திருக்கோவை-வேந்தற்குற்றுழிப்பிரிவு


பண் :

பாடல் எண் : 1

போது குலாய புனைமுடி
வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி
லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய்விளை கின்றதின்
றொன்னா ரிடுமதிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாது குலாய மெல் நோக்கி மடவழகு பெற்ற மெல்லிய நோக்கத்தையுடையாய்; போது குலாய புனைமுடி வேந்தர் தம் போர் முனைமேல் பூவழகுபெற்ற பேணிச் செய்யப்பட்ட முடியையுடைய வேந்தர்தமது போரையுடைய பாசறைமேல்; நமர் சென்றார் நமர் சென்றார்; வண் புலியூர்க் காது குலாய குழை எழிலோனைக் கருதலர் போல் வளவிய புலியூரிற் காதழகு பெற்ற குழையாலுண்டாகிய எழிலையுடையவனைக் கருதாதாரைப்போல; ஒன்னார் இடும் மதில் இன்று ஏதாய் விளைகின்றது ஒன்னாரா லிடப்பட்ட மதில் இன்றியாதாய் முடியுமோ! எ - று.
வினைமுடித்துக் கடிதுமீள்வரென்பதுபயப்ப, ஒன்னாரிடுமதி லின்றேயழியுமென்று கூறினாளாம். கொல்லென்பது அசைநிலை. சென்றாரெனத் துணிவு பற்றி இறந்தகாலத்தாற் கூறினாள். திறல் வேந்த ரென்றது, சாதிபற்றியன்று; தலைமை பற்றி. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: வேந்தற்குற்றுழிப் பிரிவுணர்த்துதல். 316

குறிப்புரை :

23.1 பிரிந்தமைகூறல் பிரிந்தமைகூறல் என்பது தம்மைவந்தடைந்த வேந்தனுக் குத் தாமுதவிசெய்வாராக வெய்ய போரையுடைய பாசறைமேல் நமர் சென்றார்; இனி யவ்வேந்தன் பகைவரா லிடப்பட்ட மதில் இன்றென்னாய் முடியுமோவெனத் தலைமகன் வேந்தற்குற்றுழிப் பிரிந்தமை தோழி தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.1. விறல்வேந்தர் வெம்முனைக்கண்
திறல்வேந்தர் செல்வரென்றது.

பண் :

பாடல் எண் : 2

பொன்னி வளைத்த புனல்சூழ்
நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை
யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர்
கவரும் வியன்முகிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொன்னி வளைத்த புனல் சூழ் நிலவிப் பொலி புலியூர் பொன்னி சுற்றுதலானுண்டாகிய புனலாற் சூழப்பட்ட நிலைபெற்றுப் பொலிகின்ற புலியூரில்; வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல் வன்னித்தளிராற் சூழப்பட்ட நெடிய சடையையுடையவனை வணங்காதாரைப்போல; துன்னி வளைத்த நம் தோன்றற்கு இடர்ப்படப் பகைவரைக்கிட்டிச் சூழ்போகிய நம்முடைய தோன்றற்கு; மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகில் மின்னி யுலகத்தை வந்துவளைத்துப் பரந்த கடலைப்பருகும் பெரியமுகில்; பாசறைத் தோன்றும் கொல் பாசறைக்கண்ணே சென்று தோன்றுமோ! எ - று.
வளைத்தலை விரிநீர்மேலேற்றினுமமையும். தோன்றுமாயின் அவர் ஆற்றாராவரென யானாற்றேனாகின்றேனென்பது கருத்து. பொன்னிவளைத்த புனலென்பதற்குப் பொன்னியாற்றகையப்பட்ட புனலென்றும், வன்னிவளைத்த சடையென்பதற்குத் தீயை வளைத்தாற் போலுஞ் சடையென்று முரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றுவித்தல். 317

குறிப்புரை :

23.2 பிரிவாற்றாமைகார்மிசைவைத்தல் பிரிவாற்றாமைகார்மிசைவைத்தல் என்பது பிரிவுகேட்ட தலைமகள், தனது வருத்தங்கண்டு காதலர் வினைவயிற்பிரிய நீ வருந்தினால் வினைமுடியுமாறென்னோ வென்ற தோழிக்கு, யானவர் பிரிந்ததற்கு வருந்துகின்றேனல்லேன்; இக்கார்முகில் சென்று அப்பாசறைக்கண்ணே தோன்றுமாயின், நம்மை நினைந்தாற்றாராய், அவ்வினை முடிக்கமாட்டாரென்று அதற்கு வருந்துகின்றே னெனக் கார்மிசைவைத்துத் தனது வருத்தங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.2. 9; வேந்தற் குற்றுழி விறலோன் பிரிய
ஏந்திழை பாங்கிக் கெடுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

கோலித் திகழ்சிற கொன்றி
னொடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு
சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை
யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன
தாங்கொலென் போதரவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பார்ப்பொடு பெடைக் குருகு திகழ் சிறகு ஒன்றின் கோலி ஒடுக்கிப் பாலித்து பார்ப்புக்களோடு பெடைக்குருகை விளங்காநின்ற சிறகொன்றினாற் கோலியொடுக்கிப் பாதுகாத்து; இரும் பனி சேவல் பயில் இரவின் கொண்டற்றுவலையால் வரும் மிக்ககுளிரைச் சேவல் தானுழக்கு மிரவின்கண்; மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே போலித் திருநுதலாட்கு மாலாற் சிறிது மறியாத அந்தணனுறையும் அம்பலத்தைப்போல் வாளாகிய திருநுதலாட்கு; என் போதரவு என்னதாம் கொல் எனது போதரவு எத்தன்மையதாகுமோ! எ - று.
இரவினென்னதாமென வியையும். நாம் இக்காலத்து நங்காதலிக்குப் பனிமருந்தாயிற்றிலேமென்னும் உள்ளத்தனாகலின், பெடை யொடுக்கிய சிறகைத் திகழ்சிறகெனப் புனைந்து கூறினான். போலித்திருநுதலாட்கென்பதற்கு அம்பலம்போலும் இத்திருநுதலாட் கென்றுரைப்பினு மமையும். இத்திருநுதலாளென்றான் தன்னெஞ்சத்த ளாகலின். மெய்ப்பாடு: அச்சம். பயன்: மீடற்கொருப்படுதல். 318

குறிப்புரை :

23.3 வானோக்கிவருந்தல் வானோக்கிவருந்தல் என்பது உற்றுழிப்பிரிந்த தலைமகன், பார்ப்புக்களோடு பெடைக்குருகைச் சேவல் தன் சிறகானொடுக் கிப் பனியான்வரும் மிக்க குளிரைப் பாதுகாக்கின்ற இரவின்கண் எனது போதரவு அவளுக்கென்னாங் கொல்லோவெனத் தலை மகளது வடிவை நினைந்து வானை நோக்கி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.3. மானோக்கி வடிவுநினைந்தோன்
வானோக்கி வருந்தியது.

பண் :

பாடல் எண் : 4

கருப்பினம் மேவும் பொழிற்றில்லை
மன்னன்கண் ணாரருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென்
றல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மாலெழில்
தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பின மேறித் தமியரைப்
பார்க்கும் புயலினமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வீழ் பனிவாய் நெருப்பினம் மேய் விழா நின்ற பனியிடத்து எல்லாரும் நெருப்புத்திரளை மேவாநிற்ப; நெடுமால் எழில் தோன்றச் சென்று நெடிய மாயவனதெழில் கண்டார்க்குப் புலப்படச்சென்று; ஆங்கு நின்ற பொருப்பினம் ஏறி அவ்விடத்து நின்ற மலைத்திரளையேறி; தமியரைப் பார்க்கும் புயலினம் துணை யில்லாதாரைத் தேடும் புயலினங்கள்; கருப்பினம் மேவும் பொழில் தில்லை மன்னன்கண் ஆர் அருளால் கருப்புத்திரள் பொருந்தும் பொழிலையுடைய தில்லையின் மன்னவன்கணுண்டாகிய மிக்கவரு ளான்; விருப்பு இனம் மேவச் சென்றார்க்கும் சென்று அல்கும் கொல் விருப்பையுடைய தம்மினந் தம்மா லுதவிபெற்றுப் பொருந்தும் வண்ணஞ் சென்றார்க்குஞ் சென்றுதங்குமோ! எ - று.
அல்குதலான் வருந் துயருறுதனோக்கிச் சென்றார்க்குமென நான்காவதனாற் கூறினாள். நெருப்பினமே யென்பதனைப் புயன் மேலேற்றி இடிநெருப்பென்றும், சென்றென்பதனை மலைமேலேற்றி உயர்ந் தென்று உரைப்பினுமமையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: தோழியை யாற்று வித்தல். 319

குறிப்புரை :

23.4 கூதிர்கண்டு கவறல் கூதிர்கண்டு கவறல் என்பது விழாநின்ற பனியிடத்து எல்லாரும் நெருப்புத்திரளை மேவாநிற்ப, மலைத்திரளையேறித் துணையில்லாதாரைத் தேடும் புயலினம் நமக்கேயன்றித் தம்மை யடைந்தார்க் குதவிசெய்யச் சென்றார்க்குஞ் சென்று பொருந் துமோ? பொருந்துமாயின், நம்மை நினைந்து ஆற்றாராய், அவ்வினை முடிக்கமாட்டாரெனத் தலைமகள் கூதிர்கண்டு கவலாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.4. இருங்கூதிர் எதிர்வுகண்டு
கருங்குழலி கவலையுற்றது.

பண் :

பாடல் எண் : 5

சுற்றின வீழ்பனி தூங்கத்
துவண்டு துயர்கவென்று
பெற்றவ ளேயெனைப் பெற்றாள்
பெடைசிற கானொடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப்
புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
பெறுமிம் மயங்கிருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புற்றில வாள் அரவன் தில்லைப் புள்ளும் புற்றையுடையவல்லாத ஒளியையுடைய பாம்பையணிந்தவனது தில்லையின் மக்களேயன்றிப் புள்ளும்; பெடை சிறகான் ஒடுக்கி பெடையைச் சிறகானொடுக்கி; தம்பிள்ளை தழீஇ தம் பிள்ளைகளையுந் தழுவி; இனம் சூழ்ந்து துயிலப் பெறும் இம் மயங்கு இருள் இனஞ்சூழ்ந்து துயிலப் பெறும் இச் செறிந்த விருட்கண்ணே; சுற்றின மேனி யெங்குஞ்சுற்றி; வீழ் பனி தூங்க வீழாநின்ற பனி இடையறாதுநிற்ப; துவண்டு துயர்க என்று அதற்கோர் மருந்தின்றித் துயர்வாயாகவென்று; எனைப் பெற்றவளே பெற்றாள் என்னை யீன்றவளே ஈன்றாள்; இனி யான் யாரைநோவது! எ - று.
சுற்றின தூங்கவென வியையும். மயங்கிருட்கட்டுயர்வாயாக வெனக் கூட்டுக. சுற்றினவென்பது பெயரெச்சமுமாம். மற்று: அசை நிலை. புற்றிலவாள ரவ னென்பதற்கு முன்னுரைத்த (தி.8 கோவை பா.97) துரைக்க. மெய்ப்பாடு: அது. பயன்: ஆற்றாமை நீங்குதல். 320

குறிப்புரை :

23.5 முன்பனிக்கு நொந்துரைத்தல் முன்பனிக்கு நொந்துரைத்தல் என்பது மக்களேயன்றிப் புள்ளுந் தம்பெடையைச் சிறகானொடுக்கிப் பிள்ளைகளையுந் தழுவி இனஞ்சூழ வெருவாது துயிலப்பெறுகின்ற இம்மயங் கிருட்கண், இடையறாது விழாநின்ற பனியிடைக்கிடந்து வாடித் துயர்வாயாக வென்று என்னைப்பெற்றவளை நோவதல்லது யான் யாரை நோவேனென முன்பனிக்காற்றாது தாயொடு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.5.ஆன்றபனிக் காற்றாதழிந்
தீன்றவளை ஏழைநொந்தது.

பண் :

பாடல் எண் : 6

புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இரும் பனி வையம் எங்கும் பரந்து பாரித்தவா பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு; தில்லைச் சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று; மிக்க தமியருக்கு மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி; அன்றி உயிர்கவர வெகுண்டு; வான் சரம் தருமேல் வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும் அதனோடொக்கும் எ - று.
புரம் அயர அன்று பொருப்புவில் ஏந்தி புரம்வருந்த அன்று பொருப்பாகிய வில்லை யேந்தி; புத்தேளிர் நாப்பண் தேவர்நடுவே; அயனை அன்று சிரம் செற்றோன் தில்லைச் சிற்றம்பலம் அவர்க்குத் தலைவனாகிய அயனையன்று சிரமரிந்த வனது தில்லைச் சிற்றம்பல மெனக் கூட்டுக.
பரந்தெங்குந் தருமேலென்றியைப்பினுமமையும். (அன்று வானென்பது பாட மாயின் வையத்தை யன்றி அவ்வானமுமென உரைக்க) இக்காலத்து அவளாற்றாமை சொல்லவேண்டுமோ எனக்கு மாற்றுதலரி தென்பது போதரத் தமியருக்கெனப் பொதுமையாற் கூறினான். இதனைத் தோழி கூற்றாகவுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 321

குறிப்புரை :

23.6 பின்பனிநினைந்திரங்கல் பின்பனி நினைந்திரங்கல் என்பது இப்பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு அவள் பொறுக்குமளவன்று; அவளைச் சொல்லுகின்றதென்! எனக்கு மாற்றுதலரிதென்பது போதர, மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி, வான் சரத்தைத் தருமாயின், அதனோடொக்குமெனத் தலைமகன் தலைமகளது துயரநினைந் திரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
23.6. இரும் பனியின் எதிர்வு கண்டு
சுரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.

பண் :

பாடல் எண் : 7

வாழும் படியொன்றுங் கண்டிலம்
வாழியிம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்றிரு
ளாநின்ற கோகிலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அம் தொண்டைக் கனிவாய் அழகிய தொண்டைக்கனி போலும் வாயினையும்; யாழின் மொழி மங்கை பங்கன் சிற்றம்பலம் ஆதரியா யாழோசைபோலு மினிய மொழியினையுமுடைய மங்கையது கூற்றையுடையானது சிற்றம் பலத்தை விரும்பாத; கூழின் மலி மனம் போன்று உணவாற் செருக்கு மனம் போல; இருளா நின்ற கோகிலம் ஒரு காலைக் கொருகால் நிறம் பெற்றிருளாநின்ற குயில்கள்; இம்மாம் பொழில் தேன் சூழும்முகச் சுற்றும் பற்றின இம் மாம் பொழிற்கட் குடைதலாற் றேன் சுற்று முகமெங்கும் வந்துபற்றின; வாழும் படி ஒன்றும் கண்டிலம் இனி யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலேம் எ - று.
வாழியென்றது வாழ்வாயாகவென்னும் பொருட்டாய் எதிர் முகமாக்கி நின்றது. தேன் சூழுமுகைச்சுற்றும் பற்றினவென்பது பாடமாயின், மலருமளவுங் காலம் பார்த்துத் தேன்கள் சூழுமுகை யென்க. மெய்ப்பாடு அது. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
கிழவி நிலையே வினையிடத் துரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்
(தொல் - பொருள். கற்பியல் - 45) என்பதனான், இக்கிளவியைந்தும் காலங்காட்ட வேண்டி இத்துறையுட் கூறினாரென்பது கருத்தாகக் கொள்க. 322

குறிப்புரை :

23.7 இளவேனில் கண்டின்ன லெய்தல் இளவேனில்கண்டின்னலெய்தல் என்பது மேன்மேலும் நிறம் பெற்றிருளாநின்ற இக்குயில்கள், மாம்பொழிலைச் சுற்றும் வந்து பற்றின; இனி யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலே னெனத் தலைமகள் இளவேனில்கண் டின்னலெய்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.7. இன்னிள வேனில் முன்னுவது கண்டு
மென்னகைப் பேதை இன்ன லெய்தியது.

பண் :

பாடல் எண் : 8

பூண்பதென் றே கொண்ட பாம்பன்
புலியூ ரரன்மிடற்றின்
மாண்பதென் றேயெண வானின்
மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங்
கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாயெழில்
வாய்த்த பனிமுகிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார் மலர்த் தேன் பாண் பதன் தேர் குழலாய் கார்காலத்து மலரை யூதுந்தேன் பாட்டினது செவ்வியை யாராயுங் குழலையுடையாய்; பூண்பது என்றே கொண்ட பாம்பன் பூணப்படு மணியென்றே கொள்ளப்பட்ட பாம்பினை யுடையான்; புலியூர் அரன் புலியூரரன்; மிடற்றின் மாண்பது என்றே எண அவனது மிடற்றி னழகதாமென்று கருதும்வண்ணம்; எழில் வாய்த்த பனிமுகில் வானின் மலரும் எழில்வாய்த்தலையுடையவாகிய பனிமுகில்கள் வானிடத்துப் பரவாநிற்கின்றன; அதனான், மணந்தவர் தேர் இன்று நாளை இங்கே வரக் காண்பது அன்றே நம்மைக்கலந்தவரது தேர் இன்றாக நாளையாக இங்கே வாராநிற்பக் காணப்படுவதல்லவே? இனி யாற்றாயாகற்பாலையல்லை எ - று.
தேரிங்கே வருவதனைக் காணுமதல்லவே இனியுள்ளதென மொழிமாற்றியுரைப்பினுமமையும். கான்மலரென்பதூஉம், எழில்வாய வென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை வற்புறுத்தல். 323

குறிப்புரை :

23.8 பருவங்காட்டி வற்புறுத்தல் பருவங்காட்டி வற்புறுத்தல் என்பது தலைமகன் தான் வருதற்குக் குறித்துப்போகிய கார்ப்பருவத்தினது வரவுகண்டு கலங்காநின்ற தலைமகளுக்கு, இக்கார்வந்து வானிடத்துப் பரந்தமையான், நம்மைக் கலந்தவரது தேர் இன்றாக நாளையாக இங்கே வாராநிற்பக் காணப்படுவதே இனியுள்ளதெனத் தோழி அப்பருவந் தன்னையே காட்டி, அவளை வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.8. கார்வருமெனக் கலங்குமாதரைக்
தேர்வருமெனத் தெளிவித்தது.

பண் :

பாடல் எண் : 9

தெளிதரல் காரெனச் சீரனஞ்
சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட
மாடக்கண் ணார்முழவந்
துளிதரற் காரென ஆர்த்தன
ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்
றளிதரக் காந்தளும் பாந்தளைப்
பாரித் தலர்ந்தனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அடியேன் களி தர அடியேன் களிப்பை யுண்டாக்க; சிற்றம்பலத்துக் கார் மிடற்றோன் நடம் ஆட சிற்றம்பலத்தின்கண்ணே கரிய மிடற்றையுடையவன் கூத்தாடா நிற்ப; கண் ஆர் முழவம் துளி தரல் கார் என ஆர்த்தன முகமமைந்த முழவங்கள் துளியைத்தருதலையுடைய முகில்போல முழங்கின; ஆர்ப்ப காந்தளும் தொக்கு உன் குழல் போன்று முழங்க அவற்றை முழவமென் றுணராது காந்தளுந் திரண்டு உன்குழலையொத்து; அளி தரப் பாந்தளைப் பாரித்து அலர்ந்தன நறுநாற்ற மளிகளைக் கொணர்தரப் பாம்புபோலுந் துடுப்புக்களைப் பரப்பி அலர்ந்தன; அதனால், சீர் அனம் சீரையுடைய அன்னமே; கார் எனத் தெளிதரல்- இதனைக் காரென்று தெளியற்பாலையல்லை எ - று.
களித்தரவென்பது களிதரவென்று நின்றதெனினுமமையும். பாரித்தென்பது உவமச்சொல்லெனினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை வற்புறுத்தல். 324

குறிப்புரை :

23.9 பருவமன்றென்று கூறல் பருவமன்றென்று கூறல் என்பது காரும் வந்தது; காந்தளும் மலராநின்றன; காதலர் வாராதிருந்த தென்னோ வென்று கலங்காநின்ற தலைமகளுக்கு, சிற்றம்பலத்தின்கண்ணே குடமுழா முழங்க அதனையறியாது காரென்றுகொண்டு இக்காந் தண்மலர்ந்தன; நீ யிதனைப் பருவமென்று கலங்காதொழியெனத் தலைமகன் வரவு நீட்டித்தலால் தோழி அவள் கலக்கந்தீரப் பருவத்தைப் பருவ மன்றென்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.9. காரெனக் கலங்கும் ஏரெழிற் கண்ணிக்கு
இன்றுணை தோழி யன்றென்று மறுத்தது.

பண் :

பாடல் எண் : 10

தேன்றிக் கிலங்கு கழலழல்
வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண் டோட்கொண்டற்
கண்டன் குழையெழில்நாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
யோமெய்யிற் றோன்றுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேன் தேனையொப்பான்; திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் திசைகளிலே விளங்காநின்ற வீரக்கழலை யுடைய அழல்வண்ணன்; சிற்றம்பலத்து எம் கோன் சிற்றம்பலத்தின் கணுளனாகிய வெங்கோன்; திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் திசைகளிலே விளங்காநின்ற திண்ணிய தோள்களையுங் கொண்டல்போலுங் கண்டத்தையுமுடையான்; குழை எழில் நாண் போன்று அவனுடைய குழையும் எழிலையுடைய நாணுமாகிய பாம்பையொத்து; இக் கடி மலர்க் காந்தளும் போந்து இக்கடிமலர்க் காந்தளினது துடுப்புக்களும் புறப்பட்டு; அவன் கை அனல் போல் அவனதுகையிற் றீயைப் போல; தோன்றிக் கடி மலரும் மெய்யின் தோன்றுவது பொய்ம்மையோ தோன்றியினது புதுமலரும் மெய்யாகத் தோன்றுகின்ற விது பொய்யோ! எ - று.
கடியென்பது நாற்றம். கடிமலர் முதலாகிய தன்பொருட் கேற்றவடை. மெய்யிற்றோன்றுவ தென்பதற்கு மெய்போலத் தோன்றுவதெனினு மமையும். காந்தளு மின்றென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமைநீங்குதல். 325

குறிப்புரை :

23.10 மறுத்துக் கூறல் மறுத்துக்கூறல் என்பது பருவமன்றென்ற தோழிக்கு, காந்தளேயன்றி இதுவும் பொய்யோவெனத் தோன்றியினது மலரைக் காட்டி, இது பருவமேயென்று அவளோடு தலைமகள் மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.10. பருவமன் றென்று பாங்கி பகர
மருவமர் கோதை மறுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 11

திருமா லறியாச் செறிகழல்
தில்லைச்சிற் றம்பலத்தெங்
கருமால் விடையுடை யோன்கண்டம்
போற்கொண்ட லெண்டிசையும்
வருமா லுடன்மன் பொருந்தல்
திருந்த மணந்தவர்தேர்
பொருமா லயிற்கண்நல் லாயின்று
தோன்றுநம் பொன்னகர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
திருமால் அறியா திருமாலறியப்படாத; செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்து எம் கரு மால் விடை உடையோன் கண்டம் போல் செறிந்த வீரக்கழலையுடைய திருவடியையுடைய தில்லையிற் சிற்றம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய கரிய மாலாகிய விடையையுடையவனது கண்டம்போல விருண்டு; கொண்டல் எண் திசையும் வரும் கொண்டல்கள் எட்டுத் திசைக்கண்ணும் வாரா நின்றன; அதனால், பொரும் மால் அயில் கண் நல்லாய் தம்மிற்பொரும் பெரியவேல்போலுங் கண்ணையுடைய நல்லாய்; மணந்தவர் தேர் நம்மைக் கலந்தவரது தேர்; உடல் மன் பொருந்தல் திருந்த உடன்றமன்னர் தம்முட் பொருந்துதல் திருந்துதலால்; நம் பொன் நகர்க்கு இன்று தோன்றும் நம் பொன்னையுடைய வில்லின்கண் இன்று வந்து தோன்றும் எ - று.
உடன்மன்பொருந்தறிருந்த மணந்தவரென்பதற்கு மன்னர் பொருந் தும்வண்ணம் அவரைச் சென்று கூடினவரென்றுரைப் பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 326
23.12 வினைமுற்றிநினைதல்

குறிப்புரை :

23.11தேர்வரவு கூறல் தேர்வரவு கூறல் என்பது மறுத்துக்கூறின தலைமகளுக்கு, கொண்டல்கள் எட்டுத்திசைக்கண்ணும் வாராநின்றமையின், இது பருவமே; இனியுடன்றமன்னர் தம்முட் பொருந்துதலான் நம் மைக் கலந்தவர் தேர் நம்மில்லின்க ணின்று வந்து தோன்றுமென்று அவள் கலக்கந்தீரத் தோழி தலைமகனது தேர்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.11. பூங்கொடி மருளப்
பாங்கி தெருட்டியது.

பண் :

பாடல் எண் : 12

புயலோங் கலர்சடை ஏற்றவன்
சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை
வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின்
இன்றோர் திருமுகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் செய்தலையுடைய உயர்ந்த மதிலை எரியாக்கியபின்; இன்று ஓர் திருமுகம் இன்று திருவையுடைய தொருமுகம்; கயல் கயல் போலுங் கண்ணையும்; ஓங்கு இருஞ்சிலை கொண்டு மிகப் பெரிய விற்போலும் புருவத்தையுமுடைத்தாய்; மன் கோபமும் காட்டி வரும்- தங்கிய விந்திரகோபம் போலும் வாயையுங் காட்டி வாராநின்றது; இனிக் கடிதுபோதும் எ று.
புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும் நீரை உயர்ந்த விரிசடையின்கணேற்றவனது சிற்றம்பலத்தையே பரவும்; மயல் ஓங்கு இருங் களி யானை வரகுணன் வெற்பின் வைத்த கயல் மயக்கத்தையுடைய உயர்ந்த பெரிய களியானையையுடைய வரகுணன் இமயத்தின்கண் வைத்த கயலெனக் கூட்டுக.
இன்று ஓராணையோலை அரையன்பொறியாகிய கயலையும் வில்லையுமுடைத்தாய் மன்னன் முனிவையுங்காட்டி வாராநின்ற தெனச் சிலேடை வகையான் ஒருபொருடோன்றிய வாறறிக. மெய்ப்பாடு: அச்சம். பயன்: தேர்ப்பாகன் கேட்டுக் கடிதூர்தல். 327

குறிப்புரை :

23.12 வினைமுற்றிநினைதல் வினைமுற்றிநினைதல் என்பது வேந்தற்குற்றுழிப் பிரிந்த தலைமகன், வினைமுற்றியபின்னர், கயலையும் வில்லையுங் கொண்டு மன்கோபமுங்காட்டி ஒரு திருமுகம் வாராநின்றது; இனிக் கடிதுபோதுமெனத் தேர்ப்பாகன் கேட்பத் தலைமகளது முகநினைந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
23.12. பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன்
மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.

பண் :

பாடல் எண் : 13

சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம்
பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பிற் றுனைந்து பெருகுக
தேர்பிறங் கும்மொளியார்
நிறப்பொற் புரிசை மறுகினின்
துன்னி மடநடைப்புள்
இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை
தேரும் எழில்நகர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பிறங்கும் ஒளி ஆர் நிறப் பொன் புரிசை மறுகினின் மிக்க வொளியார்ந்த நிறத்தையுடைய செம்பொன்னா னியன்ற உயர்ந்த மதிலையுடைய வூரிற்றெருவின்கண்; துன்னி சேர்ந்து விளையாடி; மட நடைப் புள் மென்னடையையுடைய மாடப்புறாக்கள்; இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் இறப்பின்கட் டுயின்று முற்றத்தின்க ணிரைதேர்ந்துண்ணும்; எழில் நகர்க்கு அவளிருந்த வெழிலையுடைய இல்லத்திற்கு; சிறப்பின் திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர் தம் பிறப்பின் சிறப்புக்களாற் பொலியுஞ் சிவனது சிற்றம்பலத்தைச் சென்றடைந்தவர்கடம் பிறவிபோல; துனைந்து பெருகுக தேர் விரைந்து முடுகுவதாக இத்தேர் எ - று.
புறாக்கள் துணையோடு துயின்று முன்றிலின்கண் விளையாடு வனகண்டு ஆற்றகில்லாளென்பது போதர, இறப்பிற்றுயின்று முற்றத்திரைதேரு மென்றான். சிற்றம்பலஞ் சென்று சேர்ந்தவர் பிறவியிறுதிக்கட் பேரின்ப மெய்துமாறுபோல யானுஞ் சுரஞ் செலலிறுதிக்கட் பெருந்தோண் முயங்குவலென்னுங் கருத்தாற் பிறப்பிற் றுனைந்து பெருகுக தேரென்றான். துன்னுமென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: கேட்ட பாகன் விரைந்து தேர் பண்ணுவானாதல். 328

குறிப்புரை :

23.13 நிலைமைநினைந்து கூறல் நிலைமைநினைந்து கூறல் என்பது வினை முற்றியபின்னர் அவள் முகங்கண்டு வாராநின்றவன், புறாக்கள் தந்துணையோடு துயின்று முன்றிற்கண் விளையாடுவகண்டு இது நமக்கரிதாயிற் றென்று என்னிலைமை நினைந் தாற்றகில்லாளாவள்; நீ விரையத் தேரைச் செலுத்துவாயாகவெனத் தலைமகளது நிலைமை நினைந்து தேர்ப்பாகனுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.13. பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து
திருந்துதேர்ப் பாகற்கு வருந்துபு புகன்றது.

பண் :

பாடல் எண் : 14

அருந்தே ரழிந்தனம் ஆலமென்
றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன்
மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண்
தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல்
முழங்கேல் வளமுகிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆலம் அருந்து நஞ்சையருந்த வேண்டும்; ஏர் அழிந்தனம் என்று ஓலம் இடும் இமையோர் மருந்து இதனானழ கழிந்தோமென்று முறையிடுந்தேவர்க்கு அந்நஞ்சால் வரும் இடர்க்கு மருந்தாயவன்; ஏர் அணி அம்பலத்தோன் அழகையுடைய அம்பலத்தின்கண்ணான்; மலர்த்தாள் வணங்கலர் போல் அவனது மலர்போலுந்தாளை வணங்காதாரைப்போல; திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் திருந்திய வழகெல்லாமழிந்து துன்பத்தை யுண்டாக்கும்; செல்வி சீர் நகர்க்கு இல்வாழ்க்கைச் செல்வத்தை யுடையவளது அழகையுடைய வூரின்கண்; வளமுகிலே வளமுகிலே; வரும் என் தேர் இதன்முன் வழங்கேல் வாராநின்ற வெனது தேரிதனின் முற்பட்டுச் சென்றியங்கா தொழிய வேண்டும்; முழங்கேல் இயங்கினும் அத்தமியள் கேட்ப முழங்காதொழிய வேண்டும் எ-று.
ஏரணியென்பதற்கு மிக்கவழகென்றும், பழங்கண்டருமென் பதற்கு துன்பத்தையெனக்குத் தருமென்று முரைப்பினுமமையும். வழங்கே லென்பதற்குப் பெய்யவேண்டாெவன்றுரைப்பாருமுளர். நகர் இல்லெனினுமமையும். முனைவன் இறைவன். மெய்ப்பாடு: அது. பயன்: கேட்டபாகன் றேர்விரைந்து கடாவுதல். 329

குறிப்புரை :

23.14 முகிலோடுகூறல் முகிலொடு கூறல் என்பது காரோட்டங்கண்ட பாகன் அதனோடு விரையத் தேரோட்டாநிற்பான், பிரிதலால் திருந்திய வழகெல்லாம் அழிந்து துன்புறாநின்றவளது சீரிய நகரின்கண், வாராநின்ற வெனது தேரின்முற்பட்டுச் சென்றியங்காதொழிய வேண்டும்; இயங்கினும், அத்தமியாள்கேட்ப முழங்காதொழிய வேண்டுமெனத் தலைமகன், முந்துற்றுச் செல்லாநின்ற முகிலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.14. முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன்
கழும லெய்திச் செழுமுகிற் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 15

பணிவார் குழையெழி லோன்தில்லைச்
சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே
பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர்
சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும்
மாவோ டணுகினரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பணி வார் குழை எழிலோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய பணியாகி நீண்ட குழையானுண்டாகிய அழகையுடையவனது தில்லைச்சிற்றம்பலத்தையொக்கும்; மணிவார் குழல் மட மாதே நீலமணிபோலு நீண்ட குழலையுடைய மடப்பத்தை யுடைய மாதே; பொலிக பொலிக; நம்மன்னர் நம்முடைய மன்னர்; பணிவார் திறையும் வந்து வணங்குவாராக வுடம்பட்டவர் கொடுத்த திறையையும்; பகைத்தவர் சின்னமும் பணியாது மாறு பட்டவரடையாளங்களையும்; வண் தேர் முன்னாக்கொண்டு தமது வண்டேர்க்கு முன்னாகக் கொண்டு; அணிவார் முரசினொடு அணியப்பட்ட வாரையுடைய வீரமுரசினோடும்; ஆலிக்கும் மாவோடு ஆலியாநிற்கு மாவினோடும்; அணுகினர் வந்தணுகினார் எ - று.
வண்டேரொடென்பதனைத் தொகுக்கும்வழித் தொகுத்துக் கூறினாரெனினு மமையும். இப்பொருட்கு முன்னாக வந்து பணிவாரென்றுரைக்க. மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளை மகிழ்வித்தல். 330

குறிப்புரை :

23.15 வரவெடுத்துரைத்தல் வரவெடுத்துரைத்தல் என்பது தலைமகன் முகிலொடு வாரா நிற்பக்கண்ட தோழி, வணங்குவாராக வுடம்பட்டவர் கொடுத்த திறையையும் வணங்காது மாறுபட்டவரடையாளங் களையும் தமது தேருக்கு முன்னாகக்கொண்டு, வீரமுரசார்ப்ப, ஆலியாநின்ற மாவினோடும் வந்தணுகினார்; இனி நமக்கொரு குறையில்லை யெனத் தலைமகளுக்கு அவன்வரவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் .
23.15. வினை முற்றிய வேந்தன் வரவு
புனையிழைத் தோழி பொற்றொடிக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 16

கருங்குவ ளைக்கடி மாமலர்
முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
றிலள்நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண
ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை
நீடிய வைகலுமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நான்முகனோடு ஒருங்கு வளைக் கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய் நான்முகனோடுங்கூடச் சங்கை யேந்திய கையையுடையவனு மறியாதவனது தில்லையை யொப்பாய்; மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலும் முனை மருங்கு சூழ்ந்து மன்னனது பாசறைக்கண் யான்றாழ்த்த வைகற்கண்ணும்; கருங்குவளைக் கடிமா மலர் முத்தம் கலந்து இலங்க நின்று கண்ணாகிய கருங்குவளையது புதியபெரியமலர் கண்ணீ ராகிய முத்தத்தைக்கலந்து விளங்க நின்று; நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள் நெருங்கின வளையையுடைய இக்கிளியை யொப்பாள் ஒரு காலமு மென்னைவிட்டு நீங்கிற்றிலள்; அதனாற் பிரிவில்லை எ-று.
வைகலுமென்பதற்கு வைகறோறு மென்றுரைப்பாருமுளர். மெய்ப்பாடும்: பயனும் அவை. 331

குறிப்புரை :

23.16 மறவாமை கூறல் மறவாமைகூறல் என்பது வினைமுற்றிவந்து தலைமக ளோடு பள்ளியிடத்தானாகிய தலைமகன், நீயிர் வினையிடத் தெம்மை மறந்தீரேயென்ற தோழிக்கு, யான் பாசறைக்கட் டாழ்த்தவிடத்தும், கண் முத்திலங்க நின்று, இவள் என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்கிற்றிலள்; ஆதலால், யான் மறக்குமாறென் னோவெனத் தானவளைமறவாமை கூறாநிற்றல், அதற்குச் செய்யுள்
23.16. பாசறை முற்றிப் பைந்தொடியோ டிருந்து
மாசறு தோழிக்கு வள்ள லுரைத்தது.
சிற்பி