கோயில்(சிதம்பரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு உமையபார்வதி உடனுறை ஆதிமூலநாதர் அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசர்


மரம்: தில்லை, கற்பக மரம்
குளம்: சிவகங்கைக் குளம்

பதிகங்கள்: கற்றாங்கெரி -1 -80 திருஞானசம்பந்தர்
ஆடினாய் நறுநெய் -3 -1 திருஞானசம்பந்தர்
செஞ்சடைக்கற்றை -4 -22 திருநாவுக்கரசர்
பத்தனாய்ப்பாட -4 -23 திருநாவுக்கரசர்
பாளையுடைக் -4 -80 திருநாவுக்கரசர்
கருநட்ட கண்ட -4 -81 திருநாவுக்கரசர்
அன்னம்பாலிக் -5 -1 திருநாவுக்கரசர்
பனைக்கைமும் -5 -2 திருநாவுக்கரசர்
அரியானை -6 -1 திருநாவுக்கரசர்
மங்குல்மதிதவழும் -6 -2 திருநாவுக்கரசர்
மடித்தாடு -7 -90 சுந்தரர்
ஒளிவளர் -9 -1 திருமளிகைத்தேவர்
உயர்கொடியாடை -9 -2 திருமளிகைத்தேவர்
உறவாகிய யோகமு -9 -3 திருமளிகைத்தேவர்
இணங்கிலாவீசன் -9 -4 திருமளிகைத்தேவர்
கணம்விரிகுடுமி -9 -8 கருவூர்த்தேவர்
முத்துவயிரமணி -9 -19 பூந்துருத்தி நமம்பி காடநம்பி
மின்னாருருவம் -9 -20 கண்டராதித்தர்
துச்சானசெய்திடினும் -9 -21 வேணாட்டடிகள்
மையல்மாதொரு -9 -22 திருவாலியமுதனார்
பவளமால்வரை -9 -23 திருவாலியமுதனார்
அல்லாய்ப்பகலாய் -9 -24 திருவாலியமுதனார்
வானோர் பணிய -9 -25 திருவாலியமுதனார்
வாரணி நறுமலர் -9 -26 புருடோத்தநம்பி
வானவர்கள் -9 -27 புருடோத்தநம்பி
சேலுலாம்வயல் -9 -28 சேதிராயர்
மன்னுகதில்லை -9 -29 சேந்தனார்
பொன் வண்ணம் எவ்வண் -11 -6 சேரமான்பெருமாள்
பூமேல் அயனறியா -11 -26 பட்டினத்தடிகள்
நெஞ்சந் திருவடி -11 -32 நம்பியாண்டார் நம்பி

முகவரி: சிதம்பரம்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம், 608001
தொபே. 04144 230251

கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர். அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்குமானால் அது அதனுடைய மிக்க உயர்வைக்குறிக்கும். அங்ஙனம் உயர்வுபற்றிய காரணத்தால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.

இத்தலத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள்:


(1) பெரும்பற்றப் புலியூர்: பெரும்பற்றினால் புலிப்பாதன் பூசித்த ஊராதலால் இப்பெயர் பெற்றது. இது மரூஉ மொழி. மலையமான்நாடு மலாடு என்பதுபோல.

(2) சிதம்பரம்: (சித் + அம்பரம்) சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி. ஞானகாசம் ஆதலால் இப்பெயர்பெற்றது.

(3) தில்லைவனம்: தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

கடலூரிலிருந்து, மயிலாடுதுறை செல்லும் இருப்புப் பாதையில் இருக்கும் சிதம்பரமென்னும் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி வடமேற்கே 1.5.கி.மீ சென்றால் இக்கோயிலை அடையலாம். இது காவிரியாற்றின் வடகரையிலுள்ள தலங்களுள் முதன்மை பெற்றது.

திருமூலட்டானக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிற்றலம்பலத்தில் ஆனந்தத்தாண்டவம்புரியும் இறைவரின் திருப்பெயர் - நடராசர், கூத்தப்பெருமான். இங்கு நடராசப்பெருமானை சகளம் என்றும், ரகசிய தானத்தை நிஷ்களம் என்றும், ஸ்படிகலிங்கத்தை சகளநிகளன் எனவும் கூறுவர்.

இறைவியின் திருப்பெயர் சிவகாமசுந்தரியார். இவ்வம்மை யார்க்குத் தனிக்கோயில் உண்டு. அது மூன்றாம் பிராகாரத்தில் நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கில் இருக்கிறது. மரம் - ஆல். தீர்த்தம் - சிவகங்கை. இது மூன்றாம் பிராகாரத்தில் சிவகாமசுந்தரி அம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது. இது சிவவடிவம் உடையது. இதில் நீராடி சந்தியாவந்தனம் முதலியன முடிப்பது பெரும் புண்ணியம். வருடப்பிறப்பு, மார்கழித் திருவாதிரை, மாசித்திருமகம், சிவராத்திரி இவைகளில் இதில் நீராடுவது பெரும் விசேடமாகும்.

சிதம்பரத்திலிருந்து வேற்றூர்க்குச் செல்வோர் இதில் நீராடிச்சென்றால், தாம் தாம் நினைத்த காரியங்களில் வெற்றி எய்துவர். பூதம், பேய் முதலியவைகளினால் துன்பம் அடையார்.

பரமானந்த கூபம்: இது சிற்றம்பலத்திற்குக் கீழ்ப்பால் இருக்கிறது. இது சத்தி வடிவம் பொருந்தியது.

குய்யதீர்த்தம்: இது சிதம்பரத்திற்கு வடகிழக்கேயுள்ள கிள்ளைக்கு அருகில் கடலில் பாசம் அறுத்த துறையையுடையது. இருளில் வந்த குருவைப் பகைவன் என்று எண்ணி, வருணன் அவர்மீது பாசத்தைவிட, அதனால் அவர் இறந்தார். வருணனை, அக்கொலைப் பாவத்திற்காக ஒரு பிசாசு அவனுடைய கால்களையும் கைகளையும் கழுத்தோடு சேர்த்துக் கட்டி கடலுள் இட்டது. வருணனும் நீண்டகாலம் அங்கு கிடந்தான். அங்ஙனம் கிடந்த வருணனுக்குச் சிவபெருமான் மாசி மாதத்தில் வெளிப்பட்டு அப்பாசக்கட்டு அற்றுப்போகும்படி அருள் புரிந்தார். ஆதலின் அத்துறை பாசமறுத்தான்துறை என்னும் பெயர் எய்திற்று.

புலிமடு: இது சிதம்பரத்திற்குத் தென்பால் ஒன்றரைக் கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

வியாக்கிரபாத தீர்த்தம்: இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு மேற்கே இருக்கும் இளமையாக்கினார் கோயிலுக்கு எதிரில் இருக்கும் குளம் ஆகும்.

அனந்த தீர்த்தம்: இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு மேற்கே திருவனந்தேச்சுரத்துக்கு முன்பு இருக்கும் திருக்குளமாகும்.

நாகச்சேரி: இது அனந்தேச்சுரத்துக்கு மேல்பால் இருக்கும் திருக்குளமாகும்.

பிரமதீர்த்தம்: இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு வட மேற்கே இருக்கும் திருக்களாஞ்சேரியில் உள்ள திருக்குளமாகும்.

சிவப்பிரியை: இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு வடக்கேயுள்ள பிரமசாமுண்டி கோயிலுக்கு முன்புள்ள திருக்குளமாகும்.

திருப்பாற்கடல்: இது சிவப்பிரியைக்குத் தென்கிழக்கில் இருக்கிறது. காணமுத்தி தரும் தலம். அர்த்தயாமத்தில் எல்லாத் தலங்களிலுமுள்ள மூர்த்திகளின் கலைகள் வந்து ஒடுங்கப்பெறுவது.

வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சூதர் முதலான முனிவர்களும், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கூற்றுவர், கணம் புல்லர், கோச்செங்கட் சோழர், மாணிக்கவாசகர், சேக்கிழார் என்னும் நாயன்மார்களும், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியார் என்னும் சந்தான குரவர்களும், இரணியவர்மர், சேந்தனார், பெற்றான் சாம்பானார், என்னும் அடியார்களும் வழிபட்டு, முத்திபெற்ற தலம்.

மாணிக்கவாசகப்பெருந்தகையார் புத்தரை வாதில் வென்று ஊமைப்பெண்ணைப் பேசுவித்து, சைவ சமயமே மெய்ச்சமயம் என்பதை நிலை நாட்டியது; நம்பியாண்டார் நம்பி கனகசபையின் மேல்பால் உள்ள அறை ஒன்றில் தேவாரங்களைக் கண்டருளியது; தெய்வப்பாக்கிழாராகிய சேக்கிழார் திருத்தொண்டர் புராணமென்னும் பெரிய புராணத்தை எழுதி அரங்கேற்றியது; உமாபதிசிவம் பெற்றான் சாம்பானார்க்கும், முள்ளிச் செடிக்கும் முத்திகொடுத்தருளியது; திருஞானசம்பந்தப் பெருந்தகை தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாய்க் கண்டது; சுந்தரமூர்த்தி சுவாமிகள் பேரூர்ப்பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே கண்டு வணங்கியது; என்பனவும் பிறவும் இத்தலத்தில் நிகழ்ந்த அரிய விசேடங்களாகும்.

ஈசர்க்கேற்ற பரிசினால், அவரை அருச்சித்து அருள, பூசைக்கமர்ந்த பெருங் கூத்தர், தம்முடைய பொற்பார் சிலம்பின் ஒலியை எந்நாளும் அளிக்க, கேட்டு உவக்கும் பேறுற்ற சேரமான் பெருமாள் நாயனாருக்குச் சிலம்பொலி கேட்கத் தாழ்ப்பித்து, பொன்வண்ணத்து அந்தாதியைப் பெற்றதும் ஆகிய அருட் செயல்களுடன், ஆடகப்பொதுவில் நாடகம் இயற்றும் ஏடவிழ் கூந்தல் இறைவி பாகனது பெருமையை யாவரால் எடுத்து இயம்ப இயலும்? தேவாரப் பதிகம் பதினொன்றும், திருவாசகப் பதிகம் இருபத்தைந்தும், திருக்கோவையாரும், திருவிசைப்பாப் பதிகம் பதினைந்தும், திருப்பல்லாண்டும், பத்தாம் திருமுறையில் சிலதிருமந்திரங்களும், பதினொன்றாம் திருமுறையில் கோயில் நான்மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தங்களும் பெரிய புராணமும் ஆகப் பல அருட்பனுவல்கள் இத்தலத்திற்கு உள்ளன.

இவைகளன்றிக் கோயிற்புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம் என்னும் புராணங்கள் தமிழிலும், சூதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான நூல்கள் வடமொழியிலும் இருக்கின்றன.

இவைகளேயன்றி, குமரகுருபர அடிகளால் ஆக்கப்பெற்ற சிதம்பரம் மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை; இரட்டைப் புலவர்களால் பாடப்பெற்ற தில்லைக்கலம்பகம் என்னும் நூல்களும் இத்தலத்திற்கு உரியனவாகும்.

கோயிலிலுள்ள ஐந்து சபைகள்:


பேரம்பலம் இது இக்கோயிலிலுள்ள ஐந்து சபைகளுள் ஒன்று. இதனைத் தேவசபை என்பர். தேவாரம் முதல் திருமுறையில்,\"நிறைவெண் கொடிமாடம் நெற்றிநேர் தீண்டப் பிறைவந் திறைதாக்கும் பேரம்பலம்\" என்று சம்பந்த சுவாமிகளாற்(தி.1ப.80பா.4)கூறப்படுகிறது.

சிற்றம்பலம்: நடராசப்பெருமான் நடம் புரிந்தருளும் இடம். இது \"தூயசெம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்\" (தி.5ப.2பா.8) என்றும் \"தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம்\" என்றும் அப்பர் சுவாமிகளால் விளக்கப்படுகிறது.

கனகசபை: பெருமான் அபிடேகங்கொண்டருளுமிடம். சிற்றம்பலத் திற்கு முன்னுள்ளது.

நிருத்தசபை: பெருமான் ஊர்த்துவ தாண்டவம் புரிந்தருளுவது. கொடி மரத்தின் தென்பாலுள்ளது.

இராஜசபை: இது ஆயிரங்கால் மண்டபம் ஆகும்.

கல்வெட்டு: இக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜ தேவன், மூன்றாங் குலோத்துங்கசோழதேவன், மூன்றாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் திரிபுவனச்சக்கர வர்த்தி வீரபாண்டியதேவன், சடாவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரகேரளனாகிய குலசேகரதேவன் இவர்கள் காலங்களிலும், பல்லவரில் அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கதேவன் காலங்களிலும், விசய நகர வேந்தர்களில் வீரப்பிரதாபகிருட்டிணதேவமகாராயர், வீரப் பிரதாப வேங்கடதேவமகாராயர், ஸ்ரீ ரெங்கதேவமகாராயர், அச்சுத தேவமகாராயர், வீரபூபதிராயர் இவர்கள் காலங்களிலும், கொச்சி பரம்பரையில் சேரமான் பெருமாள் நாயனாரின் வழித் தோன்றிய இராமவர்ம மகாராசா காலத்திலும்; சாளுவ பரம்பரையில் வீரப் பிரதாபதம்முராயர் I காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளையன்றி இக்கோயிலைப் பற்றி வேற்றூர்களில் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் இருக்கின்றன. இவைகளை எல்லாம் தழுவிய வரலாறே ஈண்டுக் கொடுக்கப்பெற்றுள்ளது.

இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு: இவ்வூர் முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் இராஜேந்திர சிங்கவளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் என்றும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜாதிராஜவளநாட்டுத் தனியூர்ப் பெரும்பற்றப்புலியூர் என்றும் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது.

மூர்த்திகளின் பெயர்கள்: இப் பெரும்பற்றப்புலியூரில் மூலத்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமூலத்தானமுடையார் என்றும், பேரம்பலத்தில் எழுந்தருளியிருப்பவர் ஆளுடையார் என்றும், சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பவர் திருச்சிற்றம்பலமுடையார், தில்லை நாயகத் தம்பிரானார், ஆநந்தத்தாண்டவப்பெருமாள், பொன்னம்பலக்கூத்தர், சிதம்பரேசுவரர் என்றும், அம்மன் சிவகாமசுந்தரியார் என்றும், அம்மனுக்குரிய திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாய்ச்சியார் என்றும் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளனர்.

திருமாளிகைகள்: திருச்சிற்றம்பலத்தைச் சூழ்ந்த முதல் திருமாளிகைக்குக் `குலோத்துங்கசோழன் திருமாளிகை\\\"(இத்திருமாளிகை முதற் குலோத்துங்கசோழன் காலத்தில், மிழலைநாட்டு வேள் கண்டன்மாதவனால் கட்டப்பெற்றதாகும். இச்செய்தியைத் தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறைக் கோட்டத்தில், பாடல்பெற்ற நீடூர் திருக்கோயிலில் பொறிக்கப்பெற்ற \\\"தில்லையம்பலத்து வடக்கின் பால் புராணநூல் விரிக்கும் புரிசை மாளிகையும், வரிசையால் விளங்கப் பொற்பினால் விருப்புறச் செய்தான்\\\" என்னும் கல்வெட்டுப்பகுதி அறிவிக்கின்றது.

(Epigrahia Indica Volume XVIII Page 6.) என்றும், இரண்டாம் பிராகாரத்தைச் சூழ்ந்துள்ள திருமாளிகைக்கு விக்கிரமசோழன் திருமாளிகை என்றும், மூன்றாம் பிராகாரத்தைச் சூழ்ந்துள்ள திருமாளிகைக்கு இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை என்றும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன.

விக்கிரமசோழன் திருமாளிகை என்பது முதற்குலோத்துங்க சோழனது மகனாகிய விக்கிரமசோழன் பெயரால் கட்டப்பெற்றதாகும். இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை மூன்றாங்குலோத்துங்கசோழன் திருப்பெயரால் அமைக்கப்பெற்றதாகும். இராசாக்கள் தம்பிரான் என்பது மூன்றாங் குலோத்துங்க சோழனுக்கு வழங்கிவந்த சிறப்புப் பெயர்களில் ஒன்று.

திருவிழாக்கள்: இத்திருக்கோயிலில் ஆனித்திருநாள், மார்கழித் திருநாள், மாசித் திருநாள் இவைகள் சிறப்பாகக் கொண்டாடப்பெற்று வந்தன. மாசித்திருநாளில் திருத்தொண்டத்தொகை விண்ணப்பஞ் செய்யப் பெற்றுவந்தது.

இவைகளின் பொருட்டு முதலாம் இராஜேந்திர சோழ தேவரின் (கி. பி. 1012 - 1044) அணுக்கிநக்கன் பரவை (பாவை என்றும் படிக்கலாம்) என்னும் அம்மையார் நாற்பத்து நான்குவேலி நிலங்களைஇராஜேந்திரசோழதேவர் வழங்கி அருளின பொன்னைக் கொண்டு வாங்கி அளித்திருந்தனர்.

மாசித்திருநாளில் இறைவர் கடலாடி வீற்றிருக்க, சிதம்பரந்தாலூகாவைச் சேர்ந்த கிள்ளை என்னும் கிராமத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவனாகிய கூத்தனால் மண்டபம் ஒன்று கட்டப்பெற்றுள்ளது. மாசிக்கடலாட இறைவர் எழுந்தருளுவதற்கு ஒரு பெருவழியையும் அக்கூத்தன் அமைத்தான். அதற்கு விக்கிரமசோழன் தெற்குத்திருவீதி என்று பெயர் வைக்கப்பெற்றிருந்தது.

தைப்பூசத் திருநாளும் இத்திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. அப்பூசத் திருநாளில் இரண்டாம் கோப்பெருஞ் சிங்கன் காலத்தில் கயிலாயதேவன் என்பவன் தன் பெயரால் கயிலாயதேவன் திருப்பாவாடைப்புறம் ஒன்றை ஏற்படுத்தி அன்று அமுதுபடிக்குப் பத்துகலம் போனகப் பழவரிசி, இருகலம் மணிப்பருப்பு, நான்குநிறை சர்க்கரை, நூறு தேங்காய், இருநூறு வழுதிலைக்காய் இவைகளைக் கொண்டு வந்து, இக்கோயிலிலுள்ள குலோத்துங்கசோழன் திருமடைப்பள்ளியில் சேர்ப்பதற்கு மூலதனமாக பெரும்பற்றப்புலியூர் கீழ்ப்பிடாகை கிடாரங்கொண்ட சோழப்பேரிளமைநாட்டு எருக்காட்டுச் சேரியான சோழநல்லூர்ப்பால் சோழபாண்டியன் என்ற பெயருள்ள நிலத்தையும், அங்குள்ள கொல்லைக் குளத்தில் செம்பாதி நிலத்தையும் அளித்திருந் தான்.

திருக்காமக்கோட்டமுடைய பெரியநாய்ச்சியார்க்கு `ஐப்பசிப் பூர விழா\\\' நடைபெற்றுவந்தது. அதன் செலவினங்களுக்குப் `பூரப் பேட்டை\\\' என்னும் ஊர் கொடுக்கப்பெற்றிருந்தது.

சில சிறப்பு நாள்கள்: நாயகர் குலோத்துங்கசோழன் திருத்தோப்புக்கு எழுந்தருளி திருமஞ்சனம்பண்ணி அருளுதலும், திவசங்களுக்குப் பிள்ளையார் சிவபாதசேகரன் சித்தத்துணைப்பெருமாள் எதிரிலிசோழன் திருநந்தவனத்திற்குத் திருப்பாலிகை வலஞ்செய்ய எழுந்தருளுதலும் உண்டு. (திவசம் - சிரார்த்தம்)



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி