சேதிராயர்

படம்



சிவமயம

நாயன்மார் வரலாறு

ஒன்பதாம் திருமுறை

சேதிராயர்

திருவிசைப்பாவை அருளிச்செய்த ஆசிரியர்களில் ஒன்பதா மவராகத் திகழ்பவர் சேதிராயர். இவர் சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர். (சேதியர் - ஒருவகை மரபினர்) சேதியர் ஆண்ட நாடு சேதி நாடு எனப்பெறும். இந்நாடு தென்னார்க்காடு மாவட்டத்தின் வட மேற்கில் உள்ள நடுநாட்டில் ஒரு சிறுபகுதி. தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவே உள்ள நாடு, நடுநாடு எனப் பெறும். சேதி நாடு மலையமான் நாடு எனவும் வழங்கப்பெறும். சேதி நாட்டுக் குறுநிலமன்னர் சேதிராயன், மலையகுலராசன் என்னும் பட்டங்களை உடையவர்கள்.

சேதிநாட்டின் தலைநகரம் திருக் கோவலூர், கிளியூர் என்பன. கிளியூரைத் தலைநகராகக்கொண்டு அரசாண்டவரே சேதிராயராவர்.

சேதிராயர் தம்மை `ஏயுமாறெழிற் சேதியர்கோன்` என்று கூறிக் கொள்கின்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளை அவருடைய தந்தை யாரிடமிருந்து கேட்டுப் பெற்று அபிமானப் புதல்வராக வளர்த்த நரசிங்கமுனையரையர் வழியில் வந்தவர் சேதிராயர் என்பர். சேதிராயர் தம் முன்னோர்களைப் போலவே சிவபக்தி, அடியார் பக்தி களில் சிறந்து விளங்கினார். பல சிவதலங்களுக்கும் சென்று வழி பட்டார்.

இவர் பாடியருளிய திருவிசைப்பாப் பதிகம் ஒன்றேயாகும். இப்பதிகம் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியது.

காலம்:

இவர் முதற் குலோத்துங்கன் கி.பி. 1070 -1120 காலத்தவராக அல்லது பிற்பட்ட காலத்தவராக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.