திருக்கோவை-பகைதணிவினைப்பிரிவு


பண் :

பாடல் எண் : 1

மிகைதணித் தற்கரி தாமிரு
வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
தாழ்தரு மொய்குழலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பல் பிறவித் தொகை தணித்தற்கு என்னை ஆண்டு கொண்டோன் தில்லை பேரருளினராதலின் தாமளிக்கு மிடத்துப் பல பிறவித்தொகையான் வருங் கழிபெருந் துன்ப முடையாரையே வேண்டுதலின் என்னையடிமைக் கொண்டவனது தில்லைக்கண்; சூழ்பொழில் வாய் முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ் தரு மொய் குழல் சூழ்ந்த பொழிலிடத்துளவாகிய போதுகளாற் றனது நறுநாற்ற மாற்றுதற் கரிதாஞ் சுருண்ட தாழ்ந்த நெருங்கிய குழலை யுடையாய்; மிகை தணித்தற்கு அரிதாம் ஒருவருள்ள மிகுதியை ஒருவர்தணித்தற் கரிதாகாநின்ற; இருவேந்தர் வெம்போர் மிடைந்த பகை தணித்தற்கு நமர் படர்தல் உற்றார் இருவேந்தரது வெய்யபோர் நெருங்கிய பகையை மாற்றுதற்கு நமர் போக நினைந்தார் எ - று.
எளிதினிற் சந்து செய்வித்துக் கடிதின் மீள்வரென்பது பயப்ப, மிகைதணித்தற்கரிதா மிருவேந்த ரென்றதனால் ஒத்த வலியின ராதலும், வெம்போர்மிடைந்த வென்றதனால் ஒத்த தொலைவின ராதலுங் கூறினாளாம். மிகை தணித்தற்கரிதாம் பகையென வியையும். மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன்: பகை தணிவினையிடைப் பிரிவுணர்த்துதல். 314

குறிப்புரை :

22.1 பிரிவுகூறல் பிரிவுகூறல் என்பது ஒருவரதுள்ளமிகுதியை ஒருவர் தணித்தற்கரிதாகிய இருவேந்தர் தம்முட்பகைத்து உடன்மடியப் புகுதா நின்றாரெனக் கேட்டு, அவ்விருவரையு மடக்கவல்ல திறலுடைய ராதலின், அவரைப் பகைதணித்து அவர் தம்மிலொன்றுபட வேண்டி நின்னைப்பிரியக் கருதாநின்றாரெனத் தலைமகன் பகைதணிக்கப் பிரியலுறாநின்றமை தோழி தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
22.1. துன்னுபகை தணிப்ப மன்னவன் பிரிவு
நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 2

நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மிக்க விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து தன்கண் மிக்க விருப்புறுமவரை விண்ணோரினு மிகச் செய்து; நண்ணார் கழியத் திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திருநுதல் பகைவர் மாய விதிர்க்கப்படுஞ் சூலவேலையுடையவனது தில்லையை யொக்குந் திருநுதால்!; பொருப்பு உறு தோகை பொருப்பைச்சேர்ந்த மயில்போல்வாய்; நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என தீயையுற்ற வெண்ணெயும் நீரையுற்றவுப்பும் போல; இங்ஙனே புலம்புறல் இவ்வாறுருகித் தனிமையுறாதொழி; அன்பர் போக்குப் பொய் அன்பர்போக்குப் பொய் எ - று.
மிகுத்தென்னும் வினையெச்சம் திருப்புறுசூல மென்புழித் திருப்பென்பதனோடு முடிந்தது. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 315

குறிப்புரை :

22.2 வருத்தந்தணித்தல் வருத்தந்தணித்தல் என்பது தலைமகனது பிரிவுகேட்டு உள்ளுடைந்து தனிமையுற்று வருந்தாநின்ற தலைமகளை, நின்னை விட்டு அவர் பிரியார்; நீ நெருப்பையுற்ற வெண்ணெயும் நீரையுற்ற உப்பும்போல இவ்வாறுருகித் தனிமையுற்று வருந்தாதொழியெனத் தோழி அவளது வருத்தந் தணியாநிற்றல். அதற்குச் செய்யுள்
22.2. மணிப்பூண் மன்னவன் தணப்ப தில்லை
அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.

சிற்பி