திருநாவுக்கரசரொடு திருக்காழியில் வழிபட்டிருந்து, பிரியாத நண்பொடும் அவர் பலதலங்களைத் தரிசிக்கப் போந்த பின் செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களை அருளினார் சண்பைவேந்தர். அவற்றுள் ஒன்றாக வந்த சொற்சீர் மாலைமாற்று இத்திருப்பதிகம்.
பதிகக் குறிப்பு:
மாலைமாற்று என்பது முதலிலிருந்து இறுதிவரை படித்தால் அமையும் பாடலே, இறுதியிலிருந்து முதல்வரை, படிப்பினும் அமைவது. அதைச்சிறுவர்கட்குக் குடகு, விகடகவி என்று கூறிக் காட்டுவர். சொல்லணியில், கூடசதுக்கம், கோமூத்திரி, சுழிகுளம், மாலை மாற்று இவைகளை மிறைக்கவி என்பர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள். மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணத்திலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணத்திலும் இவைபோன்ற கவிதைகளை யமைத்துள்ளனர்.