திருக்கோவையார்-வரைவுமுடுக்கம்


பண் :

பாடல் எண் : 1

எழுங்குலை வாழையின் இன்கனி
தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
னோநின் னருள்வகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எழும் குலை வாழையின் இன் கனி தின்று எழாநின்ற குலைகளை யுடைய வாழைத்திரளின்கணுண்டாகிய இனிய கனிகளைத் தின்று; இள மந்தி இளைய மந்தி; செழுங்குலை வாழை அம் தண் நிழலில் துயில் சிலம்பா வளவிய குலையையுடைய அவ்வாழைத்திரளினது நல்ல குளிர்ந்த நிழற்கண் வெருவுதலின்றித் துஞ்சுஞ் சிலம்பை யுடையாய்; முனைமேல் உழும் கொலை வேல் திருச்சிற்றம்பலவரை உன்னலர் போல் போரிடத் துழுங் கொலை வேலையுடைய திருச்சிற்றம்பலவரை நினையாதாரைப் போல; அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு வருந்தாநின்ற உலைத் தொழிலமைந்த வேல்போலுங் கண்ணை யுடையாட்கு; நின் அருள் வகை என்னோ நினதருட்கூறியாதோ? இவளதாற்றாமைக்கு மருந்தன்று எ - று.
நின்னருள்வகை யென்னோவென்பதற்கு இவ்வாறு வருந்துமிவடிறத்து இனி நீ செய்யக்கருதிய வகை யாதோவெனினு மமையும். அழுங்கொலைவேலென்பது பாடமாயின், அழாநின்ற கொலை வேல்போலுங் கண்ணையுடையாட்கென் றுரைக்க. எழுங் குலை இளங்குலை. செழுங்குலை முதிர்ந்த குலை. எழுங் குலையு முதிர்ந்த குலையு முடைமையான் இடையறாது பழுக்கும் வாழைத் திரளின்கணுண்டாகிய கனியை நுகர்ந்து, மந்தி வேறொன்றான் வெருவாது அவ்வாழை நிழலின்கீழின்புற்றுத் துயிலுமாறுபோல, ஆராவின்ப மிடையிட்டு நுகராது நீ வரைந்து கோடலான் இடையறாத பேரின்பந்துய்த்து, அன்னைசொல்லா லுண்ணடுங்காது நின் றாணிழற் கீழ் இவளின்புற்று வாழ்தல் வேண்டுமென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவுகடாதல். #9; #9; 250

குறிப்புரை :

17.1 வருத்தமிகுதிகூறி வரைவுகடாதல் வருத்தமிகுதிகூறி வரைவுகடாதல் என்பது அலரறிவுறுத்த தோழி, அலரானுங் காவன்மிகுதியானு நின்னை யெதிர்ப்பட மாட்டாதழுது வருந்தாநின்றவளிடத்து நின்னருளிருக்கின்றவா றென்னோவெனத் தலைமகளது வருத்தமிகுதிகூறித் தலை மகனை வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.1. இரவுக் குறியிடத் தேந்திழைப் பாங்கி
வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

பரம்பயன் தன்னடி யேனுக்குப்
பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இக் குன்றிடத்தே தோன்றும் இடம் இக்குன்றிடத்துத் தோன்றுமிடம்; தில்லை வானவன் வானகம் சேர் அரம்பையர் தம் இடமோ தில்லையின் வானவனது வானகத்தைச் சேர்ந்த தெய்வமகளிர் தமதிடமோ; அன்றி வேழத்தின் என்பு நட்ட குரம்பையர் தம் இடமோ அன்றி யானையினென்பை வேலியாக நட்ட குரம்பைகளையுடைய குறத்தியர் இடமோ? நீ கூறுவாயாக எ-று.
பரம் எல்லாப்பொருட்கும் அப்பாலாயவன்; தன் அடியேனுக்குப் பயன் ஆயினுந் தன்னடியேற்குப் பெறும்பயனா யுள்ளான்; பார் விசும்பு ஊடுருவி வரம்பு அயன் மால் அறியாத் தில்லை வானவன் பாரையும் விசும்பையு மூடுருவிநிற்றலாற் றன்னெல்லையை அயனு மாலு மறியாத தில்லையின் வானவனெனக் கூட்டுக.
என்றது அவளை யெட்டவுஞ் சுட்டவும் படாத தெய்வமென் றிருத்தலான், அவள் வாழு மிடத்தை அரம்பையரிடமென்றே கருதுவல், அன்றாயி னுரையென வரைவுடம்படாது கூறியவாறு. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: இரவுக்குறியிடமுணர்த்துதல்.251

குறிப்புரை :

17.2 பெரும்பான்மைகூறி மறுத்தல் பெரும்பான்மைகூறி மறுத்தல் என்பது வரைவுகடாவிய தோழிக்கு, யானவளைத் தெய்வமானுடமென்றறிந்து வரைந்து கோடற்கு இக்குன்றிடத்துத் தோன்றாநின்ற விடம் தெய்வமகளிர திடமோ, அன்றிக் குறத்தியரிடமோ, கூறுவாயாகவெனத் தலைமகன் றலைமகளைப் பெரும்பான்மை கூறி மறுத்துரையா நிற்றல். அதற்குச் செய்யுள்
17.2. குலம்புரி கொம்பர்க்குச்
சிலம்பன் செப்பியது.

பண் :

பாடல் எண் : 3

சிறார்கவண் வாய்த்த மணியிற்
சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில்
உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற்
றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக்
காத்தும் பெரும்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெருந்தேன் சிறார்கையிற் கவண் தப்பாமல் அதுவிட்ட மணியாற் சிதைந்த பெருந்தேன்; இழு மென்று இழுமென்னு மோசையை யுடைத்தாய்; இறால் கழிவுற்று எம் சிறுகுடில் உந்தும் இடம் இது இறாலினின்றுங் கழிதலையுற்று எமது சிறு குடிலைத் தள்ளுமிவ்விடம்; எந்தை உறாவரை எந்தையது முற்றூட்டு; உற்றார் குறவர் எமக்குற்றார் குறவர்; பெற்றாளும் கொடிச்சி எம்மைப்பெற்றாளுங் கொடிச்சியே; உம்பர் பெறா அருள் அம்பலவன் மலைப்பெரும் புனம் காத்தும் யாமும் தன்னன்பரல்லது உம்பர்பெறாத வருளையுடைய அம்பலவனது மலைக்கட் பெரும்புனத்தைக்காத்தும்; அதனால் நீயிர் வரைவுவேண்டாமையி னெம்மைப் புனைந்துரைக்க வேண்டுவ தில்லை எ - று.
``கோவையுந் தொகையு மாவயின் வரையார்`` என்பதனான், இது தொடர்நிலைச் செய்யுளாதலிற் குரம்பையர் தம்மிடமோவென்று வினாவப்பட்ட விடம் எஞ்சிறுகுடிலுந்துமிட மெனவும் ஒருபுனத்தைச் சுட்டி இதெந்தையுறாவரை யெனவுங் கூறினாளாக வுரைப்பினு மமையும். சிறாரெறிந்த மணியாற் பெருந்தேன் சிதைந்து அவ் விறாலைவிட்டுக் கழிந்து, சிறுகுடிலிற் பரந்தாற் போல, அயலார் கூறும் அலரான் நுமது மறைந்தவொழுக்கம் நும் வயினடங்காது பலருமறிய வெளிப்படாநின்றதென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: குறியிடமுணர்த்துதல். 252

குறிப்புரை :

17.3 உள்ளது கூறிவரைவு கடாதல் உள்ளதுகூறி வரைவுகடாதல் என்பது பெரும்பான்மை கூறி மறுத்த தலைமகனுக்கு, இவ்விடம் எந்தையது முற்றூட்டு; எமக்குற்றார் குறவரே; எம்மைப்பெற்றாளுங் கொடிச்சியே; யாங்களும் புனங்காப்போஞ்சிலர்; நீ வரைவு வேண்டாமையின் எம்மைப் புனைந்துரைக்கவேண்டுவதில்லையெனப் பின்னும் வரைவு தோன்றத் தோழி தங்களுண்மை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.3. இன்மை யுரைத்த மன்ன னுக்கு
மாழை நோக்கி தோழி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

கடந்தொறும் வாரண வல்சியின்
நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு
நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறுந் தீஅர வன்னம்
பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப
நின்னருள் தோன்றுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பல் சீயம் வாரண வல்சியின் நாடி பலவாகிய சீயம் வாரணமாகிய வல்சி காரணமாகத்தேடி; கங்குல் கடம் தொறும் இடம் பார்க்கும் இயவு கங்குற் பொழுதின்கட் காடுக டோறுங் காட்டினிடங்கடோறுஞ் சென்று பார்க்கு நெறியின்கண்; ஒரு நீ எழில் வேலின் வந்தால் தனியையாகிய நீ எழிலையுடைய வேல் துணையாக வந்தால்; அன்ப அன்பனே; நின் அருள் எம்மைத் தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே தோன்றுவது எம்மிடத்துண்டாகிய நின்னருள் எம்மைவிடாதே தொடர்ந்தொறுக்குந் துன்பமென்னு முணர்வே எமக்குத் தோன்றுவது எ - று.
படம் தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை ஒறும் படந்தொறுமுண்டாகிய தீயையுடைய அரவை யணிந்தவன தம்பலத்தைப் பணியாதாரைப் போல வருந்த எம்மை யொறுக்கு மெனக்கூட்டுக.
என்றது, எமக்கு நீ செய்யுந் தலையளியை யாங்கள் துன்பமாகவே யுணராநின்றோம் என்றவாறு. நாடுதல் மனத்தா லாராய்தல். பார்த்தல் கண்ணா னோக்குதல். வேலினென்னு மைந்தாவது ஏதுவின்கண் வந்தது. ஒறுக்குமென்பது ஒறுமென விடைக் குறைந்து நின்றது. எம்மை நீ விடாது தொடருந்தொறு மெனினுமமையும். இதற்குத் தொடரு மென்பது இடைக்குறைந்து நின்றது. நின்னரு ளென்னு மெழுவாய் துன்பமென்னும் பயனிலை கொண்டது. மெய்ப்பாடு: அச்சம். பயன்: இரவுக்குறிய தேதங்காட்டி வரைவு கடாதல். 253

குறிப்புரை :

17.4 ஏதங்கூறியிரவரவுவிலக்கல் ஏதங்கூறியிரவரவுவிலக்கல் என்பது உண்மையுரைத்து வரைவுகடாய தோழி, நீ வரைவொடு வாராயாயிற் சிங்கந் திர ண்டு தனக்கியானையாகிய வுணவுகளைத்தேடு மிருளின்கண், நினது கைவேல் துணையாக நீவந்தருளாநின்ற விஃதே எங்களுக்குத் துன்பமாகத் தோன்றாநின்றது; இனியிவ்விருளிடை வாரா தொழிவாயென ஏதங்கூறித் தலைமகனை யிரவரவு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
17.4. இரவரு துயரம் ஏந்தலுக் கெண்ணிப்
பருவர லெய்திப் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 5

களிறுற்ற செல்லல் களைவயிற்
பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
நாட பெடைநடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகன்
நீசெய்யும் மெய்யருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
களிறு உற்ற செல்லல் பெண் களைவயின் அசும்பின்கட்பட்டுக் களிறுற்ற வருத்தத்தைப் பிடி தீர்க்கின்ற விடத்து; மரம் கைஞ் ஞெமிர்த்துப் பிளிறு உற்ற வானப் பெருவரை நாட மரத்தைக் கையான் முறித்துப் பிளிறுதலை யுற்ற வானத்தைத்தோயும் பெரியவரையையுடைய நாடனே; பெடை நடையோடு ஒளிறு உற்ற மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் அன்னப்பெடை யினது நடைபோலு நடையையுடையாளொடுகூடி விளங்குதலை யுற்ற மேனியையுடையவனது சிற்றம்பலத்தை நெஞ்சா லுறாதாரைப் போல யாமிடர்ப்பட; வெளிறு உற்ற வான் பழியாம் வெளிப் படுதலையுற்ற பெரிய பழியாகாநின்றது; நீ பகல் செய்யும் மெய் அருள் நீ பகல்வந்து எமக்குச் செய்யும் மெய்யாகியவருள் எ - று.
மெய்யருளென்றது மெய்யாக வருளுகின்றாயேனு மென்ற வாறு. வழியல்லாவழிச் சேறலான் அசும்பிற் பட்ட களிற்றினை வாங்குதற்குப் பிடி முயல்கின்றாற்போல, இவளை யெய்துதற் குபாயமல்லாத விவ்வொழுக்கத்தினை விரும்பு நின்னை இதனி னின்று மாற்றுதற்கு யான் முயலாநின்றேனென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறிவிலக்கி வரைவு கடாதல். 254

குறிப்புரை :

17.5 பழிவரவுரைத்துப்பகல்வரவுவிலக்கல் பழிவரவுரைத்துப் பகல்வரவு விலக்கல் என்பது இவ்விருளிடை வாராதொழிகென்றது பகல்வரச் சொன்னவாறா மென வுட்கொண்டு, பகற்குறிச் சென்று நிற்ப, தோழி யெதிர்ப்பட் டுப் பகல் வந்து எமக்குச் செய்யாநின்ற மெய்யாகியவருள் புறத்தாரறிந்து வெளிப்பட்டுப் பழியாகப் புகுதாநின்றது; இனிப் பகல்வர வொழிவாயாகவெனப் பழிவருதல் கூறிப் பகல் வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
17.5. ஆங்ஙனம் ஒழுகும் அடல்வே லண்ணலைப்
பாங்கி ஐய பகல்வர லென்றது.

பண் :

பாடல் எண் : 6

கழிகட் டலைமலை வோன்புலி
யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇஅரி
யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலின்
துவளு மிவள்பொருட்டே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொழிகட் புயலின் மயிலின் துவளும் இவள் பொருட்டு பொழியாநின்ற கண்ணிற் புனலையுடையதோர் மயில்போலத் துவளாநின்ற விவள் காரணமாக; அரியாளி வெரீஇ அரியையும் யாளியையும் வெருவி; குழி கண் களிறு குழிந்த கண்ணை யுடையவாகிய யானைகள்; குழீஇ ஓரிடத்தே திரண்டு நின்று; வழங்கா அவ்விடத்து நின்றும் புடைபெயராத; கழி கட்டிரவின் வரல் சிறந்த வச்சத்தைச் செய்யு மிரவின்கண் வாரா தொழிவாயாக; கழல் கை தொழுது இரந்தேன் நின்கழல்களைக் கையாற்றொழுது நின்னையிரந்தே னிதனை எ - று.
கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல் வெரீஇ கழிந்த கண்ணையுடைய தலைமாலையைச் சூடுவோனது புலியூரைக் கருதாதாரைப்போல வெருவியெனக்கூட்டுக.
குழிவழங்காவென்று பாடமோதி, அரியையும் யாளியையுங் குழியையும் வெருவி வழங்காவென்றுரைப்பாருமுளர். கழி அச்சத் தைச்செய்யு மியல்பாற் சிறத்தல். கழிகட்டி ரவினென்பதற்குக் கழி சிறப்பின்கண் வந்து அரையிரவின்கணென்பது பட நின்றதெனினு மமையும். பொழிகட் புயலின் மயிலிற் றுவளு மென்றதனால், இவ் வாறிவளாற்றாளெனினும் நீ வரற்பாலையல்லையென்று கூறி வரைவு கடாவினாளாம். வழியிடை வரு மேதங் குறித்து இவ்வாறாகின்ற விவள்பொருட்டென் றுரைப்பினுமமையும். கருதார் மனம்போல் என்பது பாடமாயின், மனம்போலுங் கழிகட்டிரவெனவியையும். மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக்குறிவிலக்கி வரைவு கடாதல். 255

குறிப்புரை :

17.6 தொழுதிரந்துகூறல் தொழுதிரந்து கூறல் என்பது பகல்வரவு விலக்கின தோழி, இவனிரவுவரவுங் கூடுமென வுட்கொண்டு, நின்னை யெதிர்ப்பட வேண்டி அழுது வருந்தாநின்ற இவள் காரணமாக, அரிக்கும் யாளிக்கும் வெருவி யானைகள் திரண்டு புடைபெயராத மிக்க விருளின்கண் வாராதொழிவாயாக வென்று, நின் கழல்களைக் கையாற்றொழுது, நின்னை யிரந்தேனென வரைவு தோன்றத் தலைமகனைத் தொழுதிரந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.6. இரவரவின் ஏதமஞ்சிச்
சுரிதருகுழற் றோழிசொல்லியது.

பண் :

பாடல் எண் : 7

விண்ணுஞ் செலவறி யாவெறி
யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
கானல் அரையிரவின்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
நோக்கினள் கார்மயிலே. 9;

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார் மயிலே கார்காலத்து மயிலை யொப்பாய்; தில்லை மல் எழில் கானல் தில்லையில் வளவிய வெழிலையுடைய கானலிடத்து; அரை இரவின் மணி அண்ணல் நெடுந் தேர் வந்தது உண்டாம் என அரையிரவின்கண் மணிகளை யுடைய தலையாய தொரு நெடுந்தேர் வந்ததுண்டாகக்கூடுமென வுட்கொண்டு; அன்னை சிறிது கண்ணும் சிவந்து அன்னை சிறிதே கண்ணுஞ்சிவந்து; என்னையும் நோக்கினள் என்னையும் பார்த்தனள்; இருந்த வாற்றான் இவ்வொழுக்கத்தினை யறிந்தாள் போலும்! எ - று.
விண்ணும் செலவு அறியா விண்ணுளாரானும் எல்லாப் பொருளையுங் கடந்தப்பாற்சென்ற செலவையறியப்படாத; வெறி ஆர் கழல் வீழ் சடைத் தீ வண்ணன் நறு நாற்றமார்ந்த கழலினையுந் தாழ்ந்த சடையினையுமுடைய தீவண்ணன்; சிவன் சிவன்; தில்லை- அவனது தில்லையெனக் கூட்டுக.
எல்லாப் பொருளையுங்கடந்து நின்றனவாயினும், அன்பர்க் கணியவாய் அவரிட்ட நறுமலரான் வெறிகமழுமென்பது போதர வெறியார் கழ லென்றார். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: படைத்து மொழியால் வரைவுகடாதல். 256

குறிப்புரை :

17.7 தாயறிவுகூறல் தாயறிவு கூறல் என்பது தொழுதிரந்து கூறவும், வேட்கை மிகவாற் பின்னுங் குறியிடைச்சென்று நிற்ப, அக்குறிப்பறிந்து, நங்கானலிடத்து அரையிரவின்கண் ஒரு தேர்வந்த துண்டாகக் கூடுமெனவுட்கொண்டு, அன்னை சிறிதே கண்ணுஞ்சிவந்து என்னையும் பார்த்தாள்; இருந்தவாற்றான் இவ்வொழுக்கத்தை யறிந்தாள்போலுமெனத் தோழி தலைமகளுக்குக் கூறுவாள் போன்று சிறைப்புறமாகத் தலைமகனுக்கு வரைவுதோன்றத் தாயறிவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.7. சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப
வெறிக்குழற் பாங்கி மெல்லியற் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

வான்றோய் பொழிலெழின் மாங்கனி
மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர்
போலும் வரிவளையே. 9;

பொழிப்புரை :

இதன் பொருள்:
நீள் திருமுடிமேல் மீன் தோய் புனல் பெண்ணை வைத்து நீண்ட திருமுடிக்கண் மீனைப்பொருந்திய புனலாகிய பெண்ணை வைத்து; உடையாளையும் மேனி வைத்தான் வான் தோய் மதில் தில்லை மாநகர் போலும் வரிவளை எல்லாவற்றையு முடையவளையுந் திருமேனிக்கண் வைத்தவனது வானைத்தோயு மதிலையுடைய தில்லையாகிய பெரியநகரை யொக்கும் வரிவளை; வான் தோய் பொழில் எழில் மாங்கனி வானைத் தோயும் பொழிலின் கணுண்டாகிய நல்லமாங்கனியை; கடுவன் தேன் தோய்த்து மந்தியின் வாய் அருத்தி மகிழ்வ கண்டாள் கடுவன் தேனின் கட்டோய்த்து மந்தியின்வாய்க் கொடுத்து நுகர்வித்துத் தம்மு ளின்புறுமவற்றைக் கண்டாள் எ - று.
என்றதனால், துணைபுறங் காக்குங் கடுவனைக்கண்டு, விலங்குகளுமிவ்வாறு செய்யாநின்றன; இது நங்காதலர்க்கு நம் மாட்டரிதாயிற்றென நீ வரையாமையை நினைந்தாற்றாளாயினா ளென்றாளாம். அருத்தி என்பதற்கு நெடுஞ் சுரநீந்தி (தி.8 கோவை பா. 247) என்றதற் குரைத்ததுரைக்க. கான்றோய் பொழிலென்பதூஉம் பாடம். வரிவளையை வரைவு - வரிவளையை வரைதல். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: வரைவுகடாதல். 257

குறிப்புரை :

17.8 மந்திமேல்வைத்து வரைவுகடாதல் மந்திமேல்வைத்து வரைவுகடாதல் என்பது சிறைப்புறமா கத் தாயறிவுகூறிச் சென்றெதிர்ப்பட்டு, ஒரு கடுவன் றன்மந்திக்கு மாங்கனியைத் தேனின்கட்டோய்த்துக் கொடுத்து நுகர்வித்துத் தம்முளின்புறுவதுகண்டு, இது நங்காதலர்க்கு நம்மாட்டரிதாயிற் றென நீ வரையாமையை நினைந்தாற்றாளாயினாளென மந்தி மேல் வைத்துத் தலைமகளது வருத்தங்கூறி வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
17.8. வரிவளையை வரைவுகடாவி
அரிவைதோழி உரைபகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 9

நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும்
படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
படாது கலங்கினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நறை கள் மலி கொன்றையோன் நறு நாற்றத்தையுடைய தேன்மலிந்த கொன்றையையுடையவன்; நின்று நாடகம் ஆடு தில்லைச் சிறைக்கண் நின்று கூத்தாடுந் தில்லையாகிய சிறையிடத்து; மலி புனல் சீர் நகர் காக்கும் அது பொறாமன் மிகும்புனலையுடைய சீரியநகரை இராப்பொழுதின்கட் காக்கும்; செவ்வேல் இளைஞர் பறைக்கண் படும் படும் தோறும் செவ்வேலை யுடைய இறைஞரது பறைக்கண் படுந்தோறும் படுந்தோறும்; படா முலைப் பைந்தொடியாள் படக்கடவவல்லாத முலையையுடைய பைந்தொடியாளுடைய; கறை கண் மலி கதிர் வேற் கண் கறை தன்கண் மிக்க கதிர்வேல் போலுங்கண்கள்; படாது கலங்கின ஒரு காலும் படாவாய் வருந்தின எ-று.
நாடகமென்றது ஈண்டுக் கூத்தென்னுந் துணையாய் நின்றது. கலங்கினவென்பதற்குத் துயிலாமையான் நிறம்பெயர்ந்தன வென்றும் அழுதுகலங்கினவென்று முரைப்பாருமுளர். காவன்மிகுதியும் அவளதாற்றாமையுங்கூறி வரைவுகடாயவாறு. இஃதின்னார் கூற்றென்னாது துறை கூறிய கருத்து. மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவுகடாதல். 258

குறிப்புரை :

17.9 காவன்மேல்வைத்துக் கண்டுயிலாமைகூறல் காவன்மேல்வைத்துக் கண்டுயிலாமை கூறல் என்பது மந்திமேல்வைத்து வரைவுகடாவப்பட்ட தலைமகன், இது நங்காதலி யிடத்து நமக்கரிதாயிற்றெனத் தானுமாற்றானாய், இரவுக்குறிச் சென்று நிற்ப, அந்நிலைமைக்கண் இவ்விடத்துள் ளார், இவள் காவற்பறை கேட்குந் தோறுங் கண்டுயிலாமைக்குக் காரணமென்னோவெனத் தம்முட் கூறாநிற்றல். இதுவுஞ் சிறைப் புறமாக வரைவுகடாதலைப் பயக்கும். அதற்குச் செய்யுள்
17.9. நகர் காவலின்
மிகுகழி காதல்.

பண் :

பாடல் எண் : 10

கலரா யினர்நினை யாத்தில்லை
அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள்
தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா
மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை
யோநும் வரையிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கலர் ஆயினர் நினையாத் தில்லை அம்பலத்தான் கழற்கு தீமக்களாயுள்ளார் கருதாத தில்லையம்பலத்தா னுடைய திருவடிகட்கு; அன்பு இலர் ஆயினர் வினைபோல் இருள் தூங்கிப் புலரா இரவும் அன்புடையரல்லாதாரது தீவினை போல இருள் செறிந்து புலராதவிரவும்; மின்னி முழங்கிப் பொழியா மழையும் மின்னி முழங்கிப் பொழிவது போன்று பொழியாத மழையும்; புண்ணில் நுழை வேல் மலரா வரும் எமக்குப் புண்ணின்க ணுழையும்வேல் மலராம்வண்ணங் கொடியவாய் வாராநின்றன; மருந்தும் இல்லையோ நும் வரையிடத்து இதற்கொரு மருந்து மில்லையோ நும்வரையிடத்து! எ - று.
மருந்தென்றமையான் வரையிடத்தென்றாள். ஒரு நிலத்துத் தலைமகனாதலின், நும்வரையாகிய இவ்விடத்திதற்கோர் மருந் தில்லையோவென ஓருலக வழக்காகவுரைப்பினுமமையும். வருத்துதலேயன்றித் தணித்தலு முண்டோவென்பதுபட நின்றமையின், மருந்து மென்னுமும்மை: எச்சவும்மை. இரவின்கண் வந்தொழுகா நிற்பவும், இரவுறு துயரந் தீர்க்கு மருந்தில்லையோ வென்று கூறினமையான், வரைவல்லது இவ்வாறொழுகுதல் அதற்கு மருந்தன்றென்று கூறினாளாம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: இரவுக்குறி விலக்குதல். 259

குறிப்புரை :

17.10 பகலுடம்பட்டாள் போன்று இரவரவுவிலக்கல் பகலுடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல் என்பது சிறைப்புறமாகக் கண்டுயிலாமைகேட்ட தலைமகன், ஆதரவு மிகவாலெதிர்ப்படலுற்றுநிற்பத் தோழி யெதிர்ப்பட்டு, நீவந் தொழுகா நின்ற இப் புலராவிரவும் பொழியாமழையும் புண்ணின்க ணுழையும் வேல்மலராம்படியெங்களை வருத்தா நின்றன; இதற்கொரு மருந்தில்லையோ நும்வரையிடத்தெனப் பகலுடம்பட்டாள் போன்றிர வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
17.10. விரைதரு தாரோய்
இரவர லென்றது.

பண் :

பாடல் எண் : 11

இறவரை உம்பர்க் கடவுட்
பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை
நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல
ராம்பக லுன்னருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இற தொடர்ந்து பெய்யாதிறுதலான்; எழிலி உன்னி எழிலிபெய்தலை நினைந்து; வரை உம்பர்க் கடவுள் பராய்- மலைமேலுறையுந் தெய்வங்களைப் பராவி; குறவர் நின்று ஆர்க்கும் குளிர் வரை நாட குறவர் நின்றார்ப்பரவஞ்செய்யுங் குளிர்ந்த வரைமே லுண்டாகிய நாட்டை யுடையாய்; கொழும் பவள நிறவரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் உற கொழுவிய பவளமாகிய நிறத்தையுடைய வரை போலுந் திருமேனியை யுடையவனது சிற்றம்பலத்தை நினையாதவரைப்போல வருந்த; அரை மேகலையாட்குப் பகல் உன் அருள் அலராம் அரைக்கணிந்த மேகலையையுடையாட்குப் பகலுண்டாமுனதருள் மிக்க வலராகா நின்றது; அதனானீவாரல் எ - று.
குறவரையென்புழி, ஐகாரம்; அசைநிலை. அசைநிலை யென்னாது குறமலையென் றுரைப்பாரு முளர். வரையையுடைய நாடெனினு மமையும். குறவர் பரவும் பருவத்துத் தெய்வத்தைப் பரவாது, பின் மழை மறுத்தலா னிடர்ப்பட்டு அதனை முயல்கின்றாற் போல, நீயும் வரையுங்காலத்து வரையாது, இவளை யெய்துதற்கரி தாகியவிடத்துத் துன்புற்று வரைய முயல்வையென உள்ளுறை காண்க.
``உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக்
கொள்ளு மென்ப குறியறிந் தோரே``
(தொல். அகத்திணையியல் - 50) என்பவாகலிற் றெய்வத்தை நீக்கி யுவமைகொள்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறி விலக்குதல்.260

குறிப்புரை :

17.11 இரவுடம்பட்டாள்போன்றுபகல்வரவு விலக்கல் இரவுடம் பட்டாள்போன்று பகல்வரவு விலக்கல் என்பது இவள் மருந்தில்லையோவென்றது, யான் இரவுக்குறிச்செல்லின் மழைக்காலிருளானெதிர்ப்படலருமையான் வேட்கை யுற்றுப் பகற்குறி யுடம்பட்டாளென வுட்கொண்டு, பகற்குறிச் செல்லா நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, பகல்வந்தருளாநின்றது அவளுக்கு வருத்தமுறும் படியாக மிக்க வலராகாநின்றது; அதனாற் பகற்குறி வரற்பாலை யல்லையென, இரவுக்குறி யுடம்பட்டாள் போன்று பகற்குறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
17.11. இகலடு வேலோய்
பகல்வர லென்றது.

பண் :

பாடல் எண் : 12

சுழியா வருபெரு நீர்சென்னி
வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ
லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரின் நீயிர
வேதும் பயனில்லையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஐய ஐயனே; நீ பகல் வரின் புரி மென்குழலாள் திறத்து மெய்யே பழியாம் நீ பகல்வரிற் சுருண்ட மெல்லிய குழலையுடையாடிறத்து மெய்யாகவே அலருண்டாம்; இரவு ஏதும் பயன் இல்லை இராவரின் எதிர்ப்படுத லருமையாற் சிறிதும் பயனில்லை; அதனான் நீயிருபொழுதும் வாரல் எ - று.
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து சுழியாநின்று வரும் பெரியநீரைச் சென்னியின்கண் வைத்து; தன் தொழும்பின் என்னைக் கழியா அருள் வைத்த தனக்குத் தொண்டுபடுதற்கண் என்னை நீங்காத தன்னருளான்வைத்த; சிற்றம்பலவன் கரம்தரும் மான் விழியா வரும் புரி மென்குழலாள் சிற்றம்பலவனது கரத்தின்கண் வைக்கப் பட்ட மான்போல விழித்துவரும் புரிமென்குழலாளெனக் கூட்டுக.
பரந்துவரும் பெரும்புனலை வேகந்தணித்துத் தன் சென்னியின்கண் வைத்தாற் போல நில்லாது பரக்கு நெஞ்சை யுடையேனைத் தன்னருட்க ணடக்கினானென்பது கருத்து. தன்றொழும்பினின்றும் யானீங்காமைக்குக் காரணமாகிய அருட்க ணென்னை வைத்தவனெனினு மமையும். மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக் குறியும் பகற்குறியும் விலக்கி வரைவுகடாதல். 261

குறிப்புரை :

17.12 இரவும்பகலும் வரவுவிலக்கல் இரவும்பகலும் வரவுவிலக்கல் என்பது இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலக்கின தோழி, நீ பகல்வரின் அலர்மிகுதி யானெங்களுக்கு மிக்கபழி வந்தெய்தும்; இராவரின் எவ்வாற் றானு நின்னை யெதிர்ப்படுதலருமையாற் சிறிதும் பயனில்லை; அதனால் நீ யிருபொழுதும் வரற்பாலையல்லையென இரவும் பகலும் வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
17.12. இரவும் பகலும்
வரவொழி கென்றது.

பண் :

பாடல் எண் : 13

மையார் கதலி வனத்து
வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத்
தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
மாலையின் முன்னினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மை ஆர் கதலி வனத்து வருக்கைப் பழம் விழுதேன் இருளார்ந்த வாழைக்காட்டின்கண் வருக்கைப்பலாவின் பழம்விழுதலா னுண்டாகியதேனை; இள மந்திகள் எய்யாது அயின்று சோரும் இருஞ் சிலம்பா இளையமந்திகளறியாதே யுண்டு பின் களியாற் சோரும் பெரிய சிலம்பையுடையாய்; மதி ஊர்கொள் மதி நிரம்பாநின்றது; அம்பலத்தான் வெற்பின் அம்பலத்தானுடைய இவ்வெற்பின்கண்; மொய் ஆர் வளர் இளவேங்கை பொன் மாலையின் முன்னின செறிவார்ந்த வளராநின்ற விளைய வேங்கைகள் பூத்துப் பொன்மாலைபோலத் தோன்றின; மெய்யா அரியது என் இனி மெய்யாக வுனக்கரிய தியாது! எ - று.
கதலிவனத்துண்டாகிய தேனென்றதனாற் கதலிக்கனியொடு கூடுதல் பெற்றாம். ஊர்கோடல் குறைவின்றி மண்டலமாக வொளிபரத்தல். அல்லதூஉம் பரிவேடித்தலெனினுமமையும். நின்மலைக்கண் விலங்குகளு மித்தன்மைத்தாகிய தேனைக் குறியாதுண்டு இன்புறாநின்றனவாகலிற் குறித்தவற்றினினக்கரிய தியாது இதுவன்றோ பருவமுமென வரைவு பயப்பக் கூறியவாறாயிற்று. மந்திகடேருமென்பது பாடமாயின், தேனை யறியாதுண்டு அதன் சுவை மிகுதியாற் பின்னதனைத் தேர்ந்துணரு மென்றுரைக்க. வேட்ட பொருள் உள்ளத்து முற்பட்டுத் தோன்றுதலின், வரைவை முந்தியபொருளென்றாள். வரைதருகிளவி வரையுங் கிளவி. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: வரைவுகடாதல். 262

குறிப்புரை :

17.13 காலங்கூறி வரைவுகடாதல் காலங்கூறி வரைவுகடாதல் என்பது இருபொழுதும் வரவு விலக்கின தோழி, மதி நிரம்பாநின்றது; வேங்கை பூவாநின்றன; இனி நினக்கு வரைவொடு வருதற்குக் காலமிதுவெனக் காலங்கூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.13. முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து
வரைதரு கிளவியில் தெரிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 14

தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்
பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்
னாஞ்சொல்லுந் தன்மைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேமாம் பொழில் தில்லைச் சிற்றம்பலத்து தேமாம் பொழிலையுடைய தில்லைச் சிற்றம்பலத்தின்கண்; விண்ணோர் வணங்க நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின் விண்ணோர்வணங்கவும் நாம் விரும்பவுங் கூத்தைச் செய்வானைச் சேராதாரைப்போல வருந்த; வாம் மாண்கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் அழகு மாட்சிமைப்பட்ட மேகலை கழலும் வண்ணங் கண்டு தலையளி செய்யாது நின்றவர் பெருகிக் கிடந்த நம்மல்லலைக்கண்டால்; தாமா அறிகிலர் ஆயின் நம்மாற் றலையளிக்கப்படுவார் இவ்வாறு வருந்துதறகாதென்று தாமாகவறிகின்றிலராயின்; நாம் சொல்லும் தன்மைகள் என் நாஞ்சொல்லுமியல்புகளென்! எ - று.
வாமம் வாமென விடைக் குறைந்து நின்றது. அலரான்வரு நாணினையுங், காணாமையான் வருமாற்றாமையையும் பற்றிக் கிடந்த நம்மல்லலென்றாள். ஒத்ததொவ்வா தென்பதனை ஒத்து மொவ்வாம லெனத் திரிக்க. அஃதாவது இராவருதலுடம்பட்டாள் போன்று பகல்வார லென்றலும், பகல்வருத லுடம்பட்டாள் போன்று இராவார லென்றலும், பின் இருபொழுதையு மறுத்தலும். 263

குறிப்புரை :

17.14 கூறுவிக்குற்றல் கூறுவிக்குற்றல் என்பது காலங் கூறி வரைவு கடாவவும் வரைவுடம்படாமையின் அவடன்னைக் கொண்டே கூறுவிப் பாளாக, அலரான் வருநாணினையுங் காணாமையான் வருமாற் றாமையையும் பற்றிக் கிடந்த நம்மல்லலை நம்மாற் றலையளிக் கப்படுவார் இவ்வாறு வருந்துத றகாதெனத் தாமாகவறி கின்றிலராயின் நாஞ்சொல்லுந் தன்மைகளென்னோவெனப் புலந்து, நீயாகிலுஞ்சென்று கூறென்பது குறிப்பாற்றோன்றத் தலைமகன் வரைவுடம்படாமையைத் தோழி தலைமகட்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.14. ஒத்த தொவ்வா துரைத்த தோழி
கொத்தவிழ் கோதையாற் கூறுவிக் குற்றது.

பண் :

பாடல் எண் : 15

வல்சியி னெண்கு வளர்புற்
றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம்
பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா
வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென்
பவர்ப்பெறிற் கார்மயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார் மயிலே கார்காலத்து மயிலை யொப்பாய்; சிற்றம்பலவரைச் சேரலர் போல் சிற்றம்பலவரைச் சேராதாரைப் போல வருந்த; சீயம் கொல் கரி குறுகாவகை பிடி தான் இடைச் செல் கல்லதர் சீயங் கொல்கரியைச் சென்றணையாத வண்ணம் பிடி தானிரண்டற்கு மிடையே சென்று புகுங் கல்லதரின்கண்; வந்தவாறு என் என்பவர்ப் பெறின் நீர் வந்தவா றெங்ஙனேயென்று சொல்லுவாரைப் பெற்றேமாயின்; வல்சியின் எண்கு வளர்புற்று அகழ மல்கும் இருள்வாய் குரும்பியாகிய வுணவுகாரணமாகக் கரடி உயர்ந்த புற்றை யகழாநிற்ப மிகாநின்ற விருளின்கண்; செல்வு அரிதன்று மன் அவரிருந்த வழிச்சேறலரிதன்று; சென்றேமாயினும் அவ்வாறு சொல்லுவாரில்லை எ - று.
செல்வரிதென்பது செல்வுழிக்க ணென்பதுபோல மெய்யீற்றுடம் படுமெய். செல்லவென்பது கடைக்குறைந்து நின்றதெனினுமமையும். மன்: ஒழியிசைக்கண் வந்தது. கல்லதர் கற்கண்ணதர். கல்லதரி னென்பது பாடமாயின், வந்தவாறென்னென ஒருசொல் வருவித் துரைக்க. பணிமொழி மொழிந்தென்பதனை மொழியவெனத் திரித்து, சிறைப்புறக்கிளவி யாயிற்றெனவொருசொல் வருவித்துரைக்க. சிறைப் புறக் கிளவி யாயிற்றெனவே, சிறைப்புற மாதல் குறித்தாளல்ல ளென்பது பெற்றாம். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த விளிவரல். பயன்: அது. 9; 264

குறிப்புரை :

17.15 செலவுநினைந்துரைத்தல் செலவுநினைந் துரைத்தல் என்பது வரைவுடம்படாமையிற் றோழி தலைமகனோடு புலந்து கூறக்கேட்டு, அக்குறிப்பறிந்து, இக்கல்லதரின்க ணீர்வந்தவா றென்னோவென்று வினவுவாரைப் பெற்றேமாயின் இத்தன்மையையுடைத்தாகிய மிக்க விருளின்கண் யாமவருழைச்சேறலரிதன்று; சென்றேமாயினும் அவ்வாறு சொல்வா ரில்லையெனத் தலைமகள் செலவுநினைந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.15. பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
தேங்கமழ் சிலம்பற்குச் சிறைப்புறக் கிளவி.

பண் :

பாடல் எண் : 16

வாரிக் களிற்றின் மருப்புகு
முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
களிற்றின் மருப்பு உகு முத்தம் களிற்றின் மருப்புக்களினின்று முக்க முத்துக்களை; வரை மகளிர் வேரிக்கு வாரி அளிக்கும் விழுமலை நாட வரையின்வாழுமகளிர் வேரிக்கு விலையாக முகந்துகொடுக்குஞ் சிறந்த மலைக்கணுண்டாகிய நாட்டையுடையாய்; விரி திரையின் நாரிக்கு அளிக்க அமர் விரியுந் திரையையுடைய யாறாகிய பெண்ணிற்குக் கொடுத்தற்குப் பொருந்திய; நல் மாச் சடைமுடி நம்பர் தில்லை ஏர் இக்களிக் கரு மஞ்ஞை நல்ல பெரிய சடைமுடியையுடைய நம்பரது தில்லை யினுளளாகிய ஏரை யுடைய இக்களிக் கரு மஞ்ஞையை யொப்பாள்; இந்நீர்மை எய்துவதுஎன் தன்றன்மையை யிழந்து இத்தன்மையை யெய்துவதென்? நீயுரை எ - று.
மலையையுடைய நாடெனினுமமையும். விரிதிரையி னென்பது அல்வழிச்சாரியை. விரிதிரையையுடைய நாரியெனினு மமையும். நாரிக்களித்தம ரென்பது பாடமாயின், நாரிக்களித்தலான் அவளமருஞ்சடை யென்றுரைக்க. களிக்கரு மஞ்ஞை களியை யுடைய கரிய மஞ்ஞை. அணைதற்கரிய களிற்றின் மருப்பினின்று முக்க முத்தத்தின தருமையைக் கருதாது தமக்கின்பஞ் செய்யும் வேரிக்குக் கொடுத்தாற் போல, என்னையரது காவலை நீவி நின்வயத்தளாகிய விவளதருமை கருதாது நினக்கின்பஞ் செய்யுங் களவொழுக்கங் காரணமாக இகழ்ந்து மதித்தாயென உள்ளுறை காண்க. மெய்ப்பாடும் பயனும் அவை. ; 265

குறிப்புரை :

17.16 பொலிவழிவுரைத்துவரைவுகடாதல் பொலிவழிவுரைத்து வரைவுகடாதல் என்பது தலைமகள் தன்னை யெதிர்ப்படலுற்று வருந்தாநின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன் குறியிடைவந்து நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, என்னையரது காவலை நீவி நின்வயத்தளாய் நின்று பொலிவழிந்து வருந்தா நின்றவளை நீ வரைந்துகொள்ளாது இவ்வாறிகழ்ந்து மதித்தற்குக் காரணமென்னோவெனத் தலைமகளது பொலிவழிவு கூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.16. வரைவு விரும்பு மன்னுயிர்ப் பாங்கி
விரைதரு குழலி மெலிவு ரைத்தது.
சிற்பி