கருவூர்த் தேவர் - திருமுகத்தலை


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

புவனநா யகனே அகவுயிர்க் கமுதே
பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ பன்னகா பரணா
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநீங் குதற்கே. 

பொழிப்புரை :

எல்லா உலகங்களுக்கும் தலைவனே! உன்னை அடைந்த முத்தான்மாக்களுக்கு அமுதம் போன்ற இனியனே! எல்லாப் பண்பு நலன்களாலும் நிறைந்தவனே! வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய மாணிக்கமே! உன்தொண்டுகளைச் செய்யும் அடியவர்பால் இரக்கம் காட்டிஅருளும் உயிர்களுக்குத் தலைவனே! பாம்புகளை அணிகளாக உடையவனே! இவ்வுலகிலே சூரியனைப் போன்று ஞானஒளி பரப்பி அருள்புரிந்து, தன்னுணர்வில்லாத அடியேனுடைய துணைஇல்லாத நிலை நீங்குதற்கு அடியேன் உள்ளத்திலும் திருமுகத்தலை என்ற திருப்பதியில் உள்ள வெண்மையான ஒளியை உடைய மணிகள் பதிக்கப்பட்ட அழகிய கோயிலிலும் விரும்பி உறைகின்றவனே! உன் திருவருள்வாழ்க.

குறிப்புரை :

புவனம் - உலகம்; இவ்வஃறிணை இயற்பெயர் பன்மைப் பொருட்டாய், `எல்லா உலகங்கட்கும்`. எனப்பொருள் தந்தது. இவ்வாறு வருவதனை, `சாதியொருமை` என்ப. அகம் - இடம்; அக உயிர் - உன்னை அடைந்த உயிர்கள்; முத்தான்மாக்கள். `அவனிக்கு` என உருபுவிரித்து, உலகிற்கு இருளை நீக்கி ஒளியைத் தரும் ஞாயிறுபோன்று மருளை நீக்கி அருளை வழங்கி, என உரைக்க. பசுபதி - உயிர்கட்குத் தலைவன். பன்னக ஆபரணன் - பாம்பாகிய அணிகளை யுடையவன்; தனியனேன் - துணை இல்லாதேன். தனிமை நீங்குதற்கு - அந்நிலை நீங்குமாறு; என்றது, `யான் துணை பெற்று உய்யும்படி` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து
புணர்பொரு ளுணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந் திளவரால் உகளும்
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த
வெள்ளமாய் உள்ளமா யினையே. 

பொழிப்புரை :

தீவினையால் மனம் வருந்தும் அடியேனுடைய தீவினைகள் நீங்குமாறு எதிர்வந்து அடையத்தக்க மெய்ப்பொருளை உணரும் உணர்வைத் தருகின்ற நூல் முறைவாயிலாக நீ வழங்குகின்ற திருவருளாகிய தேனைப்பொழிகின்ற பவளம் போன்ற வாயினையும், முக்கண்களையும் உடைய ஒளிவளருகின்ற நெடிய மாணிக்கமலை போன்றவனே! ஒலிக்கின்ற இனிய நீரில் பாய்ந்து இளைய, வரால் மீன்கள் தாவித் திரியும் திருமுகத்தலை என்ற திருத்தலத்தினும் அடியேனுடைய உள்ளத்தினும் அமர்ந்து அடியேன் நுகரும் இனிய கனியாகவும் இனிய ஆனந்த வெள்ளமாகவும் அதன்கண் பொருந்தினாய். இதற்கு அடியேன் செய்யத்தக்க கைம்மாறு யாது?

குறிப்புரை :

புழுங்குதல் - வேதல். \\\\\\\\\\\\\\\"புழுங்கு\\\\\\\\\\\\\\\" என்றது, \\\\\\\\\\\\\\\"வினை யேன்\\\\\\\\\\\\\\\" என்பதன் இறுதி நிலையோடு முடியும். \\\\\\\\\\\\\\\"புழுங்குதீவினையேன்\\\\\\\\\\\\\\\" என்றது, `தீவினையால் புழுங்குவேன்\\\\\\\\\\\\\\\' என்றவாறாம். புகுந்து - எதிர் வந்து. புணர் பொருள் உணர்வு நூல் வகையால் - அடையத்தக்க மெய்ப்பொருளை உணரும் உணர்வைத் தருகின்ற நூன்முறை வாயிலாக. வழங்கு தேன் - உன் அடியார்க்கு நீ வழங்குகின்ற திருவருளாகிய தேனை. \\\\\\\\\\\\\\\"பொழியும்\\\\\\\\\\\\\\\" என்றது இறந்தகாலத்தில் நிகழ்காலம். இதனால். இவர்க்கு இறைவன் ஆசிரியனாய் வந்து அருள் புரிந்தமை பெறப்படும். (ஒளிக் குன்று) என இயையும். மணிக் குன்று - மாணிக்க மலை. `உள்ளமும்\\\\\\\\\\\\\\\' என உம்மை விரித்து, `முகத்தலை அமர்ந்து, எனது உள்ளத்தும் ஆயினை\\\\\\\\\\\\\\\' என உரைக்க. ஆயினை - பொருந்தினாய். `இதற்கு யான் செய்யும் கைம்மாறு என்\\\\\\\\\\\\\\\' எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்
கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்
முன்னகா வொழியேன் ஆயினும் செழுநீர்
முகத்தலை யகத்தமர்ந் துறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே
பாவியேன் ஆவியுள் புகுந்த
தென்னகா ரணம்நீ ஏழைநா யடியேற்
கெளிமையோ பெருமையா வதுவே. 

பொழிப்புரை :

கருங்கல் பார்த்துச் சிரிக்குமாறு அழுத்தமான உள்ளத்தை உடையவனாய், என்னுடையது அல்லாத உள்ளத்தை என்னுடையது என்று கருதும் கள்ளத்தை உடைய அடியேன் உன் திறத்து மனம் நெகிழமாட்டேன். கண்களிலிருந்து உள்ளம் உருகிய கண்ணீரைச் சொரியேன். உன் முன் மகிழ்ந்து நின்று பாடுதல் அழுதல் முதலியவற்றைச் செய்யேன். அவ்வாறாயினும், மேம்பட்ட நீர்வளம் உடைய திருமுகத்தலை என்றஊரில் உகந்தருளியிருக்கும், பாம்பை அணிகலனாக அணிந்தவனே! பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய மாணிக்கமே! நீ தீவினைகளைச் செய்த அடியேனுடைய உயிரின் உணர்வின் உள்ளிடத்தில் வந்துசேர்ந்தது யாது காரணம் பற்றி? அறிவற்றவனாய் நாய்போல் இழிந்த அடியேன் திறத்து எளிமை யாக உதவுவதே உனக்குப் பெருமை தருவதாகும்.

குறிப்புரை :

`கல் உள்ளம்` என இயையும். நகுதல் - மகிழ்தல்; அஃது இங்கு அன்பு செய்தலைக் குறித்தது. இது பொதுவாக உள்ளத்தின் இயற்கையைக் கூறியது. `நெகா உள்ளம்` எனவும் பாடம் ஓதுப. ``கசிவு`` என்றது அன்பினை. ``நின்கட்கசிவிலேன்`` என்றது. சிறப்பாக இறைவனிடத்து அன்பு செய்யாமையைக் கூறியது ``ஒழி`` என்றது, துணிவுப் பொருண்மை யுணர்த்த. ``நகாவொழியேன்`` என்றது ஒரு சொல்தன்மைப்பட்டு நின்று, `நகமாட்டேன்` எனப் பொருள் தந்தது. நகமாட்டாமையாவது, மகிழ்ந்து நின்று பாடுதல், ஆடுதல் முதலியவற்றைச் செய்யாமை. ``ஆவி`` என்றது, உயிரின் உணர்வை.
உள் - உள்ளிடத்தில். ஏழை - அறிவில்லாதவன். நாயடியேன் - நாய்போலும் அடியேன். ஒகார ஏகாரங்களை மாற்றி, `அடியேற்கு எளிமையே உனக்குப் பெருமையாவதோ` என உரைக்க. ஏகாரம் தேற்றம்; ஓகாரம் சிறப்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க்
கிடையனா ருடையஎன் னெஞ்சிற்
பாடிலா மணியே மணியுமிழ்ந் தொளிரும்
பரமனே பன்னகா பரணா
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே.

பொழிப்புரை :

குற்றமற்ற மெய்ப்பொருளை விளக்கிக்கூறும் நூல்களோடு பழகியும், செழுமையான நீரில் வளர்கின்ற நெட்டி நீரை உள்ளே ஏற்காதவாறுபோல அந்நூற்பொருளை மனத்துக் கொள் ளாதவருடைய நெஞ்சைப்போன்ற என்நெஞ்சினை விடுத்து நீங்குதல் இல்லாத மாணிக்கமே! தலையிலுள்ள மணியை வெளிப்படுத்தி ஒளி வீசும் பாம்பினை அணிகலனாக உடைய மேம்பட்ட இறைவனே! மேட்டுநிலங்களிலும் நீர் ஏறிப்பாயும் நீர்வளம் உடைமையால் மேடுகளிலும் செந்நெல் ஆகிய பயிர்கள் செழிப்பாக விளைதலால் மிகவும் பொலிவுற்றிருக்கும் திருமுகத்தலை என்னும் பழைய ஊரில் பலகாலமாகத் தங்குகின்றாய் என்றாலும் உள்ளே நுழைந்து அடியேனுடைய நெஞ்சம் முழுதும் நிறைந்து நிற்கின்றாயே! இது வியப்பாகும்.

குறிப்புரை :

நூல் கெழுமியும் - நூல்களோடு பழகியும். நீர்க்கிடை அன்னார் உடைய என் நெஞ்சு - நீரிற்கிடக்கும் சடைப்பூண்டு போல் பவரது உள்ளங்கள் போலும் எனது உள்ளம். கிடை - சடைப் பூண்டு; இதனை, `தக்கை` என்றும், `நெட்டி` என்றும் வழங்குவர். இது நீரிலே நீங்காது கிடந்தும் நீரை உள்ளே ஏற்பதில்லை. அதனால், இது நூலொடு பழகியும் அதன் பொருளை ஏலாது நிற்பவரது உள்ளங்கட்கு உவமை யாயிற்று. ``உடைய`` என்றது, குறிப்பு வினைப் பெயர். ``நெஞ்சு`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``உடைய`` என்றார். கிடைய நெஞ்சு, உவமத்தொகை. பாடுஇலா - அழிதல் இல்லாத. ``ஒளிரும்`` என்ற பெய ரெச்சம், ``பரமன்`` என்னும் இடப்பெயர் கொண்டது. ``பன்னகா பரணன்`` எனப் பின்னர்க் கூறுகின்றமை `மணிகளை உமிழ்வன அவையே` என்பது விளக்கிற்று. ``உமிழ்ந்து`` என்றதனை, `உமிழ` எனத் திரிக்க. இவ்வாறன்றி, ``பரமனே`` என்பதனை, `மணி உமிழ்ந்து`` என்ற தற்கு முன்னே கூட்டுதலும் ஆம். மேடெலாம் செந்நெல் விளைதல், மிக்க நீரினாலாம். ``உள் புகுந்து`` என்றதற்கு, `என் உயிரின் உள்ளிடத் திற் புகுந்து` என உரைக்க. ``இது வியப்பு`` என்பது, குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டென்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக்
கென்னையாள் ஆண்ட நாயகனே
முக்கணா யகனே முழுதுல கிறைஞ்ச
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
பக்கலா னந்தம் இடையறா வண்ணம்
பண்ணினாய் பவளவாய் மொழிந்தே. 

பொழிப்புரை :

விரைவில் மறையும் கனவுபோன்ற செல்வத்தைத் திரட்டுதலையே பலகாலும் நினைத்து ஐம்பொறிகளோடு சீவான் மாவாகிய அடியேனுக்கு ஏற்பட்ட இந்தப் பூசல்முழுதும் நீங்குமாறு வந்து என் உள்ளத்திலிருந்து என்னை ஆட்கொண்ட தலைவனே! மூன்று கண்களை உடைய மேம்பட்டவனே! உலகம் முழுதும் உன்னை வழிபடும்படி திருமுகத்தலை என்ற திருத்தலத்தில் உறைந்து அடியேன் உள்ளத்தும் உறைந்து, உன் பவளம்போன்ற வாயினால் மெய்ப் பொருளை உபதேசித்து அடியேனிடத்தும் ஆனந்தம் தொடர்ந்து நிகழு மாறு செய்தாய். இஃது ஒரு வியப்பே.

குறிப்புரை :

இதன் முதலடி, சேந்தனாரது திருவீழிமிழலைத் திருவிசைப்பாவிலும் வந்தமை காண்க. `ஐவரோடும்` என்ற எண்ணும்மை விரிக்க. `என்னிடை விளைந்த` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். கலாம் - பூசல்; இதனை இக்காலத்தார். `கலகம்` என்பர். ஆள் ஆண்ட - ஆளாக ஆண்ட. பக்கல், ஏழன் உருபு, `வாயால் மொழிந்து` என உருபு விரிக்க. மொழிந்து - மெய்ப் பொருளைக் கூறி; உப தேசித்து. இறைவன் ஆசிரியனாய் வந்து அருள்செய்த குறிப்பு இத னுள்ளும் காணப்படுதல் காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
விழுமிய விமானமா யினதே.

பொழிப்புரை :

பச்சைமண்ணாய் இருந்த காலத்தில் தன்மீது தண்ணீர்பட்டாலும் கரைந்து பின் மிக்குத்தோன்றும் தீயில் சுட்டபின் சுட்ட சால் ஆகிச் சிறந்த தண்ணீரைத் தன்னுள் அடக்கி உயிர்களைப் பாதுகாக்கும் குயவனுடைய குயத்தொழிலால் வனையப்பட்ட சுட்ட சால்போல மேம்பட்ட இரசவாத வித்தையால் அடியேன் உள்ளம் உன் திறத்து உருகுமாறு மகிழ்வுடன் செய்த பெரிய ஒளிவடிவினனே! போர் முனையில் அகப்பட்ட மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனே! திருமுகத்தலை என்ற திருத்தலத்தில் உறைந்து அடி யேனுடைய வினை உண்டாவதற்கு ஏதுவாகிய உடம்பிலுள்ள மனத் தில் புகுந்து நீ நிலையாக அதன்கண் உறைகின்ற காரணத்தால் அடி யேனுடைய மனம் மேம்பட்ட திருக்கோயில் கருவறைமாளிகை ஆயிற்று. இதுவியத்தற்குரியது.

குறிப்புரை :

மண்டு அழல் வெதும்பி - மிக்க தீயால் வெந்தபின்பு. வினைபடு - தொழில் பொருந்திய. ``நிறை`` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய். நிறைதற் கருவியை உணர்த்திற்று. நிறைதற்கருவி, நீர் நிறைந்து நிற்றற்கு ஏதுவாகிய சால். `மண்டு அழல்வெதும்பிய பின்னர்ப் பூம்புனல் பொழிந்து நிற்பது` என்றத னால், புனல் பட உருகுதல், அங்ஙனம் வெதும்புதற்கு முன்னராயிற்று. ``அழலில் வெதும்புதற்கு முன்னே புனல் சிறிதுபடினும் குழைந்து போவதாகிய நீர்ச் சால், அழலில் வெதும்பிய பின்னர்ப் புனலை நிறையக் கொண்டும் நிலைத்து நின்று உயிர்களைக் காப்பாற்றுவது போல, நீ என் மனத்தில் வேதகத்தைப் போல வருதற்குமுன்பு இவ் வுலகத்தைச் சிறிது பற்றினும் என் மனம் அதனுள் அகப்பட்டு மீள மாட்டாது மயங்கி உன்னை நினைத்தற்கு உதவவில்லை. நீ வந்தபின் அதனை நிரம்பப் பற்றினும் அதனுள் அகப்படாது நின்று உன்னை நான் எப்பொழுதும் நினைத்தற்குத் துணையாய் நிற்கின்றது` என்னும் பொருள் உவமையாற் குறிக்கப்பட்டது. `179ஆம் பாடலைக் காண்க. (தி.9 திருவிடைமருதூர்-7) `போல` என, தொகுக்கப்பட்ட அகரத்தை விரித்து. `போல ஆகும்படி` என உரைக்க. `போல மகிழ்ந்த` என இயையும். நிறைந்த - நிரம்பிய. வேதகம் - இரச குளிகை. இது செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும். பல வகை மருந்துகளால் செவ்வனே ஆக்கப்பட்ட குளிகையே பிற உலோகங்களைப் பொன்னாக மாற்றுமன்றி, அவ்வாறு ஆக்கப்படாது குறையுடைய குளிகை மாற்றாமையின், ``நிறைந்த வேதகம்`` என்றார். வேதகத்து - வேதகம்போல (மகிழ்ந்த என்க). மனத்தைத் திருத்தியதற்கு வினைமுதலாயினமை தோன்ற. இறைவனை முன்பு அழலோடு ஒப்பித்தவர் பின்பு வியப்புத் தோன்ற வேதகத்தோடு ஒப்பித்தார். நெகுதல், இறைவனிடத்து அன்பு காரணமாகவும், உயிர்களிடத்து அருள்காரணமாகவுமாம். ``மகிழ்ந்த`` என்றது, `எழுந்தருளி மகிழ்ந்த` என முன்னிகழ்ச்சியையும் குறித்துநின்றது. வினை படும் உடல் - வினை உண்டாதற்கு ஏதுவாய உடம்பு. ``உடல்`` என்றது, அதனகத் துள்ள மனத்தை. ``எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய் யான் இதற்கிலனொர்கைம் மாறே`` (தி.8. கோயில்-10) ``நிலாவாத புலா லுடம்பே புகுந்துநின்ற கற்பகமே யான் உன்னை விடுவேனல்லேன்`` (தி.6 ப.95 பா.4) என்றாற் போல வந்தன காண்க. விழுமிய - சிறந்த. விமானம் - திருக்கோயிற் கருவறை மாளிகை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின்
வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும்நீ றாடுங் கனலும்ஒத் தொளிருங்
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
முகத்தலை யகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
பிழைபொறுத் தாண்டபே ரொளியே. 

பொழிப்புரை :

கடலிலே தோன்றிய விடத்தை நுகர்ந்த கருமை யோடு, சந்தனம் போலப்பூசிய திருநீற்றினுடைய வெண்மையும், திருமேனியின் செந்நிற ஒளியும் கரியும் நீறுபூத்த நெருப்பும் போல ஒளிவீசும் அத்தன்மையை உடையையாய்க் கழுத்தில் எலும்பு மாலையை ஒப்பற்ற மாலையாகப்பூண்டு வளைந்து கூத்தாட வேண்டிய கூத்துக்களை எல்லாம் நிகழ்த்தி அழகினை உடையை யாய்த் திருமுகத்தலை என்ற திருத்தலத்தில் உகந்திருந்தாய், பேய்களைப் போன்ற அடியேங்கள் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொண்டு அடியோங்களை ஆட்கொண்ட பெரிய ஞானஒளி வடிவின னாகிய உன்னை இனிப்பிரிந்து வாழ்தல் அடியோங்களுக்கு இயலுமோ?

குறிப்புரை :

விரியும் நீர் - கடல். `அதன்கண் பிறந்த ஆலம்` என்க. ஆலக் கருமை - விடத்தால் உண்டாகிய கருநிறம். சாந்து - சந்தனமாகப் பூசிய திருநீறு. ``வெண்மையும்`` எனவேறு எண்ணினா ராயினும், உவமைக்கு ஏற்ப, `வெண்மையொடு கூடிய செந்நிறத் தொளியும்` என ஒன்றாக உரைத்தல் கருத்து என்க. ``ஒளிரும்`` என்ற பெயரெச்சம், ``கழுத்து`` என்னும் இடப்பெயர் கொண்டது. ``கழுத்தில் ஓர் தனிவடம் கட்டி`` என்றதனையும், முரிதலையும் திருக்களந்தை ஆதித்தேச்சரப் பதிகத்துள்ளும் காண்க. பேய்களோம் - பேய் போன்றவர்களாகிய யாங்கள். தம்போல்வாரையும் உளப்படுத்து இவ்வாறு அருளிச்செய்தார்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

என்னைஉன் பாத பங்கயம் பணிவித்
தென்பெலாம் உருகநீ எளிவந்
துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
கனியுமாய் இனியைஆ யினையே. 

பொழிப்புரை :

அடியேனை உன் திருவடித்தாமரைகளைப் பணியச்செய்து என் எலும்பெல்லாம் அன்பால் உருகுமாறு நீ எளியையாய் உன்னை அடியேனிடத்தில் வைத்து எல்லா இடத்தும் எல்லாக் காலத்தும் நீக்கமற நிறைந்த சிறந்த ஒளியை உடைய சுடர்வடிவினனே! அடியேனுடைய முற்பட்ட வினைகள் எல்லாம் நீங்கத் திருமுகத்தலையிலே உகந்தருளியிருந்து என்திறத்தில் கரும்பும், பாலும் தேனும் அரிய அமுதமும் பழமும் போல இனிய னாய் உள்ளாயே. இதற்கு அடியேன் செயற்பால கைம்மாறு யாது?

குறிப்புரை :

``எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே`` என்றது, `அந்நிலை எனக்குப் புலனாம்படி நின்ற ஞானவடிவினனே` என்றபடி.
எனவே, இது, தம் அநுபூதிநிலையை எடுத்தோதியதாயிற்று. ``பாசம்`` என்றது, வினையைக் குறித்தது. `அகலப் பணி வித்து` என முன்னே கூட்டுக. ``கனியும் ஆய்`` என்றதில் `ஆய்` என்பதற்கு` `போன்று` என உரைக்க. `இதற்கு யான் செய்யும் கைம்மாறு என்` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

அம்பரா அனலா அனிலமே புவிநீ
அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே
எந்தையும் தாயும்ஆ யினையே. 

பொழிப்புரை :

வானமாகவும் தீயாகவும் காற்றாகவும் நிலமாகவும் நீராகவும் சந்திரனாகவும் சூரியனாகவும் இருக்கின்றவனே! தேவர்களாலும் அறிய முடியாத நுண்ணிய பொருளாய் எல்லாவற் றுள்ளும் நீக்கமற நிறைந்த மேம்பட்ட ஒளிஉருவனே! மனஉறுதியை உடையவராய் மற்றவருக்கும் உறுதிப்பொருளையே உரைக்கின்ற மேம்பட்ட அறிவாளிகள் நிறைந்த திருமுகத்தலையில் உறைந்து எனக்கே என் தலைவனாகி என்னை ஆட்கொண்ட நீ மற்றும் எனக்கு நிலையான தந்தையும் தாயும் ஆயினாய். உன் அருள்தான் என்னே!

குறிப்புரை :

அம்பரன் - ஆகாயமாய் இருப்பவன். அனலன் - நெருப்பாய் இருப்பவன். அனிலம் முதலியன இங்ஙனம் அன்பெற்று வாராமையின், அவை ஆகுபெயர்களாம்.
அனிலம் - காற்று. ஏனையபோல; புவியே` என்பதே பாடமாதல் வேண்டும். புவி - நிலம். அம்பு - நீர். இந்து - சந்திரன். `இரவீ` என்பதே பாடம்போலும். இறைவனது அட்ட மூர்த்தங்களுள் இயமானன் ஒழித்து ஒழிந்த உருவங்களை எடுத்தோதி விளித்தார். ``அணுவாய்`` என்றது, `நுண்ணிய பொருளாய்` என்றவாறு.
மொய்ம்பு - வலிமை; இங்கு, மன உறுதியை யுணர்த்திற்று. நலம் சொல் - உறுதியை உரைக்கின்ற. ``மூதறிவாளர் முகத்தலை`` என்றதில் தொக்குநின்ற ஆறாவது, `யானையது காடு` என்பதுபோல, வாழ்ச்சிக் கிழமைக்கண் வந்தது. ``எம்பிரான்`` என்றது, `இறைவன்` என்னும் அளவாய் நின்றது. ``மீண்டும்`` என்றது, `மற்றும்` என்னும் பொருள் படவந்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
சிவபதம் குறுகிநின் றாரே. 

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களுக்கும் ஆதியாய் அந்தமாய், தனக்கு முடிவு என்பதே இல்லாத முதற்பொருளாய்த் திருமுகத்தலை என்ற தலத்தில் அமர்ந்து, இனிய பாலும் அமுதமும் போன்ற இனிய னாய், பாம்பை அணிகலன்களாக உடையவனுடைய குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருவடிகள் இரண்டனையும் பற்றிக் கரும் பாலையில் காய்ச்சப்படும் பாகுபோன்ற சொற்களால் கருவூர்த்தேவர் பாடிய அமுதத்தை ஒத்த இனிய தமிழ்மாலையைக் கடமையாகக் கொண்டு பாடும் அடியவர் யாவரும் சிவலோக பதவியை மறு பிறப்பில் அணுகிநிற்பர்.

குறிப்புரை :

மூலம் - முதல். இறைவன் மூலமும், முடிவுமாதல் உலகிற்கு. அவற்றைத் தனக்கு இலனாதலின், ``முடிவிலாமுதலாய்`` என்றார். இங்கு. ``முதல்` என்றது, `பொருள்` என்னும் பொருட்டு. ஆலையம் பாகு - கரும்பு ஆலையிடத்து உள்ள பாகு. அம், சாரியை. `சொல்லையுடைய கருவூர்` என்க. `கருவூரது மாலை` என இயையும். சீலமா - ஒழுக்கமாக (கடமையாக)க் கொண்டு. `நிற்பார்` என்பது, துணிவு பற்றி, ``நின்றார்`` என இறந்த காலமாகச் சொல்லப் பட்டது.
சிற்பி