கருவூர்த் தேவர் - திருப்பூவணம்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
சிறியனுக் கினியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங் ககில்மரம் சாடி
வரைவளங் கவர்ந்திழி வையைப்
பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே. 

பொழிப்புரை :

மருது, அரசு, பெரிய கோங்கு, அகில் என்னும் மரங்களை முரித்துக்கொண்டு மலையில் தோன்றும் பொருள்களை அடித்துக்கொண்டு மலையிலிருந்து இறங்கி ஓடிவருகின்ற வையை நதியின் ஒன்றோடொன்று மோதும் அலைகள் தம் பக்கத்தில் ஓங்கக்கொண்ட, கடைவீதிகளையுடைய திருப்பூவணம் என்ற தலத்தில் கோயில் கொண்டெழுந்தருளிய பெருமானே! திருவருள் புரிந்து அடியேனை அடிமையாக இவ்வுலகில் ஆட்கொண்டு இன்பம் தரும் பொருள் இது என்று அறிவித்து மிகுதியாக அருள்புரிந்து ஆனந்தத்தை வழங்குகின்ற உன் பெருமையைவிட மேம்பட்ட பொருள் ஒன்று உளதோ?

குறிப்புரை :

இதனுள் இறுதி ஒன்றொழித்து ஏனைய பாடல்களில் மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `ஆளாக ஆண்டு கொண்டு` என்க. இங்ஙன் - இவ்வுலகில். இனியது காட்டி - இன்பந் தரும் பொருள் இது என்று அறிவித்து. பெரிது அருள் புரிந்தமை யாவது, ஆனந்தத்தைத்தர நினைந்தமை. ``வறியார்க்கொன்று ஈவதே ஈகை`` (குறள் - 221) ஆதலின், அதனைச் செய்வோரது பெருமையையே உலகத்தார் உரையாலும், பாட்டாலும் சிறந் தெடுத்துப் போற்றுதல்போல. (குறள் - 232) மெய்ந்நெறி வகையில் மிகச் சிறியேனாகிய எனக்கு அருள்புரிந்த உனது பெருமையினும் சிறந்த பெருமை வேறொன்று இல்லை என்பார். ``நின் பெருமையிற் பெரியதொன்றுளதே`` என்றார். `மருது, அரசு, கோங்கு, அகில் என்னும் மரங்களைச் சாடி` என்க.
இரு - பெரிய. சாடி - முரித்து. வரைவளம் - மலைபடு பொருள்கள்: அவை கத்தூரி, குங்குமம் முதலியன. ``திரைமருங்கு`` என்றது, `கரைக்கண்` என்றவாறு. `திரைகளைத் தன்மருங்கில் ஓங்கக் கொண்ட வீதி` என்பாரும் உளர். ஆவண வீதி - கடைத்தெரு. பூவணம் கோயில் கொண்டாயே - திருப்பூவணத்தைக் கோயிலாகக் கொண்டவனே.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச்சோலை ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே. 

பொழிப்புரை :

தேனோடு கூடிய தண்ணீரை உடைய, மானிடர் ஆக்காத நீர்நிலையில் உள்ள வாளைமீன்கள் தம் வாயில் கொள்ளும் வண்ணம் தெளிந்த தேன் பாய்ந்து ஒழுகும் பூக்களையுடைய வயல்கள், சோலைகள் இவற்றை அடுத்த, கடைத்தெருக்களையுடைய திருப்பூவணத்தில் கோயில் கொண்டவனே! பாம்புப்படுக்கையில் துயின்ற திருமால், பிரமன் முதலிய தேவர்கள் மிகநெடுங்காலமாக உன்னைக் கண்களால் காண முயன்று வருந்தியிருக்கவும் அடியே னுடைய உள்ளத்தில் பரம்பொருளாகிய நீ வந்து சேர்ந்த எளிவந்த தன்மையை எக்காலத்தும் அடியேன் மறக்கமாட்டேன்.

குறிப்புரை :

``முத றேவர்`` என்பதல்லது, `முதற் றேவர்` என்பது பாடமாகாது. ஏம்பலித்து - வருந்தி. தேம் புனற் பொய்கை - தேனோடு கூடிய நீரையுடைய பொய்கையின் நீரை. பொய்கை, ஆகுபெயர். தேறல் - தேன். ``ஒழுகும்`` என்றது, `பணை` `சோலை` என்னும் இரண்டனையும் சிறப்பித்தது. பணை - வயல். `பணைவீதி, சோலைவீதி` எனத் தனித்தனி முடிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற்
கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந் தொருநாள்
இருந்திடாய் எங்கள்கண் முகப்பே
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

விரிவாக நிகழ்த்தப்படுகின்ற திருவிழாவிலே தன் பின்னே வருகின்ற அடியார்களுடைய பாடல்களைக் கேட்கும் விருப்பத்தால் எம் பெருமான் தன் திருமுடியை அசைக்கவே தன் முடியிலிருந்து விழுந்த பூக்கள் மிகுதியாக அமைந்து தூர்க்கின்ற கடைத்தெருக்களையுடைய திருப்பூவணத்தில் கோயில் கொண்டு இருக்கும் பொருளே! ஒலிக்கின்ற கடல் ஒலிபோல உடுக்கையின் அரைக்கும் உன் கைக்குமாகக் கட்டப்பட்டுள்ள கயிற்றினால் அதன் இருபக்கமும் ஒருநாவே சென்று தாக்கி ஒலியை எழுப்ப வந்து ஒருநாள் எங்கள் கண்களின் முன்னே காட்சி வழங்குவாயாக.

குறிப்புரை :

கரை - ஒலிக்கின்ற. கடல் ஒலியின் - கடல் ஒலி போன்ற ஒலியினையுடைய. `தமருகத்து அரையின்` என்பது முதல், `இயங்க` என்பதுகாறும் உள்ள பகுதியால் இறைவன் தனது தமருகத்தினின்றும் ஒலியை எழுப்பும் முறை விளக்கப்பட்டது. தமருகம் - உடுக்கை. `அதன் அரைக்கும் உனது கைக்குமாகக் கட்டப்பட்டுள்ள கயிற்றினால் அதன் இருபக்கத்தும் ஒருநாவே சென்று தாக்கி ஒலியை எழுப்ப, அந்நிலையோடே எங்கள் கண்களின் முன்னே ஒருநாள் வந்து இருந்தருள்` என்றவாறு. விரி - விரிவு; முதனிலைத் தொழிற் பெயர். ``விழவு`` என்றது, அதிற்கூடும் மக்கட் கூட்டத்தினை. பாடல் பாடுவோர் மக்கட் கூட்டத்தின் நெருக்கத்திடையே செல்லாது பின்பு செல்லுதலின், ``விழவின் பின்செல்வோர் பாடல்` என்றார், விழவிற் பின் செல்வோர் பாடல் எனப் பாடம் ஓதி, விழாவில் `நின்பின் செல் வோரது பாடல்` என்று உரைத்தலும் ஆம். பாடல் வேட்கையின் - பாடல்மேல் எழுந்த வேட்கையினால். `வீழ்ந்த புரிசடை, போது அவிழ்ந்த புரிசடை` என்க. `நின்புரிசடை` என உரைக்க. வீழ்ந்த - அவிழ்ந்த. அடியாரது பாடலை இறைவன் இனிதாகக் கேட்டுத் தலையை அசைத்தலால், கட்டியுள்ள அவனது சடை அவிழ்ந்து வீழ்ந்தது. துகுக்கும் - தூர்க்கின்ற; நிரம்பச் சொரிகின்ற. ``போது அவிழ்ந்த புரிசடை`` என்றதனால், சொரியப்படுவன அப்போதுகளே ஆயின. போது - பேரரும்பு; அவை, கொன்றை, ஆத்தி முதலியவற் றின் அரும்புகளாம். அவிழ்ந்த - மலர்ந்த. `விழாக்காலங்களில் இறை வனது சடைக்கண் உள்ள மலர்களே வீழ்ந்து நிரம்பும் பெருமையை உடையன, திருப்பூவணத்தின் கடைவீதிகள்` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

கண்ணியல் மணியின் சூழல்புக் கங்கே
கலந்துபுக் கொடுங்கினேற் கங்ஙன்
நுண்ணியை யெனினும் நம்ப நின் பெருமை
நுண்ணிமை யிறந்தமை அறிவன்
மண்ணியல் மரபின் தங்கிருள் மொழுப்பின்
வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

ஒளி இல்லாத இடத்தில் இருள் நிறைந்திருக்கும் என்ற மண்ணுலக முறைப்படி இருள் தங்கியிருக்கும் சோலையின் உயர்ந்த பகுதியில் வண்டினங்கள் பாட, அவற்றின் பாடலுக்கு ஏற்ப ஆடும் செல்வ மகளிரை உடைய, கடைத்தெருக்கள் அமைந்த திருப் பூவணத் திருத்தலத்தில் கோயில் கொண்டருளிய பெருமானே! கண் மணி இருக்கும் இடத்தில் நீ புகுதலால் அங்குத்தானே உன்னைக்கூடி உன்னுள் ஒடுங்கிய அடியேனுக்கு அவ்வாறு நீ சிறியையாய் இருந்தாய் எனினும் எம்மால் விரும்பப்படும் பெருமானே! உன் பெருமை சிறுமையைக் கடந்தது என்பதனை அடியேன் அறிவேன்.

குறிப்புரை :

கண் இயல் மணியின் சூழல், கண்மணி இருக்கும் இடம். `அவ்விடத்தில் நீ புகுதலால் அங்குத்தானே உன்னைக் கலந்து, உன்னுள் ஒடுங்கின எனக்கு` என்க. இஃது இறைவனைக் கண்ணாற் கண்டமையால் அவனுடன் கலந்தமை கூறியவாறு. இக்கருத்துப் பற்றியே, கண்மணியே தாம் இறைவனோடு கலந்த இடமாகக் கூறினார். ``சூழல் புக்கு`` என்றதில், ``புகுதலால்`` என்பது, `புக்கு` எனத்திரிந்து நின்றது. ``நுண்ணியை`` என்பது, `சிறியை` எனப் பொருள் தந்தது. ``அங்ஙன் நுண்ணியை`` என்றது, `என் கண்மணி யளவாய் நிற்கும் சிறுமை யுடையை` என்றதாம். நுண்ணிமை - நுட்பம்; அஃது இங்கு, வியாபகத்தைக் குறித்தது. இறந்தமை - கடந்தமை. `வியாபகப்பொருள் பலவற்றையும் கடந்து வியாபகமாய் நிற்பது நின் பெருமை` என்றதாம். மண் இயல் மரபின் - `ஒளி இல்லாத இடத்தில் இருள் நிறைந்திருப்பது` என்ற மண்ணுலக முறைப்படி. இந்நிலை தேவருலகில் இன்மையால், ``மண்ணியல் மரபின்`` என்றார். மொழுப்பு - உயர்ந்து தோன்றுதல். அஃது அதனையுடைய சோலையைக் குறித்தது. புண்ணிய மகளிர் - செல்வ மகளிர். ``தேவ மகளிர்`` என்றும் உரைப்ப. `மகளிரையுடைய வீதி` என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே. 

பொழிப்புரை :

உயரமான அடுக்குக்களை உடைய மாட வீடுகளில் இரா நேரத்தில் இருளைப்போக்குவதற்கு அணையாது உள்ள விளக்குக்கள் சாளரங்களுக்கு வெளியே ஒளியை வீசுகின்ற, கடைத்தெருக்களையுடைய திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற பெருமானே! கொடிய வினையாகிய பாசக்கடலைக் கடந்து ஐம்பொறிகளாகிய திருடர்களை மெதுவாக விரட்டி உன் திருவடிகள் இரண்டனையும் நூல்களில் சொல்லப்பட்ட நெறிக்கண் நிற்கும் முறையானே அடைந்துவிட்டேன். அடியேனுக்கு அருள் செய்வதோ, அருள் செய்யாது விடுப்பதோ உன் திருவுள்ளம்.

குறிப்புரை :

வினையைக் கடலாக உருவகிக்கின்றவர், அதுதான் பாசங்களுள் ஒன்றாதலை விளக்குதற்கு, ``வினைப் பாசக் கடல்`` என்றார். ஐவர் கள்ளர் - ஐம்பொறிகள். ``மெள்ள`` என்றது, `இனிமையாகவே` என்றவாறு. அவர் சென்றவழியே சென்று நீக்கினமை பற்றி இவ்வாறு கூறினார். இனி, `சிறிது சிறிதாக நீக்கி` என்றும் ஆம். துரந்து - ஓட்டி. அடையுமாறு அடைதலாவது, நூலிற் சொல்லப்பட்ட நெறிக்கண் நிற்கும் முறையானே அடைதல். இதனை, `விதி மார்க்கம்` என்பர். `இனி நீ எனக்கு அருள் செய்; அல்லது அருள் செய்யாதொழி; அஃது உனது உள்ளத்தின்வழியது; யான் செயற் பாலதனைச் செய்துவிட்டேன்; இந்நிலையினின்றும் வேறுபடேன்` என்பதாம். `நெடுநிலை மாடத்து நிலைவிளக்குச் சாலேகப்புடை இலங்கும் வீதி` என்க. இரவு - இரவின்கண். கிழிக்க - போக்குதற் பொருட்டு. நிலை விளக்கு - அணையாது உள்ள விளக்கு. சாலேகப் புடை - சாளரங்கட்கு வெளியே. இலங்கும் - ஒளியை வீசுகின்ற.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன்
சேவடி பார்த்திருந் தலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற் கியான்ஆர்
என்னுடை அடிமைதான் யாதே
அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
அரிவையர் அவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே. 

பொழிப்புரை :

அடியவர்களுடைய மனம் மகிழ்வதற்கு அமைந்த நாள்களில் ஒருநாள் சிவபெருமான் ஆகிய நீ பிச்சைக்கு எழுந்தருள, உன்னைக் காதலித்த மையலால் மகளிருடைய அவிழ்ந்த கூந்தலில் வண்டுகள் பொம் என்ற ஒலியோடு இசைக்கும், கடைத்தெருக்களை யுடைய திருப்பூவண நகரில் கோயில் கொண்டருளும் பெருமானே! செம்மையான மனத்தை உடைய அடியவர்கள் உன்னுடைய திரு வருளை வேண்டி உன் திருவடிகளைப் பார்த்துக் கொண்டிருந்து வருந்தவும், அடியேனுடைய மனத்தில் நீ இருப்பிடம் கொண்டு இருப்பதற்கு அடியேன் யாது தகுதி உடையேன்? அடியேனுடைய அடிமைதான் எத்தன்மையது? உன் செயலுக்கு உன் அளவற்ற கருணையே காரணம் என்பதாம்.

குறிப்புரை :

கிழவோர் - உரியவர்; அடியார். `கிழவோர் அல\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என இயையும். ``அன்பு`` என்றது இறைவனது அருளை. பார்த்திருந்து - தோன்றுதலை எதிர்நோக்கியிருந்து. அலச - வருந்த. `அவர்களிடம் செல்லாமல் என்பால் வந்து என் மனத்தில் நீ குடிகொண்ட இந் நிலைக்கு நான் என்ன தகுதியுடையேன்! எனது தொண்டுதான் என்ன தகுதியுடையது` என்றபடி. அம் மனம் - அழகிய மனம்; அடியவர் மனம். குளிர்நாள் - மகிழ்வதற்கு அமைந்த நாளில். சிவபெருமானது விழாக்களில் அவன் பலிக்கு (பிச்சைக்கு) எழுந்தருளும் விழாவும் ஒன்றாதல் அறிக. அரிவையரது குழல் அவிழ்தல். இறைவனைக் காதலித்தமையாலாம். குழல் சுரும்பு - கூந்தலில் உள்ள வண்டுகள் ``பொம்மென`` என்றது ஒலிக்குறிப்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

சொன்னவில் முறைநான் காரணம் உணராச்
சூழல்புக் கொளித்தநீ யின்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்
கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

ஒளி மிகுந்த பொன்மயமான மாளிகைகளின் கோபுரம், விளங்குகின்ற இளைய பிறைச் சந்திரன் தவழும்படியான உயர்ந்த மாடி வீடுகள், பொன் மிகுந்த மதில், கடைத்தெருக்கள் இவற்றை உடைய திருப்பூவணத் திருத்தலத்தில் கோயில் கொண் டருளிய பெருமானே! சொற்களை ஒலிக்கும் முறைப்படி சொல்கின்ற காரணத்தை அடியேன் எட்டலாகாத இடத்தில் புகுந்து மறைந்த நீ இன்று கல்லையொத்த உருகாத மனத்தை யுடைய அடியேனுடைய கண்களாகிய வலையில் உன்னை அகப்படுத்திக் கொண்ட கருணையைக் காட்டிலும் மேம்பட்ட செயல் வேறு உளதோ?

குறிப்புரை :

`சொல் முறை நவில்` என மாற்றி, `சொற்களை, ஒலிக் கும் முறைப்படி சொல்கின்ற` என உரைக்க. உணராச்சூழல் - எட்ட லாகாத இடம். ``கல் நவில்`` என்றதில் நவில் உவமஉருபு. கண்ணில் அகப்பட்டமை பற்றி, அதனை வலையாக உருவகித்தார். பெரியது - பெரியதொரு கருணை. உளதே - உண்டோ. ஆரணத்துள் அகப் படாமை அவை சொல்வடிவாதலாலும், கண்வலைப்பட்டமை அதனைச் செலுத்துகின்ற உணர்வின் தூய்மையாலும் என்க. மின் நவில் - ஒளி மிகுந்த. வாய்தல் - வாயில் மாடம், கோபுரம். பொன் நவில் - பொன் மிகுந்த. புரிசை - மதில். `வாய்தல்` மாடம், புரிசை இவைகளையுடைய வீதி என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

* * * * * ** * * * * *

பொழிப்புரை :

* * * * * ** * * * * *

குறிப்புரை :

* * * * * ** * * * * *

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

* * * * * ** * * * * *

பொழிப்புரை :

* * * * * ** * * * * *

குறிப்புரை :

* * * * * ** * * * * *

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட
புனிதனை வனிதை பாகனை வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
குழகனை அழகெலாம் நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந்
திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
பரமன துருவமா குவரே. 

பொழிப்புரை :

திருப்பூவணத் திருத்தலத்தில் கோயில்கொண்டு அடியேனைத் தன் அடியவனாகக்கொண்ட புனிதனாய், பார்வதி பாகனாய், வெள்ளிய கோவண ஆடையை உடுத்து வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தும் இளையனாய், எல்லா அழகுகளும் முழுமையாக நிறைந்த தீ நிறத்தவனாகிய சிவபெருமானுடைய செய்திகளாகச் சிறந்த வேதங்களை ஆராயும் விளக்கமுடைய கருவூர்த் தேவனாகிய அடியேன் சொல்லிய பாக்களின் தன்மை பொருந்திய தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பொருளோடு ஓதி நினைவிற்கொண்டு பாட வல்லவர்கள் சிவபெருமானுடைய சாரூப்பியத்தை அடை வார்கள்.

குறிப்புரை :

``வெண்டலை`` என்றது, பிரம கபாலத்தை. இது சிவபிரானுக்குப் பிச்சைப் பாத்திரமாவது. குழகன் - இளையோன். தாருகாவன முனிவர் பன்னியர்பால் பிச்சைக்குச் சென்றபொழுது சிவபிரான் இளைஞனாய்ச் சென்றமை அறிக. ``தெரியும்`` என்பது, ``கருவூரன்`` என்றதன் இறுதிநிலையோடு முடியும். `பாவாகிய வண்ணத் தமிழ்கள்` என்க. வண்ணம் - அழகு. ``பத்தும்`` என்ற தனால், இதன்கண் இருதிருப்பாடல்கள் கிடையாவாயின என்க.
சிற்பி