கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம்


பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ
அங்ஙனே யழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் டிங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

பொழிப்புரை :

கோட்டை, பலவாக அழகு பொருந்திய பொருட் கூட்டத்தால் எடுப்பிக்கப்பட்ட நெடுநிலையாகிய எழுநிலை மாடங் கள் ஆகியவை, வெள்ளிய சந்திரன் பெரிய மலைப்பகுதியிலே தவழ்வதுபோல வெள்ளித்தகடுகள் மதிலிலுள்ள மேடைகளில் பதிக்கப்பட்டுக் காட்சி வழங்கும் மதில்களால் சூழப்பட்ட தஞ்சை யிலுள்ள இராசராசேச்சரம் என்ற திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானுக்கு, உலகங்களெல்லாம் தொழுமாறு வந்து தோன்றுகின்ற நூறாயிரகோடி பரிதிகளின் ஒளியினை உடைய சூரியன் உளதாயின் அதன் அளவாகிய ஒளியினை உடைய திருவுடம்பு வியக்கத்தக்கவகையில் பேரழகினதாக உள்ளது.

குறிப்புரை :

`எழு பரிதி` என இயையும். பரிதி - சூரியன். `நூறாயிர கோடி பரிதிகளின் ஒளியினை உடைய பரிதி ஒன்று உளதாயின், அதனது அளவாய் ஒளியினை உடைய திருவுடம்பு` என்க. ``திரு வுடம்பு`` என்றதன்பின்னர், `உண்டு` என்பது எஞ்சிநின்றது. ``அழகிது`` என்றதற்கு, `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. ஓகாரம், சிறப்பு. அரணம் - கோட்டை. `பல மாடம்` என்க. குலாம் படை செய் - அழகுபொருந்திய பொருட் கூட்டத்தால் செய்யப்பட்ட. ``பருவரை`` என்பதில், `போல` என்பது விரித்து, `பெரிய மலையிடத்துத் தவழ்தல் போல` என உரைக்க. `வெண்டிங்களாகிய இலை` என்க.
இலை - தகடு. வெள்ளித் தகட்டைக் குறித்தவாறு. பதணம் - மதிலுள் மேடை. இஞ்சி - மதில். `அரணத்தை, இஞ்சிசூழ் தஞ்சை` என்க. `இவர்க்கு அலகெலாம் பொதிந்த திருவுடம்பு உண்டு` என முன்னே சென்று முடியும். தஞ்சை, `தஞ்சாவூர்` என்பதன் மரூஉ.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா
நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
புகுந்தன போந்தன வில்லை
மற்றெனக் குறவென் மறிதிரை வடவாற்
றிடுபுனல் மதகில்வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

உயர்ந்து மடங்குகின்ற அலைகளை உடைய வடவாற்றில் ஓடும் நீரை, அதன்கண் அமைந்த தலைமதகில் வாழும் முதலைகள் வாரி எறிகின்ற நீரால் நிரம்பிய அகழிகளால் சூழப்பட்ட மதில்களை உடைய தஞ்சை இராசராசேச்சரத்து எம்பெருமானுடைய நெற்றிக்கண் என் கண்களினின்று அகலமாட்டாது. என் நெஞ்சினில் அழகிய சிலம்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. அழகிய திருவடிகள் அடியேனுடைய குடி முழுதையும் ஆள்வதற்கு அடியேனிடம் புகுந்தன. அடியேனை விடுத்துப் புறத்துச் செல்லவில்லை. இங்ஙன மாதலின் அடியேனுக்கு வேறு யாது உறவு வேண்டும்?

குறிப்புரை :

`அகலாது` என்பது, ஈறு குறைந்தது. `நெஞ்சில் புகுந்தன` என இயையும். பொன் - அழகு. திரு - மேன்மை. போந்தன இல்லை - புறத்துச் செல்லவில்லை. `இங்ஙனமாகலின் எனக்கு மற்று உறவு என்` என்க. `வடவாறு` என்பது தஞ்சாவூரின் வடக்குப்புறத்தில் ஓடும் ஓர் ஆறு. இடு - அதன் கண் அமைக்கப்பட்ட. புனல் மதகு - நீரையுடைய வாய்க்கால் தலைமதகு. `நீர்சூழ்` என இயையும். கிடங்கில் - அகழிபோல. ``இவர்க்கு`` என்பது, முன் உள்ள `அகலா, புகுந்தன, போந்தன வில்லை` என்பவற்றோடு முடியும். நான்கனுருபு, `இவற்கு இஃது இயல்பு` என்றல்போலப் பண்புத் தற்கிழமைக்கண் வந்தது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ கோங்கிண ரனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்
துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

பொழிப்புரை :

கோங்கம் பூங்கொத்துக்களை ஒத்த வெண் குடைகள் பொருந்திய அரசர்களுடைய கிரீடங்கள் நெருக்கம் காரண மாக ஒன்றோடொன்று உராய்வதனால் தெறித்து விழுந்த செம்மையான ஒளியோடு கிடக்கும் இரத்தினக் குவியல்கள் மிக இருக்கும் வீதிகளில் பொருந்திய மாடங்களை மதில்கள் சூழும் தஞ்சை இராசராசேச்சரத்து எம்பெருமான், சடையிலே பொருந்திய கிரீடம் தெளிந்த நிலாப் போன்ற ஒளியைப் பரப்ப, வெள்ளிய ஒளியைப் பரப்பும் விரிக்கப்பட்ட முத்துக்குடை நிழலிலே காளை மீது இவர்ந்து திருவுலா வரும் கருத்துத்தான் யாதோ? என்று எம்பெருமான் வீதி உலாக் காட்சியில் அவனைக்கண்டு காதல் கொண்ட இளமகள் ஒருத்தியின் கூற்று அமைந்தவாறு.

குறிப்புரை :

`மகுடத்தின்கண்` என உருபு விரிக்க. `வெண்ணிலா விரிதரு குடை` என்க. தரளத்தால் வெண்ணிலா விரிவதாயிற்று. தரளம் - முத்து. குறிப்பு - கருத்து. ``குறிப்பென்னோ`` என்றது, `மாதர் உள்ளங்களைக் கவர்வதுபோலும்` என்னும் குறிப்புடையது. கோங்கு இணர் - கோங்கம்பூக்கொத்து; இது குடைக்கு வடிவுவமை. துணியால் ஆக்கப்பட்ட குடைக்கு இவ்வுவமை பொருந்துவதாகும்.
தேய்ந்து - தேய்தலால். உக்க - உதிர்ந்த. `உக்க குவை` என இயையும். ``செஞ்சுடர்ப்படு குவை`` என்றதனால், `மாணிக்கக் குவை` என்பது தோன்றிற்று.
படு - உண்டாகின்ற. குவை ஓங்கு இடைகெழு மாடம் - குவியல்கள் மிக்கிருக்கின்ற இடத்திற் பொருந்திய மாடம். இடம், வீதி. `இடைகழி மாடம்` என்பதும் பாடம். `மாடத் தஞ்ை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்க. இப்பாட்டு, காதல் நோய் கொண்டாள் கூற்றாய் அமைந்தது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

வாழிஅம் போதத் தருகுபாய் விடயம்
வரிசையின் விளங்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசல ராதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழு மாளிகை மகளிர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

வடவாற்று நீரின் அலைகளில் பரவிய பொருள்கள் சார்ந்துள்ள சுற்றிடத்தில் வரிசையாக விளங்கும் தோற்றமாகிய பச்சிலையோடு கூடிய மலர் முதலியவற்றின் உருவத்தைப் பொருந்திய வட்டம் தஞ்சை நகரைச் சுற்றிலும் பச்சிலையும், பூவும் ஓவியமாகத் தீட்டப்பட்ட பளிங்குச் சுவர் அமைக்கப்பட்டது போலத் தோற்ற மளிக்கவும், கரிய அகில் புகைமணம் வீசும் மாளிகைகளில் உள்ள மகளிர் இராக் காலத்தில் தம்விரல்களால் மீட்டும் யாழ்ஒலி எம் பெருமான் உகப்பிற்காகவே ஒலிக்கின்றது.

குறிப்புரை :

வாழி, அசைநிலை. அம்பு ஓதத்து - நீரின் அலைகளில். நீர், வடவாற்றில் உள்ளது. பாய - பரவிய; இதன் இறுதியகரம் தொகுத்தலாயிற்று. விடயம் - பொருள்கள். அடுத்த சூழல் - சார்ந்துள்ள சுற்றிடம். `பளிங்கின் மண்டலம்` என இயையும். பாசலராதிச் சுடர்விடு மண்டலம் - பச்சிலையோடு கூடிய மலர் முதலியவற்றின் உருவத்தைப் பொருந்திய வட்டம். `வடவாற்றில் உள்ள நீரின் அலைகள் உயர்ந்தெழும் போது வெள்ளிய அவ் வலைகளில் அருகில் உள்ள சோலையின் தழைகள், பூக்கள் முதலியன தோன்றுதல், தஞ்சை நகரத்தைச் சுற்றிலும் பச்சிலையும், பூவும் ஓவியமாகத் தீட்டப்பட்ட பளிங்குச் சுவர் அமைக்கப்பட்டதுபோலத் தோன்றுகின்றது` என்பதாம். `விளக்கலின்` என்பது பாடமாயின், `அந்நகரம் விளக்கி நிற்றலின்` என உரைக்க.
காழ் - வயிரம். `மாளிகைக்கண்` என ஏழாவது விரிக்க. அங்குலி கெழும - விரல் பொருந்த. சிலம்பும் - ஒலிக்கும். `இவர்க்கே யாழொலி சிலம்பும்` என முடிக்க. இதனால், `தஞ்சை நகர மகளிர் இரவும் பகலும் இராசராசேச்சரமுடையாரை யாழிசையால் துதிப்பர்` என்பது கூறப்பட்டது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

எவருமா மறைகள் எவையும்வா னவர்கள்
ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவருமா லவனும் அறிவரும் பெருமை
அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
உறுகளிற் றரசின தீட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

உவர்ப்பை உடைய பெரிய கடல் போலப் பேரொலி கேட்கப்படும் பெருந்தெருக்களில் உலவும் பெரிய அரச உவாக்களின் கூட்டம் ஏறும்படியான மலையைப் போல அமைந்த மதில்களால் சூழப்பட்ட தஞ்சை இராசராசேச்சரத்தில் உறையும் பெருமானார் மக்கள் யாவரும், சிறந்த வேதங்களாகிய எவையும், தேவர்கள் கூட்டமும், தாமரையில் வாழும் பிரமனும், திருமாலும் அறியமுடியாத பெருமையை உடையவராய்ப் பிறரை வருத்தும் வெப்பமுடைய தழல் வடிவினராய் உள்ளார்.

குறிப்புரை :

``எவரும்`` என்றதற்கு, `மக்கள் யாவரும்` என உரைக்க. தாள் திருக் கமலம் - தண்டினயுடைய அழகிய தாமரை மலர். அதன்கண் இருப்பவர், பிரமதேவர். பிரமனைப் பன்மையாற் கூறியது முடிதேடி வந்தபொழுது. `அறிந்து வந்தேன்` எனப் பொய் கூறிய இழிவை உட்கொண்டு.
அறிவரு - அளவறியப்படாத. அளவறியப் படாமையை வெளிப்படுத்தினோர் அயனும், மாலுமாயினும் அறிய மாட்டாமை அனைவர்க்கும் பொதுவாதல் பற்றி, அவ்விருவரோடு, ஏனைய பலரையும் உளப்படுத்துக் கூறினார். பெருமை, அடி பாதலத்தைக் கடந்தும், முடி அண்டங்கள் எல்லாவற்றையும் கடந்தும் நின்றமை. `பெருமையையுடைய தழல்` என்க. அடல் - அடுதல்; வருத்துதல். வருத்துதலையுடைய அழல் என்க . அழல் - வெப்பம். பிழம்பர், `பிழம்பு` என்பதன் போலி. பிழம்பு - வடிவம். உவரி - உவர்ப்புடையதாகிய. ``அரசு`` என்றது பன்மை குறித்து நின்றது. `மா மறுகில் உறு களிற்றினது ஈட்டம் மாகடலின் ஒலிசெய்` என மாற்றி அதனையும், `இஞ்சி சூழ்` என்பதனையும், `தஞ்ை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்பதனோடு தனித்தனி முடிக்க. இவரும் - உயர்ந்த. ``மால் வரை செய்`` என்றதில் உள்ள செய், உவம உருபு. `இவர்க்குப் பிழம்பர் தழல்` என முடிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

அருளுமா றருளி ஆளுமா றாள
அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
குயிலினை மயல்செய்வ தழகோ
தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும்
தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

முத்தினாலாகிய பெரியமலைபோலக் குளிர்ந்த நிலவொளி வீசும் மாடங்களின் திரட்சி மிக்கிருக்கின்ற பெரிய தெருக்களால் இருட்டு எல்லாம் நீக்கப்படுகின்ற, மதில்களால் சூழப்பட்ட தஞ்சை இராசராசேச்சரத்து உறையும் எம்பெருமான் அருள வேண்டிய முறைப்படி அருள்செய்து ஆட்கொள்ள வேண்டிய முறைப்படி அடிமைகொள்ளுவதற்குத் தம் அழகிய விழிகளையும், சுருண்ட சடைமுடியையும், நீண்ட காதுகளையும், மற்றவர் காணுமாறு காட்சி வழங்கி, யான் பெற்ற குயில் போன்ற இனிய குரலை உடைய என்மகளைக் காம மயக்கம் அடையுமாறு செய்துள்ள செயல் அவர் அருள் உள்ளத்துக்கு அழகு தருவது ஆகுமா?

குறிப்புரை :

அடிகள் - (யாவர்க்கும்) தலைவர். `அடிகளாகிய தம்` என உரைக்க. குருள் - சுருள்; சடைமுடி. `அழகோ` ஓகாரம் சிறப்பு; எதிர்மறையாயின், `ஆளா அடிகள்` என்பது பாடமாதல் வேண்டும். தரள வான்குன்றில் - முத்தினாலாகிய பெரிய மலைபோல. ``ஒளியும்`` என்ற உம்மை சிறப்பு. குவால் - (மாடங்களின்) திரட்சி. `மாடங்களின்` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. இருளெலாம் - இருள் முழுதும். `கிழியும் தஞ்ை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என இயைக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
தளிர்இறப் பிலையுதிர் வென்றால்
நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும்
நெஞ்சிடிந் துருகுவ தென்னோ
சுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச்
சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

பொழிப்புரை :

சுனையைப் போல ஆழமான, மூழ்கும் மகளிருடைய சந்தனச்சேற்றால் கலங்குதலை உடைய பொய்கைகளில் உள்ள கழுநீர்ப்பூக்கள் தம்மைச் சுற்றிலும் உள்ள ஒளிவீசும் மாளிகைகளில் எத்துணைப் பெரிய நறுமணத்தையும் பரப்பும் படியான, மதில்களால் சூழப்பட்ட தஞ்சையில் உள்ள இராசராசேச் சரத்துப் பெருமானார், தனிப் பெருந்தலைவராய் எல்லாவிடத்தும் வியாபித்து இருக்கவும், பிறப்பாகிய தளிர் இறப்பாகிய இலை உதிர் நிலையை எய்திற்றாயின் அதுபோது நினைத்தற்கும் அரிய இவர்பால் செல்லுதல் இயலாமை அறிந்தும் மனம் கலங்கி இப்பெருமான் திறத் தில் மனம் உருகுவது யாது கருதியோ? தொடக்கம் தொட்டே இறை வனை நினைந்து உருகும் உள்ளத்தோடு செயற்படவேண்டும் என்பது.

குறிப்புரை :

``தாம்`` என்றது இறைவரை. முழுதுற - எவ்விடத்தும் இருக்க. `உறவும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் - உடம்பாகிய தளிர் இறப்பாகிய இலை உதிர்நிலையை அணுகிற்றாயின். நினைப்பருந் தம்பால் சேறல் இன் றேனும் - அதுபோழ்து நினைத்தற்கும் அரிய இவர்பால் செல்லுதல் இயலாமை அறிந்தும்.
நெஞ்சு இடிந்து இவர்க்கு உருகுவது என்னோ - மனங் கலங்கி இவர் திறத்தில் சிலர் உருகுவது யாது கருதியோ. `நன்றாக வாழ்ந்த காலத்தில் இவரை (இறைவரை) அடையாது இறக்குங் காலத்தில் சிலர் இவரை நினைந்து உருகுவது என்னோ` என்பது இதன் முன்னிரண்டிகளில் சொல்லப்பட்ட பொருள். ``முழுதுற`` என்றது, முன்னர் எளிதாயிருந்த செயல், பின்னர் இயலாததாய நிலையைக் குறித்தற்கு. ``பிறப்பின்`` என்றதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை. `சுனைப்பொய்கை` என்று இயைத்து, `சுனைபோல ஆழ்ந்த பொய்கை` என உரைக்க.
கலங்கல் - கலங்கல் நீர். கலங்குதல் மூழ்கும் மகளிரது சந்தனச் சேற்றாலாம். சூழல் - சூழ்ந்துள்ள. `சுடர் வீசும் மாளிகை` என மொழி மாற்றி, `மாளிகைக்கண்` என உருபு விரிக்க. எனைப் பெருமணம் செய் - எத்துணைப் பெரிய மணத்தையும் உண்டாக்குகின்ற (தஞ்சை என்க). `பொய்கைகளில் உள்ள கழுநீர்ப் பூக்கள், சுற்றிலும் உள்ள மாளிகைகளில் தம் மணத்தை உண்டாக்குகின்ற தஞ்ை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்பது பின்னிரண்டடிகளில் அமைந்துள்ள பொருள்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை யென்றுநான் மறக்கேன்
மின்னெடும் புருவத் திளமயி லனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

நீண்ட புருவத்தினை உடையராய், மின்னலைப் போன்று உடல் ஒளி வீசுகின்ற, இளமயில் போன்ற தம் இனிய பெண் மையை உடைய மகளிர் மலைபோல நிலைபெற்ற நாடக சாலைக்கண் இனிய கூத்தினைப் பழகும், மதில்களால் சூழப்பட்ட தஞ்சையில் உள்ள இராசராசேச்சரத்து எம்பெருமான் பற்பல ஆண்டுகள் திருத் தொண்டு செய்து பழைய அடியவர்கள் எம்பெருமான் திருவருளை வேண்டி வருந்தியிருக்கவும், அடியேனுடைய உள்ளத்தை எம்பெரு மான் தன்னுடைய பெரிய கோயிலாகக்கொண்டு அதன்கண் வீற்றிருக் கும் அவன் எளிவந்த தன்மைபற்றி அடியேன் யாது கூற வல்லேன்?

குறிப்புரை :

`பழையோர் பலர் பன்னெடுங்காலம் பணிசெய்து ஏம்பலித்திருக்க` எனக்கூட்டுக. ஏம்பலித்திருக்க - வருந்தியிருக்க. `கோயிலாக` என, ஆக்கம் வருவிக்க. ``நெஞ்சு`` என்றதனை, ``என்`` என்றதனோடு கூட்டுக. மறக்கேன் - மறவேன்; இவ்வாறு முன்னும் வந்தது. ``நெடும்புருவத்து`` என்பதனை முன்னே கூட்டி, `மின்னும் இளமயிலும் அனையார்` என உரைக்க. விலங்கல் - மலை. செய், உவம உருபு. `நாடக சாலைக்கண்` என உருபு விரிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
வஞ்சகர் நெஞ்சகத் தொளிப்பார்;
அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல்
அலர்கதி ரனையர் வா ழியரோ
பொங்கெழில் திருநீ றழிபொசி வனப்பிற்
புனல்துளும் பவிர்சடை மொழுப்பர்
எங்களுக் கினியர் இஞ்சிசூழ் தஞ்சை
இராசாரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

மதில்களால் சூழப்பட்ட தஞ்சையில் இராசராசேச் சரத்தில் கோயில்கொண்டு அருளும் எம்பெருமான், மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப்போல, தாம் எங்கும் நிறைந்திருந்தும், வஞ்சனை உடையவர்கள் உள்ளத்தில் மறைந்தே இருப்பார். எரிகின்ற விளக்குப்போல ஒளி உடையராய் இருக்கின்ற அன்பர்களுக்கு வேனிற்காலத்து ஒளிக்கதிர்களை விரித்து விளங்குகின்ற சூரியனைப் போலப் பேரொளி வீசி நிற்பார். மேம்பட்ட அழகிய உடம்பில் பூசப் பட்ட திருநீறு அழியும்படியாகக் கசியும் அழகினை உடைய கங்கை நீர் ததும்புகின்ற சடைமுடியை உடைய இவரை வணங்கி வாழ்த்துதற் பொருட்டு அடியேன் வாழ்வேனாக - இது தலைமகள் கூற்று.

குறிப்புரை :

மங்குல் சூழ் போதின் - மேகத்தால் மறைக்கப்பட்ட ஞாயிற்றைப்போல. `பாலின் நெய்போல` என்ற உவமைபோல, இஃது இறைவன் எங்கும் இருந்தும் விளங்காது நிற்றற்குக் கூறப்பட்ட உவமை. ``ஒழிவற நிறைந்து`` என்பதை முதலிற் கூட்டுக. அங்கு - அவ்விடத்தில்; நெஞ்சில். அழல் சுடராம் அவர்க்கு - எரிகின்ற விளக்குப்போல ஒளியுடையராய் இருக்கின்ற அன்பர்க்கு. வேனல் அலர் கதிர் அனையர் - வேனிற் காலத்து விரிந்து விளங்குகின்ற ஞாயிறு போலப் பேரொளி வீசிநிற்பவர். திருநீறு அழிபொசி வனப் பின் - திருநீறு அழிந்து குழைகின்ற அழகோடு. புனல் துளும்பு சடை மொழுப்பர் - நீர் ததும்புகின்ற சடைமுடியை உடையவர். `சடை யிலுள்ள நீர் தளும்புதலால் திருமேனியிற் பூசியுள்ள நீறு அழிந்து குழை கின்ற அழகையுடையவர்` என்பதனை இவ்வாறு கூறினார். ``வாழியர்`` என்றதனை வியங்கோளாகவும், ஓகாரத்தைச் சிறப்பாக வும் வைத்து ``வாழியரோ`` என்றதனை இறுதியிற் கூட்டி, `ஒளிப் பவரும், அனையவரும், இனியவரும் ஆகிய இவர்பொருட்டு (இவரை வணங்குதற் பொருட்டு) யான் வாழ்வேனாக` எனக் காத லுடையாள் கூற்றாக உரைக்க. இவ்வாறன்றி, `வாழி, அரோ என்பன அசைநிலைகள் எனக்கொள்ளின், இராசராசேச்சரத்து இவரே` என்பது பாடமாதல் வேண்டும்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

தனியர்எத் தனைஓ ராயிர வருமாந்
தன்மையர் என்வயத் தினராங்
கனியர்அத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற்
கட்டியர் அட்டஆ ரமிர்தர்
புனிதர்பொற் கழலர் புரிசடா மகுடர்
புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்
கினியரெத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து எம் பெருமான் தாம் ஒருவராகவும் இருப்பார். எத்தனையோ ஆயிரப் பொருள்களாக நிற்கும் தன்மையையும் உடையார். அடியேனுக்கு உரியவராகிய அப்பெருமான், பழமும், இனிமையைத் தருகின்ற அத்தன்மையை உடைய கரும்பும் போன்றவர். வெள்ளிய பூணூலை அணிந்தவர். மிகக் காய்ச்சிய பால்போல இனியர். தூயர். அழகிய வீரக் கழலை அணிந்தவர். முறுக்கிய சடையை மகுடம்போல அணிந்தவர். புண்ணிய வடிவினர். பொய் என்பது இல்லாத மெய்யன்பர்களுக்கு மிக இனியர். இவரை வணங்கி வாழ்த்துதற் பொருட்டு அடியேன் வாழ்வேனாக - இதுவும் தலைமகள் கூற்று.

குறிப்புரை :

தனியர் - ஒருவர். எத்தனை ஓராயிரமாம் தன்மையர் - எத்துணையோ ஆயிரப் பொருளாயும் நிற்கும் தன்மையை உடையவர், `ஏகன் அனேகன் இறைவன்` எனத் திருவாசகத்துள்ளும் (தி.8 சிவபுராணம் - 5) கூறப்பட்டது. என் வயத்தினராம் கனியர் - எனக்கு உரியவர் ஆகிய கனிபோல்பவர். ``அத் தரு தீங்கரும்பர்`` என்றதனை, `தீதரு அக்கரும்பர்` என மாற்றி, `இனிமையைத் தருகின்ற அத் தன்மையை யுடைய கரும்புபோல்பவர்` என உரைக்க. கட்டியர் - அணிந்தவர். அட்ட ஆரமிர்தர் - மிகக் காய்ச்சிய அரிய பால் போன்ற வர். மிகக் காய்ச்சிய பால் மிக்க சுவையுடைத்தாதல் அறிக. `பொய் இலா மெய்யர்க்கு எத்தனையும் இனியர்` என்க. ``இவர்க்கே`` என்றதன்பின் முன்னைத் திருப்பாட்டிற் சொல்லிய ``வாழியரோ`` என்றதனை இங்கும் வருவித்து முடிக்க. அவ்வாறு வருவியா தொழி யின், முன்னர்க் கூறியவாறே இங்கும், `இவரே` என்பதே பாடமாதல் வேண்டும்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 11

சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொன் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும்
பொன்னெடுங் குன்றுடை யோரே. 

பொழிப்புரை :

தேவதாரு, மந்தாரம், சண்பகம், மகிழ், சந்தனம் என்ற மரங்கள் அடர்ந்த நந்தனவனத்தின் இருள் அடர்ந்த உச்சியை உடைய மதில்களால் சூழப்பட்ட இராசராசேச்சரத்து எம்பெருமானை, அரிய காயகற்பத்தை அருந்தி இறத்தலைப் பலகாலம் நீக்கி வைத்த கருவூர்த்தேவர் பாடிய சொல்மாலையாகிய இப்பத்துப்பாடல்களின் சொற்பொருளாகிய அமுதத்தை நுகர்ந்த அடியார்கள் சிவபதம் என்னும் பொன்மயமான நெடிய மலையைத் தம் உடைமையாகப் பெறுவர்.

குறிப்புரை :

சரளம் - தேவதாரு. வகுளம் - மகிழ். நந்தனவனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சி - நந்தனவனத்தின் இருள் அடர்ந்த உச்சியை உடைய மதில். அருமருந்து- காயகற்பம். இவ்வாசிரியர் காயகற்பம் அருந்தி நெடுநாள் வாழ்ந்தார் என்ப. அல்லல் - இறப்புத் துன்பம். பொருள் மருந்து - சொற்பொருளாகிய அமிர்தம்.
சிற்பி