறும்புனத்திடை வருந்தா நின்ற தலைமகன், இவ்வாறணித்தாயினும் நம்மாற் செய்யலாவ தொன்றில்லையென்று அவளிருந்த பதியைநோக்கித் தன்னெஞ் சோடுசாவி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.32. மதிநுத லரிவை பதிபுக லரிதென
மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது.
சிற்பி