அருள்மிகு அழகார்ந்த நாயகி உடனுறை பூவனநாதர்
குளம்: காசிப தீர்த்தம்
பதிகங்கள்: மாலினை மாலுற -4 -88 திருநாவுக்கரசர்
கொடிகொள் -5 -32 திருநாவுக்கரசர்
நில்லாத -6 -43 திருநாவுக்கரசர்
முகவரி: திருப்பூந்துருத்தி அஞ்சல்
கண்டியூர்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 613103
இத் தலம் தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்கு மேற்கே 3. கி.மீ.தொலைவிலுள்ளது. சோழ மன்னன் துருத்தியை வைத்துப் பூசிக்கச் செய்ததனால் திருப்பூந்துருத்தி என்று பெயர் வந்ததென்று கூறுவர்.
ஆற்றிடைக் குறையில் உள்ள பகுதியைத் துருத்தி என வழங்குவது உண்டு. இது திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று.
இறைவர்: புஷ்பவனநாதர். இறைவி: அழகார்ந்தநாயகி; சுந்தரநாயகி. இங்குத் திருஞானசம்பந்தப் பெருமான் இறைவனை வழிபடுவான் வேண்டி இவ்வாலய நந்திகள் விலகியனவாகக் கூறுவர். இத்தலம் தேவேந்திரன், காசிப முனிவர், சோழன் முதலானோர் பூசித்த பெருமையுடையதாகும்.
இது திருநாவுக்கரசு பெருந்தகையார் திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஒன்று அமைத்துக்கொண்டு எழுந்தருளியிருந்து பல்வகைத் தாண்டகங்களையும் திருவங்கமாலையுள்ளிட்ட பல பதிகங்களையும் அருளிய பெருந் தலமாகும்.
இத் தலத்தில் இவ்வாறு அப்பர் பெருமான் இருந்தபோது பாண்டிநாட்டிற்குச் சென்று வல்லமணரை வாதில் வென்று தென்னவன் கூன் நிமிர்த்தருளித் திருநீற்றின் ஒளி பரப்பித் திரும்பி வந்து திருப்பூந்துருத்தியை அடைந்தார். அதுபோது அவருடைய முத்துச் சிவிகையினை ஒருவரும் அறியாது தாங்குவாருடன் தாங்கிவந்து சம்பந்தர், `எங்குற்றார் அப்ப`ரெனக் கேட்டபோது, `அடியேன் உம்மடிகள் தாங்கி வரும் பேறு பெற்றிங்குற்றேன்` என்று அப்பர் பெருமான் கூறியதும் ஞானசம்பந்தர் சிவிகையினின்றும் இறங்கி இருவரும் வணங்கி அளவளாவிச் சில காலம் தங்கியிருந்த திருத் தலமாகும். இதற்குத் திருப்பதிகங்கள் மூன்று உள்ளன.