திருக்கோவையார்-உடன்போக்கு


பண் :

பாடல் எண் : 1

ஒராக மிரண்டெழி லாயொளிர்
வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஒரு ஆகம் இரண்டு எழில் ஆய் ஒளிர்வோன் தில்லை ஒள் நுதல் ஒருமேனி பெண்ணழகு மாணழகுமாகிய விரண்டழகாய் விளங்குமவனது தில்லைக் கணுளளாகிய வொண்ணு தலுடைய; அங்கராகம் பயின்று பூசப் படுவன பயின்று; அமிழ்தம் பொதிந்து அமிர்தத்தைப் பொதிந்து; ஈர்ஞ் சுணங்கு ஆடகத்தின் பராகம்சிதர்ந்த பயோதரம் நெய்த்த சுணங்காகிய செம்பொன்னின் பொடியைச் சிதறின முலைகள்; இப்பரிசே பணைத்த இராகம் கண்டால் இப்படியே பெருத்த கதிர்ப்பைக்கண்டால்; வள்ளலே வள்ளலே; எமர் எண்ணுவது இல்லையே இவண் மாட்டெமர் நினைப்பதில்லையே? சிலவுளவாம் எ-று.
இராகம் வடமொழிச்சிதைவு; ஈண்டு நிறமென்னும் பொருட்டு. இராகம் முடுகுதலென்பாருமுளர். தில்லையொண்ணுத லிராகமென வியையும். மெய்ப்பாடும் பயனும் அவை. 194

குறிப்புரை :

16.1 பருவங்கூறல் பருவங்கூறல் என்பது அலரறிவுறுத்த தோழி, இவண் முலை முதிர்வு கண்டமையான் மகட்பேசுவார்க்கு எமர் மாறாது கொடுக்கவுங் கூடும்; அதுபடாமனிற்பநீ முற்பட்டு வரைவாயாக வெனத் தலைமகனுக்குத் தலைமகளது பருவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.1. உருவது கண்டவள்
அருமை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

மணியக் கணியும் அரன்நஞ்ச
மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
மேன்மே லயலவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
துறைவா துறைவா; தில்லை அன்னாள் திறத்துத் துணியக் கருதுவது இன்றே துணி தில்லையையொப் பாடிறத்து நீ துணிந்து செய்யக்கருதுவதனை இன்றே துணிந்து செய்வாயாக; அயலவர் நிறை பொன் மேன்மேல் அணியக் கருது கின்றார் பலர் அயலவர் நிறைந்த பொன்னை மேன்மேலு மணியக் கருதுகின்றார் பலர் எ-று.
மணி அக்கு அணியும் அரன் மணியாகிய அக்கையணியு மரன்; நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணை தரும் பரன்- நஞ்சையஞ்சிக் கலங்கிச்சுழன்று தேவர் சென்று பணிய அந்நஞ்சான்வருமிடர்க்கு மருந்தாகத் தன் கருணையைக் கொடுக்கும் பரன்; தில்லை அவனது தில்லையெனக் கூட்டுக.
அக்குமணி யெனினுமமையும். அலங்காரம்: ஒற்றுமைக் கொளுவுதல். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: அது. #9; 195

குறிப்புரை :

16.2 மகட்பேச்சுரைத்தல் மகட் பேச்சுரைத்தல் என்பது பருவங்கூறிய தோழி, படைத்து மொழியான் அயலவர் பலரும் மேன்மேலும் பொன்னணியக் கருதாநின்றார்; நீ விரைய வரைவொடு வருவாயாதல் அன்றியுடன்கொண்டுபோவாயாதல் இரண்டினு ளொன்று துணிந்துசெய்யக் கருதுவாய்; அதனை யின்றே செய்வாயாகவெனத் தலைமகனுக்கு அயலவர் வந்து மகட்பேசல் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.2. படைத்துமொழி கிளவியிற் பணிமொழிப் பாங்கி
அடற்கதிர் வேலோற் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
தழங்கும் மணமுரசே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கமழ் பூந் துறைவ கமழ்பூந் துறைவனே; பாப்பணியோன் தில்லைப் பல் பூ மருவு சில் ஓதியை பாம்பாகிய வணியையுடையவனது தில்லைக்கணுளளாகிய பலவாகிய பூக்கள் பொருந்திய நுண்ணிய வோதியையுடையாளை; நல் காப்பு அணிந்தார் நல்ல காப்பை யணிந்தார்கள்; இனி பொன் அணிவார் இனிப் பொன்னையணிவார்; கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று கலியாணத்துக்குப் பொருந்திய கோப்புக்களை யணிந்த வானைத்தோயுங் கொடிகளையுடைய முன்றிற்கணின்று; மணமுரசு இவை ஏர் குழுமி மாப்பணிலங்கள் முழங்கத் தழங்கும் மணமுரசங்களிவை ஏரொடு குழுமிப் பெரியசங்கங்கள் முழங்கத்தா மொலியாநின்றன; இனியடுப்பது செய்வாயாக எ-று.
தில்லைப் பல்பூவென் றியைப்பினு மமையும். காப்பென்றது காவலை. அணிவாரென்றது முற்றுச்சொல். கோப்பணி முன்றிலென வியையும். மெய்ப்பாடும் பயனும் அவை. 196

குறிப்புரை :

16.3 பொன்னணிவுரைத்தல் பொன்னணி வுரைத்தல் என்பது படைத்து மொழியான் மகட்பேசல் கூறின தோழி, அறுதியாக முன்றிற்கணின்று முரசொடு பணில முழங்கக் காப்பணிந்து பொன்னணியப் புகுதா நின்றார்; இனி நின்கருத்தென்னோவெனத் தலைமகனுக்கு அயலவர் பொன்னணி வுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.3. பலபரி சினாலும் மலர்நெடுங் கண்ணியை
நன்னுதற் பாங்கி பொன்னணிவ ரென்றது.

பண் :

பாடல் எண் : 4

எலும்பா லணியிறை யம்பலத்
தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
யென்நீ கருதுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பா சிலம்பா; எலும்பால் அணி இறை எலும்புகளானலங்கரிக்கு மிறைவன்; அம்பலத்தோன் அம்பலத்தின் கண்ணான்; எல்லை செல்குறுவோர் நலம் பாவிய முற்றும் நல்கினும் அவனதெல்லைக்கட் செல்லக் கருதுவாரது நன்மைபரந்த வுலகமுழுதையும் நீ கொடுப்பினும்; கல் வரை நாடர் எம்முடைய தமராகிய கல்வரைநாடர்; வடிக்கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார் வடுவகிர்போலுங் கண்ணையுடையாளது சிறியவிடைக்கே விலையாகச் சொல்லுத லியையார்; கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவது கலம்பரந்த முலையின் விலையாகயாதனை நீ கருதுவது? ஒன்றற்கும் அவருடம்படார் எ-று.
எலும்பாற்செய்த வணியென்று ஒருசொல் வருவித் துரைப்பாரு முளர். எல்லை சேறல் அறிவா லவனை யணுகுதல். தில்லையெல்லை யெனினுமமையும். அவர் நலம்பாவா விடமின்மையின் எஞ்சாமை முழுதுமென்பார், நலம்பாவியமுற்று மென்றார்; என்றது அவர் சீவன்முத்தராயிருத்தல். அஃதாவது சீவனுடனிருக்கும்போதே முத்தியையடைந் திருத்தல். முத்தியாவது எங்குமொக்க வியாத்தியை யடைந்திருத்தல். இஃது அகண்டபரிபூரண ரென்றபடி. அம்மகேளென்னுங் குறிப்பின்கண்வந்தது. சிற்றிடைக்கே யென்னு மேகாரம்: பிரிநிலை. இவனுயர்ந்த தலைமகனாதலால், தன்றமரைக் கல்வரைநாடரென்றும், பேதையரென்றும் கூறினாள். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளதருமையுணர்த்தல். 197

குறிப்புரை :

16.4 அருவிலையுரைத்தல் அருவிலை யுரைத்தல் என்பது பொன்னணி வுரைப்பக் கேட்ட தலைமகன் யான் வரைவொடு வருதற்கு நீ முலைப்பரிசங் கூறுவாயாகவென, எல்லாவுலகமு நல்கினும் எமர் அவளுடைய சிறிய விடைக்கு விலையாகச் செப்பலொட்டார்; இனிப் பெரிய முலைக்கு நீ விலைகூறுவ தென்னோவெனத் தோழி விலை யருமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.4. பேதைய ரறிவு பேதைமை யுடைத்தென
ஆதரத் தோழி அருவிலை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

விசும்புற்ற திங்கட் கழும்மழப்
போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய்
கிடந்தரன் தில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற்
றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
தளர்கின்ற நன்னெஞ்சமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அரன் தில்லை அன்னாள் குயம் அரனது தில்லையை யொப்பாளுடையமுலை; புற்று அரவு இடை புற்றின் கண்வாழும் பாம்புபோலுமிடை; கூர் எயிற்று ஊறல் கூரிய வெயிற்றின் கணூறியநீர்; குழல் மொழியின் நயம் பற்றி குழலோசை போலுமொழி என விவற்றின்கட்கிடந்த இன்பத்தையே கருதி; நின்று நடுங்கித் தளர்கின்ற நல் நெஞ்சமே விடாது நின்று அவளதருமை கருதாயாய் நடுங்கி வருந்தாநின்ற நல்ல நெஞ்சமே; விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழப்போன்று விசும்பைப் பொருந்திய திங்களைத் தரவேண்டி யழுங் குழவியையொத்து; அசும்பு உற்ற கண்ணோடு விம்மி விம்மி இனிக் கிடந்து அலறாய் நீரறாமையைப் பொருந்திய கண்ணை யுடையையாய்ப் பொருமிப் பொருமி இனிக்கிடந்தலறு வாயாக எ-று.
குழன்மொழியினென்னும் இன்: பலபெயரும் மைத்தொகை யிறுதிக்கண்வந்த சாரியை இன். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 198

குறிப்புரை :

16.5 அருமைகேட்டழிதல் அருமை கேட்டழிதல் என்பது அருவிலைகேட்ட தலை மகன், நீயவளதருமை கருதாது அவளதவயங்களிலுண்டாகிய நயத்தைப் பற்றிவிடாது நடுங்காநின்றாய்; இனி மதியைப்பிடித் துத் தரவேண்டியழும் அறியாக் குழவியைப்போலக் கிடந்தரற்று வாயாக வெனத் தன்னெஞ்சோடழிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.5. பெருமைநாட் டத்தவள்
அருமைகேட் டழிந்தது.

பண் :

பாடல் எண் : 6

மைதயங் குந்திரை வாரியை
நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை
யும்மல்குற் பைந்தொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பை தயங்கும் அரவம் புரையும் அல்குற் பைந்தொடி படம் விளங்கும் பாம்பையொக்கும் அல்குலையுடைய பைந்தொடி; மை தயங்கும் திரை வாரியை நோக்கி கருமை விளங்குந் திரையையுடைய கடலையுநோக்கி; மடல் அவிழ் பூங்கைதை கானலை நோக்கி மடலவிழாநின்ற பூவையுடையவாகிய தாழையை யுடைய கானலையுநோக்கி; கண்ணீர் கொண்டு கண்ணீரைக் கொண்டு; எம் கண்டர் தில்லைப் பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள் - பின் எம்முடைய கண்டரது தில்லைக்கணுளராகிய பொய்யாதல் விளங்கும் நுண்ணிய மருங்குலையுடைய தன்னாயத்தாராகிய நல்லாரையெல்லாம் புல்லிக்கொண்டாள்; அவள்கருதிய தொன்றுண்டு போலும் எ-று.
கண்ணீர்கொண்டென்றது பெண்களுக் கியல்பான குண மொன்று, நெடுங்காலங் கூடமருவினாரை விட்டு நீங்குகின்ற துயரத்தாற் றோன்றிய தொன்று, இக்காலமெல்லாம் உங்களைச் சேர்ந்து போந்த பெருநலத்தான் இப்பெருநலம் பெற்றேனென்னு முவகைக் கண்ணீரொன்று. இப்பெருநல மென்றது உடன்போக்கை. ஆதலான், நல்லாரையெல்லாம் புல்லிக்கொண்டு கண்ணீர் கொண்டாள். பொய்போலு மசையு மருங்கு லெனினுமமையும். குறித்துரைத்தது கொண்டு நீங்கென்பது பயப்பவுரைத்தது. 199

குறிப்புரை :

16.6 தளர்வறிந்துரைத்தல் தளர்வறிந்துரைத்தல் என்பது வரைவுமாட்சிமைப் படா தாயின் நீயவளையுடன்கொண்டு போவென்பது பயப்ப, கடலை யுங்கானலையு நோக்கிக் கண்ணீர் கொண்டு தன்னாயத்தாரை யெல்லாம் புல்லிக்கொண்டாள்; அவள் கருதிய தின்னதென்று தெரியாதெனத் தோழி தலைமகளது வருத்தங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.6. தண்டுறைவன் தளர்வறிந்து
கொண்டுநீங்கெனக் குறித்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

மாவைவந் தாண்டமென் னோக்கிதன்
பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
தாளின்றென் பைந்தொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
என் பைந்தொடி என்னுடைய பைந்தொடி; இன்று என்னைப் புல்லிக்கொண்டு பூவை தந்தாள் இன்றென்னைப் புல்லிக்கொண்டு தன் பூவையை யென்கையிற் றந்தாள்; பொன் பந்து தந்தாள் பின் பொற்றகட்டாற் புனைந்த பந்தைத் தந்தாள்; பாவை தந்தாள் பின் றன் பாவையைத் தந்தாள்; பைங்கிளி அளித்தாள் பைங்கிளியையுமளித்தாள்; மாவை வந்து ஆண்ட மெல் நோக்கிதன் பங்கர் மானைச் சென்றடிமைக்கொண்ட மெல்லிய நோக்கை யுடையாளது கூற்றையுடையவரது; வண்தில்லை மல்லல் கோவை வந்து ஆண்ட செவ்வாய்க் கருங்கண்ணி குறிப்பு அறியேன் - வளவியதில்லை வரைப்பினுண்டாகிய வளத்தையுடைய கொவ்வைக் கனியைச் சென்றாண்ட செவ்வாயையுடைய இக்கருங்கண்ணியது கருத்தறிகின்றிலேன்; நின்னுடன் செல்லப்போலும் எ-று.
புல்லிக்கொண்டு பாவையைத் தந்தாளென்றியைத்து, பாவை மேலுள்ளவன்பால் அதனைத் தருவுழிப் புல்லிக்கொண்டு தந்தாளென் றுரைப்பாருமுளர். இவையிரண்டற்கு மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்குணர்த்துதல். 200

குறிப்புரை :

16.7 குறிப்புரைத்தல் குறிப்புரைத்தல் என்பது வருத்தங்கூறிப் போக்குணர்த்தி அதுவழியாக நின்று, என்னைப் புல்லிக்கொண்டு தன்னுடைய பூவையையும் பந்தையும், பாவையையுங் கிளியையும் இன்றென்கைத் தந்தாள்; அது நின்னோடுடன் போதலைக் கருதிப்போலுமெனத் தோழி தலைமகனுக்குத் தலைமகளது குறிப்புரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.7. நறைக் குழலி
குறிப் புரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

மெல்லியல் கொங்கை பெரியமின்
நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங்
கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை
சேய்த்தெம் அகல்நகரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வானம் எல்லாம் கற்றுச் சொல்லிய சீர் வானுல கெங்கும் ஆண்டையராற் கற்றுச்சொல்லப்பட்ட புகழையும்; சுடர் திங்கள் கண்ணித் தொல்லோன் புலியூர் சுடரை உடைய திங்களாகிய கண்ணியையுமுடைய பழையோனது புலியூரில்; அல்லி அம் கோதை நல்லாய் அல்லியங்கோதையையுடைய நல்லாய்; மெல்லியல் கொங்கை பெரிய - மெல்லியலுடைய கொங்கைகள் பெரிய; இடை மின் நேர் அவற்றைத் தாங்கு மிடைநுடக்கத்தான் மின்னுக்கு நேராயிருந்தது; மெல் அடி பூ மெல்லியவடிகள் பூவேயாயிருந்தன; கல் இயல் வெம்மைக் கடம் கடுந் தீ - கல்லின் கணுண்டாகிய வெம்மையையுடைய காடு அவ்வடிக்குத் தகாததாய்க் கடிய தீயாயிருந்தது; எம் அகல் நகர் எல்லை சேய்த்து அதன்மேல் எம்முடைய வகன்றநகரும் எல்லைசேய்த்தாயிருந்தது; அதனான் நீ கருதியது பெரிதுமரிது எ-று.
கல்லானியன்ற கடமென வியைப்பினுமமையும். எல்லை சேய்த்தென்பன ஒரு சொன்னீர்மைப் பட்டு அகனகரென்னு மெழுவாய்க்கு முடிபாயின. வானரெல்லா மென்பதூஉம் பாடம் இதுவென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைமகணிலை யுணர்த்துதல்.201

குறிப்புரை :

16.8 அருமையுரைத்தல் அருமையுரைத்தல் என்பது குறிப்புரைத்துப் போக்குடம் படுத்திய தோழிக்கு, கொங்கைபொறாது நடுங்காநின்ற இடையினை யுடையாளது மெல்லியவடிக்கு யான்செல்லும் வெஞ்சுரந்தகாது; அதன்மேலும் எம்பதியுஞ் சேய்த்து; அதனால் நீ கருதுகின்ற காரியமிகவுமருமையுடைத்தெனத் தலைமகன் போக்கருமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.8. கானின் கடுமையும் மானின் மென்மையும்
பதியின் சேட்சியும் இதுவென வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

பிணையுங் கலையும்வன் பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பிணையும் கலையும் - பிணையுங் கலையும்; பெரு நீர் நசையால் மிக்க நீர் வேட்கையால்; வன் பேய்த்தேரினை அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் பெரிய பேய்த்தேரினைச் சென்றணுகும் முரம்பா னிரம்பிய சுரமும்; ஐய ஐயனே; நின்னொடு ஏகின் மெய்யே எம் பைந்தொடிக்கு நின்னொடு சொல்லின் மெய்யாக எம்பைந்தொடிக்கு; இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லைப் பூந்தண் பணையும் தடமும் அன்றே ஒப்பு மெல்லையு மில்லாத இறையோனுறைகின்ற தில்லை வரைப்பிற் பூக்களையுடைய குளிர்ந்த மருதநிலமும் பொய்கையு மல்லவோ! நீயிவ்வாறு கூறுவதென்னை எ-று.
முரம்பு கல் விரவி யுயர்ந்திருக்குநிலம். ஏகினென்னும் வினையெச்சம் பணையுந்தடமு மாமென விரியுமாக்கத்தோடு முடிந்தது. அழல்தடம் தீக்காய்கலம். விகாரவகையால் தடா தடமென நின்றது. அழலானிறைந்த பொய்கையெனினுமமையும். அலங்காரம்: புகழாப்புகழ்ச்சி. 202

குறிப்புரை :

16.9 ஆதரங்கூறல் ஆதரங்கூறல் என்பது போக்கருமை கூறிய தலைமகனுக்கு, நின்னோடு போகப்பெறின் அவளுக்கு வெஞ்சுரமும் தண்சுரமாம்; நீ யருமைகூறாது அவளைக் கொண்டுபோவெனத் தோழி தலைமகள தாதரங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.9. அழல்தடம் புரையும் அருஞ்சுர மதுவும்
நிழல்தட மவட்கு நின்னொடேகி னென்றது.

பண் :

பாடல் எண் : 10

இங்கய லென்னீ பணிக்கின்ற
தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
லண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற்
கண்ணித் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இணைப்பது இல்லாக் கங்கை அம் செஞ்சடைக் கண் நுதல் அண்ணல் கடிகொள் தில்லை இணைக்கப் படுவதொரு பொருளுமில்லாத கங்கையையுடைய வழகிய செஞ்சடையையுங் கண்ணையுடைய நுதலையுமுடைய வண்ணலது காவலைப் பொருந்திய தில்லைவரப்பின்; பங்கயப் பாசடைப் பாய்தடம் நீ பங்கயத்தின் பசியவிலைகளையுடைய பரந்த பொய்கை நீ; கருங் கயல்கண் இத்திருநுதல் படர் தடத்துச் செங்கயல் அன்றே கருங்கயல்போலுங் கண்ணையுடைய இத்திருநுதல் அகன்றவப் பொய்கைக்கண்வாழுஞ் செங்கயலன்றோ, அதனால், ஏந்தல் ஏந்தால்; இங்கு நீ அயல் பணிக்கின்றது என் நின்னோடேகுமிடத்து வேறொன்றானொருதுன்பம் வருவதாக இவ்விடத்து நீயயன்மை கூறுகின்றதென்! செங்கயற்குப் பங்கயத் தடமல்லது வேறுவேண்டப் படுவதொன்றுண்டோ! எ-று.
கண்ணுதலாகிய வண்ணலெனினுமமையும். உடன்கொண்டு போகாயாயின், அலரானும் காவன்மிகுதியானு நின்னைத் தலைப்படுதலரிதாகலிற் றடந்துறந்த கயல்போல இவளிறந்துபடு மென்பது கருத்து. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்கு வற்புறுத்தல். 9; 203

குறிப்புரை :

16.10 இறந்துபாடுரைத்தல் இறந்துபாடுரைத்தல் என்பது ஆதரங்கூறிய தோழி, நீயுடன் கொண்டு போகாயாகில் அலரானுங் காவன்மிகுதியானும் நின்னையெதிர்ப்படுதலரிதாகலின், தடந்துறந்த கயல்போல இறந்து படுமெனத் தலைமகளதிறந்துபாடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.10. கார்த்தடமுங் கயலும்போன்றீர்
வார்த்தடமுலையு மன்னனுமென்றது.

பண் :

பாடல் எண் : 11

தாயிற் சிறந்தன்று நாண்தைய
லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
சிறந்த மதிநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஈங்கோயிற் சிறந்து சிற்றம்பலத்து ஆடும் ஈங்கோ யிடத்துப் பொலிந்து மேவிச் சிற்றம்பலத்தின்கணின்றாடும்; எம் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதி நுதல் எம்முடைய கூத்தனாகிய பிரானது வாயின்கண் எப்பொழுதும் வந்து சிறத்தற்குக் காரணமாகிய அறிவாற் சிறப்பையுடையையாகிய மதிநுதால்; தையலாருக்கு நாண் தாயின் சிறந்தன்று மகளிர்க்குப்பழி நீக்கிப் பாதுகாத்தலில் நாண் தாய்போலச் சிறந்தது; அந்நாண் அத்தன்மைத்தாகிய நாண்; தகை சால்வேயிற் சிறந்த மென்தோளி அழகமைந்த வேய்போலச்சிறந்த மெல்லிய தோள்களை யுடையாய் திண் கற்பின் விழுமிது அன்று திண்ணிய கற்புப்போலச் சீரிதன்று எ-று.
தாயினுஞ் சிறந்ததன்று நாணென்றுரைப்பினுமமையும். நாணென்பது ஒருபொருட் குரிமையாகலிற் றாயென வொருமை கூறினார். ``ஏவலிளையர் தாய்வயிறு கரிப்ப`` என்பதுபோல அமையுமாறு முடைத்து. அன்றியும்,
உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று

குறிப்புரை :

16.11 கற்பு நலனுரைத்தல் கற்பு நலனுரைத்தல் என்பது தலைமகனைப் போக்குடம் படுத்திய தோழி, தலைமகளுழைச்சென்று, மகளிர்க்குப் பாதுகாக்கப் படுவனவற்றுள் நாண்போலச் சிறந்தது பிறிதில்லை; அத்தன்மைத்தாகியநாணுங் கற்புப்போலச் சீரியதன்றென உலகியல் கூறுவாள்போன்று, அவள் உடன்போக்குத் துணியக் கற்புநலங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.11. பொய்யொத்தவிடை போக்குத்துணிய
வையத் திடை வழக்கு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 12

குறப்பாவை நின்குழல் வேங்கையம்
போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
னத்தகும் பெற்றியரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
குறப்பாவை குறப்பாவாய்; தம்பிரான் புலியூர் மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் தம்பிரானது புலியூரை மறக்கக்கூடுவதொரு தீவினைவிளைவுவருமாயின்; சென்று சென்று பிறப்பான் அடுப்பினும் பல யோனிகளினும் சென்று சென்று பிறக்கக் கூடினும்; பின்னுந் துன்னத்தகும் பெற்றியர் பின்னுஞ்சென்று சேரத் தகுந் தன்மையை யுடையவர் நின் குழல் வேங்கைப் போதொடு கோங்கம் விராய்; நின் குழலின்க ணுண்டாகிய வேங்கைப்பூவொடு கோங்கம் பூவை விரவி நறப் பாடலம் புனைவார் நினைவார்; தேனையுடைய பாதிரிமலரைப் புனைவாராக நினையாநின்றார் எ-று.
புனைவாரென்னு முற்றுச்சொல் செயவெ னெச்சமாகத் திரித்துரைக்கப்பட்டது. புனைவாரா யுடன்போதலை நினையா நின்றா ரென்றுரைப்பினுமமையும். நினைவாரென்னு மெதிர்காலத்து முற்றுச்சொல் நிகழ்காலத்துக்கண் வந்தது. கோங்கம் விராய்ப் பாடலம் புனைவார் நினைவாரென்றதனான், நீரிலாற்றிடை நின்னொடு செல்லலுற்றா ரென்பது கூறினாளாம். புலியூரை யுணர்ந்தார்க்குப் பின்னை மறத்த லரிதென்னுங் கருத்தான், மறப்பானடுப்பதொர் தீவினை வந்திடினென்றாள். புலியூரை யொருகாலுணர்ந்த துணையானே பிறவி கெடுமன்றே; அவ்வாறன்றி யதனைமறந்த வாற்றானே பிறக்கக்கூடினு மென்னுங் கருத்தால், பிறப்பானடுப்பினு மென்றாள். அலர்நாணி உடன் போகாது ஈண் டிற்செறிக்கப்பட்டு அவரை யெதிர்ப்படா திருத்தல் அன்பன்றென் னுங் கருத்தால், பிறப்பானடுப்பினும் பின்னுந் துன்னத்தகும் பெற்றிய ரென்றாள். பெற்றியரென்பதனை வினைக்குறிப்பு முற்றாகவுரைப் பினுமமையும். உன்னத்தகும் பெற்றியரென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகன் உடன்போக்கு நேர்ந்தமை யுணர்த்துதல். 205

குறிப்புரை :

16.12 துணிந்தமைகூறல் துணிந்தமை கூறல் என்பது உலகியல் கூறுவாள்போன்று கற்புவழி நிறுத்தி, எம்பெருமான் நின்னை நீரில்லாத வெய்ய சுரத்தே உடன்கொண்டு போவானாக நினையாநின்றான்; இதற்கு நின்கருத் தென்னோவெனத் தோழி தலைமகளுக்குத் தலைமகனி னைவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.12. பொருளவே லண்ணல் போக்குத் துணிந்தமை
செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது

பண் :

பாடல் எண் : 13

நிழற்றலை தீநெறி நீரில்லை
கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
பாகும்நங் கொற்றவர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நிழல் தலை தீ நெறி நீர் இல்லை நிழலிடந்தீந்த வழி நீருடைத்தன்று; ஓரிகத்தும் கானகம் அழல் தலை வெம்பரற்று என்பர் இருமருங்குமுண்டாகிய ஓரி கூப்பிடுங்காடு அழனுதிபோலு நுதியையுடைய வெய்ய பரலையுடைத்தென்று சொல்லுவர்; தில்லை அம்பலத்தான் கழல் தலை வைத்துக் கைப் போதுகள் கூப்பக் கல்லாதவர் போல் தில்லையம்பலத்தின் கண்ணானது கழல்களைத் தந்தலைமேல்வைத்துக் கையாகிய போதுகளைக் கூப்பப்பயிலாத வரைப்போல இத்தன்மைத்தாகிய நெறிக்கண்; குழல் தலைச்சொல்லி குழலிடத்துச் சொற்போலுஞ் சொல்லையுடையாய்; நம் கொற்ற வர்க்குச் செல்லக் குறிப்பு ஆகும் என்னோ நம் கொற்றவர்க்குச் செல்லக் குறிப்புண்டாகின்ற இஃதென்னோ! எ-று.
நீரில்லை யென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய் நெறியென்னுமெழுவாய்க்குப் பயனிலையாயின. நெறிக்கணீரில்லை யெனவிரிப்பினு மமையும். நிழலிடந் தீயோ டொக்குநெறி; அந்நெறி நீருடைத்தன்று; கானகமெங்கு மோரி கூப்பிடும்; அக்கானகம் அழற்றலை வெம்பரலை யுமுடைத்து என்றுரைப்பினுமமையும். இப்பொருட்குக் கானகமோரிகத்து மென்பதற்கு நெறி நீரில்லை யென்றதற் குரைத்த துரைக்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 206

குறிப்புரை :

16.13 துணிவொடு வினாவல் துணிவொடு வினாவல் என்பது தலைமகனினைவு கேட்ட தலைமகள் அவனினைவின்படியே துணிந்து நின்று, இந் நீரில்லாத வெய்யசுரத்தே யிப்பொழுதிவர் நம்மையுடன் கொண்டு போகைக்குக் காரணமென்னோவெனத் தோழியை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
16.13. சிலம்பன் றுணிவொடு செல்சுரம் நினைந்து
கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.

பண் :

பாடல் எண் : 14

காயமும் ஆவியும் நீங்கள்சிற்
றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவர
லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங்
கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம்
போக்குத் துணிவித்தவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நீங்கள் காயமும் ஆவியும் நீங்கள் உடம்பு முயிரும்போல ஒருவரையொருவரின்றி யமையாத வன்பை யுடையீர்; சிற்றம்பலவன் கயிலைச் சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் இத்தன்மைத்தாகிய நுங்காதலை நினையாது சிற்றம் பலத்தான் கயிலையிற் சீயத்தையும் அல்லாத கொடுவிலங்கையுமஞ்சி யானவனை வரற்பாலையல்லையென்று கூறுவேன்; செறி திரை நீர்த் தேயமும் யாவும் பெறினும் நமர் கொடார் அவ்வாறு வருதலை யொழிந்து வரைவுவேண்டின், நெருங்கிய திரைகளை யுடைய கடலாற்சூழப்பட்ட இந்நிலத்தையும் பொன்முதலாகிய வெல்லா வற்றையும் பெறினும் நமர் நின்னைக்கொடார்கள், அதனால் தோயமும் நாடும் இல்லாச் சுரம் போக்குத் துணிவித்த செப்பில் இன்ன நீரு மக்கள் வாழுமிடமுமில்லாத சுரங்களைப் போதலைத் துணிவித்தன சொல்லுமிடத்து இத்தன்மையனவன்றோ? எ-று.
நீங்கள் காயமு மாவியும் போல வின்றியமையாமையின் அவற்கு வருமேத நினதென்றஞ்சி அவன் வரவு விலக்குவே னென்றாளாக வுரைப்பினுமமையும். துணிவித்ததென்பது பாடமாயின், துணிவித்ததனைச் செப்பினின்னவெனக் கூட்டியுரைக்க. அறிய - இன்ன காரணத் தானென்றறிய. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்கு மாட்சிமைப் படுத்தல். 207

குறிப்புரை :

16.14 போக்கறிவித்தல் போக்கறிவித்தல் என்பது இப்பொழு தவர் போகைக்குக் காரணமென்னோவென்று கேட்ட தலைமகளுக்கு நீங்கள் உடம்பு முயிரும்போல ஒருவரையொருவரின்றியமையீராயினீர்; இத் தன்மைத்தாகிய நுங்காதலையறிந்து வைத்தும் அவற்குவரு மேதம் நினதென்றஞ்சி யானவனை வரவுவிலக்குவேன்; அவனு மவ்வாறு வருதலையொழிந்து வரைவொடுவரிற் பொன் முதலாகிய வெல்லாவற்றையு நினக்கு முலைப்பரிசம் பெறினும் நமர் நின்னைக் கொடார்; சொல்லுமிடத்து இதுவன்றோ நீரருஞ்சுரம் போகைக்குக் காரணமென்று தோழி தலைமகனது போக்கறிவியாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.14. பொருசுடர்வேலவன் போக்குத்துணிந்தமை
அரிவைக்கவள் அறியவுரைத்தது.

பண் :

பாடல் எண் : 15

மற்பாய் விடையோன் மகிழ்புலி
யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
வாழி எழுமையுமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் வளத்தையுடைய பாயும் விடையையுடையவன் விரும்பும் புலியூரில்; என்னொடும் வளர்ந்த பொற்பு ஆர் திருநாண் என்னோடுந் தோன்றி என்னோடொக்கவளர்ந்த பொலிவார்ந்த திருவையுடைய நாண்; பொருப்பர் விருப்புப் புகுந்து நுந்த பொருப்பர்மேல் யான் வைத்த விருப்பம் இடையேபுகுந்து தள்ள நின்றநிலை குலைந்து; கற்பு ஆர் கடுங் கால் கலக்கிப் பறித்து எறிய கற்பாகிய நிறைந்த கடிய காற்றலைத்துப் பிடுங்கி என்வயிற் கிடவாமைப் புறத் தெறிய; கழிக என்னைக் கழிவதாக; ஏழையர் எழுமையும் இற்பால் பிறவற்க இனி மகளிர் எழுபிறப்பின் கண்ணுங் குடியிற்பிறவா தொழிக எ-று.
நாண் கழிகவென வியையும். வாழி: அசைநிலை. கற்பாங் கடுங்காலென்பதூஉம் பாடம். முற்சிறந்தமையின் முன்னெண்ணச் சிறந்தமையின். மல்லல் மல்லெனக் கடைக்குறைந்து நின்றது. மெய்ப்பாடு: அது. பயன்: உடன்போக்கு வலித்தல். 208

குறிப்புரை :

16.15 நாணிழந்துவருந்தல் நாணிழந்து வருந்தல் என்பது உடன்கொண்டு போகைக் குக் காரணங்கேட்ட தலைமகள், ஒருநாளுமென்னை விட்டு நீங்காது என்னுடனே வளர்ந்த பொலிவுடைத்தாகிய நாண் கற்பினெதிர் நிற்கமாட்டாது தன்னைவிட்டு நீங்காத என்னைக் கழிவதாக; மகளிர் எழுபிறப்பின்கண்ணுங் குடியிற் பிறவாதொழி கவெனத் தானதற்குப் பிரிவாற்றாமையான் வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.15. கற்பு நாணினு முற்சிறந் தமையிற்
சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது.

பண் :

பாடல் எண் : 16

கம்பஞ் சிவந்த சலந்தரன்
ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
கும்மலர்ச் சீறடிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நம்பா நம்பா; அம்பு அஞ்சி ஆவம்புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் அம்புக ளஞ்சித் தூணியிற்புக் கொளிப்ப மிக நீண்டு செவ்வரி சிதறிய கண்களையுடையாளுடைய; செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர்ச் சீறடிக்கு செம்பஞ்சியின் மிதிப்பினு நடுங்கும் மலர்போலுஞ் சிறியவடிக்கு; கல் சுரம் நல் தளிர் ஆகும் நீசெல்லுங் கல்லையுடைய சுரம் நல்லதளிராம்போலும் இவளது துணிவிருந்தவாற்றான் எ-று.
கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த அச்சத்தால் வரு நடுக்கத்தை வெகுண்ட சலந்தரன தாகத்தை முனிந்த; தில்லை நம்பன் சிவநகர் நல் தளிர் தில்லையினம் பனது சிவநகரின் நற்றளிரெனக் கூட்டுக.
சிவநகரென்பது ஒரு திருப்பதி. செம்பஞ்சியின் மிதிக்கிற் பதைக்கும் மலர்ச்சீறடியென்பன ஒருசொன்னீர்மைப்பட்டு நின்றன; இதனை யதிகாரப் புறனடையாற் கொள்க. அரிசிந்து கண்ணாளது என்னுமாறனுருபு தொகச்சொல்லாத விடத்துத் தொக்கு நின்றதெனினு மமையும். அரிசிந்து கண்ணாள் மலர்ச்சீறடியென்று கூட்டுவாரு முளர்.தொல்வரை - பெரியவரை. மெய்ப்பாடு: அது. பயன்: உடன்போக்கு வற்புறுத்தல். 209

குறிப்புரை :

16.16 துணிவெடுத்துரைத்தல் துணிவெடுத்துரைத்தல் என்பது தலைமகளைக் கற்புவழி நிறுத்திச் சென்று, நின்னோடு போதுமிடத்து நீ செல்லுங் கற்சுரம் அவளது சிற்றடிக்கு நற்றளிராம்போலுமெனத் தோழி தலை மகனுக்கு அவடுணிவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.16. செல்வ மாதர் செல்லத் துணிந்தமை
தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது.

பண் :

பாடல் எண் : 17

முன்னோன் மணிகண்ட மொத்தவன்
அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
யாம்விழை பொங்கிருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எனது உயிரே அன்னாள் அரும் பெறல் ஆவி அன்னாய் எனதுயிரை யொப்பாளது அரிய பெறுதலையுடைய ஆவியை யொப்பாய்; அருள் ஆசையினால் நினதருண்மேலுள்ள வாசையால்; பொன் ஆர் மணி மகிழ்ப் பூ விழ யாம் விழை பொங்கு இருள் பொன்போலும் நிறைந்த நல்ல மகிழின்பூவிழ அவை விழுகின்ற வோசையை நீ செய்யுங்குறியாக வோர்ந்து யாம் விரும்பும் மிக்கவிருள்; முன்னோன் மணிகண்டம் ஒத்து இக்காலத்துக் கருமையால் எல்லார்க்கு முன்னாயவன தழகிய மிடற்றையொத்து; அவன் அம்பலம் தம்முடி தாழ்த்து உன்னாதவர் வினைபோல் பரந்து ஓங்கும் அவன தம்பலத்தைத் தம்முடிகளைத் தாழ்த்து நினையாத வரது தீவினை போலக் கருமையோடு பரந்து மிகும் எ-று.
ஆவியன்னாய தருளென்றுரைப்பாருமுளர். மணிமகிழ் பூவிழவென்பது பாடமாயிற் பூவிழமென்னுஞ் சொற்கள் ஒருசொன்னீர்மைப்பட்டு மணிமகிழென்னு மெழுவாயை யமைத்தன வாக வுரைக்க. இனித்தாழாதிவ் விருட்காலத்துப் போகவேண்டு மென்றும் இரவுக்குறிக்கண் வரும் அரையிருட்கண் வந்து அக்குறி யிடத்து நில்லென்றுங் கூறினாளாம். துன்னியகுறி - நீ முன்பு வந்தி வளை யெதிர்ப்பட்ட குறியிடம். மெய்ப்பாடு: அது. பயன்: குறியிட முணர்த்துதல். 210

குறிப்புரை :

16.17 குறியிடங் கூறல் குறியிடங் கூறல் என்பது துணிவெடுத்துரைத்த தோழி, தாழாது இவ்விருட்காலத்துக் கொண்டுபோவாயாக; யானவளைக் கொண்டு வாராநின்றேன்; நீ முன்புவந்தெதிர்ப்பட்ட அக்குறியிடத்து வந்து நில்லெனத் தலைமகனுக்குக் குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.17. மன்னிய இருளில் துன்னிய குறியிற்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது.

பண் :

பாடல் எண் : 18

பனிச்சந் திரனொடு பாய்புனல்
சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி
யாவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
லாம்புகுந் தெய்துவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பனிச் சந்திரனொடு பாய் புனல் சூடும் குளிர்ச்சியையுடைய மதியோடு பரந்த புனலையுடைய கங்கையைச் சூடும்; பரன் புலியூர் அனிச்சம் திகழும் அம் சீறடி பரனது புலியூரில் அனிச்சப்பூப்போலு மழகிய சிறிய வடிகள்; ஆவ அன்னோ; அழல் பழுத்த கனிச் செந்திரள் அன்ன தீப்பழுத்த பழத்தினது சிவந்த திரள்போலும்; கல் கடம் போந்து கடக்கும் என்றால் கற்றிரளை யுடையகாட்டை இங்குநின்றும் போந்து கடக்குமாயின்; சந்த மேகலையாட்கு இனிப் புகுந்து எய்துவது என்கொல் நிறத்தை யுடைய மேகலையையுடையாட்கு இனி யென் காரணமாக வந்தெய்துந் துன்பம் வேறென்! எ-று.
ஆவ : இரங்கற்குறிப்பு. மெய்ப்பாடு: அழுகை. பயன்: நெஞ்சோடுசாவுதல். 211

குறிப்புரை :

16.18 அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல் அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல் என்பது தோழி குறியிடை நிறுத்திப் போகாநிற்ப, தலைமகன் அவ்விடத்தே நின்று, அனிச்சப்பூப் போலும் அழகிய வடிகள் அழற்கடம் போது மென்றால் இதற்கென்ன துன்பம் வந்தெய்துங்கொல்லோ வெனத் தலைமகளடியொடு தான் செல்லாநின்ற வழி நினைந்து, தன்னுள்ளம் வாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.18. நெறியுறு குழலியோடு நீங்கத் துணிந்த
உறுசுடர் வேலோ னுள்ளம் வாடியது.

பண் :

பாடல் எண் : 19

வைவந்த வேலவர் சூழ்வரத்
தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந்
துயிலுமிம் மூதெயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செழு மிடற்றின் மை வந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வளவிய மிடற்றின்கட் கருமை யுண்டாகிய கோனது தில்லையை வாழ்த்தாதாருடைய மனம்போல; முழுதும் இருள் தூங்கும் உலகமுழுதும் இருள்செறியாநின்றது; வழுத்துநர் போல் அத்தில்லையை வாழ்த்துவாருடைய மனம்போல; மொய் வந்த வாவி தெளியும் பெருமையுண்டாகிய பொய்கைகள் கலக்க மற்றுத் தெளியா நின்றன; இம் மூதெயில் துயிலும் இம்முதியவூர் துயிலாநின்றது, அதனால் வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல் கூர்மையுண்டாகிய வேலையுடைய விளையர் சூழத் தேரின் கண் வரும் வள்ளலே; உள்ளம் தெய்வம் தரும் நின துள்ளத்துக் கருதியதனைத் தெய்வம் இப்பொழுதே நினக்குத் தரும்; என்றோழியையுங் கொணர்ந்தேன்; காண்பாயாக எ-று.
வள்ளலென்பது ஈண்டு முன்னிலைக்கண் வந்ததெனக் கொண்டு, வள்ளலதுள்ளமென்று விரித்துரைப்பினுமமையும். சூழ்வரத் தேர்வரு மென்று பாடமோதி ஊர்காக்குமிளையர் ஊரைச் சூழ்வரும் வரவுமினி யொழியுமென்றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளைத் தலைமகனுடன்படுத்தல். 212

குறிப்புரை :

16.19 கொண்டுசென்றுய்த்தல் கொண்டுசென்றுய்த்தல் என்பது தலைமகன் குறியிடை நின்று, அடியொடு வழிநினைந்து, தன்னுள்ளம் வாடாநிற்ப, அந்நிலைமைக்கண், நின்னுள்ளத்துக் கருதியதனை இப்பொழுது நினக்குத் தெய்வந் தாராநின்றது; என்றோழியையுங் கொண்டு வந்தேன்; நீ யிவளைக் கைக்கொள்ளெனத் தோழி தலைமகளைக் கொண்டு சென்று, அவனொடு கூட்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.19. வண்டமர் குழலியைக்
கண்டுகொள் கென்றது.

பண் :

பாடல் எண் : 20

பறந்திருந் தும்பர் பதைப்பப்
படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன்
னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
வற்றுமிச் சேணிலத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பா சிலம்பா; இருந்து உம்பர் பதைப்பப் பறந்து படரும் புரம் கரப்ப இருந்து உம்பரிடை விடாது நடுங்கப் பறந்து செல்லும் புரங்கள் கெட; சிறந்து எரிஆடி தென் தில்லை அன்னாள் திறத்து பொலிந்து எரியான் விளையாடுமவனது தெற்கின்கணுண்டாகிய தில்லையை யொப்பாளிடத்து; அறம் திருந்து உன் அருளும் பிறிது ஆயின் அறந் திருந்துதற்குக் காரணமாகிய உனதருளும் வேறுபடுமாயின்; இச்சேண் நிலத்து இவ்வகன்ற நிலத்து; அருமறையின் திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் - அரிய மறைகளின் முறைமை பிறழக் கடலு மெஞ்சாது வற்றும் எ-று.
அறந்திரிந்தென்பது பாடமாயின், அறந்திரிந்தரு மறையின்றி றந்திரிந்தென மாற்றியுரைக்க. அறந்திரிந்தாற்போல நின்னருளும் பிறிதாயினென வொருசொல் வருவித்துரைப்பினு மமையும். அருமறையு மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஓம்படுத்தல். 213

குறிப்புரை :

16.20 ஓம்படுத்துரைத்தல் ஓம்படுத்துரைத்தல் என்பது கொண்டுசென்றுய்த்து இரு வரையும் வலஞ்செய்து நின்று, மறை நிலைதிரியினும் கடன் முழுதும் வற்றினும், இவளிடத்து நின்னரு டிரியாமற் பாதுகாப்பா யெனத் தோழி தலைமகளைத் தலைமகனுக் கோம்படுத் துரையா நிற்றல். அதற்குச் செய்யுள்
16.20. தேம்படு கோதையை
யோம்ப டுத்தது.

பண் :

பாடல் எண் : 21

ஈண்டொல்லை ஆயமும் ஔவையும்
நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எம்மைப் பிடித்து ஆண்டு எம்மை வலிந்து பிடித்தாண்டு; இன்று எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு இன்று எல்லையைநீங்கிய வின்பத்தைத் தந்தவனது சிற்றம்பலம் நிலைபெற்ற; சேண்தில்லை மா நகர்வாய் சேய்த்தாகிய தில்லை யாகிய பெரிய நகரிடத்து; திருத்தகச்சென்று சேர்க நீர் பொலிவு தகச்சென்று சேர்வீராமின்; ஆயமும் ஔவையும் ஈண்டு நீங்க ஆயமுமன்னையும் பின்வாராது இவ்விடத்தே நீங்க; இவ்வூர்க் கௌவை ஒல்லை தீர்த்து இவ்வூரின்க ணுண்டாகிய அலரை யொருவாற்றான் விரையநீக்கி; ஆண்டு நும்மை ஒல்லை கண்டிடக் கூடுக யானாண்டுவந்து நும்மை விரையக் காணக் கூடுவதாக எ-று.
சேண்டில்லை யென்பதற்கு மதின்முதலாயின வற்றான் னுயர்ந்த தில்லையெனினுமமையும். ஒல்லைக் கண்டிடவென விகார வகையான் வல்லெழுத்துப் பெறாது நின்றது. மெய்ப்பாடு: அழுகை. பயன்: அச்சந் தவிர்த்தல். 214

குறிப்புரை :

16.21 வழிப்படுத்துரைத்தல் வழிப்படுத்துரைத்தல் என்பது ஓம்படுத்துரைத்த தோழி, ஆயமுமன்னையும் பின்வாராமல் இவ்விடத்தே நிறுத்தி இவ்வூரிடத்தி லுள்ள அலரையு மொருவாற்றானீக்கி யானும்வந்து நுங்களைக் காண்பேனாக; நீயிருந் திருவொடுசென்று நும்பதியிடைச் சேர்வீராமி னென இருவரையும் வழிப்படுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.21. மதிநுதலியை வழிப்படுத்துப்
பதிவயிற்பெயரும் பாங்கிபகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 22

பேணத் திருத்திய சீறடி
மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும்முன்
னாமன்னு கானங்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பேரரவம் பூண பெரிய வரவங்களைப் பூணும்வண்ணம்; திருத்திய பொங்கு ஒளியோன் புலியூர் புரையும் அவற்றின் றீத்தொழிலை நீக்கிய பெருகுமொளியையுடையவனது புலியூரையொக்கும்; மாணத் திருத்திய வான்பதி இருமருங்கும் சேரும்மாட்சிமைப்படக் குற்றங்கடிந்து செய்யப்பட்ட பெரியவூர்கள் நாஞ்செல்லு நெறியி னிருபக்கமு மொன்றோடொன்று சேர்ந் திருக்கும்; முன்னா மன்னு கானங்கள் காணத்திருத்திய போலும்- முன்னுளவாகிய காடுகள் நாஞ்சென்று காணும்வண்ணந் திருந்தச் செய்யப்பட்டனபோலும், அதனால், பேணத் திருத்திய சீறடி- யான் விரும்பும் வண்ணங் கைபுனையப் பட்ட சிறிய வடியை யுடையாய்; மெல்லச் செல் பையச்செல்வாயாக எ-று.
பேணத்திருத்திய சீறடி யென்பது சினையாகிய தன்பொருட் கேற்ற வடையடுத்து நின்றது. அரவந் திருத்தியவென வியையும். வான்பதி சேருமென்பதற்குப் பதி நெறியைச் சேர்ந்திருக்கு மென்றுரைப்பினு மமையும். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளை அயர்வகற்றுதல். 215

குறிப்புரை :

16.22 மெல்லக்கொண்டேகல் மெல்லக்கொண்டேகல் என்பது தோழியை விட்டு உடன்கொண்டு போகாநின்ற தலைமகன் நின்னொடு சேறலான் இன்று இக்காடு திருந்தச் செய்யப்பட்டாற்போலக் குளிர்ச்சியை யுடைத்தா யிருந்தது; இனி நின் சீறடி வருந்தாமற் பையச் செல்வாயாக வெனத் தன்னாய வெள்ளத்தோடும் விளையாடு மாறு போலத் தலைமகளை மெல்லக்கொண்டு செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.22.பஞ்சிமெல்லடிப் பணைத்தோளியை
வெஞ்சுரத்திடை மெலிவகற்றியது.

பண் :

பாடல் எண் : 23

கொடித்தேர் மறவர் குழாம்வெங்
கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
விண்தோய் கனவரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: நின் ஐயர் என்னின் நின்னையன்மாராயின்; மன்னும் அம்பலத்தோன் அடித்தேரலர் என்ன அஞ்சுவன் நிலை பெறு மம்பலத்தின் கண்ணானுடைய அடிகளை யாராய்ந் துணரா தாரைப்போல அஞ்சுவேன், அல்லது, கொடித் தேர் கொடியை யுடைய தேரும்; மறவர் குழாம் வீரரது திரளும்; வெம் கரி நிரை வெய்யகரிநிரையும்; கூடின் அனைத்துந் திரண்டுவரினும்; என்கைவடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா என்கையில் வடிக்கப்பட் டழகுவிளங்காநின்ற எஃகினது வாய்க்கு இரையுதவ மாட்டா; மன்னும் கடித்தேர் குழல் மங்கை நிலைபெற்ற நறுநாற்றத் தை வண்டுகளாராய்ந்துவருங் குழலையுடைய மங்காய்; விண்தோய் இக் கனவரைக் கண்டிடு விண்ணினைத் தோயாநின்ற இப்பெரிய வரையிடத் தியான்செய்வதனைக் காண்பாயாக எ-று.
கூடினென்பதற்கு என்னைக் கிட்டினென்றுரைப்பினுமமையும். அடித்தேர்பவரென்பது பாடமாயின், என்ன வென்பதனை உவமவுரு பாக்காது இவரை யடித் தேர்பவரென்று பிறர் கருத வென்றுரைக்க. கண்டிடிரென்பதூஉம் பாடம். மன்னுங்கடி யென்பதற்கு வண்டென வொருசொல் வருவித்துரைக்க. வரிசிலையவர் வருகுவரென - வரிசிலையவர் வாராநின்றார் இவர் யாவரென. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தன்வலியுணர்த்தி யாற்றுவித்தல். இடைச்சுரத்து அவடமரெதிர்படை தொடர்ந்து நிற்ப வழிவருவார் விலக்கி வரைவித்துக்கொடுப்ப. என்னை
``இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக்
கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ ரெய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட
வப்பாற்பட்ட வொருதிறத் தானும்
(தொல். அகத்திணையியல் -41)
என்றார் தொல்காப்பியனார். 216

குறிப்புரை :

16.23 அடலெடுத்துரைத்தல் அடலெடுத்துரைத்தல் என்பது மெல்லக்கொண்டு செல்லா நின்றவன், சேய்த்தாகச் சிலரை வரக்கண்டு தலைமகளஞ்சாநிற்ப, நின்னையன்மாராயின் அஞ்சுவேன்; அல்லது நால்வகைத்தானை யுந் திரண்டுவரினும் என்கையில் வடித்திலங்காநின்ற எஃகின் வாய்க் கிரை போதாது; இதனை யிவ்விடத்தே காண்பாயாக வென்று, அவள தச்சந் தீரத் தன் னடலெடுத் துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.23. வரிசிலையவர் வருகுவரெனப்
புரிதருகுழலிக் கருளவனுரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

முன்னோ னருள்முன்னும் உன்னா
வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
மாடுசிற் றம்பலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முன்னோன் அருள் முன்னும் முன்னா எல்லார்க்கும் முன்னாயவனதருளை முற்பிறப்பின்கண்ணு நினையாத; வினையின் முனகர் துன்னும் இன்னாக் கடறு இது இப் போழ்தே கடந்து தீவினையையுடைய நீசர் சேருந் துன்பத்தைச் செய்யும் பாலைநில மிதனை யிப்பொழுதே கடந்து; பொன் ஆர் அணி மணி மாளிகைத் தென் புலியூர் பொன்னிறைந்த வழகையுடைய மணியால் விளங்கும் மாளிகையையுடைய தென்புலியூர்க்கண்; புகழ்வார் தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலம் புகழ்ந் துரைப்பார் தென்னனே யென்று புகழ என்னையுடையான் நின்று கூத்தாடுஞ் சிற்றம்பலத்தை; இன்று சென்று காண்டும் இன்று சென்று காண்பேம்; இதுவன்றோ நமக்கு வருகின்ற வின்பம்! எ-று.
தென்புலியூர்ச் சிற்றம்பலமென வியையும். உடையா ரென்பது பாடமாயின், தென்னனேயென்று புகழவொரு சிறப்புடை யாரென்றுரைப்பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளையயர்வகற்றுதல். அலங்காரம்: கூற்றிடத்திரு பொருட் கண் வந்த வுயர்ச்சி வேற்றுமை. 217

குறிப்புரை :

16.24 அயர்வகற்றல் அயர்வகற்றல் என்பது அடலெடுத்துரைத்து அச்சந் தீர்த்துக்கொண்டு போகாநின்றவன், இத்துன்பக்கடறு கடந்து சென்று இப்பொழுதே நாமின்பப்பதி காணப் புகாநின்றேம்; இனி நமக்கொரு குறைவில்லை யெனத் தலைமகளது வழிவருத்தந் தீரக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.24. இன்னல்வெங்கடத் தெறிவேலவன்
அன்னமன்னவள் அயர்வகற்றியது.

பண் :

பாடல் எண் : 25

விடலையுற் றாரில்லை வெம்முனை
வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
இன்றிக் கடுஞ்சுரமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விடலை விடலாய்; உற்றார் இல்லை இனிச் செல்லு நெறிக்கண் நன்மக்களில்லை; வெம்முனை வேடர் உள்ளார் வெய்ய முனையிடத்து வேடரே; தமியை நீ தனியை; மென் பூ மடலை உற்று ஆர் குழல் வாடினள் மெல்லிய பூவினிதழைப் பொருந்தி நிறைந்த குழலையுடையாள் வழிவந்த வருத்தத்தால் வாடினாள்; மன்னு சிற்றம்பலவர்க்கு அடலை உற்றாரின் நிலைபெற்ற சிற்றம்பலத்தையுடையவர்க் காட்படுந்தன்மையைப் பொருந்தினவர்க ளல்லாரைப்போல; எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கிக் கடலை உற்றான் விளக்கமொழிந்து அவ்விடத்து அருக்கன்றன் கதிர்களைச் சுருக்கிக் கடலைச் சென்றுற்றான்; இக் கடுஞ்சுரம் இன்று கடப்பார் இல்லை இக்கடிய சுரத்தை யிப்பொழுது கடப்பாருமில்லை; அதனாலீண்டுத் தங்குவாயாக எ-று.
வேடரொடு சாராத நன்மக்கள் இவர்க்கணியராதலின், அவரை உற்றா ரென்றார். வேடரி லுற்றாரில்லையென்று நன்றி செய்யாரென்பது பயப்பவுரைப்பினு மமையும். மடலென்றது தாழம்பூ மடலையென்பாருமுளர். சிற்றம்பலவர்க்கென்னு நான்கனுருபு பகைப்பொருட்கண் வந்தது. அருக்கன் பெருக்கி யென்றும் பெருகி யென்றும் பாடமாயின், கெடுதலை மங்கலமரபிற் கூறிற்றென்க. 218

குறிப்புரை :

16.25 நெறிவிலக்கிக்கூறல் நெறிவிலக்கிக் கூறல் என்பது அயர்வகற்றிக்கொண்டு செல்லாநின்ற தலைமகனை, இனிச்செல்லு நெறிக்கண் நன்மக்க ளில்லை; நீ தனியை; இவள் வாடினாள்; பொழுதுஞ் சென்றது; ஈண்டுத்தங்கிப் போவாயாகவென, அவ்விடத்துள்ளோர் வழிவிலக்கிக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.25. சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு
சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.

பண் :

பாடல் எண் : 26

அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்
ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி
போன்றொளிர் நாடகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் சிறுபுறமும் அசைநடையுங்காண்டற்கு அன்பானணைத்து அழகிய சொல்லையுடையாளது பின்னே ஆடவனொருகாற் செல்லாநின்றான்; அவன்றன்பின் பணைத்தோளி நீடுவரும் முன்செல்லநாணிப் புறக்கொடையும் வலிச்செலவுங் காண அவனது பின்னே வேய்போலுந் தோள்களையுடையாள் நெடும் பொழுது செல்லாநின்றாள்; இப்பெருஞ் சுரம் செல்வது அன்று இருந்த வாற்றான் இவரதுசெயல் இப்பெரிய சுரத்தைச் செல்கை யன்று; பொன்பணைத்தன்ன இறை உறைதில்லை பொன்னொரு வடிவு கொண்டு பெருத்தாற்போலு மிறை யுறைகின்ற தில்லை வரப்பின்; நண்பணைப் பொலி மலர்மேல் தண் நறவு உண் அளி போன்று நல்லபணையிற் பொலிந்த மலரிடத்துக் குளிர்ந்த நறவை யுண்ட வண்டுகளையொத்து; ஒளிர் நாடகம் இன்பக்களியான் மயங்கி விளங்குவதொரு நாடகம் எ-று.
பெருஞ்சுரஞ் செல்வதன்றென்பதற்குப் பெருஞ்சுரந் தொலை வதன்றெனினுமமையும். பொன்பணைத்தாற்போலுமிறை யென்பாரு முளர். கண்டார்க்கின்பஞ் செய்தலின், நாடக மென்றார். இவையிரண் டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: நெறிவிலக்குதல். 219

குறிப்புரை :

16.26 கண்டவர் மகிழ்தல் கண்டவர் மகிழ்தல் என்பது நெறிவிலக்குற்று வழிவருத்தந் தீர்ந்து ஒருவரையொருவர் காணலுற்று இன்புற்றுச் செல்லாநின்ற இருவரையுங்கண்டு, இவர்கள் செயலிருந்தவாற்றான் இப்பெருஞ் சுரஞ் செல்வதன்றுபோலும்; அதுகிடக்க இதுதானின் புறவுடைத்தாகிய தோர் நாடகச் சுவையுடைத்தா யிருந்ததென எதிர்வருவார் இன்புற்று மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.26. மண்டழற் கடத்துக்
கண்டவ ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 27

கண்கடம் மாற்பயன் கொண்டனங்
கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
பருக வருகஇன்னே
விண்கட நாயகன் தில்லையின்
மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
கானகந் தண்ணெனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கண்டு நெறிசெல் வருத்தத்தி னெகிழ்ந்த மேனியை யாகிய நின்னைக்கண்டு; கண்கள் தம்மால் பயன் கொண்டனம் கண்களாற் கொள்ளும் பயன் கொண்டனம்; காரிகை காரிகை நீர்மையாய்; இனி நின் பண் கட மென்மொழி ஆரப் பருக இன்னே வருக இனிச் சிறிதிருந்து நினது பண்ணினது முறைமையை யுடைய மெல்லிய மொழியைச் செவிநிறையப் பருகுவான் இவ் விடத்து வருவாயாக; விண்கள் தம் நாயகன் விண்ணுலகங்க டம்முடைய தலைவன்; தில்லையில் மெல்லியல் பங்கன் தில்லைக்கணுளனாகிய மெல்லியல் கூற்றையுடையான்; எம் கோன் எம்முடைய விறைவன்; தண் கடம்பைத் தடம்போல் கடுங்கானகம் தண்ணென அவனது குளிர்ந்த கடம்பையிற் பொய்கைபோலக் கடியகானகங் குளிருமளவும் எ-று.
தண்ணென வின்னே வருகவென வியையும். கடம்பை யென்பது ஒரு திருப்பதி. கடம்பைத் தடம்போற் கடுங் கானகங் குளிரும் வண்ணம் நின்மொழியைப் பருகவென்று கூட்டினுமமையும். மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். 220

குறிப்புரை :

16.27 வழிவிளையாடல் வழிவிளையாடல் என்பது கண்டவர் மகிழக் கொண்டு செல்லாநின்றவன், நெறிசெல்வருத்தத்தி னெகிழ்ந்த மேனியை யுடைய நின்னைக் கண்டு கண்கடம்மாற் கொள்ளும் பயன் கொண்டனம்; இனிச் சிறிதிருந்து இக்கடுங்கானகந் தண்ணெனு மளவுஞ் செவி நிறைய நின்மொழி பருக வருவாயாகவெனத் தலைமகளுடன் விளையாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.27. வன்றழற் கடத்து வடிவே லண்ணல்
மின்றங் கிடையொடு விளையா டியது.

பண் :

பாடல் எண் : 28

மின்றங் கிடையொடு நீவியன்
தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
சூழ்தரு சேண்நகரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின் தங்கு இடையொடு மின்போலு மிடையையுடையாளோடு; நீ வியன் தில்லைச் சிற்றம்பலவர் குன்றம் கடந்து சென்றால் நீயகன்ற தில்லையிற் சிற்றம்பலத்தையுடையவரது குன்றத்தைக்கடந்து அப்பாற் சிறிதுநெறியைச் சென்றால்; குரூஉக்கமலம் துன்று அம் கிடங்கும் நிறத்தையுடைய தாமரைப் பூ நெருங்கிய அழகிய கிடங்கும்; வள்ளை வெள்ளை நகையார் துறைதுறை சென்று அங்கு அடைதடமும் வள்ளைப் பாடலைப் பாடும் வெள்ளை முறுவலையுடைய மகளிர் துறைதொறுந் துறை தொறுந் சென்று அவ்விடத்துச்சேரும் பொய்கைகளும்; புடைசூழ்தரு சேண்நகர் பக்கத்துச்சூழ்ந்த அத்தில்லை யாகிய வுயர்ந்தநகர்; நின்று தோன்றும் இடையறாது தோன்றும்; அத்துணையுங் கடிது செல்வாயாக எ-று.
குழலியொடு கண்டவர் குழலியொடு தலைமகனைக் கண்டவர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடமணித்தென்றல். 221

குறிப்புரை :

16.28 நகரணிமை கூறல் நகரணிமை கூறல் என்பது இருவருந் தம்மு ளின்புற்றுச் செல்லாநின்றமை கண்டு, இனிச் சிறிது நெறிசென்று அக்குன்றத் தைக் கடந்தால் நும்பதியாகிய நகர் விளங்கித் தோன்றாநிற்கும்; அத்துணையுங்கடிது செல்வீராமினென எதிர்வருவார் அவர் நகரணிமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

16.28. வண்டமர் குழலியொடு
கண்டவ ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 29

மின்போல் கொடிநெடு வானக்
கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
தோன்றுநன் னீணகரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நின்போல் நடை அன்னம் துன்னி நின்னடை போலு நடையையுடைய அன்னங்கடுன்னி; மன்போல்பிறை அணி மாளிகை சூலத்தவாய் மன்னனைப் போலப் பிறையையணிந்த மாளிகைகள் அவனைப்போலச் சூலத்தவுமாய்; முன் தோன்று நல் நீள் நகர் முன்றோன்றுகின்ற நல்ல பெரிய நகர்; மடவாய் மடவாய்; மின் போல் கொடி நெடு வானக் கடலுள் திரை விரிப்ப - ஒளியானும் நுடக்கத்தானும் மின்னையொக்குங் கொடிகள் பெரியவானமாகிய கடலுட் டிரையைப் பரப்ப; பொன் புரிசை வடவரை காட்டப் பொலி புலியூர் பொன்னானியன்ற புரிசை மேருவைக் காட்டப் பொலியும் புலியூர் காண்; தொழுவாயாக எ-று.
போலென்பது அசைநிலை. நிறத்தாற் பொன்போலும் புரிசை யென்பாருமுளர். சூலத்தவாயென்னுஞ் சினைவினையெச்சம் முன்றோன்றுமென்னும் முதல்வினையோடு முடிந்தது. துன்னியென இடத்து நிகழ்பொருளின் வினை இடத்தின்மேலேறி நின்றது. 222

குறிப்புரை :

16.29 நகர்காட்டல் நகர்காட்டல் என்பது நகரணிமை கூறக்கேட்டு இன்புறக் கொண்டு செல்லாநின்ற தலைமகன், அன்னந்துன்னிப் பிறையணிந்து சூலத்தையுடைத்தாகிய மாளிகைமேற் கொடி நுடங்க மதில்தோன்றா நின்ற அப்பெரிய நகர்காண் நம்முடைய நகராவதெனத் தலைமகளுக்குத் தன்னுடைய நகர் காட்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.29. கொடுங்கடங் கடந்த குழைமுக மாதர்க்குத்
தடங்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது.

பண் :

பாடல் எண் : 30

செய்குன் றுவைஇவை சீர்மலர்
வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
வற்கிடம் ஏந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உவை செய் குன்று உவை செய்குன்றுகள்; இவை சீர் மலர் வாவி இவை நல்லமலரையுடைய வாவிகள்; அவை விசும்பு இயங்கி நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை விசும்பின்கணியங்குதலான் வருந்துந் திங்கள் அயர் வுயிர்க்கும் பொழில்கள்; உந்திடம் ஞாங்கர் எங்கும் பொய்குன்ற வேதியர் ஓதிடம் உவ்விடம் மிசையெங்கு முலகத்திற் பொய் முதலாகிய குற்றங்கெட மறையவர் மறைசொல்லுமிடம்; ஏந்திழை ஏந்திழாய்; இந்திடமும் எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம் இவ்விடமும் எய்தற்குக் கருவியாகிய குன்றமாகிய நீண்டவில்லை யுடைய அம்பலவற் கிருப்பிடம்; இத்தன்மைத்திவ்வூர் எ-று.
இவையென்பது தன் முன்னுள்ளவற்றை. உவை யென்பது முன்னின்றவற்றிற் சிறிது சேயவற்றை. அவையென்பது அவற்றினுஞ் சேயவற்றை. முன் சொல்லப்பட்டவையே யன்றி இதனையுங் கூறுகின்றேனென்பது கருத்தாகலின், இந்திடமுமென்னுமும்மை இறந்தது தழீஇயவெச்ச வும்மை. உந்திடம் இந்திடமெனச் சுட்டீறு திரிந்து நின்றன. பண்ணிவர் மொழி பண்போலுமொழி. இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடங் காட்டுதல். 223

குறிப்புரை :

16.30 பதிபரிசுரைத்தல் பதிபரிசுரைத்தல் என்பது நகர் காட்டிக்கொண்டு சென்று அந்நகரிடைப்புக்கு அவ்விடத்துள்ள குன்றுகள், வாவிகள், பொழில்கள், மாளிகைகள், தெய்வப்பதி இவையெல்லாந் தனித்தனி காட்டி, இதுகாண் நம்பதியாவதெனத் தலைமகளுக்குத் தலைமகன் பதிபரிசு காட்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.30. கண்ணிவர் வளநகர் கண்டுசென் றடைந்து
பண்ணிவர் மொழிக்குப் பதிபரி சுரைத்தது.

பண் :

பாடல் எண் : 31

மயிலெனப் பேர்ந்திள வல்லியி
னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்
கொலாமின் றயர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மயில் எனப் பேர்ந்து மயில்போலப் புடை பெயர்ந்து; இள வல்லியின் ஒல்கி இளைய கொடிபோல நுடங்கி; மெல் மான் விழித்து மெல்லிய மான்போல விழித்து; குயில் எனப் பேசும் எம் குட்டன் எங்குற்றது குயில்போலச் சொல்லும் எமது பிள்ளை யாண்டையது; என் நெஞ்சகத்தே பயில் என என் னெஞ்சின் கண்ணே தனக்குப் பயிற்சியென்று பலர் சொல்லும் வண்ணம்; பேர்ந்து அறியாதவன் தில்லைப் பல்பூங்குழலாய் என் னெஞ்சினின்று நீங்கியறியாதவனது தில்லையிற் பலவாகிய பூக்களையுடைய குழலையுடையாய்; அயில் எனப்பேரும் கண்ணாய் வேல் போலப் பிறழுங் கண்ணையுடையாய்; இன்று அயர்கின்றது என்கொலாம் நீ யின்று வருந்துகின்றதென்னோ? எ-று.
எங்குற்றதென்பது ஒருசொல். என்னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறியாதவனென் பதற்கு என்னெஞ்சின்கண்ணே நீ பயில வேண்டுமென்றொரு கால் யான் கூறப் பின்னீங்கியறியாதவனென் றுரைப்பினுமமையும். கண்ணிக்கென்பது பாடமாயின், அவள் காரணமாகப் போலும் இவள் வருந்துகின்றதென்று உய்த்துணர்ந்து அவட்கு நீ வருந்துகின்ற தென்னென வினாவிற்றாக வுரைக்க. மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகட்குற்றுதுணர்தல். 224

குறிப்புரை :

16.31 செவிலிதேடல் செவிலிதேடல் என்பது இருவரையும் வழிப்படுத்தி வந்து பிரிவாற்றாதுகவலாநின்ற தோழியை, எம்பிள்ளை எங்குற்றது? நீ கவலாநின்றாய்; இதற்குக்காரண மென்னோ வென்று வினாவிச் செவிலி தலைமகளைத் தேடாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.31. கவலை யுற்ற காதற் றோழியைச்
செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது.

பண் :

பாடல் எண் : 32

ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
யாவருக் கும்மெளிதாந்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா
ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
லாயத்தெம் வாணுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆள் அரிக்கும் அரிதாய் ஆட்செய்தல் அரிக்கு மரிதாய்; தில்லை யாவர்க்கும் எளிதாம் தாளர் இக்குன்றில் அவ்வாட் செய்தல் தில்லைக்க ணெல்லார்க்கு மெளிதாந் தாளை யுடையவரது இம்மலையிடத்து; தழல் திகழ் வேல் கோள் அரிக்கு தழல் விளங்கும் வேலையுடைய கோள்வல்ல அரிமாவிற்கு; நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர்த் தார் மறுதலை போல்வாரொருவரது நிறத்தையுடைய மலரானியன்றதாரை; வாள் அரிக் கண்ணி எம் வாள் நுதல் வாள் போலுஞ் செவ்வரி பரந்த கண்ணையுடையளாகிய எம்முடைய வாணுதல்; வண்டல் ஆயத்துத் தன்பாவைக்கு மேவிக் கொண்டாள் வண்டலைச் செய்யு மாயத்தின் கண்ணே தன்பாவைக்கென்று அமர்ந்துகொண்டாள்; இத்துணையு மறிவேன் எ-று.
ஆளரி ஒருகால் நரசிங்கமாகிய மாலெனினுமமையும். கோளரிக்கு நிகரன்னாரென்பதற்குக் கோளரிக்கொப்பாகிய அத்தன்மையரெனினுமமையும். இக்குன்றின்கண் வண்டலாயத்து மேவிக் கொண்டாளெனவியையும். தாளரிக்குன்றினென்றதனான், இது தெய்வந்தரவந்ததென்றும், பாவைக்கென்றதனான் அறியாப் பருவமென்றும், கோளரிக்கு நிகரன்னாரென்றதனான் இவட்குத் தக்காரென்றும், மேவியென்றதனாற் பயிர்ப்பு நீங்கிற்றென்றும், தாரென்றதனான் மெய்யுற்றதனோடொக்கு மென்றுங் கூறினாளாம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்குணர்த்துதல்.225

குறிப்புரை :

16.32 அறத்தொடுநிற்றல் அறத்தொடு நிற்றல் என்பது தேடாநின்ற செவிலிக்கு, நீ போய் விளையாடச்சொல்ல யாங்கள் போய்த் தெய்வக் குன்றிடத்தே யெல்லாருமொருங்கு விளையாடாநின்றேமாக, அவ்விடத்தொரு பெரியோன் வழியே தார்சூடிப்போயினான்; அதனைக்கண்டு நின் மகள் இத்தாரையென்பாவைக்குத் தாரு மென்றாள்; அவனும் வேண்டியது மறாது கொடுப்பானாதலிற் பிறிதொன்று சிந்தியாது கொடுத்து நீங்கினான்; அன்றறியாப் பருவத்து நிகழ்ந்ததனை ``உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்- கொண்டார்க் குரியர் கொடுத்தார்`` என்பதனையின் றுட்கொண் டாள் போலும்; யானித்துணையு மறிவேனென்று உடன்போக்குத் தோன்றக் கூறி, தோழி அறத்தொடு நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.32. சுடர்க்குழைப் பாங்கி படைத்துமொழி கிளவியிற்
சிறப்புடைச் செவிலிக் கறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 33

வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
யாவன எம்மனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்: வடுத்தான் வகிர் மலர் கண்ணிக்குத் தக்கின்று அறமேயாயினும் வடுத்தான் வகிரப்பட்டாற்போலும் மலர்ந்த கண்ணையுடையாட்கு இம்முதுக்குறைவு தகாது; ஆயினும், எம் அனைக்கு இனி ஆவன எம்மனைக்கு இனி நம்மாற் செய்யத் தகுவன; எடுத்தாற்கு இனியனவே எடுத்தாற்கினியனவே; வேறில்லை எ-று.
தக்கன் முத்தீக் கெடுத்தான் தக்கனது முத்தீயைக் கெடுத்தவன்; கெடல் இல் தொல்லோன் ஒருஞான்றுங் கேடில்லாத பழையோன்; தில்லைப் பல் மலர் கேழ்கிளர அவனது தில்லைக்கட் பலவாகியமலர் நிறங்கிளர; மடுத்தான் குடைந்து அன்று அழுங்க மடுவைத் தான் குடைந்து அன்று கெடப்புக; அழுங்கித் தழீஇமகிழ்வுற்று எடுத்தாற்கு அதுகண்டிரங்கி யணைத்து இவ்வாறுதவி செய்யப்பெறுதலான் மகிழ்ந்தெடுத்தாற்கெனக் கூட்டுக.
தில்லைக்கணெடுத்தாற்கெனவியையும். வகிர்மலர் கண்ணி யென்புழிச் செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறினார். வகிரென்னு முவமவினை ஒற்றுமை நயத்தால் உவமிக்கப்படும் பொருண்மேலேறிநின்றது. தானென்பதனை அசைநிலையாக்கி வடுவகிர்போலுங் கண்ணென் றுரைப்பாருமுளர். நீடாயழுங்கல் நெடிதா யழுங்கல். மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த அழுகை. பயன்: தலைமகளது கற்பினைப் பாராட்டி ஆற்றாமை நீங்குதல். 226

குறிப்புரை :

16.33 கற்புநிலைக்கிரங்கல் கற்புநிலைக்கிரங்கல் என்பது தோழி யறத்தொடுநிற்பக் கேட்டசெவிலி இஃதறமாயினும் இவள் பருவத்திற்குத்தகாது; இதுகிடக்க, இனியவளுக்கு நன்மையாவது அவனை வழிபடுவ தல்லது பிறிதில்லை யெனக் கற்புநிலைக் கிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
16.33. விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக்
கோடா யுள்ள நீடா யழுங்கியது.

பண் :

பாடல் எண் : 34

முறுவல்அக் கால்தந்து வந்தென்
முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
லாம்முழு துஞ்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன்
சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகந் தான்படர்
வானா மொளியிழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஒளி இழை ஒளியிழை; அக்கால் முறுவல் தந்து உள்ளத்தொன்றுடையளாதலின் அக்காலத்து முறுவலை யெனக்குத் தந்து; வந்து என் முலை முழுவித் தழுவி வந்து எனது முலையை முத்தங்கொண்டு என்னைப் புல்லி; சிறுவலக்காரங்கள் செய்த எல்லாம் அவ்வாறு சிறியவிரகுகள் செய்தவெல்லாம்; முழுதும் சிதையத் தெறு வலக் காலனைச் செற்றவன் சிலம்பலம் சிந்தியார் எல்லாப்பொருளுமழிய வெகுளுதல் வல்ல அக்காலனை வெகுண்ட வனது சிற்றம்பலத்தைக் கருதாதார்; உறு வலக்கானகம் தான் படர்வான் ஆம் சேரும் வலியகாட்டைத் தான் செல்லவேண்டிப் போலும்! அக்காலத்திஃதறிந்திலேன்! எ-று.
எனக்கு வெளிப்படாமற் பிரிவார்செய்வன செய்தா ளென்னுங் கருத்தான் வலக்கார மென்றாள். குறித்துணர்வார்க்கு வெளிப்படு மென்னுங் கருத்தாற் சிறுமைப்படுத்தாள். தெறும் வெற்றியையுடைய காலனெனிமமையும். 227

குறிப்புரை :

16.34 கவன்றுரைத்தல் கவன்றுரைத்தல் என்பது கற்புநிலைக் கிரங்காநின்ற செவிலி, நெருநலைநாள் முறுவலைத்தந்து முலைமுழுவித் தழுவி நீ சிறிய விரகுகள் செய்தவெல்லாம் இன்றவ் வலியகாட்டைச் செல்ல வேண்டிப் போலும்; இதனை யப்பொழுதே யறியப்பெற்றி லேனென்று அவணிலை நினைந்து கவலாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.34. அவள்நிலை நினைந்து
செவிலி கவன்றது.

பண் :

பாடல் எண் : 35

தாமே தமக்கொப்பு மற்றில்
லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற்
கானிற் சிலம்படிபாய்
ஆமே நடக்க அருவினை
யேன்பெற்ற அம்மனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தாமே தமக்கொப்பாக வேறோரொப்பில்லாதவரது தில்லையில்; தண் அனிச்சப் பூமேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் குளிர்ந்த வனிச்சப்பூவின்மேன் மிதிப்பினும் நடுங்கித் தன்னடிகள் பண்டு கொப்புட்கொள்ளும் நங்காய்; எரியும் தீமேல் அயில்போல் செறி பரல் கானில் எரியாநின்ற தீயின்மேற் பதித்த வேல்போலச் செறிந்த பரலையுடைய காட்டின்கண்; சிலம்பு அடி பாய் சிலம்பை யுடைய அவ்வடியைப்பாவி; அருவினையேன் பெற்ற அம் மனைக்கு அரியவினையையுடையேன் பெற்ற அன்னைக்கு; நடக்க ஆமே இன்று நடக்க வியலுமோ! ஆண்டென் செய்கின்றாள்! எ-று.
செறிவு ஒத்தபண்பன்று. நிலத்தைச் செறிந்த பரலெனினு மமையும். அயில்போல் செறிபரலென்பது பாடமாயின், அயில் போலுஞ் செறிபரலென்றுரைக்க, இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 228

குறிப்புரை :

16.35 அடிநினைந்திரங்கல் அடிநினைந்திரங்கல் என்பது நிலைமை நினைந்து கவலாநின்ற செவிலி, அனிச்சப்பூமேன் மிதிப்பினும் ஆற்றாது பதைத்துப் பொங்காநின்ற வடிகள் இன்று செறிந்த பரலையுடைய காட்டின்கட் பாவியவாறென்னோவென அவளடி நினைந் திரங்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
16.35. வெஞ்சுர மும்மவள் பஞ்சிமெல் லடியுஞ்
செவிலி நினைந்து கவலை யுற்றது.

பண் :

பாடல் எண் : 36

தழுவின கையிறை சோரின்
தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
பேதை யறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்டம்
பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
யாலுற்றுத் தேய்வித்ததே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தழுவின கை இறை சோரின் தன்னைத் தழுவின என்கை சிறிதுசோருமாயின்; தமியம் என்றே நையாத் தளர்வுற்று நாந்தமிய மென்றேகருதி நைந்து உள்ளந்தளர்ந்து; அழுவினை செய்யும் அம் சொல் பேதை அறிவு அழுந்தொழிலைச் செய்யும் அழகிய சொல்லையுடைய பேதையதறிவு; விண்ணோர் குழுவினை உய்ய நஞ்சு உண்டு விண்ணோரது திரள்பிழைக்கத் தானஞ்சை யுண்டு; அம்பலத்துக் குனிக்கும் பிரான் செழுவின தாள் அம்பலத்தினின்று கூத்தாடு மிறைவனுடைய வளவியதாள்களை; பணியார் பிணியால் உற்றுத் தேய்வித்தது பணியாதார் பிணிபோலும் பிணியான் மிக்கு என்னைக் குறைவித்தது எ-று.
உய்ய நஞ்சுண்டென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீர்மைப் பட்டு உய்வித்து என்னும் பொருளவாய், குழுவினை யென்னு மிரண்டா வதற்கு முடிபாயின. அறிவைக்கருத்தாவாகவும் பிணியைக் கருவியாகவுங் கொள்க. முன்னியது - வந்தது. மெய்ப்பாடும் பயனும் அவை. #9; #9; #9; #9; #9; 229

குறிப்புரை :

16.36 நற்றாய்க்குரைத்தல் நற்றாய்க்குரைத்தல் என்பது அடிநினைந் திரங்காநின்ற செவிலி, கற்புமுதிர்வு தோன்ற நின்று என்னை யிடைவிடா மற்றேடி யழாநின்ற பேதையறிவு இன்றென்னைத் தேய்வியா நின்றதென்று அவள் உடன்போனமை ஆற்றாது நற்றாய்க்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.36. முகிழ்முலை மடந்தைக்கு முன்னிய தறியத்
திகழ்மனைக் கிழத்திக்குச் செவிலி செப்பியது.

பண் :

பாடல் எண் : 37

யாழியன் மென்மொழி வன்மனப்
பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென்
றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
யாரின் அருஞ்சுரமே.

பொழிப்புரை :

இதன் பொருள்: யாழ் இயல் மென் மொழி வல் மனப் பேதை யாழோசையினியல்பு போலும் இயல்பையுடைய மெல்லிய மொழியையும் வலியமனத்தையுமுடையபேதை; ஒரு ஏதிலன் பின் ஒரு நொதுமலன்பின்னே; தோழியை நீத்து தன்றோழியைவிட்டு; என்னை முன்னே துறந்து என்னை முற்காலத்தே நீங்கி; இம் மூதூர் மறுக இம்மூதூரிலுள்ளார் அலரெடுத்துக் கலங்க; துன்னார்கள் முன்னே சேராதார் முன்னே; மால் வணங்க அன்று ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் திருமால் வணங்குதலான் அன்றாழியைக் கொடுத்தவனது அம்பலத்தைப் பணியாதாரைப்போல; அரும் சுரம் சென்றாள் அரிய சுரத்தைச் சென்றாள்; இனி யெங்ஙனமாற்றுகேன் எ-று.
இற்செறிக்கப்பட்ட பின்னர்ப் பராமுகத்த ளென்பதனை உடன் போன பின்ன ருணர்ந்தாளாகலின், என்னை முன்னே துறந்தென் றாள். வாழி: அசைநிலை. மெய்ப்பாடும், பயனும் அவையே. 230

குறிப்புரை :

16.37 நற்றாய்வருந்தல் நற்றாய் வருந்தல் என்பது உடன்போனமைகேட்டு உண் மகிழ்வோடு நின்று, ஓரேதிலன் பின்னே தன் தோழியை விட்டு, என்னையு முன்னே துறந்து, சேராதார் முன்னே ஊர் அலர் தூற்ற அருஞ்சுரம் போயினாள்; இனி யானெங்ஙனமாற்றுவேனென நற்றாய் பிரிவாற்றாது வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.37. கோடாய் கூற
நீடாய் வாடியது.

பண் :

பாடல் எண் : 38

கொன்னுனை வேல்அம் பலவற்
றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ்
சேரு மெனஅயரா
என்னனை போயினள் யாண்டைய
ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென்
னுள்ளத்தை யீர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கொல் நுனை வேல் அம்பலவற் றொழாரின் கொற்றொழிலமைந்த நுனையையுடைத்தாகிய சூல வேலையுடைய அம்பலவனை வணங்காதாரைப்போல; கொடியோள் குன்றம் என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என கொடியாள் மலைநெறியை யெவ்வண்ணஞ்சென்றாள் ஆண்டெவ் வண்ணந் தங்குமென்றியான்கூற; அயரா தன்றாய் செலவுணர்ந்து மயங்கி; என் அனை போயினள் என்னுடைய அன்னை போயினாள்; யாண்டையள் அவளெவ்விடத்தாள்; என்னைப் பருந்து அடும் என்று இனி யென்னைப் பருந்து கொல்லு மென்று சொல்லி; என் அனை போக்கு அன்றிக் கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றது என்னுடைய வன்னை போக்கொழிய அவள் கிளியென் னெஞ்சை யீராநின்றது எ-று.
என்னணஞ் சென்றனள் என்னணஞ் சேருமென்று நினைந்த யராவெனக் கிளிமேலேறவுரைப்பினு மமையும். என்னன்னை போக்கன்று ஈர்கின்ற திக்கிள்ளையென மறுத்துரைப்பினு மமையும். மெய்த்தகை - மெய்யாகிய கற்பு; புனையாவழகுமாம். மெய்ப்பாடும் பயனும் அவை. 231

குறிப்புரை :

16.38 கிளிமொழிக்கிரங்கல் கிளிமொழிக்கிரங்கல் என்பது பிரிவாற்றாது வருந்தா நின்றவள் அவள்போன போக்கன்றி, இக்கிள்ளை என்னெஞ்சை யீராநின்றதெனத் தன்றாய் செலவுணர்ந்து வருந்தாநின்ற கிளியினது மொழிகேட் டிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
16.38. மெய்த்தகை மாது வெஞ்சுரஞ் செல்லத்
தத்தையை நோக்கித் தாய்புலம் பியது.

பண் :

பாடல் எண் : 39

பெற்றே னொடுங்கிள்ளை வாட
முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந்
தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந்
தேன்சுடர் வானவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுடர் வானவனே சுடராகிய வானவனே; பெற்றேனொடும் கிள்ளை வாட பெற்றவென்னோடுந்தன் கிளியிரு ந்து வருந்த இதனையுந்துறந்து; முதுக்குறை பெற்றிமிக்கு அறிவு முதிர்ந்த வியல்புமிக்கு; நல் தேன் மொழி நல்ல தேன்போலு மொழியை யுடையாள்; அழல் கான் நடந்தாள் முகம் அழலை யுடைய காட்டின் கணடந்தவளது முகத்தை; மல்தேன் மலரின் மலர்த்து நின்வெங்கதிர்களான் வாட்டாது வளவியவண்டை யுடைய தாமரைமலர்போல மலர்த்துவாயாக; இரந்தேன் நின்னை யானி ரந்தே னிதனை எ-று.
அணுகப் பெற்றேன் நான் ஒருவாற்றாற் றன்னையணுகப் பெற்றேனாகியயான்; பிறவி பெறாமல் செய்தோன் தில்லைத்தேன் பிறங்கு மற்றேன்மலர் பின் பிறவியைப் பெறாத வண்ணஞ் செய் தவனது தில்லையின் மதுமிகு மற்றேன் மலரெனக் கூட்டுக.
பெற்றேனொடுமென்பது எண்ணொடுவுமாம். தணிக்க வென்னு மிறுதியகரங் குறைந்துநின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை. 232

குறிப்புரை :

16.39 சுடரோடிரத்தல் சுடரோடிரத்தல் என்பது கிளிமொழி கேட்டிரங்கா நின்ற வள், பெற்றவென்னோடு தன்கிளியிருந்து வருந்த இதனையுந் துறந்து அறிவுமுதிர்ந்து, அழற்கடஞ் சென்றாண்முகத்தை நின் கதிர்களான் வாட்டாது தாமரைமலர்போல மலர்த்துவாயாக வெனச் சுடரோடிரந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.39. வெஞ்சுரந் தணிக்கெனச் செஞ்சுட ரவற்கு
வேயமர் தோளி தாயர் பராயது.

பண் :

பாடல் எண் : 40

வைம்மலர் வாட்படை யூரற்குச்
செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
லாந்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
றெண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ராற்கண் புதைத்துப்
பதைக்குமெங் கார்மயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தில்லையான் மலை வாய் தில்லையா னுடைய இம்மலையிடத்து; மொய்ம் மலர்க் காந்தளைப் பாந்தள் என்று எண்ணி மொய்ம்மலர்க் காந்தளது பூவினைப் பெரும்பாம் பென்று கருதி; துண்ணென்று ஒளித்து துண்ணென்று மறைந்து; கைம் மலரால் கண் புதைத்துப் பதைக்கும் கைம் மலர்களாற் கண்புதைத்து நடுங்கும்; எம் கார் மயில் என் மைம்மலர் வாள் கண்ணி எம்முடைய கார்மயிலாகிய என்னுடைய மையழகு பெற்ற வாள்போலுங் கண்ணையுடையாள்; வைம்மலர் வாள் படை ஊரற்கு கூர்மை யையுடைய மலரணிந்த வாளாகிய படைக்கலத்தையுடைய வூரனுக்கு; செய்யும் குற்றேவல் வல்லள்கொல் தான்செய்யத்தகுங் குற்றேவல்களைக் கற்பிக்கு முதுபெண்டிருமின்றித் தானே செய்ய வல்லளாமோ! ஆண்டென் செய்கின்றாள்! எ-று.
மற்றென்பது அசை. மொய்ம்மலர்க்காந்தள் முதலாகிய தன் பொருட்கேற்ற வடையடுத்து நின்றது. பிரிவினான் மகண்மேற் செல்லுங் கழிபெருங் காதலளாதலின், எங்கார்மயிலென்றும் என்வாட் கண்ணி யென்றும், பல்காற்றன்னோடடுத்துக் கூறினாள். தில்லையான் மலைவாய்ப் பதைக்குமெனவியையும். நோக்கென்னு மலங்காரமாய்ப் பாம்பிற் கஞ்சுமயிலென இல்குணமடுத்து வந்ததென்பாரு முளர். மெய்ப்பாடும் பயனும் அவையே. 233

குறிப்புரை :

16.40 பருவ நினைந்து கவறல் பருவ நினைந்து கவறல் என்பது சுடரோடிரந்து வருந்தா நின்றவள், கற்பிக்குமுதுபெண்டீரு மின்றித் தானவனுக்குச் செய்யத் தகுங் குற்றேவல் செய்யவல்லள்கொல்லோ வென்று அவளது பருவ நினைந்து கவலாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.40. முற்றா முலைக்கு
நற்றாய் கவன்றது

பண் :

பாடல் எண் : 41

வேயின தோளி மெலியல்விண்
ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண்
ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
நாடுவன் பொன்னினையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: விண்ணோர் விண்ணவர்; தக்கன் வேள்வியின் வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத்தானைப் பழித்து தக்கனது வேள்வியின்கட் பரந்த புகழையுடையனாகிய அம்பலத்தானை யிகழ்ந்துகூறி; மும்மைத் தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து மூன்றன்றொகுதியாகிய தீயினது வலியையுந் தலையையுங் கண்ணையுமிழந்து; திசை திசை தாம் போயின எல்லை எல்லாம் புக்கு திசை திசை தோறுந் தாம்போயின வெல்லையெல்லாம் புக்கு; பொன்னினை நாடுவன் பொன்னினைத் தேடுவேன்; வேயின தோளி வேயின் றன்மைய வாகிய தோள்களையுடையாய்; மெலியல் நீ மெலியவேண்டா எ-று.
தொக்கபொருட்குந் தொகுதிக்கு மொற்றுமையுண்மையின், ஆற்றன் முதலாயினவற்றை யிழத்தலை விண்ணோர் மேலேற்றினார். திகைதிகை யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: நற்றாயை யாற்றுவித்தல்.
``ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்
தாமே செல்லுந் தாயருமுளரே``
-தொல். அகத்திணை. 40
என்றாராகலிற் செவிலிதேடப் பெறும். அலங்காரம்: முயற்சி விலக்கு. 234

குறிப்புரை :

16.41 நாடத் துணிதல் நாடத்துணிதல் என்பது பருவநினைந்து கவலாநின்ற தாய்க்கு, நீ கவன்று மெலியவேண்டா, யான் அவள் புக்கவிடம் புக்குத் தேடுவேனெனக் கூறி, செவிலி அவளை நாடத் துணியாநிற்றல். அதற்குச்செய்யுள்
16.41. கோடாய் மடந்தையை
நாடத் துணிந்தது.

பண் :

பாடல் எண் : 42

பணங்களஞ் சாலும் பருவர
வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
இன்னே வரக்கரைந்தால்
உணங்கலஞ் சாதுண்ண லாமொள்
நிணப்பலி யோக்குவல்மாக்
குணங்களஞ் சாற்பொலி யுந்நல
சேட்டைக் குலக்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாக் குணங்கள் அஞ்சாற் பொலியும் நல சேட்டைக் குலக்கொடியே பெரியகுணங்களைந்தான் விளங்கும் நல்ல சேட்டையையுடைய சீரியகொடியே; பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன படங்க ளைந்து ஆடாநிற்கும் பரிய வரவைச் சாத்தியவனது தில்லையைப் போலும்; மணம் கொள் அம் சாயலும் மன்னனும் நறுநாற்றம் பொருந்திய அழகிய மென்மையை யுடையாளும் மன்னனும்; இன்னே வரக் கரைந்தால் இப்பொழுதே வரும்வண்ணம் நீயழைத்தால்; உணங்கல் அஞ்சாது உண்ணலாம் யா மோப்பாமையின் உணங்கலை யஞ்சாதிருந்து நினக்குண்ணலாம்; ஒண்நிணப் பலி ஓக்குவல் தெய்வத்திற்குக் கொடுத்த நல்ல நிணத்தையுடைய பலியையும் நினக்கே வரைந்து வைப்பேன்; அவ்வாறு கரைவாயாக எ-று.
ஓக்குவ லென்பதற்குத் தருவேனென் றுரைப்பினுமமையும். குணங்கள் ஐந்தாவன மறைந்த புணர்ச்சித்தாதலும், கலங்காமையும், பொழுதிறவா திடம்புகுதலும், நெடுகக் காண்டலும், மடியின்மையும், சேட்டை உறுப்பைப் புடைபெயர்த்தல். கொடி காக்கை. நல சேட்டை குலக்கொடியே யென்று பாடமோதி, சேட்டையாகிய தெய்வத்தின் நல்ல கொடியேயென் றுரைப்பாருமுளர். சொற்புட்ப ராயது வருவது சொல்லுதலையுடைய புள்ளை வேண்டிக் கொண்டது. 235

குறிப்புரை :

16.42 கொடிக்குறிபார்த்தல் கொடிக்குறி பார்த்தல் என்பது செவிலி நாடத்துணியாநிற்ப, அவ்விருவரையு மிப்பொழுதே வரும்வண்ணம் நீ கரைந்தால், நினக்கு உணங்கலை யஞ்சாதிருந் துண்ணலாம்; அதுவன்றித் தெய்வத்திற்கு வைத்த நிணத்தை யுடைய பலியையும் நினக்கே வரைந்து வைப்பேன்; அவ்வாறு கரைவாயாகவென நற்றாய் கொடிக்குறி பாராநிற்றல். அதற்குச் செய்யுள்
16.42. நற்றாய் நயந்து
சொற்புட் பராயது.

பண் :

பாடல் எண் : 43

முன்னுங் கடுவிட முண்டதென்
தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக்
கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
நான்மறை யுத்தமரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால் பரந்து செல்லுங் கடியவிடத்தையுண்ட தென்றில்லைக் கண்ணானாகிய எல்லார்க்கு முன்னாயவன தருளால்; இக்கடிமனைக்குக் கடி யாம் அயர இக்காவலையுடைய மனையின் கண் மணத்தை யாஞ்செய்ய; மன்னும் கடிமலர்க் கூந்தலை இன்னும் தான் பெறுமாறும் உண்டேல் நிலைபெற்ற கடிமலரையுடைய கூந்தலையுடையாளை இன்னுந் தான் பெறுமாறு முண்டாயின்; நால்மறை உத்தமரே நான்மறையையுடைய தலைவீர்; உன்னுங்கள் நும் முள்ளத்தானாராய்மின்கள்; தீது இன்றி ஓதுங்கள் ஆராய்ந்து குற்றந்தீரச் சொல்லுமின்கள் எ-று.
அருளாற் பெறுமாறுமுண்டேலென வியையும். தேவர் சென்றிரப்ப நஞ்சை நினைத்தலுங் கைம்மலர்க்கண் வந்திருந்த தாகலின், கருதப் படும் வெவ்விட மெனினுமமையும். யாங்கடியயரத் தான் கடிமலர்க் கூந்தலைப் பெறுமாறு முண்டேலென்றுரைப்பினு மமையும். இப் பொருட்குத் தானென்றது தலைமகனை. தீதின்றியுன் னுங்களெனினுமமையும். உய்த்துணர்வோரை வெளிப்படாத பொருளையேதுக்களாலுணர்வோரை. இவையிரண்டற்கும் மெய்ப் பாடு: மருட்கை. பயன்: எதிர்காலச் செய்கை யுணர்தல். 236

குறிப்புரை :

16.43 சோதிடங் கேட்டல் சோதிடங் கேட்டல் என்பது கொடிநிமித்தம் பெற்று, இக்காவன் மனையின்கண்ணே யாங்கள் மணஞ்செய்ய அவ்விரு வரையும் இன்னும் பெறுமாறுண்டாயின், ஆராய்ந்து சொல்லுமினென அறிவாளரைக் கிட்டிச் செவிலி சோதிடங் கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.43. சித்தந் தளர்ந்து தேடுங் கோடாய்
உய்த்துணர் வோரை உரைமி னென்றது.

பண் :

பாடல் எண் : 44

தெள்வன் புனற்சென்னி யோன்அம்
பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
யென்று கருதுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர் தெள்ளிய பெரியபுனலையுடைத்தாகிய சென்னியை யுடையவன தம்பலத்தைக் கருதாதாரது இனஞ்சேரும்; முள்வன் பரல் முரம்பத்தின் இங்கிவை முள்ளையும் வலியபரலையு முடைய இம்முரம்பின்கட்கிடந்த இவை; முன்செய் வினையேன் எடுத்த ஒள்வன் படைக் கண்ணி சீறடி முற்காலத்துச் செய்யப்பட்ட தீவினையையுடைய யானெடுத்து வளர்த்த ஒள்ளிய வலிய படைபோலுங் கண்ணினையுடையாளுடைய சிறிய வடிச்சுவடாம்; உங்குவை அக் கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவன் இனி உவற்றை அக்கள்வனாகிய பகடுபோலும் வலியை யுடையானுடைய அடிச்சுவடென்றுய்த்துணரா நின்றேன் எ-று.
இங்கிவை உங்குவை யென்பன ஒருசொல். 237

குறிப்புரை :

16.44 சுவடுகண்டறிதல் சுவடுகண்டறிதல் என்பது சோதிடம் பெற்றுச் செல்லா நின்றவள், இம்முரம்பின்கட் கிடந்த இவை தீவினையே னெடுத்து வளர்த்த மாணிழை சீறடி: உவை அக்கள்வ னடியாமெனச் சுவடு கண்டறியாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.44. சுவடுபடு கடத்துச்
செவிலிகண் டறிந்தது.

பண் :

பாடல் எண் : 45

பாலொத்த நீற்றம் பலவன்
கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
மாணிழை கால்மலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கோலத் தவிசின் மிதிக்கின் கோலத்தையுடைய தவிசின்மேன் மிதிப்பினும்; பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய் பாலொத்த நீற்றையுடைய அம்பலவனது கழல் களைப் பணியாதாரது வருத்தம்போலும் வருத்தம்வாய்ப்ப; பதைத்து அடி கொப்புள் கொள்ளும் நடுங்கி அவ்வடிகள் பண்டு கொப்புளங் கொள்ளும்; வினையேன் பெற்ற மாண் இழை கால்மலர் தீவினை யேன் பெற்ற மாணிழையுடைய அத்தன்மையவாகிய காலாகிய மலர்கள்; இன்று வேல் ஒத்த வெம் பரற் கானத்தின் ஓர் விடலைபின் போம் கால் ஒத்தன இன்று வேலையொத்த வெய்யபரலையுடைய காட்டின்கண் ஒருவிடலை பின் போதற்குத் தகுங்காலை யொத்தன; இதனையெவ்வாறு ஆற்றவல்லவாயின! எ-று.
தவிசு தடுக்குமுதலாயின. கான்மலரென அவற்றை மலராகக் கூறினமையாற் காலொத்தனவென வுவமித்தாள். பிணியாயென்றும், பிணிபோலென்றும், காலொத்திராவென்றும் பாடமோதுவாருமுளர். காலென்றது அடியை. 238

குறிப்புரை :

16.45 சுவடுகண்டிரங்கல் சுவடு கண்டிரங்கல் என்பது சுவடுகண்டறிந்து அவ்விடத் தே நின்று தவிசின்மேன் மிதிப்பினும் பதைத்துக் கொப்புட் கொள்ளாநின்ற இக்கான்மலர், இன்றொரு விடலைபின்னே போதற்குத் தகுங்காலை எவ்வாறொத்தனவென அடிச்சுவடுகண் டிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
16.45. கடத்திடைக் காரிகை அடித்தலங் கண்டு
மன்னருட் கோடா யின்ன லெய்தியது.

பண் :

பாடல் எண் : 46

பேதைப் பருவம் பின்சென்
றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின்
றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப்
பற்குரற் பொற்றொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
போதிற் பொலியும் தொழில் புலிப்பற் குரல் பொற்றொடி பூவின்கட்பொலியுந் தொழிலினையும் புலிப்பல்லை யுடைய கழுத்தினையுமுடைய பொற்றொடியாய்; பேதைப் பருவம் சென்றது பின் பேதையாகிய பருவங்கழிந்தது சுரம் போந்தபின்; முன்றில் எனைப் பிரிந்தால் ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் இவ்வாறறியாப் பருவத்தளாய் முன்றிற்க ணென்னைச் சிறிது நீங்கிற் றமியளாய் நடுங்குதலான் ஊதையாற் சுழலும் வல்லியை யொப்பாள்; முத்தன் தில்லை அன்னாள் முத்தனது தில்லையை யொப்பாள்; ஏதில் சுரத்து அயலானொடு இன்று ஏகினள் அவள் வெம்மை முதலாயினவற்றாற் றனக்கென்று மியல்பில்லாத சுரத்தின் கண் அயலானொருவனோடு இன்றுபோயினாள்; கண்டனையே அவளை நீ கண்டாயோ? அவளெவ்வண்ணம்போயினாள்? எ-று.
தில்லையுன்னாரென்பதூஉம் பாடம். பெற்று வினாய தென்பதூஉம் பாடம். 239

குறிப்புரை :

16.46 வேட்டமாதரைக் கேட்டல் வேட்டமாதரைக் கேட்டல் என்பது சுவடுகண்டிரங்கா நின்று, அதுவழியாகச் செல்லாநின்றவள், இவ்வாறு அறியாப் பருவத்தளாய்த் தனக்கியைபில்லாத சுரத்தின்கண் அயலா னொருவனுடன் போந்தாள்; அவளை நீ கண்டாயோவென வேட்ட மாதரைக் கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.46. மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப்
பின்வரு செவிலி பெற்றி வினாயது.

பண் :

பாடல் எண் : 47

புயலன் றலர்சடை ஏற்றவன்
தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை
வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று
வாழி எழிற்புறவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புயல் அன்று அலர் சடை ஏற்றவன் நீரை அன்று விரிந்த சடையின்கணேற்றவன்; தில்லைப் பொருப்பரசி பயலன் தில்லைக்கணுளனாகிய பொருப்பிற் கரசியது கூற்றையுடையான்; தனைப் பணியாதவர் போல் மிகு பாவம் செய்தேற்கு அவன் றன்னைப் பணியாதாரைப் போல மிக்க பாவத்தைச் செய்தேற்கு; அயலன் தமியன் அம் சொல் துணை மாதர் வெஞ்சுரம் சென்றால் ஏதிலனுமாய்த் தமியனுமா யவனது அழகியசொல்லே துணையாக மாதர் வெய்ய சுரத்தைச் சென்றால்; எழில் புறவே எழிலையுடைய புறவே; இயல் அன்று எனக்கிற்றில்லை இது தகுதி யன்றென்று கூறிற்றிலை; வாழி வாழ்வாயாக எ-று.
இது கூறிற்றாயின் அவள் செல்லாளென்பது கருத்து பொருப்பரையன் மகளாதலிற் பொருப்பரசியெனத் தந்தை கிழமை மகட்குக் கூறப்பட்டது. பாவஞ் செய்தேற்கியலன்றெனக்கிற்றிலை யெனக்கூட்டுக. வெஞ்சுரமாதல் கண்டாலென்பது பாடமாயின், ஆதலென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. வெஞ்சுரம் போதல் கண்டாலென்பதூஉம் பாடம். 240

குறிப்புரை :

16.47 புறவொடு புலத்தல் புறவொடு புலத்தல் என்பது வேட்டமாதரைக் கேட்டு அது வழியாகச் செல்லாநின்றவள், ஏதிலனுமாய்த் தமியனுமாயவன் சொற்றுணையாக வெய்ய சுரத்தே மாதர் சென்றால், எழிலையுடைய புறவே, இது நினக்குத் தகுதியன்றென்று கூறிற்றிலை; நீ வாழ்வா யாகவெனப் புறவொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.47. காட்டுப் புறவொடு
வாட்ட முரைத்தது.

பண் :

பாடல் எண் : 48

பாயும் விடையோன் புலியூ
ரனையவென் பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக்
கடப்பவுங் கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில்
வீசவண் டோலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று
நிலாவிடும் நீள்குரவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
குழை எழில் வீச குழை எழிலைச் செய்ய; வண்டு ஓலுறுத்த வண்டுகள் நின்பாவையையோலுறுத்த; நின் பாவையும் நீயும் நின்று நிலாவிடும் நீள் குரவே அப்பாவையு நீயும் நின்று நிலாவும் பெருங்குரவே; பாயும் விடையோன் புலியூர் அனைய என்பாவை பாய்ந்து செல்லும் விடையையுடையவனது புலியூரை யொக்கும் என்னுடைய பாவை; முன்னே காயும் கடத்திடை ஆடிக் கடப்பவும் கண்டு நின்று நின்முன்னே கொதிக்குங் கடத்தின் கண் அசைந்து அதனைக்கடப்பவும் விலக்காது கண்டு நின்று; வாயும் திறவாய் அத்துணையேயன்றி இன்னவாறு நிகழ்ந்ததென்று எனக்கு வாயுந் திறக்கின்றில்லை; இது நினக்குத்தகுமோ! எ-று.
நிலாவினையென்பது பாடமாயின், வழிச்சுரஞ் செல்லக் கண்டும் வாய்திறந்து ஒன்றுங்கூறாது குழையெழில்வீச வண்டோ லுறுத்த நின்று விளங்கினையென்று கூட்டியுரைக்க. குழையெழில் வீச வண்டோலுறுத்த வென்பன அணியாகிய குழைவிளங்க வென்பதூஉஞ் செவிலிய ரோலாட்ட வென்பதூஉந் தோன்ற நின்றன. இப்பாட்டைந் திற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 241

குறிப்புரை :

16.48 குரவொடு வருந்தல் குரவொடு வருந்தல் என்பது புறவொடு புலந்து போகா நின்றவள், என்னுடைய பாவை நின்னுடைய முன்னே இக்கொதிக் குங் கடத்தைக் கடப்பக்கண்டுநின்றும், இன்னவாறு போனாளெ ன்று எனக்கு வாயுந் திறக்கின்றிலை; இது நினக்கு நன்றோவெனக் குரவொடுவாடி யுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.48. தேடிச் சென்ற செவிலித் தாயர்
ஆடற் குரவொடு வாடி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 49

சுத்திய பொக்கணத் தென்பணி
கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
மோவொர் பெருந்தகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுத்திய பொக்கணத்து சுத்தியை யுடைத்தாகிய பொக்கணத்தையும்; என்பு அணி என்பாகிய வணியையும்; கட்டங்கம் கட்டங்கமென்னும் படைக்கலத்தையும்; சூழ்சடை சூழ்ந்த சடையினையும்; பொத்திய வெண் கோலத்தினீர் மெய்ம் முழுதும் மூடிய வெண்கோலத்தையு முடையீர்; புலியூர் அம்பலவர்க்கு உற்ற பத்தியர் போல புலியூர்க்க ணுண்டாகிய அம்பலத்தையுடை யவர்கண் மிக்க பத்தியையுடையாரைப் போல; பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர் பித்தி பெருத்திறுமாந்த முலைகளையுடைய ளொருபேதை; தன் பின்வர ஓர் பெருந்தகை முன் வருமோ தனக்குப் பின்வர ஒருபெருந்தகை முன்னே வருமோ? உரைமின் எ-று.
சுத்தி பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பிவடிவாகத் தலையோட்டா னமைக்கப்படுவதொன்று. என்பணி யென்புழி இயல்பும், கட்டங்கமென்புழித் திரிபும் விகாரவகையாற் கொள்க. கடங்கமென்பது மழு. இது கட்டங்கமென நின்றது. வெண்கோலம் நீறணிந்த கோலம். பத்தியர்க்குப் பணைத்தல் உள்ளத்து நிகழும் இன்புறவால் மேனிக்கண்வரு மொளியும், ஒடுங்காமையும். இறுமாத்தல் தாழாதவுள்ளத்தராய்ச் செம்மாத்தல். முலைக்குப் பணைத்தல் பெருத்தல்; இறுமாத்தல் ஏந்துதல். வெண்பத்திய கோலத்தினீரென்ற பாடத்திற்கு வெண்ணீற்றாற் பத்திபட விட்ட முண்டத்தையுடைய கோலமென்றுரைக்க.

குறிப்புரை :

16.49 விரதியரை வினாவல் விரதியரை வினாவல் என்பது குரவொடுவருந்திச் செல்லா நின்றவள், பத்தியர்போல ஒருபித்தி தன் பின்னேவர ஒரு பெருந்தகை முன்னே செல்லக் கண்டீரோவென விரதியரை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.49. வழிவரு கின்ற மாவிர தியரை
மொழிமின்க ளென்று முன்னி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 50

வெதிரேய் கரத்துமென் தோலேய்
சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
வெறுப்பவொ ரேந்தலொடே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வெதிர் ஏய் கரத்து மூங்கிற்றண்டு பொருந்திய கையினையும்; மெல் தோல் ஏய் சுவல் மெல்லிய கலைத் தோலியைந்த சுவலினையும்; வெள்ளை நூலின் வெள்ளை நூலினையும்; கொண்மூ அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் கொண்மூவினது முழக்கம்போலு மறையொலியினையுமுடைய இந்நெறிச் செல்வீர்; ஒரு மான் ஒருமான்; தில்லை அம்பலத்துக் கதிர் ஏய் சடையோன் கரமான் என தில்லையம்பலத்தின் கணுளனாகிய மதிசேர்ந்த சடையையுடையவனது கரத்தின்மான் போல மருண்ட நோக்கத்தளாய்; மயில்போல் மயில்போல வசைந்த சாயலாளாய்; சுரமே வெறுப்ப ஒரு ஏந்தலொடு எதிரே வருமே வருத்துஞ் சுரந்தானே கண்டுதுன்புற ஓரேந்தலோடு நும்மெதிரே வந்தாளோ? உரைமின் எ-று.
தோலேய்ந்த சுவலின்கணுண்டாகிய வெள்ளை நூலினையு மெனினுமமையும். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு அது. பயன்: தலைமகளைக் காண்டல். 243

குறிப்புரை :

16.50 வேதியரை வினாவல்
வேதியரை வினாவல் என்பது விரதியரை வினாவி, அதுவழியாகச் செல்லாநின்றவள், மான்போலு நோக்கினையும், மயில் போலுஞ் சாயலையுமுடைய மான் ஓரேந்தலோடு நும்மெதிரே வரக்கண்டீரோவென வேதியரை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.50. மாதின்பின் வருஞ்செவிலி
வேதியரை விரும்பிவினாயது.

பண் :

பாடல் எண் : 51

மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
யோஅன்னை சொல்லியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நும்மைக்கண்டு மீண்டார் என உவந்தேன் நும்மைக்கண்டு என்னாற் றேடப்படுகின்றார் மீண்டாரென்றுகருதி மகிழ்ந்தேன்; இம் மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே இவ்வாறு நும்மோடொத்த மேதகவையுடைத்தாகிய இவ்வொழுக் கத்தையே பூண்டார் இருவர் முன்னே போயினரோ? உரைமின் எ-று.
புலியூர் எனை நின்று ஆண்டான் அருவரை ஆளி அன்னானைக் கண்டேன் புலியூர்க்கண் ஒரு பொருளாக மதித்து என்னை நின்றாண்டவனது கிட்டுதற்கரிய மலையில் ஆளியை யொப்பானை யான் கண்டேன்; தூண்டா விளக்கு அனையாய் தூண்ட வேண்டாத விளக்கையொப்பாய்; அயல் அன்னை சொல்லியது என்னையோ அவனதயல் அன்னைசொல்லியதி யாது? அதனையவட்குச் சொல்லுவாயாக எ-று.
அருவரைக்கட் கண்டேனெனக் கூட்டினு மமையும். ஆளியன்னா னென்றதனால், நின்மகட்கு வருவதோரிடையூ றில்லையெனக் கூறினானாம். தூண்டா விளக்கு: இல்பொருளுவமை. மணிவிளக்கெனினு மமையும். அணங்கமர் கோதையை தெய்வ நாற்றமமர்ந்த கோதையை யுடையாளை. ஆராய்ந்தது வினாயது. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்தவுவகை. பயன்: அது.244

குறிப்புரை :

16.51 புணர்த்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல் புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல் என்பது வேதியரை வினாவி, அதுவழியாகச் செல்லாநின்றவள், நும்மைக் கண்டு, என்னாற்றேடப்படுகின்றார் மீண்டார்களென்று கருதி மகிழ்ந்தேன்; அதுகிடக்க, இவ்வாறு நும்மோடொத்த வொழுக் கத்தினராய் முன்னே யிருவரைப் போகக்கண்டீரோவெனப் புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.51. புணர்ந்துடன்வரும்புரவல னொருபால்
அணங்கமர்கோதையை யாராய்ந்தது.

பண் :

பாடல் எண் : 52

பூங்கயி லாயப் பொருப்பன்
திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
திண்டிற லாண்டகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பூங் கயிலாயப் பொருப்பன் திருப்புலியூரது என்ன பொலிவினையுடைய கைலாயமாகிய பொருப்பையுடைய வனது திருப்புலியூரதனைப்போல; தீங்கை இலாச் சிறியாள் நின்றது இவ்விடம் குற்றத்தையுடையவளல்லாத என் சிறியாள் நின்றது இவ்விடத்து; சென்று சென்று; எதிர்ந்த வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து தன்னோடெதிர்ந்த புலியின்வாயின்கட் பெரிய கையைமடுத்து; கிடந்து அலற விழுந்து கிடந் தலறும் வண்ணம்; திண் திறல் ஆண்டகை அயிலால் பணிகொண்டது ஆங்கு திண்ணிய திறலையுடைய ஆண்டகை வேலாற் பணிகொண்டது அவ்விடத்து; அதனால், அவர் போயின நெறியிதுவே எ-று.
தீங்கையிலாவென்புழி இன்மை உடைமைக்கு மறுதலை யாகிய வின்மை. மகளடிச்சுவடுகிடந்தவழிச் சென்று நின்றனளாதலின், அதனை இவ்விடமென்றும், வேங்கைபட்ட விடத்தை யவ்விட மென்றுங் கூறினாள். வேங்கை தன் காதலியையணுகாமல் அதுவரும் வழிச் சென்றேற்றானாதலிற் சென்றென்றாள். சென்று பணி கொண்ட தென வியையும். மெய்ப்பாடு அது. பயன்: ஆற்றாமை நீங்குதல். 245

குறிப்புரை :

16.52 வியந்துரைத்தல் வியந்துரைத்தல் என்பது புணர்ந்துடன் வருவோரை வினாவி, அதுவழியாகப் போகாநின்றவள், தன்மகணின்ற நிலையையும், அவன்கையின் வேலினால் வேங்கைபட்டுக் கிடந்த கிடையையுங்கண்டு, வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.52. வேங்கைபட்டதும் பூங்கொடிநிலையும்
நாடாவருங் கோடாய்கூறியது.

பண் :

பாடல் எண் : 53

மின்றொத் திடுகழல் நூபுரம்
வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
நீசொன்ன கொள்கையரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அன்னை அன்னாய்; நீ சொன்ன கொள்கையர் குன்றத்திடைக் கண்டனம் நீ கூறிய கோட்பாட்டை யுடையாரைக் குன்றத்திடைக் கண்டேம்; மின் தொத்து இடுகழல் நூபுரம் அவ்விருவரு மியைந்து சேறலின், மின்றிரளுண்டாகாநின்ற அவனது கழலும் அவளது சிலம்பும்; வெள்ளை செம்பட்டு அவனது வெண்பட்டும் அவளது செம்பட்டும்; மின்ன விளங்க; ஒன்று ஒத்திட- ஒருவடிவை யொத்தலான்; உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்று எல்லாவற்றையு முடையளாகிய தன்காதலியோ டொருவடிவாய் விளையாடும் புலியூரனென்றேகருதி; ஒத்து நன்று எழிலைத் தொழ உற்றனம் யாங்களெல்லாமொத்துப் பெரிது மவ்வழகைத் தொழ நினைந்தேம்; என்னது ஓர் நன்மைதான் அந்நன்மை யெத்தன்மையதோர் நன்மைதான்! அது சொல்லலாவ தொன்றன்று எ-று.
என்னதோர் நன்மையென்றதனான், அஃதறமாதலுங் கூறப்பட்டதாம். தானென்பது அசைநிலை. கொள்கையரை யென்னு முருபு விகாரவகையாற் றொக்கது. என்ன நன்மையதா மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: செவிலியை யெதிர்வருவார் ஆற்றுவித்தல். 9; 9; 246

குறிப்புரை :

16.53 இயைபெடுத்துரைத்தல் இயைபெடுத்துரைத்தல் என்பது வேங்கைபட்டது கண்டு வியந்து, அதுவழியாகச் செல்லாநின்றவள், எதிர்வருவாரை வினாவ, அவர் நீ கூறாநின்றவரைக் குன்றத்திடைக்கண்டோம்; அவ்விருவருந் தம்முளியைந்து செல்லாநின்றமைகண்டு, எல்லாவற்றையு முடைய ளாகிய தன் காதலியோடு ஒருவடிவாய் விளையாடும் புலியூர னென்றே கருதி, யாங்களெல்லாமொத்து, மிகவும் அவ்வெழிலைத் தொழ நினைந்தோம்; அந்நன்மை சொல்லலாவ தொன்றன்றென எதிர்வருவார் அவரியைபெடுத் துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.53. சேயிழை யோடு செம்மல் போதர
ஆயிழை பங்கனென் றயிர்த்தே மென்றது.

பண் :

பாடல் எண் : 54

மீள்வது செல்வதன் றன்னையிவ்
வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந்
நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையி
னெல்லை யணுகுவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கிளர் கெண்டை அன்ன நீள்வது செய்த கண்ணாள் புடை பெயராநின்ற கெண்டைபோலும் நீடலைச் செய்த கண்ணையுடையாள்; இவ்வெங்கடத்து வெய்ய விச்சுரத்தின் கண்; அக்கடமாக்கீள்வது செய்த கிழவோனொடும் அத்தன்மைத் தாகிய கடமாவைப் பிளத்தலைச் செய்த கிழவோனோடும்; இந்நெடுஞ்சுரம் நீந்தி இந்நெடியசுரத்தை நீந்தி அவ்விருவரும் ஓரிடுக்கணின்றிப் போய்; எம்மை ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவர் எம்மை யாளுதலைச் செய்தவனது தில்லையினெல்லையைச் சென்றணைவர், அதனால், அன்னை அன்னாய்; மீள்வது செயற் பாலது மீள்வதே; செல்வது அன்று சேறலன்று எ-று.
சுரங் கடத்தல் இருவர்க்கு மொக்குமெனினும், நீள்வது செய்த கண்ணாணீந்தியெனத் தலைமகண்மேற் கூறினார், வெஞ்சுரத்திற்கவள், பஞ்சின் மெல்லடி தகாவாகலின். அணுகுவரென்புழித்தலைமகள் தொழிலுமுண்மையின், நீந்தியென்னுமெச்சம், வினைமுதல் வினை கொண்டதாம்; திரித்துரைப்பாருமுளர். கிழவோனொடு மென்றதனால், அவன் பற்றுக்கோடாக நீந்தினாளென்பது விளக்கினார். இனி ஒடுவை எண்ணொடுவாக்கி யுரைப்பினுமமையும். உம்மை: அசைநிலை. 247

குறிப்புரை :

16.54 மீளவுரைத்தல் மீளவுரைத்தல் என்பது இயைபெடுத்துரைத்தவர், அவ் விருவரும் ஓரிடுக்கணின்றிப்போய்த் தில்லையினெல்லையைச் சென்றணைவர்; இனி நீ செல்வதன்று, மீள்வதே காரியமெனத் தேடிச் செல்லாநின்ற செவிலியை, மீளக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.54. கடுங்கடங் கடந்தமை கைத்தாய்க் குரைத்து
நடுங்கன்மின் மீண்டும் நடமி னென்றது.

பண் :

பாடல் எண் : 55

சுரும்பிவர் சந்துந் தொடுகடல்
முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
நீர்மையர் காணுநர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுரும்பு இவர் சந்தும் நறுநாற்றத்தாற் சுரும்பு சென்று பரக்குஞ் சந்தனமும்; தொடு கடல் முத்தும் தோட்கப் பட்ட கடலின் முத்தும்; வெண் சங்கும் வெண்சங்கும்; எங்கும் விரும்பினர்பால் சென்று மெய்க்கு அணியாம் எத்தேயத்துந் தாம்பிறந்த விடங்கட்கு யாதும் பயன்படாது தம்மை விரும்பி யணிவாரிடத்தே சென்று அவர்மெய்க்கு அணியாகா நிற்கும்; வியன்கங்கை என்னும் பெரும்புனல் சூடும் பிரான் அகன்ற கங்கை யென்னாநின்ற பெரும் புனலைச் சூடும் பிரான்; சிவன் சிவன்; சிற்றம்பலம் அனைய கரும்பு அன மென்மொழியாரும் அவனது சிற்றம்பலத்தை யொக்குங் கரும்பு போலும் மெல்லிய மொழியினை யுடைய மகளிரும்; காணுநர்க்கு அந் நீர்மையர் ஆராய்வார்க் கத்தன்மையர்; நீ கவலவேண்டா எ-று.
சங்கு மணியாயும் வளையாயும் அணியாம். எங்குமணியா மெனவியையும். சிற்றம் பலத்து மன்னுங் கரும்பன மென்மொழி யாரென்பது பாடமாயின், சிற்றம்பலத்தையுடைய தில்லையினுளதாங் கரும்புபோலு மென் மொழியை யுடையாரென்றுரைக்க. 248

குறிப்புரை :

16.55 உலகியல்புரைத்தல் உலகியல்புரைத்தல் என்பது மீளக்கூறவும் மீளாது கவலா நின்ற செவிலிக்கு, சந்தனமு முத்துஞ் சங்கும் தாம் பிறந்தவிடங்கட்கு யாதும் பயன்படாது, தம்மைவிரும்பி யணிவாரிடத்தே சென்று பயன்படாநிற்கும்; அதுபோல மகளிருந் தாம் பிறந்த விடத்துப் பயன்படார்; நீ கவலவேண்டாவென, உலகியல்பு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.55. செவிலியது கவலைதீர
மன்னியஉலகியன் முன்னியுரைத்தது.

பண் :

பாடல் எண் : 56

ஆண்டி லெடுத்தவ ராமிவர்
தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
கீழும் பழனங்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இவர் தாம் ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவ்விடத்து இல்லின்கணெடுத்து வளர்த்தவர் போலும்; தீண்டில் யாவராயினுந் தம்மையணுகில்; எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய் அவர் நரகத்தழுந்தாமலெடுத்து அவ ரது தீவினையைத் தீர்ப்பவனது தில்லையின்கண்; தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற தூண்டிலைவிழுங்கிய வரால் தெங்கொடு மோத; பழம் விழுந்து அதன் பழம் விழுந்து; பாண்டில் எடுத்தபல் தாமரை கீழும் பழனங்கள் கிண்ணம்போலும் பூக்களையுயர்த்திய பலவாகிய தாமரையைக் கிழிக்கும் பழனங்களை; அவர் போய் அல்குவர் அவர்சென்று சேர்வர்; இனியோரிடரில்லை எ-று.
தில்லையின்வாய்ப் பழனங்களெனவியையும். ஆண்டி லெடுத்தவராமிவர் தாமென்று தம்முட்கூறிப் பின் செவிலிக்குக் கூறினாராக வுரைக்க. இவ்வாறு பகராது, செவிலிகேட்ப முழுவதூஉந் தம்முட் கூறினாராக வுரைப்பினுமமையும். தூண்டிலானெடுக்கப்பட்ட வராலெனினுமமையும். இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: செவிலிக்கியல்பு கூறி அவளை மீள்வித்தல். நில்லாவளை (பா.192) தொட்டு இதுகாறும்வரப் பாலைத் திணை கூறியவா றறிக. 249

குறிப்புரை :

16.56 அழுங்குதாய்க் குரைத்தல் அழுங்குதாய்க் குரைத்தல் என்பது உலகியல்பு கூறவும் மீளாது நின்று, தானெடுத்து வளர்த்தமை சொல்லிக் கவலாநின்ற செவிலியை, முன்னிலைப்புறமொழியாக, இவர் தாம் இல்லின்க ணெடுத்து வளர்த்தவர் போலும்; அவர்போய்த் தம்மை யிருவரையுங் கூட்டுவித்த தெய்வப்பதியாகிய தில்லையிடத்துப் பழனங்களைச் சென்றணைவரெனத் தம்முட் கூறுவார்போன்று கூறி, மீட்டுக்கொண்டு போகாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.56. செழும்பணை யணைந்தமை
அழுங்குதாய்க் குரைத்தது.
சிற்பி