கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

நீரோங்கி வளர்கமலம்
நீர்பொருந்தாத் தன்மையன்றே
ஆரோங்கிமுகம் மலர்ந்தாங்
கருவினையேன் திறம்மறந்தின்
றூரோங்கும் பழிபாரா
துன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

நிரம்ப மகிழ்ச்சி மிகுந்து முகமலர்ச்சி கொண்டு, மிக்க தீவினையை உடைய அடியேன் என் பெண்தன்மைக்கு உரிய நாண்முதலிய பண்புகளைப் போற்றும் செயலைமறந்து, ஊரார் தூற்றும் அலரையும் பொருட்படுத்தாது, சிறப்புக்கள் ஓங்கும் கோடை என்ற தலத்தில் உள்ள திரைலோக்கிய சுந்தரம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே! உன்பால் முழுமையாக ஈடுபட்டுவிட்டேன். அவ்வாறாகியும் உனது தலையளியை அடியேன் பெறாதிருத்தல் நீரால் ஓங்கி வளர்தற்குரிய தாமரைக்கொடி அந்நீரைப் பெறாது வாடி உலர்ந்து அழிந்துபோவதனைப் போல்வதாம்.

குறிப்புரை :

முதலடியை ஈற்றிலும், ஈற்றடியை முதலிலும்கொண்டு உரைக்க. `ஆர ஓங்கி` என்பது தொகுத்தல் பெற்று `ஆரோங்கி` என நின்றது. ஆர - நிரம்ப. ஓங்கி - மகிழ்ச்சி மிகுந்து. `முகம் மலர்ந்து விழுந்தொழிந்தேன்` என இயையும். `என் திறம் மறந்து` என வேறு எடுத்துக்கொண்டு உரைக்க. திறம் - பெண் தன்மைகள்; அவை நாண் முதலியன; இஃது உண்மைப் பொருளில் உலகியலை உணர்த்தும். பழி - அலர். ``விழுந்தொழிந்தேன்`` என்பது ஒருசொல் தன்மைத்து. சீர் - அழகு. `கோடை` என்பது ஊரின் பெயரும், `திரைலோக்கிய சுந்தரம்` என்பது திருக்கோயிலின் பெயருமாம். `அருவினையேன் என்திறம் மறந்து, ஊர் ஓங்கும் பழியையும் பாராது, ஓங்கி, முகம் மலர்ந்து உன் பாலே விழுந்தொழிந்தேன்; அவ்வாறாகியும், உனது தலையளியை நான் பெறாதிருத்தல், நீர் ஓங்கி வளர் கமலம் நீரைப் பொருந்தாத தன்மையன்றே` என்க.
நீர் ஓங்கி வளர் கமலம் - நீரால் ஓங்கி வளர்தற்குரிய தாமரை. நீர் பொருந்தாத் தன்மை - அந்நீரைப் பெறாத தன்மை. அஃதாவது, வாடி, உலர்ந்து அழிந்துபோதல். முதல் அடிக்கு, `நீரில் உள்ள தாமரை யில் நீர் ஒட்டாதிருக்கின்ற தன்மை` என உரைப்பாரும் உளர். இத் திருப்பாட்டு, தலைவி கூற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

பொழிப்புரை :

உருகாத மனத்தினை உடைய அடியேனை மனம் உருகச்செய்வதற்காக, கோடை நகரத்துத் திரைலோக்கிய சுந்தரம் என்ற திருக்கோயிலில் உள்ள தலைவனே! நீ எம் தெருவழியே திருவுலாப் போந்த அன்றுமுதல் இன்றுவரையில் கைகள் நிறைவுறுமாறு தொழுது, அருவிபோலக் கண்ணீரை முழுமையாகப் பெருக்கினாலும் அடியேனுக்கு அருள்செய்ய மாட்டாயா?

குறிப்புரை :

நையாத மனத்தினனை - வருந்தாது மகிழ்வுடன் இருந்த மனத்தையுடைய என்னை. நைவிப்பான் - வருத்துதற் பொருட்டு. இவ்வாறு கூறினாளாயினும், `ஒருவர் குறிப்பும் இன்றித் தன்னியல்பில் உண்டாயிற்று` என்பதே கருத்தாம். ``நையாத, நைவிப்பான்``என்றவற்றில், `நைதல்` என்பது, காதற்பொருளில் இவ்வாறு, `வருந்துதல்` குறித்ததாயினும், உண்மைப் பொருளில், `உருகுதல்` என்னும் பொருளையே குறிக்கும். `அருள் செய்யாயோ` என மாற்றிக்கொள்க. இத் திருப்பாடலும் தலைவி கூற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

அம்பளிங்கு பகலோன்பால்
அடைபற்றாய் இவள்மனத்தின்
முன்பளிந்த காதலும்நின்
முகந்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியேஎன்
மருந்தேநல் வளர்முக்கட்
செம்பளிங்கே பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

பொழிப்புரை :

புதுமையாகப் பழுத்த பழம் போல்பவனே! என் அமுதமே! மேம்பட்ட ஒளிவளர்கின்ற முக்கண்களை உடைய செந் நிறத்த பளிங்கு போல்பவனே! பளிங்குக் கல்லினது இயற்கை ஒளியும் அடுத்ததனைக் காட்டும் தன்மையும் கதிரவன் தோன்றிய பொழுது அவன்முன்னே விளங்குவபோல இவள் மனத்தில் முன்பு பழுத்திருந்த காதலும் உன் முகத்தைக் கண்ட அளவில் அதன்முன்பே வெளிப் பட்டது. ஆதலின் இவளூக்கு நீ அருளவேண்டும் - என்பது செவிலி கூற்று.

குறிப்புரை :

இது முதலாக வரும் திருப்பாடல்கள் செவிலி கூற்றாம். அம் பளிங்கு பகலோன்பால் அடை பற்றாய் - அழகிய பளிங்குக்கல் கதிரவனிடம் அடைந்த நிலையைப்போல; அஃதாவது, `பளிங்குக் கல்லினது இயற்கை யொளியும், அடுத்தது காட்டுந்தன்மையும் கதிரவன் தோன்றியபொழுது அவன் முன்பே விளங்குதல்போல` என்றதாம். இவள் மனத்தில் முன்பு அளிந்த காதலும் நின் முகந்தோன்ற விளங்கிற்று - இவள் உள்ளத்தில் இயற்கையாகவே முன்பு மிகுந் திருந்த விருப்பம் (உன்னையே மிக விரும்பும் இவளது இயற்கை) உன்னுடைய முகம் தோன்றிய காலத்தில் அதன் முன்பே வெளிப்பட்டது. இறைவனை அடைதலே உயிர்கட்கு இயற்கை யாதலும், அவ்வியற்கை ஆணவத்தின் செயலால் திரிக்கப்படுதலாலே அவை உலகை நோக்கிச் செல்லும் செயற்கையை உடையவாதலும், ஆணவத்தின் சத்தி மெலிந் தொழிந்தபொழுது உயிர்களின் இயற்கைத் தன்மை வெளிப்படுதலும் ஆகிய உண்மைகள் இங்குக் குறிக்கப்பட்டன என்க. வம்பு அளிந்த - புதிதாய்ப் பழுத்த; ஆணவ நீக்கத்தில் விளங்குதலால் இறையின்பம் புதிதாய்த் தோன்றல்பற்றி இவ்வாறு கூறப்பட்டது. மருந்தாதல், `பிறவிப் பிணிக்கு` என்க. `நல்பளிங்கு` என இயையும். வளர் - ஒளி மிக்க. மூன்று கண்களையும் செம்மையையும் உடைய பளிங்கு, சிவபெருமானுக்கு இல்பொருள் உவமையாய்வந்தது. பின் இரண்டு அடிகளை முதலில் வைத்து, இறுதியில் `இவட்கு அருள வேண்டும்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மைஞ்ஞின்ற குழலாள்தன்
மனம்தரவும் வளைதாரா
திஞ்ஞின்ற கோவணவன்
இவன்செய்த தியார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

கருமை நிலைபெற்ற கூந்தலை உடைய தலைவி தன் உயிர் போன்ற மனத்தினைக் கோடைத் திரைலோக்கிய சுந்தர னுக்கு வழங்கவும், அவள் காணநிற்கின்ற கோவணமாக உடுத்த உடையை உடைய அப்பெருமான் அவளிடமிருந்து கவர்ந்த வளையல்களைக் கூடத் திரும்பத் தருகின்றான் அல்லன். இவன் செய்த செயல் போன்ற செயலை இதற்குமுன் செய்தார் யாவர் உளர்? அதனால் இவன் மெய்ம்மை பொருந்திய அன்பர் ஆயினார்க்குத் தானும் மெய்ம்மையான அருளில் பொருந்தவேண்டிய நன்றியறியும் பண்பு இல்லாதவன் ஆகின்றான் என்று செவிலி இறைவனுடைய பண்பினைப் பழித்துக் கூறியவாறு.

குறிப்புரை :

இத் திருப்பாட்டில், நகாரங்கட்கெல்லாம், ஞகாரங்கள் போலியாய் வந்தன. இவ்வாறு வருதலை, ``செஞ்ஞின்ற நீலம்`` (தி.4 ப.80 பா.5) என்னும் அப்பர் திருமொழியிற் காண்க. மை நின்ற - கருமை நிறம் பொருந்திய; இனி `மேகம் நின்றது போன்ற` என்றும் ஆம். `திரைலோக்கிய சுந்தரன், தனக்குத் தன் உயிர்போன்ற மனத்தைக் கொடுத்தவட்கு, அவளது வளையையும் திரும்பத் தருகின்றிலன்; இதுபோலும் நன்றியில்லாத செயலை இதற்குமுன் யார் செய்தார்; ஒருவரும் செய்திலர். அதனால், இவன் மெய்ம்மை பொருந்திய அன்பராயினார்க்குத் தானும் மெய்ம்மையான அருளில் பொருந்த வேண்டிய நன்றியறியும் பண்பு இல்லாதவன் ஆகின்றான்` எனப் பழித்தவாறு. காதல் மிகுதியாற் கூறினமையின், இப் பழிப்பு அமைவதாயிற்று. இந் நின்ற - இங்கு நிற்கின்ற. கோவணவன் - கோவணமாக உடுத்த உடையை யுடையவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

நீவாரா தொழிந்தாலும்
நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
குவளைமலர் சொரிந்தனவால்
ஆவாஎன் றருள்புரியாய்
அமரர்கணம் தொழுதேத்தும்
தேவாதென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

தேவர் கூட்டங்கள் தொழுது போற்றும் தேவனே! அழகிய சோலைகளை உடைய கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! நீ இவள் விரும்பியபடி வாராவிட்டாலும் எளியளாகிய இவள் உன் பக்கலிலே விருப்பம்கொண்டதனால் இவளுடைய குவளைமலர் போன்ற கண்கள் நூலில் கோக்கப்படாத முத்துமணி போன்ற கண்ணீரைச் சொரிகின்றன. இவள் திறத்து ஐயோ! என்று இரக்கம் கொண்டு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

நீ வாராதொழிந்தாலும் - நீ இவள்பால் வாராவிடினும். `ஏழை நின்பாலே விழுந்து` என மாற்றி. ``விழுந்து`` என்றதனைத் திரித்து, `எளியளாகிய இவள் நின்னிடத்தே வந்துவிழ` என உரைக்க. `குவளை மலரும் கோவாத மணிமுத்துச் சொரிந்தன` என உம்மையை மாற்றி உரைக்க. குவளைமலர் - கண்; உருவகம். `கோவாத மணி யாகிய முத்து` என்றது, கண்ணீரைக் குறித்தல் வெளிப்படை. ஆவா, இரக்கக் குறிப்பு. தென் - அழகு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

முழுவதும்நீ யாயினும்இம்
மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
பயில்வதும்நின் னொருநாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

சிறந்த மதில்களைச் சூழ்ந்த சோலைகளை உடைய கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! எல்லாப்பொருள்களும் நீயே யாயினும், நீ அங்ஙனம் எங்குமாய இன்பத்தை இவ்வுடம்பு கொண்டு இவள் பெறாமையால், இச்செறிந்த கூந்தலை உடைய என்மகள் தன் உடல் உறுப்புக்கள் பலவும் குற்றம் உடையன என்று கருதி அவற்றிற் காக உண்ணுதல் நீராடுதல் ஒப்பனை செய்தல் முதலியவற்றை மதிக்கின்றலள். அவள் பலகாலும் கூறிக்கொண்டிருப்பதும் உன் திரு நாமமே. அவள் கண்ணீர் வடிப்பதும் உன் செயல்களை நினைத்தே யாகும். இவ்வுடம்பு கொண்டுபெறும் பேறு அதுவன்றோ? - என்று தாய் தன்மகள் மனப்பக்குவம் கண்டு மகிழ்ந்து கூறியது.

குறிப்புரை :

மெய் முழுதும் - தனது உடல் உறுப்புக்கள் பலவும். பழுது - குற்றம் உடையன. ஓராள் - அவற்றை மதிக்கின்றிலள்; எனவே, `உண்ணாமை, நீராடாமை, ஒப்பனை செய்யாமை முதலிய வற்றால் அவைகளை வருத்துகின்றாள்` என்பதாம். `எல்லாப் பொருளும் நீயேயாயினும், நீ அங்ஙனம் எங்குமாய இன்பத்தை இவ் வுடம்புகொண்டு இவள் பெறாமையால், இதனை வெறுக்கின்றாள்` என்பது பொருள். இதனால், சீவன் முத்திநிலையில் நிற்பார்க்கும் பரமுத்தி நிலைக்கண் உளதாகும் வேட்கை மிகுதி குறிக்கப்பட்டமை காண்க. ``அதுவன்றோ பெறும் பேறு` என்றது, ``இவள் பெற்றது அவ் வளவே`` என்னும் பொருட்டாய் அவலம் குறித்ததாயினும், உண்மைப் பொருளில், `இவ்வுடம்புகொண்டு பெறும்பேறு அதுவே யன்றோ` என்பது குறித்துநிற்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

தன்சோதி எழுமேனித்
தபனியப்பூச் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
ஓலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாக்கண் ணிவளுடைய
துயர்தீரும் ஆறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

செந்நெற்பயிர்கள் வளரும் வயல்களை உடைய கோடைத்திரைலோக்கிய சுந்தரனே! தன்அழகு மேன்மேலும் வளருகின்ற உடம்பில் தோன்றிய பொற்பூப்போன்ற பசலை நிறமே தன்வருத்தத்திற்குச் சான்றாக நிற்க, உன் ஒளிமயமான அழகினைக் காண்பதற்கு இவள் வருந்தி அழைப்பவும் நீ உன் ஒளிவடிவத்தை இவளுக்குக் காட்டுகின்றாய் அல்லை. உறங்காத கண்களை உடைய இப்பெண்ணின் மனத்துயரம் நீங்குமாறு நீ அருள் செய்வாயாக - செவிலிகூற்று.

குறிப்புரை :

`தன்மேனி` என இயையும். ``தன்`` என்றது, தலைவியை. சோதி, இங்கு அழகு. மேனி - உடம்பு. உடம்பின் கண் தோன்றிய. தபனியப் பூச்சாய் காட்டாய் - பொற்பூப்போலும் நிறமே (பசலையே) தனது வருத்தத்திற்குச் சான்றாய் நிற்க. ``ஆய்`` என்ற தனை, `ஆக` எனத் திரிக்க. `காட்டா` என்றே பாடம் ஓதுதலும் ஆம். இவ்வடிக்கும், ``உருக்காட்டாய்`` எனப் பின்வருகின்ற அதன் பொருளே பொருளாக இறைவற்கு ஏற்றி உரைப்பாரும் உளர். `பூஞ்சாய்க் காட்டாய்` என ஓதுவார் பாடம் பாடம் அன்று. `சோதி யாகிய எழில்` என்க. என்றது, அதனையுடைய, உருவத்தைக் குறித்தது. ``இவளுடைய`` என்பது. ``கண்`` என்றதனோடும் இயை யும். செஞ்சாலி - செந்நெற் பயிர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

அரும்பேதைக் கருள்புரியா
தொழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிரீர்ந்தாய்
நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

பொழிப்புரை :

அகழிநீரால் குளிர்ச்சி பொருந்திய மதில்களை அடுத்த குளிர்ந்த சோலைகளில் பாதிரிமரங்கள் பூக்களைச் சொரியும் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! இப்பெறுதற்கரிய பெண்ணுக்கு நீ அருள் புரியாது விட்டுவிட்டாய். உன்னுடைய விளங்குகின்ற சடையின்மேல் உள்ள பிறை சொரிகின்ற நெருப்பினாலும், உன் கையில் உள்ளயாழ் நரம்பின் ஒலியாலும் இப்பெண்ணினுடைய உயிரை உடம்பிலிருந்து பிரித்துக் கொண்டிருக்கிறாய். இஃது உனக்கு அழகோ - செவிலிகூற்று.

குறிப்புரை :

``நளிர் புரிை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்பது முதலாகத் தொடங்கி, ``அரும் பேதைக்கு அருள்புரியாதொழிந்தாய்`` என்றதனை இறுதிக்கண் வைத்து, `இஃது உனக்கு அழகோ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
``பேதை`` என்பது, `பெண்` என்னும் அளவாய் நின்றது. `இவ்வரும் பேதை` எனச் சுட்டு வருவித்துரைக்க. அருமை, பெறுதற் கருமை. ``நரம்பு`` என்றது, அதனினின்று எழும் இசையை. சிவபெரு மான் வீணை வாசித்தலை, ``வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி`` (தி.2 ப.85 பா.1) என்பதனானும் அறிக. உயிரை ஈர்தலாவது உடம்பினின்றும் பிரித்தல். ``உயிர் ஈரும்வாளது`` (குறள்-334) என்புழியும், ஈர்தல் இப்பொருட்டாதல் அறிந்துகொள்க. நளிர் - குளிர்ச்சி; இஃது அகழி நீரால் ஆவது. வனம், நந்தவனம். புரிசை வனம் - புரிசையாற் சூழப்பட்ட வனம் . `பாதிரியம் போது` என்பது, தொகுத்தல் பெற்று, `பாதிரம் போது` என நின்றது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

ஆறாத பேரன்பி
னவர்உள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

அழகிய சோலைகளை உடைய கோடைத்திரை லோக்கிய சுந்தரனே! தணியாதபெருங்காதலை உடைய மெய்யடியார் களின் உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்டு, பேரன்பர் அல்லது உன் மாட்டுச் சிறிதன்புடையவர் பலரும் உன்னைச் சூழுமாறு நீ கவலை யின்றி இருக்கிறாய். அச்செய்தியை மனத்துள்கொண்டு அவர்களனை வரினும் பெருமை பெற்றவளாய் உன்னைத் தன் ஒருத்திக்கே உரிய வனாகச் செய்து கொள்வதற்கு விரைதலைப் பொருந்தி இன்னும் அம் மயக்கம் தெளியப் பெற்றிலாள். இவள் காதல் மிகுதிக்கு ஏற்ப அருள் செய்வாயாக - செவிலிகூற்று.

குறிப்புரை :

ஆறாத - தணியாத. அன்பு காதலாய் முறுகிய ஞான்று கனல்போல் உள்ளத்தைக் கவற்றுதலின், ``ஆறாத அன்பு`` என்றாள். ``அன்பினவர்`` என்றதில், இன்னும், அகரமும் ஆகிய இருசாரியைகள் வந்தன. வேறாக - பேரன்பர் அல்லாத பிறராக. இவர் சிறிதன்பு உடையவர். வீறாடி - அவர் அனைவரினும் பெருமை பெற்றவளாய். உன்னைப் பொது நீப்பான் - உன்னைத் தன் ஒருத்திக்கே உரியனாகச் செய்து கொள்ளுதற்கு. விரைந்து - விரைதலைக் கொண்டு. இன்னும் தேறாள் - இன்னும் அம்மயக்கம் தெளியப்பெற்றிலள். `இறைவனை ஒருத்தி தனக்கே உரியனாகச் செய்துகொள்ளுதல் இயலாத தொன்றாதலின், அவ்வெண்ணத்தை மயக்கம்` என்றாள். `காதல் மிகுதியால் இன்னதோர் எண்ணம் இவட்குத் தோன்றிற்று` என்பதாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

சரிந்ததுகில் தளர்ந்தஇடை
அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி சொருநாள்கண்
டிரங்காய்எம் பெருமானே
முரிந்தநடை மடந்தையர்தம்
முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ வணிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

பொழிப்புரை :

எம் பெருமானே! அசைந்த நடையினை உடைய பெண்கள் ஒலிக்கும் ஒலியும், மத்தளம் முதலிய இசைக்கருவிகள் தரு கின்ற ஓசையும் திருத்தமாய் உள்ள விழாக்கள் அழகு செய்கின்ற கோடைத்திரைலோக்கிய சுந்தரனே! இவ்விளம் பெண் தன் ஆடை நெகிழ்ந்து, இடைதளர்ந்து, குழல் அவிழ்ந்து இருக்கும் தன்மையை ஒருநாளாவது உன் திருக்கண்களால் கண்டு இவள்திறத்து இரக்கம் காட்டுவாயாக - செவிலி கூற்று.

குறிப்புரை :

`துகிலையும், இடையையும், குழலையும் உடைய தெரிவை` என்க. இவ்வாறு ஓதினாரேனும், `தெரிவை துகில் தளர்ந்து, இடை தளர்ந்து, குழல் அவிழ்ந்து இருந்த பரிசு கண்டு இரங்காய்` என்றலே கருத்தாதல் உணர்க. முரிந்த நடை - அசைந்த நடை. வழங்கு ஒலி - மத்தளம் முதலிய வாச்சியங்கள் தருகின்ற ஓசை. திருந்து விழவு - திருத்தமாய் உள்ள விழாக்கள். அணி - அழகு செய்கின்ற.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஆரணத்தேன் பருகிஅருந்
தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தார் ஈரைந்தும்
போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய சோலைகளை உடைய கோடைத்திரைலோக்கிய சுந்தரனே! வேதமாகியதேனை உட்கொண்டு, அரியதமிழாகிய மாலைகள் நறுமணம் வீசுமாறு நான் இவ்வாறு, இருக்கின்ற நிலைபெற்ற காரணத்தால், கருவூர்த் தேவனாகிய அடியேன் பாடிய நிலை பெற்ற இத்தமிழ் மாலையிலுள்ள பாடல்கள் பத்தினையும் மனப்பாடம் செய்து காந்தாரப்பண்ணில் பாடுகின்றவர்கள் நிறைவுடையவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை :

தேனைப் பருகி, மாலை சூடிவரும் செல்வரது இயல்பு பற்றித் தமது திருவருட் செல்வப் பேற்றை இவ்வாறு விளக்கினார். `யான் இவ்வாறிருக்கின்ற காரணத்தால், எனது இத் தமிழ்மாலையும் நிலைபெற்ற தமிழ்மாலையாயிற்று` என்பதாம். இனி, இவ்வாசிரியர் காயகற்பம் பெற்றுப் பன்னாள் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுதலால், அதனையே குறித்து, ``நிலைபெற்ற கருவூரன்`` என்றார் என, இதனை, அவருக்கே அடையாக்கி உரைத்ததும் ஆம். இப்பொருட்கு, முதலடி யிற் சொல்லப்பட்ட காரணம், இவர் நிலைபெற்றமைக்கு உரிய காரண மேயாம். `தமிழ்மாலை பகரவரும்` என்பதும் பாடம். `இத் தமிழ் மாலையின் பாடல்பத்தினையும் காந்தாரப் பண்ணினால் பாடி இறை வனைப் போற்றுவோர் பூரணத்தாராவர்` என்க. `பூரணத்தால்` என்பது பாடம் அன்று. சீர் அணைத்த - அழகைத் தன்னிடத்தே கொண்ட.
சிற்பி