அருள்மிகு குன்றமுலைநாயகி உடனுறை சண்பகாரணியர்
மரம்: செண்பகம்
குளம்: சூரியபுட்கரணி
பதிகங்கள்: பொன்னேர்தரு -2 -24 திருஞானசம்பந்தர்
தழைகொள் -2 -119 திருஞானசம்பந்தர்
கச்சைசேர் அரவ -4 -66 திருநாவுக்கரசர்
நல்லர் -5 -52 திருநாவுக்கரசர்
தாயவனைவானோர்க்கும் -6 -66 திருநாவுக்கரசர்
பிறையணி -7 -99 சுந்தரர்
முகவரி: கும்பகோணம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612204
தொபே. 0435 2463354
ஐந்தலை அரவால் பூசிக்கப்பெற்ற கோயிலை உடையது ஆதலின் இப்பெயர்பெற்றது. இச்செய்தி, இக்கோயிலுக்குரிய நாவுக்கரசரது திருக்குறுந்தொகையிலுள்ள (திருப்பாட்டு 4)
``ஐந்தலை யரவின் பணி கொண்டருள்
மைந்தர் போன்மணி நாகேச் சரவரே``
என்ற தேவாரப் பகுதியால் அறியலாகும்.
மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், திரு நாகேசுவரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. மைல் தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள இருபத்தொன்பதாவது தலமாகும். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
இறைவர் திருப்பெயர் சண்பகாரணியர். இறைவி திருப்பெயர் குன்றமுலைநாயகி. தீர்த்தம் சூர்யபுஷ்கரிணி. ஐந்தலை நாகமன்றி, சந்திர சூரியர்களால் பூசிக்கப்பெற்றது. தெய்வப் பாக்கிழாராகிய சேக்கிழார் பெருமானுக்கு மிக்க விருப்பமுள்ள தலம். சேக்கிழார் தமது ஊராகிய குன்றத்தூரில் ஒருகோயில் எடுப்பித்து அதற்குத் திருநாகேச்சுரம் என்று பெயர் வைத்துள்ளமை இதை நன்கு புலப்படுத்தும்.
திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனாரது பதிகம் மூன்று, சுந்தரமூர்த்தி நாயனாரது பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்களைப் பெற்ற பெருமையுடையது. நாளும் வணங்குவார் பிணி தீர்க்கும் பெற்றியுடையது.
``நாளு நாதனமர் கின்ற நாகேச்சுர நண்ணுவார்
கோளு நாளுந் தீயவேனு நன்காங் குறிக்கொண்மினே``
என்னும், இக்கோயில் சம்பந்தர் தேவாரப்பகுதி சிந்திக்கற்பாலது.