கங்கைகொண்டசோழேச்சரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க

பிற்காலச் சோழர்களில் விசயாலயன் காலம் முதல், முதலாம் இராஜராஜன் காலம் முடிய (கி.பி. 846-1014) பத்துத் தலைமுறைகளாகத் தஞ்சாவூர் சோழமன்னர்களின் தலைநகரமாய்த் திகழ்ந்திருந்தது. இத்தஞ்சாவூர் பாண்டி நாட்டின் எல்லைக்கு அருகில் இருந்தமையால், தலைநகரம் பாண்டியர்களால் அடிக்கடித் தாக்கப்படும் என்ற காரணம் பற்றியும், அக்காலம் மாதம் மும்மாரிபெய்து கொள்ளிடப்பேராறு வெள்ளப்பெருக்கெடுத்து ஓடினமையால் முதலாம் இராஜேந்திர சோழன், (முதல் இராஜராஜ மன்னனின் மகன்) தன் குல தெய்வமாகிய தில்லை நடராசப் பெருமானைத் தன் பரிவாரங்களோடு சென்று அடிக்கடி வழிபடுவதற்கு அக்கொள்ளிடப் பேராறு தடையாய் இருந்தமை பற்றியும், அக்காலம் கொள்ளிடப் பேராற்றுக்கு இக்காலம் போல் அணைக்கட்டு இல்லாமையாலும் சோழநாட்டின் நடுப் பகுதி யில் தலைநகரை அமைக்க வேண்டும் என்ற காரணம் பற்றியும், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டான். இங்கே தலை நகரை நிர்மாணம் பண்ணுவதற்கு வேண்டிய சுண்ணாம்பு, செங்கல் முதலியவைகள் தயாரித்த இடங்கள் எல்லாம் இக்காலம் அவ்வப் பெயர்களுடன் சுண்ணாம்புக்குழி முதலான சிற்றூர்களாகத் திகழ் கின்றன. கோட்டை இருந்த இடம் உள்கோட்டை (உக்கோட்டை) என்ற பெயருடனும், ஆயுத சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்னும் பெயருடனும் இன்றும் நிலவுகின்றன. இங்ஙனம் புதிய நகரை நிர்மாணம் பண்ணின முதலாம் இராஜேந்திர சோழன், அதனைக் கங்கைநீரால் புனிதம் பண்ணவேண்டும் என்று எண்ணி, கங்கைநீர் கொணர, தன்படைத் தலைவனிடம் ஒரு பெரும்படையை அனுப்பினான். அப்படைத் தலைவனும் வடவர்களை வென்று கங்கை நீரைக் கைக்கொண்டு திரும்புகையில், இராஜேந்திரன் அப்படைத் தலைவனைக் கோதாவரி யாற்றங்கரையில் கண்டு பெருமகிழ்வுற்றுத் தன் நாட்டிற்குத் திரும்பினான். இதனால் இவனுக்குத் கங்கைகொண்ட சோழன் என்னும் பெயர் தோன்றலாயிற்று. கொணர்ந்த கங்கை நீரை, சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றை வெட்டி அதில் ஊற்றினான். அந்த ஏரி இக்காலம் பொன்னேரி என்ற பெயருடன் விளங்குகின்றது. புதிதாக நிர்மாணம் பண்ணின தலைநகரும் கங்கைகொண்ட சோழ புரம் என்னும் பெயர் பெற்றது. கங்கைமாநகர் என்று வீரராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணி யிலும் இக்கங்கை கொண்ட சோழபுரம் குறிப்பிடப்பெற்றுள்ளது. இங்கே இவன் கட்டிய கோயிலும் கங்கைகொண்ட சோழேச்சரம் என்னும் பெயர் எய்திற்று. இச்சோழேச்சரம் உருவத்தில் தஞ்சை இராசராசேச்சரத்தை ஒத்தது. சிற்பத் திறன் வாய்ந்தது. இங்குள்ள சண்டேசுவர பிரசாத தேவரின் திருமேனி மிக்க வேலைப்பாடு உடை யது. கண்கவரும் வனப்புடையது. இந்தக் கங்கைகொண்ட சோழேச் சரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் மீது கருவூர்த்தேவர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இந்தக் கங்கைகொண்ட சோழபுரம் எத்தனையோ வெற்றி விழாக்கள் நடந்த இடம். சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் முதலான புலவர் பெருமக்கள் வாழ்ந்த இடம். கலிங்கப்போரில் வெற்றிப்பெற்றுத் திரும்பி. முதற்குலோத்துங்க சோழன், தன் அவைக் களப்புலவராகிய சயங்கொண்டாரைப் பார்த்து, யானும் சயங் கொண்டான் ஆயினேன் எனக்கூற, சயங்கொண்டானை (வெற்றி பெற்றவனைச்) சயங்கொண்டான் பாடுதல் பொருத்தமுடைத்து என்று கூறி, கலிங்கத்துப் பரணியைப் பாடிய இடம். விக்கிரமசோழனுலா, இரண்டாம் குலோத்துங்க சோழனுலா, இரண்டாம் இராசராசனுலா இவைகளெல்லாம் பாடப்பட்ட இடம். குலோத்துங்கன், சேக்கிழார் பெருமானைத் திருத்தொண்டர் புராணத்தைத் தில்லையில் பாடச் செய்து, நாள்தோறும் எவ்வளவு எவ்வளவு பாடல்கள் நிறைவேறின என ஆள் இட்டுக் கேட்டறிந்த இடம். கங்கைகொண்ட சோழன் முதல், மூன்றாம் இராஜேந்திர சோழன் காலம் முடிய உள்ள சோழ மன்னர்களுக்குத் தலைநகராய்த் திகழ்ந்திருந்த இடம். இத்துணைச் சிறப்பினைப் பெற்றிருந்த இடம், இதுபொழுது ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது. எனினும் கங்கைகொண்ட சோழேச் சரம் என்னும் கோயிலே பண்டைப்பெருமை அனைத்தையும் விளக்கி நிலவுகின்றது. இக்கோயில், இந்நாளில் கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் போகும் பெருவழியில் கொள்ளிடப் பேராற்றுக்குக் கட்டப்பட்டுள்ள கீழ் அணைக்கட்டுக்கு வடக்கேயுள்ள குறுக்குச்சாலை யிலிருந்து மேற்கே சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இக்காலப் பிரிவுப்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் அமைந்தது இவ்வூர். இக்கங்கைகொண்ட சோழேச்சரத்தில் உள்ள இறைவர்க்குப் பெரிய உடைய நாயனார் என்றும், அம்பிகைக்குப் பெரிய நாயகி என்றும் பெயர்கள் வழங்கி வருகின்றன.



கல்வெட்டு:

(1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1892 Nos. 75-83, -1908 Nos. 29-34 and South Indian Inscriptions(Texts) Volume IV Nos. 522-530. ) இத் திருக்கோயிலில் சோழமன்னர்களில் விசயராஜேந்திரன் (கி.பி. 1051-1065) வீரராஜேந்திரன் (கி.பி. 1063-1070) முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) மூன்றாங் குலோத்துங்கன் இவர் கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் கோமாற பன்மரான திரி புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவர், கோனேரின்மை கொண்டான் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர், திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் விக்கிரம பாண்டிய தேவர் இவர்கள் காலங்களிலும்; விசயநகர வேந்தர்களில் - மல்லிகார்ச்சுன தேவ மகாராயர் குமாரர் பிரபுட விரூபாக்ஷராயர் முதலானோர் காலங் களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. கல்வெட்டுக்களினால் அறியப்படும் செய்திகள்: மாறபன்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவன், தேவணிபுத்தூர் என்னும் ஊரிலுள்ள நத்தம், மனைகள், நன்செய், புன் செய், தோப்புக்கள், ஊருணி, குளம் முதலியன உள்பட அனைத்தை யும் விலைக்கு வாங்கி, அதனைத் திருநாமத்துக் காணியாக, உடையார் கங்கைகொண்ட சோழேச்சரமுடையார்க்குக் கொடுத்துள்ளான். விக்கிரமபாண்டியன் தன்பேரால் கட்டின இராசாக்கள் நாயன் சந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட நித்த நிவந்தங்களுக்கு மூலதனமாக குலோத்துங்கசோழ நல்லூரிலும், இராஜேந்திர சோழநல்லூரிலும் இருபது வேலி நிலத்தையும்; சுந்தரபாண்டியன், தன்பேரால் நிறுவிய சுந்தரபாண்டியன் சந்திக்கு நிலமும் கொடுத்துள்ளனர். சோழ மன்னர்களில் விசயராஜேந்திரன் காலத்தில் அளிக்கப்பெற்ற நிலநிவந்தம் 216 வரிகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் பல இடங்களில் சிதைந்துவிட்டன. இக் கல்வெட்டுக்களில் இவ்வூர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணைகொண்ட சோழவளநாட்டு கங்கை கொண்ட சோழபுரம் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளிடப் பேராற்றிலிருந்து வீரநாராயணன் ஏரிக்கு (வீராணத்தேரிக்கு) நீர் போகும் ஆறு, வடவாறு என்று இக்காலம் வழங்கப்பெறினும் அது மதுராந்தக வடவாறு என்று பெயர் பெற்றிருந்தது. மதுராந்தகன் என்பது கங்கைகொண்ட சோழனின் பெயர்களுள் ஒன்று. \"உடையார் திருப்புலீஸ்வரமுடையார் திருநாமத்துக் காணி குறுங்குடிக்கும், மன்னனார் திருவிடை யாட்டம் வீரநாராயண நல்லூர் திருவாழிக் கல்லுக்கும்\" என்னும் கல்வெட்டுத் தொடர் சிவ பெருமானுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக் காணி என்றும், திருமால் கோயிலுக்கு விடப்பட்ட நிலத்துக்குத் திருவிடை யாட்டம் என்றும் வழங்கும் வழக்காறுகளைத் தெரிவிக்கின்றன. மன்னனார் என்பது திருமாலின் பெயர். அவர் எழுந்தருளிய காரணம்பற்றியே ஊர் மன்னார்குடி (காட்டுமன்னார்குடி) என்னும் பெயர்பெற்றது. அவ்வூரின் பழம்பெயர் வீரநாராயணநல்லூர் என்ப தாகும். இக்கங்கை கொண்ட சோழபுரத்துக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பட்ட குறுங்குடி, கண்ணமங்கலம், வீரராஜேந்திர சோழபுரம், மழவதரைய நல்லூர், கிழாய்மேடு, கொல்லாபுரம் முதலான ஊர்கள் இன்றும் அப்பெயர்களுடன் நிலவுகின்றன.

 
 
சிற்பி சிற்பி