திருக்கோவையார்-ஓதற்பிரிவு


பண் :

பாடல் எண் : 1

சீரள வில்லாத் திகழ்தரு
கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென்
றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின
ராகுவ ரேந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏந்திழை ஏந்திழையாய்; சீர் அளவு இல்லாத் திகழ்தரு கல்விச் செம்பொன் வரையின் ஆரளவு இல்லா அளவு சென்றார் நன்மைக்கெல்லையில்லாத விளங்குங் கல்வி யாகிய மேருக் குன்றத்தினது மிக்கவளவில்லாத வெல்லையை யடைந்தவர்கள்; அம்பலத்துள் நின்ற ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் அம்பலத்தின்கணின்ற ஓரளவையுமில்லாத ஒப்பில்லாதானுடைய பெரிய திருவடிகளையறிந்து நினைந்தவரைப் போல; ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர் - நன்மைக் கெல்லை யில்லாத தன்மையராவர் எ - று.
செம்பொன் வரை யென்றான், தூய்மையும் பெருமையுங் கலங்காமையுமுடைமையால். கற்றதின் மேலுங் கற்க நினைக்கின்றா னாதலான், ஆரளவில்லா வளவு சென்றா ரென்றான். ஆரளவு காதமும் புகையு முதலாயின அளவு. ஓரளவென்பது காட்சியும் அனுமானமு முதலாயினவளவு. இது குறிப்பெச்சம். செல்வத்தவர் இல்வாழ்க்கைச் செல்வத்தவர். அறிவறிவித்தது அறியப்படுவதனை யறிவித்தது. பாங்கியறிவறி வித்ததென்பது பாடமாயின், தலைமகனது குறிப்பைக் கண்டு தோழி தலைமகட்குக் குறிப்பினாற் கூறினாளாகவுரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன் பிரிவுணர்த்தல்.308

குறிப்புரை :

20.1 கல்விநலங்கூறல் கல்விநலங் கூறல் என்பது வரைந்துகொண்ட பின்னர் ஓதற்குப் பிரிய லுறாநின்ற தலைமகன், தலைமகளுக்குப் பிரிவு ணர்த்துவானாக மிகவுங் கூற்றாற் கற்றோர் நன்மைக்கெல்லை யில்லாத தன்மைய ராவரெனத் தோழிக்குக் கல்விநலங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
20.1. கல்விக் ககல்வர் செல்வத் தவரெனச்
செறிகுழற் பாங்கிக் கறிவறி வித்தது.

பண் :

பாடல் எண் : 2

வீதலுற் றார்தலை மாலையன்
தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற்
றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை
யுற்ற புரவலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செல்வீ செல்வீ; வீதல் உற்றார் தலை மாலையன் கெடுதலையடைந்தவர் தலையானியன்ற மாலையை யுடையான்; தில்லைமிக்கோன் தில்லைக் கணுளனாகிய பெரியோன்; கழற்கே காதல் உற்றார் நன்மை கல்வி தரும் என்பது கொண்டு அவனுடைய திருவடிக்கே யன்புற்றாரது நன்மையைக் கல்வி தருமென்பதனைக் கருதி; ஓதல் உற்றார் உற்று ஓதுதலான் மிக்காரைக் கிடைத்து; உணர்தல் உற்றார் எல்லா நூல்களையு முணர்தலுற்று; நின்புணர் முலை உற்ற புரவலர் நின்புணர் முலையைச் சேர்ந்த புரவலர்; செல்லல் மல் அழல் கான் போதல் உற்றார்- இன்னாமையைச் செய்யும் மிக்க வழலையுடைய கானகத்தைப் போகநினைந்தார் எ- று.
ஓத்தான் உயர்ந்தாரைக் கிடைத்து அவரோடுசாவித் தமது கல்விமிகுதியை யறியலுற்றா ரென்றுரைப்பாருமுளர். உணர்தலுற்றா ரென்பதனை முற்றாகவுரைப் பினுமமையும். நின்புணர் முலையுற்ற வென்றதனான், முலையிடத்துத் துயிலை நினைந்து நீட்டியாது வருவரென்றும், புரவலரென்றதனான். நின்னலந் தொலையாமற் காப்பரென்றுங் கூறிப் பிரிவுடம்படுத்தாளாம். செல்வத்தவரென்றது ஈண்டுத் தலைமகனை. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுணர்த்துதல். 309

குறிப்புரை :

20.2 பிரிவு நினைவுரைத்தல் பிரிவுநினைவுரைத்தல் என்பது கல்விநலங் கேட்ட தோழிஅவன் பிரிதற் குறிப்பறிந்து, மிகவுங் கற்றோர் நன்மைக் கெதிரில்லாத தன்மையராவரென்பதனை யுட்கொண்டு, நின்புணர்முலையுற்றபுரவலர், அழற்கானத்தே போய்க் கல்வியான் மிக்காரைக் கிட்டி அவரோடு உசாவித் தங்கல்வி மிகுதி புலப்படுத்தப் பிரியா நின்றாரெனத் தலைமகன் ஓதுதற்குப் பிரிவு நினைந்தமை தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
20.2. கல்விக் ககல்வர் செல்வத் தவரெனப்
பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 3

கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கல் பா மதில் தில்லைச் சிற்றம்பலமது காதல் செய்த கல்லாற் செய்யப்பட்ட பரந்த மதிலையுடைய தில்லைக்கட் சிற்றம்பலமதனைக் காதலித்த; வில் பா விலங்கல் எங்கோனை விரும்பலர் போல வில்லாகச் செய்யப்பட்ட பரந்த மலையையுடைய எம்முடையகோனை விரும்பாதாரைப் போல; அன்பர் சொல் பா விரும்பினர் என்ன நம்மன்பர் சொல்லானியன்ற பாவாகிய நூல்களைக் கற்க விரும்பினாரென்று சொல்ல; மெல்லோதி செவிப் புறத்து அச்சொல் மெல்லோதியையுடையாளது செவிக்கண்; கொல் பா இலங்கு இலை வேல் குளித்தாங்குக் குறுகியது கொற்றொழில் பரந்த விளங்குமிலையையுடைய வேல் சென்று மூழ்கினாற்போலச் சென்றெய்திற்று; இனிப் பிரிவை யெங்ஙனமாற்றுமோ! எ - று.
பொருப்புவில்லி மேல் விருப்புடையார் கல்விக் கடனீந்தி வருந்தாமையின் விரும்பலர்போலச் சொற்பாவிரும்பின ரென்றாள். இனி வருந்தவென்பதோர் சொல்லைவிரித்து விரும்பலர் போல வருந்த அச்சொற்குறுகியதென் றுரைப்பினுமமையும். பூங்கொடி கலக்கம் பாங்கி தன்னுள்ளே சொல்லியது; தலைமகற்குக் கூறியதென் றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்கு வித்தல். 310

குறிப்புரை :

20.3 கலக்கங்கண்டுரைத்தல் கலக்கங்கண்டுரைத்தல் என்பது பிரிவுநினை வுரைப்பக் கேட்ட தலைமகளது கலக்கங்கண்ட தோழி, அன்பர் சொற்பா விரும்பினரென்ன, அச்சொல் இவள் செவிக்கட் காய்ந்தவேல் போலச் சென்றெய்திற்று; இனி மற்றுள்ள பிரிவை எங்ஙனமாற்று வளெனத் தன்னுள்ளே கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
20.3. ஓதற் ககல்வர் மேதக் கவரெனப்
பூங்கொடி கலக்கம் பாங்கிகண் டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

பிரியா மையுமுயி ரொன்றா
வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப்
பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி
யென்னாம் புகல்வதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தையல் மெய்யின் பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேரியல் ஊரர் தையலாடனது திருமேனியி னின்றும் பிரியாமையைச் செய்து நின்றவனது தில்லையிற் பெருந்தன்மையை யுடைய வூரர்; பிரியாமையும் நம்மிற்பிரியாமையையும்; உயிர் ஒன்றாவதும் இருவருக்கு முயிரொன்றாதலையும்; பிரியின் பெரிதும் தரியாமையும் பிரியிற்பெரிதுமாற்றாமையையும்; ஒருங்கே நின்று சாற்றினர் ஒருங்கே அக்காலத்து நம் முன்னின்று கூறினார்; அன்ன புரியாமையும் இதுவே இப்பொழுது அவற்றுட் பிரியாமை பொய்யாகக் கண்டமையின் உயிர் வேறுபடக்கருதுதலும் பிரிவாற்றுதலுமாகிய அன்னவற்றைச் செய்யாமையும் இப் பிரியாமையோடொக்கும்; இனி நாம் புகல்வது என் இனிநாஞ் சொல்வதென்! எ - று.
தையன்மெய்யிற் பிரியாத பேரன்பினோனது தில்லைக்கட் பயின்றும் அன்புபேணாது பிரிதல் எங்ஙனம் வல்லராயினாரென்னுங் கருத்தால், பிரியாமைசெய்து நின்றோன் றில்லைப் பேரியலூர ரென்றாள். பிரிவுகாணப்பட்டமையின், அன்னவென்றது ஒழிந்த விரண்டையுமேயாம். அன்னபுரியாமையு மிதுவேயென்பதற்குப் பிரிவுமுதலாகிய நமக்கின்னாதவற்றைத் தாம் செய்யாமையுமிதுவே யாயிருந்ததெனி னு மமையும். இன்னல் பிரியாமையுமிதுவேயென்று பாடமோதுவாரு முளர். மெய்ப்பாடும், பயனும் அவை. 311

குறிப்புரை :

20.4 வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் என்பது கலக்கங் கண்டுரைத்த தோழிக்கு, முன்னிலைப்புறமொழியாக நின்னிற் பிரியேன் பிரிவுமாற்றேனென்று சொன்னவர் தாமே பிரிவராயின், இதற்கு நாஞ்சொல்லுவதென்னோவெனத் தலைமகனது வாய் மொழி கூறித் தலைமகள் வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
20.4. தீதறுகல்விக்குச் செல்வன்செல்லுமெனப்
போதுறுகுழலி புலம்பியது.
சிற்பி