திருக்கோவையார்-பரத்தையிற் பிரிவு


பண் :

பாடல் எண் : 1

உடுத்தணி வாளர வன்தில்லை
யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை
யார்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு
வச்சிலை கண்மலரம்
படுத்தணி வாளிளை யோர்சுற்றும்
பற்றினர் மாதிரமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வரகச்சாகவும் உடுத்து அணியாகவுமணிந்த வாளரவை யுடையவனது தில்லைக்கணுளனாகிய வூரன் இவ்வீதிக்கண்வர; எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப தெரிந்தணியப்பட்ட கைக்கணுளவாகிய இனவளைகளொலிப்ப; இள மயில் ஏர் கடுத்து இளமயிலதெழிலை யொத்து; அணி காமர் கரும்புருவச் சிலை கண் மலர் அம்பு அடுத்து மிக்கவழகையுடைய கரியபுருவமாகிய வில்லோடு கண் மலராகிய வம்பைச்சேர்த்தி; அணிவாள் இளையோர் ஒருங்கே சுற்றும் மாதிரம் பற்றினர் அணிகளுண்டாகிய வொளியையுடைய மகளிர் ஒருங்கே சுற்றுந்திசைகளைப்பற்றினர்; இஃதிவன் காதலிமாட்டென்னாம்! எ-று.
அணி காமர் என்பன ஒருபொருட்கிளவியாய், மிகுதிதோன்ற நின்றன. ஒன்றாகவெழுந்து அணியினுங் கையினுமுளவாகிய சங்கொலிப்ப இளமைக்கணுண்டாகிய வுள்ளவெழுச்சிமிக்கு வில்லோடம்பையடுத்துப் பற்றி அரைக்கணியப் பட்ட வுடைவாளையுடைய இளையோர் திசைமுழுதுஞ் சூழ்ந்து பற்றினரெனப் பிறிதுமோர் பொருடோன்றி நின்றவாறு கண்டுகொள்க. கருப்புருவச் சிலை என்பது பாடமாயின் புருவமாகிய காமனது உட்கை உடைய கருப்புச்சிலையோடு கண்ணாகிய கள்ளையுடைய மலரம்பை யடுத்தென்றுரைக்க. சுற்றும்பற்றிய மாதிரமென்பது பாடமாயின், சுற்றும்பற்றி மேவாநிற்ப, அவ்விடத்து நகைக்குறிப் பாலெடுக்கப்பட்டு இவர் கைகள் வளையொலிப்பத் தலைமேலேறின வெனக் கூட்டி யுரைக்க. இதற்குச் சுற்றும் பற்றிப் போர்செய்யாநிற்பப் படைக்கல மெடுத்துச் சங்கொலிப்ப அணியுங்கையு மொருங் கெழுந்தனவெனப் பிறிது மொரு பொருளாகக் கொள்க. இதற்குப் பிறவுரைப்பாருமுளர். உரத்தகு வேல் உரத்தாற்றக்கவேல். மெய்ப்பாடு: மருட்கை. வியப்பாகலின், பயன்: பிரிவுணர்த்துதல். 352

குறிப்புரை :

25.1 கண்டவர்கூறல் கண்டவர் கூறல் என்பது தலைமகன் பரத்தையர் சேரிக்கட் செல்லாநிற்ப, அப்பரத்தையர் அவனை ஒருங்கெதிர்கொண்டு சுற்றும்பற்றிப் போர்செய்யா நின்றமையின், இஃதிவன் காதலிமாட் டென்னாமென அவ்விடத்துக் கண்டவர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.1. உரத்தகு வேலோன் பரத்தையிற் பிரியத்
திண்டேர் வீதியிற் கண்டோ ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

சுரும்புறு கொன்றையன் தொல்புலி
யூர்ச்சுருங் கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று
பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென் னாவியுந்
தேய்வுற் றழிகின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பேரொலி நீர்க் கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று பெரிய வொலிக்கு நீரையுடைய கரும்புதங்கு மூரை யுடையவன் கலந்துவைத்து நீங்கினானென்று கருதுதலான்; கண்மணியும் அரும் பொறை ஆகும் என்கண்மணியும் பயனின்மை யாற் றாங்குதற்கரிய பாரமாகாநின்றன; என்ஆவியும் தேய்வுற்று அழிகின்றது எனதுயிருந் தேய்ந்தழியா நின்றது; பெரும் பொறை யாட்டியை என் இன்று பேசுவ யானிவ்வாறாகவுங் கலங்காது நின்ற பெரும்பொறையையுடையவளை யான் இன்று பேசுவனவென்! எ-று.
சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர்ச் சுருங்கும் மருங்குல் பெரும் பொறையாட்டியை சுரும்புகள் வாழுங் கொன்றைப் பூவினை யுடையானது பழையதாகிய புலியூரிற் சுருங்கின மருங்குலையுடைய பெரும்பொறையாட்டியையெனக் கூட்டுக.
என் கண்மணியுந் தேய்வுற்றழியாநின்றது ஆவியுமரும் பொறையாகாநின்ற தென்று கூட்டுவாருமுளர். உள்ளவிழ் பொறை நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாத பொறை. மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்த வுவகை. பயன்: தலை மகளைவியத்தல். 353

குறிப்புரை :

25.2 பொறையுவந்துரைத்தல் பொறையுவந்துரைத்தல் என்பது தலைமகனைப் பரத்தை யரெதிர்கொண்டமை கேட்ட தலைமகள் நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாமற் பொறுத்தமை கண்ட தோழி, யானிவ்வாறாகவும் கலங்காது நின்ற பெரும்பொறையாட்டியை யான் இன்று பேசுவன என்னென்று அவளையுவந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.2. கள்ளவிழ் கோதையைக் காதற் றோழி
உள்ளவிழ் பொறைகண் டுவந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

அப்புற்ற சென்னியன் தில்லை
யுறாரி னவர்உறுநோய்
ஒப்புற் றெழில்நல மூரன்
கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொ
லாருயிர் தேய்பவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் நீரடைந்த சென்னியையுடையவனது தில்லையை மனமொழி மெய்க ளாலணுகாதாரைப்போல; எழில் நலம் ஊரன் கவர கண்ணோட்ட மின்றி எழிலையுடைய நலத்தை ஊரன் கவர்ந்து கொள்ள; அவர் உறுநோய் ஒப்புற்று உள்ளும் புறம்பும் வெப்புற்று அத் தில்லையை யுறாதாருறுநோயையொத்து அகத்தும் புறத்தும் வெப் பத்தையுற்று; வெய்துயிர்ப்புற்று வெய்தாகவுயிர்த் தலையுற்று; தம் மெல் அணையே துணையா வேறு துணையின்மையிற்றமது மெல் லணையே தமக்குத் துணையாக; செப்பு உற்ற கொங்கையர் ஆருயிர் தேய்பவர் யாவர் கொல் செப்புப்போலுங் கொங்கையை யுடைய மகளிர் ஆருயிர் தேய்வார் பிறர் யாரோ யானல்லது? எ-று.
இத்தன்மையராய் என் போல இனி யாருயிர்தேய்வார் யாரோவெனப் பரத்தையர்க்கிரங்குவாள்போன்று, தலைமகனது கொடுமை கூறினாளாகவுரைக்க. தில்லை யுறாதவருறு நோயென்பது பாட மாயின், எழினலமூரன்கவரத் தில்லையையுறாத அத்தீவினை யாருறு நோயையொத்தென்றுரைக்க. ஊரனோடிருந்து வாடியது - ஊரன் குறைகளை நினைந்து அதனோடிருந்து வாடியது. மெய்ப்பாடு: அழுகை, பயன்: ஆற்றாமை நீங்குதல். 354

குறிப்புரை :

25.3 பொதுப்படக்கூறி வாடியழுங்கல் பொதுப்படக் கூறி வாடியழுங்கல் என்பது பொறையு வந்துரைத்த தோழிக்கு, முன்னிலைப்புறமொழியாக, தமதுநலங் கவரக்கொடுத்து வேறுதுணை யின்மையிற் றம தணையையே தமக்குத் துணையாகக்கொண்டு கிடந்து என்னைப்போல வுயிர்தேய்வார் இனியாவரோவெனப் பொதுப்படப் பரத்தை யர்க் கிரங்குவாள் போன்று, தலைமகனது கொடுமைநினைந்து வாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.3. பொற்றிக ழரவன் மற்றிகழ் தில்லைப்
பிரிந்த வூரனோ டிருந்துவா டியது.


பண் :

பாடல் எண் : 4

தேவா சுரரிறைஞ் சுங்கழ
லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன்
தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
தேனரும் பாவியனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நலம் பாய் பாவாய் நலம் பரந்த பாவாய்; அமளியின் மேல் பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர அமளியின் கண்மாலையையுடைய மார்பை ஊரன்வந்துதர; புலம்பாய் அவனோடு மேவாமையிற் பின்னுந்தனிமையாய்; நனவு என்று தழுவிற்றிலேன் நனவென்று மயங்கித் தவறுநினைந்து புல்லிற்றி லேன்; அரும் பாவியேன் விழித்தேன் அத்துணையேயன்றிப் பொறுத்தற்கரிய தீவினையையுடையேன் விழிப்பதுஞ் செய்தேன், அதனால், தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல் தேவருமசுரரு மிறைஞ்சுங் கழலையுடையவனது தில்லையைச் சேராதாரைப்போல; ஆவா கனவும் இழந்தேன் ஐயோ! கனவான் வரு மின்பத்தையு மிழந்தேன் எ-று.
தில்லைசேரலர்போ லென்புழி ஒத்தபண்பு துன்பமுறுதலும் இன்பமிழத்தலுமாம். 355

குறிப்புரை :

25.4 கனவிழந்துரைத்தல் கனவிழந்துரைத்தல் என்பது தலைமகனது கொடுமை நினைந்து கிடந்து வாடாநின்ற தலைமகள், கனவிடைவந்து அவன் மார்புதரத்தானதனை நனவென்று மயங்கிப் புலந்து அவனோடு புணராதிழந்தமையைத் தோழிக்குச் சொல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.4. சினவிற் றடக்கைத் தீம்புன லூரனைக்
கனவிற் கண்ட காரிகை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

செய்ம்முக நீல மலர்தில்லைச்
சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி
யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங்
கீழும் நெடுஞ்சுடரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நெய்ம்முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடுஞ்சுடரே நெய்ம்முகத்தைப் பருகி இருண்முகத்தைக் கிழிக்கும் நெடியசுடரே; கலந்தவர்க்குப் பொய்ம் முகம் காட்டிக் கரத்தல் பொருத்தம் அன்று என்றிலை எம்மைக்கலந்தவர்க்குப் பொய்யை யுடைய முகத்தைக்காட்டித் தெளிந்தாரை வஞ்சித்தல் தகுதி யன்றென்று கூறிற்றிலையே? வேறு கூறுவார் யாவர்? எ-று.
செய்ம்முகம் நீலம் மலர் தில்லைச் சிற்றம்பலத்து அரற்கு செய்ம் முகத்துளவாகிய நீலப்பூ மலராநின்ற தில்லையிற் சிற்றம்பலத்தின் கணுளனாகிய அரனுக்கு; கைம்முகம் கூம்பக் கழல் பணியாரின் கரத் தல் கைம்முகங் குவியக் கழலைப்பணியாதாரைப் போலக் கண்ணோ ட்ட மும் மெய்ம்மை யுமின்றிக் கரத்தலெனக் கூட்டுக.
செய்ம்முகம் செய்ம்முன். கைம்முகம் கைத்தலம். கரத்தல் மறைத்தலெனினுமமையும். நெய்ம்முகம் சுடரையணைந்த விடம். நெய்ம்முகமாந்தி யிருண்முகங்கீழு நெடுஞ்சுடரே என்றது உணவாகிய நெய்யை மாந்தி மேனியொளியை யுடையையாய்ப் பகைசெகுக்கும் பெருமையை யுடையையாதலின் அக்களிப்பினாற் கண்டது கூறிற்றிலை என்றவாறு. இவை யிரண்டற்கும் மெய்ப்பாடும், பயனும் அவை. 356

குறிப்புரை :

25.5 விளக்கொடுவெறுத்தல் விளக்கொடு வெறுத்தல் என்பது கனவிழந்தமை கூறி வருந்தாநின்ற தலைமகள், நீயாயினுங் கலந்தவர்க்குப் பொய்ம் முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன்றென்றிலையேயென விளக்கொடு வெறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.5. பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி
அன்பனோ டழுங்கிச் செஞ்சுடர்க் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

பூங்குவ ளைப்பொலி மாலையும்
ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
கொள்கநள் ளார்அரணந்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
தோமன் உறாவரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பூங் குவளைப் பொலி மாலையும் பொலிவையுடைய குவளைப் பூவானியன்ற பெரியமாலையையும்; ஊரன் பொன் தோள் இணையும் ஊரனுடைய பொன்போலுந் தோளிணையையும்; ஆங்கு வளைத்து வைத்து ஆரேனும் கொள்க தம்மில்லத்து வளைத்துவைத்து வேண்டியார் கொள்வாராக; நள்ளார் அரணம் தீங்கு வளைத்த வில்லோன் தில்லை பகைவரதரணந் தீங்கெய்த வளைக்கப்பட்ட வில்லையுடையவனது தில்லையின்; சிற்றம்பலத்து அயல்வாய் ஓங்கு வளைக் கரத்தார்க்கு சிற்றம்பலத்துக் கயலாகியவிடத்துவாழும் உயர்ந்த வளையையுடைய கையை யுடையார்க்கு; மன் உறாவரை அடுத்தோம் மன்னனை உறாவரை யாகக் கொடுத்தோம் எ-று.
உறாவரை முற்றூட்டு. தீங்குவளைத்த வில்லோ னென்பதற்குத் தீங்கெய்தவென ஒருசொல் வருவியாது அரணத்தைத் தீங்கு வளைத்தற்குக் காரணமாகிய வில்லென்றுரைப்பினுமமையும். ஓங்கு வளைக்கரத்தாரென்புழி ஓங்குதலை வளைக்கரத்தார் மேலேற்றுக. விலையானுயர்ந்தவளை யெனினுமமையும். அடுத்தோ மென்றத னால், தனதுரிமை கூறினாளாம். மன்: அசைநிலையாக்கி, மாலை யையுந் தோளையு மடுத்தோ மெனினுமமையும். மெய்ப்பாடும் பயனும் அவையே. 357

குறிப்புரை :

25.6 வாரம்பகர்ந்துவாயின்மறுத்துரைத்தல் வாரம் பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல் என்பது விளக் கொடு வெறுத்து வருந்தாநின்ற தலைமகள், தலைமகன் பரத்தை யிற் பிரிந்துவந்து வாயிற்கணிற்ப, வண்டோரனையர் ஆடவர், பூவோரனையர் மகளிராதலான், நாமும் அவன்றலையளிபெற்ற பொழுது ஏற்றுக்கொள்வதன்றோ நமக்குக் காரியம்; நாம் அவனோடு புலக்கற்பாலேமல்லேமென்று வாயினேர்வித்தார் க்கு, ஊரனுடைய மாலையுந் தோளும் அவ்விடத்து வளைத்து வைத்து வேண்டினார் கொள்ள வமையும்; யான் மன்னனைப் பரத்தையர்க்கு உறாவரை யாகக் கொடுத்தேனென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.6. வார்புன லூரன் ஏர்திகழ் தோள்வயிற்
கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 7

தவஞ்செய் திலாதவெந் தீவினை
யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந்
தொடல்விடு நற்கலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அத்தன் உலகத்துள்ளாரெல்லார்க்குந் தந்தை; முத்தன் இயல்பாகவே பாசங்களி னீங்கியவன்; சிவன் எவ்வுயிர்க்கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன்; செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர அவனாற்செய்யப்பட்ட சீரிய வருணிறைந்த தில்லையிலூரனே; தவம் செய்திலாத வெம் தீவினையேம் முற்காலத்துத் தவத்தைச்செய்யாத வெய்ய தீவினையையுடையயாம்; புன்மைத் தன்மைக்கு எள்ளாது நின்னாலாதரிக்கப்படாத எமது புன்மைத் தன்மைகாரணமாக எம்மையே யிகழாது; எவம் செய்து நின்று இன்று இனி உனை நோவது என் நினக்குத் துன்பத்தைச் செய்யாநின்று இப்பொழுது இனி நின்னை நோதலென்னாம்! அது கிடக்க; நின் சேயிழைாயர் நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் நின்னுடைய சேயிழையார் நினக்குப் புதிதாகச் செய்த புல்லுதல்களை யாமாட்டோம், அதனால், நற்கலை தொடல் எமது நல்ல மேகலையைத் தொடாதொழி; விடு விடு வாயாக எ-று.
எவ்வம் எவமென நின்றது. காதலில்லை யாயினுங் கண்ணோட்ட முடைமையான் இகழ்ந்து வாளாவிருப்பமாட்டா மையின், எம்புலவியான் நினக்குத் துன்பமாந்துணையே யுள்ள தென்னுங் கருத்தான், எவஞ்செய்து நின்றென்றாள். இனி யென்பது நீயிவ்வாறாயினபின் னென்னும் பொருட்டாய் நின்றது. சிவன்செய்த சீரருளார் தில்லையூர வென்றதனான், நின்னாற் காயப்பட்டாரானுங் காதலிக்கப்படாநின்றா யெனவும், தவஞ்செய்திலாதவெந்தீவினையே மென்றதனான், எம்மாற் காதலிக்கப்பட்டாரானுங் காயப்படா நின்றேமெனவுங் கூறியவாறாம். புல்லென்பது புல்லமென விரிந்த நின்றது. புல்லமென்பதனைப் புன்மையென்று நின்சேயிழையார் புதிதாகச் செய்த குறிகளைப் பொறுக்கமாட்டே மென்றுரைப்பினு மமையும். எவன்செய்து நின்றெனப் பாடமோதி, தவஞ் செய்திலா வெந் தீவினையேம் இன்றுன்னை நோவது என்செய்து நின்றென்றும் என்னத்தனென்று முரைப்பாருமுளர். எள்கா தென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: புணர்தல். 358

குறிப்புரை :

25.7 பள்ளியிடத்தூடல் பள்ளியிடத்தூடல் என்பது வாயின்மறுத்த தலைமகள், ஆற்றாமையே வாயிலாகப் புக்குப் பள்ளியிடத்தானாகிய தலைமகனோடு, நின்னை யிடைவிடாது நுகர்தற்கு முற்காலத்துத் தவத்தைச் செய்யாத தீவினையேமை நோவாது, இன்றிவ் வாறாகிய நின்னை நோவதென்னோ? அதுகிடக்க, நின்காதலி மார் புறமே கற்று நினக்குப் புதிதாகச் செய்த அப்புல்லுதலை யாஞ்செய்ய மாட்டேம்; அதனாலெம்மைத் தொடாதே; எங்கலையை விடுவாயாக வெனக் கலவி கருதிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.7. பீடிவர் கற்பிற் றோடிவர் கோதை
ஆடவன் றன்னோ டூடி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

தணியுறப் பொங்குமிக் கொங்கைகள்
தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென் றின்றெய்து
மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை
யார்கள் பயின்மனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அரவும் பிறையும் அணியுறக் கொண்டவன் தில்லை பிறைக்குப் பகையாகிய அரவையும் பிறையையும் அழகுறத் தனக்கணியாகக் கொண்டவனது தில்லையின்; தொல் ஆயம் நல்லார்கள் முன்னே பழைய இவளாயத்தி னுள்ளாராகிய நல்லார் கண் முன்னே; பணி உறத் தோன்றும் நுடங்கு இடையார்கள் பயில் மனைக்கு அரவுபோலத் தோன்று நுடங்குமிடையை யுடையார்கள் நெருங்கும் பரத்தையர் மனைக்கண்; தணி உறப் பொங்கும் இக்கொங்கைகள் தாங்கி தணிதலுறும் வண்ணம் வளராநின்ற இக் கொங்கைகளைத் தாங்கி; தளர் மருங்குல் பிணியுறப் பேதை இன்று சென்று எய்தும் ஆல் தளராநின்ற மருங்குலையுடைய இவள் வருந்த இப்பேதை இன்றுசென்றெய்தும்; ஆயிற் பெரிதும் இஃதிளி வரவுடைத்து எ-று.
இதற்குப் பிறிதுரைப்பாருமுளர். பாற்செலு மொழியார் ... புகன்றது கேட்டார்க்குப் பாலின் கணுணர்வு செல்லு மொழியை யுடைய மகளிர் மேற்சென்று தூதுவிட விரும்பல் பொல்லாதென இல்லோர் கூறியது. பால்போலு மொழியெனினு மமையும். ஈண்டுச் செல்லுமென்பது உவமைச்சொல். பேதையென்பது செவ்வணி யணிந்து செல்கின்ற மாதரை. மெய்ப்பாடு: நகை, எள்ளற் பொருட்டாகலின். பயன்: தலைமகனைச் செலவழுங்குவித்தல். சிறைப்புறத்தானாக, இல்லோர் சொல்லியது. 359

குறிப்புரை :

25.8 செவ்வணிவிடுக்கவில்லோர் கூறல் செவ்வணிவிடுக்கவில்லோர் கூறல் என்பது இக் கொங்கைகள் தாங்கித் தளராநின்ற மருங்குலையுடைய இவள் வருந்த, இவ்வாயத்தார் முன்னே,அப்பரத்தையர் மனைக்கண் இப்பேதை இக்குறியறிவிக்கச் செல்லாநின்ற விது நமக்கு மிகவு மிளிவரவுடைத் தெனச் செவ்வணிவிடுக்க விரையாநின்ற வில்லோர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.8. பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல்
பொல்லா தென்ன இல்லோர் புகன்றது.

பண் :

பாடல் எண் : 9

இரவணை யும்மதி யேர்நுத
லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்கிவ
ளால்இக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்தில்லை
யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின
வாறுநந் தன்மைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இரவு அணையும் மதி ஏர் நுதலார்நுதி இரவைச் சேரும் பிறைபோலு நுதலை யுடையாரது முன்; கோலம் செய்து செவ்வணியாகிய கோலத்தைச் செய்து; குரவு அணையும் குழல் இங்கிவளால் இக் குறி அறிவித்து குரவம்பூச் சேருங் குழலையுடைய இவளால் இக்குறியையறிவித்து; அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை பாம்புசேருஞ் சடையையுடையவனது தில்லையி லூரனை; ஆங்கு ஒருத்தி தர பின் அவ்விடத்து ஒருத்தி நமக்குத் தர; அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகள் நாமவனை யெய்தும்படி யாயினவாறென் நம்முடைய பெண்டன்மைகள்! எ-று.
நுதலார்நுதியறிவித்தென வியையும். குறி - பூப்புநிகழ்தற் குறி. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 360

குறிப்புரை :

25.9 அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல் அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல் என்பது இல்லோர் செவ்வணிவிடுக்க நினையாநிற்ப, அயலார்முன்னே இவளால் இக்குறியறிந்த விடத்து ஒருத்தி நமக்குத்தர நாமவனை யெய்தும் படியாயிற்று நம்முடைய பெண்டன்மையென அயலறிவுரைத்துத் தலைமகள் அழுக்கமுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.9. உலகிய லறியச் செலவிட லுற்ற
விழுத்தகை மாதர்க் கழுக்கஞ் சென்றது.

பண் :

பாடல் எண் : 10

சிவந்தபொன் மேனி மணிதிருச்
சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி யூரற்
குலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப்
பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின
வந்து திருமனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிவந்த பொன் மேனி மணி செம்பொன் போலு மேனியையுடையமணி; திருச்சிற்றம்பலம் உடையான் திருச்சிற்றம் பலத்தை யுடையான்; சிவந்த அம் தாள் அணி ஊரற்கு அவனது சிவந்தவழகிய தாள்களை முடிக்கணியாக்கும் ஊரற்கு; உலகியலாறு உரைப்பான் உலகியனெறியை யறிவிப்பான் வேண்டி; திரு மனைக்கு நமது திருவையுடைய மனைக்கண்; சிவந்த பைம்போதும் சிவந்த செவ்விப் பூவும்; அம் செம் மலர்ப் பட்டும் அழகிய செய்ய பூத்தொழிற் பட்டும்; கட்டு ஆர் முலைமேல் அம் சிவந்த சாந்தும் கட்டுதலார்ந்த முலைமேலுண்டாகிய வழகிய செய்ய சாந்தமும்; வந்து தோன்றின வந்துதோன்றின; இனித் தருமக்குறை வாராமல் ஊரற்கும் ஏகல்வேண்டும் எ-று.
உலகியலாறு பூப்பு. உரைத்தாற்போலச் செவ்வணியா லறிவித்தலின் உரைப்பா னென்றார். தாளிணை யூரற்கென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: பூப்புணர்த்துதல். 361

குறிப்புரை :

25.10 செவ்வணிகண்டவாயிலவர் கூறல் செவ்வணிகண்டவாயிலவர்கூறல் என்பது தலைமக ளிடத்து நின்றுஞ் செவ்வணிசெல்லக்கண்டு, நம்மூரற்கு உலகியலாறுரைப்பான் வேண்டி, செம்மலருஞ் செம்பட்டும் செஞ்சாந்தும் நமது திருவை யுடைய மனையின்கண் வந்து தோன்றினவெனப் பரத்தை வாயிலவர் தம்முண் மதித்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

25.10. மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.

பண் :

பாடல் எண் : 11

குராப்பயில் கூழை யிவளின்மிக்
கம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங்
காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை
யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன்
புகுமிக் கடிமனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பண்டு இராப்பகல் நின்று உணங்கு ஈர்ங்கடை முற்காலத்து இரவும்பகலுந் தான் வாயில்பெறாது நின்று வாடும் இக்குளிர்ச்சியையுடைய கடையை; இத்துணைப் போழ்தின் சென்று நீட்டியாது இத்துணைக்காலத்திற் கழிந்து; கராப்பயில் பூம் புனல் ஊரன் இக்கடி மனைக்குப் புகும் கராம்பயில்கின்ற பூம்புனலை யுடைய வூரையுடையான் இக்காவலையுடைய மனைக்கட்புகா நின்றான், அதனான், குராப்பயில் கூழை இவளின் மிக்கு குராப்பூப் பயின்ற குழலையுடைய இவளினும் மேம்பட்டு; அம்பலத்தான் குழையாம் அராப் பயில் நுண் இடையார் அடங்கார் எவர் அம்பலத்தான் குழையாகிய அரவுபோலும் நுண்ணிய விடையினை யுடையார் புலந்தடங்காதார் இனி யாவர்! மனைக்கடன் பூண்டலான் எல்லாருமடங்குவர் எ-று.
கராம்பயிலென்பது கராப்பயிலென வலிந்து நின்றது. மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல். 362

குறிப்புரை :

25.11மனைபுகல்கண்டவாயிலவர்கூறல் மனைபுகல்கண்டவாயிலவர்கூறல் என்பது செவ்வணி கண்ட தலைமகன் பரத்தையிடத்தினின்றும் வந்து தடையின்றி மனைவயிற்புகுதாநிற்ப, பண்டிரவும்பகலும் வாயில்பெறாது நின்றுணங்கும் இக்காவலையுடைய கடையை இத்துணைக் காலத்திற் கழிந்து வாயிலின்றிப் புகுதாநின்றான், மனைக்கடன் பூண்டலான் இனிப் புலந்து அடங்காதார் ஒருவருமில்லை யெனத் தலைமகள் வாயிலவர் தம்முட்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.11. கடனறிந் தூரன் கடிமனை புகுதர
வாய்ந்த வாயிலவ ராய்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 12

வந்தான் வயலணி யூர
னெனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செல்வி சென்றசிற்
றம்பல வன்னருளான்
முந்தா யினவியன் நோக்கெதிர்
நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள்
சூழ்ந்து பயின்றனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வந்தான் வயல் அணி ஊரன் என வந்தான் வயலணிந்த வூரனென்று சொல்லுமளவில்; சின வாள் மலர்க்கண் செந்தாமரைச் செவ்வி சென்ற சினவாள் போலுமலர்க்கண்கள் சிவந்த தாமரைப்பூவினது செவ்வியையடைந்தன; சிற்றம்பலவன் அருளான் முந்தாயின வியன் நோக்கு எதிர்நோக்க சிற்றம்பலவன தருளான் முன்னுண்டாகிய பெரிய அப்புலவி நோக்கெதிர் காதல னோக்க; முக மடுவின் பைந்தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றன கதுமெனப் பின் முகமாகிய மடுவிற் பைந்தாளையுடைய குவளைப்பூக்கள் மலர்ந்திருண்டு நெருங்கின; என்னவில்லறக் கிழத்தியோ! எ-று.
இயனோக்கென்றுபிரித்து முன்னுண்டாகிய துனித்த லியல்பை யுடைய நோக்கென் றுரைப்பினு மமையும். கண்களது பிறழ்ச்சிப் பன்மையாற் குவளைப்பூக்கள் பல கூடினாற் போன்றிருந்தன வென்பது போதர, பயின்றனவென்றார். காதலனோடு பழகின வெனினுமமையும். தலைமகற்குப் புலவிக் காலத்து வருந்துன்ப மிகுதியும் புலவிநீக்கத்துவரு மின்பமிகுதியும் நோக்கி, சிற்றம்பலவ னருளாலெனக் காரணத்தை மிகுத்துக் கூறினார். மெய்ப்பாடும், பயனும் அவை. 363

குறிப்புரை :

25.12 முகமலர்ச்சிகூறல் முகமலர்ச்சிகூறல் என்பது பரத்தையிற்பிரிந்த தலைமகன் செவ்வணிகண்டு வந்தானென்று சொல்லுமளவில், தலைமகள் கண்கள் சிவந்தன; அப்புலவி நோக்கத்தெதிர் காதலனோக்க, அச்சிவப்பாறி முகமலர்ந்தமையை அவ்விடத்துக்கண்டவர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.12. பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
தேம்புனை கோதை திறம்பிற ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 13

வில்லிகைப் போதின் விரும்பா
அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை
யோன்தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்
டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய
லூரற் கெதிர்கொண்டதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வில்லி கைப் போதின் விரும்பா அரும்பாவிய வர்கள் அன்பிற் செல்லி காமன் கையி லம்பாகிய பூக்களில் ஆதரமில்லாத அரிய குறிப்பை யுடையவர்கள் தனக்குச் செய்த அன்பின்கண் வேட்டுச்செல்வோன்; கைப் போதின் எரி உடையோன் கையாகிய பூவின்கணுளதாகிய எரியையுடையான்; தில்லைம்பலம் சூழ் மல்லிகைப் போதின் வெண் சங்கம் வண்டு ஊத அவனது தில்லையம்பலத்தைச் சூழ்ந்த மல்லிகையின் போதாகிய வெண்சங்கை வண்டுகளூத; விண் தோய் பிறையோடுஎல்லி விண்ணையடைந்த பிறையோடு இராப்பொழுது; கைப் போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டது கையாகிய பூவின்கணியலும் வேலையுடைய வயலூரற்கு மாறு கொண்டது எ-று.
என்றது வண்டூதுமல்லிகைப்போதானும் அந்திப்பிறை யானுங் கங்குற் பொழுதானும் ஆற்றானாய்ப் புகுதராநின்றான்; இனி நீ புலக்கற்பாலையல்லையென வாயினேர்வித்தவாறு. வில்லிகைப் போதாற் புலன்களை விரும்பாத அரும்பாவியரெனினுமமையும். கைப்போதின்கண்ணே யெரியையுடையானெனினுமமையும். இகழ்தல் தலைமகனாற்றா மை நீங்காதிருத்தல். எல்லி ஊரற்கு வாயிலாக வேற்றுக்கொண்டது புலவாதுண்ணெகிழ்ந்தாளென்றி வளை நாமிகழ்கின்றதென் இது வன்றோ பொழுதென உழையர் தம்முட்புறங் கூறினாராகவுரைப் பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலை மகளைச் சிவப்பாற்றுவித்தல். 364

குறிப்புரை :

25.13 காலநிகழ்வுரைத்தல் காலநிகழ்வுரைத்தல் என்பது பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனது ஆற்றாமையைத் தலைமகள் நீக்காதிருப்ப, வண்டூது மல்லிகைப்போதானும் அந்திப் பிறையானுங் கங்குற் பொழுதானும் ஆற்றானாய்ப் புகுதராநின்றான்; இனி நீ புலக்கற் பாலையல்லையென உழையர் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.13. இகழ்வ தெவன்கொல் நிகழ்வதிவ் வாறெனச்
செழுமலர் கோதை உழையர் உரைத்தது.

பண் :

பாடல் எண் : 14

புலவித் திரைபொரச் சீறடிப்
பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
கலவிக் கடலுட் கலிங்கஞ்சென்
றெய்திக் கதிர்கொண்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்தம்
பலத்துநின் றோனருள்போன்
றுலவிய லாத்தனஞ் சென்றெய்த
லாயின வூரனுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புலவித் திரை பொர புலவியாகிய திரைவந்து மாறுபட; சீறடிப் பூங்கலம் சென்னி உய்ப்ப காதலி சிற்றடியாகிய பொலிவினையுடைய வணியைத் தன்சென்னியி லுய்த்தலான் அப்புலவிநீங்க; கலவிக் கடலுள் கலிங்கம் சென்று எய்தி கலவியாகிய கடலுள் துகிலைச் சென்று பற்றி; கதிர்கொள் முத்தம் நிலவி நிறை மது ஆர்ந்து எயிறாகிய வொளிபொருந்தின முத்தின்கட் பொருந்தி நிறைந்த நீராகிய மதுவைப்பருகி; அம்பலத்து நின்றோன் அருள் போன்று உலவு இயலாத் தனம் அம்பலத்து நின்றவனதருளை யொத்து ஒருஞான்றுந் தளர்தலில்லாத முலைகள்; ஊரனுக்குச் சென்று எய்தல் ஆயின ஊரற்குச் சென்று பெறலாயின எ-று.
புலவுநாறித் திரைகள் வந்துமோதச் சிறியவடியையுடைய பொலிவையுடைய மரக்கலத்தைக் கடலின் சென்னியிலே செலுத்தக் கடலுட்கலந்து கலிங்கமாகிய தேயத்தைச்சென்றெய்தி ஒளி பொருந்திய முத்துக்கள் தன்கண்வந்து நிலைபெற அவ்விடத்துள்ள மதுக்களை நுகர்ந்து அம்பலத்து நின்றவனதருளையொத்து ஒரு ஞான்றுங் கேடில்லாதபொருள் சென்றெய்தலாயினவென வேறு மொருபொருள் விளங்கியவாறறிக. சீரியலுலகிற் றிகழ்தரக்கூடி சீர்மையியன்ற வுலகினுள்ள வின்பமெல்லாவற்றினும் விளங்கக்கூடி. சீரியலுலகு தேவருலகுமாம். இதுவுந் துறைகூறிய கருத்து. மகிழ்வுற்ற தென இன்னார் கூற்றென்னாது துறைகூறினார். மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல். 365

குறிப்புரை :

25.14 எய்தலெடுத்துரைத்தல் எய்தலெடுத்துரைத்தல் என்பது பரத்தையிற்பிரிந்துவந்த தலைமகன் பூப்பு நிகழ்ந்த கிழத்தியைப் புலவிதீர்த்து இன்புறப் பண்ணி எய்தலுற்று மகிழ்ந்தமையை அவ்விடத்துள்ளார் எடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.14. சீரிய லுலகிற் றிகழ்தரக் கூடி
வார்புன லூரன் மகிழ் வுற்றது.

பண் :

பாடல் எண் : 15

செவ்வாய் துடிப்பக் கருங்கண்
பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன் அருளின்
முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக்
கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகு
மெனநினைந் தின்னகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இன் நகை இன்னகையையுடையாள்; செவ்வாய் துடிப்ப செய்ய வாய் துடிப்ப; கருங்கண் பிறழ கரிய கண்கள் பிறழ; சிற்றம்பலத்து எம் மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் சிற்றம்பலத்தின்கணுளனாகிய எம் முடைய நெருங்கிய நீண்ட சடையையுடையவன தருள்பெற்றவர் போல முயங்கி இன்பக்களியின் மயங்குகின்றவள்; இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இவ்வாறு நமக்கருளுமருள் ஒருஞான்று பிறர்க்குமாமென ஒன்றனையுட்கொண்டு; வெவ்வாய் உயிர்ப்போடு விம்மிக் கலுழ்ந்து வெய்ய விடத்தையுடைய நெட்டுயிர்ப்போடு பொருமியழுது; புலந்து நைந்தாள் புலந்து வருந்தினாள் எ-று.
அருளின் முயங்குகின்றாளென்புழி அருள் பெற்றவர் உவமையாதல் ஆற்றலான்வந்தது. அருளான் முயங்கி யென்பாரு முளர். வெவ்வாயுயிர்ப்பென்பது ``கலுழ்கட் சின்னீர்`` என்பதுபோல நின்றது. தவறுபற்றிப் புலப்பளென்று நீ கூறுதி; இதுவன்றோ இவள் புலக்கின்றவாறெனத் தோழிக்குத் தலைமகன் கூறியது.மன்னிய வுலகிற்றுன்னிய வன்பொடு - நிலைபெற்ற வுலகத்தின் வைத்துச் செறிந்த வன்போடு. இதுவுந் துறைகூறிய கருத்து. மெய்ப்பாடு: உவகையைச்சார்ந்த வெகுளி; பெருமிதமு மாம். பயன்: அது. 366

குறிப்புரை :

25.15 கலவிகருதிப்புலத்தல் கலவிகருதிப்புலத்தல் என்பது புலவிதீர்த்து இன்புறப் புணரப்பட்டு மயங்காநின்ற தலைமகள், தனக்கவன்செய்த தலையளியை நினைந்து, இவ்வாறருளுமருள் ஒருஞான்று பிறர்க்குமா மெனவுட்கொண்டு பொருமியழுது, பின்னு மவனோடு கலவிகருதிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.15. மன்னிய வுலகில் துன்னிய அன்பொடு
கலவி கருதிப் புலவி யெய்தியது.

பண் :

பாடல் எண் : 16

மலரைப் பொறாவடி மானுந்
தமியள்மன் னன்ஒருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின்
றாள்பள்ளி காமனெய்த
அலரைப் பொறாதன் றழல்விழித்
தோனம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாளென்னை
கொல்லோ கருதியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மன்னன் ஒருவன் மன்னன் ஒருவன்; மலரைப் பொறாஅடி மானும் தமியள் மென்மையான் மலரையும் பொறாத வடியையுடைய மானுந்தமியளே; ஆயினும், பள்ளி பலரைப் பொறாது என்று இழிந்து நின்றாள் இப்பள்ளி பலரைத்தாங்கா தென்றுகூறிப் பள்ளியினின்று மிழிந்துநின்றாள்; காமன் எய்த அலரைப் பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம்வணங்கா காமனெய்த அலரம்பை வெகுண்டு அன்றழலாகிய கண்ணை விழித்தவனதம்பலத்தை வணங்காத; கலரைப் பொறாச் சிறியாள் கருதியது என்னை கொல் தீய மக்களைப் பொறாத சிறியவள் இந்நிலைமைக்கட் கருதியதென்னோ! எ-று.
இழிந்துநின்றாளென்பது விரையவிழிந்தாளென்பதுபட நின்றது. கலரைப்பொறாச்சிறியாளென்றது தீமக்களென்று சொல்லும் வார்த்தையையும் பொறாதவள் தீமக்கள்செய்யும் காரியத்தைச் செய்தாளென்றவாறு. குறிப்பினிற்குறிப்பென்றது இவ்வாறருள் பிறர்க்காமென நினைந்து இன்னகைபுலந்தாளென்று தலைமகன் கூறிய கூற்றையே தவறாக நினைந்து நம்மை யொழிந்து பிறருமுண் டாகக் கூறினானாகலான் இந்த வமளி பலரைப் பொறா தெனப் புலந்தாள், குறிப்பாலே தலைமகனது குறிப்பையறிந்து. இவ்வகை தலைமகள் புலம்ப வாயில்க டம்முட் சொல்லியது. இதுவுமது. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: ஐயந் தீர்தல். பள்ளியிடத்தாளாகிய தலைமகள் நுண்ணிதாகியதோர் காரணம் பற்றி இவ்வகையுரைத்து ஊடக்கண்டதோழி தன்னெஞ்சோடு சாவினாளென்பது. தலைமகன் றன்னெஞ்சோ டுசாவினானெனின், அது பொருந்தாது. 367

குறிப்புரை :

25.16 குறிப்பறிந்து புலந்தமை கூறல் குறிப்பறிந்து புலந்தமை கூறல் என்பது புலவி தீர்ந்து கலுழ்ந்து புணர்ந்து தானுமவனுமேயாய்ப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், பின்னுமொருகுறிப்பு வேறுபாடுகண்டு புலந்து, இப்பள்ளிபலரைப் பொறா தென்றிழிய, இப்பொழுது இவ ளிவ்வா றிழிதற்குக் கருதிய குறிப்பென்னை கொல்லோவென உழையர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.16. குறிப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி
மலர்நெடுங் கண்ணி புலவி யுற்றது.

பண் :

பாடல் எண் : 17

வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
யால்நின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
யேதக்க வாய்மையனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வில்லைப் பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து விற்போலுநுதலையும் வேல்போலுங் கண்களை யுமுடையாளது வாட்டமறிந்து; வல்லைப் பொலிவொடு வந்தமையான் விரைய இவளது பொலிவோடு வந்தமையால்; வான் நின்று வழுத்தும்; வானத்துள்ளார் நின்றுவழுத்தும் தில்லைப் பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் தில்லைக்கட் பொலியும் சிவனது சிற்றம்பலத்தைக் கருதுவாரைப்போல; மல்லைப் பொலி வயல் ஊரன் வளத்தாற் பொலியும் வயலையுடைய வூரை யுடையவன்; மெய்யே தக்க வாய்மையன் மெய்யாக நல்ல மெய்ம்மையன் எ-று.
வில்லையென்னுமைகாரம் இசைநிறையாய் வந்தது. காதலன் வர இவள் இடையின்றிப் பொலிந்தமையாற் பொலிவொடென ஒடுக்கொடுத்துக் கூறினார். பொலி சிற்றம்பலமென வியையும். மல்லல்: கடைக்குறைந்து ஐகாரம் விரிந்துநின்றது. மல்லற் பொலி யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். 368

குறிப்புரை :

25.17 வாயிலவர் வாழ்த்தல் வாயிலவர் வாழ்த்தல் என்பது செவ்வணிவிடுக்கப் பூப்பி யற் செவ்விகெடாமல் மெலிவறிந்து இவளது பொலிவோடு வந்தமையான் இவன் மெய்யே தக்கவாய்மையனெனத் தலை மகனை வாயிலவர் வாழ்த்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.17. தலைமகனது தகவுடைமை
நிலைதகுவாயில் நின்றோருரைத்தது.

பண் :

பாடல் எண் : 18

சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்
கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்
குதர்செம்ம லூரன்திண்டோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத்
தில்லை யானருளே
போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது
வாய்ந்த புதுப்புனலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சூன் முதிர் துள்ளு நடைப் பெடைக்கு சூன்முதிர்ந்த துள்ளுநடையை யுடைத்தாகிய பெடைக்கு; இல் செய்வான் துணைச் சேவல் ஈனுமில்லைச் செய்யவேண்டித் துணையாகியசேவல்; தேன் முதிர்வேழத்தின் மென்பூக் குதர் தேன் போலுஞ் சாறுமுதிர்ந்த கரும்பினது மெல்லிய பூவைக்கோதும்; செம்மல் ஊரன் திண் தோள் தலைமையை யுடையவூரனது திண்ணிய தோள்களை; மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ மானினது நோக்கம்போலு நோக்கினையுடைய நல்லார்கூடி இன்புற; தில்லையான் அருளே போல் முதிர் பொய்கையில் வாய்ந்த புதுப் புனல் பாய்ந்தது தில்லையான தருளை யொத்து நீர் முதிர்ந்த பொய்கையுள் நல்ல புதுப்புனல் பாய்ந்தது; இனிப் புனலாட்டினாற் றன்காதலியைச் சிவப்பிக்கும்போலும் எ-று.
சூன்முதிர்தலாற் குறுகவடியிடுதலிற் றுள்ளு நடையென்றார். தில்லையானருள் பெற்றவர் போல நல்லார் மகிழவென்றுரைப்பாரு முளர். சேவலன்னந் தன் சூன்முதிர்ந்தபெடைக்கு ஈனில் லிழைத்துப் பாதுகாக்கின்றாற் போல இவனுந் தன்காதலிக்கு வேண்டுவன செய்து மனைவயிற்றங்கி யின்புறுகின்றானென உள்ளுறை காண்க. துன்னு நடையென்று பாடமோதி, சூன் முதிர்தலாற் பயில அடியிடுநடை யென்றுரைப்பாரு முளர். வெண்பூவென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: பிரிவுணர்த்துதல். 369

குறிப்புரை :

25.18 புனல் வரவுரைத்தல் புனல் வரவுரைத்தல் என்பது தலைமகளுடன் மனை வயிற்றங்கி யின்புறா நின்றவனது தோள்களைப் பரத்தையர்பொருந்தி மகிழப் புதுப்புனல் வந்து பரந்தது; இனிப் புனலாட்டினால் இவன்காதலி புலக்கும்போலுமென, வையத்தார் தம்முட் புனல்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.18. புனலா டுகவெனப் புனைந்து கொண்டு
மனைபுகுந் தவனை வைய முரைத்தது.

பண் :

பாடல் எண் : 19

சேயே யெனமன்னு தீம்புன
லூரன்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
தீர்சுடர் கின்றகொலந்
தீயே யெனமன்னு சிற்றம்
பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனஅடி யீர்நெடுந்
தேர்வந்து மேவினதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுடர்கின்ற கொலம் தீயே என மன்னு சுடரா நின்றவடிவு தீயேயென்றுசொல்ல நிலைபெற்ற; சிற்றம்பலவர் தில்லைநகர்வாய் வீயே என அடியீர் சிற்றம்பலவரது தில்லைநகரிடத் துள்ளீராகிய பூவையொக்கு மடியையுடையீர்; நெடுந் தேர் வந்து மேவினது நெடியதேர் ஈண்டுவந்து மேவிற்று; புணர் தவம் தொன்மை செய்தீர் இவனைப் புணர்தற்குத் தக்கதவத்தை முற்காலத்துச் செய்தீர்கள்; சேயே என மன்னு தீம் புனல் ஊரன்திண் தோள் இணைகள் தோயீர் வடிவு முருகவேளேயென்று சொல்ல நிலைபெறா நின்ற இனிய புனலையுடைத்தாகிய வூரையுடையவனது திண்ணிய தோளிணைகளையினியணைமின் எ-று.
ஒன்றற் கொன்றிணையாயிருத்தலின் இணையெனத் தனித்தனி கூறப்பட்டன. இதுவும் ஊடனிமித்தம். கோலமெனற்பாலது கொலமெனக் குறுகி நின்றது. கயன்மணிக்கண்ணியென்பது பாடமாயின், பரத்தையர் சேரிக்கட்டலைமகனது தேர்செல்லத் தலைமகணொந் துரைத்ததாம். இப்பொருட்கு நெடுந்தேர் நுமது சேரிக்கண்வந்து தங்கிற்றென் றுரைக்க. மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகன்வரவு சேரிப் பரத்தையர்க்குப் பாங்காயினார் அவர்க் குணர்த்துதல். 370

குறிப்புரை :

25.19 தேர்வரவுகண்டு மகிழ்ந்து கூறல் தேர்வரவுகண்டு மகிழ்ந்து கூறல் என்பது புனல் வரவு கேட்ட தலைமகன் புனலாட்டு விழவிற்குப் பரத்தையர் சேரிக்கட் செல்லாநிற்ப, இவனைப் புணர்தற்குத் தக்க தவத்தினை முற்காலத்தே செய்தீர்கள்; தேர்வந்து தோன்றிற்று; இனிச்சென்று இவனது தோளிணையைத் தோய்மினெனத் தேர்வரவு கண்டு பரத்தையர் தம்முண் மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.19. பயின்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக்
கயன்மணிக் கண்ணியர் கட்டு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 20

அரமங் கையரென வந்து
விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு
கும்மவ ளன்றுகிராற்
சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதைய
காத்துநம் பொற்பரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அரமங்கையர் என வந்து விழாப் புகும் அவ்வவர் அரமங்கையரைப்போல வந்து புனலாட்டு விழவின்கட் புகாநின்ற அவரவரே; வான் அரமங்கையர் என அவள் வந்து அணுகும் நாமெல்லாம் இத்தன்மையேமாக, வானிடத் தரமங்கைய ரென்று கருதும்வண்ணம் அவள் வந்தணுகாநின்றாள், அணுகித் தன்னிடத் திவரைத்திரிப்ப; அன்று அங்கு உகிரான் அயனைச் சிரஞ்செற்றோன் தில்லை அன்று அவ்விடத்து உகிரால் அயனைச் சிரந் தடிந்தவனது தில்லையின் சிற்றம்பலம் வழுத்தாப் புர மங்கையரின் நையாது; சிற்றம்பலத்தை வழுத்தாத புரங்களின் மங்கையரைப் போலப் பின்வருந்தாது நம் பொற்பரை ஐய காத்தும் நம் பொற்பரை வியப்ப முன்னுடைத்தாகக் காப்பேம் எ-று.
அரமங்கையர் தேவப் பெண்களுக்குப் பொதுப்பெயர். வானரமங்கையரென்றது அவரின்மேலாகிய உருப்பசி திலோத்தமை முதலாயினாரை. வானரமங்கையை ரென்றது சாதியை நோக்கி நின்றது. ஐயபொற்பரையெனக் கூட்டினுமமையும். அவளென்றதும் சேயிழையென்றதும் பரத்தையரிற் றலைவியாகிய இற்பரத்தையை.
பரத்தைவாயி லெனவிரு கூற்றுங்
கிழவோட் சுட்டாக் கிளப்புப்பய னிலவே
(தொல் - பொருள் - செய்யுள் - 190) என்பதனால் இதுகிழவோட் சுட்டாக் கிளப்பாயினும், இப்பரத்தையரது மாறுபாடு தலைமகளூடு தற்கு நிமித்தமாகலிற் பயனுடைத்தாம். மெய்ப்பாடு: அச்சம், பயன்: தலைமகனைத் தங்கட்டாழ் வித்தல். 371

குறிப்புரை :

25.20 புனல் விளையாட்டிற்றம்முளுரைத்தல் புனல்விளையாட்டிற் றம்முளுரைத்தல் என்பது தலைமகனு டன் புனலாடாநின்ற பரத்தையர் சேடிமார் அரமங்கையரைப் போலப்புனலாடாநின்ற அவ்வவரேயென்று விளித்து, நாமெல்லாமித்தன்மையேமாக வானரமங்கையரென்று சொல் லும்வண்ணம் மற்றொருத்திவந்து இவனைத் திரித்துக் கொள்ளக்கொடுத்துப் பின் வருந்தாது முன்னுறக்காப் போமெனத் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.20. தீம்புனல் வாயிற் சேயிழை வருமெனக்
காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 21

கனலூர் கணைதுணை யூர்கெடச்
செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோ னருள்பெற்
றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பா
லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
லூர்கணப் பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கனல் ஊர் கணை துணை ஊர் கெடச் செற்ற கனல் பரந்தகணையான் ஒத்தவூர்கெட வெகுண்ட; சிற்றம்பலத்து எம் அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் சிற்றம்பலத்தின்க ணுளனாகிய எம்முடைய அனலை யொக்குஞ் சடையை யுடையவனதருளைப் பெற்றவர்போலச் செம்மாந்து; அமரப் புல்லும் மினல் ஊர் நகையவர் தம்பால் அருள் விலக்கா விடின் அவனைச் செறியப்புல்லாநின்ற ஒளிபரந்த நகையையுடைய வர் தம்மிடத்து அவனருள்செல்லாமை விலக்கேனாயின்; யான் புனல் ஊரனை பிரியும் புனல் ஊர்கண் அப்பூங்கொடி யான் புனலூரனைப் பிரிந்திருக்கும் புனல் பரக்குங் கண்ணையுடைய அவன்மனைக் கிழத்தியாகிய அப்பூங்கொடி யாகின்றேன் எ-று.
கணைதுணை யெனச் செய்யுளின்ப நோக்கி மிகாதுநின்றது. கணையென்பதனை யெழுவாயாக்கி யுரைப்பாருமுளர்.
``பரத்தையிற்பிரிவே நிலத்திரி வின்றே``
(இறையனாகப் பொருள் - 42) என்பதனால், இவரதில்லந் தம்மில் வேறுபாடில்லாமையறிக. மெய்ப்பாடு: வெகுளி. பயன்: தனது பீடுணர்த்தல். 372

குறிப்புரை :

25.21 தன்னை வியந்துரைத்தல் தன்னை வியந்துரைத்தல் என்பது சேடிமார் பின் வருந்தாது முன்னுறக் காப்பேமென்று தம்முட் கூறுவதனைக் கேட்டு, இவனை அமரப் புல்லும் பரத்தையர்மாட்டு இவனருள் செல்லாமல் விலக்கேனாயின் என்மாட்டிவனைத் தந்தழாநின்ற இவன் மனைக்கிழத்தியாகின்றேனெனப் பரத்தைத்தலைவி தன்னைவியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.21. அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி
முனிவு தோன்ற நனிபு கன்றது.

பண் :

பாடல் எண் : 22

இறுமாப் பொழியுமன் றேதங்கை
தோன்றினென் னெங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத்
தான்தில்லை யூரன்திண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
குப்பெற்ற பெற்றியினோ
டிறுமாப் பொழிய இறுமாப்
பொழிந்த இணைமுலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அங் கைச் சிறுமான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண்தோள் அங்கைக்கண்ணே சிறிய மானைத்தரித்த சிற்றம்பலத்தானது தில்லைக்கணுளனாகிய ஊரனுடைய திண்ணிய தோள்களை; பெறு மாத்தொடும் பெறுதலானுண்டாகிய பெருமை யோடும்; தன்ன பேர் அணுக்குப் பெற்ற பெற்றியினோடு தன்ன வாகிய அவனோ டுண்டாகிய பெரிய அணுக்கைப்பெற்ற தன்மைக ளோடும்; இறுமாப்பு ஒழிய தான் செம்மாத்தலையொழிய; இணை முலை இறுமாப்பு ஒழிந்த இணைமுலைகள் ஏந்துதலை யொழியப் புகாநின்றன. தங்கை தோன்றின் இனித் தனக்கொரு தங்கை தோன்றின்; என் எங்கை இறுமாப்பு ஒழியும் அன்றே என்னுடைய வெங்கையும் செம்மாத்தலை யொழியுமன்றே; அதனான் வருவ தறியாது தன்னைப் புகழ்கின்றாள் எ-று.
எங்கையென்றது என்றங்கை யென்றவாறாயினும், என் னெங்கையென இயைபு மிகுதிகூறி நகையாடினாள். மாத்து தலை மகற்குரியளாய் நிற்றலான் உண்டாகிய வரிசை. பெற்றி அணுக் காற்றன்னை மதித்தல். தன்னபெற்றியென வியையும். பெற்றி யினோடு மென்னு மும்மை தொக்கு நின்றது. ஒழிந்தவென்னு மிறந்த காலம் விரைவுபற்றி வந்தது. மெய்ப்பாடு: வெகுளியைச்சார்ந்த வழுகை. பயன்: பரத்தையது சிறுமையுணர்த்துதல். அவ்வகை பரத்தைகூறிய வஞ்சினம் தன்பாங்காயினாராற்கேட்ட தலைமகள் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப இவ்வகைசொன்னாளென் பது.373

குறிப்புரை :

25.22 நகைத்துரைத்தல் நகைத்துரைத்தல் என்பது பரத்தைத்தலைவி தன்னை வியந்து கூறினாளென்று கேட்ட தலைமகள், எங்கைச்சியார் தமக்கும் ஒரு தங்கைச்சியார் தோன்றினபொழுதே தம்மிறு மாப்பொழியத் தம்முடைய இணைமுலைகளின திறுமாப்பும் ஒழியப் புகாநின்றது; இதனை யறியாது தம்மைத்தாம் வியக்கின்ற தென்னோவெனப் பரத்தையை நோக்கி நகைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.22. வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
பரத்தையை நோக்கி விரித்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

வேயாது செப்பின் அடைத்துத்
தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம்பலமனை
யாள்தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென்
கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற்
பால வியல்புகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வேயாது செப்பின் அடைத்துத் தமி வைகும் வீயின் அன்ன சூடாது செப்பின்க ணிட்டடைப்பத் தனியே வைகும் பூவைப்போலும்; தீயாடி சிற்றம்பலம் அனையாள் தீயின் கண்ணாடுவானது சிற்றம்பலத்தை யொப்பாள்; தில்லை ஊரனுக்கு இன்று ஏயாப்பழி என நாணி தில்லையூரனுக்கு இன்று தகாதபழியா மெனக்கருதி நாணி; என்கண் இங்ஙனே மறைத்தாள் தனதாற் றாமையை என்னிடத்தும் இவ்வண்ணமே மறைத்தாள், அதனால், இவள் கற்பு யாய் ஆம் இயல்பு இவளது கற்பு நமக்குத் தாயாமியல் பையுடைத்து; இயல்புகள் நல் பால இவளுடைய நாணமுதலாகிய வியல்புகள் நல்லகூற்றன எ-று.
தமிவைகும்வீ அக்காலத்தினிகழ்ந்த வேறுபாட்டிற்குவமை. அம்பலம் இயற்கை நலத்திற்குவமை. பாணனுரைத்ததென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகளது பெருமை யுணர்த்துதல். 374

குறிப்புரை :

25.23 நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல் நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல் என்பது தலைமகனைப் பரத்தையர்வசம் புனலாடவிட்டுச் சூடுவாரின்றிச் செப்பின்க ணிட்டடைத்துத் தமியே வைகும் பூப்போல்வாள் இஃதவனுக்குத் தகாத பழியாமெனக் கருதி நாணி அதனை மறைத்திருந்தமை கண்ட தோழி, இவளது கற்பும் நலனும் நல்ல பகுதியையுடை யனவாயிருந்தனவென அவள் நலத்தை மிகுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.23. மன்னவன் பிரிய நன்மனைக் கிழத்தியை
நாணுதல் கண்ட வாணுத லுரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

விறலியும் பாணனும் வேந்தற்குத்
தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை
மாமரம் போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி
யோமை யறிந்திலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விறலியும் பாணனும் விறலியும் பாணனும்; தில்லை இறை அமைத்த திறல் இயல் யாழ் தில்லை யிறையா லமைக்கப்பட்ட வெற்றி யியலும் யாழை; வேந்தற்குக் கொண்டு வந்து நின்றார் நம் வேந்தற்குத் துயிலெழுமங்கலம் பாடக் கொண்டுவந்து நின்றார்கள்; அறல் இயல் கூழை நல்லாய் அறல் போலுங் கூழையை யுடைய நல்லாய்; இராச்சென்று திசைபோம் பறல் இயல் வாவல் இராப்பொழுதின்கட் சென்று திசையைக் கடக்கும் பறத்தலாகிய வியல்பினையுடைய வாவல்; பகல் உறை மா மரம் போலும் தமியோமை அறிந்திலர் இரைதேருங் காலமன்மையாற் பகற் பொழுதின்கணுறையும் பெரியமரம்போலும் இராப்பொழுதிற் றுணையில்லாதோமை இவரறிந்திலர் போலும் எ-று.
வெற்றி வீணைகளுட்டலையாதல். ``எம்மிறை நல்வீணை வாசிக்குமே`` (நாவுக்கரசர் தேவாரம். தனித்திருவிருத்தம். பொது 7) என்பவாகலின் இறையமைத்த யாழென்றார். சென்று பகலுறை மாமரமென் றியைப்பினு மமையும். பறத்தல் பறலென இடைக் குறைந்து நின்றது. போல�

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 25

திக்கின் இலங்குதிண் டோளிறை
தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக தணிந்துநின்
றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய
அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
வேலெந் தனிவள்ளலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
திக்கின் இலங்கு திண் தோள் இறை திக்கின்கண் விளங்காநின்ற திண்ணிய தோள்களையுடைய விறைவன்; தில்லைச் சிற்றம்பலத்துக் கொக்கின் இறகது அணிந்து நின்றாடி தில்லையிற் சிற்றம்பலத்தின்கட் கொக்கி னிறகதனை யணிந்து நின்றாடுவான்; தென் கூடல் அன்ன அவனது தெற்கின்க ணுண்டாகிய கூடலை யொக்கும்; அக்கு இன் நகை இவள் நைய அயல்வயின் நல்குதலால் அக்குமணிபோலும் இனியநகையை யுடைய இவள் வருந்த அயலாரிடத்து நல்குதலால்; நின்றசெவ்வேல் எம் தனி வள்ளல் எல்லாரானுமறியப்பட்டு நின்ற செவ்வேலை யுடைய எம்முடைய வொப்பில்லாத வள்ளல்; இன்று தக்கிருந் திலன் இன்றுதக்கிருந் திலன் எ-று.
அயல்வயி னென்பதற்குப் பொருணசை யுள்ளத்தராகலிற் காமத்திற் கயலென்றுரைப்பினுமமையும். தலைமகனது தகவின்மை யென்பதூஉம் பாடம். #9; 376

குறிப்புரை :

25.25 தோழியியற் பழித்தல் தோழி யியற்பழித்தல் என்பது பாணன் வரவுரைத்த தோழி, இவள் வருந்த அயலாரிடத்து நல்குதலால் எம்முடைய வள்ளல் இன்று தக்கிருந்திலனெனத் தலைமகனை யியற்பழித்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.25. தலைமகனைத் தகவிலனெனச்
சிலைநுதற்பாங்கி தீங்குசெப்பியது.

பண் :

பாடல் எண் : 26

அன்புடை நெஞ்சத் திவள்பே
துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின்
றாடி யிருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்
தன்னஞ் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய
லூரன் வரம்பிலனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அடியார் என்பிடை அமிழ்து வந்து ஊற அடியவ ரென்புகளிடையே அமிழ்தம் வந்தூற; அம்பலத்து நின்றாடி இருஞ் சுழியல் அம்பலத்தின்கண்ணே நின்றாடுவானதுபெரிய சுழியலின் கண்; தன்பெடை நையத் தகவு அழிந்து தன் பெடை வருந்தத் தகுதிகெட்டு; அன்னம் சலஞ்சலத்தின் வன்பெடைமேல் துயிலும் அன்னஞ் சலஞ்சலத்தினது வலியபெடைமேற் கிடந் துறங்கும்; வயல் ஊரன் வயலாற் சூழப்பட்ட ஊரையுடையவன்; அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற தன் மாட்டன்பையுடைய நெஞ்சத்தை யுடைய இவள் மயங்காநிற்ப இதற்குப் பரியாமையின்; வரம்பு இலன் தகவிலன் எ-று.
அன்புடை நெஞ்சத்திவளென்றதனால், பரத்தையர தன் பின்மை கூறப்பட்டதாம். இருஞ்சுழியலூரெனவியையும். சுழிய லென்பது ஒரு திருப்பதி. வன்பெடை யென்றதனாற் பரத்தையரது வன்கண்மை விளங்கும். ஒருசொல் வருவியாது பேதுறுதலான் வரம்பிலனென்றுரைப்பாருமுளர். உள்ளுறையுவமம் வெளிப்பட நின்றது. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த நகை. பயன்: தலைமகனை யியற்பழித்துத் தலைமகளை யாற்று வித்தல்.377

குறிப்புரை :

25.26 உழையரியற்பழித்தல் உழையரியற்பழித்தல் என்பது தோழி தலைமகனை யியற்பழித்துக் கூறாநிற்பக் கேட்டு, தன்மாட்டன்புடை நெஞ்சத் தையுடைய விவள்பேதுற இதற்குப் பரியாமையின் வயலூரன் வரம்பிலனென உழையர் அவனை யியற்பழித்துக்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
25.26. அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
குழைமுகத் தவளுக் குழைய ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 27

அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்
பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை
யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார்
நனவு கனவுமுண்டேற்
பஞ்சா ரமளிப் பிரிதலுண்
டோவெம் பயோதரமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம்தண் கயிலை இறைவனென்று உட்காதாருடைய புரங்களைக் கெடுத்த சிற்றம்பலவரது அழகிய குளிர்ந்த கயிலைக்கண்; மஞ்சு ஆர் புனத்து மஞ்சார்ந்த புனத்திண்கண்; அன்று மாந்தழை ஏந்தி வந்தார் அவர் நனவு என் நெஞ்சார் அன்று மாந்தழையை யேந்திவந்தாராகிய அவர் இன்று நனவின் என்னெஞ்சத்தின்கண்ணார்; விலக்கினும் நீங்கார் யான் றடுப்பினும் அவ்விடத்தினின்று நீங்கார்; கனவும் உண்டேல் துயலு முண்டாயின்; பஞ்சு ஆர் அமளி எம் பயோதரம் பிரிதல் உண்டோ பஞ்சார்ந்த வமளிக்கண் எம்பயோதரத்தைப் பிரித லுண்டோ! நீர் கொடுமைகூறுகின்றதென்! எ-று.
அஞ்சார் தறுகண்ணரெனினுமமையும். தழையேந்திவந்தா ரென்பதனை முற்றென்று, இளிவந்தன செய்து நம்மைப் பாதுகாத்தார் இன்றிவ்வா றொழுகுவரென் றுரைப்பினு மமையும். கனவு முண்டேலென்பதற்குத் துயில்பெற்றுக் கனாக்காணினென்றுரைப் பினுமமையும். எனது நெஞ்சாரென்பதூஉம், ஊரனைப் பரிசுபழித்த வென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகனை யியற்படமொழிந்தாற்றுதல். 378

குறிப்புரை :

25.27 இயற்பட மொழிதல் இயற்பட மொழிதல் என்பது தலைமகனை யியற்பழித்த வர்க்கு, அன்று நம் பொருட்டாக நம்புனத்தின் கண்ணே மாந்தழை யேந்தி வந்தார் இன்று என்னெஞ்சத்தின்கண்ணார்; அது கிடக்க, மறந் துறங்கினேனாயின் அமளியிடத்துவந்து என்பயோதரத்தைப் பிரியாதார்; இத்தன்மையாரை நீங்கள் கொடுமை கூறுகின்ற தென்னோ வெனத் தலைமகள் அவனை யியற்பட மொழியாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.27. வரிசிலை யூரன் பரிசு பழித்த
உழையர் கேட்ப எழில்நகை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 28

தெள்ளம் புனற்கங்கை தங்குஞ்
சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா
இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகுமொரு காற்பிரி
யாதுள்ளி யுள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்றகத்
தேவரும் பான்மையளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் தெள்ளிய நல்லபுனலையுடைய கங்கை தங்குஞ் சடையை யுடையவன்; சிற்றம்பலத்தான் சிற்றம்பலத்தின்கண்ணான்; கள்ளம் புகு நெஞ்சர் காணா இறை பொய் நுழையு நெஞ்சத்தையுடையவர் ஒரு ஞான்றுங் காணாத விறைவன்; உறை காழி அன்னாள் அவனுறைகின்ற காழியையொப்பாள்; உள்ளி ஒருகால் பிரியாது உள்ளம் புகும் யான்றன்னை நினையாது வேறொன்றன் மேலுள்ளத்தைச் செலுத்தும்வழியும் தானென்னை நினைந்து ஒருகாலும் பிரியாது என்னுள்ளம் புகாநின்றாள்; உள்ளுதொறும் அவ்வாறன்றி யான்றன்னை நினையுந்தோறும்; பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையள் உயர்ந்த விடத்தினின்றும் பள்ளத்திற்புகும் புனலை யொத்துத் தடுப்பரியளாய் என் மனத்தின் கண்வரு முறைமையளாகா நின்றாள்; அதனாற் பிரிந்தீண்டிருத்தல் அரிதுபோலும் எ-று.
தெள்ளம்புனல் மெல்லம்புலம்பு போல்வதோர் பண்புத் தொகை. மெய்ப்பாடு: மருட்கை. பயன்: பரத்தையீனீங்கித் தலை மகளிடத்தனாதல். 379

குறிப்புரை :

25.28 நினைந்துவியந்துரைத்தல் நினைந்து வியந்துரைத்தல் என்பது புனலாடப் பிரிந்து பரத்தையிடத் தொழுகாநின்ற தலைமகன், யான் றன்னை நினையாது வேறொன்றன்மேல் உள்ளத்தைச் செலுத்தும்வழியும் தானென்னை நினைந்து என்னுள்ளம் புகாநின்றாள்; அவ்வாறன்றி யான்றன்னை நினையுந்தோறும் பள்ளத்துப் புகும்புனல்போல நிறுத்த நில்லாது என் மனத்தா ளாகாநின்றாள்; ஆதலாற் பிரிந்து ஈண்டிருத்தல் மிகவு மரிதெனத் தலைமகளை நினைந்து வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.28. மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன்
அல்லியங் கோதையை அகனமர்ந் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 29

தேன்வண் டுறைதரு கொன்றையன்
சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன்
மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு
தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ்
வாறுகொ னண்ணுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும் தேனும் வண்டு முறையும் கொன்றைப் பூவையணிந்தவனது சிற்றம்பலத்தை வழுத்தும்; வான் வள்துறை தரு வாய்மையன் வானிடத்துளவாகிய வளவிய விடங்களை எனக்குத் தரு மெய்ம்மையையுடையான்; மன்னு குதலை இன்வாயான் நிலைபெற்ற குதலையை யுடைய இனிய வாயையுடையான்; வள் துறை தரு மால் அமுது அன்னவன் வளவிய கடல் தந்த பெருமையை யுடைய அமிர்தத்தை யொப்பான்; வந்து அணையான் அவன் என்னை வந்தணைகின்றிலன்; வண்டு உறைதரு கொங்கை நான் நண்ணுவது எவ்வாறு கொல் நறுநாற்றத்தால் வண்டுகளுறையுங் கொங்கையையுடையாளை யான்பொருந்துவது இனியெவ்வாறோ! எ-று.
தேனை நுகரும் வண்டெனினுமமையும். வழுத்துவார்பெறும் வானென்பது வழுத்தும் வானென இடத்து நிகழ்பொருளின்றொழில் இடத்துமேலேறிற்று. இப்பொழுது குதலையையுடைத்தாகிய வாயான் மேல்வளவிய நூற்றுறைகளைச் சொல்லி எனக்கின்பத்தைச் செய்யும் அமிழ்தன்னவ னென்றுரைப்பினுமமையும். வாயிலின் வாயிலால். மெய்ப்பாடு: அழுகை. பயன்: வாயில்கோடல். நெஞ்சோடு சொல்லியது. 380

குறிப்புரை :

25.29 வாயில்பெறாது மகன்றிற நினைதல் வாயில் பெறாது மகன்றிற நினைதல் என்பது பரத்தையிற் பிரிந்து நினைவோடுவந்த தலைமகன் வாயிற்கணின்று, இத் தன்மையான் என்னைவந் தணைகின்றிலன்; யான் இனி வண்டுறையுங் கொங்கையை எவ்வாறு நண்ணுவதென்று வாயில்பெறாது மகன்றிற நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.29. பொற்றொடி மாதர் நற்கடை குறுகி
நீடிய வாயிலின் வாடினன் மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 30

கயல்வந்த கண்ணியர் கண்ணினை
யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா
விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத்
தோனம் பலம்நிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன்
னாட்டுப் பொலிபவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வந்த ஆடரவு மா மதியின் அயல் ஆட வைத்தோன் அம்பலம் நிலவு ஏதங்குறித்துவந்த ஆடரவைப் பெருமையையுடைய பிறையின்பக்கத்து அதனை வருந்தாமற் செய்து ஆடவைத்தவனது அம்பலம் நிலைபெற்ற; புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டுப் பொலிபவர் புயல்தங்கிய பெரிய மதிலை யுடைய தில்லையைச் சூழ்ந்த நல்லநாட்டிற் பொலியும் மகளிர்; கயல் வந்த கண்ணியர் கண் இணையால் கயல் போலுங் கண்ணை யுடையவர் கண்ணிணையால்; மிகு காதரத்தான் மயல் வந்த வாட்டம் ஒருகாலைக் கொருகால் மிகாநின்ற அச்சத்தால் வந்த மயக்கத்தாலுண்டாகிய வாட்டத்தை; அகற்றா விரதம் என் நீக்காத இவ்விரதம் யாதாம் எ-று.
தில்லை நன்னாட்டுப் பொலிபவர் அகற்றாதவென வியையும். பொலிபவர்க்கு என்னு நான்கனுருபு விகாரவகையாற் றொக்கதெனி னுமமையும். இது முன்னிலைப்புறமொழி. இதனுள் கயல் வந்த கண்ணியரென்றது தலைமகளை. தில்லை நன்னாட்டுப் பொலிபவ ரென்றது தோழியை.
இனி மதிக்குவமை தலைமகளும் அரவிற்குவமை தலைமகனும் ஈசனுக்குவமை தோழியுமென்றாக்கி, அவ்வகைத் தாகிய பாம்பையும் மதியையும் தம்மிற்பகையறுத்து ஓரிடத்தே விளக்கவைத்தாற்போல என்னுடன் அவட்குண்டாகிய வெறுப்பைத் தீர்த்து விளங்கவைத்தல் உனக்குங் கடனென்றா னாயிற்றென உள்ளுறை காண்க. மதியையர வேதங் குறித்து வந்தாற்போலத் தலைமகளைத் தலைமக னேதங்குறித்து வருதலாவது தலைமகளுக்கு ஊடல் புலவி துனியென்னும் வெறுப்புத் தோன்றுதற்குத் தக்க காரணங்களைத் தலைமகன் உண்டாக்கிக் கொண்டு வருதல். அரவைக் கண்டு மதிக்கச்சந்தோன்றி னாற்போலத் தலைமகனைக் கண்டு தலைமகளுக்கு ஊடல் புலவி துனியென்னும் வெறுப்புத்தோன்றிற்று; ஆதலால் அத்தலைமகனை யும் தலைமகளையும் மதிக்குமரவுக்குமொப்பச் சிலேடித்த சிலேடைக்கு மறுதலையாகாது, ``தேவ ரனையர் கயவர்`` என்றாற் போல வாமென்க. (குறள் - 1073) கயல்வந்த கண்ணியர் கண்ணி ணையால் வந்த அச்சத்தால் வந்த மயக்கத்தால் வந்த வாட்டம் இவனுக்கு வருதற்குக் காரணம் தலைவி பராமுகஞ் செய்யும்படி தான் வருந்தல்.
இதனைத் தீர்த்தல் தில்லை நன்னாட்டுப் பொலியுமகளிர்க்குக் கடனென்றா னென்க. அது ``பிணிக்கு மருந்து பிறம னணியிழை - தன்னோய்க்குத் தானே மருந்து`` (குறள் - 1102) என்றும், ``துறைமேய்வலம்புரி தோய்ந்துமணலுழுத தோற்ற மாய்வான் - பொறை மலிபூம் புன்னைப் பூவுதிர் நுண்டாது போர்க்குங்கான - னிறைமதிவாண் முகத்து நீள்கயற்கண் செய்த - வுறைமலி யுய்யாநோ யூர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும்`` (சிலப்பதிகாரம் - கானல்வரி - 8) என்றும், சொல்லியவாறுபோலக் கண்ணாலுண்டாகிய நோய்க்குக் கண்ணே மருந்தாமென்று சொல்லியவாறாமெனக் கொள்க. மெய்ப்பாடும், பயனும் அவை. தோழியை வாயில்கோடற் கிவ்வகை சொன்னானென்பது. 381

குறிப்புரை :

25.30 வாயிற்கண் நின்று தோழிக்குரைத்தல் வாயிற்கண்நின்று தோழிக்குரைத்தல் என்பது வாயில் பெறாது மகன்றிற நினையாநின்ற தலைமகன், நல்லநாட்டுப் பொலியும் மகளிர் தங்கண்ணிணையான் வந்த அச்சத்தால் வந்த மயக்கத்தால் உண்டாகிய வாட்டத்தை நீக்காத இவ்விரதம் யாதாமென வாயில் வேண்டித் தோழிக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.30. பெருந்தகை வாயில் பெறாது நின்று
அருந்தகைப் பாங்கிக் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 31

கூற்றாயினசின ஆளியெண்
ணீர்கண்கள் கோளிழித்தாற்
போற்றான் செறியிருட் பொக்கமெண்
ணீர்கன் றகன்றபுனிற்
றீற்றா வெனநீர் வருவது
பண்டின்றெம் மீசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியிற்
போதிர்அத் தேர்மிசையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கூற்றாயின சின ஆளி எண்ணீர் கூற்றம் போலக் கொடியவாகிய சினத்தையுடைய யாளிகளை ஊறுசெய்வன வாகக் கருதாது; கண்கள் கோள் இழித்தால் போல் தான் செறி இருள் பொக்கம் எண்ணீர் கண்களைக் கோளிழித்தாற் போலச் செறிந்த விருளின் மிகுதியைத்தான் இடையூறாகநினையாது; கன்று அகன்ற புனிற்று ஈற்றா எனப் பண்டு நீர் வருவது கன்றை யகன்ற ஈன்றணிமை யையுடைய ஈற்றாவையொத்துப் பண்டு நீர் எம்மாட்டு வருவது; இன்று எம் ஈசர் தில்லைத் தேற்றார் கொடி நெடுவீதியில் இன்று எம்முடைய வீசரது தில்லையிலே எம் பொருந்தாதாரது கொடியையுடைய நெடிய வீதியில்; அத் தேர்மிசைப் போதிர் எம்மாட்டூர்ந்துவந்த தேர் மேலேறிப் போகாநின்றீர்; இதுவன்றோ எம்மாட்டு நும்மருளாயினவாறு எ-று.
ஆளியெண்ணீர் பொக்க மெண்ணீர் என்பனவற்றை முற்றாக வுரைப்பினுமமையும். கண்களுக்குக் கோளென்றது பார்வை. இதனை இழித்தலென்பது கண்மணியைவாங்குதல். தானென்பது அதுவன்றி இதுவொன் றென்பதுபட நின்றதோரிடைச் சொல்; அசைநிலை யெனினுமமையும். ஈற்றாவென்றது கடுஞ்சூல் நாகன்றிப் பலகாலீன்ற ஆவை. மெய்ப்பாடு: வெகுளி. பயன்: வாயின் மறுத்தல். 382

குறிப்புரை :

25.31 வாயில் வேண்டத் தோழி கூறல் வாயில்வேண்டத் தோழி கூறல் என்பது வாயில் வேண்டிய தலைமகனுக்கு, பண்டு நீர் வரும் வழியிடை வருமேதமும் இருளுமெண்ணாது கன்றையகன்ற ஈற்றாவையொத்து எம்மாட்டு வருதிர்; இன்று எம்பொருந்தாதார் தெருவே அன்று எம்மாட்டூர்ந்து வந்த தேர்மேலேறிப் போகாநின்றீர்; இதுவன்றோ எம்மாட்டு நுமதருளெனத் தோழி அவன்செய்தி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.31. வைவேல் அண்ணல் வாயில் வேண்டப்
பையர வல்குற் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 32

வியந்தலை நீர்வையம் மெய்யே
யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற
வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர்
அரனிருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த
விருந்தினர் கார்மயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார்மயிலே கார்காலத்து மயிலை யொப்பாய்; வந்த வாள் அரக்கன் புயம் தலை தீர வரையை யெடுக்க வந்த வாளினையுடைய அரக்கன் கையுந் தலையும் உடலினீங்க; புலியூர் அரன் இருக்கும் பொருப்பின் புலியூரரன் வாளாவிருக்குங் கயிலைப் பொருப்பின்கண்; கயம் தலை யானை கடிந்த விருந்தினர் மெல்லிய தலையையுடைய யானையை நம்மேல்வாராமல் அன்று மாற்றிய நம் விருந்தினர்; விண் தோய் குடைக் கீழ் தமது விண்ணைத் தோயாநின்ற குடைக்கீழ்; அலை நீர் வையம் வியந்து மெய்யே இறைஞ்ச கடலாற் சூழப்பட்ட வுலகத்துள்ளா ரெல்லாரும் வியந்து சென்று அகனமர்ந்திறைஞ்ச; வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய் திறவார் தாந்தமது பெருமைநினையாது நங்கடைவந்து நின்று வேட்கைப்பெருக்கந்தம்மிடத்துச் சிறப்ப ஒன்றுஞ் சொல்லுகின்றிலர்; இனி மறுத்தலரிது எ-று.
விண்டோய்குடைக்கீழிறைஞ்சவென வியையும். வயா: வய மெனநின்றது. இருந்த துணையல்லது ஒருமுயற்சி தோன்றாமையின், இருக்குமென்றார். சிற்றிலிழைத்து விளையாடும்வழி விருந்தாய்ச் சென்று நின்றானாகலின், விருந்தினரென்றாள். இற் செறிக்கப்பட்ட விடத்து ஊண்காலத்து விருந்தாய்ச் சென்றானாகலின் விருந்தின ரென்றாளெனினுமமையும், ``புகா அக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்- பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்`` (தொல் - பொருள் - களவு-17) என்பது இலக்கணமாதலின். கார்ப்புனத்தே யென்பதூஉம் பாடம். மெய்ப் பாடு: இளிவரல். பயன்: தலைமகளைச் சிவப் பாற்றுவித்தல். 383

குறிப்புரை :

25.32 தோழிவாயில் வேண்டல் தோழிவாயில் வேண்டல் என்பது தலைமகளுக்கு அவன் செய்தது கூறிச் சென்று, அன்று நம்புனத்தின்கண்ணேவந்து யானை கடிந்தவிருந்தினர் தாந்தம் பெருமையை நினையாது இன்று நம் வாயிற்கண்வந்து, வேட்கைப் பெருக்கந் தம்மிடத்துச் சிறப்பநின்று ஒன்றும் வாய்திறக்கின்றிலர்; இதற்கியாஞ் செய்யுமாறென்னோ வெனத் தலைமகளைத் தோழி வாயில் வேண்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.32. வாயில் பெறாது மன்னவ னிற்ப
ஆயிழை யவட்குத் தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 33

தேவியங் கண்திகழ் மேனியன்
சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணு
தலாள் தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந்
தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
வௌவுதல் கற்றனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேவி அங்கண் திகழ் மேனியன் சிற்றம்பலத்து எழுதும் தேவியவ்விடத்து விளங்குமேனியை யுடையவனது சிற்றம்பலத்தின்கண் எழுதப்பட்ட; ஓவியம் கண்டன்ன ஒண்ணுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் ஓவியத்தைக் கண்டாற் போலும் ஒண்ணுதலையுடையாள் தனக்கு ஓகைகொண்டு செல்ல வேண்டி; வந்தனன் மேவு இயம் கண்டனையோ என வெய்துயிர்த்து காதலன் வந்தான் வந்து பொருந்துகின்ற இயவொலி கேட்டனையோ வென்று கண்டார் வந்துசொல்லக்கேட்டு வெய்தாகவுயிர்த்து; காவியங்கண் கழுநீர்ச் செவ்வி வௌவுதல் கற்றன குவளைப் பூப்போலுங் கண்கள் கழுநீர் மலர்ச் செவ்வியை வௌவுதல் வல்லவாயின. இனியென்னி கழும்! எ-று.
அங்கட்டிகழ் மேனி யென்பது மெலிந்து நின்றது. தேவியுடைய வழகியகண்மலர்கள் சென்றுவிளங்கு மேனியை யுடையவனெனினு மமையும். மேவியங்கண்டனையோ வந்தன னெனவென்பதற்கு, அழகிய கண்டன் வந்தானென்று மேவியுரைப்ப வெனினு மமையும். ஐயோவென்றது உவகைக்கண் வந்தது. வெய்துயிர்த்தற்கு வினை முதல் உயிர்த்தற்குக் கருவியாகிய பொறியெனினு மமையும். மெய்ப் பாடு: அழுகை. பயன்: தலைமகள் வாயினேராமை யுணர்த்துதல். 384

குறிப்புரை :

25.33 மனையவர் மகிழ்தல் மனையவர் மகிழ்தல் என்பது தோழி வாயில்வேண்டத் தலைமகள் துனித்த நோக்கங்கண்டு, ஓகைகொண்டு செல்ல வேண்டிக் காதலன் வந்தானென்று சொல்லுமளவில் இவளுடைய காவியங் கண்கள் கழுநீர்ச் செவ்வியைவௌவுதல் கற்றனவென மனையவர் தம்முண் மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.33. கன்னிமா னோக்கி கனன்று நோக்க
மன்னிய மனையவர் மகிழ்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 34

உடைமணிகட்டிச் சிறுதே
ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன்
நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென்
தோகையன் னார்கண்முன்னங்
கடைமணி வாள்நகை யாயின்று
கண்டனர் காதலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மணி வாள் நகையாய் முத்துப்போலு மொளியையுடைய நகையையுடையாய்; உடை மணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத்தரும் உடைமணியை யரையிற்கட்டிச் சிறுதேரை யுருட்டி உலாவும்; இந்நடை மணியைத் தந்த பின்னர் இவ்வியங்கு தலையுடைய இந்தமணியை நமக்குத்தந்த பின்; முன் நான்முகன் மால் அறியா முற்காலத்து நான்முகனுமாலுந் தேடியுமறியாத; விடை மணிகண்டர் வண் தில்லை மென்தோகை அன்னார்கள் முன் விடையையுடைய மணிகண்டரது வளவியதில்லையின் மெல்லிய மயிலையொப்பார்கண் முன்னே; நம் கடை காதலர் இன்று கண்டனர் நங்கடையைக் காதலர் இன்று கண்டார்; இதுவன்றோ நம்மாட்டு அவரருள் எ-று.
கட்டியென்பது ஈண்டுத் தாங்கியென்னும் பொருட்டாய் நின்றது. நடைமணியென்றது புதல்வனை. விடமணி கண்ட ரென்பதூ உம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: வாயின் மறுத்தல். 385

குறிப்புரை :

25.34 வாயின் மறுத்துரைத்தல் வாயின் மறுத்துரைத்தல் என்பது மனையவர் துனிகண்டு மகிழாநிற்ப, இவனை நமக்குத் தந்தபின்னர் நம்முடைய வாயத்தார் முன்னே நங்காதலர் இன்று நங் கடையைக்கண்டார்; இதுவன்றோ நம்மாட்டு அவரருளெனத் தோழிக்குத் தலைமகள் வாயின் மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.34. மடவரற் றோழி வாயில் வேண்ட
அடல்வே லவனா ரருளு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 35

மைகொண்ட கண்டர் வயல்கொண்ட
தில்லைமல் கூரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பின ரென்பதென்
விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட வூசிகொல் சேரியின்
விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை
ஆத்தின்னி போந்ததுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் கருமையைப் பொருந்திய கண்டத்தை யுடையவரது வயலைப்பொருந்திய தில்லைக்கண்ணுளராகிய வளமல்கிய யூரையுடையவர்; நின்வாய் மெய் கொண்ட அன்பினர் என்பதென் நின்கண் மெய்ம்மையைப் பொருந்திய வன்மை யுடையரென்று நீசொல்லவேண்டுமோ; விள்ளா அருள் பெரியர் அவர் எம்மிடத்து நீங்காத வருள் பெரியரன்றோ? அதுகிடக்க; வை கொண்ட ஊசி சொல் சேரியின் விற்று கூர்மையைப் பொருந்திய ஊசியைக் கொற்சேரியின்கண் விற்று; எம் இல் வண்ண வண்ணப் பொய் கொண்டு நிற்கல் உற்றோ எம்மில்லத்து நின்னுடைய நல்லநல்ல பொய்ம்மையைப் பொருந்தி நிற்கலுற்றோ; புலை யாத்தின்னி புலையனாகிய ஆத்தின்னி; போந்தது ஈண்டு நீ போந்தது! இதுசாலநன்று! எ-று.
மெய்கொண்ட வன்பினரென்று சொல்லுகின்றதென்? நின் வாயிலவர் விள்ளாவருள்பெரியரன்றோ வென்றுரைப்பினுமமையும். ஊசிகொற் சேரியின்விற்றென உவமவினை உவமிக்கப்படும் பொருண்மேலேறி நின்றது. அடுக்கு பன்மைக்கண் வந்தது. ஆத் தின்னியென்பதனை முன்னிலைக்கண் வந்ததாக வுரைப்பினு மமையும். விற்குநின்னென்பதூஉம் பாடம். மெய்ப்பாடும், பயனும் அவை. 386

குறிப்புரை :

25.35 பாணனொடுவெகுளுதல் பாணனொடு வெகுளுதல் என்பது தோழிக்கு வாயின்மறுத்த தலைமகள், நின்னிடத்து அவர்நீங்காத வருள்பெரியரென்று நீ சொல்லவேண்டுமோ? அதுகிடக்க, கொற்சேரியி லூசிவிற்றுப் புலையா எம்மில்லத்து நின்னுடைய நல்லநல்ல பொய்யைப் பொருந்தி நிற்கலுற்றோ நீ போந்ததென வாயில்வேண்டிய பாணனொடு வெகுண்டு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.35. மன்னியாழ்ப் பாணன் வாயில் வேண்ட
மின்னிடை மடந்தை வெகுண்டு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 36

கொல்லாண் டிலங்கு மழுப்படை
யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம்
நெரியச் செவ் வாய்துடிப்பக்
கல்லாண் டெடேல்கருங் கண்சிவப்
பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியேன் அடிவலங்
கொள்வன் பணிமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கொல் ஆண்டு இலங்கு மழுப் படையோன் குளிர்தில்லை அன்னாய் கொற்றொழில் அவ்விடத்து விளங்கும் மழு வாகிய படையையுடையவனது குளிர்ந்த தில்லையையொப்பாய்; வில் ஆண்டு இலங்கு புருவம் நெரியச் செவ்வாய் துடிப்ப வில்லையடிமைக் கொண்டு விளங்காநின்ற புருவநெரியச் செவ்வாய்துடிப்ப; கல் ஆண்டு எடேல் எறிதற்குக் கல்லை அவ்விடத்தெடுக்கவேண்டா; கருங்கண் சிவப்பு ஆற்று கரிய கண்களைச் சிவப்பாற்றுவாயாக; கறுப்பது அன்று வெகுளப் படுவதன்று; பல்லாண்டு நினக்குப் பல்லாண்டுகள் உளவாக வேண்டும்; பணிமொழி பணிமொழியையுடையாய்; அடியேன் அடி வலங்கொள்வன் யான்வேண்டிய தேயத்துக்குப் போக அடியேன் நின்னடியை வலங்கொள்ளாநின்றேன் எ - று.
கருங்கண்ணினது சிவப்பெனினுமமையும். பல்லாண் டென்றது தலைமகனுடனுண்டாகிய வெறுப்புத் தீர்ந்து கூடியிரு மென்று சொல்லியது நுமக்குத் தவறாயிற்றாயின் பல்லாண்டும் இப்படியிருப்பீ ரென்றான். இப்படியிருப்பீரென்றது பல்லாண்டு மிப்படித் தனித் திருப்பீரென்று வளமாகத் தன்பாணவார்த்தை சொல்லிய வாறென்றறிக. புருவநெறிக்கவென்பதூஉம் வெவ்வா யென்பதூஉ ம் பாடம். புரி - நரம்பு. மெய்ப்பாடு: அச்சம். பயன்: சிவப்பாற்று வித்தல். 387

குறிப்புரை :

25.36 பாணன்புலந்துரைத்தல் பாணன்புலந்துரைத்தல் என்பது தலைமகள் வெகுண் டுரையா நிற்ப, நின்புருவநெரிய வாய்துடிப்ப என்னை யெறிதற்குக் கல்லெடுக்க வேண்டா; நினது கரியகண்களின் சிவப்பாற்றுவாயாக; நீ வெகுளப்படுவதன்று; நினக்குப் பல்லாண்டு செல்வதாக; யான் வேண்டியவிடத்துப் போக நின்னடியை வலங்கொள்ளாநின்றேனென வாயில்பெறாமையிற் பாணன் புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.36. கருமலர்க் கண்ணி கனன்று கட்டுரைப்பப்
புரியாழ்ப் பாணன் புறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 37

மத்தக் கரியுரி யோன்தில்லை
யூரன் வரவெனலுந்
தத்தைக் கிளவி முகத்தா
மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்குங் கழுநீர்
விருந்தொடென் னாதமுன்னங்
கித்தக் கருங்குவ ளைச்செவ்வி
யோடிக் கெழுமினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மத்தக் கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும் களிப்பையுடைத்தாகிய யானையின்றோலையுடைய வனது தில்லையூரனது வரவென்று சொல்லத் தொடங்குதலும்; தத்தைக் கிளவி முகத் தாமரைத் தழல் வேல் மிளிர்ந்து கிளியின் மொழி போலும் மொழியையுடையாளது முகமாகிய தாமரைக் கண்ணே தழலையுடையவேல் போலப் பிறழ்ந்து; முத்தம் பயக்கும் கழுநீர் நீர்த்துளியாகிய முத்தத்தையுண்டாக்காநின்ற கண்ணாகிய செங்கழுநீர் மலர்; விருந்தொடு என்னாத முன்னம் விருந்தோ டென்று சொல்லு வதற்கு முன்; கித்தக் கருங்குவளைச் செவ்வி ஓடிக் கெழுமின விரையப் பண்டைநிறமாகிய கரிய குவளைச் செவ்வி பரந்து மேவின! என்னமனையறக்கிழத்தியோ! எ-று.
மத்தம் மதமென்பாரு முளர். ஊரன்வரவென வினையெச்ச மாகப் பிரிப்பினுமமையும். கித்தமென் பதனைச் செய்யப்பட்ட தென்னும் பொருளதோர் வடமொழித் திரிபென்பாரு முளர். விருந்து வாயிலாகப் புக்கவழி இல்லோர் சொல்லியது. மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல். 388

குறிப்புரை :

25.37 விருந்தொடுசெல்லத்து1ணிந்தமை கூறல் விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் என்பது வாயில் பெறாதுபாணன் புலந்து நீங்காநிற்ப, யாவர்க்கும் வாயினேராது வெகுண்டுரைத்தலாற் றழல்வேல்போல மிளிர்ந்து முத்தம் பயக்கு மிவளுடையகண்கள் விருந்தொடு வந்தானென்று சொல்லுமளவிற் பண்டைநிறமாகிய கருங்குவளையது செவ்வி பரந்த; என்ன மனையறக் கிழத்தியோவென இல்லோர்தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.37. பல்வளை பரிசுகண்டு
இல்லோர் இயம்பியது.

பண் :

பாடல் எண் : 38

கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் தில்லையன்
னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்றல்
துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
பாலை யரசனுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கவலம் கொள் பேய்த் தொகை பாய்தர - கவற்சி கொள்ளுதற்கேதுவாகிய பேய்த்திரள் கரணங்களைப் பாயாநிற்ப - காட்டிடை ஆட்டு உவந்த - புறங்காட்டின்கண் ஆடுதலை விரும்பிய - தவல் அங்கு இலாச் சிவன் தில்லை அன்னாய் - கேடங்கில்லாத சிவனது தில்லையையொப்பாய் - தழுவி முழுவி சுவல் அங்கு இருந்த - தழுவி முத்தங்கொண்டு சுவலிடத்தேறியிருந்த - நம் தோன்றல் துணை எனத் தோன்றுதலால் - நம்முடைய தோன்றலைத் தமக்குத் துணையெனக்கருதி வந்து தோன்றுதலான் - அவலம் களைந்து அரசனுக்குப் பணி செயற்பாலை - நினதுள்ளத்துக் கவற்சியைநீக்கி இனியரசற்குக் குற்றேவல் செயற்பாலை எ - று.
தழுவிமுழுவித்தோன்றுதலாலென வியையும். சுவற்கணங் கிருந்தவெனினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல். ; ; ; ; 389

குறிப்புரை :

25.38 ஊடல் தணிவித்தல் ஊடல் தணிவித்தல் என்பது விருந்தேற்றுக்கொண்ட தலைமகளுழைச் சென்று, நம்முடைய தோன்றலைத் தனக்குத் துணையாகக் கொண்டுவந்து தோன்றுதலான் நினதுளத்துக் கவற்சியை யொழிந்து இனி நம்மரசற்குக் குற்றவேல் செய்வாயாகவெனத் தோழி அவளை யூடறணிவியாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.38. தோன்றலைத் துணையொடு தோழி கண்டு
வான்றகை மடந்தையை வருத்தந் தணித்தது.

பண் :

பாடல் எண் : 39

சேறான் திகழ்வயற் சிற்றம்
பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார்
வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம்
மேவும் படிறுவவேங்
காறான் தொடல்தொட ரேல்விடு
தீண்டலெங் கைத்தலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சேல் திகழ் வயல் சேல்விளங்கும் வயலை யுடைய; சிற்றம்பலவர் தில்லை நகர்வாய் வேல் திகழ் கண் இளையார் சிற்றம்பலவரது தில்லைநகரிடத்துளராகிய வேல் போலுங் கண்ணையுடைய நின்காதலிமாராகிய விளையவர்; வெகுள்வர் நீ செய்கின்ற விதனை யறியின் நின்னை வெகுள்வர். அதுவேயுமன்றி, மெய் பாலன் செய்த பால் திகழும் பரிசினம் மேனி சிறுவனாலுண்டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையையுடையே மாதலின் நினக்குத் தகேம்; மேவும் படிறு உவவேம் இதன் மேலே யாமும் நீயும் மேவுநாணின்மையோடு கூடிய கள்ளத்தை விரும்பேம்; கால் தொடல் அதனால் எங்காலைத் தொடா தொழி; தொடரேல் எம்மைத் தொடரவேண்டா; எம் கைத்தலம் தீண்டல் எங்கைத் தலத்தைத் தீண்டற்பாலையல்லை; விடு விடுவாயாக எ-று.
திகழ்வயற்றில்லையெனவியையும். பால் திகழுமென்னும் இடத்து நிகழ் பொருளின்வினை மெய்யாகிய விடத்துமேலேறி நின்றது. நான்கிடத்தும் தானென்பது அசைநிலை. பரிசினமேனு மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: ஊடனீங்குதல். 390

குறிப்புரை :

25.39 அணைந்தவழியூடல் அணைந்தவழியூடல் என்பது தோழியாலூடல் தணிவிக்கப் பட்டுப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், நீ செய்கின்ற விதனை யறியின் நின் காதலிமார் நின்னைவெகுள்வர்; அதுகிடக்க, யாம் மேனி முழுதுஞ் சிறுவனாலுண்டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையை யுடையேம்; அதன்மேல் யாமும் நீ செய்கின்றவிக் கள்ளத்தை விரும்பேம்; அதனால் எங்காலைத் தொடாதொழி; எங்கையை விடுவாயாக எனத் தலைமகன் றன்னையணைந்தவழி ஊடாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.39. தெளிபுன லூரன் சென்றணைந் தவழி
ஒளிமதி நுதலி யூடி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 40

செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கால்
அயிற்படைக் கொற்றவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கொந்து ஆர் தடந்தோள் விடம் கால் அயில் படைக்கொற்றவர் கொத்துமாலைநிறைந்த பெரிய தோளினையும் நஞ்சைக் காலுங் கூரிய படையினையுமுடைய கொற்றவர்; பாவி யெற்கு என் வள மனையின் நிற்குமாறு தீவினையேற்கு எனது வளமனையில்வந்து நிற்கின்றபடி; ஓர் பந்து ஆர் விரலியைப் பாய் புனல் ஆட்டி பந்துபயின்ற விரலாளொருத்தியைப் பாய்ந்த புனலையாட்டுவித்து; வந்தார் பரிசும் அன்றாய் - வெளிப்படத் தவறு செய்து வந்தார் சிலர் நிற்கும் பரிசுமன்றாய் மனத்தவறு செய்யாதார் வந்து நிற்குமாறு வந்து நின்றாராயின், அது பொறுத்த லரிது எ - று.
செந் தார் நறுங் கொன்றைச் சிற்றம்பலவர் தில்லை நகர் பாய்புனலாட்டி செய்ய தாராகிய நறிய கொன்றைப் பூவினை யுடைய சிற்றம்பலவரது தில்லையாகிய நகர்வரைப்பிற் பாயும் புனலையாட்டி யெனக்கூட்டுக.
தில்லைநகரோர் பந்தார் விரலியென வியைப்பினுமமையும். மன்: ஒழியிசைக்கண்வந்தது; அசைநிலையெனினுமமையும். ஒருத்தியைப் புனலாட்டி வந்தார் பரிசுமன்றாய்க் கொற்றவர் மனைக்கண் வந்து நிற்குமாறென்னென்று கூட்டியுரைப்பினுமமையும் கொத்துமாலை பலவாயொன்றாகியமாலை. ஆங்கதனுக்கு அப்படிற்று நிலையால். விட்டுரைத்தது வெளிப்படவுரைத்தது. மெய்ப்பாடும் பயனும் அவை. 391

குறிப்புரை :

25.40 புனலாட்டுவித்தமை கூறிப்புலத்தல் புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல் என்பது அணைந்த வழியூடாநின்ற தலைமகள் ஊடறீராநின்ற தலைமகனோடு, இவர் செய்த பிழையெல்லாம் பொறுக்கலாம்; பலருமறிய வொருத்தியைப் புனலாட்டுவித்து அது செய்யாதார்போல என்மனையின்கணிவர் வந்து நிற்கின்றவிது எனக்குப் பொறுத்தலரிதெனத் தணிக்கத் தணியாது பரத்தையைப் புனலாட்டுவித்தமை கூறிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.40. ஆங்கதனுக் கழுக்கமெய்தி
வீங்குமென்முலை விட்டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 41

மின்றுன் னியசெஞ் சடைவெண்
மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
பலவன்தென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம
தில்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை
சாலுமன் னெங்களுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின் துன்னிய செஞ்சடை வெண் மதியன் மின்னையொத்த செஞ்சடைக்கண்வைத்த வெண்பிறையை யுடையான்; விதியுடையோர் சென்று உன்னிய கழல் சிற்றம் பலவன் நற்பாலையுடையோர் சிற்றின்பத்திற்குக் காரணமான புலன்களை விட்டுச் சென்று நினைந்த கழலையுடைய சிற்றம் பலவன்; தென்னம் பொதியில் எமது இல்லம் நன்றும் சிறியவர் இல் அவனது தெற்கின்கணுண்டாகிய பொதியிலிடத்து எமது குடி பெரிதுஞ் சிறியவரதுகுடி; அதனான், நல் ஊர நல்ல ஊரையுடையாய்; இன்று உன் திருவருள் எங்களுக்கு இத்துணை சாலும் முற்காலத்து நின்றலையளி வேண்டுது மாயினும் இப்பொழுது உனது திருவருள் எங்கட்கு நீ வந்தவித்துணையுமமையும்; நீ தலையளி செய்ய வேண்டுவ துண்டோ? எ-று.
மன்னும் ஓவும்: அசை நிலை. சாலுமன்னென்புழி மன்னும் அசைநிலைபோலும். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: புலத்தல்; புலவி நீங்கியதூஉமாம். 392

குறிப்புரை :

25.41 கலவிகருதிப் புலத்தல் கலவிகருதிப் புலத்தல் என்பது புனலாட்டுவித்தமைகூறிப் புலவாநின்ற தலைமகள், ஊடறீர்க்க நுதலுந்தோளு முதலாயின வற்றைத் தைவந்து வருடித் தலையளி செய்யாநின்ற தலைமகனோடு, எம்முடைய சிறிய வில்லின்கண்வந்து அன்று நீயிர்செய்த தலையளி எங்கட்கு அன்று வேண்டுதுமாயினும் இன்று உமது திருவருள் எங்கட்கு நீயிர்வந்த இத்துணையு மமையும்; வேறு நீயிர் தலையளி செய்ய வேண்டுவதில்லை யெனக் கலவிகருதிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.41.கலைவள ரல்குல் தலைமகன் றன்னொடு
கலவி கருதிப் புலவி புகன்றது

பண் :

பாடல் எண் : 42

செழுமிய மாளிகைச் சிற்றம்
பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி
லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய
நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன
வாறு விரும்புவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செழுமிய மாளிகைச் சிற்றம்பலவர் வளவிய மாளிகைகளாற் சூழப்பட்ட சிற்றம்பலத்தையுடையார்; அன்பர் சிந்தைச் சென்று கழுமிய கூத்தர் அன்பர் சிந்தைக்கட் சென்று பொருந்திய கூத்தர்; கடி பொழில் ஏழினும் அவரது காவலையுடைய வுலகமேழினுள்ளும்; விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக் குடியீர் சிறந்தநாட்டின்கட் சிறந்தநல்லவூரிற் சிறந்தகுடியிலுள்ளீர்; இன்னவாறு விரும்புவது விழுமிய அல்ல கொல்லோ எம்போல் வாரிடத்து இத்தன்மையவாகிய நெறியை விரும்புதல் உமக்குச் சிறந்தனவல்லபோலும் எ-று.
வாழியும் அரோவும் : அசைநிலை. விரும்புவ தென்புழி, இன்னவாறு விரும்புவ போல்வன வென்பது கருத்தாகலின், ஒருமைப் பன்மைமயக்கம் அமையுமாறு முடைத்து. இன்னவா றென்பதற்கு இன்ன வண்ணம் விரும்புத லெனினுமமையும். விரும்புத லென்ப தூஉம் பாடம். ஆடல் - நுடக்கம். மெய்ப்பாடும் பயனும்.393

குறிப்புரை :

25.42 மிகுத்துரைத்தூடல் மிகுத்துரைத்தூடல் என்பது கலவிகருதிப் புலவாநின்ற தலைமகள், புணர்தலுறாநின்ற தலைமகனுடன் நீர் விழுமிய நாட்டு விழுமியநல்லூர் விழுமியகுடியிலுள்ளீர்; எம்போல் வாரிடத்து இவ்வாறு புணர்தல் விரும்புதல் நுமக்கு விழுமிய வல்லவென மிகுத்துரைத்தூடா நிற்றல். அதற்குச் செய்யுள்
25.42. நாடும் ஊரும் இல்லுஞ் சுட்டி
ஆடற் பூங்கொடி யூடி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 43

திருந்தேன் உயநின்ற சிற்றம்
பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க்
கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
வருவதொர் வஞ்சனையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில் ஒருவாற்றானுந் திருந்தாத யான் பிறவித் துன்பத்திற் பிழைக்கவந்து நின்ற சிற்றம்பலவரது தெற்கின்கணுள தாகிய பொதியிலிடத்து; இருந்தேன் உய வந்து ஒரு முயற்சியுமின்றி யிருந்த யானுய்யும்வண்ணம் வந்து; இணைமலர்க் கண்ணின் இன் நோக்கு அருளி தன்னுடைய இணைந்த மலர்போலுங் கண்களினது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தும் நாணோடுகூடிய நோக்கமாகிய இனிய கடைக்கணோக்கத்தை முன்னெனக்குத் தந்து; பெருந்தேன் என நெஞ்சு உகப் பிடித்து ஆண்ட பெருந்தேன் போலவினிதாய் என்னெஞ்சமுருக என்னைப் பிடித்துத் தன்வயமாக்கிய; நம் பெண் அமிழ்தம் அது அன்று நமது பெண்வடிவையுடைய அமிழ்தமாகிய அது இதுவன்று; இதுவோ வருவது ஒர் வஞ்சனை இதுவோ வருவதொருமாயம்; வருந்தேல் அதனான் நீ வருந்தாதொழி எ-று.
ஓகாரம்: ஒழியிசைக்கண் வந்தது. தன்னைநோக்கி யொரு முயற்சியுமில்லாத யான் பிறவித்துன்பத்திற் பிழைக்கத் தானே வந்து தன்னிணைமலர்க்கண்ணின தினிய கடைக்கணோக்கத்தைத் தந்து பெருந்தேன் போன்றினிதாய், என் வன்மனநெகிழ என்னை வலிந்து பிடித்தடிமைக்கொண்ட பெண்ணமிழ்தமென வேறுமொரு பொருள் விளங்கியவாறு கண்டுகொள்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல். 394

குறிப்புரை :

25.43 ஊடல் நீடவாடியுரைத்தல் ஊடல்நீட வாடியுரைத்தல் என்பது தணிக்கத் தணியாது மிகுத்துரைத்துத் தலைமகள் மேன்மேலு மூடாநிற்ப, அன்று அம்மலையிடத்துத் தன்னையெய்துதற்கோ ருபாய மின்றி வருந்தா நிற்ப யானுய்யும் வண்ணந் தன்னிணை மலர்க்கண் ணினது இனிய நோக்கத்தைத் தந்தருளி என்னைத்தன்வயமாக் கிய நம்பெண்ணமுதம் அதுவன்று; இது நம்மைவருத்துவதோர் மாயமாமெனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி ஊடனீடத் தலைமகன் வாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.43. வாடா வூடல்
நீடா வாடியது.

பண் :

பாடல் எண் : 44

இயன்மன்னும் அன்புதந் தார்க்கென்
நிலையிமை யோரிறைஞ்சுஞ்
செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம்
பலவர்தென் னம்பொதியிற்
புயன்மன்னு குன்றிற் பொருவேல்
துணையாப்பொம் மென்இருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி
தேரும் அதரகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இமையோர் இறைஞ்சும் செயல் மன்னும் சீர்க் கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில் இமையோரிறைஞ்சும் நுண் செயல்தங்கிய நல்ல வீரக்கழலணிந்த திருவடியையுடைய சிற்றம்பலவரது தெற்கின்கணுளதாகிய பொதியிலிடத்து; புயல் மன்னு குன்றில் பொம்மென் இருள்வாய் புயறங்கிய இக்குன்றிற்செறிந்த விருளின்கண்ணே; அயல் மன்னும் யானை துரந்து பக்கத்துத்தங்கும் யானைகளையோட்டி; அரி தேரும் அதரகத்து அரிமா அவைபுக்க விடந்தேடும் வழியகத்து; பொருவேல் துணையா தமது பொரு வேலே துணையாக வந்து; இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு இயல்பாகிய நிலை பெற்றவன்பை நமக்குத் தந்தவர்க்கு; நிலை என் யானிவ்வாறுடம்படாது நிற்குநிலை என்னாம்! இது தகாது எ - று.
பெயரெச்சத்திற்கும் பெயர்க்கும் ஒருசொன்னீர்மைப் பாடுண்மையின், இயன்மன்னுமன்பெனத் தொக்கவாறறிக. இயல்பைப் பொருந்தியவன்பெனினு மமையும். அதரகத்து வந்தென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது. புயன்மன்னு குன்றிலன்பு தந்தார்க்கெனக் கூட்டுக.
தகுதியின் தகுதியான். மிகுபதம் ஆற்றாமை மிக்க வளவு. தகுதியி லூரனெனப் பாடமாயின், தகுதியில்லாத மிகுபத மென்க. மெய்ப்பாடு: அச்சம். பயன்: சிவப்பாற்றுதல். 395

குறிப்புரை :

25.44 துனியொழிந்துரைத்தல் துனியொழிந்துரைத்தல் என்பது ஊடனீடலால் தலைமகன தாற்றாவாயில் கண்ட தலைமகள், அன்று நங்குன்றிடத்து மிக்க விருளின்கண்ணே அரிதிரண்டுயானை வேட்டஞ்செய்யும் அதரகத்துத் தமது வேலே துணையாகவந்து இயல்பைப் பொருந்தியவன்பை நமக்குத் தந்தவர்க்கு இன்று நாமுடம்படாது நிற்குமிந்நிலைமை என்னாமெனத் துனியொழிந்து அவனோடு புணர்ச்சிக் குடம்படா நிற்றல். அதற்குச் செய்யுள்
25.44. தகுதியி னூரன் மிகுபத நோக்கிப்
பனிமலர்க் கோதை துனியொ ழிந்தது.

பண் :

பாடல் எண் : 45

கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை
மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா
எம்மைப் பூசிப்பதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மதுத் தங்கிய கொன்றை வார் சடை ஈசர் இமையோர் இறைஞ்சும் வள் தில்லை நல்லார் பொதுத் தம்பலம் கொணர்ந்தோ தேன்றங்கிய கொன்றைப்பூவையுடைய நீண்ட சடையையுடைய வீசரது இமையோரால் வணங்கப்படும் வளவிய தில்லையிலுளராகிய நல்லா ரெல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டுவந்தோ; புதல்வா புதல்வா; எம்மைப் பூசிப்பது நீ யெம்மைக்கொண்டாடுவது? அதுநிற்க, கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களைக் கண் பிழைப்பித்து இது நினக்குத் தருகின்றவிடத்து நின்றந்தை ஒளிவிட்ட முறுவல்பொருந்திய நின் சிறிய வன்னைமாரைக் கண்ணைத்தப்புவித்து; எதிர்த்து எங்கு நின்று எப்பரிசு அளித்தான் அவர் காணாதவண்ணம் ஒருவாற்றானின்னை யெதிர்ப்பட்டு எவ்விடத்து நின்று எவ்வண்ணமிதனை நினக்குத் தந்தான்? நீயிது சொல்ல வேண்டும் எ - று.
மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த நகை. பயன்: ஊடனீங்கு தல். 396

குறிப்புரை :

25.45 புதல்வன்மேல்வைத்துப் புலவிதீர்தல் புதல்வன்மேல்வைத்துப் புலவிதீர்தல் என்பது துனியொ ழித்துக்கூடிப் பிரிந்தவழிப் பின்னும் பரத்தைமாட்டுப் பிரிந்தா னென்று கேட்டுப் புலந்து வாயின்மறுக்க, வாயிற்கணின்று விளையாடாநின்ற புதல்வனை யெடுத்தணைத்துத் தம்பலமிட்டு முத்தங்கொடுத்து அதுவாயிலாகக் கொண்டு தலைமகன் செல்லா நிற்ப, அப்புதல்வனை வாங்கி யணைத்துக் கொண்டு, அவன் வாயிற்றம்பலந் தன்மெய்யிற் படுதலான் எல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டுவந்தோ நீ யெம்மைக் கொண்டாடுவது? அதுகிடக்க, இதனை நினக்குத் தந்தவாறு சொல்லுவாயாகவெனப் புதல்வன்மேல் வைத்துத் தலைமகள் புலவி தீராநிற்றல். அதற்குச் செய்யுள்
25.45. புதல்வனது திறம்புகன்று
மதரரிக்கண்ணி வாட்டந்தவிர்ந்தது.

பண் :

பாடல் எண் : 46

சிலைமலி வாணுத லெங்கைய
தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந்
தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற்
கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
மாலை கலுழ்ந்தனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மலை மலி செழும் பூண்மார்பின் உதைப்ப யான் வெகுண்டு மலைபோலும் வளவிய பூணையுடைய தன் மார்பகத்து மிதிப்ப; சிலை மலி வாணுதல் எங்கையது ஆகம் எனத் தலை தந்தான் அவ்வாகத்தைச் சிலைபோலும் வாணுதலையுடைய எங்கையதென்றே கருதித் தன்சென்னியைத் தந்தனன்; அதனான், மன்னர் தில்லை உலை மலி வேற்படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி மன்னனது தில்லையில் உலையிடத்துண்டாகிய தொழிலான் மிக்க வேலாகிய படையையுடைய வூரனைப்போலக் கள்வரில்லை யென்று கருதி; கலை மலி காரிகை கண் முத்த மாலைகலுழ்ந்தன மகளிர்க்குத்தக்க யாழ்முதலாகிய கலைகளான் மிக்க காரிகை நீர்மையையுடையாளுடைய கண்கள் கண்ணீர்த் துளித் தாரையாகிய முத்தமாலையைப் பொருந்தின; அதனான், இவள் புலத்தற்குக் காரணம் வேண்டுவ தில்லைபோலும் எ-று.
இதுவுந் துறைகூறிய கருத்து. மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த நகை. பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல். பிள்ளை வாயிலாகப் புக்க தலைமகனை யேற்றுக்கொண்டு பள்ளியிடத்தாளாக மேற்சொன்ன வகையே உண்ணின்றெழுந்த பொறாமை காரணம் பெற்றுத் தோன்றியது; தோன்றத் தலைமகன் ஆற்றானாயின் அவ்வாற் றாமைகண்டு சிவப்பாற்றுவித்தல். தலைமகளிடத்தும் தலை மகனிடத்தும் இவ்வகை நிகழ்ந்தது கண்டு தோழியிது சொன்னா ளென்பது. தலைமகன்றான் சொன்னா னெனினுமமையும். என்னை? ``மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு - நினையுங் காலைப் புலவியு ளுரிய`` (தொல். பொருளியல். 31) என்றார் தொல்காப்பியனார். தலைமகளவ்வகை செய்யவும் பெறுமென்பது. 397

குறிப்புரை :

25.46 கலவியிடத்தூடல் கலவியிடத்தூடல் என்பது புதல்வனை வாயிலாகப்புக்குப் புலவிதீர்த்துப் புணர்தலுறாநின்ற தலைமகனைத் தலைமகள் ஒரு காரணத்தால் வெகுண்டு, அவன் மார்பகத்துதைப்ப, அவ் வெகுடல் தீர வேண்டி அவனவள்காலைத் தன்றலை மேலேற்றுக் கொள்ள, அது குறையாக அவள் புலந்தழாநின்றமையை அவ்விடத்து உழையர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.46. சீறடிக் குடைந்த நாறிணர்த் தாரவன்
தன்மை கண்டு பின்னுந் தளர்ந்தது.

பண் :

பாடல் எண் : 47

ஆறூர் சடைமுடி அம்பலத்
தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
கங்குற் சிறிதுயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஊர் மழ விடையாய் தவழாநின்ற இளைய வேற்றையுடையாய்; ஆறு ஊர் சடைமுடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும் ஆறுபரந்த சடைமுடியையுடைய அம்பலத்தின் கணுளராகிய அண்டரதண்டமுழுதையும் யாம் பெறினும்; வண்கதிர் வெதுப்பு நீறு ஊர் கொடு நெறி சென்று ஞாயிற்றினுடைய வளவிய கதிர்கள் வெதுப்பிய நீறுபரந்த கொடியநெறியைச் சென்று; இச் செறி மென்முலை நெருங்க இச்செறிந்த மெல்லிய முலைகள் எம்முடைய மார்பினிடை வந்தடர; சீறூர் மரை அதளின் தங்கு கங்குல் சிறுதுயில் மாறு கண்டிலம் நெறியாற்சிறிய வூரின்கண் மரையதட் பள்ளி யிற்றங்கிய இரவிற் சிறிய துயிற்குமாறு கண்டிலம்; அதனை நீ யுள்ளியுமறிதியோ? எ -று.

அண்டரதண்டமுழுதும் பெறுதலால் வருமின்பமும் அத்துயி லான்வந்த வின்பத்திற்கு மாறில்லையென்ற வாறு. இளவேறு - புதல்வன். தமக்குத்தக்க பள்ளியுமிடமு மின்மையிற் சிறுதுயிலென்றான். துயிலும்பொழுதிற்றுயிலாப் பொழுது பெரிதாகலின் அவ்வாறு கூறினானெனினுமமையும். துயிற்கென்னு நான்கனுருபு விகாரவகை யாற்றொக்கு நின்றது. முன்னிகழ்ந்தது கூறுவானாய் உண்ணின்ற சிவப்பாற்று வித்தது. ஞெமுங்க வென்பதூஉம், மரவத ளென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளை மகிழ்வித்தல்.398

குறிப்புரை :

25.47 முன்னிகழ்வுரைத்தூடறீர்த்தல் முன்னிகழ்வுரைத்தூடறீர்த்தல் என்பது கலவியிடத்தூடா நின்ற தலைமகளுக்கு, யாங்கொடிய நெறியைச் சென்று சிறியவூரின்கண் மரையதட்பள்ளியின் இச்செறிந்த மெல்லிய முலைகள் என்மார்பிடை வந்தடர்க்கத் தங்கிய சிறிய துயிற்கு மாறுகண்டிலம்; அதனை நீ யுள்ளியுமறிதியோவென முன்னிகழ்வுரைத்துத் தலைமகன் அவளை யூடறீராநிற்றல். அதற்குச் செய்யுள்
25.47. 9; முன்னி கழ்ந்தது நன்னுதற் குரைத்து
மன்னு புனலூ ரன்மகிழ் வுற்றது.

பண் :

பாடல் எண் : 48

ஐயுற வாய்நம் அகன்கடைக்
கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாம்இதுன் னில்லே
வருகெனவெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
யூரன்ன காரிகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நம் அகன் கடைக் கண்டு ஐயுறவாய் நமதகன்ற கடைக்கட் கண்டு நின்மகனென்றையுற்று; வள் தேர் உருட்டும் மை உறு வாள் கண் மழவைத் தழுவ வளவிய சிறு தேரையுருட்டும் மையுற்ற வாட்கண்ணையுடைய புதல்வனைத் தான்வந்துதழுவ, அதனைக் கண்டு; உன் மகனே அவன் உன் மகனே; மெய் உறவாம் உறவு மெய்யாகிய வுறவே; இது உன் இல்லே இதுவும் நினதில்லமே; வருகென ஈண்டு வருவாயாக வென் றியான்கூற; கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகை கையைப் பொருந்திய மான்மறியையுடையவனது புலியூரைப் போலுங் காரிகை; வெள்கிச் சென்றாள் நாணிப்பெயர்ந்தாள்; அதனான், யானவளை யறியா தேனாக நீ நினைத்து மாயங் கூறவேண்டுவதில்லை எ-று.
ஐயுறவாகவெனத் திரித்துக்கொள்க. அரத்தகு நெடுவே லென்பது பாடமாயின், அரத்தொழிலாற்றக்க நெடுவேலெனவுரைக்க. மெய்ப்பாடு: நகை. பயன்: சிவப்பாற்றுதல். ஆற்றாமையே வாயி லாகப் புக்க தலைமகன் தலைமகளைச் சிவப்பாற்றுவிப்பான் நின்னின் வேறுசிலரெனக் கில்லையால் நீ வெகுளற்க வென்றாற் குத் தலைமகளிவ்வகை சொன்னாளென்பது. 399

குறிப்புரை :

25.48 பரத்தையைக் கண்டமைகூறிப் புலத்தல் பரத்தையைக்கண்டமை கூறிப்புலத்தல் என்பது முன்னிகழ் வுரைத் தூடறீர்த்து இன்புறப்புணரப்பட்ட தலைமகள் பிறர்க்கும் நீ இவ்வாறின்பஞ் செய்தியென்றுகூற, நின்னையொழிய யான் வேறொருத்தியையு மறியேனென்ற தலைமகனுக்கு, நின்பரத்தை போகாநின்றவள் நம்வாயிற்கணின்று தேருருட்டி விளையாடா நின்ற புதல்வனைக் கண்டு நின்மகனென்றையுற்றுத் தழுவ, நீயையுற வேண்டா; அவன் உன்மகன்; உறவு மெய்யாகிய வுறவே; ஈதும் உனதில்லமே; ஈண்டுவருவாயாகவென் றியான்கூற, அது கேட்டுத் தானாணிப் போயினாள்; யானவளை யறியேனாக நீ மாயம் கூற வேண்டுவதில்லை யெனத் தான் பரத்தையைக் கண்டமை கூறிப் பின்னு மவனொடு புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.48. பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
அரத்த நெடுவேல் அண்ணற் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 49

காரணி கற்பகங் கற்றவர்
நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி
தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்
தஞ்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க் கூரன்மற்
றியாவர்க்கும் ஊதியமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஊரன் கார் ஊரன் வேண்டாமைக் கொடுத்தலிற் காரோடொக்கும்; அணி கற்பகம் வேண்டக் கொடுத்தலின் அழகிய கற்பகத்தோடொக்கும்; கற்றவர் நல்துணை நுண்ணிய கல்வியனா கலிற் கற்றவர்க்கு நல்லவுசாத் துணை; பாணர் ஒக்கல் இசையுணர் வானுங் கெழுதகைமையானும் பாணர்க்கு அவர் சுற்றத்தோடொக்கும்; சீர் அணி சிந்தாமணி நினைத்ததுகொடுத்தலிற் சீரையுடைய நல்ல சிந்தாமணியோடொக்கும்; அணி தில்லைச் சிவனடிக்குத் தார் அணி கொன்றையன் அழகிய தில்லைக்கட் சிவனது திருவடிக்குத் தாராகி அவனாலணியப்படுங் கொன்றைப் பூவின்றன்மையையுடையன்; தக்கோர்தம் சங்கநிதி சான்றோர் தமக்குத் தொலையாத நிதியாயி ருத்தலிற் சங்கநிதியோடொக்கும்; விதி நாட்டார்க்கும் பகைவர்க்குந் தப்பாது பயன்கொடுத்தலின் விதியொடொக்கும்; உற்றவர்க்குச் சேர் ஊருணி சுற்றத்தார்க்கு அவர்வேண்டிய செய்ய விருத்தலின் அணித்தாகிய வூருணியோ டொக்கும்; யாவர்க்கும் ஊதியம் அதனான் வரைவின்றி எல்லார்க்கும் இவன் பெறும் பயன் எ-று.
தாரணிகொன்றையனென்பது குரங்கனென்பதுபோல உவமைப்பொருட்பட நின்றதெனினுமமையும். விதிசேரூருணி யென்பதற்கு முறைமையாற் சேரப்படுமூருணி யெனினுமமையும். தக்கார்க்குஞ் சுற்றத்தார்க்குங் கொடுத்தல் வண்மையன்மையின் அவரை வேறுபிரித்துக் கூறினாள். ஊடறீர்ந்து கூடியவழித் தலை மகட்கு உண்ணின்றசிவப்பு ஒருகாரணத்தாற் சிறிது புலப்பட, ஊரன் யாவர்க்கு மூதியமாகலின் அன்பானன்றி அருளாற் பரத்தையர்க்குந் தலையளிசெய்யுமன்றே; அதனான் நீ புலக்கற் பாலையல்லையென்று குறிப்பினாற் றோழி சிவப்பாற்று வித்தது. மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல்.
இவ்வகை கூத்தர் மகிழ்ந்து இன்னபோல்வன தலைமகன் குணங்களைப் பாராட்டினாரென்பது. என்னை? ``தொல்லவை யுரைத்தலு நுகர்ச்சி யேற்றலும் - பல்லாற் றானு மூடலிற் றணித்தலு - முறுதி காட்டலு மறியுமெய்ந் நிறுத்தலு - மேதுவிலுணர்த் தலுந் துணியக் காட்டலு - மணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன`` (தொல். பொருள் கற்பு - 27) என்றார் தொல்காப்பியனார். இப்பாட்டு ஐவகைத் திணைக்கும் உரித்தாகலிற் பொதுவகைத்தெனப் பெறுமென்பது.400

குறிப்புரை :

25.49 ஊதியமெடுத்துரைத் தூடறீர்த்தல் ஊதியமெடுத்துரைத்தூடறீர்த்தல் என்பது பரத்தையைக் கண்டமைகூறிப் புலந்து வேறுபட்ட தலைமகளுக்கு, இத் தன்மையனாய் யாவர்க்கு மூதியமாகலின், அன்பானன்றியருளாற் பரத்தையர்க்குந் தலையளிசெய்ய வேண்டுமன்றே; புறப்பெண்டீரைப் போல யாமவனோடு புலக்கற்பாலேமல்லேம்; அவன் வரும்பொழுது எதிர்தொழுதும் போம்பொழுது புறந்தொழுதும், புதல்வனைப் பயந்திருக்கையன்றோ நமக்குக் கடனாவதெனத் தோழி தலைமகன தூதிய மெடுத்துரைத்து அவளையூடறீர்த்து, அவனோடு பொருந்தப் பண்ணாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.49. இரும்பரிசில் ஏற்றவர்க்கருளி
விரும்பினர்மகிழ மேவுதலுரைத்தது.
சிற்பி