தொகை
`ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்`
(தி.7 ப.39 பா.4)
தொகை, பொ-ரை: ஒப்பற்ற நம்பி எனத் தகும் அப்பூதியடிகளின் அடியார்க்கும் அடியேன்.
வகை
தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்
அனமார் வயல்திங்க ளூரினில் வேதியன் அப்பூதியே
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 29
வகை, பொ-ரை: அன்னங்கள் மிகுந்துள்ள வயல் சூழ்ந்த திங்களூரில் தோன்றிய அந்தணராகிய அப்பூதியடிகள், நாவரசரின் திருவடிகளே அழியாத செல்வம் என எண்ணி, அவர் பெயரையே தாம் வைத்த தண்ணீர்ப் பந்தர் முதலான இடங்கட்கும், பிள்ளைகட்கும் வைத்து, அதனால் நாவரசர் பெருமான் அருளிய தமிழ்ப் பதிகத்தில் தம் பெயரை வைக்கப் பெற்றவர். அவர் எங்கள் தலைவராவார்.