திருக்கோவையார்-இரவுக்குறி


பண் :

பாடல் எண் : 1

மருந்துநம் மல்லற் பிறவிப்
பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும்
அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள்
தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ
ரதனுக்கு வெள்வளையே. 9;

பொழிப்புரை :

இதன் பொருள்: வெள்வளை வெள்வளையை யுடையாய்; குன்றினின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ மேகம் பொருந்தின குன்றின்கணின் றொலிக்கு மருவிகள்பாய்ந் தழகுவிளங்கும் வண்ணம் மேகம்வந்து பொருந்தின; அதனால், புதைந்து இருள் தூங்கும் புனை இறும்பின் உங்கள் சீறூரதனுக்கு யான் விருந்தினன் அம் மேகத்தின்கட் புதைந்திருள் செறியுஞ் செய்காட்டையுடைய நுமது சீறூரதற்கியான் விருந்தினன்; என்னை யேற்றுக் கொள்வாயாக எ-று.
நம் அல்லற் பிறவிப் பிணிக்கு மருந்து - நம்முடைய அல்லலைச் செய்யும் பிறவியாகிய பிணிக்கு அருந்து மருந்தாய் வைத்தும்; அம்பலத்து அமிர்தாய் இருந்தனர் குன்றின் அம்பலத் தின்கட் சுவையானமிர்தமுமாயிருந்தவரது குன்றினெனக் கூட்டுக.
மேகம் வந்து பொருந்தின வென்றதனால், தன்னூர்க்குப் போதலருமை கூறுவான்போன்று இரவுக்குறி மாட்சிமைப்படு மென்றானாம். இருடூங்கும் புனையிறும்பு என்றதனால், யாவருங் காணாராகலி னாண்டுவந்து நிற்கின்றேனென்றானாம். மாலை விருந்தினரை மாற்றுதலறனன்றென்பது தோன்ற விருந்தின னென்றான். குன்றினின்றேங்கு மருவியேர்திகழச்சென்று பொருந்தின மேகமென்க. அருவியேர்பெற மேகம்பொருந்தினவூர் நின்னூராக லான் என்னி னைப்பற்று யானுமேர்பெற நின்னைவந்து சேர்ந்தே னென்பது போதரும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இரவுக்குறி நேர்வித்தல். 148

குறிப்புரை :

14.1 இரவுக்குறிவேண்டல்
இரவுக்குறி வேண்டல் என்பது பதிநோக்கி வருந்தாநின்ற தலைமகன், இற்றையிரவிற்கியானுங்கள் சீறூர்க்கு விருந்து; என்னையேற்றுக் கொள்வாயாக வெனத் தோழியை யிரவுக்குறி வேண்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.1. நள்ளிருட் குறியை வள்ளல் நினைந்து
வீங்கு மென்முலைப் பாங்கிக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

விசும்பினுக் கேணி நெறியன்ன
சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:ஐய - ஐயனே; விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சின்னெறிமேல் விசும்பிற் கிட்டதோ ரேணிநெறி போலுஞ் சிறுநெறிமேல்; மழை தூங்கு அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் மழை யிடையறாது நிற்றலான் இடையிடையுண்டாகிய அசும்பின்கட் சென்று பொருந்தி யேறுமிடத்து இட்டிமையால் அளை நுழைந்தாற் போன்றிருக்கும்; எம் வாழ்பதி இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது - அதுவேயுமன்றி, எம் வாழ்பதி வழுக்கினான் மெய்யே சிந்தைக்குமேறுதற்கரிது; அதனாலாண்டுவரத்தகாது எ-று.
எழில் அம்பலத்துப் பசும் பனிக்கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதி எழிலையுடைய வம்பலத்தின்க ணுளனாகிய குளிர்ந்த பனியையுடைத்தாகிய பிறையைச்சூடியவனது மலயத்தின் கணுண்டாகிய வெம்வாழ்பதியெனக்கூட்டுக.
இசும்பு ஏற்றிழிவு முதலாயின குற்ற மென்பாருமுளர். அசும்பு சிறு திவலை. இசும்பினிற் சிந்தைக்கு மேறற்கரி தென்றவதனான், எமது வாழ்பதி யிவ்வொழுக்கத்தைச் சிறிதறியு மாயிற் சிந்தையாலு நினைத்தற்கரிய துயரத்தைத் தருமாதலால், தாஞ்செத்துலகாள்வாரில் லை; அதுபோல விவ்வொழுக்க மொழுகற் பாலீரல்லீரென்று மறுத்துக் கூறியவாறாயிற்று. பசுமை செவ்வியு மாம். அதனைக் கோட்டின் மேலேற்றுக. கோட்டையுடைமையாற் கோடெனப்பட்டது. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: இரவுக் குறிமறுத்தல். 149

குறிப்புரை :

14.2 வழியருமைகூறிமறுத்தல்
வழியருமை கூறி மறுத்தல் என்பது தலைமகனிரவுக்குறி வேண்டிநிற்ப, யாங்கள் வாழும்பதி ஏற்றிழிவுடைத்தாகலின் அவ் விடத்து நினக்குச் சிந்தைக்கு மேறற்கரிதெனத் தோழி வழியருமைகூறி மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.2 இரவர லேந்தல் கருதி யுரைப்பப்
பருவரற் பாங்கி யருமை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

மாற்றே னெனவந்த காலனை
யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாற்றேன் என வந்த காலனை ஒருவரானு மாற்றப்படேனென்று வழிபடுவோன துயிரைவௌவ வந்த காலனை; ஓலமிட அடர்த்த கோற்றேன் அவனோலமிடும் வண்ண மடர்த்த கோற்றேன்; குளிர்தில்லைக் கூத்தன் குளிர்ந்த தில்லைக் கணுளனாகிய கூத்தன்; கொடுங்குன்றின் நீள் குடுமிமேல் தேன் விரும்பும் முடவனைப் போல அவனுடைய கொடுங்குன்றினது நீண்ட குடுமியின்மேலுண்டாகிய தேனைவிரும்பு முடவனைப் போல; மெலியும் நெஞ்சே எய்துதற் கருமையை நினையாது மெலிகின்ற நெஞ்சமே; அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கு ஆற்றேன் அரியளாகிய வரிவையிடத்து நீயுண்டாக்கிய அன்பால் யானாற்றேன் எ-று.
மாற்றேனென்பது செயப்படுபொருட்கண் வந்தது. மாறே னென்பது விகாரவகையான் மாற்றேனென நின்றதெனினு மமையும். சுவைமிகுதி யுடைமையிற் கோற்றே னென்றார். நீ வன்கண்மையை யாதலின் இவ்வாறு மெலிந்து முயிர்வாழ்தி, யானத்தன்மை யேனல்லேன் இறந்துபடுவே னென்னுங் கருத்தான், மெலியுநெஞ்சே யானாற்றேனென்றான். நீங்கி விலங்காது - நீங்கியுள்ளஞ் செல்கின்ற செலவினின்றும் விலங்காது. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: இரவுக்குறி நயப்பித்தல். 150

குறிப்புரை :

14.3 நின்றுநெஞ்சுடைதல் நின்றுநெஞ்சுடைதல் என்பது வழியருமை கூறக்கேட்ட தலைமகன், எய்துதற்கரியாளை விரும்பி நீ மெலியாநின்றவிதற்கு யானாற்றேனெனக் கூறித் தனதிறந்துபாடு தோன்றநின்று தன்னெஞ்சுடைந்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.3. பாங்கி விலங்கப் பருவரை நாடன்
நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது.

பண் :

பாடல் எண் : 4

கூளி நிரைக்கநின் றம்பலத்
தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி
யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள்
தேரு மிரவில்வந்து
மீளியுரைத்தி வினையே
னுரைப்பதென் மெல்லியற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கூளி நிரைக்க நின்று கூத்தின்கட் சுவையாற் பேய்களும் போகாது நிரைத்துநிற்ப நின்று; அம்பலத்து ஆடி குரை கழற்கீழ்த் தூளி நிரைத்த சுடர் முடியோய் அம்பலத்தின் கணாடுவானது ஒலிக்குங் கழலையுடைய திருவடிக்கணுண்டாகிய தூளிமொய்த்த சுடர்முடியையுடையோய்; இவள் தோள்நசையால் இவடோண்மேலுண்டாகிய விருப்பினால்; ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து மீளி உரைத்தி ஆளிகள் ஊடுபோக்கற நிரைத்து வலியையுடைய யானைகளைத் தேடு மிரவின்கண்வந்து மீளுதலைச் சொல்லாநின்றாய்; மெல்லியற்கு வினையேன் உரைப்பது என் இனி மெல்லியற்குத் தீவினையேன் சொல்லுவதென்? உடன்படுவாயென்பேனோ மறுப்பாயென் பேனோ? எ-று.
இரவுக்குறியுடம்பட்டாளாகலின், தூளிநிரைத்த சுடர் முடியோ யென்றதனால், அரையிருளின்வருதலான் வருமேதத்தை அத்தூளி காக்குமென்று கூறினாளாம். குரைகழல்: அன்மொழிதொகை. மருடல் வெகுட லென்பன மருளி வெகுளி யென நின்றாற்போல, மீடலென்பது மீளியென நின்றது. வந்து மீளியென்பதற்கு, வந்து மீடலையுடைய இரவுக் குறி என்றுரைப்பாருமுளர். உடம்படவு மறுக்கவுமாட்டாதிடைநின்று வருந்துதலின் வினையேனென்றாள். ஆளி நிரைக்குமாற்றின்கண் நீ வருதற்குடம் படுதற்காகாதாயினுந் தோணசையாற் கூறுகின்ற விதனை மறுப்பின் நீ யாற்றாயென்பதனா லுடம்படாநின்றேனென்பது படக் கூறினமை யால், வகுத்துரைத்த லாயிற்று. மெய்ப்பாடு: அச்சம். பயன்: இரவுக்குறிநேர்தல். இறந்தகால வுட்கோள்: குறிப்பு நுட்பம். 151

குறிப்புரை :

14.4 இரவுக்குறிநேர்தல்
இரவுக்குறி நேர்தல் என்பது தலைமக னெஞ்சுடைந்து வருந்தாநிற்பக் கண்டு, இவனிறந்துபடவுங் கூடுமென வுட் கொண்டு, நீ யாளிக ணிரைத்துநின் றியானைகளைத்தேடு மிராவழியின் கண்வந்து மீள்வேனென்னாநின்றாய்; இதற்குத் தீவினையேன் சொல்லுவதெவனோ வென்று மறுத்த வாய் பாட்டாற் றோழி யிரவுக்குறி நேராநிற்றல். அதற்குச் செய்யுள்
14.4. தடவரை நாடன் தளர்வு தீர
மடநடைப் பாங்கி வகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

வரையன் றொருகா லிருகால்
வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின்
றோன்தில்லை யன்னநின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன
வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம்
பாவி யொளிர்வனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பா - சிலம்பா; நின் ஊர் நலம் பாவி ஒளிர்வன விரை என்ன நின்னூரின் நலம்பரந்து விளங்குவன வாகிய ஆண்டையார் பூசும் விரையெத்தன்மைய; மென்னிழல் என்ன அவர் விளையாடு மெல்லிய நிழலெத்தன்மைய; வெறி உறு தாது இவர்போது என்ன அவர்சூடு நறுநாற்றம் பொருந்திய தாதுபரந்த போதுகளெத்தன்மைய; உரை உரைப்பாயாக எ-று.
அன்று ஒருகால் வரை இருகால் வளைய நிமிர்த்து அன்றொருகால் வரையை யிரண்டுகாலும் வளையும்வண்ண மார்பையுந் தோளையுநிமிர்த்து; வட்கார் நிரை அழல் எழ அன்று எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் பகைவரது நிரையை யழலெழும் வகை யன்றெய்து நின்றவனது தில்லையையொக்கு நின்னூரெனக்கூட்டுக.
மெல்லிய நிலத்தையுடைய நிழலை மென்நிழலென்றாள். நலம்பாவி யொளிர்வன என்பதனை யெல்லாவற்றோடுங் கூட்டுக. அன்று நிமிர்த்தெனவும், அன்றெய்து நின்றோனெனவுமியையும். இது குறிப்பெச்சம். வன்றழ லென்பதூஉம் பாடம். இவ்வாறு வினவத் தலைமகனொன்றனை யுட்கொள்ளுமென்று கருதிக் கூறினமையால், ஆங்கொரு சூழ லென்றார். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகற்குக் குறியிட முணர்த்துந் தோழி யவனாற்றன்னை வினவுவித்தல். 9; 152

குறிப்புரை :

14.5 உட்கொளவினாதல்
உட்கொள வினாதல் என்பது இரவுக்குறிநேர்ந்த தோழி, தங்கணிலத்து மக்கள் கோலத்தனாய் வருவதற்கு அவனுட் கொள்வது காரணமாக, நின்னூரிடத்தார் எம்மலர்சூடி எச்சாந் தணிந்து எம்மர நிழலின்கீழ் விளையாடுபவெனத் தலைமகனை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
14.5. நெறிவிலக் குற்றவ னுறுதுயர் நோக்கி
யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 6

செம்மல ராயிரந் தூய்க்கரு
மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
வாய்நும ராடுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்: அம் மலர் வாள் கண் நல்லாய் அழகிய மலர்போலுமொளியையுடையவாகிய கண்ணையுடைய நல்லாய்; செம்மலர் ஆயிரம் தூய் கருமால் திருக்கண் அணியும் செய்ய தாமரைமலர்க ளாயிரத்தைத் தூவி முன்வழிபட்டு ஒருஞான்று அவற்றுளொன்று குறைதலாற் கரியமால் அவற்றோடொக்குந் தனது திருக்கண்ணை யிடந்தணியும்; மொய்ம் மலர் ஈர்ங் கழல் அம்பலத்தோன் மன்னுதென் மலயத்து பெரிய மலர்போலும் நெய்த்த நிறத்தையுடையவாகிய திருவடியையுடைய வம்பலத் தான்றங்குந் தென்மலயத்திடத்து; எல்லிவாய் நுமர் ஆடுவது இராப் பொழுதின்கண் நுமர் விளையாடுவது; எம்மலர் சூடி நின்று எம்மலரைச் சூடிநின்று; எச்சாந்து அணிந்து எச்சாந்தையணிந்து; என்ன நல் நிழல்வாய் என்ன நன்னிழற்கீழ்? கூறுவாயாக எ-று.
வாள்: உவமையெனினுமமையும். நுமரென்றது அவரோ டொரு நிலத்தாராகிய மக்களை. திருமாலென்பதூஉம் பாடம். நிழல் அணியன் றெனினும், பன்மைபற்றி யணியென்றார். மெய்ப்பாடு : அது. பயன்: குறியிடமுணர்த்துதல். 153

குறிப்புரை :

14.6 உட்கொண்டுவினாதல்
உட்கொண்டு வினாதல் என்பது கேட்ட வினாவையுட் கொண்டு அந்நிலத்து மக்கள் கோலத்தனாய்ச் செல்வானாக, நின்னூரிடத்து இராப்பொழுது நுமர் எம்மலரைச்சூடி எச்சாந்தை யணிந்து என்ன மரநிழலின்கீழ் விளையாடுபவெனத் தலைமகன் றோழியை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.6. தன்னை வினவத் தானவள் குறிப்பறிந்
தென்னை நின்னாட் டியலணி யென்றது.

பண் :

பாடல் எண் : 7

பனைவளர் கைம்மாப் படாத்தம்
பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற்பொதியின்
மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
தோகை துயில்பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
றாடுஞ் செழும்பொழிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பனை வளர் கைம் மாப் படாத்து அம்பலத்து அரன்பாதம் பனைபோலுநெடிய கையையுடைய மாவினுரியாகிய படாத்தையுடைய வம்பலத்தரன்பாதங்களை; விண்ணோர் புனைவளர் சாரல் பொதியின் மலை விண்ணோர் பரவுதற்கிடமாகிய வளருஞ் சாரலையுடைய பொதியின்மலைக்கண்; பொலி சந்து அணிந்து பொலியுஞ் சந்தனச் சாந்தையணிந்து; சுனைவளர் காவிகள் சூடி சுனைக்கண் வளருங் காவிகளைச் சூடி; யாங்கள் நின்று ஆடும் செழும்பொழில் யாங்கணின்றாடும் வளவியபொழில்; பைந்தோகை துயில் பயிலும் சினை வளர் வேங்கைகள் பசிய மயில்கள் துயில்செய்யுங் கோடுவளரும் வேங்கைப் பொழில் எ-று.
என்றது சந்தனச் சாந்தணிந்து சுனைக்காவிசூடி வேங்கைப் பொழிற்கண் நீவந்துநின்று நின்வரவறிய மயிலெழுப்பு வாயாகவென்றவாறு. மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக்குறியிட முணர்த்துதல். #9; 154

குறிப்புரை :

14.7 குறியிடங்கூறல் குறியிடங்கூறல் என்பது உட்கொண்டு வினாவிய தலைமக னுக்கு, யாங்கள் சந்தனச்சாந்தணிந்து, சுனைக்காவிகள் சூடி, தோகைக டுயில்செய்யும் வேங்கைப் பொழிற்கண் விளையாடு வேம்; அவ்விடத்து நின்வரவறிய மயிலெழுப்புவாயாகவெனத் தோழி குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.7. இரவுக் குறியிவ ணென்று பாங்கி
அரவக் கழலவற் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

மலவன் குரம்பையை மாற்றியம்
மால்முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
கானலிற் சீர்ப்பெடைய
ோ டலவன் பயில்வது கண்டஞர்
கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன
தாங்கொன்மன் சேர்துயிலே

பொழிப்புரை :

இதன் பொருள்:
மல வன் குரம்பையை மாற்றி மலங்களை யுடைய வலிய யாக்கையாகிய குரம்பையைமாற்றி; மால் முதல் அவ்வானவர்க்கு அப்பால் செலவு அன்பர்க்கு ஓக்கும் மான் முதலாகிய அவ்வானவர்க்கப்பாற் செல்லுஞ் செலவை அன்பரா யினார்க்கென்றோக்கிவைக்கும்; சிவன் தில்லைக் கானலில் சிவனது தில்லையைச்சூழ்ந்த கானலிடத்து; சீர்ப்பெடையோடு அலவன் பயில்வது கண்டு நல்லபெடையோடலவன்பயின்று விளையாடுவ தனைக்கண்டு; அஞர் கூர்ந்து வருத்தமிக்கு; அயில் வேல் உரவோன் அயில்வேலையுடைய வுரவோன்; அந்திவாய்ச் செலக் கண்டனன் அந்திப் பொழுதின்கட்செல்ல அவனைக் கண்டேன்; மன் சேர் துயில் என்னதாங் கொல் பின் அம்மன்னனது சேர்துயி லெத்தன்மைத்தாம்! அறியேன் எ-று.
அப்பாற்செலவு மான் முதலாயினார்க்கு மேலாகிய பதங்கள். அன்பருட் போகவேட்கை யுடையார் அவற்றைப் பெற்றுப் போகந்துய்ப்பாராதலிற் செலவன் பர்க் கோக்கு மென்றார். பெடையொடும்பயிலு மலவனைக்கண்டு முயிர்தாங்கிச் சென்றா னாதலின் உரவோ னென்றாள். 155

குறிப்புரை :

14.8 இரவுக்குறியேற்பித்தல் இரவுக்குறி யேற்பித்தல் என்பது தலைமகனுக்குக் குறியிடங் கூறித் தலைமகளுழைச் சென்று, அந்திக்காலத் தோரலவன் றன்பெடையோடு பயிலக்கண்டு ஒருபெரியோன் வருத்தமிக்குச் சென்றான்; அதற்குப்பின் அவன் சேர்துயிலறிந் திலேனெனத் தோழி அவனதாற்றாமைகூறித் தலைமகளை யிரவுக்குறி யேற்பியாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.8. அரவக்கழலவ னாற்றானென
இரவுக்குறி யேற்பித்தது.
14.9. குரவரு குழலிக்
கிரவர வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்
தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி
வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு
வான்சொல்லு மெல்லியலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மெல்லியல் மெல்லியலாய்; மோட்டு அம்கதிர்முலைப் பங்கு உடைத்தில்லை முன்னோன் கழற்கே பெரிய வழகிய கதிர்முலையையுடைய தோர் கூற்றையுடைய தில்லைக் கணுளனாகிய எல்லாப்பொருட்கு முன்னாயவனுடையதிருவடி யொன்றற்குமே; கோட்டம் தரும் குருமுடி நம் வெற்பன் வணங்குதலைச் செய்யுங் குருமுடியையுடைய நம்வெற்பன்; மழை குழுமி நாட்டம் புதைத்தன்ன நள் இருள் முகில்கள் திரளுதலான் நாட்டத்தைப் புதைத்தாற் போன்றிருக்குஞ் செறிந்த விருட்கண்; நாகம் நடுங்கச் சிங்கம் வேட்டம் திரி சரிவாய் யானைகணடுங்கச் சிங்கம் வேட்டந்திரியு மலைச்சரியிடத்து; வருவான் சொல்லும் வரவேண்டிச் சொல்லாநின்றான்; இனியென்செயத்தகும்? எ-று.
குரு - நிறம். முன்னோன் கழற்கல்லது பிறிதோரிடத்துந் தாழ்ந்து நில்லாப் பெரியோன் தாழ்ந்து வேண்டுவதனை மறுத்தலரிதென்பது போதர, முன்னோன்கழற்கே கோட்டந்தரு நங்குரு முடிவெற்ப னென்றாள். ஆற்றின்கண் வருமேத மறியினும் அவனது வேட்கை மிகுதியா லென்னாலொன்றுங் கூறுவ தரிதாயிற்றென்பது போதர, நள்ளிரு ணாகநடுங்கச் சிங்கம்வேட்டந்திரி சரிவாயென்றாள். குரவெனவும் இரவெனவும் விகாரவகையாற் குறுகிநின்றது. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த விளிவரல். பயன்: தலைமகளை யிரவுக்குறி நேர்வித்தல். #9; 156

குறிப்புரை :

14.9 இரவரவுரைத்தல் இரவரவுரைத்தல் என்பது அலவன்மேல்வைத் திரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு அதுவழியாகநின்று, வேட்கைமிக வால் யானைகணடுங்கச் சிங்கந்திரியுமலைச்சரியிடத்து வரவேண்டிச் சொல்லாநின்றான்; இதற்கியாஞ் செய்வதென்னோ வெனத் தோழி தலைமகளுக்குத் தலைமகனிரவரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.9. குரவரு குழலிக்
கிரவர வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 10

செழுங்கார் முழவதிர் சிற்றம்
பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண
வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
மோவின்றெம் வள்ளலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செழுங்கார் முழவு அதிர் சிற்றம்பலத்து வளவிய கார்போலக் குடமுழா முழங்குஞ் சிற்றம்பலத்தின் கண்ணே; பெருந் திருமால் கான் கொழு மலர் இட பெரிய திருமால் நறுநாற்றத்தையுடைய கொழுவிய மலரையிட்டுப் பரவ; கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர்போல் கூத்தை விரும்பிச் செய் வானுடைய கழல்களை யேத்தாதாரைப்போல வருந்த; முழங்கு ஆர் அரி முரண் வாரணவேட்டை செய் மொய் இருள்வாய் முழங்கா நின்ற கிட்டுதற்கரிதாகிய சீயம் முரணையுடைய வாரணவேட்டையைச் செய்யும் வல்லிருட்கண்; வழங்கா அதரின் வழங்கும் எம் வள்ளலை இன்று என்றுமோ யாவரும் வழங்காத வழியிடத்து வழங்குவாயாக வென்று எம்முடைய வள்ளலை யின்று சொல்லுதுமோ! இவ்வாறு சொல்லுதறகுமோ! எ-று.
ஏத்தலரை யானைக்குவமையாக வுரைக்க. ஏத்தலர்போல் வழங்கென்றுமோவென்று கூட்டியுரைப்பாருமுளர். முழங்காரரி யென்பதற்கு முழங்குதலார்ந்த வரியென் பாருமுளர். தனக்கவன் செய்த தலையளியுமுதவியு நினையாநின்ற வுள்ளத்தளாகலின், வள்ளலென்றாள். மைந்தனையென்பது பாடமாயின், ஆண்மைத் தன்மை தோன்ற நின்றதாகவுரைப்பாருமுளர். ஆற்றினேதமுணர்ந்து மறுத்தாள் அவருழை யாஞ்சேற லொழிந்து அவரை வரச்சொல்லக் கடவேமோ வென்றவாறு. அலங்காரம்: எதிர்காலக் கூற்றிடத்துக் காரியத்தின்கண்வந்த இரங்கல்விலக்கு, உபாயவிலக்கு. மெய்ப்பாடு: அச்சம். பயன்: இரவுக்குறி மறுத்தல். 157

குறிப்புரை :

14.10 ஏதங்கூறிமறுத்தல்
ஏதங்கூறி மறுத்தல் என்பதுதலைமகனிரவரவுகேட்ட தலைமகள் தனக்கவன் செய்த தலையளியுமுதவியு நினையா நின்ற வுள்ளத்தளாய், அரிதிரண்டு நின்றியானைவேட்டஞ் செய்யும் வல்லிருட்கண் வள்ளலை வாவென்று சொல்லத்தகு மோவென ஏதங்கூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.10. இழுக்கம்பெரி திரவரினென
அழுக்கமெய்தி யரிவையுரைத்தது.


பண் :

பாடல் எண் : 11

ஓங்கு மொருவிட முண்டம்
பலத்தும்ப ருய்யவன்று
தாங்குமொருவன் தடவரை
வாய்த்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி
யேன்சொல்லும் வாசகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஓங்கும் ஒரு விடம் உண்டு உலகமுழுதையுஞ் சுடும் வண்ணம் மேன்மேலும் வளராநின்றதோர் விடத்தைத் தானுண்டு; உம்பர் உய்ய அன்று தாங்கும் அம்பலத்து ஒருவன் தடவரைவாய் உம்பரெல்லா முய்ய அன்று தாங்குமம்பலத் தொருவனது பெரியவரையிடத்து; தழங்கும் அருவி வீங்கும் சுனைப்புனல் ஒலியாநின்ற வருவியாற் பெருகுகின்ற சுனைப்புனற் கண்; அன்று வீழ்ந்து அழுங்கப் பிடித்தெடுத்து வாங்குமவர்க்கு அன்றியான் விழுந்து கெடப்புகப் பற்றியெடுத்துக் கரைக்கணுய்த்த பெரியோருக்கு; சிறியேன் சொல்லும் வாசகம் அறியேன் சிறியேனாகியயான் சொல்லுவதோர் மாற்றமறியேன் எ-று.
ஒருநஞ்சென்பதற்கு ஒப்பில்லாத நஞ்செனினுமமையும். தடவரைவாய் வீழ்ந்தழுங்கவென வியையும். சுனையென்றியைப் பினுமமையும். சுனைப்புனல்வாய் வீழ்ந்தழுங்க வன்று தாமே வந்தெடுத்துய்வித்தாற்போல வழங்காதவதரிற் றாம்வருதலான் எனக்கு வருமிடுக்கணையுந் தாமே நீக்கினல்லது யானறிவ தொன்றில்லை யென்னுங்கருத்தால், சுனைப்புனல் வீழ்ந்தன்றழுங்கப் பிடித்தெடுத்து வாங்குமவர்க்கென்றாள்; ஆற்றின்கணேத நினைந் திரவுக்குறி மறுத்த தலைமகள் அவன்செய்த வுதவிநினைந்து பின்னுடம்பட்டாளாதல் பொருந்தா மையறிந்து கொள்க. இக்கருத்தே பற்றி யுதவிநினைந்து குறைநயந்ததென்னாது அவனதாற்றாமை நிலைமை கேட்டுக் குறைநயந்த தென்றார். அவன் செய்த பேருதவி சொல்லுகையால் அவன்செய்த வுதவிக்குக் கைம்மாறாவது நானவனுழைச்சேறலே யென்றுடம்பாடாயிற்று. பிறவிக் குட்டத் தியான் விழுந்து கெடப்புகத் தாமேவந்து பிடித்தெடுத்து அதனி னின்றும் வாங்கிய பேருதவியார்க்குச் சிறியேனாகிய யான் சொல்வதறியே னென்று வேறுமொரு பொருடோன்றியவாறு கண்டு கொள்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: இரவுக்குறிநேர்தல். 158

குறிப்புரை :

14.11 குறைநேர்தல் குறைநேர்தல் என்பது ஏதங்கூறி மறுத்த தலைமகள், அவனாற்றானாகிய நிலைமைகேட்டு, யான் புனலிடைவீழ்ந்து கெடப்புக என்னுயிர் தந்த பெரியோர்க்குச் சிறியேன் சொல்லுவ தறியேனென உடம்பட்டு நேராநிற்றல். அதற்குச் செய்யுள்
14.11. அலைவே லண்ணல் நிலைமை கேட்டுக்
கொலைவேற் கண்ணி குறைந யந்தது.

பண் :

பாடல் எண் : 12

ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
யுறார்செல்லுஞ் செல்லல்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏனற் பசுங்கதிர் என்றூழ்க்கு அழிய தினையினது, பசியகதிர் கோடையாலழிய; எழிலி உன்னி அஃதழியாமன் மழைபெறக் கருதி; கானக் குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா கானத்துவாழுங் குறவர்கள் தெய்வத்திற்குப் பலி கொடுத்தாரவாரிக்கும் வம்பார்ந்த சிலம்பை யுடையாய்; இற்றையாமத்து யான் நின் அருண்மேல் நிற்கல் உற்று இற்றையிரவின்கண் யான் நின்னேவன்மேனிற்கவேண்டி; தேன்நக்க கொன்றையவன் தில்லை உறார் செல்லும் செல்லல்கள் சென்றேன் தேனோடுமலர்ந்த கொன்றையையுடையானது தில்லையைப் பொருந்தாதாரடையுந் துன்பத்தையடைந்தேன்; நீ கருதியதூஉ முடிந்தது எ-று.
வம்பு காலமல்லாதகாலத்து மழை. யாமமு மென்பது பாடமாயிற் பகலேயன்றியிரவுமெனவுரைக்க. யாமமு நின்னருளே என்பதூஉம் பாடம். கானக்குறவர்கள் தமக்குணவாகிய தினைக்கதிர் கோடையாலழியத் தெய்வத்தைப் பராவி மழை பெய்விக்க முயல்கின்றாற்போல, நினக்குத் துப்பாகிய இவணலம், அலர் முதலாயினவற்றாற் றொலையும்வழி அது தொலையாமன் முயன்று பாதுகாப்பாயென உள்ளுறையாமாறுகாண்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகற்குக் குறைநயந்தமை யுணர்த்துதல். 159

குறிப்புரை :

14.12 குறைநேர்ந்தமைகூறல்
குறைநேர்ந்தமை கூறல் என்பது தலைமகளைக் குறை நயப்பித்துத் தலைமகனுழைச் சென்று, இற்றையாமத்தெல்லாம் நின்னருண்மேனிற்கவேண்டித் துன்பமுற்றேன்; நீ கருதியதூஉ முடிந்ததெனத் தோழி தலைமகனுக்கு அவள்குறை நேர்ந்தமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.12. குறைந யந்தனள் நெறிகுழ லியென
எறிவே லண்ணற் கறிய வுரைத்தது.


பண் :

பாடல் எண் : 13

முன்னு மொருவ ரிரும்பொழில்
மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத்
தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந்
தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில்
பேரும் மயிலினமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இரும் பொழில் மூன்றற்கு முன்னும் ஒருவர் பெரியவுலகங்கண் மூன்று முளவாவதற்கு முன்னுந் தாமொரு வருமேயாகியுள்ளார்; முற்றும் இற்றால் பின்னும் ஒருவர் அவ் வுலகமுழுது மாய்ந்தாற் பின்னுந் தாமொருவருமேயாகி யுள்ளார்; சிற்றம் பலத்தார் சிற்றம்பலத்தின் கண்ணார்; தரும் பேரருள்போல் அவர் தரும் பெரிய வருள்போல; ஒரு இன்பம் துன்னும் என்று தம் தோகைக்கு ஓகை சொல்லுவபோல் இவ்வில்லின் கண் ஓரின்பம் வந்து பொருந்து மென்று தம்முடைய தோகைகட் கோகை சொல்லுவன போல; மன்னும் அரவத்தவாய் மயில் இனம் துயில் பேரும் இடைவிடாது நிகழு மாரவாரத்தை யுடையவாய் மயிலினந் துயில் பெயராநின்றன; இஃதென்னோ! எ-று.
சிற்றம்பலத் தாரென்பதற்கு, உலகங்களுளவாய்ச் செல்லுங் காலத்துச் சிற்றம் பலத்தின் கண்ணாரென்றுரைப்பினு மமையும். தன்றோகைக் கென்பது பாடமாயிற் பன்மையொருமை மயக்கமாகக் கொள்க. ஒருகால் வெருவித்தாமே துயிலெழுந்துணையன்று; இஃதவன் செய்த குறி யென்பது போதர, மன்னுமரவத்தவாயென்றாள். மெய்ப்பாடு அது, பயன்: தலைமகன் வரவுணர்த்துதல். 160

குறிப்புரை :

14.13 வரவுணர்ந்துரைத்தல்
வரவுணர்ந்துரைத்தல் என்பது தலைமகனுக்குக் குறை நயப்புக் கூறியதோழி, யாம் விளையாடாநின்ற பொழிலிடத்து வேங்கைமே லுண்டாகிய மயிலின மின்புற்றுத் துயில்பெயரா நின்றன; இதற்குக் காரணமென்னோவென அவன் வரவறிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.13. வளமயி லெடுப்ப இளமயிற் பாங்கி
செருவே லண்ணல் வரவு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 14

கூடார் அரண்எரி கூடக்
கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன்
னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கூடார் அரண் எரி கூட கூடாதாருடைய வரண்களை யெரிசென்று கூட; கொடும்சிலை கொண்ட அண்டன் சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் வளைந்த சிலையைக் கைக்கொண்ட அண்டனது பெருமையார்ந்த மதிலையும் வளத்தையு முடைய தில்லையையொப்பாய்; சிறுகண் பெரு வெண்கோடு ஆர் கரி சிறியகண்ணையுடைய பெரிய வெண்கோடு நிரம்பிய யானை; நம் சூழ்பொழிற்கு நமது சூழ்பொழிற்கண்; குரு மா மணி ஊசலைக் கோப்பு அழித்து நிறத்தையுடைய வுயர்ந்தமணிகளாற் செய்யப்பட்ட வூசலைச் சீரழித்து; தோடு ஆர் மதுமலர் நாகத்தை நூக்கும் இதழார்ந்த மதுமலர்களையுடைய அவ்வூசலைத்தொடுத்த நாகமரத்தை நூக்காநின்றது; இதற்கென் செய்வேம்? எ-று.
சூழ்பொழிற் கென்னு நான்கனுருபு ஏழாவதன் பொருட்கண் வந்தது. சூழ்பொழிலே யென்பதூஉம் பாடம். இவ்வாறு கூறவும் வாளாகிடப்பிற் றாய்துயின்றா ளென்றறிதல் பயன். அலங்காரம்: பரியாயம். மெய்ப்பாடு: அது. பயன்: இடையீடாராய்தல். 161

குறிப்புரை :

14.14 தாய்துயிலறிதல்
தாய்துயிலறிதல் என்பது தலைமகன் வரவுணர்ந்து தலைவியைக் கொண்டுசெல்லக் கருதாநின்றதோழி, யாம் விளையாடாநின்ற பொழிலிடத்து ஒரு யானை நின்று ஊசலைத் தள்ளாநின்றது; அதற்கியாஞ் செய்வதென்னோவெனத் தாயது துயிலறியாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.14. ஊசன்மிசைவைத் தொள்ளமளியில்
தாயதுதுயில் தானறிந்தது.

பண் :

பாடல் எண் : 15

விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்
தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின்
றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
வாழுங் கருங்குழலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வண்டு வாழும் கருங்குழல் வண்டுகள் வாழுங் கரிய குழலை யுடையாய்; விண்ணுக்கு மேல் எல்லாப் பொருட்கு மேலாகிய விண்ணுக்கு மேலாயவன்; வியன் பாதலக்கீழ் எல்லாப் பொருட்குங் கீழாகிய அகன்ற பாதாலத்திற்குங் கீழாயவன்; விரி நீர் உடுத்த மண்ணுக்கு நாப்பண் நடுவாகிய கடலையுடுத்த மண்ணிற்கு நடுவாயவன்; நயந்து தென் தில்லை நின்றோன் விரும்பித் தென்றில்லைக்கணின்றோன்; மிடற்றின் வண்ணக் குவளை மலர்கின்றன அவனது மிடற்றின் வண்ணத்தை யுடைய குவளைப் பூக்கண் மலர்கின்றவை; சின வாள் மிளிர்நின் கண் ஒக்குமேல் கண்டு காண் சினவாள் மிளிருமாறுபோல மிளிருநின் கண்களையொக்கு மாயிற் காண்பாயாக எ-று.
பாதாலம்: பாதலமெனக் குறுகி நின்றது. மண்ணினுள்ளு முளனாதலின், மண்ணுக்கு நாப்பணென்றார். மண் முழுதுக்குமிடைத் தில்லையை நயந்து அதன்கணின்றோனென் றுரைப்பாருமுளர். சினவாண்மிளிர் நின்கண்ணொக்குமேலென்புழி ஒத்தபண்பு வேறு பட்டமையான் உவமைக்குவமையன்றென்க. கண்டு காணென்ப தொருசொல். ஆய்தருபவள் - புறத்துக்கொடு போமுபாயமாராய் பவள். மெய்ப்பாடு அது. பயன்: தலைமகளைக் குறியிடத் துய்த்தல் அலங்காரம்: புகழுவமை. 162

குறிப்புரை :

14.15 துயிலெடுத்துச் சேறல்
துயிலெடுத்துச் சேறல் என்பது தாய்துயிலறிந்ததோழி, குவளைப்பூக்கள் மலராநின்றன; அவை நின்கண்ணை யொக்கு மாயிற் காண்பாயாகவெனத் துயிலெடுத்துச் செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.15. தாய் துயிலறிந் தாய்தருபவள்
மெல்லியற்குச் சொல்லியது.

பண் :

பாடல் எண் : 16

நந்தீ வரமென்னும் நாரணன்
நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை
யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி
வீயுந் தருகுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள் மலர்க் கண்ணிற்கு கண்ணையிடந்திட்டு நந்தீ வரந்தரவேண்டுமென்னு நாரணனது அந்நாண்மலர்போலுங் கண்ணிற்கு; எஃகம் தந்து ஈ வரன் புலியூர் அனையாய் ஓரெஃகத்தைப் படைத்துக் கொடுத்த தலை வனது புலியூரையொப்பாய்; இவை தடங் கண் கடந்த இந்தீவரம் இவை நின்பெரியகண்கள் கடந்த நீலங்கள்; காண் இவற்றைக்காண் பாயாக; நின் இருள் சேர் குழற்கு நினது கருமைசேர்ந்த குழற்கு; சந்து ஈ எழில் சேர் வர முறியும்வெறி வீயும் தருகுவன் சந்தனமரந்தரும் எழில்சேர்ந்த நல்ல முறிகளையும் நறுநாற்றத்தை யுடைய மலர்களையும் யான்கொணர்ந்து தருவேன்; நீ நீலப் பூக்களையுங் கண்டு ஈண்டு நிற்பாயாக எ-று.
நந்தியென்பது ஒரு திருநாமம். அனையாயுடைய தடங்கண்க ளென்றுரைப்பாரு முளர். இந்தீவரமிவை காணென்பதற்கு நின் கண்களைவென்ற இந்தீவரமாவன விவைகாணென்றுரைப்பினு மமையும். இது குறிப்பெச்சம். உய்த்திடத்து - இடத்துய்த்து. மெய்ப் பாடு - அது. பயன்: தலைமகளைக் குறியிடத்து நிறீஇ நீங்குதல். 163

குறிப்புரை :

9; 14.16 இடத்துய்த்து நீங்கல் இடத்துய்த்து நீங்கல் என்பது துயிலெடுத்துக்கொண்டு சென்று அக்குறியிடத்து நிறுத்தி, இவை நின்கண்கள் வென்ற குவளை மலர்; இவற்றைக்காண்பாயாக; யானின்குழற்குச் சந்தனத்தழை கொய்யாநின்றேனெனத் தான் சிறிதகலாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.16. மைத்தடங் கண்ணியை யுய்த்திடத் தொருபால்
நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 17

காமரை வென்றகண் ணோன்தில்லைப்
பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத
வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச்
சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத் தென் னோவந்து
வைகி நயந்ததுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
காமரை வென்ற கன்ணோன் தில்லை நிறையழிக்க வந்த காமனை வென்ற கண்ணையுடையவனது தில்லைக்கண்; பல்கதிரோன் அடைத்த தாமரை இல்லின் பல்கதிரோனாகிய வாயிலோன் அடைத்து வைத்த தாமரையாகிய நும் மில்லின்கண்; இதழ்க் கதவம் திறந்தோ இதழாகிய கதவத்தை அவ்வாயிலோன் வருவதன்முன் நீரே திறந்து கொண்டோ போந்தது? இதுகிடக்க, பாம் அரை மேகலை பற்றி பரந்தவரையின் மேகலையை யொலியாமற்பிடித்து; சிலம்பு ஒதுக்கி சிலம்புகளை மேலேறக் கடுக்கி; தமியே பைய அரையாமத்து நாம் வந்து வைகி நயந்தது என்னோ தனியே பைய அரையாமத்தின்கண் நாம் ஈண்டுவந்து தங்கி விரும்பிய தென்னோ? இதனைக் கூறுவீராமின் எ-று.
காமரென்னும் ரகரவீறு இழிவின்கண் வந்தது. தில்லைத் தாமரையென வியையும். கதவந் திறந்தோவென்னு மோகாரத்தை அசைநிலையாக்கியுரைப்பாருமுளர். பாவுமென்னு மீற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டுக் காலமயக்கமாய் நின்றது. எல்லா ரானுந் திருமகணயக்கப் படினல்லது திருமகடன்னானயக்கப் படுவதொன்றில்லை யென்னுங் கருத்தான், நாம் நயந்த தென்னோ வென்றார். நாமென்னு முன்னிலை யுளப்பாட் டுத் தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது. தடு - தடுத்தல். அரியன்பு பரியரை போலப் பண்புத்தொகை யாய் நின்றது. தடையருமன்பென்று பாடமோதுவாருமுளர். கண்ணியை யுரைத்ததெனவியையும். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளைக் கண்டு தோன்றிய வுவகையைப் பரிக்கலாற்றாத தலைமகனாற்றுதல்; தலைமகளை மகிழ்வித்தலுமாம். 164

குறிப்புரை :

14.17 தளர்வகன் றுரைத்தல்
தளர்வகன் றுரைத்தல் என்பது தோழி குறியிடை நிறுத்தி நீங்காநிற்ப, தலைமகனெதிர்ப்பட்டு, நும்முடைய கமலக்கோயில் கதிரவன் வருவதன்முன் நீரே திறந்துகொண்டோ போந்தது? இப்பொழிலிடை வந்து நயந்ததென்னோ வெனத் தலைமகளைப் பெரும்பான்மைகூறித் தன்றளர்வு நீங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
14.17. வடுவகி ரனைய வரிநெடுங் கண்ணியைத்
தடுவரி யன்பொடு தளர்வகன் றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 18

அகிலின் புகைவிம்மி ஆய்மலர்
வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத்
தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித்
தேம்ப லிடைஞெமியப்
புகிலு மிகஇங்ங னேயிறு
மாக்கும் புணர்முலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து குழற் கணகிற்புகை விம்ம ஆராயப்பட்ட மலர்களை வேய்ந்து; அஞ்சனம் எழுதத் தகிலும் கண்மலர்க் கஞ்சனமெழுதத் தகுவளாயினும்; தனிவடம் பூட்டத் தகாள் ஒரு தனி வடத்தைப் பூட்டத் தகுவாளல்லள்; சங்கரன் புலியூர் இகலும் அவரின் அதனைப் பூட்டுதலே யன்றிச் சங்கரனது புலியூரின் பெருமையை யுணராது அதனோடு மாறுபடுவாரைப்போல; தளரும் இத்தேம்பல் இடை ஞெமியப் புகிலும் தளராநின்ற இத்தேய்தலை யுடைய இடை நெரிந் தொடியப்புகினும்; புணர்முலை இங்ஙனே மிக இறுமாக்கும் அதனை யுணராது இப்புணர்ந்த முலைகள் இவ்வண்ணமே மிகவும் விம்மாநின்றன; இஃதென்னாய்முடியும்! எ-று.
தேம்பலிடை: இருபெயர்ப் பண்புத்தொகை யெனினுமமை யும். ஆய்மலராய்ந்தென்பது பாடமாயின், ஆராய்ந்து சூட்டி யெனச் சூட்டுதலை ஆற்றலான் வருவித்துரைக்க. புகலுமென்பது பாடமாயிற் புகுதலுமெனவுரைக்க. பிறபாட மோதுவாருமுளர். அளவளாயென் பது மிகுதிக்கணிரட்டித்து வந்தது. அளாயென்பதனைச் செய் தென்னும் பொருட்டாக்கி அளவுதலைச் செய் தென்றுரைப்பாரு முளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளைச் சார்தல். 165

குறிப்புரை :

14.18 மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது பெரும்பான்மை கூறக்கேட்ட தலைமகள் பெருநாணினளாதலிற் றன்முன்னிற்கலாது நாணித் தலை யிறைஞ்சி வருந்தாநிற்ப, சென்று சார்தலாகாமையிற் றனதாதரவு மிகவால் அவ்வருத்தந்தணிப்பான்போன்று, முலை யொடு முனிந்து, அவளிறுமருங்குறாங்கிச் சென்றணையாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.18. அன்பு மிகுதியி னளவளா யவளைப்
பொன்புனை வேலோன் புகழ்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 19

அழுந்தேன் நரகத் தியானென்
றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப்
புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
வானத் திளமதியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
யான் நரகத்து அழுந்தேன் என்று இருப்ப யானினி நரகத்திற் புக்கழுந்தேனென்று செம்மாந்திருக்கும்வண்ணம்; வந்து ஆண்டு கொண்ட செழுந்தேன் நிழல் பொழில் தில்லைப் புறவில் தானே வந்தாண்டுகொண்ட செழுந்தேன் போல்வானது விளங்கும் பொழிலையுடைய தில்லையைச்சூழ்ந்த இளங்காட்டில்; செறுவகத்த கொழுந்தேன் மலர் வாய்க்குமுதம் இவள் செய்யின் கண்ணவாகிய கொழுவியதேனையும் மலராநின்ற வாயையுமுடைய குமுதமலர் இவள்; யான் குரூஉச்சுடர் கொண்டு எழுந்து ஆங்கது மலர்த்தும் உயர் வானத்து இளமதி யான் நிறத்தையுடையை நிலாவைக்கொண் டெழுந்து அக்குமுதத்தை மலர்த்தும் உயர்ந்த வானத்தின்கட்டிகழும் முதிராமதி எ-று.
நரகமென்றது ஈண்டுப்பிறவியை; வீடுபேற்றின்பத்தோடு சார்த்த நரகமுஞ் சுவர்க்கமுமொருநிகரனவாகலின், நரகமென்றார். ஆண்டுகொண்டா னென்பது பாடமாயிற் செழுந்தேனைப் பொழிலின்மேலேற்றுக. செறு - நீர்நிலையுமாம். வாய் - முகம். மலர் வாய்க்குமுத மென்றது கிண்கிணிவாய்க் கொள்ளு நிலைமையை. அதனாலிவளது பருவம் விளங்கும். குரூஉச்சுடர் கொண்டு மலர்த்து மெனக் கூட்டிக் குரூஉச் சுடரான் மலர்த்துமென் றுரைப்பினு மமையும். அதனால், தலைப் பெய்தமையானன்றிக் கண்ட துணையான வண் மகிழ்தலைக் கூறினானாம். இவ்வின்பம் வழிமுறையாற் பெருகு மென்பது போதர, இளமதி யென்றான். மெய்ப்பாடு: அது. பயன்: நயப்புணர்த்துதல். 166

குறிப்புரை :

14.19 முகங்கண்டு மகிழ்தல் முகங்கண்டு மகிழ்தல் என்பது மருங்கணைவிறுதிக் கட் டலைமகளது முகமகிழ்ச்சிகண்டு, இவளும் யானும் மலருமதியு மெனத் தலைமகன் றன்னயப் புணர்த்தி மகிழாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.19. முகையவிழ்குழலி முகமதிகண்டு
திகழ்வேல்அண்ணல் மகிழ்வுற்றது.

பண் :

பாடல் எண் : 20

சுரும்புறு நீலங் கொய்யல்
தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறற் றோழியொ டாயத்து
நாப்ப ணமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி
வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம்
பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அமரர் ஒன்னார் இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளிப் புரிசை அமரர்க்குப் பகைவராயினாருடைய இரும்பு பொருந்திய பெரிய மதிலையுடையவூரும் பொன்னிஞ்சியை யுடையவூரும் வெள்ளிப்புரிசையை யுடையவூரும்; அன்று ஓர் துரும்பு உறச் செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லைச் சூழ் பொழிற்கு அன்று ஒரு துரும்பின் றன்மையையுற எரித்த வெற்றியையுடைய வெம்பிரானது தில்லைக்கட் சூழ்ந்த பொழிலிடத்து; தமி நின்று தனியே நின்று; சுரும்பு உறு நீலம் கொய்யல் சுரும்பு பொருந்து நீலப் பூக்களைக் கொய்யாதொழி; அரும் பெறல் தோழியோடு ஆயத்து நாப்பண் துயில் பயில் அரிய பெறுதலையுடைய நின்றோழியோடு ஆயத்தினிடைத் துயிலைப் பயில்வாயாக எ-று.
மோ: அசை. சுரும்புறுநீலம் - மேலாற்சுரும்புவந்து பொருந்து நீலமலர்; எதிர்காலவினை; ``மென்னனை யாய்மறியே பறியேல்`` (தி.8 கோவை பா.125) என்றது போலக் கொள்க. சூழ் பொழில் - தில்லையைச் சூழ்ந்த பொழில். பொழிற்கென்பது வேற்றுமை மயக்கம். பொழிலே யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: புறத்தாரறியாமைப் பிரிதல். 167

குறிப்புரை :

14.20 பள்ளியிடத் துய்த்தல்
பள்ளியிடத்துய்த்தல் என்பது மலர்மதிமேல்வைத்துக் கூறி மகிழ்வுற்றுப் பிரியலுறாநின்றவன், இப்பொழிலிடை யினித் தனியே நின்று நீலப்பூக்களைக் கொய்யாது, நின்னரியதோழி யோடு ஆயத்திடைச் சென்று துயில்பயில்வாயெனத் தலைமக ளைப் பள்ளியிடத்துச் செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.20. பிரிவது கருதிய பெருவரை நாடன்
ஒள்ளிழைப் பாங்கியொடு பள்ளிகொள் கென்றது.

பண் :

பாடல் எண் : 21

நற்பகற் சோமன் எரிதரு
நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத்
திவளின் மெய்யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர்
தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல்
நாடஇக் கல்லதரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வெற்பகச் சோலையின் வேய் வளர் தீ வெற்பிடத்துச் சோலையின்கணுண்டாகிய வேய்க்கட் பிறந்து வளருந்தீ; விண்ணின் நின்ற கற்பகச் சோலை சென்று கதுவும் கல் நாட விண்ணின்கணின்ற கற்பகச் சோலையைச் சென்று பற்று மலை நாடனே; இக் கல் அதர் இக்கல்லையுடைய சிறுநெறி; நல் பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லை அன்ன நல்ல ஞாயிறுந் திங்களுந் தீயுமுண்டாகிய மூன்று நாட்டத்தையுமுடையவனது தில்லையை யொக்கும்; வில் பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் வில்லைப் பகைத்து அதனின்மிகும் புருவத்தையுடைய இவள் காரணமாக; மெய்யே எளிது மெய்யாக வெளிதாயிற்று; ஆயினும், இனிநீ வரற்பாலையல்லை எ-று.
செவ்வெண்ணின்றொகை விகாரவகையாற் றொக்குநின்றது. உம்மைத்தொகை யெனினுமமையும். தில்லையன்னவிவளென வியையும். இவளின்மெய்யே யெளிதேயென்பதற்கு இவள் காரணமாக வெளிதாமோ எளிதன்றெனவெதிர்மறையாக்கி யுரைப்பினுமமையும். வேயிற்பிறந்ததீ ஆண்டடங்காது சென்று தேவருலகத்தினின்ற கற்பகச்சோலையைக் கதுவினாற்போல, நின்வரவினால் அயலாரிடத்துப்பிறந்த அலர்பெருகி நின்னூருமறியப் பரந்து நின்பெருமையைச் சிதைக்குமென உள்ளுறை வகையான் அலரறி வுறுத்தவாறு கண்டுகொள்க. இவனுக்குப் பெருமையாவது இவன் வழியிற் பிதிர்கள் கொண்டாட்டம். சிதைத்தலாவது இகலோக பரலோக மிரண்டையுஞ் சிதைத்தல். மூங்கிலிற்பிறந்ததீத் தன்னையுஞ் சுட்டுத் தன்னுடைய சுற்றத்தையுஞ் சுட்டுக் கற்பகச் சோலையைக் கதுவினாற்போல வென்க. நற்பகற் சோமன் விகார வகையான் வலிந்து நின்றது. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரவுவிலக்கி வரைவு கடாதல். 168

குறிப்புரை :

14.21 வரவுவிலக்கல் வரவுவிலக்கல் என்பது தோழி தலைமகளைப் பள்ளியிடத்துச் சேர்த்திச்சென்று, இக்கல்லதர் இவள் காரணமாக நினக் கெளிதாயிற்று; ஆயினும் இனியிவ்வாறொழுகற்பாலை யல்லையென வரைவு பயப்பக் கூறித் தலைமகனை வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
14.21. தெய்வமன் னாளைத் திருந்தமளி சேர்த்தி
மைவரை நாடனை வரவுவிலக் கியது.

பண் :

பாடல் எண் : 22

பைவா யரவரை அம்பலத்
தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
தென்றுமென் இன்னுயிரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பை வாய் அரவு அரை படத்தையும் பெரிய வாயையுமுடைய அரவையணிந்த வரையையுடைய; அம்பலத்து எம்பரன் பைங் கயிலை அம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய பரனது சோலையாற் பசிய கயிலைக்கணுளளாகிய; செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள் சிற்றிடைக்கொடியை செய்ய வாயையுங் கரிய கண்ணையும் பெரியபணை போலுந் தோள்களை யுஞ் சிறியவிடையையுமுடைய கொடிபோல்வாளை; மொய்வார் கமலத்து முற்றிழை பெரியதாகிய தாளானெடிய கமலத்துவாழுந் திருமகளாகிய முற்றிழை; முன்னை என் தவத்தால் முற்பிறப்பின்க ணுண்டாகிய எனது தவப்பயனால்; இன்று இவ்வாறு இருக்கும் என்றே எனக்கெய்தலாம்வண்ணம் இன்றிவ்வாறு கொடிச்சியா யிருக்குமென்று கருதியே; என் இன் உயிர் என்றும் நிற்பது என்னின்னுயிர் என்றும் நிற்பது; இத்தன்மையாளை யான்வரையுந் துணை யெளியளாக நீ கூறுகின்றதென்! எ-று.
எம்பரனென்பதற்கு முன்னுரைத்ததுரைக்க. (தி.8 கோவை பா.99) கயிலைக் கொடியெனவியையும். கொடியை யென்னு மிரண்டாவது என்று கருதியென வெஞ்சிநின்ற வினையொடு முடியும். மெய்ப்பாடு: உவகை. பயன்: வரைவுடம்படாமை. 169

குறிப்புரை :

14.22 ஆற்றாதுரைத்தல்
ஆற்றாதுரைத்தல் என்பது வரைவுகடாவி வரவுவிலக்கின தோழிக்கு வரைவுடம்படாது, பின்னுங் களவொழுக்கம் வேண்டி, யான் முன்செய்த தவப்பயனால் எனக்கெய்தலாம் வண்ணந் திருமக ளிவ்வாறு கொடிச்சியாயிருந்தாளெனக் கருதியே எனதின்னுயிர் நிற்பது; இத்தன்மையாளை யான் வரையுந் துணையெளியளாக நீ கூறுகின்ற தென்னெனத் தலைமகன் றனதாற்றாமை தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.22. வரைவு கடாய வாணுதற் றோழிக்
கருவரை நாடன் ஆற்றா துரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

பைவா யரவும் மறியும்
மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
நீண்முத்த மாலைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மன்ன மன்னனே; இச் சிறியாள் பெரு மலர்க்கண் மை வார் குவளை நீ செல்லு நெறிக்கண் நினக்கிடை யூறுண்டா மென்னு மச்சத்தால் இச்சிறியாளுடைய பெரிய மலர்போலுங் கண்களாகிய கருமையையுடைய நெடிய குவளைகள்; நீள் முத்த மாலைகள் விடும் நீண்ட முத்தமாலைகளைப் புறப்பட விடா நிற்கும், அதனான் நினக்கிடையூறின்மையை யிவளறிய; தில்லையின் முன்னினக் கால் நின்பதியாகிய தில்லையெல்லையிற் சென்று கிட்டினால்; செவ்வாய் கரு வயிர்ச் சேர்த்து - நின் செவ் வாயைக் கரிய கொம்பின்கட் சேர்த்தி யூதவேண்டும் எ-று.
பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் - படத்தையும் பெரிய வாயையு முடைய அரவும் மான்மறியும் மழுவாளும் விடாது நிகழும் - மலர்க்கை மொய் வார் சடை முடி முன்னவன் தில்லை - மலர்போலுங் கையையும் நெருங்கிய நெடிய சடைகளானியன்ற முடியையுமுடைய எல்லாப்பொருட்கு முன்னாயவனது தில்லையெனக் கூட்டுக.
குறிஞ்சிநிலத்திற்குரிய மக்கள் கோலத்தனாய் வருமாதலின், வயிர் கூறப்பட்டது. மலர்க்கணென்பது உவமை கருதாது கண்ணென்னுந் துணையாய் நின்றது. கண்ணாகிய குவளைப் பெருமலரென்று கூட்டு வாரும், மலர்தலையுடைய கண்ணென்பாரு முளர். மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவுகடாதல். #9; 170

குறிப்புரை :

14.23 இரக்கங்கூறி வரைவு கடாதல்
இரக்கங்கூறி வரைவு கடாதல் என்பது களவுவிரும்பி வரைவுடம்படாத தலைமகனுக்கு, நீ செல்லுநெறிக்கண் நினக் கிடை யூறுண்டாமென்னு மச்சத்தால் அவளழுதிரங்கா நின்றா ளென்று, நீ சென்றமையறிய நின்குறி காட்டுவாயெனத் தலைமகள திரக்கங் கூறி வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.23. அதிர்கழலவன் அகன்றவழி
யெதிர்வதறியா திரங்கி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

நாகந் தொழவெழில் அம்பலம்
நண்ணி நடம்நவில்வோன்
நாக மிதுமதி யேமதி
யேநவில் வேற்கையெங்கள்
நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில்
வாய்த்தநின் நாயகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நவில் வேற் கை எங்கள் நாகம் வர பயிலப்பட்ட வேலையேந்திய கையையுடைய எங்கள் யானை வர; நாம் எதிர் கொள்ளும் நள் இருள்வாய் நாங்களெதிர்கொள்ளுஞ் செறிந்த விருளிடத்து; நற ஆர் நாகம் மலி பொழில்வாய் எழில் வாய்த்த நின் நாயகம் அவ்விருளைச் சிதைத்துத் தேனார்ந்த நாகமலர் மலிந்த பொழிலிடத்துநின்று நீசெய்கின்ற அழகுவாய்த்த நினது முதன்மை; மதியே திங்காள்; மதியே நினக்கறிவே; நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் நாகம் இது பதஞ்சலியாகிய நாகந்தொழ எழிலையுடைய வம்பலத்தை நண்ணிக் கூத்தைப் பயில்வானது மலைகாணிஃது; இதனைக் கடைப் பிடிப்பாயாக எ-று.
நாகத்தான் விழுங்கப்படுநீ நாகந்தொழ வம்பலத்து நடம் பயில்வோனது மலைக்கட்புகுந்து விளங்கி வீற்றிருத்தல் நினக்கு நன்றி பயவாதென்பது கருத்து. அறிவென்பது ஈண்டறிந்து செய்யப்படும் காரியத்தை. தனிநாயகமென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: இடையீடறிவித்தல். 171

குறிப்புரை :

14.24 நிலவு வெளிப்பட வருந்தல்
நிலவு வெளிப்பட வருந்தல் என்பது இரக்கங்கூறி வரைவு கடாயதோழி, பிற்றைஞான்று அவனிரவுக்குறியிடைவந்து நிற்ப, நிலவு வெளிப்பட்டாற் சென்றெதிர்ப்படமாட்டாமற் றாங்கள் வருந்தாநின்றமை சிறைப்புறமாக மதியொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.24. தனிவே லவற்குத் தந்தளர் வறியப்
பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 25

மின்னங் கலருஞ் சடைமுடி
யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
துயிலா தழுங்கினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய் ஒளி யவ்விடத்துவிரியுஞ் சடையா னியன்ற முடியையுடையவனது அகன்ற தில்லையை யொப்பாய்; எழில் முத்தம் தொத்தி எழிலையுடைய அரும்பாகிய முத்தந்தொத்தி; அங்கு பொன் அலர் புன்னைச் சேக்கையின்வாய் அவ்விடத்துத் தாதாகிய பொன்மலரும் புன்னைக்கணுண்டாகிய தஞ்சேக்கை யிடத்து; அன்னம் முற்றும் புலம்புற்றுப் புலரும் அளவும் துயிலாது அழுங்கின அன்னமெல்லாம் துன்புற்றுப் புலருமளவுந் துயிலாது ஆரவாரித்தன; அங்கு எய்தியது அலமரல் என் - அவ்விடத் தெய்திய தாகிய அலமரலென்னாம்? அறிகின்றிலேன் எ-று.
மின்னங் கலரு மென்பதற்கு மின்னவ்விடத் தலர்ந்தாற் போலுஞ் சடையெனினு மமையும். என்னங்கலமரலெய்தியதோ வென்பதற்கு என்ன வலமர லாண்டெய்திற்றோ வென்று கூட்டியுரைப்பினுமமையும். இப் பொருட்கு என்னவென்பது கடைக்குறைந்து நின்றது. முத்தந் தொத்துதலும் பொன்மலர்தலுமாகிய உறுப்பின்றொழில் முதன் மேலேறி நின்றன. சேக்கையின் வாயழுங்கினவெனவியையும். நெடும்பொழுது துயின்றில வென்பாள் புலருமளவுமென்றாள். பிற்றைஞான்று பகற்குறிவந்து நிற்பக் கூறினாளெனினுமமையும். அழுங்கல் - இரக்க மெனினு மமையும். அறைப்புனல் - அறைதலை யுடைய புனல். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அல்லகுறிப்பட்டமை தலைமகற் குணர்த்துதல். இனித் திணைநெய்தல்.172

குறிப்புரை :

14.25 அல்லகுறியறிவித்தல்
அல்லகுறி யறிவித்தல் என்பது குறியல்லாதகுறி யெதிர்ப் பட்டு மீண்டமை, பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறம் வந்து நிற்ப, தோழி தலைமகளுக்குக் கூறுவாள்போன்று, அன்னத்தின் மேல்வைத்து அறிவியாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.25. வல்லி யன்னவ ளல்ல குறிப்பாடு
அறைப்புனற் றுறைவற்குச் சிறைப்புறத் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 26

சோத்துன் னடியமென் றோரைக்
குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன்தில்லை
யன்னா ளிவள்துவள
ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
மதியும் இழந்தவம்நீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி

நோக்காய் பெருங்கடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பெருங்கடலே - பெருங்கடலே; ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து முற்காலத்து மிவ்வா றொலித்து உன்னமிர்தத்தையுந் திருவையுந் திங்களையுமிழந்து வைத்தும்; நீ பேர்த்தும் அவம் இவள் துவள இரைப்பு ஒழியாய் பெயர்த்து மொருபயனின்றியே இவள்வாட இரையாநின்றாய்; பழி நோக்காய் காரணமின்றிப் பிறரை வருத்துதலான் வரும்பழியையு நோக்குகின்றிலை; நினக்கிதுநன்றோ? எ-று.
சோத்து உன் அடியம் என்றோரை சோத்தம் உன்னடியமென் றொருகாற் சொன்னாரை; தொல் வானவர் குழுமிச் சூழ்ந்து ஏத்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் பழையராகிய வானவர் குழுமிப் பரிவார மாய்ச் சூழ்ந்துநின் றேத்தும் வண்ணம் நிற்கு மவனது தில்லை யன்னாளாகிய இவளெனக் கூட்டுக.
சோத்தம் இழிந்தார் செய்யு மஞ்சலி; அது சோத்தெனக் கடைக்குறைந்து நின்றது. சோத்த மடிய மென்பதூஉம், அடியமெனிற் குழுமித் தொல்லை வானவ ரென்பதூஉம், குழீஇத்தொல்லை வானவர்சூழ்ந் தேத்தும் படிவைப்பவ னென்பதூஉம் பாடம். திருவு மதியு மென்பது செல்வமு மறிவுமென வேறு மொருபொருடோன்ற நின்ற தென்பாருமுளர். இரா குறுகி நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை. 173

குறிப்புரை :

14.26 கடலிடை வைத்துத் துயரறிவித்தல் கடலிடை வைத்துத் துயரறிவித்தல் என்பது தலைமகளி ரவுறுதுயரம், தலைமகன் சிறைப்புறமாக, இவள்வாட நீ யிரையாநின்றாய்; இது நினக்கு நன்றோவெனத் தோழி கடலொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.26. எறிகடல் மேல்வைத் திரவரு துயரம்
அறைக ழலவற் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 27

மாதுற்ற மேனி வரையுற்ற
வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
வோநன்மை செப்புமினே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் மாதுபொருந்திய மேனியையுடைய வரையாகிய மிக்கவில்லை யுடையவனது தில்லைநகரைச் சூழ்ந்த; போது உற்ற பூம் பொழில்காள் போதுபொருந்திய மலரினையுடைய பொழில்காள்; கழிகாள் - அப்பொழிலைச் சூழ்ந்த கழிகாள்; எழிற் புள்ளினங்காள் அக்கழிகளிற்பயிலு மெழிலையுடைய புள்ளினங்காள்; ஏது உற்று அழிதி என்னீர் என்னை நீங்கள் யாதனை யுற்றழிகின்றா யென்று ஒருகாற் கூறுகின்றிலீர்; ஈர்ந்துறைவர்க்கு இவள் தீது உற்றது என்னுக்கு என்னீர் குளிர்ந்த துறைவர்க்கு இவள் தீதுற்ற தெற்றிற்கென்று கூறுகின்றிலீர்; இதுவோ நன்மை இதுவோ நம்மாட்டு நுங்கா தன்மை; செப்புமின் சொல்லுமின் எ-று.
மாதுற்ற மேனியென்பது ஆகுபெயராய் மேனியை யுடையான்மே னின்றதெனினுமமையும். வரையுற்றவில்லியென்ப தற்கு வரைத் தன்மையைப் பொருந்திய வில்லையுடையா னெனினுமமையும். வரைத்தன்மையைப் பொருந்துதல் வரையா யிருத்தல். போது - பேரரும்பு. மன்னு மென்பதூஉம் இவளோ வென்னு மோகாரமும் அசைநிலை. மன்னுந்தீதுற்றதெனக் கூட்டிமிகுதிக்கண் வந்ததென்பாரு முளர். இதுவோ நன்மையென் பதற்குத் தில்லையைச் சூழ்ந்தவிடத் துள்ளீராகலின் உமக்குண்டாகிய சிறப்புடைமை யிதுவோ வெனினு மமையும். அழுதியென்பதூஉம் பாடம். ஏழையது கிளவியென வியையும்.174

குறிப்புரை :

14.27 காமமிக்க கழிபடர்கிளவி
காமமிக்க கழிபடர் கிளவி என்பது தலைமகனைக் காண லுற்று வருந்தாநின்ற தலைமகள், தனது வேட்கைமிகவாற் கேளாதன வற்றைக் கேட்பனவாக விளித்து, நீங்கள் என்னை ஏதுற்றழிகின்றா யென்று ஒருகால் வினவுகின்றிலீர்; இதுவோ நுங்காதன்மை யென அவற்றொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.27. தாம மிக்க தாழ்குழ லேழை
காம மிக்க கழிபடர் கிளவி.

பண் :

பாடல் எண் : 28

இன்னற வார்பொழிற் றில்லை
நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்குமில் லோருந்
துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
ஞாளி குரைதருமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இன் நறவு ஆர் பொழில் தில்லைநகர் இறை சீர் விழவில் இனிய நறவார்ந்த பொழிலையுடைய தில்லைநகர்க் கிறைவனாகியவனது சீரையுடைய விழவின்கண்; பல் நிறமாலைத் தொகை பகலாம் மாணிக்க முதலாயினவற்றாற் பல நிறத்தை யுடையவாகிய மாலைகளின்றொகைகளான் இராப்பொழுதும் பகலாகாநிற்கும்; பல் விளக்கு இருளின் துன் அற உய்க்கும் அதுவேயுமன்றிப் பலவாகிய விளக்கு இருளின் பொருந்துதலறத் துரக்கும்; இல்லோரும் துயிலின் இவ்விடையீடேயன்றி ஒருபொழுதும் துயிலாத இல்லோரு மொருகாற்றுயில்வராயின்; துறைவர் கொன்மிக்க நிற வேலொடு வந்திடின் துறைவர் அச்சத்தைச் செய்யு மிக்க நிறத்தையுடைய வேலோடொருகால் வருவராயின்; ஞாளி குரை தரும் அப்பொழுது நாய் குரையாநிற்கும்; அதனால், அவரை நாமெதிர்ப்படுத லரிதுபோலும் எ-று.
மாலைத்தொகையும் இராப் பகலாகாநிற்கும் பல்விளக்கும் இருளைத் துரக்குமென்றுரைப்பினுமமையும். இல்லோருந் துயிலி னென்றதனான், அதுவுமோ ரிடையீடு கூறப்பட்டதாம். மிக்கவே லென்றியைப்பினு மமையும். மெய்யுறுகாவல் பிழையாத மிக்க காவல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. இவற்றைத் தலைமகன் கேட்பின் வரைவானாம்; தோழி கேட்பின் வரைவுகடாவு வாளாம்; யாருங் கேட்பாரில்லையாயின் அயர் வுயிர்த்துத் தானே ஆற்றுதல் பயன். 175

குறிப்புரை :

14.28 காப்புச் சிறைமிக்க கையறுகிளவி
காப்புச் சிறைமிக்க கையறுகிளவி என்பது காமமிக் கெதிர்ப்பட விரும்பாநின்ற தலைமகள், இவ்விடையீடெல்லா நீந்தி ஒருவழியான் வந்தாராயினும் இஞ்ஞாளி குரைதரா நின்றமையின் யாமிவரை யெதிர்ப்படுதலரிதெனக் காப்புச்சிறை மிக்கு வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்
14.28. மெய்யுறு காவலிற்
கையறு கிளவி.

பண் :

பாடல் எண் : 29

தாருறு கொன்றையன் தில்லைச்
சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில
நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும்
அஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற்
பாற்றன்று தூங்கிருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தார் உறு கொன்றையன் தாராகிய மிக்க கொன்றையை யுடையவன்; தில்லைச் சடைமுடியோன் தில்லைக் கணுளனாகிய சடையானியன்ற முடியையுடையவன்; கயிலை நீர் உறுகான் யாறு அளவில நீந்தி வந்தால் அவனது கயிலையின் நீரான் மிக்க கான்யாறுக ளெண்ணிறந்தனவற்றை நீந்தி வந்தால்; வயப்பொங்கு உரும் நினது போர் உறு வேல் அஞ்சுக அவ்விடத்து வலியையுடைய பொங்குமிடியேறு நினது போர்மிக்க வேலையஞ்சி நின்பால் வாராதொழிக; மஞ்சு இவரும் சூர் உறு சோலையின் வாய் தூங்கு இருள் வரற்பாற்று அன்று ஆயினும் மஞ்சுபரக்குந் தெய்வம்பொருந்துஞ் சோலையிடத்துச் செறிந்த விருட்கண் வரும்பான்மைத்தன்று; அத்தெய்வங்களை யாமஞ்சுதும் எ-று.
தாருறை கொன்றைய னென்பது பாடமாயின், தார்தங்கு கொன் றையனென முதலாகிய தன்பொருட்கேற்ற வடையடுத்து நின்றதாக வுரைக்க. இப்பாடத்திற்கு ஏனைமூன்றடியும் உறையென் றோதுப. வரற்பாற்றன்றென்பது வினைமேனின்றது. நவ்விநோக்கியது கிளவி யென வியையும். மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல். 176

குறிப்புரை :

14.29 ஆறுபார்த்துற்ற வச்சக் கிளவி
ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி என்பது சிறைப்புறமாகத் தலைமகள் ஆற்றாமை கூறக்கேட்ட தலைமகன், குறியிடைச் சென்று நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, நீ கான்யாறுபலவு நீந்திக் கைவேல் துணையாக அஞ்சாது வந்தால், யாங்களிச் சோலையிடத் துண்டாகிய தெய்வத்துக்கஞ்சுவேம்; அதனாலிவ் விருளிடை வரற்பாலையல்லை யெனத் தங்களச்சங்கூறி வரவுவிலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
14.29. நாறு வார்குழ னவ்வி நோக்கி
ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.

பண் :

பாடல் எண் : 30

விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
யேற்கொரு வாசகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளங்கும் மண்டலமே கங்குல் முழுது மாகாயத்திடத்தை விளக்கு மண்டலமே; விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை விண்ணிடத்துள்ளா ராகிய வெல்லார்க்கும் வேந்தராயுள்ளாரது வளவிய தில்லை வரைப்பின்; மெல்லங் கழி சூழ் கண்டலே கரியா மெல்லிய கழிசூழ்ந்த கண்டலே சான்றாக; கன்னிப் புன்னைக் கலந்த கள்வர் இளையபுன்னைக்கண் என்னைக் கலந்த கள்வர்; வரக் கண்டிலையே ஒரு கால்வரக் கண்டிலையோ; தமியேற்கு ஒரு வாசகம் பணியாய் துணையில்லாதேற் கொருசொல் லருளாய் எ-று.
மெல்லங்கழி யென்பதூஉமொரு பண்புத்தொகை முடிபு. மென்மை நிலத்தின் மென்மை. கழிசூழ்புன்னையெனக் கூட்டுக. கண்டலையென்னு மைகாரம் அசைநிலை. கரியாகக்கொண்டென வொரு சொல் வருவித்து இரண்டாவதாக வுரைப்பினுமமையும். எஞ்ஞான்று மனத்ததொன்றாகத் தாமொன்று மொழிந்தாரென்னுங் கருத்தாற் கள்வரென்றாள். கள்வர்க்கண்டிலையே யென்பது பாட மாயின் உருபுவிரிக்க. கங்குலெல்லாங் கண்டிலையேயென்று கூட்டி யுரைப்பினுமமையும். கண்டே கூறுகின்றிலை யென்னுமுணர்வின ளாகலின், எய்திடுகிளவியாயிற்று. அந்நுண்மருங்குல் கிளவியென் றியையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அயர்வுயிர்த்தல். 177

குறிப்புரை :

14.30 தன்னுட்கையா றெய்திடுகிளவி
தன்னுட்கையா றெய்திடுகிளவி என்பது தலைமகனைக் காணலுற்று வருந்தாநின்ற தலைமகள், இக்கண்டல் சான்றாகக் கொண்டு இப்புன்னையிடத்துக் கலந்த கள்வரை இவ்விடத்து வரக்கண் டிலையோ? துணையில்லாதேற்கு ஒருசொல்லருளா யென்று, தன்னுட் கையாற்றை மதியொடுகூறி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.30. மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
தன்னுட் கையா றெய்திடு கிளவி.

பண் :

பாடல் எண் : 31

பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ
னெனநீ புகுந்துநின்றால்
மற்றுன்று மாமல ரிட்டுன்னை
வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
ளோமங்கை வாழ்வகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பற்று ஒன்று இலார் பற்றும் துறக்கப்படுவன வற்றின்மேற் பற்றொன்றுமில்லாதவர்கள் அறிந்து பற்றும்; தில்லைப் பரன் பரங்குன்றில் நின்ற தில்லைக்கணுளனாகிய பரனது பரங் குன்றின்கணின்ற புற்று ஒன்று அரவன் புதல்வன் என அப்புற் றொன்றரவனுடைய புதல்வனாகிய முருகவேளைப்போல; நீ புகுந்து நின்றால் நீ இல்வரைப்பிற் புகுந்து நின்றால்; மல் துன்று மாமலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி கண்டவர்கள் இந்நிலத்திற் குரியனாகிய முருகனென்றுகருதி வளத்தையுடைய நெருங்கிய பெரிய மலர்களை யிட்டு வாழ்த்தி நின்னை வணங்காதே; மற்று ஒன்று சிந்திப்பரேல் பிறிதொன்றை நினைவராயின்; மங்கை வாழ் வகை வல்லளோ மங்கை யுயிர்வாழும் வகை வல்லளோ? அதனாலிவ்வா றொழுகற்பாலையல்லை எ-று.
பரங்குன்றினின்ற புதல்வனென வியையும். மல்லல் கடைக் குறைந்து நின்றது. மற்றொன்று சிந்தித்தல் இவள் காரணமாக வந்தா னென்று கருதுதல். முருகனென்றலே பெரும் பான்மையாகலின், உண்மையுணர்தலை மற்றொன்றென்றாள். ஏதஞ் செய்யக் கருதுத லென்பாருமுளர். மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல். 178

குறிப்புரை :

14.31 நிலைகண்டுரைத்தல்
நிலைகண்டுரைத்தல் என்பது தலைமகள் தன்னுட் கையாற்றை மதியொடு கூறி வருந்தாநின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன், ஆற்றாமையான் இல்வரைப்பின்கட் புகுந்து நிற்ப, தோழியெதிர்ப்பட்டு, நீயிவ்வா றில்வரைப்பின்கட் புகுந்துநின்றாற் கண்டவர் நின்னைப் பெரும்பான்மை நினையாது மற்றொன்று நினைப்பராயின் அவளுயிர்வாழ வல்லளோ? இனியிவ்வா றொழுகற்பாலை யல்லையென வரைவு தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.31. நின்னி னழிந்தனள் மின்னிடை மாதென
வரைவுதோன்ற வுரைசெய்தது.

பண் :

பாடல் எண் : 32

பூங்கணை வேளைப் பொடியாய்
விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
ரோசென் றகன்றவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பூங் கணை வேளை பூவாகிய கணையை யுடைய வேளை; பொடியாய் விழ விழித்தோன் புலியூர் செறிகடலே பொடியாய் விழும் வண்ணம் விழித்தவனது புலியூர் வரைப்பிற் செறிந்த கடலே; ஓங்கு அணை மேவிப் புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு நீ யோங்கி யணைந்த கரையைப் பொருந்திப் புரண்டு விழுந்தெழுந்து கூப்பிட்டு; தீங்கு அணைந்து ஓர் அல்லும் கலங்கித் தேறாய் துன்பமுற்று ஓரிரவுங்கலங்கித் தெளிகின்றிலை, அதனால், அணைந்தார் நின்னையும் சென்று அகன்றவர் ஆங்கு உளரோ அணைந்தவர் நின்னையுமகன்று சென்றார் அவ்விடத் துளரோ? உரைப்பாயாக எ-று.
பொடியாய்விழ விழித்தோனென்னுஞ் சொற்கள் ஒரு சொன்நீரவாய்ப் பொடியாக்கினானென்னும் பொருளவாய், வேளை யென்னுமிரண்டாவதற்கு முடிபாயின. புலியூர்க் கடலே கலங்கித் தேறாயென்று கூட்டினுமமையும். செறிகட லென்புழிச் செறிவு எல்லை கடவாநிலைமை. பிரிவாற் றாதார்க்கு அணைமேவுதல் பஞ்சியணை மேவுதல். அணைந்தா ரென்பதூஉம் சென்றகன்றவ ரென்பதூஉம் அடுக்காய் உளரோவென் னும் பயனிலை கொண்டன. ஆங்கு: அசை நிலையுமாம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அயர்வுயிர்த்தல். 179

குறிப்புரை :

14.32 இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல்
14.32. எறிவேற் கண்ணி யிரவரு துயரஞ்
செறிக டலிடைச் சேர்த்தி யுரைத்தது.
இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல் என்பது தலைமகனை யெதிர்ப்படமாட்டாதுவருந்தாநின்ற தலைமகள், இற்றையிர வெல்லாம் என்னைப்போல நீயுந் துன்பமுற்றுக் கலங்கித் தெளி கின்றிலை; இவ்விடத்து நின்னையுமகன்று சென்றாருளரோ வெனத் தானுறுதுயரங் கடலொடு சேர்த்திக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

பண் :

பாடல் எண் : 33

அலரா யிரந்தந்து வந்தித்து
மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத்
தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
மிக்கைய மெய்யருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மால் அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் தாமரை மலராயிரத்தைக் கொண்டு சென்றிட்டு வணங்கி; ஆயிரம் கரத்தால் அலர் ஆர் கழல் வழிபாடு செய்தாற்கு தன்னாயிரங் கையானு மலர்போலுங் கழலை வழிபடுதலைச் செய்தவற்கு; அளவில் ஒளிகள் அலராவிருக்கும் படை கொடுத்தோன் - அளவில்லாத வொளிகள் விரியாநிற்கும் ஆழியாகிய படையைக் கொடுத்தவன்; தில்லையான் தில்லைக்கண்ணான்; அருள் போன்று அவனதருள் போல; ஐய ஐயனே; மெய் அருள் நின்னுடைய மெய்யாகிய வருள்; அம்பல் கைம்மிக்கு அலராய் விளைகின்றது அம்பல்கைம் மிக்கலராய் விளையாநின்றது; இனித்தக்கது செய்வாயாக எ-று.
அலராவிருக்கு மென்பது ஓர் நிகழ்காலச் சொல். தில்லையானருள் பெற்றார் உலகியல்பினராய் நில்லாமையின், அவ்வருளுலகத்தார்க் கலராமென்பது கருத்து.
``நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப``
(தி.8 திருப்பொற்சுண்ணம் பா. 7) என்பதூஉ மக்கருத்தேபற்றி வந்தது. அம்பல் - பரவாத களவு; என்னை?`` அம்பலு மலருங் களவு`` (இறையனாரகப் பொருள் - 22) என்றாராகலின். 180

குறிப்புரை :

14.33 அலரறிவுறுத்தல் அலரறிவுறுத்தல் என்பது தலைமகளிரவுறுதுயரங் கடலொடு சேர்த்தி வருந்தாநின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன், குறியிடைச் சென்று நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, நின்னருளாய் நின்றவிது எங்களுக் கலராகாநின்றது; இனி நீயிவ்வாறொழுகா தொழியவேண்டுமென அலரறிவுறுத்தி வரவுவிலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
14.33. 9; அலைவேலண்ணன் மனமகிழருள்
பலராலறியப் பட்டதென்றது.
சிற்பி