திருக்கோவையார்-ஒருவழித்தணத்தல்


பண் :

பாடல் எண் : 1

புகழும் பழியும் பெருக்கிற்
பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினல்
லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை
யாம்பழி சின்மொழிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புகழும் பழியும் காரணவசத்தாற்பிறந்த புகழும் பழியும்; பெருக்கின் பெருகும் அக்காரணங்களை மிகச் செய்தொருவன் வளர்க்குமாயிற் றாம்வளரும்; நிகழ்த்தின் அக்காரணங்களை யிடையறாமற்செய்து நிகழ்த்துவனாயின்; பெருகிநின்று நிகழும் அவ்வாறு வளர்ந்து நின்று மாயாதுளவாய்ச் செல்லும்; அல்லால் நிகழா இவ்வாறல்லது அவைதாமாக நிகழா; அதனான், இது நீ நினைப்பின் இப்பெற்றியை நீ கருதுவை யாயின்; அகழும் மதிலும் அணி தில்லையோன் அடிப்போது அகழையு மதிலையுமணிந்த தில்லைக்கண்ணானுடைய அடியாகிய போதுகள்; சென்னித் திகழுமவர் செல்லல் போல் தஞ்சென்னிக்கண் விளங்கும் பெரியோரது பிறவித்துன்பம்போல; சில்மொழிக்குப் பழி இல்லை யாம் இச்சின்மொழிக்குப்பழி யிப்பொழுதே யில்லையாம்; நீ நினையாமையிற் பழியாகாநின்றது எ-று.
நிகழுநிகழா நிகழ்த்தி னல்லாலென்புழி நிரனிறையாகக் கூட்டப்பட்டது. அகழுமதிலு மலங்காரநீர்மையவென்பது போதர, அணிதில்லை யென்றார். அகழுமதிலுமழகுசெய்தவென எழுவா யாக்கியுரைப்பினுமமையும். வழிவேறுபடுதல் இவளையெய்து முபாயங் களவன்றி வரைவாய் வேறுபடுதல். மன்னும்: அசைநிலை. பழிவேறுபடுதல் - பழித்தன்மை திரிந்து கெடுதல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அச்சம். பயன்: அலரறிவுறீஇ வரைவுகடாதல். 181

குறிப்புரை :

15.1 அகன்றணைவுகூறல்
அகன்றணைவுகூறல் என்பது அலரறிவுறுத்ததோழி, இத் தன்மையை நினைந்து நீ சிலநாளாகன்றணைவையாயின் அம்பலு மலருமடங்கி இப்பொழுதே அவளுக்குப் பழியில் லையா மெனத் தலைமகனுக்கிசைய அகன்றணைவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
5.1. வழிவேறு படமன்னும்
பழிவேறு படுமென்றது.

பண் :

பாடல் எண் : 2

ஆரம் பரந்து திரைபொரு
நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
சிறந்தார்க்குஞ் செறிகடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புலியூர்ப் புனிதன் சீர் அம்பர் சுற்றி புலியூர்க்கணுளனாகிய தூயோனது புகழையுடைய அம்பரைச் சூழ்ந்து; எற்றி கரையைமோதி; சிறந்து ஆர்க்கும் செறிகடலே மிக்கொலிக்கும் வரையிகவாத கடலே; ஆரம் பரந்து திரைபொரு நீர்- முத்துப்பரந்து திரைக டம்முட்பொருங் கடனீர்; முகில் மீன் பரப்பிச் சீர் அம்பரத்தின் திகழ்ந்து முகிலையு மீனையுந் தன்கட் பரப்பிச் சீர்த்த வாகாயமேபோல விளங்கி; ஒளிதோன்றும் துறைவர் ஒளிபுலப் படுத்துந் துறையையுடையவர்; சென்றார் நம்மைவிட்டுச் சென்றவர்; போரும் பரிசு புகன்றனரோ மீண்டுவரும்பரிசு உனக்குக் கூறினரோ? உரை எ-று.
பரப்பியென்னும் வினையெச்சம் சீரம்பரமென்னும் வினைத் தொகையின் முன்மொழியோடு முடிந்தது. பரப்பி விளங்குமென ஒருசொல் வருவித்து முடிப்பினுமமையும். பரப்பி யென்பதற்கு, முன் மீன்பரப்பி (தி.8 கோவை பா.130) யென்பதற்குரைத்ததுரைக்க. திகழ்ந்தென்றதனான் ஒளிமிகுதிவிளங்கும். போதருமென்பது போருமென இடைக்குறைந்து நின்றது. ஈண்டு ஏனையுவம முண்மையின், உள்ளுறையுவமமின்மையறிக. 182

குறிப்புரை :

15.2 கடலொடுவரவுகேட்டல் கடலொடுவரவு கேட்டல் என்பது ஒருவழித்தணத்தற் காற்றாது வருந்தாநின்ற தலைமகள், நம்மைவிட்டுப்போனவர் மீண்டுவரும்பரி சுனக்குரைத்தாரோவெனக் கடலொடு தலைமகன் வரவு கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.2. மணந்தவர் ஒருவழித் தணந்ததற் கிரங்கி
மறிதிரை சேரும் எறிகடற் கியம்பியது.

பண் :

பாடல் எண் : 3

பாணிகர் வண்டினம் பாடப்பைம்
பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
யூர்சுற்றும் போர்க்கடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே பூணையொக்குமொளியையுடைய அரவை யணிந்தவனது புலியூரைச்சூழ்ந்த கரைபொருதலையுடைய கடலே; பாண் நிகர் வண்டு இனம் பாட பாணரையொக்கும் வண்டினங்கள் சென்று பாட; பைம்பொன் தரு வெண் கிழி தாதாகிய பசும் பொன்னைப்புலப்படுத்தாநின்ற போதாகிய வெண்கிழியை; தம் சேண் நிகர்காவின் வழங்கும் புன்னைத் துறைச் சேர்ப்பர் தமது சேய்மைக்கண் விளங்குங் காவினின்று அவற்றிற்குக் கொடுக்கும் புன்னைகளையுடைய துறையையணைந்த சேர்ப்பையுடையராகிய; திங்கள் வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் திங்களினொளிபோலு மொளியையுடைய என்வெள்வளையைத் தம்மொடு கொண்டுபோனவரது திறத்தை; வாய்திறவாய் எமக்குக் கூறுகின்றிலை? நீ கூறாதொழிகின்றதென்! எ-று.
கிழிதமென்று கிழிக்குப்பெயராக வுரைப்பாருமுளர். வாய் திறவா யென்பதற்குக் கூறுவாயாகவென் றுரைப்பினுமமையும். 183

குறிப்புரை :

15.3 கடலொடுபுலத்தல் கடலொடு புலத்தல் என்பது கடலொடு வரவுகேட்ட தலைமகள், அது தனக்கு வாய்திறவாமையின் என்வளை கொண்டு போனார் திறம் யான்கேட்க நீ கூறாதொழிகின்ற தென்னெனப்பின்னும் அக்கடலொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.3. செறிவளைச் சின்மொழி
எறிகடற் கியம்பியது.

பண் :

பாடல் எண் : 4

பகன்தா மரைக்கண் கெடக்கடந்
தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு
நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
லோநம் மகன்றுறையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பகன் தாமரைக் கண் கெட பகன் என்னும் பெயரையுடைய ஆதித்தனது தாமரைபோலுங் கண்கெட; கடந்தோன் புலியூர்ப் பழனத்து அகன் தாமரை அன்னமே அவனை வென்றவனது புலியூரைச்சூழ்ந்த பழனத்தின் கணுண்டாகிய அகன்ற தாமரைக்கண்வாழும் அன்னமே; வண்டு நீல மணி அணிந்து வண்டாகிய நீலமணியை யணிந்து; செம்பொன் முத்து அணி - தாதாகிய செம்பொன்னையும் அரும்பாகிய முத்தையுமணிந்த; முகன் தாழ் குழைப் புன்னை முகத்துத் தாழ்ந்த குழையையுடைய புன்னை; இன்னும் உரையாது இந்நிலைமைக்கண்ணு மொன்றுசொல்லுகின்ற தில்லை; அகன்றார் நம் அகன்துறை அகன்றே யொழிவர் கொல்லோ அகன்றவர் நமதகன்றதுறையை யகன்றே விடுவாரோ? அறியேன்; நீயுரை எ-று.
முகன்றாழ் குழையென்பது இருபொருட்படநின்றது. யானித் தன்மை யேனாகவும் மணியணிந்தின்புற்று நிற்கின்ற புன்னை எனக்கொன்று சொல்லுமோ? அன்னமே, எனக்கு நீ கூறென்பது கருத்து. ஈண்டு நம்மோடு தாம்விளையாடும் விளையாட்டை மறந்தேவிடுவாரோ வென்னுங்கருத்தான், நம்மகன்றுறையை யகன்றேயொழிவர் கொல்லோ வென்றாள். #9; 184

குறிப்புரை :

15.4 அன்னமோடாய்தல் அன்னமோடாய்தல் என்பது கடலொடுபுலந்து கூறிய தலைமகள், புன்னையொடுபுலந்து, அகன்றவர் அகன்றே யொழிவரோ? யானறிகின்றிலேன்; நீயாயினுஞ் சொல்லுவாயாக வென அன்னமோடாய்ந்து வரவுகேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.4. மின்னிடை மடந்தை
யன்னமோ டாய்ந்தது.

பண் :

பாடல் எண் : 5

உள்ளு முருகி யுரோமஞ்
சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்
தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
ஆர்க்கும் பொருகடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புள்ளும் திரையும் பொரச் சங்கம் ஆர்க்கும் பொருகடலே புள்ளுந்திரையுந் தம்முட்பொரச் சங்கொலிக்குங் கரை பொருங்கடலே; உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உள்ளுமுருகி மெய்ம்மயிர் சிலிர்ப்ப; உடையவன் ஆட்கொள்ளுமவரில் ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் உடையவனாகிய தானாட்கொள்ளு மடியாருள் எமக்கோர் கூட்டத்தைத் தந்தவன் நின்று கூத்தாடும்; புலியூர் விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி புலியூரை நீங்கும்வண்ணஞ் சென்றவரது பெரிய தேர்போன வழியை; தூரல் கண்டாய் நின்றிரைகளாற் றூராதொழியவேண்டும்; எம்முயிர்க்குப் பற்றுக்கோடினியிதுவே எ-று.
உள்ளுமென்ற வும்மையாற் புறத்துக்கண்ணீர் தழுவப்பட்டது. ஆட்கொள்ளுமவர் பெருமை தோன்ற உடையவனென அவன் பெருமை விளக்கும் பெயராண்டுக்கூறினார். விள்ளுதல் செலவான் வருங் காரியமாதலின், விள்ளும் பரிசுசென்றாரென்றாள். கண்டா யென்பது முன்னிலையசைச்சொல். குனிக்கும் புலியூர் நுகர்ச்சியை நினையாது நீங்கிய வன்கண்மையார் இனிவருவரென்னு நசையிலம்; அவர் தேர்ச்சுவடாயினும் யாங்காண நீ யதனையழியாதொழி யென்பது கருத்து. விள்ளும்பரிசு சென்றாரென்பதற்குப் புலியூரை நீங்கினாற் போல யான்றுன்புறும்வண்ண மெனினுமமையும். விள்ளுதல் வாய்திறத்தலென்று, அலர்கூறி நகும்வண்ணஞ் சென்றவ ரெனினுமமையும். பொரச்சங்கமார்க்கு மென்புழிப் பொருஞ்சங் கொலியுமென வொருபொருடோன்றியவாறு கண்டு கொள்க. கூட்டந் தந்தாரென்று பாடமோதி ஆட்கொள்ளு மவரைப்போலின்புற எமக் கோர் புணர்ச்சியைத் தந்தாரெனத் தலைமகன் மேலேறவுரைப் பாருமுளர். அலங்காரம்: அல்பொருட்டற் குறிப்பேற்றம். #9; 185

குறிப்புரை :

15.5 தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் தேர்வழிநோக்கிக் கடலொடுகூறல் என்பது அன்னமொடு வரவுகேட்ட தலைமகள், அதுவும் வாய்திறவாமையின், இனியவர் வருகின்றாரல்லர்; எம்முயிர்க்குப் பற்றுக்கோடினி யிதுவே; இதனை நீ யழியாதொழிவாயென அவன்சென்ற தேர்வழி நோக்கிக் கடலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.5. மீன்றோய் துறைவர் மீளு மளவு
மான்றேர் வழியை யழியே லென்றது.

பண் :

பாடல் எண் : 6

ஆழி திருத்தும் புலியூ
ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின்
நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக்
கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி
யோவுள்ளம் வள்ளலையே

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து ஆழிசூழ்ந்த மண்முழுதையுந் திருத்தும் புலியூரை யுடைய வன தருள்போல இன்புறவளித்து; ஆழி திருத்தும் மணற் குன்றின் நீத்து அகன்றார் வருகென்று கடல்வந்து திருத்துமணற் குன்றின்கண் என்னை நீத்தகன்றவர் வரவேண்டுமென்று; ஆழி திருத்திச் சுழிக் கணக்கு ஓதி நையாமல் கூடலையிழைத்துச் சுழிக் கணக்கைச் சொல்லி யான்வருந்தாமல்; ஐய ஐயனே; வாழி வாழ் வாயாக; உள்ளம் திருத்தி வள்ளலைத் தரக்கிற்றியோ அவ னுள்ளத்தை நெகிழ்த்து வள்ளலையீண்டுத்தரவல்லை யாயின் யானிரக்கின்றேன் எ-று.
முதற்கணாழி: ஆகுபெயர். ஆழிதிருத்தும் புலியூரென்ப தற்குப் பிறவுமுரைப்ப. திரைவந்து பெயரும் பெருமணலடைகரையைப் பின்னினையாத கொடியோர் இனிவருதல் யாண்டைய தென்னுங் கருத்தான், ஆழிதிருத்து மணற்குன்றி னீத்தகன்றாரென்றாள். ஐயவென்றது கூடற்றெய்வத்தை. நீடலந்துறை யென்பதற்குக் கமழலந்துறைக் குரைத்தது (தி.8 கோவை பா.88) உரைக்க. 186

குறிப்புரை :

15.6 கூடலிழைத்தல் கூடலிழைத்தல் என்பது தேர்வழிநோக்கிக் கடலொடு கூறா நின்ற தலைமகள், இம்மணற்குன்றின்கண் நீத்தகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தர வல்லையோ வெனக் கூடற் றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
. 15.6. நீடலந் துறையிற்
கூடல் இழைத்தது.

பண் :

பாடல் எண் : 7

கார்த்தரங் கந்திரை தோணி
சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந்
துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
மாறென்கொ லாழ்சுடரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார்த் தரங்கம் கரியதிரையும்; திரை தோணி திரையாநின்றதோணியும்; சுறா சுறாவும்; மீன் எறிவோர் மீனெறி வோரும்; கடல் கடலும்; போர்த் தரு அங்கம் போரைத்தரு மங்கங்களையும்; துறை அக்களத்தையும்; மானும் துறைவர் போக்கும் - ஒக்குந் துறையையுடையவரது பிரிவும்; மிக்க தீர்த்தர் அங்கன் தில்லை் பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும் சிறந்த தூயோராகிய அரியயர்களுடைய வென்பையணிந்தவனது தில்லைவரைப்பினுண்டாகிய பல்பூம் பொழிற்கண் நின்னிற் பிரியே னென்று சொல்லும் வஞ்சினமும்; ஆர்த்தர் அங்கம் செய்யும் என் மேனியை நோயுற்றார் மேனியாகச் செய்யாநின்றன; ஆழ் சுடரே வீழாநின்ற சுடரே; உய்யுமாறு என் கொல் யானுய்யு நெறியென் னோ? கூறுவாயாக எ-று.
குதிரைத்திரள் தரங்கத்திற்கும், தேர் தோணிக்கும், யானை சுறாவிற்கும், காலாள் மீனெறிவோர்க்கும், போர்க்களங் கடற்கும் உவமையாகவுரைக்க. தரங்க முதலாயின வற்றாற் போரைத் தருமங்கத்தையுடைய களத்தை யொக்குந் துறை யென மூன்றாவது விரித்துரைப்பாருமுளர். இதற்கு அங்கத்துறை யென்றது மெலிந்து நின்றது. போரைத் தருமங்க மென்பதனைத் தொகுக்கும் வழித்தொகுத்தார். துறைவர்போக்கும் தில்லைவரைப்பிற் குளுறவும் என்னா மென்னு மச்சத்தளாய், ஆர்த்தரங்கஞ் செய்யுமென்றாள். 187

குறிப்புரை :

15.7 சுடரொடுபுலம்பல் சுடரொடு புலம்பல் என்பது கூடலிழைத்து வருந்தாநின்ற தலைமகள், துறைவர்போக்கும் அவர் சூளுறவும் என்னை வருத்தா நின்றன: அதன்மேல் நீயுமேகாநின்றாய்; யானினியுய்யுமா றென்னோ வெனச் செல்லாநின்ற சுடரொடு புலம்பாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.7. குணகட லெழுசுடர் குடகடற் குளிப்ப
மணமலி குழலி மனம்புலம் பியது.

பண் :

பாடல் எண் : 8

பகலோன் கரந்தனன் காப்பவர்
சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற்
சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
மீனுண்ட அன்னங்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பகலோன் கரந்தனன் கதிரவன் மறைந்தான்; காப்பவர் சேயர் இம்மாலைக்காலத்துவருந் துன்பத்தைக் காக்குமவர் சேயராயிருந்தார்; அகல் ஓங்கு இருங் கழிவாய் கொழுமீன் உண்ட அன்னங்கள் சேக்கைகள் நோக்கின அதுவேயுமன்றி இவ்வகலோங் கிருங்கழியிடத்துக் கொழுமீனை யுண்ட வன்னங்கடாமும் இவ்விடத்தைவிட்டுத் தஞ்சேக்கைகளை நோக்கின; இனியென் செய்வேன்! எ-று.
பற்று அற்றவர்க்குப் புகலோன் புலன்களிற் பற்றற்றவர்க்குப் புகலிடமாயுள்ளான்; புகுநர்க்குப் போக்கு அரியோன் தன்கட் புகுவார்க்குப் பின் போதரவரியவன்; எவரும் புகலத் தகலோன் எல்லாருமேத்தத் தகுதலையுடையவன்; பயில் தில்லைப் பைம் பொழிற் சேக்கைகள் அவன் பயிலுந் தில்லை வரைப்பிற் பைம் பொழில்களி னுளவாகிய சேக்கைகளெனக் கூட்டுக.
ஓங்குதல் ஓதமேறி நீருயர்தல். கொழுமீன் என்பது ஓர் சாதி. 188

குறிப்புரை :

15.8 பொழுதுகண்டுமயங்கல் பொழுதுகண்டு மயங்கல் என்பது சுடரொடு புலம்பா நின்றவள், கதிரவன் மறைந்தான்; காப்பவர் சேயர்; அதன்மேலிவ் விடத்து மீனுண்ட வன்னங்களும் போய்த் தஞ்சேக்கைகளை யடைந்தன; இனி யானாற்றுமாறென்னோவென மாலைப் பொழுது கண்டு மயங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
15.8. மயல்தரு மாலை வருவது கண்டு
கயல்தரு கண்ணி கவலை யுற்றது.

பண் :

பாடல் எண் : 9

பொன்னும் மணியும் பவளமும்
போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர்
விரவா தவரினுள்நோய்
இன்னு மறிகில வாலென்னை
பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
தேரும்வண் டானங்களே. 9;

பொழிப்புரை :

இதன் பொருள்:
இருங் கழிவாய் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்கள் என்னாற்றமைக்குப் பரிகாரமாவதி யாதுஞ் சிந்தியாது இருங்கழியிடத்துப் பகலேபுகுந்து விரும்பித் தமக்குணவு தேடும் வண்டானங்களாகிய குருகுகள்; உள் நோய் இன்னும் அறிகில என்னுண்ணோயை யிந்நிலைமைக்கண்ணு மறிகின்றன வில்லை; என்னை பாவம் இஃதென்னை பாவம்! எ-று.
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்து இலங்கி மின்னும் பொன்போலப் பொலிந்து மாணிக்கம்போல விட்டு விளங்கிப் பவளம்போலமின்னும்; சடையோன் புலியூர் விரவாதவரின் (உறும்) உள்நோய் சடையையுடையவனது புலியூரைக் கலவாதாரைப்போல யானுறுமுண்ணோ யெனக்கூட்டுக.
உறுமென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது. முன்னறிந் தனவில்லையாயினும் இனியறியவேண்டுமென்பது கருத்து. புலியூரை விரவாதார் கண்ணோட்டமிலராகலிற் புலியூரை விரவாத வரினின்னுமறிகில வென்றியைத் துரைப்பினு மமையும். நிரனிறை யாகக் கொள்ளாது எல்லாமெல்லாவற்றின்மேலு மேறவுரைப்பினு மமையும். மன்னும்: அசைநிலை. #9; #9; 189

குறிப்புரை :

15.9 பறவையொடு வருந்தல் பறவையொடு வருந்தல் என்பது பொழுதுகண்டு மயங்கா நின்ற தலைமகள், இந்நிலைமைக்கண்ணும் என்னுண்ணோயறி யாது கண்ணோட்டமின்றித் தம் வயிறோம்பாநின்றன; இஃதென்னை பாவமென வண்டானப் பறவையொடு வருந்திக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.9. செறிபிணி கைம்மிகச் சிற்றிடைப் பேதை
பறவைமேல் வைத்துப் பையுளெய் தியது.

பண் :

பாடல் எண் : 10

கருங்கழி காதற்பைங் கானலில்
தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில்
செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென்
றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
கூப்பும் மலர்க்கைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தில்லை எம் கண்டர் தில்லைக்கணுள ராகிய எம்முடைய கண்டர்; விண்டார் ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற- பகைவரொருங்கேயழியு மச்சத்தையுடைய மூவெயிலைச் செற்ற; ஒற்றைச் சிலை சூழ்ந்து தனிவில்லைச் சூழ்ந்து; அருங்கழி காதம் அகலும் என்றூழ் என்று அரியவாகிய மிக்ககாதங்களைப் போகாநின்றது என்றூழ் இனி யிவளெங்ஙனமாற்றுமென்று வருந்தி; கருங்கழி காதல் பைங்கானலின் அலந்து கண்ணீர் வரும் கருங்கழியின்கண்ணுங் காதலையுடைய பைங்கானலின் கண்ணுமுள வாகித் துன்புற்றுக் கண்ணீர்வாராநின்ற; கழிகாதல் வனசங்கள் கழிகாதலையுடைய தாமரைகள்; மலர்க்கைகள் கூப்பும் விரைந்துவர வேண்டுமென்று அஞ்ஞாயிற்றை நோக்கித் தம் மலராகிய கைகளைக் கூப்பியிரவாநின்றன; இவையென்மாட் டன்புடையன போலும் எ-று.
கானலின் வனசங்களெனவும், தில்லையெங்கண்டர் செற்றவெனவுங் கூட்டுக. கானலிற் கைகூப்புமென வியைப்பினு மமையும். கானற்பொய்கையின் வனசம் கானலின் வனசமெனப் பட்டன. அலந்து கண்ணீர்வருமென்பது இருபொருட்டாகலின், மலர்ந்து கள்ளாகிய நீர் வருமென்றுரைக்க. இப்பொருட்கு அலர்ந் தென்பதிடைக்குறைந்து நின்றதாகக் கொள்க. கதிரோன்றம்மைப் பிரிய வாற்றாது கடிது வரவேண்டுமென வனசங்கள் கைகூப்பா நின்றன வென்று அவற்றிற்கிரங்கினாளாக வுரைப்பினுமமையும். அலர்ந்த வென்பது பாடமாயின், அலர்ந்த வனசமென வியையும். 9; 190

குறிப்புரை :

15.10 பங்கயத்தோடுபரிவுற்றுரைத்தல் பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல் என்பது பறவையொடு வருந்தாநின்றவள், இவையென்வருத்தங்கண் இவள் வருந்தாமல் விரைய வரவேண்டுமென்று ஞாயிற்றை நோக்கித் தங்கை குவியாநின்றன; ஆதலால் என்மாட் டன்புடையன போலுமெனப் பங்கயத்தோடு பரிவுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.10. முருகவிழ் கான
லொடுபரி வுற்றது.

பண் :

பாடல் எண் : 11

மூவல் தழீஇய அருண்முத
லோன் தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந்
துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
தளிய களியன்னமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மூவல் தழீஇய அருள் முதலோன் மூவலைப் பொருந்திய அருளையுடைய முதல்வன்; தில்லைச் செல்வன் தில்லைக்க ணுளனாகிய செல்வன்; முந்நீர் நாவல் தழீஇய இந்நானிலம் துஞ்சும் அவனுடைய கடலாற்சூழப்பட்ட நாவலைப் பொருந்திய இந்நானிலமுழுதுந் துஞ்சாநின்றது; யான் துயிலாச் செயிர் எம்காவல் தழீஇயவர்க்கு ஓதாது இப்பொழுதினும் யான் றுயிலாமைக்குக் காரணமாகிய வருத்தத்தை எமது காவலைப் பொருந்தினவருக் குரையாதே; அளிய களி அன்னம் அளித்தாகிய களியன்னம்; சென்று இவ்விடத்து நின்றும்போய்; நயந்த இன்பச்சேவல் தழீஇத் தான் துஞ்சும் தானயந்த வின்பத்தைச் செய்யுஞ் சேவலைத்தழுவி ஒருகவற்சியின்றித் தான்றுயிலாநின்றது; இனியிது கூறுவார் யாவர்? எ-று.
மூவலென்பது ஒரு திருப்பதி. பாலைக்கு நிலமின்மையின், நானிலம் எனப்பட்டது. நயந்த சேவலைப்பொருந்திய களிப்பால் அன்னஞ் சென்றுரையாமை யல்லது அவரெம்மைக்காவாது விடா ரென்னுங் கருத்தான், எங்காவறழீஇயவர்க்கென்றாள். ஓதாதென்ப தனை முற்றாகவுரைப்பினு மமையும். நெய்தற்றிணை கூறுவார் சோத்துன்னடியம் (பா.173) என்பது தொட்டுப் புகழும் பழியும் (பா.181) என்னுங்காறும் வரப் பாட்டொன்பதும் இரங்கனிமித்த மாகக் கூறி, ஒருவழித்தணத்தற் றுறையிடத்து ஆரம்பரந்து (பா.182) என்பது தொட்டு இதன்காறும்வர இப்பாட்டுப் பத்தும் இரங்கலே கூறுதலான், திணை: நெய்தல்; என்னை? வாட்டம் உரிப்பொரு ளாதலின். கைகோள்: கற்பு. மெய்ப்பாடு: அழுகை. பயன்: அயர் வுயிர்த்தல். #9; #9; #9; #9; #9; #9; 191

குறிப்புரை :

15.11 அன்னமோடழிதல் அன்னமோடழிதல் என்பது பங்கயத்தை நோக்கிப் பரிவுறாநின்றவள், உலகமெல்லாந் துயிலாநின்ற விந்நிலைமைக் கண்ணும் யான்றுயிலாமைக்குக் காரணமாகிய என்வருத்தத்தைச் சென்று அவர்க்குச் சொல்லாது தான்றன் சேவலைப்பொருந்திக் கவற்சியின்றித் துயிலாநின்றதென அன்னத்தோடழிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.11. இன்னகையவ ளிரவருதுயரம்
அன்னத்தோ டழிந்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 12

நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எல் ஆர் மதியே ஒளியார்ந்த மதியே; தில்லைத் தொல்லோன் அருள்கள் இல்லாரின் சென்றார் சென்ற செல்லல் கண்டாய் தில்லைக்கணுளனாகிய தொல்லோனது அருளுடையா ரல்லாதாரைப்போலக் கண்ணோட்டமின்றிப் போனவர் போதலா லுண்டாகிய இன்னாமையை நீயேகண்டாய் யான் சொல்ல வேண்டுவதில்லை; வளை நில்லா வளைகணிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சம் நெக்கு உருகும் நெஞ்சு நெகிழ்ந்துருகாநின்றது; நெடுங்கண் துயிலக்கல்லா கதிர் முத்தம் காற்றும் நெடுங்கண் கடுயிலாவாய்க் கண்ணீர்த்துளியாகிய கதிர் முத்தங்களை விடாநின்றன; எனக் கட்டுரைக்க என்று அவர்க்குச் சொல்வாயாக; நின்னை யான் இன்று இரக்கின்றது இது நின்னை யானின்றிரக் கின்றதிது எ-று.
துயிலக்கல்லாவென்பது ஒருசொல். முத்தங்காலு மென்பதூஉம் பாடம். எல்லாமதியே யென்பது பாடமாயிற் செல்லலெல்லாமென்று கூட்டியுரைக்க. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவுகடாதல்.192

குறிப்புரை :

15.12 வரவுணர்ந்துரைத்தல் வரவுணர்ந் துரைத்தல் என்பது தலைமகளன்னத் தோடழிந்து வருந்தாநிற்ப, தலைமக னொருவழித்தணந்து வந்தமை சிறைப் புறமாகவுணர்ந்த தோழி, வளைகள் நிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சம் நெகிழ்ந்துருகாநின்றது; கண்கள் துயிலின்றிக் கலுழாநின்றன; இவை யெல்லாம் யான் சொல்ல வேண்டுவதில்லை; நீயேகண்டாய்; இதனைச்சென்று அவர்க்குச் சொல்லுவாயென மதியொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.12. சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 13

வளருங் கறியறி யாமந்தி
தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம்
பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும்
மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வளரும் கறி அறியா மந்தி தின்று வளராநின்ற மிளகு கொடியைத் தமக்கேற்றவுணவென்றறியாத இளையமந்தி தின்று; மம்மர்க்கு இடமாய்த் தளரும் தடவரைத் தண்சிலம்பா வருத்தத்திற்கிடமாய் நிலைதளரும் பெரியவரைகளை யுடைய தண்சிலம்பையுடையாய்; வெண் மா மதி நின்று ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள் நுதல் வெள்ளிய பெரிய மதி நின்று விளங்குஞ் சடையானியன்ற முடியையுடையவனது புலியூரையொக்குமொண்ணுதல்; தனது அங்கம் எங்கும் விளரும் தன் மேனிமுழுதும் பசக்கும்; விழும் அமளிக்கண் விழாநிற்கும்; எழும் எழாநிற்கும்; விம்மும் பொருமா நிற்கும்; மெலியும் நின்வன்கண்மையை நினைந்து மெலியாநிற்கும்; அதனாலின்ன நிலைமையளென்றென்னாற் சொல்லப்படாது எ-று.
வளருமிளங்கறி கண்ணிற்கினிதாயிருத்தலின் இது நமக்குத் துய்க்கப்படாதென்றுணராத இளமந்தி அதனைத்தின்று வருந்துமாறு போலக் கண்ணுமனமுமகிழு முருவினையாகிய நின்னை நின்பெருமையுணராதெதிர்ப்பட்டு வருந்தாநின்றாளென உள்ளுறை காண்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
இவ்வாறு ஒருவழித்தணந்து வந்து வரைவுமாட்சிமைப் படவும் பெறும். அன்றியும் உடன்போக்கு நிகழப்படும். 193

குறிப்புரை :

15.13 வருத்தமிகுதிகூறல் வருத்தமிகுதி கூறல் என்பது சிறைப்புறமாக மதியொடு வருத்தங்கூறிச் சென்றெதிர்ப்பட்டு வலஞ்செய்துநின்று, நீ போய், அவள் படாநின்ற வருத்தம் என்னாற்சொல்லுமளவல்லவென வரைவு தோன்றத் தலைமகளது வருத்தமிகுதி தோழி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.13. நீங்கி யணைந்தவற்குப்
பாங்கி பகர்ந்தது.
சிற்பி