திருவாலியமுதனார் - கோயில்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

மையல் மாதொரு கூறன் மால்விடை
யேறி மான்மறி யேந்தி யதடங்
கையன் கார்புரை யுங்கறைக்
கண்டன் கனன் மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
நீர்வயல் தில்லை யம்பலத்தான்
செய்யபாதம் வந்தென் சிந்தை
யுள் ளிடங் கொண் டனவே.

பொழிப்புரை :

அழகிய நீர்வளம்உடைய வயல்கள் சூழ்ந்த தில்லைத்திருப்பதியின் பொன்னம்பலத்தில் உள்ளவனாய், தன் மாட்டுக் காமமயக்கம் கொண்ட பார்வதி பாகனாய், திருமாலாகிய காளையை இவர்பவனாய், மான்குட்டியை ஏந்திய நீண்ட கையனாய், கார்மேகத்தை ஒத்த விடக்கறை பொருந்திய கழுத்தினனாய், கனலை யும் மழுவையும் ஏந்துகின்றவனாய், நிறைந்த தீயிடைக் கூத்தாடு பவனாய் உள்ள தலைவனுடைய சிவந்தபாதங்கள் என் மனத்தின்கண் வந்துபொருந்தி அதனைத் தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளன.

குறிப்புரை :

மையல் மாது - காதலை உடைய பெண்டு; உமை. `காதலுக்கு இடமாய பெண்டு` என்றும் ஆம். கார் புரையும் - மேகம் போலும். கறை - கறுப்பு. இதனுள், ``கறை, சிந்தை`` என்பவை கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட
முந்தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
யார்தில்லை யம்பலவன்
புலம்பி வானவர் தான வர்புகழ்ந்
தேத்த ஆடுபொற் கூத்தனார்கழற்
சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே.

பொழிப்புரை :

நீரின்கண் பொலிவை உடைய தாமரைக் கொடிகள் ஆழமாக வேர்ஊன்றி வளர்ந்த குளங்களை உடையதாய், அந்த மிக்க நீரின்கண் உள்ள பூக்களைச் சேர்ந்து அவற்றைக் கிண்டி வண்டுகள் ஒலிக்கப்பெறுவதாய், அழகுநிறைந்த தில்லைப்பதியிலுள்ள பொன்னம்பலத்தில் உள்ளவனாய், முறையிட்டுத் தேவரும் அசுரரும் தன்னைப் புகழ்ந்து துதிக்கக் கூத்து நிகழ்த்தும் பொன்போலச் சிறந்த கூத்தப்பிரானுடைய திருவடிகளில் ஒலிக்கின்ற கிண்கிணிகள் அடியே னுடைய சிந்தையுள் தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டன.

குறிப்புரை :

சலம் - நீரின்கண். பொன் - அழகு. தாழ்ந்து எழுந்த - ஆழ வேரூன்றி வளர்ந்த. தடம் - குளத்தின்கண். `தடமும்` என்பது பாடம் அன்று. தடம் புனல்வாய் - மிக்க நீரின்கண் உள்ள. `அத்தடம் புனல்வாய்` எனச்சுட்டு வருவிக்க. அலம்பி - கிண்டி. புலம்பி - முறை யிட்டு. தானவர் - அசுரர். பொற் கூத்து - பொன்போலச் சிறந்த நடனம், சிலம்பு - ஒலிக்கின்ற. இதனுள்ளும், ``அணி, சிந்தை`` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

குருண்ட வார்குழற் கோதை மார்குயில்
போல்மி ழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லைதன்னுள் திரு
மல்குசிற் றம்பலவன்
மருண்டு மாமலை யான்மகள்தொழ
ஆடுங் கூத்தன் மணிபு ரைதரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே. 

பொழிப்புரை :

சுருண்ட நீண்ட கூந்தலை உடைய மகளிர் குயில் போல இனிமையாக மழலைபேசும் அழகிய பேரில்லங்கள் மிகுதியாக உள்ள தில்லைத்திருப்பதியில் செல்வம் நிறைந்த சிற்றம்பலத்தில் உள்ளவனாய், திகைத்து நின்று இமவான் மகள் தொழுமாறு ஆடும் கூத்தப்பிரானுடைய செம்மணியை ஒத்த திரண்ட சிறந்த துடைகள் அடியேன் சிந்தையுள் தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டன.

குறிப்புரை :

குருண்ட - சுருண்ட. ``மிழற்றிய`` என்னும் இறந்த காலம், `அத்தன்மையைப் பெற்ற` என்னும் பொருட்டு. திரண்ட - நெருங்கிய. திருமல்கு - அழகு நிறைந்த; இது சிற்றம்பலத்தைச் சிறப் பித்தது. மருண்டு - வியந்து. மணி - மாணிக்கம். வான் குறங்கு - சிறந்த துடை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
மகள்உமை யச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தட
மல்குசிற் றம்பலவன்
சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து
வீக்கும் பொன்னூல் தன்னினொடு
தாழ்ந்த கச்சதன்றே தமி
யேனைத் தளர்வித்ததே. 

பொழிப்புரை :

யானையின் தோலை உரித்துத் தன்னுடைய அச் செயலினால் உமாதேவிக்கு ஏற்பட்ட அச்சத்தைப் பின்னர்க் கண்ட வனாய், ஆழ்ந்த குளிர்ந்த நீரால் நிறைந்த குளங்கள் மிகுந்த தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள பெருமான் அணிந்த அழகிய பூணநூலோடு, பரவிய புலித்தோல் மீது வளைத்துக்கட்டிய இடைக்குப் பொருத்த மான கச்சு தன்னுணர்வு இல்லாத அடியேன் உள்ளத்தைத் தளரச் செய்தது.

குறிப்புரை :

போழ்ந்து - உரித்து, `உமையது அச்சத்தைப் பின்னர்க் கண்டவன்` என்க. இனி, ``கண்டவன்`` என்றதற்கு, `உண்டாக் கினவன்` எனப் பொருள்கொண்டு, `உமைக்கு என நான்காவது விரித்தலும் ஆம். தாழ்ந்த புனல் - ஆழ்ந்த நீர். தொடுத்து வீக்கும் - வளைத்துக் கட்டிய. பொன் நூல் - அழகிய பூணநூல். ``பொன்னூல் தன்னினொடு`` என்பதைச் ``சிற்றம்பலவன்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. தாழ்ந்த கச்சு - பொருந்திய கச்சு. இப்பாடலில் சீர்கள் சிறிது வேறுபட்டு வந்தன.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பந்த பாச மெலாம்அ றப்பசு
பாச நீக்கிய பன்மு னிவரோ
டந்தணர் வணங்கும் அணி
யார்தில்லை யம்பலவன்
செந்த ழல்புரை மேனியுந் திகழுந்
திருவயிறும் வயிற்றினுள்
உந்தி வான்சுழிஎன் உள்ளத்
துள்ளிடங் கொண்டனவே.

பொழிப்புரை :

செயற்கையாகிய மாயை, கன்மம் என்பனவற்றை யும், இயற்கையாகிய ஆணவமலத்தையும் போக்கிய பல முனிவர் களோடு அந்தணர்கள் வணங்கும் அழகுநிறைந்த தில்லைத்திருநகரில் அமைந்த பொன்னம்பலத்திலுள்ள பெருமானுடைய சிவந்த நெருப்பை ஒத்த திருமேனியும், விளங்கும் திருவயிறும் அத்திரு வயிற்றிலுள்ள கொப்பூழின் அழகிய சுழியும் அடியேனுடைய உள்ளத்துள் தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டன.

குறிப்புரை :

``பந்த பாசம்`` என்றது, செயற்கையாகிய மாயை கன்மங்களையும், ``பசு பாசம்`` என்றது இயற்கையாகிய ஆணவத்தை யும் குறித்தன. அற - அறுமாறு. ``பசு பாசம்`` என்னும் ஆறாவதன் தொகை வடநூல் முடிபு. ``சுழி`` என்பதில் எண்ணும்மை தொகுக்கப் பட்டது. இதனுள், ``அணி. உள்ளத்து`` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

குதிரை மாவொடு தேர்ப லகுவிந்
தீண்டுதில்லையுட் கொம்ப னாரொடு
மதுர வாய்மொழி யார்மகிழ்ந்
தேத்துசிற் றம்பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ
காநடம் பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம்என் னுள்ளத்
துள்ளிடங் கொண்டனவே. 

பொழிப்புரை :

குதிரைகள் யானைகள் என்ற இவற்றோடு தேர்கள் பல சேர்ந்து நெருங்குகின்ற தில்லையம் பதியிலே பூங்கொம்புபோன்ற ஆடல் மகளிரோடு இனிய இசைப் பாட்டைப் பாடுகின்றவர்கள் மகிழ்ந்து போற்றும் சிற்றம்பலத்தில் உள்ளவனாய், நீண்ட கழல் ஒலிக்கக் கால்களை வீசி அழகாகக் கூத்து நிகழ்த்துகின்ற கூத்தப்பிரான் திருமேனியின்மேல் விளங்கும் வயிற்றின் மேல் கட்டப்படும் ஆபரணத்தின் பல சுற்றுக்கள் என் உள்ளத்தினுள் தமக்கு இருப் பிடத்தை அமைத்துக் கொண்டன.

குறிப்புரை :

மா - யானை. ஈண்டு - நெருங்குகின்ற. கொம்பு அன்னார் - பூங்கொம்புபோலும் ஆடல் மகளிர். மதுர வாய்மொழியார் - இனிய இசைப்பாட்டைப் பாடுகின்றவர். அதிர - ஒலிக்க. `வார்கழல் அதிர` என மாற்றி, வீசுதலுக்கு, `கால்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``கூத்தன்`` என்றது அவனது திருமேனியைக் குறித்த ஆகுபெயர். கச்சு, மேற்கூறப் பட்டமையின், உதரபந்தனம் அதனின் வேறென்க. உதர பந்தனம் - வயிற்றின்மேல் உள்ள கட்டு. கச்சு, அரையில் கட்டப் படுவது. ``கொண்டன`` என்ற பன்மையால் இது பல சுற்றுக்களை உடையதாதலும் பெறப்படும். இதனுள், ``அழ, உள்ளத்து`` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

படங்கொள் பாம்பணை யானொ டுபிர
மன்ப ரம்பர மாவரு ளென்று
தடங்கை யால்தொழ வுந்தழல்
ஆடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும் அத் தோள்க ளுந்தட
மார்பினிற் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்டமன்றே வினை
யேனை மெலிவித்தவே. 

பொழிப்புரை :

படம் எடுக்கின்ற திரு அனந்தாழ்வானைப் பாயலாகக் கொண்ட திருமாலொடு பிரமன், `மேலோருக்கும் மேலாயவனே! எங்களுக்கு அருள்புரிவாயாக` என்று நீண்ட கைகளால் தொழக் கையில் அனல்ஏந்தி ஆடும் சிற்றம்பலப் பெருமானுடைய நீண்டகைகள் நான்கும் நான்கு திருத்தோள்களும், பரந்த மார்பில் அணிந்த அணிகலன்களும், அவற்றின் மேலதாய்ப் பொருந்திய விடமுண்ட கண்டமும் ஆகிய இவைகள் இவற்றைத் தரிசிக்கும் நல் வினையை உடைய அடியேனை உள்ளத்தை உருக்கி மெலிவித்தன.

குறிப்புரை :

பரம் பரமா - மேலானவற்றுக்கும் மேலானவனே; உனக்குமேல் ஒன்று இல்லாதவனே. ``தொழவும் ஆடுசிற்றம்பலவன்`` என்றது, `ஆடுவார் தொழுவாராயும், காண்பார் தொழப்படுவாராயும் இருத்தல் இயல்பாக. காண்பார் தொழுவாராக, ஆடுவான் தொழப் படுபவனாய் இருக்கின்றான்` என்றவாறு. எனவே. ``தொழவும்`` என்ற உம்மை உயர்வு சிறப்பாயிற்று. ``பூண்கள், கண்டம்`` என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க. பூண்கள் - அணிகலங்கள். மேற்று இசை - மேலதாய்ப் பொருந்திய. `மேல் திை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` எனப் பிரித்து, `மேலிடத்துள்ள` என்றலுமாம். `மெலிவித்ததே` என்பது பாடம் அன்று. இதனுள், ``வினை`` என்ற ஒன்றுமே கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

செய்ய கோடுடன் கமல மலர்சூழ்தரு
தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்ய நின்று மகிழ்ந்
தாடுசிற் றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும் திகழுந்திருக்
காதும் காதினின் மாத்தி ரைகளோ
டைய தோடுமன்றே அடி
யேனை ஆட் கொண்டனவே. 

பொழிப்புரை :

சிறந்த சங்குகளோடு தாமரை மலர்கள் ஊரைச்சுற்றிக் காணப்படும் தில்லைத்திருப்பதியில் மேம்பட்ட வேதியர்கள் தொழவும், உலகம் தீமைநீங்கி நன்மைபெறவும் நிலையாக மகிழ்ந்து கூத்து நிகழ்த்தும் சிற்றம்பலப் பெருமானுடைய சிவந்த வாயிலுள்ள பற்களும், விளங்கும் அழகிய காதுகளும், காதுகளில் அணிந்த குழைகளும் தோடும் தம் பேரழகால் அடியேனை அடிமையாகக் கொண்டன.

குறிப்புரை :

செய்ய கோடுடன் - நல்ல சங்குகளுடன். மாத்திரைகள் - சிறந்த சுருள்கள்; என்றது, குழையை. ஐய - அழகிய. இதனுள், `மகிழ்ந்து, அடி` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

செற்று வன்புரந் தீயெழச்சிலை
கோலி ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறி
நீர்த்தில்லை யம்பலவன்
மற்றை நாட்ட மிரண்டொ டுமல
ருந்திரு முகமும் முகத்தினுள்
நெற்றி நாட்டமன்றே நெஞ்சு
ளேதிளைக் கின்றனவே.

பொழிப்புரை :

சினங்கொண்டு கொடியோருடைய மும்மதில்களும் தீ எழுமாறு வில்லை வளைத்து அவற்றை அரிய நெருப்புக்கு உணவாக்கினவனாய், சிறந்தமணிகளை மோதிக் கரைசேர்க்கும் நீர்வளம் மிக்க தில்லை அம்பலத்தில் உள்ள பெருமானுடைய மற்ற இருகண்களோடு விளங்கும் திருமுகமும், முகத்தில் நெற்றி யிலுள்ள கண்ணும் அல்லவோ அடியேனுடைய நெஞ்சினுள்ளே பதிந்துள்ளன.

குறிப்புரை :

செற்று - சினந்து. சிலை - வில். கோலி - வளைத்து. ``அவன்`` என்பது பகுதிப்பொருள் விகுதி. நாட்டம் - கண். ``நெற்றி நாட்டம்`` என்பதில் எண்ணும்மை தொகுக்கப்பட்டது. திளைக் கின்றன - உலாவுகின்றன.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

தொறுக்கள் வான்கம லம்ம லருழக்
கக்க ரும்புநற் சாறு பாய்தர
மறுக்க மாய்க்கயல்கள் மடை
பாய்தில்லை யம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
அவ்வ கத்துமொட் டோடு மத்தமும்
பிறைக்கொள் சென்னியன்றே பிரியா
தென்னுள் நின்றனவே.

பொழிப்புரை :

பசுக்கூட்டங்கள் வயல்களில் களையாக முளைத்த தாமரைக் கொடிகளின் பூக்களை மேயவும் அவற்றின் கால்களில் மிதிபட்டுக் கருப்பஞ்சாறு வயல்களில் பாயவும், தாக்குண்ட கயல் மீன்கள் வருந்தி நீர்மடையை நோக்கிப் பாயும் தில்லையம்பதியிலுள்ள அம்பலப்பெருமானுடைய முறுக்கிய நீண்ட சடையும், அச்சடையில் சிறிது மலர்ந்த மொட்டோடு கூடிய ஊமத்தம் பூக்களும் பிறைச் சந்திரனும் உடைய திருமுடிகள் என்றும் நீங்காது அடியேனுடைய உள்ளத்தில் நிலை பெற்றுள்ளன. சிவபெருமான் ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவன் ஆவான்.

குறிப்புரை :

தொறுக்கள் - பசுக்கூட்டங்கள். கமல மலர், வயலில் உள்ளவை. உழக்க - மேய. பாய்தர - மேல்நின்று விழ. மறுக்கம் - வருத்தம். `பசுக்களின் கால்களால் மிதிபட்டும். கருப்பஞ்சாற்றின் வீழ்ச்சியால் தாக்குண்டும் கயல் மீன்கள் வருந்துவவாயின` என்பதாம். `மடைக்கண் பாய்` என உருபு விரித்துரைக்க. வார் சிகை - நீண்ட சடை. ``முகிழ்த்த`` என்றதன்பின்னர் நின்ற வகரமெய் விரித்தல். வாசிகை எனவும். `அகத்தி` எனவும் ஓதுவன பாடம் அல்ல. ``பிறைக் கொள்`` என்றதில் உம்மை தொகுத்து, ககர ஒற்று விரிக்கப்பட்டது. இதனுள், `மடை, பிரி` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

தூவி நீரொடு பூவ வைதொழு
தேத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி யுள்நிறுத்தி யமர்ந்
தூறிய அன்பினராய்த்
தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக்
கூத்த னைத்திரு வாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடை
யான் அடி மேவுவரே.

பொழிப்புரை :

நீரினால் திருமுழுக்காட்டி மலர்களைத் தூவித் தொழுது கும்பிடும் கைகளை உடையவர்களாய் மேம்பட்ட பிராண வாயுவை உள்ளே அடக்கி விரும்பச் சுரந்த அன்புடையவர்களாய்த் தேவர்கள் தாம் வணங்குமாறு திருக்கூத்து நிகழ்த்திய தில்லைக் கூத்தப்பிரானைத் திருஆலி அமுதன் சொல்லிய சொற்களை விரும்பிப் பாட வல்லவர்கள் காளை வாகன இறைவனாகிய சிவபெரு மானுடைய திருவடிகளை மறுமையில் அடைவார்கள்.

குறிப்புரை :

சிற்பி